Archive for அரசியல்

The killing of a young boy

http://www.thehindu.com/opinion/op-ed/the-killing-of-a-young-boy/article4428792.ece

பிரபாகரன் கொல்லப்பட்டதை என்னதான் ஓநாயின் பார்வையிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தாலும், இந்தச் சிறுவன் கொல்லப்பட்டதை ஓநாயாக வாழ்ந்து பார்த்தாலும் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றவில்லை. பிரபாகரன் பிறருக்குச் செய்தது அவருக்கே நிகழ்ந்தது என்னும் தத்துவங்கள் எனக்கும் தெரியும். ஆனாலும் இந்தப் படங்கள் மனதை உலுக்குகின்றன. முதலிரண்டு படங்களில் தெரியும் சிறுவனின் விளங்கமுடியாத கண்கள் தரும் பாதிப்பு சொல்லமுடியாதது. மனதை உலுக்கும் புகைப்படம். மேலதிக விவரங்களுக்கு தி ஹிந்துவில் வெளியாகியிருக்கும் கட்டுரையை வாசிக்கவும்.

Share

தூக்கு

பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது கடும் எரிச்சலாக இருந்தது. ஒரு காங்கிரஸ் ஜால்ரா என்பதாகவே என் மனப்பதிவு இருந்தது. ஆனால் கசாப், அப்சல் தூக்கு வரிசையாக நிறைவேற்றப்பட்டபோது ஆச்சரியமாகவே இருந்தது. உண்மையில் பாஜக அரசு அமைந்திருந்தால்கூட இத்தனை உறுதியாகச் செயல்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட இரண்டு பேரும் இஸ்லாமியர்கள் என்பதால், ஒருவேளை பாஜக ஆட்சியில் இருந்து இந்தத் தூக்குகள் நிறைவேற்றப்பட்டிருந்தால், முற்போக்காளர்கள் இன்னும் கடும் வீச்சில் செயலாற்றியிருப்பார்கள்.

இரண்டு தூக்குமே சரியான காரணங்களுக்காக நிறைவேற்றப் பட்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன். ஒட்டுமொத்த தூக்குத் தண்டனையையும் நிறுத்தவேண்டும் என்ற வாதம் வலுப்பெற்று வருகிறது. இதை நான் ஏற்கவில்லை. கடவுள் தந்த உயிரை மனிதன் பறிக்கக்கூடாது என்பதில் இருந்து, காட்டுமிராண்டித்தனம் என்பது வரையிலான காரணங்கள். இவற்றையெல்லாம் மீறி ஒருவனுக்குத் தூக்குத் தண்டனை தரப்படுகிறதென்றால் அக்குற்றம் எத்தகையதாக இருந்திருக்கவேண்டும் என்றே பார்க்க நினைக்கிறேன். அஹிம்சையை போதித்த காந்தியைக் கொன்றவர்களுக்கு எப்படி தூக்குத் தரலாம் என்பதற்கான பதிலாக, காந்தி கொலை வழக்குத் தீர்ப்பில் சொல்லப்பட்ட பதில், காந்தி போன்ற அஹிம்சாவாதியைக் கூட ஒருவன் கொன்றுவிட்டு தண்டனையில் இருந்து தப்பிவிடக்கூடாது என்பதற்காகவே கோட்ஸேவுக்கு மரணதண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி கூறியிருந்தாராம். (எனது இந்தியா புத்தகத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் இதனைக் குறிப்பிட்டுள்ளார், விகடன் வெளியீடு.)

கடந்த 10 வருடங்களில் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தூக்குத் தண்டனைகளைவிட, கடந்த இரண்டு மாதங்களில் நிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனைகள் இரண்டு மடங்கு என்கிறது ஒரு புள்ளிவிவரம். அதாவது கடந்த இரண்டு மாதங்களில் 2 பேரைத் தூக்கிலிட்டதை இப்படிக் குறிக்கிறார்கள். மிக வசதியாக, தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களைப் பற்றி இவர்கள் பேசுவதில்லை. அதேபோல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்பு, இறந்தவரின் கடைசிகால நிமிடங்களை விவரிப்பது, அவர்களது குடும்பம் படும் வேதனைகளைச் சொல்லி அனுதாபம் தேடுவது என்பதும் நிகழ்கிறது. எந்த ஒரு மனிதனின் சாவும் கொடுமையானதே. ஆனால் இவர்கள் தாங்கள் பிற மக்களைக் கொன்று குவிக்கும்போது, அவர்களின் கடைசி நிமிடங்களையோ அவர்களது குடும்பத்தின் கதறல்களையோ யோசிப்பதில்லை. இவர்களுக்கு இன்று வக்காலத்து வாங்குபவர்களும் அவர்களைப் பற்றிப் பேசுவதில்லை. தீவிரவாதத்தை பல காரணங்களுக்காக ஆதரிக்க நினைப்பவர்களின் எளிமையான முகமூடியே இந்த அனுதாபம். எனவே அதையும் நான் ஏற்கவில்லை.

எந்த எந்தக் குற்றங்களுக்குத் தூக்குத் தணடனை தரலாம், தரவேண்டாம் என எனக்கென ஒரு தனி மனப்பதிவு உள்ளது. இந்தியாவை அதிரவைக்கும் ராஜதுரோக குற்றங்கள் (கசாப், அப்சல்) கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிப்பது (சீக்கிய, இஸ்லாமிய, ஹிந்து மக்கள் கொல்லப்படுவதுபோன்ற குற்றங்கள்) ஒரு குறிப்பிட்ட இனத்தைக் கொன்றொழிப்பது (ராஜபக்ஷே) போன்றவற்றுக்குத் தூக்குத் தண்டனைதான் சரியான தண்டனை என்பது என் நிலைப்பாடு. இது ஒரு நீதிபதியின் கண்ணோட்டத்தில் எப்படி சாத்தியமாகிறது என்பது பெரிய விஷயம் என்பதும், என் சிந்தனை திண்ணைப் பேச்சு மாதிரி இருக்கிறது என்பதும் எனக்கே புரிகிறது. Issue based என்பதாகத்தான் இதுவரை தூக்குத் தண்டனை இருந்து வந்திருக்கிறது. அதுவும் சரியாகவே இன்றுவரை இந்தியாவில் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கிறது.

perarivaalan-murugan-santhan

தூக்குத் தண்டனையைப் பொருத்தவரை, குற்றத்தின் தண்டனை, அது நிகழ்ந்த காலம், அக்குற்றத்தின் இன்றைய தீவிரம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியது கட்டாயம். குற்றத்தின் இன்றைய தீவிரம் என்பதை மையப்படுத்தும்போதுதான் வீரப்பன் சகா நால்வருக்கும், ராஜிவ் கொலையில் காத்திருக்கும் மூவருக்கும் தூக்குத் தேவையா என்ற கேள்வி எழுகிறது.

வீரப்பன் செய்த கொடுமைகள் எண்ணிலடங்காதவை. எத்தனையோ பொதுமக்கள், போலிஸ் அதிகாரிகளைக் கொன்று குவித்துள்ளார். ஆனால் 2004ல் வீரப்பன் கொல்லப்பட்டுவிட்ட நிலையில், இன்று வீரப்பன் சகாக்களுக்குத் தூக்குத் தரப்படுவது எந்த விதத்தில் சரியான தீர்ப்பாக இருக்கப்போகிறது என்பது புரியவில்லை. நீதிமன்றம் தூக்கு என்று அறிவித்த வரையிலும் சரி. ஆனால் பிரணாப் கருணை மனுவை ஏற்றுக்கொண்டிருக்கலாம் – அக்குற்றம் இன்றைய நிலையில் எவ்வித பின்விளைவையும் ஏற்படுத்தாது என்ற நிலையை அடைந்துவிட்டதைக் கருத்தில் கொண்டு. வீரப்பனை தமிழ்த்தியாகியாக உருவகித்து, அவரது சகாக்களைப் பாதுகாக்க சிலர் முனைகிறார்கள். வீரப்பன் உயிரோடு இருந்திருந்தால் கர்நாடகா வாலாட்டுமா என்று பொறுப்பட்டுப் பலர் பேசுகிறார்கள். தமிழர் நிலைப்பாட்டை முன்வைத்து வீரப்பன் சகாக்களைக் காக்க முயல்கிறார்கள். இது எதுவுமே சரியானதல்ல. ஆனாலும் இந்நிலையிலும் வீரப்பன் சகாக்களுக்கு தூக்குத் தேவையல்ல என்பதே என் நிலைப்பாடு.

ராஜிவ் கொலை வழக்கில் மூவருக்குத் தரப்பட்டிருக்கும் தூக்குத் தொடர்பாக என் நிலைப்பாடும் இதுவே. புலிகள் இன்று வேரறுக்கப்பட்டுவிட்ட நிலையில், பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்ட நிலையில், இந்த மூவருக்குத் தூக்கு என்ன சாதிக்கப்போகிறது? பிரபாகரனோ வீரப்பனோ உயிருடன் இருந்து அவர்களது பயங்கரவாதமும் நடைமுறையில் இருக்குமானால் நாம் வேறு மாதிரியாகச் சிந்திக்கவேண்டியிருக்கும். இப்போது அச்சூழல் இல்லை. (ராஜிவ் கொலைவழக்கில் தூக்குக்குக் காத்திருக்கும் மூவரும் குற்றமிழைக்காதவர்கள், எனவே விடுதலை செய்யப்படவேண்டும் என்ற வாதத்தை ஏற்கவில்லை. உண்மையில் இந்த வாதம்தான் அவர்களுக்கு எதிராகத் திரும்பும் என்று தோன்றுகிறது. குற்றமிழைத்தவர்கள் என்றாலும், இன்றைய நிலையில் தூக்கு தேவையில்லை, ஆயுள் தண்டனை போன்றவற்றைப் பரிசீலிக்கக் கோருவதே பொது மக்களின் ஆதரவைப் பெற்றுத் தரும் என்பதோடு சரியானதாகவும் இருக்கும்.)

ஒருவேளை நால்வருக்கும் மூவருக்கும் தூக்கு நிறைவேற்றப்பட்டால், கசாப் அப்சலோடு சேர்த்து 9 தூக்குகள். பிராணப்பை நினைத்தால் கொஞ்சம் கலவரமாகவே இருக்கிறது. வீரப்பன் சகாக்களுக்கு இன்று தூக்கு நிறைவேற்றப்படலாம் என்ற பேச்சு நிலவுகிறது. அப்படி நினைவேற்றப்பட்டால், இந்தியாவின் உலக முகம் தொடரும் தூக்குகளால் நிர்ணயிக்கப்படுமோ என்கிற அச்சமும் ஏற்படுகிறது. அரிதிலும் அரிதான வழக்குக்கு மட்டுமே தூக்கு, அதிலும் கடைசிவரை கருணை மனு செய்யும் வாய்ப்பு ஆகியவற்றை வழங்கியிருக்கும் ஒரு ஜனநாயக நாட்டுக்கு இம்முகம் ஏற்புடையதல்ல. தேவையற்ற தூக்குகளை நிறுத்தி, மிக அரிதான வழக்குகளுக்கு தூக்கு வழங்குவதே சரியானது.

வெறும் நியாயங்களோடு எல்லாம் முடிவடைந்துவிடவில்லை என்பதற்காகத்தான் கருணையின் வழியே முடிவைத் தீர்மானிக்கும் வசதியை உலகநாடுகள் வைத்திருக்கின்றன என்பதை நாம் நினைத்துக்கொள்ளவேண்டும்.

Share

வடிவேலு: திராவிட அரசியலின் உரைகல்

‘கிழவன் இன்னும் குமரனாகலையா’ என்று எம்.ஜி.ஆரைப் பற்றி நாகேஷ் கேட்டதாகச் சொல்வார்கள். ‘நினைவின் தாழ்வாரங்கள்’ தொடரில் கலாப்ரியாவும் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். ‘தேர்த் திருவிழா’ திரைப்படத்தின் மேக்கப்பில் இருக்கும்போது இப்படி நாகேஷ் கேட்டது எம்.ஜி.ஆரின் காதுக்குப் போகவும், அதற்குப் பிறகு சில காலங்களுக்கு எம்.ஜி.ஆரின் படங்களில் நாகேஷ் நடிக்கவே இல்லை. பின்னர் சமாதானமானார்கள். 1968ல் நடந்தது இது. இதற்கு முன்னரே சந்திரபாபு என்ற ஒரு நடிகரைக் காலி செய்தது எம்.ஜி.ஆரே என்ற பேச்சும் உள்ளது. இப்போது 2012. நாற்பது ஆண்டுகள் கழிந்திருக்கிறது. திராவிட இயக்கம் தந்த இந்தப் பழக்கம் இன்னும் ‘மெருகேறியிருக்கிறது.’

தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான கலைஞர்களில் ஒருவராகப் பரிமளித்தவர் வடிவேலு. அவரது கலைப்பயணம் முடிந்துவிட்டது என்ற அர்த்தம் தொனிக்க, ‘பரிமளித்தவர்’ என்று சொல்வதே கொஞ்சம் வருத்தமாகத்தான் உள்ளது. 2011ல் அவர் நடித்து வெளிவந்த படங்கள் மூன்று மட்டுமே என நினைக்கிறேன். 2011ல் காமெடியின் உச்ச நடிகர் இவரே. ஓர் உச்ச நடிகருக்கு நேர்ந்த கதி இது. தமிழில் இதுவரை வந்த காமெடி நடிகர்களில் உச்ச நடிகர் வடிவேலுவே என்பது என் தனிப்பட்ட கருத்து. பெரும்பாலானவர்கள் இத்துடன் ஒத்துப் போவார்கள் என்றே நினைக்கிறேன். ஓர் உச்ச நடிகரை ஒரே தினத்தில் அதள பாதாளத்தில் வீழ்த்தி வைக்க நம் அரசியலால் முடியும் என்ற கேடுக்கெட்ட ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம்.

விஜய்காந்த் அரசியலுக்கு வந்ததிலிருந்தே வடிவேலுவுக்கு வினை ஆரம்பித்தது. ஏதோ ஒரு திரைப்படத்தில் விஜய்காந்தின் அரசியல் வருகையைப் பாராட்டிப் பேசவேண்டும் என்பது போன்ற ஒரு வசனத்தை (எங்கள் அண்ணா திரைப்படமாக இருக்கலாம்) பேச மறுத்துவிட்டார் வடிவேலு. இதற்கு முன்னர் பல படங்களில் வடிவேலுவும் விஜய்காந்தும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அதிலெல்லாம் வடிவேலு தான் ஏற்ற கதாபாத்திரத்தின் வழியே விஜய்காந்தைப் பாராட்டிப் பல தடவை பேசியிருக்கிறார். ஏனோ இந்தப் படத்தில் மறுத்துவிட்டார். அது அவரது உரிமை. தொடங்கியது பிரச்சினை. எப்படித் தன்னைப் பாராட்டிப் பேசுவதை போயும் போயும் ஒரு காமெடி நடிகன் மறுப்பது என்று கதாநாயகனுக்கு வந்துவிட்டது கோபம்.

ஆனால் நாகேஷ் போல வடிவேலு அமைதியாக இல்லை. தன்னை எதிர்ப்பது எம்.ஜி.ஆர் இல்லை என்னும் தைரியமாக இருந்திருக்கலாம். விஜய்காந்தின் மிரட்டல் அரசியலுக்கு இணையான அரசியலில் இறங்கினார் வடிவேலுவும். இரண்டு பக்கமும் பற்றிக்கொண்டது. இதற்கிடையில் வடிவேலுவின் மேனேஜர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இன்றளவும் வடிவேலுக்குப் பிரச்சினையாக இருப்பது இந்தத் தற்கொலை. தொடர்ந்து நிகழ்ந்த மனவேறுபாடுகளின் உச்சத்தில், விஜய்காந்த் எந்தத் தொகுதியில் நின்றாலும் தான் எதிர்த்துப் போட்டிப் போடப்போவதாக அறிவித்தார் வடிவேலு.

2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் கூட்டணி ஏற்பட்டது. 67க்குப் பிறகு கழகங்கள் உருவாக்கி வைத்திருந்த அரசியல் நாகரிகக் கணக்கின்படி, தேமுதிகவுக்கு வேண்டாதவர்கள் எல்லாருமே அதிமுகவுக்கும் வேண்டாதவர்களே என்று அதுவாகவே ஆகிப்போனது. இதனை வடிவேலுவும் நம்பினார். எப்படியும் விஜய்காந்தை வீழ்த்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்ட வடிவேலு அழகிரியின் கரத்தை வலுப்படுத்தி திமுகவுக்குப் பிரசாரத்துக்குப் போனார். பிடித்துக்கொண்டது சன்னும் சனியும்.

சன் டிவி இதனை பயன்படுத்திக்கொண்டது. விஜய்காந்தின் தனிப்பட்ட பிம்ப அழிப்பில் வடிவேலுவும் சன் டிவியும் திமுகவும் போட்டி போட்டுக்கொண்டு ஈடுபட்டார்கள். இது மக்களிடையே எடுபடவும் செய்தது. தன் பேச்சுக்கு வரும் கூட்டத்தைக் கண்டு மதி மயங்கிப் போன வடிவேலு தான் என்ன பேசுகிறோம் என்ற விவஸ்தையின்றி வாய்க்கு வந்தது எல்லாவற்றையும் பேசினார். ஜெயலலிதாவை நேரடியாகத் தாக்கி எதுவும் பேசவில்லை என்றாலும், கருணாநிதியை வானளாவப் புகழ்ந்ததையும், கருணாநிதி ஆட்சியின் சாதனைகளாக அவர் பட்டியலிட்டதையும், தனக்கு எதிரானதாகவே அதிமுக தலைமை பார்த்திருக்கும். ஏனென்றால் அதிமுகவும் திமுகவும் இதுபோன்ற விஷயங்களிலெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. ஒருவகையில் ஜெயலலிதா தன்னைத் தாக்குவதைக் கூடப் பொறுத்துக்கொள்வார். ஆனால் தன்னை ஒப்பிட்டுக் கருணாநிதியைப் புகழ்வதைப் பொறுத்துக்கொள்ளவே மாட்டார்.

இதற்கிடையில், தேர்தல் முடிவுகள் வடிவேலுவுக்கு எதிராக அமைந்தன. தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளன்றே வடிவேலுவின் வீடு, தோட்டம் ஆகியவை தேமுதிக குண்டர்களால் தாக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. தான் விரித்துக்கொண்டு தானே விழுந்த வலை மெல்ல இறுகுவதை அவர் அன்றுதான் உணர்ந்திருக்கவேண்டும்.

வடிவேலு செய்த தவறுகள் என்ன? பெருச்சாளிக்குப் பயந்து பாம்பிடம் அடைக்கலம் சென்றது. அரசியல் என்பது வேறு, திராவிட அரசியல் வேறு என்பதைப் புரிந்துகொள்ளாதது. ஆனால் இவையெல்லாம் மிகச் சிறிய தவறுகளே. ஓர் அரசியல் தலைவரைக் குடிகாரர் என்று சொல்வது, நாகரிகக் குறைவே என்றாலும், அதில் உண்மை இருக்குமானால் அது மாபெரும் தவறல்ல. வடிவேலுவும் அவர் பிரசாரம் செய்யும் கட்சித் தலைவர்களும் உத்தமர்களா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. இந்தக் கேள்வியுடன் சேர்த்துப் பார்த்தால், வடிவேலு சொல்வதெல்லாம் தனிப்பட்ட வெறுப்பின் உச்சத்தால் மட்டுமே என்பதைக் கண்டுபிடித்துவிடமுடியும். உண்மையில் இதனை எல்லாரும் அறிந்தே இருந்தார்கள்.

ஆனால் அதற்குப் பின்பு நடப்பதுதான் அராஜகத்தின் உச்சமாக இருக்கிறது.

ஒருவர் அதிமுகவுக்கு எதிராக – இல்லை, திமுகவுக்கு ஆதரவாக – பேசினார் என்ற ஒரே காரணத்தினாலாயே அவருக்கு நடிக்க வாய்ப்பு வழங்கப்படாது என்பது எப்பேற்பட்ட அராஜகம்? இதனை ஜெயலலிதா முன்னின்று நடத்தியிருப்பார் என்று நான் நம்பவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடனேயே, எதற்கு நமக்கு வம்பு என்றுதான் பலரும் ஒதுங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் ஜெயலலிதாவே வடிவேலுவைத் தங்கள் படங்களில் நடிக்க வைக்க உள்வட்டங்களின் வழியே இயக்குநர்களுக்குக் கட்டளை இட்டிருக்கவேண்டும். வடிவேலுவின் பிரசாரம் வேறு, அவரது நடிப்பு வேறு என்று தெளிவாகச் சொல்லியிருக்கவேண்டும். ஆனால் ஜெயலலிதா ரஜினி அல்ல என்பதுதான் உண்மை. ஜெயலலிதா இதனை வெகுவாக ரசித்திருப்பார் என்றே தோன்றுகிறது. முன்னின்று நடத்துவதற்கும், ரசிப்பதற்கும் அதிக வேறுபாடு இல்லை என்பதுவும் உண்மையே.

இப்படி நடப்பது ஏதோ ஒரு சாதாரண நடிகருக்கல்ல. ஓர் உன்னதக் கலைஞனுக்கு இது நேர்ந்திருக்கிறது. தேர்தல் முடிவு ஓர் நடிகனைக் காணாமல் ஆக்கிவிட்டதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். வடிவேலுவை தன் படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்கள் அஞ்சி நடுங்குகிறார்கள்.

எந்த அளவுக்கு என்றால் – கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓர் அறிவிப்பு வெளியானது. சுந்தர் சி திரைப்படத்தில் வடிவேலு நடிக்கப் போவதாக. நான் அன்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். என்னதான் வடிவேலு நாகரிகக் குறைவாகப் பேசியிருந்தாலும், நடிப்பு என்ற வகையில் வடிவேலு ஒப்பற்ற கலைஞன். இன்றும் நகைச்சுவை சானல்களில் வரும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன என்பதை மறுக்கவே முடியாது. எனவே அவர் நடிக்க வரவேண்டியதுதான் தர்மம். அந்த வகையில் சுந்தர் சி பாராட்டுக்குரியவர் என நினைத்துக்கொண்டேன். மறுநாளே மறுப்பு வந்தது. அப்படி ஓர் எண்ணம் தனக்கில்லை என்று சுந்தர் சி சொன்னதாக அறிந்தேன். அதேபோல் ரஜினி படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக ஒரு செய்தியும், அதனை கே.எஸ். ரவிகுமார் மறுத்ததாகவும் அறிந்தேன். இதெல்லாம் உண்மையா என்று தெரியாது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் நாம் வாழ்கிறோம். 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இன்றுவரை வடிவேலு நடித்து ஒரு படம்கூட வெளியாகவில்லை என்பது, இதெல்லாம் உண்மையாகத்தான் இருக்கும் என்றுதான் சொல்லவைக்கிறது.

திராவிட இயக்கக் கட்சிகளான அதிமுகவும் திமுகவும் இந்த வகையான அரசியலுக்குக் காரணம். தனக்கு எதிராகக் கருத்துச் சொல்பவர்கள் எவருமே தங்களுடைய தனிப்பட்ட எதிரிகள் என்ற கருத்து தமிழ்நாட்டில் வேரூன்றியதற்கு கருணாநிதியும் ஜெயலலிதாவுமே காரணம். ஏதேனும் ஒரு நடிகரோ எழுத்தாளரோ தன்னைப் பற்றி எதிராக எழுதினால், அவரை எதிரியாக நினைப்பதும், தேவைப்படும்போது ‘அரவணைப்பது’ போல பேசி அவரை அடிமையாக்குவதும் இவர்களுக்குக் கைவந்த கலையே. அதைக்கூட தானே பார்த்துச் செய்ததாகச் சொல்வார்கள். இழவு வீட்டில் பிணமாகக்கூடத் தாங்களே இருக்க நினைக்கும் மனநிலை.

யாருக்கு வேண்டும் உங்கள் அரவணைப்பு என்று எதிர்த்துப் பேசி உண்மை நெஞ்சுரத்துடன் ஒருவர் இங்கே குப்பை கொட்டிவிடமுடியாது. மேடையில் பகிரங்கமாக, தைரியமாகப் பேசிய அஜித், மறுநாளே கூழைக் கும்பிடு போட்டுக்கொண்டு கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்துவதைப் பார்த்திருக்கிறோம். ஜெயலலிதாவின் முன்னிலையில் கண்டித்துப் பேசிய ரஜினி பட்ட தொல்லைகளுக்கு அளவே இல்லை. அஜித்தும் ரஜினியும் மீண்டும் சமரசம் ஆகியிருக்கலாம். அதற்கான கேவலம்கூட நம்மை இப்படி வைத்திருக்கும் கட்சிகளுக்கு உரியதே அன்றி, அவர்களுக்கு உரியன அல்ல. இப்படி நடக்கும் என்று தெரிந்தும் அவர்கள் அப்படிப் பேசியதே சாதனைதான்.

வடிவேலு போன்ற ஒரு நடிகருக்கு வாய்ப்பில்லாமல் இருப்பது இப்படியான நம் அரசியல் கேவலத்தின் உரைகல்லாகவே விளங்குகிறது. அதே கேவலத்தின் வழியாகவே வடிவேலு வெளிவரவேண்டியிருக்கும். இன்று விஜய்காந்தும் ஜெயலலிதாவும் மோதியுள்ள நிலையில், ஒரே ஒரு பொன்னாடையை வடிவேலு ஜெயலலிதாவுக்குப் போர்த்தினால் போதும். மீண்டும் வடிவேலு என்ற கலைஞனின் பல வெற்றிகளை நம்மால் திரையில் காணமுடியும். கேவலங்களைப் பட்டியலிட்டுவிட்டு, அதே கேவலத்தின் வழியேதான் நாம் வெளியேற வேண்டுமா என்றால், இன்றைய அரசியல் சூழலில் வேறு வழியில்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது. நல்ல நடிகன் என்ற பெரிய அந்தஸ்தின் முன்பு, இந்த சமரசம் பொறுத்துக்கொள்ளக் கூடியதாகவே தெரிகிறது. கொஞ்சம் அசிங்கத்துடன் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

சந்திரபாபு, என்.எஸ்.கே, எம்.ஆர்.ராதா போன்ற நடிகர்களுக்கு வாழ்க்கையில் ஓர் பெரிய அடி விழுந்து, அதிலிருந்து வெளியே வந்து மீண்டும் நடித்தபோது அவர்களால் முன்பு போல வெற்றி பெற முடியவில்லை. வடிவேலுவுக்கும் இது நிகழ்ந்துவிடக்கூடாது என்றுதான் மனம் வேண்டிக்கொள்கிறது. இனி மீண்டும் நடிக்கவந்தால், தான் எப்படி அரசியல் கட்சிகளாலும் டிவிக்களாலும் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டோம் என்பதை மனத்தில் வைத்துக்கொள்வது வடிவேலுவுக்கு நல்லது. இங்கே நிலவுவது அரசியல் விஷச் சூழல். அதை மெல்ல மெல்லத்தான் மாற்றமுடியும். அந்த மாற்றத்துக்கு வடிவேலு பலியாகவேண்டியதில்லை.

Share

பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்

 

 

விலை: 180

Dial for books: 94459 01234 | 9445 97 97 97

அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ‘பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்’ (ஒரே பொருளுக்கு நான்கு வார்த்தைகள்!) புத்தகம் கிழக்கு வெளியீடாக வெளிவந்துள்ளது. நேற்று முதல் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்குக் கிடைக்கிறது. நான் எதிர்பார்த்தது போலவே நிறைய பேர் விருப்பத்துடன் வாங்குகிறார்கள். வாங்க யோசிப்பவர்களை, பின்னட்டையில் என்ன எழுதியிருக்கிறது என்பதைப் படிக்கச் சொன்னால், படித்துவிட்டு உடனே வாங்கிவிடுகிறார்கள்.

புத்தகத்தின் பின்னட்டையிலிருந்து:

 

கம்யூனிஸம் உலகுக்குக் கொடுத்த கொடை பஞ்சம் படுகொலை பேரழிவு. கம்யூனிஸத்தின் பெயரைச் சொல்லி உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை பலகோடி. கம்யூனிஸ்ட்டுகள் உலகில் தாம் சென்ற இடங்களில் எல்லாம் படுகொலைகளையும் பேரழிவுகளையும் ஈவு இரக்கமின்றி ஏற்படுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு நிறுவுகிறது இந்நூல்.

லெனின், ஸ்டாலின், மாஓ என்று தொடர்ச்சியாக கம்யூனிஸத் தலைவர்கள் எல்லோருமே எப்படி ரத்தம் தோந்த வரலாற்றை எழுதினார்கள்? எப்படி சக தோழர்களையே வேட்டையாடினார்கள்? புக்காரினுடம் டிராட்ஸ்கியும் என்ன ஆனார்கள்? சே குவேரா உண்மையிலேயே இளைஞர்களின் ரோல் மாடல்தானா? ஸ்டாலின், லெனினை எப்படி எதிர்கொண்டார்? ரஷ்யா உண்மையிலேயே கனவு பூமிதானா? வதைமுகாம்கள், கூட்டுப்படுகொலைகள் என்பதெல்லாம் ஹிட்லர் காலத்துக்கு முன்பே ரஷ்யாவில் உண்டா? வரலாற்றின் மிக முக்கியமான இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.

கம்யூனிஸம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? நேருவின் கம்யூனிஸப் பாசம் இந்தியாவுக்குத் தந்த பரிசு என்ன? தாஷ்கண்ட்டில் லால் பகதூர் சாஸ்திரிக்கு என்ன ஆனது? கம்யூனிஸ்ட்டுகள் கட்சிகள் இந்தியாவில் ஆடிய ஆட்டங்கள் என்ன? இவற்றையும் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.

வெறும் வாய்ப்பந்தல் போடாமல், சிவப்பு பயங்கரத்தைப் பற்றிய ஒவ்வொரு குறிப்பையும் அதற்கான ஆதாரத்துடன் எழுதியுள்ளார் அரவிந்தன் நீலகண்டன். தமிழ்ப்புத்தக வரலாற்றில் மிக முக்கியமான நூலாக இது அமையும்.

பொதுவாகவே கம்யூனிஸம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள், கம்யூனிஸம் என்றால் முற்போக்கு என்று நினைத்துக்கொண்டு அதனால் அங்கு சென்று சேர்ந்தவர்கள் அல்லது தன்னை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்வது பெருமை தருவது என்று நினைத்துக்கொள்பவர்கள் – இவர்கள் யாருக்குமே கம்யூனிஸத்துக்கு ரத்தம் எவ்வளவு பிடிக்கும் என்பது அவ்வளவாகத் தெரியாது. ஏதோ மீடியா குழந்தைகளாக கம்யூனிஸ்ட்டுகள் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.

கம்யூனிஸத்தின் ரத்தம் தோய்ந்த வரலாற்றை, கூட்டுப்படுகொலைகளை, வதைமுகாம்களைப் பற்றியெல்லாம் பொதுப்புத்தி கம்யூனிஸ்ட்டுகள் கேள்விப்பட்டுக்கூட இருக்கமாட்டார்கள். கம்யூனிஸ்ட்டுகள் என்றாலே நேர்மையாளர்கள் என்ற எண்ணமும் இங்கே உள்ளது. ஆனால் உலகளாவில் எப்படி கம்யூனிஸ்ட்டுகள் சந்தர்ப்பவாதிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் இந்த மீடியா குழந்தைகள் அறிந்திருக்கப்போவதில்லை.

அரவிந்தன் நீலகண்டனின் பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் புத்தகம் இது அத்தனையைப் பற்றியும் தெளிவாக, விரிவாக, ஆதாரத்துடன் பேசுகிறது.

இந்தப் புத்தகத்தைப் படிக்கப் போகும் மென்மையான இதயம் படைத்த அத்தனை பேரும் அதிரப் போவது நிச்சயம். எங்கெல்லாம் கம்யூனிஸம் அங்கெல்லாம் வரிசையாக பஞ்சமும் படுகொலையும் பேரழிவும் வந்துகொண்டே இருக்கின்றன. படுகொலை என்றால் கூட்டுப்படுகொலைகள். விவசாயிகளை ரக ரகமாகக் கொன்று குவித்திருக்கிறார்கள் நம் உலகத் தோழர்கள்.

லெனின் ஸ்டாலினுக்கு இடையே நடக்கும் போட்டி, ஸ்டாலினைப் பார்த்து லெனினே அதிர்ந்து போவது, ஏன் லெனின் புதைக்கப்படவில்லை என்றெல்லாம் புத்தகம் பட்டையைக் கிளப்புகிறது. இந்தப் புத்தகத்தில் என்னவெல்லாம் இருக்கிறது என்று எழுதினாலே அதுவே இன்னும் 4 பக்கத்துக்கு வரும். மேலும் நான் ஒருமுறை மட்டுமே வாசித்திருக்கிறேன். இன்னொரு முறை நிதானமாக வாசிக்கவேண்டும். அத்தனை முக்கியமான புத்தகம்.

கம்யூனிஸ்ட்டுகள் போல காந்தியை விதவிதமாக விமர்சித்தவர்கள் யாருமில்லை. தன் பேத்தியோடு படுத்து தனது பிரம்மச்சரியத்தைப் பரீட்சித்த காந்தி பற்றிப் பேசவேண்டுமானால் கம்யூனிஸ்ட்டுகள் துள்ளிக்குதித்து ஓடிவருவார்கள். ஆனால் மாஓவின் பெண் தொடர்பு, அதன் ஆராய்ச்சி பற்றியெல்லாம் பேசமாட்டார்கள். மாஓ புனிதரன்றோ. காந்தி கெடக்கான் கெழவன்.

இந்தப் புத்தகத்தைப் படித்ததும் உலக கம்யூனிஸ்ட்டுகள் மீது வெறும் இளக்காரம் மட்டுமே எனக்கு மிஞ்சுகிறது. எப்படி உலக கம்யூனிஸ்ட்டுகள் ஸ்டாலினையும் மாஓவையும் தலைவர்களாக முன்வைக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனை எத்தனை கொலைகள்! எதுவுமே அக்கறையில்லை! எல்லாம் சிவப்பு மயம்.

இந்திய கம்யூனிஸ்ட்டு நேர்மையாளர்கள் பற்றியும் இந்தப் புத்தகத்தில் ஒரு நீண்ட அத்தியாயம் உண்டு. நேருவைப் பற்றி இந்தப் புத்தகம் தரும் சித்திரம் அட்டகாசமானது. அதேபோல தாஷ்கண்ட்டில் லால் பகதூர் சாஸ்திரி மரணம் அடையும் அத்தியாயம் ஒரு நாவலைப் போன்றது. சே குவேராவைப் பற்றிய அத்தியாயம் – நல்ல நகைச்சுவை! மாஓவின் அத்தியாயமோ கிளுகிளு. பௌத்த மடலாயங்களுக்கு, சீன கலாசாரத்துக்கு நேர்ந்ததைச் சொல்லும் அத்தியாயமோ அதிர்ச்சி. எல்லாவற்றிலும் வன்முறை. கம்யூனிஸ்ட்டுகள் எதிலுமே குறைவைப்பதில்லை.

உலகளவில் கம்யூனிஸம் ஏற்படுத்திய பஞ்சத்தால் மக்கள் வேறு வழியின்றி நரமாமிசம் உண்டது பற்றிய தகவல்களைத் தரும் அத்தியாயம் உங்களை உலுக்கக்கூடியது. ஜெயமோகனின் நாவல்களைப் படித்தும், சில உலகத் திரைப்படங்களைப் பார்த்து மட்டுமே நான் இதுவரை பதறியிருக்கிறேன். அதற்கு நிகரான பதற்றத்தைத் தந்தன, இந்தப் புத்தகத்தின் சில அத்தியாயங்கள்.

96களில்ஜெயமோகன் எழுதியதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அளவிற்கு, நான் இன்னொருமுறை இன்னொரு எழுத்தாளரைப் பார்த்து ஆச்சரியப்படுவேன் என நினைக்கவில்லை. அது நிகழ்ந்தது அரவிந்தனின் நீலகண்டனின் எழுத்துக்களைப் பார்த்துதான். இந்நூலின் மூலம் அரவிந்தன் நீலகண்டன் முக முக்கியமான எழுத்தாளராக நிலைபெறுவார்.

பல இளைஞர்கள் கம்யூனிஸம் என்றாலே என்னவென்று தெரியாமல் அதன் பக்கம் ஈர்க்கப்படுகிறார்கள். ஒரு ப்ளஸ் டூ படிக்கும் பையன் இந்த நூலைப் படித்தால், அவன் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸம் பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டான். கம்யூனிஸத்தின் மீது எதிர்க்கருத்துக் கொண்டிருப்பவர்கள் செய்யவேண்டிய ஒன்று, இந்த நூலை இளைஞர்களுக்கு வாங்கிக் கொடுப்பது. இப்படி ஒரு நூல் இதுவரை தமிழில் இல்லாததுதான் பெரிய குறையாக இருந்தது. அந்தக் குறையும் தீர்ந்தது. இனிமேல் நடக்கவேண்டியது, இந்தப் புத்தகத்தை தமிழர்களுக்குப் பிரபலப்படுத்தவேண்டியது மட்டுமே. இதனை மிக முக்கியமான கடமையாக நினைத்துச் செய்யவேண்டும். (கிழக்கு வெளியிட்ட புத்தகம் என்பதற்காக இப்படிச் சொல்கிறேன் என நினைப்பவர்களுக்குத் தடையில்லை!)

கம்யூனிஸ்ட்டுகள் இந்தப் புத்தகத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று பார்க்க ஆர்வமாக இருக்கிறது. நிச்சயம் திககாரர்கள் போல, அரவிந்தன் நீலகண்டனின் இன்னொரு புத்தகமான உடையும் இந்தியா புத்தகத்தை உடைக்கிறேன் என்று சொல்லி, தன் அறியாமையை வெளிப்படுத்திக்கொண்டு நிற்கமாட்டார்கள் என்பது உறுதி. வேறு எப்படி எதிர்கொள்வார்கள் என்று தெரியவில்லை. வினவு-ல் ஒரு கட்டுரை வரலாம். அவர்கள் மட்டுமே இதனை எதிர்கொள்வார்கள் என நினைக்கிறேன். மற்றபடி கம்யூனிஸ்ட்டுகள் ‘பின் தொடரும் நிழலின் குரலை’ கைவிட்டது போலவே இதையும் கைவிட்டுவிடுவார்கள். வேறென்ன செய்யமுடியும்? வாய்ப்பந்தல் போட்டு கட்சி மேடைகளில் பேசும் விடலைகளுக்கு எதிராக அறிவுப்பூர்வமாகப் பேச கம்யூனிஸ்ட்டுகளால் முடியும். ஆனால் மிக அறிவுப்பூர்வமாக எழுதப்பட்ட, ஆதாரத்தோடு எழுதப்பட்ட புத்தகத்தை எப்படி எதிர்கொள்ளமுடியும்? மௌனத்தால்தான்!

எனவே நண்பர்களே, ‘பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்’ புத்தகத்தை நிச்சயம் வாங்குங்கள். உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் பரிந்துரை செய்யுங்கள். உங்கள் நண்பர் தோழரென்றால் அவர் நிச்சயம் வாசிக்கவேண்டியது இந்தப் புத்தகம் மட்டுமே! உங்கள் நண்பர் அல்லது அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பரிந்துரை செய்யுங்கள். முடியுமென்றால் நீங்களே வாங்கி அன்பளிப்பாக அளியுங்கள். மற்றவை தன்னால் நடக்கும்.

வந்தே மாதரம்.:))))))

(இந்தப் புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு அரங்கில் கிடைக்கும். கிழக்கு அரங்கு F 7)

Share

காந்தி புத்தகங்கள்

 

எதிர்பாராத ஒரு தருணத்தில் வ.உ.சியைப் பற்றியும் ராஜாஜியைப் பற்றியும் இரு புத்தகங்கள் எனக்குக் கிடைத்தன. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். பொதுவாகவே, சென்னை புத்தகக் கண்காட்சியில் மட்டுமே புத்தகங்கள் வாங்குவேன். பாழாய்ப் போன வரலாற்று ஆர்வம், இந்தமுறை பெரிய அளவில் வேட்டு வைத்துவிட்டது.  ராஜாஜி வாழ்க்கை வரலாறு புத்தகத்தில், ராஜாஜியைவிட அதிகமாக காந்தியைப் பற்றிப் பேசப்படுகிறதோ என்ற எண்ணம் தோன்றுமளவுக்கு காந்தியைப் பற்றிய பதிவுகள் இருந்தன. வ.உ.சி வரலாற்றில், வ.உ.சியின் அந்திம காலத்தில்தான் காந்தியைப் பற்றிய பதிவுகள் வருகின்றன.

அப்போதுதான் ’அண்ணா ஹசாரே – ஊழலுக்கெதிரான காந்தியப் போராட்டம்’ படித்தேன். இதில் ஹசாரேவைப் பற்றிய ஒவ்வொரு விவரிப்பிலும் காந்தியைப் பற்றிய விவாதமும் இருந்தது. ’இன்றைய காந்தி’ புத்தகம் – தமிழில் நிகழ்ந்த ஒரு சாதனை என்றே சொல்லவேண்டும். ஓராண்டுக்கு முன்பு இதைப் படித்தேன். இலங்கை சென்றிருந்தபோது இந்தப் புத்தகத்தைப் பற்றி நிறைய விவாதித்துக்கொண்டிருந்தது இன்னும் பசுமையாக மனத்தில் இருக்கிறது. இப்புத்தகம் தந்த அனுபவம் மறக்கமுடியாதது. ஒருவரது வாழ்க்கை வரலாற்றை, பிறப்பு தொடங்கி இறப்பு வரை படிப்பதற்குப் பதிலாக, இப்படிக் கேள்வி பதில் மூலம், அத்தலைவர் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்கள், அந்தத் தலைவர் எடுத்த முடிவுகள், அதன் விளைவுகள் எனப் படிப்பது எளிதானதாகவும், குழப்பமில்லாமலும் இருந்தது. பகவத் கீதையே கேள்வி பதில் வடிவில் அமைந்ததுதான். எனவே கேள்வி பதில் மூலம் படிப்பது ஒருவகையில் பழக்கமானதே என்ற முடிவை மூளை எடுத்துவிடுகிறதோ என்னவோ. அண்ணா ஹசாரேவின் புத்தகத்தைப் படித்ததும் தொடர்ந்து காந்தியைப் பற்றிப் படிக்க முடிவெடுத்தேன். ஏற்கெனவே, ஜெயஸ்ரீ வாங்கிக் கொடுத்து மூலையில் தூங்கிக் கிடந்த ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’யை எடுத்தேன்.

அப்போது நடந்த சில ஃபேஸ்புக் விவாதங்களுக்காக வேறு சில புத்தகங்களைப் படிக்கவேண்டியிருந்தது. ஜெயமோகனின் குழுமத்தில் நடக்கும் விவாதங்களில் காந்தி பற்றிய சில புத்தகங்களைச் சொன்னார்கள். முக்கியமானது, பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டிருக்கும் ‘காந்தி வாழ்க்கை’ என்னும் புத்தகம். லூயி ஃபிஷர் எழுதி, திஜர தமிழில் மொழிபெயர்த்திருக்கும் புத்தகம். அதையும் வாங்கினேன். (நான் மேம்போக்காக வாசித்துப் பார்த்த வகையில் மொழிபெயர்ப்பு அட்டகாசம்.) ஆனந்தவிகடன் வெளியிட்டிருக்கும் ’தண்டியாத்திரை, புத்தகமும் வாங்கினேன். இது நேரடியான தமிழ் நூல். ’நவகாளி யாத்திரை’ (சாவி எழுதியது, நர்மதா வெளியீடு) புத்தகம் கிடைக்கவில்லை. அதையும் வாங்கவேண்டும். இது ஒரு சிறந்த வரலாற்றுப் புத்தகமாக இருக்கும் எனத் தோன்றவில்லை. காந்தியைப் பற்றிய சாவியின் பக்தி வெளிப்பாடாகத்தான் இருக்கும். இருந்தாலும், நேரடியாக நவகாளி சென்று, காந்தியுடன் 2 நாள்கள் தங்கியிருந்து எழுதிய புத்தகம் என்பதால், வாசிக்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். (நவகாளி யாத்திரை பற்றித் தெரிந்துகொள்ள இணையத்தில் மேய்ந்தபோது, மலர்மன்னன் எழுதிய அட்டகாசமான கட்டுரை கண்ணில்பட்டது.)

இப்படி புத்தகங்களைப் படித்தால் காந்தி பற்றிய ஒரு பெரிய தெளிவு கிடைக்கும் எனத் தோன்றுகிறது. காந்தியைப் படிக்க படிக்க அப்படியே அவர் என்னை ஹைஜாக் செய்வதும் புரிகிறது. கல்லூரியில் காந்தியன் ஸ்டடீஸ் என்ற சர்டிஃபிகேட் கோர்ஸ் படித்துத் தேர்ச்சி பெற்றேன். அப்போதே அந்தக் கல்லூரி ஆசிரியர் ஒழுங்காக காந்தியைப் பற்றிச் சொல்லித் தந்திருந்தால், இந்நேரம் காந்தியைப் பற்றிப் பல புத்தகங்களை வாசித்து முடித்திருந்திருக்கலாம். அப்போது தானே கிளம்பும் உத்வேகம் வராததால், காந்தியைப் பற்றி ஒழுங்காகப் படிக்காமல் விட்டது இப்போது வருத்தம் தருகிறது.

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு (கிழக்கு வெளியீடு) இரண்டு பாகங்கள். முதல் பாகத்தை பாதி படித்தேன். இரண்டாம் பாகத்தில் தேவையான சில பகுதிகளைப் படித்தேன். இந்தப் புத்தகத்தையும் முழுமையாகப் படிக்கவேண்டியுள்ளது. இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது ஓர் எண்ணம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இந்தப் புத்தகமும் தமிழில் ஒரு சாதனைதான். ராமசந்திர குஹா எழுதி தமிழில் ஆர்.பி.சாரதியால் (பா.ராகவனின் தந்தை) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இன்னும் 20 வருடங்களுக்காவது இப்புத்தகம் தமிழில் நிலைத்து நிற்கும். தொடர்ந்து பேசப்படும். இந்த அரிய சாதனையை செய்திருப்பது கிழக்கு பதிப்பகம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட வகையில் மகிழ்ச்சி. இந்த முக்கியமான புத்தகத்தைப் பற்றி சில விமர்சனங்களும் வந்துள்ளன. குஹா ஒரு மார்க்சியர் என்பதால் அச்சார்புடன் புத்தகம் உள்ளது என்பது ஒரு குற்றச்சாட்டு. சார்பு இதுதான் எனத் தெரிந்துகொண்டு புத்தகத்தைப் படிப்பதில் ஒரு பிரச்சினையுமில்லை. நடுநிலை என்ற அறிவிப்போடு வரும் புத்தகத்தை வாசிக்கும்போதுதான் மனம் அலைபாயத் தொடங்கிவிடுகிறது! மேலும், சார்பை மீறி பல விஷயங்களைத் தெளிவாகவே குஹா குறிப்பிட்டிருக்கிறார். இன்னொரு குற்றச்சாட்டு, வலதுசாரிகளின் பங்களிப்பை சரியாக குஹா பதிவு செய்யவில்லை என்பது. இப்புத்தகத்தை முழுமையாகப் படித்தால், இக்குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பது தெரியும். இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருந்தாலும், அதை வைத்து இப்புத்தகத்தைப் புறந்தள்ளமுடியாது. 10 ஆண்டுகாலம் உழைத்து, ஒரு பெரிய கண்ணோட்டத்தில், விரிவான பார்வையில் எழுதும்போது இதுபோல நிகழ்வது சகஜமே. தேவை என்றால், வலதுசாரிகள்தான் அவர்கள் கண்ணோட்டத்தில் வரலாற்றைப் பதிவு செய்யவேண்டும். அத்வானியின் தன்வரலாற்று நூலான ‘என் தேசம் என் வாழ்க்கை’ இந்த வகையில் ஒரு முக்கியமான புத்தகமே. அதை ஏற்கெனவே படித்துமுடித்துவிட்டேன். அது பற்றிப் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் – தேவைப்படுமானால் எழுதுவேன்.

இப்போது நான் படிக்கவேண்டிய புத்தகங்கள்:

01. காந்தி வாழ்க்கை

02. இன்றைய காந்தி (மீண்டும் ஒருமுறை படிக்கவேண்டும்)

03. தென்னாப்பிரிக்காவில் காந்தி

04. தண்டி யாத்திரை

05. இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு

06. நவகாளி யாத்திரை

இத்தனை புத்தகங்களைப் படிப்பதற்காகத்தான் டிவிட்டரிலிருந்தும், ஃபேஸ்புக்கிலிருந்தும் வெளியேறினேன். நேரம் நிறையவே கிடைக்கிறது!

இன்னும் ஒரு புத்தகமும் வாங்கவேண்டியிருக்கிறது. ராஜாஜியைப் பற்றி ராஜ்மோகன் காந்தி எழுதி, கல்கி ராஜேந்திரனால் மொழிபெயர்க்கப்பட்டு வானதி வெளியீடாக வந்திருக்கும் புத்தகம், ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு. இதையும் வாங்கிப் படிக்கவேண்டும்.

புத்தகங்களை ஃபோன் மூலம் வாங்க: Dial For Books – 94459 01234 | 9445 97 97 97

Share

பரமக்குடி சொல்லும் செய்திகள்

வாசிக்க: http://www.tamilpaper.net/?p=4086

Share

பேரறிவாளன் தூக்குத் தண்டனை தொடர்பாக

இக்கடிதம் ஜெயமோகன் வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

 

01. பேரறிவாளன் நல்லவர், அப்பாவி, எனவே தூக்குத் தண்டனை கூடாது, அவருக்கு சாதாரண தண்டனைகூட அநியாயம் என்றுதான் இங்குள்ள தமிழுணர்வாளர்கள் பேசுகிறார்கள். இது தவறு. தூக்குத் தண்டனையை எதிர்க்கிறோம் அவர்கள் தவறு செய்தவர்களாகவே இருந்தாலும் என்று அவர்கள் போராடவேண்டும்.

02. புலிகள் இன்று முற்றாக அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், இவர்களுக்கு தூக்குத் தண்டனை அவசியமில்லை என்பது என் கருத்து. உடனே புலிகள் இல்லை என்று வைகோ, பழ நெடுமாறன் சொன்னார்களா என்கிறார்கள். அவர்கள் ஏன் சொல்லவேண்டும். அவர்கள் புலிகள் இருக்கிறார்கள் என்று சொல்வதே அவர்களுக்கான அரசியல் நிலைப்பாட்டை நிற்க வைத்துக்கொள்ளவும், உணர்வுரீதியாக ஏமாற்றவும்தானே.

03. அரசாங்கமே தடையை நீக்கவில்லை என்பது அடுத்த நியாயம். புலிகளில் ஒன்றிரண்டு பேர் அல்லது ஒரு சிறிய குழு மிச்சமிருக்கலாம் என்பது அரசின் கருத்தாக இருக்கலாம். ஆனால் யதார்த்தத்தில் புலிகள் இன்று ஒடுக்கப்பட்டுவிட்டார்கள் என்பதே உண்மை. புலிகள் பிரபாகரன் ஒருவரைச் சுற்றிக் கட்டப்பட்ட இயக்கம். பிராபகரன் கொல்லப்பட்டதுமே புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுவிட்டது என்பதே பொருள். பின் லாடன் கொல்லப்பட்டதும் அடுத்த ஒருவர் தலைமை ஏற்பதுபோல இங்கே நடைபெற வில்லை. புலித் தொடர்ச்சி நடக்கவில்லை. எனவே இவர்கள் மூவரையும் தூக்கில் இடுவது தேவையில்லை.

04. இவர்கள் மூவருக்கும் விடுதலை அளிப்பதையும் நான் ஆதரிக்கவில்லை. சிறையில் இருக்கவேண்டும் என்பதே என் எண்ணம். ஒரு முன்னாள் பிரதமரை, இந்தியத் தலைவரைப் படுகொலை செய்தது என்பது இந்தியாவின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலே.

05. ஒட்டுமொத்த தூக்குத் தண்டனையையும் எதிர்ப்பதை நான் ஏற்கவில்லை. இந்திய நீதிமன்றமே தூக்குத் தண்டனை குறித்த திர்ப்பை இறுதி செய்யவேண்டும். கருணை மனுவும் உள்ளது. இந்த தற்போதைய நடைமுறையே போதுமானது.

06. கசாப், அன்சாரி போன்றவர்களுக்கு தூக்குத் தண்டனை என்பதை நான் ஏற்கிறேன். வரவேற்கிறேன்.

07. தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தது எனக்கு ஏற்புடையதல்ல. அவர்களுக்கும் ஆயுள் தண்டனையே தரப்படவேண்டும். மூன்று மாணவிகளுக்கும் என தனித்தனியாகத் தண்டனை அனுபவிக்கச் சொல்லி வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையிலேயே கழிக்க வைக்கலாம். ஒரு அரசியல்வாதிக்காக அராஜகமாக பஸ் எரித்தது அநியாயம். ஆனால் தூக்கு என்பது அதிகபட்சம் என்பது என் எண்ணம்.

08. பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கும் தூக்குத் தண்டனையை நிறுத்த மக்களும், ஜெயலலிதாவும் முன்வரவேண்டும். ஜெயலலிதாவின் ‘அரசியலுக்கு’ இது நல்ல ஒரு வாய்ப்பு. தமிழர் தலைவர் என்ற கருணாநிதியின் வேடத்தை ஒரேடியாகக் கலைத்துப்போட்டு, அந்த ‘வேடத்தை’ தான் எடுத்துக்கொள்ளலாம். அரசியல் கருதியாவது ஜெயலலிதா இதனைச் செய்யவேண்டும். வேடத்துக்காக அல்லாமல், உணர்வு ரீதியாக, உண்மை நிலை கருதி, இந்த மூவருக்குமான தூக்குத் தண்டனை எதிர்ப்பை ஜெயலலிதா செய்தால், அவருக்கு வாழ்த்துகள்.

Share

தலித்துகளும் பிராமணர்களும்

 

 

தலித்துகளும் பிராமணர்களும் என்ற நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். ’அந்தணர் வரலாறு’ எழுதிய கே.சி. லட்சுமி நாராயணன் எழுதியது. இவர் எழுதிய ’அந்தணர் வரலாறு’ தந்த பயம் காரணமாக, இவரது எழுத்துகள் மீது கொஞ்சம் விலகல் இருந்தது. இந்தப் புத்தகம் அந்த விலகலைத் துடைத்துப் போட்டிருக்கிறது.

’தலித்துகளும் பிராமணர்களும்’ புத்தகத்தை ஒவ்வொரு தலித்தும் ஒவ்வொரு தலித் தலைவர்களும் இந்த நூலைப் படிக்கவேண்டும் என்று நூலாசிரியர் விரும்புவதாகத் தெரிகிறது. தலித்துகளுக்கும் பிராமணர்களுக்கும் இடையே நிலவும் மனத்தடை காரணமாக இவர் இப்படிச் சொல்லியிருக்கலாம்.

எனக்கென்னவோ உண்மையில் ஒவ்வொரு (தங்களை அப்படி உணரும்) பிராமணரும் படிக்கவேண்டிய நூல் என்றுதான் தோன்றுகிறது. ஒவ்வொரு மனிதரும் இன்னொரு (தங்களை பிராமணராகவே உணரும்) பிராமணருக்கு இந்த நூலை வாங்கித் தருவது அவசியம். வாங்கித் தரும்போது மறக்காமல் சொல்லவேண்டியது, ’இந்த நூலைப் படிக்கவேண்டியதன் அவசியம் உங்கள் பிராமணப் பெருமைகளைப் புதுப்பித்துக்கொள்ள அல்ல, மாறாக பல முக்கியமான பிராமணர்கள் எப்படி தலித்துகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு அதன்வழி நீங்களும் வாழவேண்டும் என்பதே.’

கே.சி. லட்ச்மி நாராயணன் பல விஷயங்களில் கவனம் செலுத்தி இந்நூலை எழுதியிருக்கிறார். உண்மையில் தலித்துகள் தங்கள் மீது ஆதிக்கத்தை நிகழ்த்தும் உண்மையான ஆதிக்க சாதிகள் எவை என்பதை உணரவேண்டும் என்பதே இந்நூலின் நோக்கமாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. தேவையான நூல்தான். அதே சமயத்தில், இந்நூல் பிராமணர்கள் தலித்துகளுக்கு ஆற்றிய பங்குக்கு முக்கியமான ஆவணமாகவும் திகழும். அரிஜன அய்யங்கார், கக்கனின் குருநாதர், வைத்தியநாத ஐயர், அம்பேத்கரின் ஆசிரியர் போன்றவர்களைப் பற்றிய குறிப்புகள் அபாரம். தலித்துகள் புரிந்துகொள்ளவேண்டும், தலித் தலைவர்கள் உணரவேண்டும் என்னும் ‘சாதி’ நூலுக்கான க்ளிஷேவைத் தவிர்த்திருந்திருக்கலாம். அதேபோல் பிராமண வெறுப்பாளர்கள் எளிதில் எரிசலடையும் சில வரிகள் ஆங்காங்கே தென்படுவதையும் தவிர்த்திருந்திருக்கலாம். மற்றபடி மிக மிக முக்கியமான ஆவண நூல் இது.

’அரிஜன அய்யங்கார்’ என்னும் தன் வரலாற்று நூலை அடிப்படையாக வைத்து ஆலந்தூர் மள்ளன் எழுதிய (உணர்வு-பிரசார!) சிறுகதை இங்கே.

நூல் விவரம்:

 

தலித்துகளும் பிராமணர்களும், ஆசிரியர்: கே.சி.லட்சுமி நாராயணன், Rs. 120,  வெளியீடு: LKM Publications, Old No 15/4, New No 33/4, Ramanathan Street, T Nagar, Chennai – 600017, +(91)-(44)-24361141, 24340599, +(91)-9940682929

இந்நூல் பற்றிய தினமலர் புத்தக அறிமுகம் இங்கே.

தற்போது படித்துக்கொண்டிருக்கும் நூல்கள்: ஊரும் சேரியும் – சித்தலிங்கய்யா, கவர்மெண்ட் பிராமணன் – அர்விந்த் மாளகத்தி. இவை பற்றிய சிறிய குறிப்புகள் பின்னர். 

 

Share