நீஸெவின் வேர்க்கனி – மயிலை ஜி சின்னப்பன் எழுதிய சிறிய நாவல். தீவிரமான மொழி. எனக்கானதல்ல. ஒவ்வொரு பத்தியும் படித்து முடித்த போது என்ன சொல்ல வருகிறார் என்பதைத் தனித்தனியே யோசிக்க வேண்டி இருந்தது. கோணங்கியின் எழுத்தளவுக்கு வெறுமை கொண்டதல்ல என்பதையும் இங்கே சொல்லத்தான் வேண்டும். தீவிரமான வாசனுக்கானது என்றாலும் கூட, ஒட்டுமொத்த படைப்பைப் படித்து முடிக்கும் போது என்ன புரிந்து கொண்டோம் என்பதில் ஒரு சவால் இருக்கும் என்றால் அதை எப்படி எதிர்கொள்வது? எல்லோரும் எழுதிச்செல்லும் களம் என்றில்லாமல் புதிய களம் புதிய நிலம் என்பதெல்லாம் வசீகரமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதாவது முழுமையாகப் புரிந்தது என்றும் சொல்வதற்கில்லை. மொத்தமாகப் புரியவில்லை என்று நிராகரிக்கவும் இயலவில்லை. சிறிய நாவல் என்பதும் இரண்டு பக்கத்துக்கு உள்ளான சிறிய சிறிய அத்தியாயங்கள் என்பதும் மிகப் பெரிய மன நிறைவைத் தந்தன!
Archive for புத்தகப் பார்வை
Yad Vashem Novel
யாத் வஷேம் – யாத் வஷேம் என்றால் நினைவிடம் என்று பொருள். வதைமுகாம்களில் ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் நினைவாக ஜெருசலத்தில் இஸ்ரேல் நிறுவி இருக்கும் நினைவிடம் இது. இதைப் பின்னணியாக வைத்து ஒரு நாவல் எழுத நினைத்ததே பெரிய விஷயம். நேமிசந்த்ரா வாழ்த்துக்குரியவர். கன்னட நாவல், தமிழில் கே.நல்லதம்பி சிறப்பாக மொழி பெயர்த்திருக்கிறார். கன்னடம் எனக்குப் படிக்கத் தெரியாது என்பதாலும், கன்னட ஆடியோ புத்தகம் கிடைக்கவில்லை என்பதாலும் சில இடங்களை ஒப்பிட முடியவில்லை என்றாலும், சிறப்பான மொழிபெயர்ப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 350 பக்க நாவலை ஒரே நாளில் முடித்தேன். அந்த அளவுக்கு வேகம். எதிர் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
நாவலின் முதல் நூறு பக்கங்கள் மிக மிக அருமை. மானுட தரிசனம் என்று சொல்வார்களே, அப்படி ஒரு தரிசனம். இந்தியாவில் தஞ்சமாகும் யூதச் சிறுமியைத் தன் குடும்பப் பெண்ணாக்கிக் கொள்ளும் இந்திய ஹிந்து வொக்கலிகா குடும்பம் மனதைக் கொள்ளை கொண்டு விட்டது. இந்த நாவலின் அற்புதமான பக்கங்கள் இவை. அதிலும் கன்னடத்தில் எப்படி எழுதி இருப்பார்கள் என்கிற யூகத்துடன் வாசித்த எனக்கு மகத்தான அனுபவமாகவே அமைந்தது.
தன் குடும்பத்தைத் தேடி யூதப் பெண் தன் முதிய வயதில் தன் கணவனுடன் மேற்கொள்ளும் பயணமும், யூத வதைமுகாம்களைப் பார்ப்பதும், யூதர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அது வரை நினைத்து வருந்தும் பெண், ஒட்டுமொத்த உலகின் அடக்குமுறைகளுக்கு எதிராக நினைக்கத் தொடங்குவதும் அடுத்து வருகின்றன.
இறுதியில் தன் அக்காவைச் சந்திக்கும் கதாநாயகியின் குடும்பம் எதிர்கொண்ட அராஜகங்கள் விவரிக்கப்படுகின்றன. எல்லா யூதக் குடும்பத்திற்கான ஒட்டுமொத்த சித்திரமும் அதுவே.
அடுத்த ஐம்பது பக்கம் – என் பார்வையில் திருஷ்டிப் பொட்டு என்றே சொல்லவேண்டும்.
அதுவரை நாவல் யூதர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்காகப் பரிதவிப்புடன் நாவல் பேசுகிறது. இந்தியா அந்த யூதப் பெண்ணை எப்படி அரவணைத்தது என்று சிலாகிக்கிறது. இந்தியா பல்வேறு மோழி மத இன வேறுபாடுகளுடன் இருந்தாலும், அதன் அரவணைப்பில் எந்தக் குறையும் இல்லை என்று கொண்டாடுகிறது. தன் அக்காவைக் கண்டதும் அதுவரை இருந்த நினைவுகள் தர்க்கமாக மாற, மத ரீதியான ஒட்டுமொத்த கொடுமைகளுக்காக அந்தக் கதாபாத்திரம் பேச ஆரம்பிக்கிறது., எழுத்தாளர் நேமிசந்த்ராவின் ஒட்டுமொத்த மத விடுதலையை ஒட்டிய தர்க்கம் இது என்று கொண்டாலும், என்னளவில் அது நம்ம ஊர் செக்யூலர் ஜல்லியாகவே தெரிந்தது.
எந்த ஒரு மதமும் வன்முறையைப் போதிக்கவில்லை என்பது வரை சரி, ஆனால் யூத மண்ணில் யூதர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளைப் பார்த்துக்கொண்டு நின்ற மனிதர்களை அதுவரை கடுமையாகப் பேசிய நாவல், அதிலிருந்து அவர்கள் பக்க நியாயத்தையோ அல்லது இரக்கத்தையோ பேச ஆரம்பிப்பது ஏற்கும்படியாகவே இல்லை. எப்போது வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் ஹிட்லர் வரக் கூடும் என்கிற தியரியை, ரத்தமும் சதையுமாக வேதனையை உணர்ந்தவர்களிடம் பேசுவதெல்லாம் அபத்தம். யதார்த்த கொடூரங்களில் இருந்து தான் மேலெழுந்துவிட்டதான பாவனை என்பதைத் தாண்டி ஒன்றுமில்லை என்றே எனக்குப் பட்டது. இந்தப் பாவனை கதாநாயகியுடையதாகவும் இருக்கலாம், நேமிசந்த்ராவினுடையதாகவும் இருக்கலாம்.
போக போக தர்க்கங்கள் எல்லை மீறிப் போகின்றன. இது நாவலா தர்க்கமா என்ற குழப்பம் ஏற்படும் அளவுக்கு. அதிலும் கடைசி இரு அத்தியாயங்களில் தன் வீட்டுக்கு வரும் முஸ்லிம் பெண்ணுக்கு அடைக்கலம் தருவதெல்லாம் தவறில்லை, ஆனால் சுத்த முற்போக்கு அபத்த நாடகம்.
இந்த நாவலை எப்படி எழுதினேன் என்று நேமிசந்த்ரா கடைசி இருபது பக்கங்களில் எழுதி இருக்கிறார். நான் நாவலை வாசிக்கும்போது என்னவெல்லாம் நினைத்தேனோ அதற்கு ஏற்றாற்போன்ற காரணங்களை அதில் பார்க்க முடிந்தது. நாவலின் கடைசி அத்தியாத்தைத் திருத்தி எழுதியதாகச் சொல்லி இருக்கிறார். இன்றைய செக்யூலர் அரசியல் சரி நிலைக்கு ஏற்ப நாவலை மாற்றி எழுதியது போல் எனக்குத் தோன்றியது. நாவலின் முதல் இருநூறு பக்கங்களில் நாவலில் இருந்த நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வழக்கமான ஒரு நீதியைச் சொல்லும் இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டது துரதிர்ஷ்டம்.
முக்கியமான நாவல். நிச்சயம் வாசிக்கவேண்டிய நாவல். யூதர்களின் வாழ்க்கையும் இந்தியர்களின் வாழ்க்கையும் ஒப்பிடப்பட்டு இத்தனை விரிவாக எந்த நாவலிலும் இதுவரை விவாதிக்கப்பட்டதில்லை என்றே நினைக்கிறேன்.
Two Tamil novels
ராஜ வனம் – ராம் தங்கம் எழுதிய சிறு நாவல். கிண்டிலில் வாசித்தேன். காடு, அவன் காட்டை வென்றான், கெடைக்காடு, ஆரண்யக், கானகன் போன்ற நாவல்களைப் படிக்காதவர்களுக்கு இந்த நாவல் காட்டைப் பற்றி ஓர் ஆச்சரியத்தைச் சிறிய அளவில் தரக்கூடும். அந்த நாவல்களை வாசித்தவர்களுக்கு இது இன்னும் ஒரு காட்டைப் பற்றி நாவலாகவே மிஞ்சும். காட்டைப் பற்றிய நாவலுக்கு அபாரமான கற்பனையும் யதார்த்தமான காட்டு வாழ்க்கை அனுபவமும் தேவை. இந்த நாவலில் காட்டைப் பற்றிய இடங்கள் கொஞ்சம் தேங்கினாலும், கூறியதே மீண்டும் மீண்டும் கூறுவதாகப் பட்டாலும், பழங்குடியினரின் வாழ்க்கை பற்றிய விவரங்கள் மற்றும் நிகழ்வுகள் கொஞ்சம் மேலெழுந்து வருகின்றன. இன்னும் ஆழமாக விரிவாக இருந்திருக்கலாம் என்கிற எண்ணம் தோன்றாமல் இல்லை.
வேசடை – ஏக்நாத்தின் சிறு நாவல். ஏற்கெனவே இவர் எழுதிய கெடைகாடு நாவலைப் படித்திருக்கிறேன். அந்த நாவிலிலும் கதை என்று ஒன்று கிடையாது. வட்டாரம், இடங்கள் மற்றும் மனிதர்களைப் பற்றிய விவரணைகளும் அதனூடாகச் செல்லப்படும் சில நிகழ்வுகளுமே கதை. அதே போல் தான் இந்த நாவலும். அந்த நாவலில் இயற்கையான காடு ஒன்றைப் பார்க்க முடிந்தது. இந்த நாவலில் ஒரு சிறிய பற்றுக்கோடாகக் கதை என்ற ஒன்று இருக்கிறது. மற்றபடி பல்வேறு காலங்களில் நிகழும் காலமாற்றம், அதை ஒட்டிய ஒரு கிராமத்து மனிதனின் நினைவுகளுமாகக் கதை நீள்கிறது. கெடைகாடு அளவுக்கு இல்லை என்றாலும், இதை வாசிக்கலாம். இன்னும் ஆழமாக அடர்த்தியாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியதை மறுக்க முடியாது. நாவலில் வரும் நிகழ்வுகள் எவையுமே புதியதாக இல்லை என்பதும் ஒரு குறை. நெல்லை வட்டார வழக்கு பிடித்தவர்களுக்கு இந்த நாவல் கூடுதலாக ஒட்டிக்கொள்ளக் கூடும்.
சூர்ப்பனகை – சிறுகதைத் தொகுப்பு
கெ.ஆர்.மீராவின் ‘சூர்ப்பனகை’ சிறுகதைத் தொகுப்பு படித்தேன். எனக்கான தொகுப்பல்ல. இத்தனை வெளிப்படையான பெண்ணியம் எனக்கு ஆகாது. ஒரு கதை நம்மோடு கொள்ளும் ஆத்மார்த்தமான உறவை முடிவு செய்வது அதனுள் இருக்கும் அந்தரங்கமான, ஆர்ப்பாட்டமில்லாத கதையின் போக்குதான். வெளிப்படையாக ஆடம்பரமாக அலட்டலாக அது கதையை மீறும்தோறும் அக்கதை பிரசாரக் கதையாகிறது. இந்த ‘சூர்ப்பனகை’ சிறுகதைத் தொகுப்பு முற்றிலுமாக ஆடம்பரமாக, பிரசாரமாக ஆகிவிடவில்லை. அந்தரங்கமாக அமைதியாகவும் இல்லை. இரண்டுக்கும் இடையே இருக்கிறது.
இத்தொகுப்பில் ‘லி’ என்னும் எழுத்து அச்சாகாமல் ‘-’ என்று அச்சாகி இருக்கிறது. ஒரு பதிப்பகம் பதிப்பிக்கும் புத்தகங்களில் இதுபோன்ற எதிர்பாராத பிழைகள் வந்துகொண்டே இருக்கும். ஒரு பதிப்பாளனாகப் பல சம்பவங்களை இதுபோன்று பார்த்திருக்கிறேன். எனவேதான் எழுத்துப் பிழைகளைப் பற்றி நான் என் விமர்சனங்களில் எழுதுவதே இல்லை. இதைச் சொல்வது வேறொரு காரணத்துக்காக.
எனது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘சாதேவி’ ஆரம் வெளியீடாக வெளிவந்தது. அதில் முதல் கதையில் மட்டும் பி என்ற எழுத்தைக் காணவில்லை. மற்ற கதைகளில் பிரச்சினை இல்லை. திஸ்கி எழுத்துருவில் பழைய எழுத்துரு ஒன்றை வேறொரு எழுத்துக்கு மாற்றும்போது நிகழ்ந்த விபரீதம் இது. முன்பெல்லாம் ‘ஆ’ என்ற எழுத்தில் பிரச்சினை வரும். 2000களில் தமிழ் எழுத வந்தவர்களுக்கு நினைவிருக்கும். ஆபாசமாகப் பேசினான் என்பது பாசமாகப் பேசினான் என்று வந்துவிடும். இதற்காக நான் என்ன செய்வேன் என்றால், ஆ என்ற எழுத்தை மட்டும் %% என்று ரீப்ளேஸ் செய்துவிட்டு, எழுத்துரு மாற்றிவிட்டு, பின்னர் %% என்பதையெல்லாம் ஆ என்று மாற்றுவேன்.
சாதேவி தொகுப்பில் பி என்ற எழுத்து இல்லை, அதற்குப் பதிலாக ப என்று இருப்பதாக ஆனந்த் அழைத்துச் சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை. இத்தனை ப்ரூஃப் பார்த்தும் பி இல்லையா? மை காட்! நான் ப்ரூஃப் பார்த்தது யூனிகோடில். பி சுழித்துக்கொண்டு போனது வேறொரு எழுத்துருவில்.
‘சூர்ப்பனகை’க்கும் இப்படித்தான் ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கவேண்டும். அடுத்த பதிப்பில் சரிசெய்வார்கள்.
அனந்த் என்றதும் நினைவுகள் அவரைச் சுற்றுகின்றன. நான் கிழக்கில் இருந்தபோது மூன்றாவது எம்.டியாகச் சில காலம் வந்தவர் அனந்த். அமெரிக்கவாசி. சார் என்று அழைக்கவே கூடாது, அனந்த் என்றே அழைக்கவேண்டும் என்றார். அனைவரின் புருவங்களும் உயர்ந்தன. எல்லாவற்றிலும் ஓர் அமெரிக்க ஒழுங்கை எதிர்பார்த்தார். அதனாலேயே மறுநாளில் அனைவருக்கும் அவர் பிடிக்காமல் போனார்.
ஆனால் பழக பழகத்தான் தெரிந்தது அவர் மனசுக்குள் ஒரு குழந்தை இருக்கிறது என்று. இதனாலேயே கூட அவருக்குப் பிரச்சினைகள். அவரால் பிறருக்கும்.
நான் கிழக்கில் இருந்து விலகி சுவாசம் தொடங்கியபோது என்னை அழைத்து அத்தனை அன்பாகப் பேசினார். என்ன என்னவோ அறிவுரைகள் சொன்னார். வாட்ஸப்பில் நீள நீள கட்டுரைகளை அனுப்பினார். முதலீடு தொடர்பான லின்க்குகளை அனுப்பினார்.
ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல அவருடனான தொடர்பு குறைந்துபோனது. ஆறேழு மாதங்களுக்கு முன்னர் அவர் உடல்நலம் சரியின்றி இறந்து போன செய்தியைக் கேட்டபோது உண்மையிலேயே வருந்தினேன். இதை எழுதும்போது கூட ஏதோ ஒரு சோகம் பரவத்தான் செய்கிறது. நல்ல மனிதர். தன்னை சரியாக வெளிப்படுத்திக்கொள்ளத் தெரியாத, சில பிடிவாதங்களில் தேங்கிவிட்ட மனிதர்களை எல்லாருக்கும் பிடிக்காது. அப்படி ஒருவர். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
நேரமிருப்பவர்கள் சூர்ப்பனகை சிறுகதைத் தொகுப்பையும், நேரமே இல்லாவிட்டாலும் சாதேவி தொகுப்பையும் வாங்கவும்.
ஆக்காண்டி
ஆக்காண்டி – தைரியமான நாவல். முக்கியமான நாவல். சில நாவல்களை எழுத தைரியம் தேவை. இது அந்த வகை நாவல். ஈழப் படைப்புகள் அனைத்தும் தமிழகத் தமிழர்களின் பார்வையில் முன்பெல்லாம் ஒரே வகையினதாகத் தெரிந்துகொண்டிருக்க, வாசு முருகவேலின் நாவல்கள் அவற்றிலிருந்து வேறுபட்டு வருகின்றன. ஒற்றைப்படைத் தன்மையிலிருந்து மேலேறி உள்முரண்களையும் அதே சமயம் ஈழக் குரலின் அடிநாதத்தை விட்டுவிடாமலும் இருக்கின்றன. இதனாலேயே அவருக்கு ஆதரவை விட எதிர்ப்பே அதிகம்.
அடிப்படைவாதக் குரல்கள் என்று முத்திரை குத்தப்பட்ட குரல்களில் ஒன்று, இஸ்லாமியர்களையும் அதன் பயங்கரவாதத்தையும் நியாயமாக வேறுபடுத்திப் பார்க்கச் சொல்வது. இந்த நிதர்சனம் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்தக் குரலின் மீது அடிப்படைவாதக் குரல் என்று முத்திரை குத்தப்பட்டது. இது முற்போக்காளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அரசியலுக்கு உகந்ததாகவும் இருந்தது. வாசு முருகவேல் இந்தக் கருத்தாக்கத்தைத் தரவுகளுடன் கூடிய புனைவால் உடைக்கிறார். இதனாலேயே அவருக்கு எதிர்ப்பு அதிகமும் வருகிறது. அதே சமயம் இவர், முற்போக்காளர்கள் சொல்லும் அடிப்படைவாதக் குழுவில் இருப்பவரும் அல்ல என்பது இவரை முழுவதுமாகக் கை கழுவ முடியாமல் அவர்களைப் படுத்துகிறது.
ஈழத் தமிழ் மக்கள், அங்கே வசிக்கும் இஸ்லாமியத் தமிழ் மக்கள் இருவருக்குமான முரண், பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் நாவல், இவர்கள் மீதான சிங்கள பௌத்த ஆதிக்கத்தையும் ஒருங்கே பேசுகிறது. அரசியலில் பகடைகள் எப்படி நேரம் பார்த்து வீசப்படுகின்றன என்பதை இந்த நாவல் தெளிவாக்குகிறது.
வாசு முருகவேலின் நாவல்களில் எனக்கிருக்கும் குறைகள் இந்த நாவலிலும் உண்டு. ஒன்று, புதிர் போலப் பேசிச் செல்வது. இது புரிந்தவர்களுக்குப் பெரிய வாசிப்பனுபத்தைத் தரும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அலுப்பைத் தந்துவிடக் கூடும். அடுத்தது, விரிவாகச் சொல்லவேண்டிய விஷயத்தை ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போவது. இதை ஓர் உத்தியாகவே அவர் நினைவோடு செய்யக் கூடும். ஆனால் இதை அவர் பரிசீலிப்பது நல்லது.
இன்னொரு வகையில் பார்த்தால், எப்படா நாவல் முடியும் என்பதைவிட, நாவல் முடிந்துவிட்டதே என்று நினைப்பதுவும் நல்லதற்குத்தான். நிச்சயம் வாசித்துப் பாருங்கள். அகிலன், தாசன், அவன் தங்கைக்காகவாவது வாசியுங்கள்.
சூர்ப்பனகை
கெ.ஆர்.மீராவின் ‘சூர்ப்பனகை’ சிறுகதைத் தொகுப்பு படித்தேன். எனக்கான தொகுப்பல்ல. இத்தனை வெளிப்படையான பெண்ணியம் எனக்கு ஆகாது. ஒரு கதை நம்மோடு கொள்ளும் ஆத்மார்த்தமான உறவை முடிவு செய்வது அதனுள் இருக்கும் அந்தரங்கமான, ஆர்ப்பாட்டமில்லாத கதையின் போக்குதான். வெளிப்படையாக ஆடம்பரமாக அலட்டலாக அது கதையை மீறும்தோறும் அக்கதை பிரசாரக் கதையாகிறது. இந்த ‘சூர்ப்பனகை’ சிறுகதைத் தொகுப்பு முற்றிலுமாக ஆடம்பரமாக, பிரசாரமாக ஆகிவிடவில்லை. அந்தரங்கமாக அமைதியாகவும் இல்லை. இரண்டுக்கும் இடையே இருக்கிறது.
இத்தொகுப்பில் ‘லி’ என்னும் எழுத்து அச்சாகாமல் ‘-’ என்று அச்சாகி இருக்கிறது. ஒரு பதிப்பகம் பதிப்பிக்கும் புத்தகங்களில் இதுபோன்ற எதிர்பாராத பிழைகள் வந்துகொண்டே இருக்கும். ஒரு பதிப்பாளனாகப் பல சம்பவங்களை இதுபோன்று பார்த்திருக்கிறேன். எனவேதான் எழுத்துப் பிழைகளைப் பற்றி நான் என் விமர்சனங்களில் எழுதுவதே இல்லை. இதைச் சொல்வது வேறொரு காரணத்துக்காக.
எனது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘சாதேவி’ ஆரம் வெளியீடாக வெளிவந்தது. அதில் முதல் கதையில் மட்டும் பி என்ற எழுத்தைக் காணவில்லை. மற்ற கதைகளில் பிரச்சினை இல்லை. திஸ்கி எழுத்துருவில் பழைய எழுத்துரு ஒன்றை வேறொரு எழுத்துக்கு மாற்றும்போது நிகழ்ந்த விபரீதம் இது. முன்பெல்லாம் ‘ஆ’ என்ற எழுத்தில் பிரச்சினை வரும். 2000களில் தமிழ் எழுத வந்தவர்களுக்கு நினைவிருக்கும். ஆபாசமாகப் பேசினான் என்பது பாசமாகப் பேசினான் என்று வந்துவிடும். இதற்காக நான் என்ன செய்வேன் என்றால், ஆ என்ற எழுத்தை மட்டும் %% என்று ரீப்ளேஸ் செய்துவிட்டு, எழுத்துரு மாற்றிவிட்டு, பின்னர் %% என்பதையெல்லாம் ஆ என்று மாற்றுவேன்.
சாதேவி தொகுப்பில் பி என்ற எழுத்து இல்லை, அதற்குப் பதிலாக ப என்று இருப்பதாக ஆனந்த் அழைத்துச் சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை. இத்தனை ப்ரூஃப் பார்த்தும் பி இல்லையா? மை காட்! நான் ப்ரூஃப் பார்த்தது யூனிகோடில். பி சுழித்துக்கொண்டு போனது வேறொரு எழுத்துருவில்.
‘சூர்ப்பனகை’க்கும் இப்படித்தான் ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கவேண்டும். அடுத்த பதிப்பில் சரிசெய்வார்கள்.
அனந்த் என்றதும் நினைவுகள் அவரைச் சுற்றுகின்றன. நான் கிழக்கில் இருந்தபோது மூன்றாவது எம்.டியாகச் சில காலம் வந்தவர் அனந்த். அமெரிக்கவாசி. சார் என்று அழைக்கவே கூடாது, அனந்த் என்றே அழைக்கவேண்டும் என்றார். அனைவரின் புருவங்களும் உயர்ந்தன. எல்லாவற்றிலும் ஓர் அமெரிக்க ஒழுங்கை எதிர்பார்த்தார். அதனாலேயே மறுநாளில் அனைவருக்கும் அவர் பிடிக்காமல் போனார்.
ஆனால் பழக பழகத்தான் தெரிந்தது அவர் மனசுக்குள் ஒரு குழந்தை இருக்கிறது என்று. இதனாலேயே கூட அவருக்குப் பிரச்சினைகள். அவரால் பிறருக்கும்.
நான் கிழக்கில் இருந்து விலகி சுவாசம் தொடங்கியபோது என்னை அழைத்து அத்தனை அன்பாகப் பேசினார். என்ன என்னவோ அறிவுரைகள் சொன்னார். வாட்ஸப்பில் நீள நீள கட்டுரைகளை அனுப்பினார். முதலீடு தொடர்பான லின்க்குகளை அனுப்பினார்.
ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல அவருடனான தொடர்பு குறைந்துபோனது. ஆறேழு மாதங்களுக்கு முன்னர் அவர் உடல்நலம் சரியின்றி இறந்து போன செய்தியைக் கேட்டபோது உண்மையிலேயே வருந்தினேன். இதை எழுதும்போது கூட ஏதோ ஒரு சோகம் பரவத்தான் செய்கிறது. நல்ல மனிதர். தன்னை சரியாக வெளிப்படுத்திக்கொள்ளத் தெரியாத, சில பிடிவாதங்களில் தேங்கிவிட்ட மனிதர்களை எல்லாருக்கும் பிடிக்காது. அப்படி ஒருவர். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
நேரமிருப்பவர்கள் சூர்ப்பனகை சிறுகதைத் தொகுப்பையும், நேரமே இல்லாவிட்டாலும் சாதேவி தொகுப்பையும் வாங்கவும்.
Idamum valamum asaivuru siru sudar
பி.ஆர்.மகாதேவன் எழுதிய முக்கியமான நாவல் (Auto fiction) ‘இடமும் வலமும் அசைவுறு சிறுசுடர்’. இளமைக் காலத்தில் ஏற்படும் அரசியல் குழப்பமும், சித்தாந்தக் குழப்பமும் அதனால் ஏற்படும் அடையாளச் சிக்கலையும் தெளிவாகச் சொல்லும் ஒரு நாவல். இடதுசாரிகள் நீக்கமற நிறைந்திருக்கும் இலக்கியச் சூழலை இப்படிக் குழப்பமான இளைஞன் எப்படி எதிர்கொள்வான்? அவன் நம்பிச் செல்லும் இடமும் அவனைத் துரத்தினால் அவன் எந்த இடத்தில் தன்னை நிலைநிறுத்துவான்? எதையுமே எதிர்த்துக் கேள்வி கேட்டுப் பழகும் வயதில் அவன் எல்லாவற்றையும் எப்படி எதிர்கொண்டான்? நம்பிக்கைத் துரோகத்தின் நிழல்கள் அவனை எப்படித் துரத்தின? எல்லாவற்றையும் எப்படி எதிர்க்கேள்விகள் கேட்கத் துவங்கினான்? அத்தனையையும் இந்த நாவல் சிறப்பாகச் சொல்கிறது.
ஒரு தமிழ்ப் புத்தகம்
ஒரு தமிழ்ப் புத்தகம். 40 பக்கங்கள் படித்தேன். முக்கியமான எழுத்தாளர். பதிப்பகக்காரர் நண்பர். அவர் வருத்தப்படக்கூடாது என்பதற்காகக் கிசுகிசு போலச் சொல்கிறேன். அந்தக் காலக் கதை என்றால், எத்தனை வருடங்களுக்கு முன்பு நடந்ததோ அதை ஒட்டிய ஒரு பேச்சுவழக்கு நம் மனதில் பதிவாகி இருக்கிறது. புராண காலம் என்றால் ஒரு பேச்சு வழக்கு, அரசர் காலம் என்றால் அதற்கு ஒரு பேச்சு வழக்கு என நமக்குப் பழக்கப்பட்டுப் போயிருக்கிறது. அதை மாற்றுவதில் தவறில்லை. சரியான ஆதாரத்தோடு சரியான பின்பலத்தோடு மாற்றினால் பரவாயில்லை. அதை ஒரே அடியாக மாற்றுகிறேன் என்பதும், அதற்கும் தாண்டி போவதும் நிச்சயம் நம்மைப் புத்தகத்திலிருந்து அந்நியமாக்கிவிடும். எனக்கும் அப்படித்தான் நடந்தது. அதிலும் குறிப்பாக, கடவுள் ‘இப்ப பாருடா’ என்று சொல்லிவிட்டு ‘வில்லனை’ அடிப்பதை எல்லாம் தாங்கிக் கொள்ளும் மனவலிமை எனக்கில்லை.