Archive for திரை

Mura Malayalam Movie

Mura (M)

பார்த்து பார்த்துப் புளித்துப் போன ஒரு கதை. துரோகம். இருபது வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு மேக்கிங் பார்த்திருந்தால் கொஞ்சம் புதியதாகத் தோன்றியிருக்குமோ என்னவோ. ஆனால் இப்போது இந்தப் படத்தின் மேக்கிங் ஆயிரம் மலையாளத் திரைப்படங்களில் பார்த்துவிட்டு அலுத்துப் போன ஒன்றாகிவிட்டது. அதாவது, பேசிக்கொண்டே யதார்த்தத்துக்கு அருகில் இருப்பது. (தமிழில் இன்னும் இதில் 10% கூடச் சாத்தியப்படவில்லை என்பது தனிக்கதை.) முதல் முப்பது நிமிடங்கள் கதைக்குள் வராமல் என்னவோ பேசி பேசிச் சுற்றி அடிக்கிறார்கள். பின்புலத்தைக் கட்டமைக்கிறார்கள். முப்பதாவது நிமிடத்தில் இருந்து படம் கொஞ்சம் விறுவிறுப்பாகிறது. பின்னர் துரோகம், துரத்தல், கொலை என நீள்கிறது.

ஆனாலும் படத்தை முழுமையாகப் பார்க்க முடிந்தது. எதனால்? அந்த நான்கு நண்பர்களின் வெள்ளந்தியான முகம் மற்றும் நடிப்பால். வெள்ளந்தி என்பதால் நல்லவர்கள் என நின்னைத்துவிட வேண்டாம். கொட்டேஷன் எடுத்துக் கொலையும் கொள்ளையும் செய்பவர்கள்.

Spoilers ahead.

பொதுவாகப் பல மலையாளப் படங்களில் தமிழகர்களைத் துரோகிகளாக்குவார்கள். (நாம் தமிழ்த் திரைப்படங்களில் மலையாளிகளுக்குச் செய்வதைவிட இது குறைவே!) ஆனால் இந்தப் படத்தில்? இன்னும் கூட நம்பமுடியவில்லை. அந்த அளவுக்கு இரண்டு தமிழ்த் திருடர்களை உயரத்தில் கொண்டு போய் வைத்துவிட்டார்கள். இந்த ஆறு திருடர்களுக்கு இடையேயான இளம் நட்புக்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம். சுமாரான படமே என்றாலும், ஏனோ எனக்குப் பிடித்திருந்தது.

Share

Some Malayalam and Kannada Movies

பெருமானி (M) – சுமார். ஹீரோ ஹீரோயின் யதார்த்த காதல் மற்றும் வினய் ஃபோர்ட் வரும் காட்சிகள் அருமை. மற்ற காட்சிகள், நம்ம ஊர் ந முத்துசாமி வகையறா போன்ற அபத்த நாடகம். கடைசி அரை மணி நேரம் கொஞ்சம் சிரிப்பு. ஆனால் முதல் ஒரு மணி நேரம் பெரிய அறுவை.

தீரன் (M) – குப்பை.

Shodha (K) – கன்னட வெப் சீரிஸ். அய்யன மனே சீரியலை முழுமையாகப் பார்க்க முடியவில்லை. அத்தனை ஸ்லோ. இது கொஞ்சம் ஓகே. ஏனென்றால் ஒரு எபிசோட் 18 நிமிடங்கள்தான். இயக்குநர் பவன்குமார் இதில் ஹீரோ. என்ன கொடுமை என்றால், புதிய பறவை படத்தை அப்படியே எடுத்து வைத்திருக்கிறார்கள்!

Pariwar (M) – பொறுமையைச் சோதிக்கும் படம். ஆதே சமயம், பல‌ காட்சிகள் அருமை. பல இடங்களில் நாராணீன்டெ மூனாண்மக்கள் படம் நினைவுக்கு வருகிறது. நடிகர்களின் நடிப்பை நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம்.

Share

Trending Tamil Movie

Trending – மிரட்டலான தமிழ்ப்படம். தவறவிடக்கூடாத வகையறா. குறைந்த செலவில், பெரும்பாலும் ஒரே வீட்டில், மொத்தமே 5 நடிகர்களுக்குள் தொடக்க நொடி முதல் இறுதி வரை பரபரப்பு. எமோஷனல் சைகலாஜிகல் திரில்லர். உண்மையில் எப்படி வகைப்படுத்துவது என்பது கடினம். சில இடங்கள் குரூரமான உளவியல். இப்படி எல்லாம் நடக்குமா என்கிற நம்பகத்தன்மை அற்ற ஒன்றை ஆதாரமாகக் கொண்டு அதன் மேல் விளையாடி விட்டார்கள். தமிழில் இது போன்று வந்ததில்லை. ஏதேனும் வெளிநாட்டுத் திரைப்படத்தின் நகலோ என்கிற சந்தேகம் வரும் அளவுக்கு உணர்ச்சி ரீதியாக ஆடி இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் எது உண்மை எது விளையாட்டு என்கிற சந்தேகமும், அதுக்காக இவ்வளவா என்கிற கேள்வி தரும் எரிச்சலும் இப்படத்திற்கான வெற்றிச் சான்றுகள். ஏனென்றால் நாமே இந்த விளையாட்டின் லைக் மற்றும் வ்யூஸ் பலியாடுகள்தான். இந்தப் படம் இந்த இயக்கங்களின் உண்மையான கதை என்றால் இந்த இயக்குநர் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்.

சில லாஜிக் பிழைகள் இருக்கின்றன. நாயகி குழந்தை உண்டாவது போல் காட்டுவது, ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக ஹீரோவே சொல்லிவிட்டு, கருவுற்றதற்காகக் கோபப்படுவது போன்றவை.

டார்க் விளையாட்டு ரசிகர்களுக்கு இந்தப் படம் விருந்து.

Share

Lokah Chapter 1 Chandra Review

லோகா சாப்டர் 1‌ சந்திரா (M) – மலையாளிகளுக்கு என்று எப்படித்தான் கதை கிடைக்கிறதோ‌, அசத்தி விட்டார்கள் என்று சொல்ல ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் பாருங்கள், இது படு குப்பை.

இடைவேளை வரை அத்தனை மோசமில்லை. குறிப்பாக நஸ்லேனும் அவர் நண்பர்களும் அடிக்கும் லூட்டியும், கல்யாணி யாரென்று தெரிந்த பிறகு நஸ்லேன் பேசும் வசனங்களும் தியேட்டரையே குலுங்க வைக்கின்றன. நீண்ட நாட்கள் கழித்து, தொடர்ந்து வாய் விட்டுச் சிரித்தேன். ஆனால் டொவினோ கால்‌ வைத்ததும் படம் குப்பை ஆகிவிட்டது.

ஒட்டுமொத்தமாகவே மிகவும் சுமார்தான். மின்னல் முரளியில் இருந்த ஆத்மார்த்தமும் மக்கள் நன்மைக்காகப் போராடுவதும் இதில் வலுவாக வெளிப்படவில்லை.

இந்தப் படத்தில் காண்பிக்கும் பல குறியீடுகளை வைத்துக்கொண்டு அப்படி இப்படிப் புரிந்து கொள்ள வேண்டும், யக்‌ஷி கதைகளின் தொன்மம் அது இது என்றெல்லாம் கதை சொல்வார்கள். அது எல்லாமே உண்மையாக இருந்தாலும் ஒரு படமாக இது குப்பை என்பதில் மாற்றம் இல்லை. அதுவும் தமிழர்கள் தியேட்டரில் பார்த்தால் வரும்போது சொட்டு ரத்தம் இல்லாமல்தான் வெளியே வருவார்கள். அதிலும் கடைசி ஒரு மணி நேரம் எழுந்து ஓடி விடலாமா என்றாகிவிட்டது.

வில்லனுக்கு எதிராக நாயகி பிரமாண்டமாக நிற்க வேண்டும் அல்லவா? அது எதுவும் இதில் வரவே இல்லை.

அழகான கல்யாணியை ஏன் இப்படிக் காண்பித்து வெறுப்பை உண்டாக்கினார்கள் என்று தெரியவில்லை. பார்த்தால் நஸ்லேனுக்காகப் பார்க்கவும். மற்ற எதற்காகவும் பார்க்கவே தேவையில்லை.

இதில் இது சாப்டர் 1 மட்டும்தானாம்! இன்னும்‌ எத்தனை‌ சாப்டர்களோ! செத்தோம்.

வில்லனாக வருபவர் கௌடா என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழ் பேசுகிறார். அவரது அம்மாவும் பார்க்க பிராமணப் பெண் போல் இருக்கிறார். ஆனால் பிராமணர் என்று எங்கேயும் வெளிப்படையாகக் காட்டப்படவில்லை. ஏன் இந்தக் குழப்பம் என்று தெரியவில்லை.

Share

Timmana Mottegalu Review

திம்மன மொட்டகளு (K) – நவீன திரைப்பட உலகில், ஓ டி டி வந்த பிறகு, திரைப்பட வர்த்தகம் முற்றிலும் மாறிப்போன பிறகு, மொத்தமாக அழிந்து கொண்டிருக்கும் ஒரு வகை, அவார்ட் வகைத் திரைப்படங்கள். இந்த விருது வகைத் திரைப்படங்கள் எடுப்பதற்கு என்று பலர் இருந்தார்கள். இன்று அவர்கள் அத்தனை பேரும் கிட்டத்தட்ட அருகிக் கொண்டிருக்கிறார்கள். 

மெல்ல நகரும் படத்தை மலையாளத்தில் அவ்வப்போது பார்க்க முடிகிறது என்றாலும், தமிழில் சமீபத்தில் இதைப் போன்ற ஒரு திரைப்படம் எப்போது வந்தது என்பது எனக்கு நினைவுக்கு வரவில்லை. பாலு மகேந்திரா, ஜெயபாரதி போன்றவர்கள் எல்லாம் இந்த வகையில் எடுப்பார்கள். மணிகண்டனின் கடைசி‌ விவசாயி கொஞ்சம் இந்த வகை.

இப்படி ஒரு திரைப்படம் திம்மன மொட்டகளு. வனவாசி திம்மன் பணத் தேவைக்காக, கருநாகக் கூட்டையும் அதன் முட்டைகளையும் ஓர் ஆய்வாளருக்குக் காட்டிக் கொடுப்பதுதான் கதை. 

இயற்கையும் மனிதர்களும் இயற்கைச் சுழற்சியும் எப்படி ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இருக்கின்றன என்றும், அதை நாம் கெடுக்கக் கூடாது என்றும் மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். சாவடிக்கிறார்கள்.

முதலில் வரும் ஒரு பிராமணர் வனவாசிகளை இரக்கமின்றி வேலை வாங்குவது போல் காட்டினாலும், அவரை வைத்து ஏன் இயற்கை மற்றும் இயற்கைச் சுழற்சி முக்கியம் என்பதைச் சொல்ல வைத்திருக்கிறார்கள். அதற்காக அறிவியலுக்குப் புறம்பான படமாகவும் சொல்லிவிட முடியாது. 

வனவாசிகளின் நல்ல மனசை சொல்கிறேன் என்று என்னவோ சொல்ல வந்து எதையோ சொல்லி இருக்கிறார்கள்.

ரொம்ப சுமார் வகையிலான திரைப்படம். படத்தில் பேசப்படும் கன்னடத்துக்காகப் பார்க்கலாம். வனவாசிகளின் வாழ்க்கையில் கடவுளும் விலங்குத் தெய்வங்கள் பற்றிய நம்பிக்கையும் பயமும் எந்த அளவுக்கு உறைந்திருக்கின்றன என்பதை எந்தவித திருகுத்தனமும் இல்லாமல் காட்டியதற்காகப் பாராட்டி வைக்கலாம்.

Share

Nari Vettah

நரி வேட்ட (M) – தமிழ்நாட்டில் தமிழ் தமிழ் என்று கூவும் நடிகர்கள் மலையாளத்துப் பக்கமோ தெலுங்குப் பக்கமோ சென்று விட்டால் வாலைச்‌ சுருட்டிக்கொண்டு நடிப்பது கூட பிரச்சினை இல்லை. ஆனால் அவர்களின் உயிருக்கு உயிரான தமிழர்களுக்கு எதிராக நடிக்கவும் தயங்குவதில்லை. ஏற்கெனவே சோமசுந்தரம் சட்டாம்பி என்னும் மலையாளத் திரைப்படத்தில், தமிழர்களைக் கழுத்தறுப்பவர்களாகக் காட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த முறை சேரன்.

தமிழர்கள் மலையாளக் கதாபாத்திரம் ஏற்று வில்லனாக நடிப்பதில் பிரச்சினை இல்லை. இந்தப் படத்தில் சேரன் தமிழராகவே நடித்திருக்கிறார். நாம் மலையாளிகளை நல்ல விதமாகக் காண்பிப்பதில்லை. எனவே மலையாளிகள் தமிழர்களை நல்லவிதமாக காண்பிக்கிறார்களா என்று கேட்க நமக்குத் தகுதி இல்லை. ஆனால் சேரன் போன்றவர்கள் எப்படி இது போன்ற படத்தில் நடிக்கிறார்கள் என்பது பெரிய ஆச்சரியம். பணம் பத்தும் செய்யும்.

இதை விட கொடுமை என்னவென்றால், இந்தத் திரைப்படம் 2003 வாக்கில் வயநாடு முத்தங்காவில் நடைபெற்ற ஆதிவாசிகள் மீதான போலீஸ் மற்றும் அரச வன்முறையை மையமாகக் கொண்டது. 5 ஆதிவாசிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதில் பங்கேற்று ஆணைகள் பிறப்பித்த அதிகாரிகளின் பெயர்களைத் தேடினால் இரண்டு பெயர்கள் கிடைக்கின்றன. ஒருவர் சங்கர் ரெட்டி. அவர் மலையாளியா தெலுங்கரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. தெலுங்கராக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். ஏனென்றால் அவர் மகள் ஆந்திராவில் இருப்பதாக ஏதோ ஒரு செய்திக் குறிப்பு சொல்கிறது. தமிழராக இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

இன்னொருவர் மலையாளி.

அப்படி இருக்க, இந்தப் படத்தில் அத்தனை கொடூரங்களையும் செய்ய வேண்டிய ஒரு கதாபாத்திரத்தில் வருவது ஒரு தமிழர் என்று வரும்படி திரைக்கதை அமைக்க வேண்டிய அவசியம் என்ன என்பது புரியவில்லை. சேரன் அந்தக் கொடூரமான கதாபாத்திரத்தை இன்னும் கொடூரமாக, நடிக்கவே தெரியாமல் சொதப்பி இருக்கிறார் என்பது தனிப்பட்ட விஷயம். அந்த நேரத்தில் போலீஸ் அதிகாரியாக இருந்தது தமிழர்தான் என்று உறுதி செய்து கொண்டு சேரன் நடித்திருப்பாரா? கடவுளுக்கே வெளிச்சம்.

இந்தப் படத்தில் ஆதிவாசியாக வரும் நடிகர் அசத்திவிட்டார். அவரும் அடிப்படையில் தமிழர்தான் போல. ஆனால் அவர் மீது பிரச்சினை இல்லை. ஏனென்றால் அவரது கதாபாத்திரமே மலையாளக் கதாபாத்திரமாகத்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தில் கொல்லப்பட்ட ஆதிவாசி.

இன்னொரு கொடுமை இந்தப் படத்தில் அரங்கேறி இருக்கிறது. ஒன்றல்ல இரண்டு. இந்தப் படத்தில் ஆதிவாசிகளால் கொல்லப்பட்டதாக போலீசால் சித்தரிக்கப்பட்ட ஒரு போலீசின் பெயர் பஷீர். முஸ்லிம். அவர் தொழுவதை எல்லாம் காண்பிக்கிறார்கள். நல்லது. ஆனால் உண்மையில் கொல்லப்பட்டது, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் கே.வி.வினோத். ஒரு தாழ்த்தப்பட்ட காவல் அதிகாரியும் ஆதிவாசிகளுமே இந்தப் போராட்டத்தில் கொல்லப்பட்டார்கள் என்று அன்று கேரளாவில் பேசியிருக்கிறார்கள் .

அதை ஏன் படத்தில் முஸ்லிமாக மாற்றினார்கள் என்று தெரியவில்லை.

Spoilers alert.

இன்னொரு கொடுமை என்னவென்றால், அரசு தரப்பின்படி இந்த வினோத் என்னும் போலீசும் கேரள வனத்துறை அதிகாரியும் போராட்டக்காரர்களால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இந்தத் திரைப்படத்தில் போலிஸைச் சேர்ந்தவரே சக போலீசைக் கொன்று விட்டு அந்தப் பழியை ஆதிவாசிகள் மீது போடுவதாகக் காண்பிக்கிறார்கள். (கொன்றது மத்திய போலிஸா அல்லது வேறு டீமா என்று இன்னொரு முறை பார்த்தால்தான் புரியும்.) படத்தில் காண்பிப்பதற்கு எந்த ஆதாரமும் எங்கேயும் எனக்குக் கிடைக்கவில்லை.

(பல நண்பர்கள், திரைப்படத்தில் வருவது மத்திய போலிஸ்தான் என்று சுட்டிக் காட்டினார்கள்.)

ஒரு படத்தை எடுக்கும்போது ஆதிவாசிகளுக்கு ஆதரவாக எடுப்பது இயக்குநரின் உரிமை. அதில் தவறில்லை. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கும் போது கொஞ்சமாவது நியாயம் இருக்க வேண்டும். தலித் கதாபாத்திரத்தை முஸ்லிமாக மாற்றுவது, சக படையினரே போலீசை கொல்வது என்று, எந்த ஆதாரமும் இன்றி அராஜகமாக எடுப்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளும்படியாகவே இல்லை.

திரைப்படமாகப் பார்த்தால், ஆதிவாசிகள் வரும் காட்சிகள் அனைத்தும் ஓரளவு பார்க்கும்படியாக இருக்கின்றன. அவர்கள் பேசும் மலையாளமும் நிலமும் அழகு. நாய் மறக்க முடியாதது. அதுவும் கடைசி கிராஃபிக்ஸில் நாய் நெருப்போடு ஓடி வருவது நெகிழ்ச்சி.

ஆனால் கதைக்குள் வருவதற்கு முன்பாக டொவினோவின் காதல் காட்சிகளை முக்கால் மணி நேரம் காண்பிக்கிறார்கள். கடும் எரிச்சலைக் கிளப்பும் காதல். அதே போல் இறுதிக் காட்சிகள் எல்லாம் மிகவும் தட்டையாக இருக்கின்றன.

பொறுமை இருந்தால், ஆதிவாசிகளுக்காக ஒரு முறை பார்த்து வைக்கலாம்.

Share

Vedaa Hindi Movie

வேதா (H) – தலித் கொடுமைகளுக்கு எதிரான ஒரு ஹீரோயிஸத் திரைப்படம். இந்த வரிக்குள்தான் ஒரு படமாக இந்தப் படத்தின் தோல்வியும் அமைகிறது. தலித் திரைப்படங்களுக்கே உரிய யதார்த்தம் படம் நெடுக மனதை உலுக்கும் வகையில் இருக்கிறது. ஆனால் அதை முறியடிக்கும் விதமோ, கொஞ்சம் கூட யதார்த்தமே இல்லாத ஹீரோயிஸ பாணியில் அமைகிறது.

Spoilers alert.

ஜான் ஆப்ரஹாம் சுடுகிறார் சுடுகிறார் சுட்டுக்கொண்டே இருக்கிறார். யாராக இருந்தாலும் அடித்துப் போட்டு துவம்சம் செய்கிறார். இவர் இதையெல்லாம் செய்யக் கூடியவர்தான் என்று பார்வையாளர்களை நம்ப வைப்பதற்காக, பக்காவாக முதல் காட்சியை வைத்திருக்கிறார்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தனியாளாகச் சென்று, இந்திய ராணுவ உதவியுடன், பயங்கரவாதிகளைப் போட்டுத் தள்ளுகிறார். எனவே இவர் என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்தாம் என்று வலுக்கட்டாயமாக நம்மை நம்பச் சொல்கிறார்கள்.

தலித் பெண் பாக்ஸிங் கற்றுக் கொள்ள நினைப்பதை, எப்படி உயர்ஜாதிக்காரர்கள் எதிரிக்கிறார்கள், எப்படி அந்தப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கும் ஜாதிய வன்கொடுமைக்கும் ஆளாக்கப்படுகிறார்கள் என்பதுதான் மையக் கதை.

ராஜஸ்தானில் நடக்கும் கதை. ராஜஸ்தானின் கிராமங்களையும் அங்கே நடக்கும் அநியாயங்களை ஒளிப்பதிவு அத்தனை அட்டமாசமாக நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. இவையே படத்தின் பலம்.

ஜான் ஆப்ரஹாம் மொத்தமாக ஒரு பக்கம் வசனம் பேசினால் அதிகம். வழக்கம்போல பார்க்கிறார். சிரித்தால் விருது நிச்சயம் என்பது போலவே இருக்கிறார். தாலி கட்டும்போது மறந்து போய் சிரிக்கிறார்.

படத்தின் சுவாரஸ்யம் என்ன? படம் முடிந்த பின்பு சில சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. இறுதிக் காட்சியில், இந்தக் கதை உண்மைக் கதைகளை மையமாக வைத்து எடுத்தது என்று சில சிலைடுகளைக் காட்டுகிறார்கள்.

நம் ஊரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக ஜாதிய வன்கொடுமை ஏதேனும் நடக்காவிட்டால்தான் நாம் ஆச்சரியப்படவேண்டும். எனவே ஆதாரம் இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இருந்தாலும், இந்த ஆதாரங்களை ஆராய்ந்தேன். அங்கேதான் சில சுவாரஸ்யங்கள் கிடைத்தன.

இந்தப் படம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகளுக்கு எதிரான படம். இதற்காக உண்மை நிகழ்வுகளைத் தங்களுக்கு வசதியாக, ஒரு திரைப்படத்துக்காக வளைத்துக் கொண்டிருக்கிறார்கள். தவறில்லை. ஆனால் உண்மை நிகழ்வுகளைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

2015ல் மீனாக்‌ஷி குமாரி மற்றும் அவரது தங்கை இருவரையும் அந்த ஊர்ப் பஞ்சாயத்து பாலியல் பலாத்காரம் செய்ய உத்தரவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஏன் சொல்லப்படுகிறது என்று சொல்கிறேன் என்றால், வழக்கில் இதற்கான ஆதாரம் தரப்படவில்லை. பெண்கள் சொன்ன வாக்குமூலத்தை வைத்தே வழக்கு பதியப்படுகிறது. காரணம் என்ன?

2011ல் இந்த இரு பெண்களின் சகோதரன், உயர்ஜாதிப் பெண், அதுவும் திருமணமான பெண்ணுடன் ஓடிப் போகிறான். இதன் காரணமாகவே இப்படி ஒரு தீர்ப்பு. இதை எதிர்த்து வழக்கு 2015ல் பதியப்படுகிறது.

இந்தியாவை மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்த வழக்கு, அதாவது இரு பெண்களுக்கு எதிராகச் சொல்லப்பட்ட ஊர்ப் பஞ்சாயத்தின் தீர்ப்பு பேசப்பட்டதாக கூகிள் சொல்கிறது. காரணம், ஆம்னெஸ்டி அமைப்பு இந்த வழக்கைக் கையில் எடுக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் சகோதரிகளைப் பாதுகாக்கச் சொல்லி இந்தியாவுக்குச் சொல்லுங்கள் என்ற பிரசாரம் உலகம் முழுக்க வலுக்கிறது. வழக்கம் போல சி என் என், பிபிசி எல்லாம் களத்தில் குதிக்கின்றன.

திரைப்படத்தில், இரு பெண்களின் சகோதரன், திருமணமாகாத ஒரு பெண்ணைக் காதலித்து ஓடிப் போவதாகக் காட்டுகிறார்கள். திருமணமான பெண்ணுடன் ஓடிப் போவதாகக் காட்டி இருந்தால், ஒட்டுமொத்த படத்தின் ஆதாரமும் சிதைந்து போயிருக்கும். இப்படிச் சொல்வதால், பஞ்சாயத்து சொன்னது சரி என்பதல்ல. உண்மையில் பஞ்சாயத்துக்கு இப்படி எல்லாம் தீர்ப்புச் சொல்ல அதிகாரம் இருந்தது என்பதே அசிங்கம்.

சின்ன கவுண்டர் திரைப்படத்தில் இந்தப் பஞ்சாயத்து முறையை எப்படி ரொமாண்டிசைஸ் செய்தோம் என்று நினைத்துப் பார்க்கிறேன். இதில் ஒரு நீதிபதியை கார் ஓட்டுநர் கேள்வி கேட்டு அசிங்கம் வேறு செய்வார். திரைப்படம் என்பது எதை நாம் காட்டுகிறோம் என்பதுதான்!

இந்தப் படத்தில் சுட்டிக் காட்டப்படும் இன்னொரு வழக்கு, 2007 மனோஜ் பாப்லி வழக்கு. இருவரும் காதலித்து ஓடிப் போய் கல்யாணம் செய்கிறார்கள். இருவரும் ஒரே ஜாதி. ஜாட். ஆனால் இவர்களது கல்யாணம் செல்லாது என்று ஊர்ப் பஞ்சாயத்து அறிவிக்கிறது. பெண்ணின் உறவினர்கள் போலிஸ் உதவியுடன் பெண்ணையும் பையனையும் தூக்குகிறார்கள். இருவரையும் சித்திரவதை செய்து, கொன்று, குட்டையில் வீசுகிறார்கள்.

பெண்ணின் குடும்பத்தினர் ஐந்து பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கிறது விசாரணை நீதிமன்றம். பஞ்சாயத்துத் தலைவருக்கு ஆயுள் தண்டனை. போலிஸுக்கு 7 வருடம் சிறை. ஆனால் உச்ச நீதி மன்றம் வரை சென்று போராடி, 2018ல் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது.

இந்த இரண்டு வழக்குகளும் ஊர்ப் பஞ்சாயத்து முறைகளைக் கடுமையாகக் கேள்விக்கு உட்படுத்துகின்றன. இதை அடிப்படையாக வைத்துத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஜாதியில் திருமணம். பெண் வீட்டார் ஏன் கொலை வரை சென்றார்கள்? இருவரும் ஒரே கோத்திரம். ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக்கூடாது என்பதால் கொலைக்கு உத்தரவிட்டிருக்கிறது ஊர்ப் பஞ்சாயத்து! இதை பையன் வீட்டார் எதிர்க்க, அவர்கள் மீதும் கடும் கோபத்தில் இருந்திருக்கிறது பஞ்சாயத்து.

இப்படி ஒரே கோத்திரத்தில் கல்யாணம் செய்துகொண்டவர்களுக்காக ஹீரோ போராடினால் யார் பார்ப்பார்கள்? எனவே திரைப்படத்தில் தங்களுக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் மூன்றாவதாகக் காட்டப்பட்ட வழக்கு விவரம் நடந்தது தமிழ்நாட்டில்.

2011ல் ஆறுமுகம் சேர்வை வழக்குத் தீர்ப்பு. 1999ல் மதுரையில் ஜல்லிக்கட்டு சமயத்தில் தாழ்த்தப்பட்டவர்களை அவர்களது சாதியைச் சொல்லித் திட்டப்பட்ட வழக்கு. 500 ரூபாய் அபராதம், ஆறு மாதக் கடுங்காவல் தண்டனை தீர்ப்பு.

மேலே சொன்ன மூன்று வழக்கையும் வைத்துக்கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

கதாநாயகி நீதிமன்றத்தை நம்பி ஓடுகிறாள். நீதிமன்றமே தாக்கப்படுகிறது. ஜாதியின் கைகளுக்குப் பயந்து நீதிபதிகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். ஆனாலும் நீதி கேட்டு நிற்கிறாள் கதாநாயகி.

இந்தத் திரைப்படத்தில் ஹீரோவின் பெயர் அபிமன்யு. கடைசியில் ஜாதியவாதிகளின் வியூகத்தில் சிக்கித் தோற்கவேண்டும். ஆனால் அவன் யதா யதா ஹித்தர்மஸ்ய என்று சொல்லி, திரௌபதி வெல்லாமல் விடமாட்டாள் என்று நம்பிக்கையோடு கூறி, வில்லனைக் கொல்கிறான்.

நல்ல படமாக வந்திருக்கவேண்டியது, ரஜினி பாணி ஹீரோயிஸக் காட்சிகளால் கீழிறங்குகிறது. ஆனாலும் பார்க்கலாம்.

Share

Tehran Hindi Movie

Tehran (H) – ஜான் ஆபிரஹாமுக்கு எப்போதுமே ஒரு துரதிர்ஷ்டம் உண்டு. அவரது திரைப்படங்களுக்கு நிச்சயம் ஒரு மினிமம் கேரண்டி இருந்தாலும், ஏனோ அவை அதைத் தாண்டி மிகப் பெரிய வெற்றியைப் பெறாமல் போகும். அவரது திரைப்படங்கள் பெரும்பாலும், நம்ம ஊர் அர்ஜூன் / விஜய்காந்த்தின் திரைப்படங்கள் போல, நம் நாட்டுப் பற்றை ஒட்டியதாகவே இருக்கும். ஆனால் தரம், இவர்களின் படம் போல சப்பையாக இருக்காது. நிச்சயம் நன்றாகவே இருக்கும்.

டெஹ்ரான் அதற்குச் சிகரம் வைத்தது போல வெளியாகி இருக்கிறது. மேக்கிங்கைப் பொருத்தவரை இது ஹிந்திப் படம் என்ற பெயரில் வந்திருக்கும் ஆங்கிலப் படம்.

கதையெல்லாம் அதே நாட்டுப் பற்றுதான். ஆனால் அதை இந்தியாவில் நடந்த ஓர் பயங்கரவாத் தாக்குதல் முயற்சியுடன் முடிச்சுப் போட்டதிலும், அதை ஒட்டி அந்தக் கால அரசியலை மறைமுகமாக, உள்ளுறையாக விமர்சித்துக் காட்டியதிலும்தான் கவர்கிறது.

2012 வாக்கில் உலகின் மூன்று பகுதிகளில் ஒரே நாளில் இஸ்ரேலிய உயரதிகாரிகள் குறிவைக்கப்படுகிறார்கள். ஜார்ஜியா, தாய்லாந்து, மூன்றாவதாக இந்தியா. அதில் சம்பந்தமே இல்லாமல் பூ விற்கும் சிறுமி அநியாயமாகக் கொல்லப்பட, ஜான் அப்ரஹாம் இதற்குப் பின் உள்ள பின்னலைக் கண்டறிய முற்படுகிறார். இது சர்வதேசச் சதி என்று தெரிந்துகொண்டு, அதை முறியடிக்கக் கிளம்புகிறார்.

ஆனால் அவர் இந்தியாவால் கை விடப் படுகிறார். ஏன்? எண்ணெய் மற்றும் ஊழல் அரசியல். இஸ்ரேலால் புறந்தள்ளப்படுகிறார். ஈரானால் குறி வைக்கப்படுகிறார்.

இவற்றை எல்லாம் சமாளித்து எப்படி ஒட்டுமொத்த கும்பலையும் கண்டறிந்து சர்வர்தேச வலைப் பின்னலை முறியடிக்கிறார் என்பது மீதிக்கதை.

தொடக்கத்தில் வரும் சேஸிங் காட்சிகள் கொஞ்சம் சலிப்பைத் தந்தாலும், இந்திய அரசு ஆபரேஷனைக் கைவிடச் சொல்லியும் தன் திட்டப்படி ஜான் ஆப்ரஹாம் ஈரான் செல்ல முடிவெடுக்கும் காட்சியில் இருந்து இறுதி வரை படம் விறுவிறுப்பு குறையாமல் செல்கிறது. அபுதாபி மற்றும் ஈரான் காட்சிகள் கலக்குகின்றன.

வில்லனாக வரும் நடிகர் கலக்கிவிட்டார்.

மொத்தத்தில் தரமான படம். உண்மைச் சம்பவத்தில் எப்படிக் கற்பனையைக் கலந்து சிறப்பாக எடுக்கலாம் என்று பாடம் சொல்லும் இன்னுமொரு திரைப்படம்.

நேரமும் பொறுமையும் இருப்பவர்கள் நிச்சயம் பார்க்கலாம். ஸீ 5ல் கிடைக்கிறது.

Share