இரண்டு வருடம் முன்பு செத்துப்போன
முப்பாட்டி ஞாபகமும் கொஞ்சம்
27 வருடம் கழித்துத் தாத்தா பிறந்தார்
யாரும் எதிர்பார்க்காத மாதிரி
பாலா மாமாவின் பெயரைச் சொன்னாள் அம்மா
அவளுக்கு பாலா மாமா என்றாலே தனிப்பிரியம்தான்
மாமனாரும் மாமியாரும்
அவர்கள் சொந்தத்தில் ஒருவரைத் தேர்ந்தார்கள்; உடனே
எங்கள் பக்கத்துக்காரர்கள் அதை மறுத்தார்கள்
நான் என் பங்குக்கு என் சித்தப்பாவைச் சொன்னேன்
மரச்சட்டத்தினுள் மாட்டிக்கிடந்த மனிதர்கள்
இறக்கை பூட்டிக்கொண்டார்கள்
இரும்பாலான கதவுகள்
இளகிக்கொள்ள
வீட்டு மரத்தூண்களில்
பாசி படரத் தொடங்கியது
குழந்தையின் ஒவ்வொரு சிணுங்கலிலும்
ஒவ்வொரு நெட்டி முறிப்பிலும்
அவர்கள் தங்களைச் சேர்த்துக்கொள்ள
-தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்-
Archive for ஹரன் பிரசன்னா
பிறப்பு – கவிதை
சின்னஞ் சிறு கவிதை
அரவமற்ற
மண்டபத்தின் நிசப்தத்துள்
விரவிக் கிடக்கிறது
சிலைகளின் கேவல்
வௌவால்கள்
தலைகீழாய்த் தொங்கிக்கொண்டு
கண்டடையமுடியாத
மௌனத்தைத் தேடிய வண்ணம்
காற்றடிக்கும்போதெல்லாம்
சிறிய அலையை ஏற்படுத்தும்
தேங்கிய குளத்தின் பச்சை நீர்
இறுக்கத்துடன்
சன்னிதியில்
எரிந்துகொண்டிருக்கும்
அகல்விளக்கு
அனைத்தையும் கலைத்துப் போடுகிறது
சிறு கை எறியும் பொரி
சலனம் – கவிதை
தலைக்கு மேல்
பயணிக்கிறது நதி
வெளியுலகைச்
சுவீகரித்து
உள் அனுப்புகிறது நீர்
நதியின் மீதான சலனத்தில்
அசைந்து கொண்டிருக்கவேண்டும்
கரை மர நிழல்
நீர் மோதும்
பாறைகளின்
மிக நுண்ணிய சலனங்கள்
பிரபஞ்சத்தின் பேரமையில்
கேட்பதாயிருக்கும்
மெல்ல கண் திறக்க
நீர் வளையம்
என்னைச் சுற்றிக்கொண்டிருக்கிறது
வெளிர் மஞ்சள் நிறத்தில்
சூரிய ஒளியும் சில துகள்களும்
108 எண்ணி முடித்திருப்பான் முருகன்
இன்னும் சில எண்களில்
நான் நீர் வளையத்தைத் துறந்தாக வேண்டும்
நீரை ஒரு மிடறு விழுங்க
என்னுள் அடங்குகிறது
அந்நதி
அத்தனைச் சலனங்களுடனும்
சாலை – கவிதை
தவிர்க்கவியலாத
கரும்பாம்பின் வசீகரத்தோடு
விரிகின்றன
சாலையோரங்கள்
செல்லும் வழியெங்கும்
முலை தரையழுந்த
ஒருக்களித்துப் படுத்திருக்கிறாள்
நீலி
பகுதி நிழல் படர்ந்து
ஒதுங்கியிருக்கும்
காரின்
கணத்தோற்றம்
ஓவியம்
நிழல் கருமை
இருள் கருமை
கருமையுள்
மூழ்கி
வெளி திளைக்கிறது
அதிகாலை
மனமெங்கும் விரவிக்கிடக்கும்
அழுத்தங்களை
துடைத்தெடுக்கிறது
பால் நீல வானம்
வானம் கடல்
அலையும் அமைதியுமாக
அலைந்தும் பரந்தும்
கிடக்கிறது கடல்
அமைதி
பேரமைதி
வாய் பிளந்து நிற்கும்
சாலையோர நீலியின்
வாய்க்குள் புகுந்து
வெளி வருகிறது
என் சுஸுகி
-oOo-oOo-
கொல்லப்பட்டவர்கள் – சிறுகதை
அவன் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த அந்தக் குறுகிய சந்திலிருந்து இன்னொரு சிறிய முடுக்கு பிரிந்து சென்றது. அதனுள் மூக்கைப் பிடித்துகொள்ளாமல் நடக்கமுடியாது. மூத்திர நெடி கடுமையாக இருக்கும். அந்த மூத்திரச் சந்திற்குள் சென்றான் அவன். அவன் வாய் அவனையுமறியாமல் ஏதோ உளறிக்கொண்டிருந்தது. மதுவின் கட்டுப்பாட்டில் அவன் இருக்கும்போது அவனுக்கு இந்த உலகம் மிக எளிதாகிவிடுகிறது. அவன் உளறிக்கொண்டிருக்கிறான் என்பதை அறிந்துகொண்டே உளறிக்கொண்டிருந்தான். ஆனால் என்ன உளறுகிறான் என்பது பற்றிய பிரக்ஞை அவனிடம் இல்லை.
இன்று சில பேரை அவன் கொல்லவேண்டியிருக்கிறது. அதற்காகக் கொஞ்சம் அதிகமாகவே குடித்திருந்தான். அவனது நிலையில் அவன் இல்லை என்றாலும் என்ன செய்யப்போகிறான் என்பது பற்றிய தீர்மானமான எண்ணம் இருந்தது. உளறிக்கொண்டிருந்தாலும் உள்மனது என்னவோ அவன் கொல்லப்போகிறவர்களைப் பற்றிய பட்டியலைத் துல்லியமாய்த் தயாரித்துவிட்டிருந்தது. கொல்லும் முறைகளில் கூட இரண்டு மூன்று விதங்களை அவன் யோசித்துத் தேர்ந்திருந்தான்.
அவனுக்குப் பிறரைக் கொல்லும் எண்ணம் உதிக்கத் தொடங்கியது பதிமூன்றாம் வயதில்.
அன்றைக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்த ருக்மணி டீச்சர் பாடத்தில் மட்டுமே மும்முரமாக இருந்தாள். அவன் அமர்ந்திருந்த பெஞ்சின் முன்வரிசையில் இருந்த மாணவர்கள் கையில் ஏதோ ஒரு புத்தகத்தை வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பார்ப்பது மேற்படி புத்தகமாகத்தான் இருக்கவேண்டும் என்று அவன் யூகித்தான். அந்தப் புத்தகத்தைப் பார்த்தே தீருவது என்ற எண்ணம் அவனுக்கு வலுத்தது. மற்றவர்கள் கொஞ்சம் அசந்த நேரத்தில் அவன் அந்தப் புத்தகத்தைக் கைக்கொண்டுவிட்டான். பள்ளியின் கழிப்பறைக்குப் பக்கத்தில் செல்லும் சந்தில் நின்று அந்தப் புத்தகத்தை வாசிக்க அதைப் பிரித்தான். பக்கங்களில் பல இடங்களில் கிழிந்திருந்தன. பல புஷ்டியான பெண்கள் பல விதங்களில் நின்றிருந்தார்கள். அந்தப் புத்தகத்தை வரி விடாமல் வாசிப்பது என்றும் அதைப் பத்திரமாக வைத்திருப்பது என்றும் தேவைப்படும்போது எடுத்துப் படிப்பது என்றும் முடிவு செய்தான். அவன் எதிர்பாராதவாறு பியூன் முத்து அங்கு வந்தார்.
“என்னடா பண்ற?”
அவன் விழித்தான். அவர் அவன் கையிலிருந்த புத்தகத்தைப் பறித்துப் பார்த்தார். அவன் பிடரியில் தட்டி, “பிஞ்சுலயே பழுத்திட்டியா? போடா” என்று அதட்டி அவனை அனுப்பினார். அவன் பயந்துகொண்டே அந்த இடத்தை விட்டு ஓடினான். பிறகொரு சமயத்தில், அவர் சத்துணவு சமைக்கும் கூடத்தில் வைத்து அந்தப் புத்தகத்தைப் படிப்பதைப் பார்த்தான். அவனுக்குள் சொல்லமுடியாத கோபம் எழுந்தது. அவனுக்கு அவரைக் கொலை செய்தால் என்ன என்று தோன்றியது.
கொலை செய்யவேண்டும் என்கிற எண்ணம் தோன்றிவிட்டதே ஒழிய அதற்கான மார்க்கங்கள் சுலபமில்லை என்பதை அவன் வெகு சீக்கிரமே அறிந்துகொண்டான். முத்து அவனைப் பார்க்கும்போதெல்லாம் கேலியாகப் பார்ப்பது போலவே அவனுக்குத் தோன்றும். அவனுக்கு வெட்கம் பிடுங்கித் தின்னும். மனதுக்குள் எப்படி அவரைக் கொல்வது என்றே யோசிப்பான். பள்ளி முடித்து, கல்லூரி சேர்ந்து அதைப் பாதியிலேயே டிஸ்கண்டினியூ செய்து, மெக்கானிக் வேலைக்கும் சேர்ந்துவிட்டான். அதுவரை முத்து அந்தப் பள்ளியில் பியூனாகவே இருந்தார். அவரைக் கொல்லும் எண்ணமும் அவனுக்கு வலுவிழந்துவிட்டிருந்தது.
மூன்று வாரங்களுக்கு முன்பு செக்கடி முக்கில் முத்துவை யாரோ கொன்றுவிட்டார்கள் என்று அவன் காதிற்குச் செய்தி வந்தது. ஓடிப்போய்ப் பார்த்தான். ரத்தவெள்ளத்தில் முத்து செத்துக்கிடந்தார். கந்துவட்டிக் கும்பல் கொன்றுவிட்டது என்று பேசிக்கொண்டார்கள்.
அவனுக்குள் முத்து பற்றிய எண்ணங்கள் தீவிரமாகக் கிளர்ந்தெழுந்தன. கொலை செய்யும் அளவிற்கு முத்து பாதகச் செயலை செய்யவில்லை என்றாலும், அன்றைய தினத்தில் அவன் எவ்வளவு அவமானம் அடைந்தான் என்பதும், முதன் முதலில் கொலை எண்ணம் உதித்தது முத்துவின் மேல் என்பதால் அவரைக் கொலை செய்வது அவசியம் என்பதும் அவன் நினைவிற்கு வந்தன. இன்று மிகத் தீர்மானமாய் முத்துவை மீண்டும் கொல்வது என்று முடிவெடுத்தான். அவனுக்குப் பதிமூன்று வயதுதான் என்றும் அவனே தீர்மானித்துக்கொண்டான்.
பள்ளிக்குப் பக்கவாட்டில் செல்லும் சந்துக்குள் சென்று பையன்களுக்குத் தெரியாமல் எடுத்த மேற்படி புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தான். சற்று நேரத்திற்கெல்லாம், சொல்லி வைத்த மாதிரி முத்து வந்தார். அவர் சொல்லப்போகும் வசனங்கள் அவனுக்குத் தெரியும். “பிஞ்சுலயே பழுத்திட்டியா? போடா” என்று அவர் அதட்டினார். அவன் “பழுத்தா என்ன?” என்றான். முத்துவுக்கு என்ன சொல்வது என்று தெரியப்போவதில்லை. “ஏண்டா, நானே கஷ்டப்பட்டு புத்தகத்தை லவட்டிக்கிட்டு வந்தா, என்கிட்ட லவட்டிட்டு நீ படிக்கிறயா?” என்று சொல்லிக்கொண்டே, பின்பக்கம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அவர் கழுத்தில் ஒரு வெட்டு வெட்டினான். அவர் அலறிக்கொண்டே கீழே விழுந்தார். அவன் அவர்மேல் அமர்ந்து, அவர் வாயைப் பொத்திக்கொண்டு, அக்கம் பக்கம் யாரும் வருகிறார்களா என்று பார்த்தவாறே அவரது குரல்வளையை அறுத்தான். முத்து செத்துப் போனார்.
சட்டையை உதறிக்கொண்டு, கையிலிருந்த கத்தியைத் தூரப் போட்டுவிட்டு அவன் அந்த முடுக்கை விட்டு வெளியேறினான்.
அவனது கொலைப் பட்டியலில் அடுத்து உள்ளது மல்லிகா.
பெண் என்கிற போதை அவனுக்குள் ஆழ வேரூன்றிக்கொண்டிருந்த சமயத்தில் மல்லிகா அவனுக்குப் பரிட்சயமானாள். மல்லிகா அவனுக்கு ஜூனியர். அவளும் அவனைப் போலவே பி.காம் எடுத்திருந்தாள். அடிக்கடி அவனிடம் சந்தேகங்கள் கேட்பாள். அவனுக்கு எதுவும் தெரியாது என்றாலும் தெரிந்த மாதிரி நான்கு வார்த்தைகள் சொல்லிவைப்பான்.
மல்லிகா எடுப்பாக இருப்பாள். அவன் முன் வளைய வளைய வருவதாக அவன் நண்பர்கள் அவனிடம் சொன்னபோது அவளை ஆழ்ந்து பார்க்கத் தொடங்கினான். அவன் அவளது மார்பகங்களையே எப்போதும் பார்த்துக்கொண்டிருப்பான். இப்படி ஒரு பெண் இருக்கமுடியும் என்றே அவன் நம்பவில்லை. அவள் அத்தனைப் புஷ்டியாக இருந்தாள். அவன் அவளை அப்படிப் பார்க்கிறான் என்பது அவளுக்கும் தெரியும். அவளுக்குள் அதுகுறித்து பெருமையும் சந்தோஷமும் இருந்தது. அதைத் தாண்டி அவன் எதாவது செய்யமாட்டானா என்றும் ஏங்கினாள். அப்போது அவனுக்கு வயது இருபத்தொன்று இருக்கும். அவனைக் காமம் விடாமல் துரத்திய காலம். அவனது நண்பர்கள் வீட்டில் எல்லாரும் எங்காவது வெளியூருக்குப் போனால் டெக் மற்றும் கேசட்டுடன் தவறாமல் ஆஜர் ஆகிவிடுவான். கேசட் வாடகைக்கு விடும் அத்தனைக் கடைகளும் அவனுக்குப் பரிட்சயம். இரண்டே நிமிடங்களில் கேசட் வாங்கிக்கொண்டு வந்துவிடுவான். விதவிதமாகக் கேசட் வாங்குவதில் அவனுக்கு நிகர் யாரும் கிடையாது என்று அவனது நண்பர்கள் சொல்லும்போது அவன் மிகவும் பெருமை கொள்வான். மிருகங்களுடனான கேசட்டை அவன் வாங்கி வந்தபோது அவன் நண்பர்கள் அவனை வியந்தனர்.
மல்லிகாவின் அம்மாவைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. அவள் இரவு நேரங்களில் செல்வதும் வருவதும், அவளது கணவன் கல்யாணம் ஆன சில வருடங்களிலேயே அவளை விட்டு ஓடிப்போய்விட்டதும் ஊருக்குள் எப்போதும் பேச்சாயிருக்கும். இந்த விஷயம் அவனுக்கு ஒரு வகையில் தோதாகப் போய்விட்டது. மல்லிகாவை எப்படியும் தொட்டுவிடலாம் என்று கணித்திருந்தான்.
அன்று இரவு அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அதைப் பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்தான். மல்லிகாவின் வீட்டில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தார்கள். மல்லிகாவும் ஆரம்பத்தில் அவனுக்குக் கொஞ்சம் ஒத்துழைத்தாள். ஆனால் திடீரென்று அவனைத் தள்ளிவிட்டு, “நீ இப்படி பண்ணுவேன்னு எதிர்பார்க்கலை” என்று அழுதாள். அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அதற்குப் பிறகு அவன் அவளுடன் பேசவில்லை.
மல்லிகாவிற்குத் திருமணம் செய்ய அவளது அம்மா ஆகப்பாடுபட்டாள். ஆனால் எதுவுமே அமையவில்லை. அமையாது என்று அவனுக்குத் தெரியும்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊரே மல்லிகாவின் வீட்டு முன்னர் திரண்டிருந்தது. அவனும் ஓடிப்போய்ப் பார்த்தான். யாரோ மல்லிகாவைக் கெடுத்துக் கொன்றுவிட்டிருந்தார்கள். மல்லிகாவின் அம்மா ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தாள். கிழிந்த ஜாக்கெட்டுடன் மல்லிகாவும் மார்பகம் மேல் குத்தி நின்றிருந்தது. அவனுக்கு விகாரமாக இருந்தது.
மல்லிகாவை இன்று விடப்போவதில்லை என்று அவன் தீர்மானித்து வைத்திருந்தான்.
அன்று இரவு அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவனுக்கு இப்போது இருபத்தொன்று வயது. மல்லிகாவும் ஆரம்பத்தில் ஒத்துழைத்தாள். ஆனால் அவனைத் திடீரென்று தள்ளிவிட்டு, “நீ இப்படி பண்ணுவேன்னு எதிர்பார்க்கலை” என்று அழுதாள். “ஏண்டி நீ என்ன பத்தினியா” என்று மூர்க்கமாகக் கத்தினான் அவன். மல்லிகா அதிர்ந்ததைப் பார்க்கும்போது அவனுக்குள் சந்தோஷமும் வெறியும் வலுவடைந்தது. அவளைப் படுக்கையில் தள்ளி, அவள் மேல் பாய்ந்தான். அவளது கைகளைப் பின்புறமாகக் கட்டி, “உன்னல்லாம் கொல்லனும்டி தேவடியா” என்று சொல்லிக்கொண்டே, பின்புறம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவள் வயிற்றில் குத்தினான். அவள் கத்திக்கொண்டே அவன் மீது சரிந்தாள். முழுவதுமாகச் சரிந்தாள். அவளின் உடல் முழுதும் அவன் மீது படர்ந்திருந்தது. “இனிமே மயங்க மாட்டாண்டி இவன்” என்று சொல்லி, வயிற்றிலிருந்து கத்தியை உருவி, மீண்டும் குத்தினான். மல்லிகா முழுவதுமாக அடங்கினாள்.
வீட்டை விட்டு வெளியில் வந்து கத்தியைத் தூக்கி எறிந்தான்.
இன்னும் ஒரு கொலை மட்டும் பாக்கியிருக்கிறது.
அவனது சொந்தம் என்று சொல்லிக்கொண்டவர்கள் அவனுக்கு லட்சுமியைக் கட்டி வைத்தார்கள். அவனுக்குக் கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்கிற எண்ணமே இருந்திருக்கவில்லை. ஆனால் லட்சுமியைப் பார்த்ததும் அவளின் உடலுக்கு ஆசைப்பட்டு ஒத்துக்கொண்டான். இதை அவனே பலமுறை அவளிடம் சொல்லியிருக்கிறான். ஆனால் லட்சுமி எப்போதும் எதையோ பறிகொடுத்தவள் போல இருந்தாள். அவளிடம் ஒரு புதுப்பெண்ணிற்கு உரிய எதுவுமே இருந்ததில்லை. அவனுக்கு அதைப் பற்றிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. இரவில் அவள் தயாராய் இருக்கவேண்டும் என்பது மட்டுமே அவனுக்கு தெரிந்த வாழ்க்கை.
ஒருநாள் இரவில் அவன் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஆண்குரல் கேட்டு விழித்தான். லட்சுமியைக் காணவில்லை. ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். லட்சுமி தனபாலுடன் பேசிக்கொண்டிருந்தாள். தனபால் ஏதோ மறுக்க, அவள் விடாமல் அவனிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். அவனுக்கு அவள் என்ன சொல்கிறாள், தனபால் எதை மறுக்கிறான் என்று விளங்கவில்லை. அவனுக்கு கோபம் வந்தது. ஆனாலும் ஒன்றும் நடக்காத மாதிரி சென்று படுத்துக்கொண்டுவிட்டான்.
இரண்டு மூன்று தினங்களில் அவன் எதிர்பார்த்த மாதிரியே லட்சுமி அவனுடன் நன்றாகப் பேசினாள். அவனுக்குச் சந்தேகம் வலுத்தது. அவனுக்குத் தனபால் பற்றியே யோசனையாக இருந்தது. இருவரும் ஓடிப்போகப் போகிறார்களோ? லட்சுமி அதற்கான வேலைகளில்தான் ஈடுபட்டிருந்தாள். லட்சுமி அவனை ஒன்றும் தெரியாதவனாகப் பாவித்திருந்தாள். ஆனால் அவன் லட்சுமியின் மன ஓட்டங்களை மிக எளிதில் கணித்துவிட்டிருந்தான். அவன் அவளிடம் நேரடியாகவே கேட்டுவிட்டான். அவள் கொஞ்சம் அதிர்ந்தாலும், மெல்ல சுதாரித்துக்கொண்டு, “ஆமா இப்ப என்ன? உன்கூட எவ இருப்பா? எருமை மாதிரி மேல பாயிரியே. தனபாலுக்குப் பொம்பளை மனசு புரியும்”, என்று சொல்லி அழுதாள். அவளுக்கும் தனபாலுக்கும் கல்யாணத்திற்கு முன்பே தொடுப்பு இருந்தது அவனுக்குப் புரிந்தது. அவள் மேல் கோபம் கோபமாக வந்தாலும் அவனுக்கு அதற்கு மேல் என்ன செய்யவேண்டும் எனத் தெரியவில்லை. அவளை அறைய வேண்டும் என வெறி வந்தது. ஆனால் அறைய முடியவில்லை. வீட்டை விட்டு வெளியேறினான்.
அன்றிரவு அவன் வீட்டுக்கு வந்தபோது கதவு பூட்டி இருந்தது. எவ்வளவு தட்டியும் லட்சுமி கதவைத் திறக்கவில்லை. அவனுக்குப் பயம் வந்தது. கதவை உடைத்துப் பார்த்தபோது, லட்சுமி தூக்குப் போட்டுச் செத்துப் போயிருந்தாள்.
ஆனால் இன்று அவன் லட்சுமியை விடப்போவதில்லை. அவன் மனதில் வெறி இருந்தது. அவன் அவளிடம் நேரடியாகவே கேட்டுவிட்டான். அவளும் அதே போல் “ஆமா இப்ப என்ன? உன்கூட எவ இருப்பா?”, என்று சொல்லி அழுதாள். “ஏண்டி தேவடியா முண்ட, அந்த நாய் கூட ஓடிப்போகப் போறியா? நா உன்னை சும்மா விடமாட்டேண்டி, பொலி போட்ருவேன்” என்று ஆவேசமாகக் கத்தினான். தொடர்ந்து, “என்னடி பாக்கிற? உன்னல்லாம் உசுரோட விட்டா நா ஆம்பிளைன்னு சொல்லிக்கிட்டுத் திரியறதே கேவலம்டி” என்று சொல்லிக்கொண்டு, ஓரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த அரிவாள்மனையை எடுத்து, அவள் உச்சந்தலையில் வெட்டினான். லட்சுமி தலையைப் பிடித்துக்கொண்டே கீழே சரிந்து விழுந்ததைப் பார்த்தான்.
அவனுக்குக் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. பெரும் எதிரிகளை எல்லாம் ஒழித்துக் கட்டிவிட்டது போலவும், அவனது வாழ்வின் சிறிய எதிரிகள் எல்லாம் அவனுக்குப் பயந்து அவன் முன் மண்டியிட்டுக் கிடப்பது போலவும் அவனுக்குத் தோன்றியது. அதிலும் முக்கியமாய், தனபால் “என்னை விட்ருங்கண்னே விட்ருங்கண்னே” என்று கெஞ்சிக்கொண்டிருந்ததைப் பார்த்துச் சிரித்தான். வீட்டை விட்டு வெளியில் வந்து அரிவாள்மனையை வீசி எறிந்தான். அந்தச் சத்தம் கேட்டு, அவன் வீட்டுக் கூரையிலிருந்து ஒரு பூனை தாவிக் குதித்து ஓடியது. அவன் கொஞ்சம் பயந்து, பின் சுதாரித்துக்கொண்டு, “தாயோளீ, நாளைக்கு லிஸ்ட்ல உன்னையும் வக்கிறேன் பாரு” என்றான் சன்னதம் வந்த குரலில்.
மஹான் – சிறுகதை
மிக நீண்டிருந்த அந்தக் குறிப்புகளை வாசிக்க ஆரம்பித்தேன். கடந்த இருநூற்றம்பைது ஆண்டுகளில் எனக்குத் தேவையான சில முக்கியக் குறிப்புகளைத் தருமாறு ஸ்நெல்லிடம் கேட்டபோது அவன் முகம் விநோதமாக மாறியதைக் கவனித்தேன். அதை நான் விரும்பவில்லை என்பதையும் ஸ்நெல் உடனே கண்டுகொண்டான். வழக்கமாக அனுப்பும் மின்னஞ்சல் முகவரிக்கு அதை அனுப்பாமல், அதனைப் பிரதி எடுத்துக் கையில் தருமாறு சொன்னபோது அவன் கொஞ்சம் வெளிறியதாகவே தோன்றியது. மிக முக்கியமான அரசு விஷயங்கள் எக்காரணம் கொண்டும் பிரதமரின் மின்னஞ்சல் முகவரியைத் தவிர வேறெந்த முகவரிக்கும் அனுப்பப்படக்கூடாது என்பது சட்டம். என் சட்டம். மேதகு கஹானி வதேராவின் சட்டம். அதுவும் ஸ்நெல் போன்ற உயர் அரசுப் பதவியில் இருப்பவரது மடல்கள் வேறெங்கும் அனுப்பப்படவே கூடாது. பிரமதராகிய நானே கேட்டபோது ஸ்நெல்லால் அதை மறுக்கமுடியவில்லை. மீறி மறுத்தால் இந்த அறிவியல் யுகத்தில் அவன் பிறந்ததற்கான அடையாளங்களே இல்லாமல் போகச் செய்துவிடமுடியும். இதைப் போல அரசாங்க எதிரிகள் பலரை ஸ்நெல்லே முன்னின்று கொன்றிருக்கிறான். அதனால் அவன் மறு பேச்செதுவும் பேசாமல் ஒத்துக்கொண்டான்.
அந்தக் குறிப்புகளை வாசிக்கத் தொடங்கினேன். அது ஸ்நெல்லின் முன்னுரையுடன் ஆரம்பித்தது.
* மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் திரு. கஹானி வதேராவுக்கு என் மரியாதையான வணக்கங்கள். வேறு வழியில்லாமலேயே இந்தப் பிரதியை உங்கள் கைகளில் தருகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். இதன் ரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் வரையில்தான் என்னுயிருக்குப் பாதுகாப்பு இருக்கும். இதை உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை என்றாலும் உங்களின் மேதகு கவனத்திற்குக் கொண்டுவருவது என் கடமையாகிறது.
* நீங்கள் சில குறிப்புகள் கொடுத்து அதன் அடிப்படையில் இக்கட்டுரையைத் தயார் செய்யச் சொல்லியிருந்தீர்கள். நீங்கள் கேட்டிருந்த விவரங்கள் அனைத்துமே நீங்கள் முன்னரே அறிந்தவைதான். மேதகு பிரதமரின் கட்டளைக்கிணங்கி அவற்றைத் தந்திருக்கிறேன்.
* ஒரு வசதிக்காக 2100-ஆம் வருடத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். அதற்கு முன்னரே நமது நாடு அறிவியலின் அதிகப் பயன்பெறு நாடாக மாறிவிட்டபோதும், 2100-ஆம் ஆண்டிலிருந்து தொடரும் ஆண்டுகளையே நமது நாட்டின் அதி வேக வளர்ச்சி ஆண்டுகளாக உலக நாடுகள் அங்கீகரித்தன. அதனால் 2100-ஆம் ஆண்டிலிருந்தே தொடங்குகிறேன்.
* 2100-ஆம் ஆண்டில் யாரும் எதிர்பார்க்காத ஓர் அறிக்கையை, அன்றையப் பிரதமராக இருந்த திரு.சஞ்சீவ் சிங் வெளியிட்டார். திரு. சஞ்சீவ் சிங் வெளியிட்ட அறிக்கை நமது பாரதத்தையே ஸ்தம்பிக்க வைத்தது எனலாம். எதிர்க்கட்சிகள் மற்றும் அரசு ரகசியக் குழுக்களின் முடிவை மீறி, அவர் அந்த அறிக்கையை வெளியிட்டார். நாட்டில் நடக்கும் விஷயங்கள் ஒரு வெளிப்பாடான தன்மை கொண்டிருக்கவேண்டும் என்ற அவரது கொள்கை அவ்வறிக்கையை வெளியிடச் செய்தது. அதன்படி 1930 ஆண்டு தொடக்கத்திலிருந்து, முக்கியமான ஆளுமைகளின் மரபணுக்கள் சேமிக்கப்படுகின்றன என்றும் அவற்றின் க்ளோன்களை நாம் நினைத்த மாத்திரத்தில் உருவாக்கிவிட முடியும் என்றும் அதற்கான முயற்சிகள் பரிசீலனைக் கட்டத்தைத் தாண்டி, வெற்றி பெற்றிருக்கிறது என்று அரசின் சார்பாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பினால் அவரது ஆட்சி பறிபோனது. அதைத் தொடர்ந்து வந்த அரசுகள் க்ளோனிங் முறைப்படி புதிய படி-உயிரிகள் தயாரிக்கும் திட்டத்தைத் தடை செய்தன.
* 2220-ஆம் ஆண்டைப் பற்றிய சில குறிப்புகளைக் கேட்டிருந்தீர்கள். அப்போது பாரதப் பிரதமராக இருந்தவர் தற்போதைய எதிர்க்கட்சியின் ஸ்தாபகரான திருமதி.ரேணுகா பிஸ்வால். அவர் க்ளோனிங் உருவாக்கத் தேவையான மரபணுக்களைச் சேகரித்து வைத்திருக்கும் மையம் [Clone and Bio-Technology Institute of Pune] புனேவில் இருந்தது என்றும் அது அழிக்கப்பட்டுவிட்டது என்றும் அறிவித்தார். மேலும், மரபணுக்களைச் சேகரித்து வைப்பதுவோ, க்ளோனிங் முறையில் படி-உயிரி தயாரிப்பதுவோ, மரண தண்டனைக்குரிய குற்றம் என்றும் அறிவித்தார்.
* 2276-ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலகப்போரில் உலகம் பெரும் நாசங்களைச் சந்தித்தது. அப்போது உங்கள் தந்தையார் பிரதமராக இருந்தார். உலக வல்லரசுகளாக இருந்த பெரும் நாடுகள் தங்கள் சாவுமணியைத் தாமே அடித்துக்கொண்டன. சுமார் ஏழரை ஆண்டுகள் நீடித்த அப்போர், அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டதால் ஒரு முடிவுக்கு வந்தது. உலகின் ஜனத்தொகையில் 36% மடிந்ததாக ஐ.நா.வின் ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் லேசான சேதத்துடன் தப்பித்துக்கொண்டன.
* 2285- ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் உங்கள் தந்தையார் மேதகு ரஜதேவ் வதேரா பெரும் வெற்றி பெற்றார். அவரது ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் அறிவியல் துறை அசுர வளர்ச்சி கண்டது.
* 2289-ஆம் ஆண்டு, கத்தாரில் நடந்த ஒரு மாநாட்டில் பங்கேற்க உங்கள் தந்தை மேதகு ரஜதேவ் வதேரா சென்றிருந்தபோது, அவரைப் போன்ற மனிதர் ஒருவரை டில்லியில் பார்த்ததாக எதிர்க்கட்சிகள் புரளியைக் கிளப்பின. அதைத் தொடர்ந்து க்ளோனிங் விவகாரம் மீண்டும் சூடு பிடித்தது. தன்னைப் போல க்ளோனிங் உருவாக்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் பரப்பிய குற்றச்சாட்டை மேதகு ரஜதேவ் வதேரா வன்மையாக மறுத்தார்.
* 2290-ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மேதகு ரஜதேவ் வதேரா பெரும் தோல்வி அடைந்தார். க்ளோனிங் விஷயத்தை எதிர்க்கட்சிகள் திறமையாகப் பயன்படுத்திக்கொண்டன. தோல்வியினால் துவண்ட மேதகு ரஜதேவ் வதேரா, அதே ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்குப் பின்னரும் அவரது க்ளோனிங் பற்றிய புரளிகள் தொடர்ந்துகொண்டே இருந்தன. ஆனாலும் அவரது அறிவியல் மற்றும் உயிரியல் துறைகளின் மீதான தீர்க்க தரிசனத்தை முன்னிறுத்தி, உலக நாடுகள் அனைத்தும் அவரை “நவீன பாரதத்தின் தந்தை” என்று அங்கீகரித்தன.
* 2298-ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் உங்கள் தலைமையில் நமது கட்சி பெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து 22 ஆண்டுகள் நீங்கள் தொடர்ந்து பாரதத்தின் பிரதமராக, யாராலும் அசைக்க முடியாத நிரந்தரத் தலைவராக நீடித்து வருகிறீர்கள். நீங்கள் அறிவியல் துறையில் செய்த சாதனைகள் மகத்தானவை.
* நமது அறிவியல் யுகத்தில் உலகமே நம்மைத் திரும்பி நோக்கியது 2303-ஆம் ஆண்டில்தான். அந்த ஆண்டுதான் க்ளோனிங் முறைப்படி படி-உயிரி செய்வது தவறல்ல என்ற கொள்கை முடிவை நமது அரசு அறிவித்தது. அதை அறிவித்த நாளே உங்கள் வாழ்க்கையின் சிறந்த நாளாக நீங்கள் பிரஸ்தாபித்துக்கொண்டீர்கள். உலகில் முதன்முதலாக, க்ளோன் உயிரி உருவாக்கப்படுவது தவறல்ல எனக் கொள்கை முடிவெடுத்த நாடு நமதே. மேலும் 1930-ஆம் ஆண்டுமுதல் முக்கிய ஆளுமைகளின் மரபணுக்கள் சேமிக்கப்படுகின்றன என்றும் அவை சேமித்து வைக்கப்பட்டிருக்கும் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் [CBTI of Pune] அவற்றை இன்னும் பாதுகாத்து வருகிறது என்றும் அறிவித்தீர்கள். முன்னாள் பிரதமர் திருமதி. ரேணுகா பிஸ்வால் 2220-ஆம் ஆண்டு அறிவித்தது போல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் அழிக்கப்படவில்லை என்றும் அறிவித்தீர்கள். இதுவரை ஆண்ட எல்லாக் கட்சிகளும் இத்திட்டத்திற்கு மறைமுக ஆதரவைக் கொடுத்தன என்றும் இனியும் மரபணு சேமிப்புத் தொடரும் என்றும் அறிவித்தீர்கள். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களை அறிவியல் வன்கரம் கொண்டு அடக்கியது நமது அரசு. க்ளோன் முறைப்படி படி-உயிரி தயாரிக்கப்படுவதை எதிர்த்த அனைத்து மனிதர்களும் தடம் தெரியாமல் அழிக்கப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து க்ளோன் எதிர்ப்புக் கலவரம் மெல்ல அடங்கியது. நமது நாடும் அறிவியல் யுகத்தில் ஆழமாகத் தன்னைப் பதித்துக்கொண்டது.
* பல முற்காலத் தலைவர்களை ஒத்த க்ளோனிங் மாதிரிகளைப் பற்றிய கட்டுக்கதைகளும் புரளிகளும், திரைப்படங்களும் இப்போதும் நம் நாட்டில் உலவி வருகின்றன. ஆனால் நம்முடைய அரசு கொள்கை முடிவாக ஏற்றுக்கொண்டதே ஒழிய, எந்தத் தலைவரின் உயிர் மாதிரியையும் உருவாக்கவில்லை என்பதே உண்மை.
இன்னும் நீண்டு கொண்டு செல்லும் அறிக்கை எனக்கு அயர்ச்சியைத் தந்தது. ஸ்நெல் என்னைச் சந்தோஷப்படுத்தும் குறிப்புகளை மட்டும் தந்திருக்கிறான் போல. அவனைத் தொலைபேசியில் அழைத்தேன்.
“மேதகு பிரதமருக்கு என் வந்தனங்கள்”
“நான் கேட்பதற்குச் சுருக்கமாய்ப் பதில் சொல். க்ளோனிங் முறைப்படி உயிரிகள் நமது அரசில் உருவாக்கப்படவே இல்லை என்கிறாயா? உண்மையச் சொல்.”
“மேதகு பிரதமர் அறியாததல்ல…”
“எனக்குத் தேவையற்ற விளக்கங்கள் வேண்டாம். நேரடியான பதிலை எதிர்பார்க்கிறேன்.”
“நான் நேரில் வருகிறேன்” என்றான் ஸ்நெல்.
ஐந்து நிமிடங்களுக்குள் ஸ்நெல் வந்தான். யாராலும் வேவு பார்க்கமுடியாத என் ரகசிய அறைக்குள் சென்றோம்.
“ஸ்நெல், எத்தனை க்ளோன்களை இதுவரை நாம் உருவாக்கியிருக்கிறோம்?”
“நீங்கள் மீண்டும் மீண்டும் என்னிடம் கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது. உங்களுக்குத் தெரியாததல்ல…”
“சரி விஷயத்திற்கு வருகிறேன். நீ நினைப்பது போல நான் கஹானி வதேரா அல்ல”
ஸ்நெல் அதிந்து, “க்ளோன்?” என்றான். நான் தலையசைத்தேன். ஸ்நெல்லுக்கு வேர்த்தது. அவனது கவனமெல்லாம், நான் எப்படித் தப்பினேன், எப்படி இங்கு வந்தேன், நிஜமான கஹானி வதேரா என்ன ஆனான் என்பது பற்றியே இருந்தது.
“இந்த நாட்டின் நன்மையைக் கருதி, கஹானி வதேரா இனியும் பிரதமராகத் தொடர்ந்தால், நாட்டில் ஜனநாயகம் என்பதே ஒழிந்துவிடும் என்று யூகித்து, இந்தத் திட்டத்தை நாங்கள் ஒரு குழுவாகச் செயல்படுத்தினோம்”
“நாங்கள் என்றால்…?”
பெயர்களைச் சொன்னேன். ஸ்நெல்லால் நம்பவே முடியவில்லை.
“நீங்கள் சொல்பவர்கள் எல்லாம் மேதகு கஹானி வதேராவின் அரசின் அதி ரகசியக் குழுவின் அங்கத்தினர்கள். அவர்களா?!”
“அதனால்தான் இந்தத் திட்டம் சாத்தியமாயிற்று. அரசின் அதி ரகசியக் குழுவின் அங்கத்தினர்கள் வேவு பார்க்கப்படுவதில்லை என்பதை நீ அறிவாயே…!”
நான் தொடர்ந்தேன்.
“அந்தக் காலத்தில் மகன் தகப்பனுக்குக் கொள்ளி வைப்பானாம். கஹானி வதேராவுக்கு அவன் தகப்பன் ரஜதேவ் வதேராவே கொள்ளி வைத்தான். பாரதத்தின் முதல் க்ளோன் யாரென்று தெரியுமா? நான் தான். கஹானி வதேரா பிறந்த உடனேயே நானும் உண்டாக்கப்பட்டேன். இருவருக்கும் ஒரே வயது, ஒரே உருவம். ஆனால் எண்ணங்கள் மட்டும் வெவ்வேறு. கஹானி வதேராவின் பல திட்டங்கள் நாட்டைச் சீரழிப்பதாயும் அவனைத் தவிர வேறு யாரும் நாட்டின் தலைவனாக முடியாது என்பதைச் செய்யும் நோக்கம் உடையதாயும் அமைந்ததை நீ அறிந்திருப்பாய். இந்தியாவில் கிராமங்களே இருக்கக்கூடாது என்பதற்கு அவன் மேற்கொண்ட ஆபரேஷனில் எத்தனைக் கிராமங்களும் கிராமத்தைச் சேர்ந்த மக்களும் அழிந்தார்கள் என்பது நீ அறிந்ததுதானே? ஒரு புள்ளி விவரக் கணக்கு 22 கோடி மக்கள் இறந்ததாகத் தெரிவிக்கிறது. அவர்கள் பிறந்து உயிர் வாழ்ந்ததற்கான தடயங்கள் கூட இல்லை.”
இதைச் சொல்லும்போதே எனக்குப் பதறியது.
“நீ அவனை எதிர்த்துப் பேசினால், நீ இம்மண்ணில் பிறந்ததற்கான அடையாளமே தெரியாமல் போகச் செய்யும் அளவிற்கு இந்நாட்டில் அறிவியல் மற்றும் உயிரியல் துறைகள் அவனுக்கு ஒத்துழைக்கத் தயாராய் இருக்கின்றன. அதற்குப் பயந்துதானே என்னிடம் இந்தப் பிரதிகளை மின்னஞ்சலுக்கு அனுப்பாமல் என்னிடம் தந்தாய்?”
ஸ்நெல் தலையாட்டினான்.
“இப்படி நேரும் என்று முன்னரே உணர்ந்த எங்கள் குழு என்னைப் பயிற்றுவிக்கத் தொடங்கியது. எனக்கு இருந்த சில மனத் தடைகள் மெல்ல மெல்ல நீங்கத் தொடங்கின. நானே என் மன அளவில் கஹானி வதேராவாக மாறத் தொடங்கினேன்.”
“திரைப்படம் பார்ப்பது போல இருக்கிறது”
“எனக்கும் அப்படித்தான். ஆனால் எனக்கு இப்போது தெரியவேண்டியது ஒரே ஒரு விஷயம். ரஜதேவ் வதேரா எத்தனை க்ளோன்களை உருவாக்கினான்? மூன்று க்ளோன்களை உருவாக்கியதாகச் சில வாய்மொழிக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கான விவரங்களோ தடயங்களோ இல்லந. முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் மூன்று க்ளோன்கள் உருவாக்கப்பட்டதாக நான் யூகிக்கிறேன். ஒன்று நான். மற்ற இருவர் யாரென்று தெரியுமா? எங்கள் குழுவால் அதைக் கண்டறிய முடியவில்லை.”
“அது மேதகு கஹானி வதேராவுக்குத்தான் தெரியும்.”
“நீ என்னை நம்பவில்லை என்று நினைக்கிறேன். நிஜமாக நான் கஹானி வதேரா இல்லை. நான் அவரது க்ளோன். கஹானி வதேராவை உனக்குக் காட்டுகிறேன் வா” என்று அருகில் இருக்கும் ஒரு ப்ளாஸ்மா திரையின் சுவிட்சை அழுத்தினேன். திரை ஒளிர்ந்தது. ஒரு கண்ணாடிப் பேழையில் குழந்தை போல கஹானி வதேரா உறங்கிக்கொண்டிருந்தான்.
“இந்த விவரம் போதுமா, இல்லை என் குழுவைச் சேர்ந்த மற்றவர்களையும் உன்னிடம் பேசச் சொல்லட்டுமா”
“வேண்டாம். நான் சொல்கிறேன். மூன்று க்ளோன்கள் என்பது தவறு. மொத்தமே இரண்டு க்ளோன்கள்தான் உருவாக்கப்பட்டன. ஒன்று நீங்கள். இன்னொன்று காந்தி.”
“காந்தி?”
“இன்றுவரை மஹாத்மா என்று போற்றப்பட்டுக் கொண்டிருக்கும் காந்தி. மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி. 1948-இல் சுட்டுக்கொல்லப்பட்ட காந்தி. நம் கட்சியின் ஸ்தாபகராக நாம் அங்கீகரித்திருக்கும் காந்தி. மக்கள் மனத்தில் இன்னும் நீக்கமற நிறைந்திருக்கும் காந்தி.”
எனக்குத் தலை சுற்றியது.
“அவரை ஏன் உருவாக்கினான் ரஜதேவ் வதேரா?”
“நீங்கள் சொன்ன விஷயங்களில் நிறையத் தகவல் பிழைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் விளக்குகிறேன். இவை கஹானி வதேராவின் சட்ட இலக்கணப்படி ராஜதுரோகமாகும். இருந்தாலும் சொல்கிறேன். நம் நாட்டின் நன்மையைக் கருதி”
ஸ்நெல் சொல்லத் தொடங்கினான்.
“முதல் க்ளோன் நீங்கள். அதை உருவாக்கியது ரஜதேவ் வதேரா. காந்தியின் க்ளோன் வைக்கப்பட்ட இடத்தில் நீங்கள் இல்லை. உங்களை ரகசியமான இடத்தில் வைத்திருந்தார் ரஜதேவ் வதேரா. அது எந்த இடம் என்று எனக்குத் தெரியாது. இரண்டாவது க்ளோன் மஹான் காந்தி. அதை உருவாக்கியது கஹானி வதேராதான். ரஜதேவ் வதேரா அல்ல. அதற்கான காரணம் விநோதமானது. என்னதான் சர்வாதிகார ஆட்சி செய்தாலும், ஏதேனும் ஒரு காலத்தில் மக்கள் பெரும் புரட்சியில் ஈடுபடுவார்கள் என்றே எதிர்பார்த்தான் கஹானி வதேரா. அப்போது இந்தக் காந்தி க்ளோனை வைத்து ஒரு நாடகம் நடத்தி மக்களை அமைதிப்படுத்த முடியும் என்று நம்பினான். அதற்குக் காரணம், கடந்த ஆயிரம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த தலைவர் காந்திதான் என்று தனிப்பட்ட அளவில் தீவிரமாக நம்பியதே. அதனால் காந்தியால் பெரும் கலகத்தைக் கட்டுக்குக் கொண்டுவரமுடியும் என்பதில் உறுதியாக இருந்தான் கஹானி வதேரா. இப்படி ஒரு எண்ணத்தை அவனுக்குத் தந்தவர்கள் அவன் மிக நம்பும் அறிவியல் மற்றும் உயிரியல் தொழிநுட்பப் பிரிவைச் சேர்ந்த கஹானி வதேராவின் தீவிர விசுவாசிகள். மக்கள் காந்தியின் மீது வைத்திருக்கும் அன்பும் பிம்பமும் அபரிமிதமானது. இன்னும் எங்கேனும் ஒரு மூலையில் காந்தியைப் பற்றிய மக்களின் ஏக்கக் குரலைக் கேட்கமுடியும். அவரைப் போன்ற ஒரு பிம்பம் பாரதத்தில் தோன்றாதா என்று ஏங்குவதைக் காணமுடியும். ஆனால் காந்தியின் க்ளோன் வளர வளர கஹானி வதேராவின் எண்ணம் வலுவிழந்தது. காந்தியின் க்ளோன் தான் ஒரு மஹானின் க்ளோன் என்பதை அறிந்த பிறகு, காந்தியைப் பற்றிய வரலாற்றையும் சாகசங்களையும் படித்த பிறகு, அன்பு, ஆன்மிகம், அஹிம்சை என்று பேச ஆரம்பித்துவிட்டான். கஹானி வதேராவுக்கு எதிரான தனது கருத்துகளையும் கூற ஆரம்பித்துவிட்டான். உயிரியல் தொழிநுட்பப் பூங்காவில் கஹானி வதேராவின் அறிவியல் மய வேகத்தை எதிர்த்து ஒருமுறை உண்ணாவிரதம் கூட இருந்தான். இவன் வெளியில் வருவது ஆபத்து என்பதை உணர்ந்த கஹானி வதேரா காந்தியின் க்ளோனை ஆழ் மயக்கத்தில் ஆழ்த்திவிட்டான். காந்தியின் க்ளோனை கஹானி வதேரா கொன்றுவிடுவான் என்றே நான் எதிர்பார்த்தேன்.”
“ஸ்நெல் நன்றி. இனி நான் பார்த்துக்கொள்கிறேன்”
“என்ன செய்யப் போகிறீர்கள்?”
“பொறுத்திருந்து பாருங்கள்”
இரண்டு நாள்களில் எங்கள் குழு ஒரு திட்டத்தைத் தயாரித்தது. அதற்கு ஆபரேஷன் – அஹிம்சா என்று பெயரிட்டோ ம். அதன்படி, காந்தியின் க்ளோனை விடுவிப்பது என்றும், கஹானி வதேராவாகிய நானே அவரை எங்கள் கட்சியின் தலைவராக்குவது என்றும், அவரது தலைமையின் கீழ் பாரதம், அறிவியல் மயத்திலிருந்து குறைந்து மீண்டும் பசுமைக்கும் அன்புக்கும் அஹிம்சைக்கும் திரும்ப வேண்டும் என்று முடிவு செய்தோம். மேலும் காந்தியின் க்ளோன் பதவி ஏற்றதும் யாரும் அறியாதவாறு கஹானி வதேராவைக் கொல்லவும் முடிவு செய்தோம். அனைவரும் கைகுலுக்கிக் கொண்டோ ம். ஆபரேஷன் – அஹிம்சா ஆரம்பமானது.
ஆனால் விஷயம் நாங்கள் நினைத்தவாறு எளிதாக இருக்கவில்லை. காந்தியின் க்ளோனை எளிதில் விடுவித்துவிட்டோ ம். கஹானி வதேராவே சொல்வதாக எண்ணி, உயிரியல் தொழில் நுட்பப் பூங்காவின் இரகசிய அதிகாரிகள் மிக ஒத்துழைத்து, காந்தியின் க்ளோனை வெளிவிட்டார்கள். கஹானி வதேராவின் ஒவ்வொரு அசைவிற்கும் அறிவியல் நிழலுலகம் எப்படி அசைகிறது என்பதைப் பரிபூர்ணமாக உணர்ந்தேன். நம் நாட்டைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்கிற என் எண்ணம் வலுத்தது. ஆனால் காந்தியின் க்ளோன், காந்தி போலவே இருந்தான், மனத்தளவிலும். இந்த யுகத்திலும் இப்படி ஒருவன் இருக்கமுடியுமா என்று அதிசயக்க வைத்தான் காந்தியின் க்ளோன். தனக்குப் பதவி மோகம் இல்லை என்றும் தான் பதவியில் அமரப்போவதில்லை என்றும் மிக உறுதியாகக் கூறத் தொடங்கினான். எங்கள் குழு அவனுக்குப் பெரும் விளக்கம் அளித்தது. ஒருவழியாக அவன் எங்கள் ஆபரேஷன் – அஹிம்சாவிற்குச் சம்மதித்தான்.
நாடே அல்லோகோலப்பட்டது. உலகின் முதல் மனித க்ளோனாக காந்தியின் க்ளோன் அறிவிக்கப்பட்டது. தங்கள் ஆதர்ச நாயகனை நேரில் பார்த்த அனைத்து மக்களும் உணர்ச்சிவசப்பட ஆரம்பித்தார்கள். “மஹான் காந்தீ மஹான்” என்ற பழம் பிராந்தியப் பாடல் பல இடங்களிலும் ஒலித்தது. காந்தியின் க்ளோனைக் காண [இனி காந்திஜி, எங்கள் பாரதத்தின் பிரமராகப் போகும் மாண்புமிகு காந்தியின் க்ளோனை இனி அப்படித்தான் என்னால் அழைக்கமுடியும்] நாடெங்கும் ஜனத்திரள் திரண்டது. அறிவியல் மயத்திலிருந்து, எந்திரத் தனத்திலிருந்து நாட்டைப் பசுமைக்கும் சுபிக்ஷத்திற்கும் கூட்டிச் செல்ல காந்திஜியினாலே மட்டுமே முடியும் என்று அனைவரும் பிரஸ்தாபித்தார்கள். பழம் படங்களிலிருந்து கண்டுகொண்ட சில மனிதர்கள் குல்லா கூட வைத்திருந்தார்கள். நாடே மிக நீண்ட நாள்களுக்குப் பின்னர் நிஜமான சந்தோஷத்தில் திளைத்திருந்தது.
அதிகாரப்பூர்வமாக எங்கள் கட்சியின் தலைவராகக் காந்திஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் எங்களைப் பாராட்டின. எங்கள் இந்த முடிவு, நாட்டில் நிஜமான ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வரும் என்றும் பாராட்டினார்கள். மீண்டும் க்ளோன் முறையில் படி-உயிரி தயாரிப்பதைத் தடை செய்யவும் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காந்திஜியும் நானும் இதை வெகுவாக ஆதரித்தோம். மேலும் இனிமுதல் தனிமனிதனைத் தொடரும் அறிவியல் நிழலுலகம் செயலிழக்கப்படுகிறது என்றும் தனிமனிதனின் தனிப்பட்ட செயல்கள் கண்காணிப்பு உள்ளிட்ட ஜனநாயகத்திற்கு விரோதமான எதையும் அரசு செய்யாது; ஊக்குவிக்காது என்றும் அறிவிக்கப்பட்டது. அது அன்று முதலே நடைமுறைக்கு வரவேண்டும் என்று காந்திஜி விரும்பினார். ஏகமனதாக எல்லாக் கட்சிகளும் அதை ஆதரிக்க, நான் கையெழுத்திட [நான் கையெழுத்திடும் முதலும் கடைசியுமான சட்டம் இதுதான் என்பதை எண்ணிக்கொண்டேன்] கஹானி வதேராவின் கடைசிச்சட்டம் இதுவெனப் பத்திரிகைகள் எழுதின. மேலும் கஹானி வதேராவுக்கு ஞானோதயம் வர காந்திஜி வேண்டியிருக்கிறது என்றும் எழுதின. காந்திஜியும் நானும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக்கொண்டோ ம். நான் மெல்ல அவர் காதில், “க்ளோன்களின் யுகம் க்ளோன்களால் முடிவுக்கு வருகிறது” என்றேன். அவர் தலையசைத்தார்.
வரும் ஞாயிறன்று காந்திஜி நம் பாரதத்தின் பிரதமராகப் பதவி ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.
எங்கள் ஆபரேசன் அஹிம்சாவின் அடுத்த கட்டத்தைச் செயல்படுத்த ஆயத்தமானோம். காந்திஜிக்கும் தெரியாத திட்டம் இது. எங்கள் திட்டப்படி சனி அன்று இரவு நிஜமான கஹானி வதேராவை வதம் செய்யத் திட்டமிட்டிருந்தோம். உண்மையில் எங்கள் குழு அதற்கான நிமிடங்களுக்காகக் காத்திருந்தது. சரியாக அன்றிரவு எட்டு மணிக்கு நாங்கள் கஹானி வதேராவை மறைத்து வைத்திருந்த இடத்திற்குச் சென்றோம். அவன் ஆழ் நித்திரையில் இருந்தான். ஒரு ஊசி மூலம் கொல்ல ஏற்பாடாகியிருந்தது. அதற்கு முன்னர் அவனை உயிர்ப்பித்து, அவனிடம் நடந்த விஷயங்களைச் சொல்லி, அவனைக் கொல்லவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. கஹானி வதேரா ஆழ் நித்திரையிலிருந்து எழுப்பப்பட்டான். எங்களைப் பார்த்ததும் உயிரில்லாமல் சிரித்தான். என்னைப் பார்த்து “ஹாய்” என்றான். எனக்குப் பாவமாக இருந்தது. “உன்னைக் கொல்லப் போகிறோம்” என்றேன். “நீயே உன்னைக் கொல்வது, எனது அரசின் சாதனை” என்றான் முனங்கியவாறே. அருகிலிருந்த எங்கள் குழுவைச் சேர்ந்த உயிரியல் அதிகாரிகள், அவன் உயிர்ப்பித்த காந்தியின் க்ளோனை வைத்தே நாட்டைச் சுபிக்ஷமாக்கப் போவதாகச் சொன்னார்கள். மெல்லப் புன்னகை செய்தான். சரியாக 8.06க்கு அவனுக்கு மரண ஊசி ஏற்றப்பட்டது.
“என்னை இந்நாடு மறக்கவே முடியாது” என்றான் கஹானி வதேரா.
சில விநாடிகளில் அவன் சப்த நாடியும் ஒடுங்கிப் போனான். என் உருவம் என் கண் முன்னே இறக்கும் அதிசய நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஞாயிற்றுக்கிழமை.
நாடே கோலாகலத்தில் மூழ்கியிருந்தது. இடுப்பில் வேட்டி மட்டும் கட்டி, மூக்குக் கண்ணாடி அணிந்த அரைக்கிழவர் பாரதப் பிரதமராகப் போகும் அந்தக் கனவு நிமிடங்களுக்காக இந்தியாவே காத்திருந்தது. உலகின் அனைத்து நேச நாடுகளும் தத்தம் பிரதிநிதிகளுடன் பாராளுமன்ற அரங்கில் காத்திருந்தார்கள். எதிர்க்கட்சிகள் கூட அத்தனை உற்சாகமாய் இருந்தன.
காந்திஜி வாய் நிறையப் புன்னகையுடன் பாராளுமன்றக் கட்டிடத்தை நோக்கி நடந்துவந்தார். வழியெங்கும் அவருக்கு மலர்கள் தூவப்பட்டன. சிரித்த முகத்துடன் காந்திஜி அதை ஏற்றுக்கொண்டார். சிறிது நாளில் காந்தியின் க்ளோன் காந்திஜியாகவே மாறிவிட்டதை நினைத்து எனக்குச் சந்தோஷமாகவும் பெருமிதமாகவும் இருந்தது.
இன்னிசை கீதங்கள் முழக்கப்பட்டன. யானைகள் அணிவகுத்து நின்று மலர் தூவின.
அமைதியான கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ஏதோ ஒரு யானைக்கு மதம் பிடித்திருக்கவேண்டும் என்றே நினைத்தேன் நான்.
திடீரென்று கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஒரு மனிதன் எந்திரத்துப்பாக்கியுடன் காந்திஜியை நோக்கி முன்னேறி வந்தான்.
“ஐ’ம் ஸாரி காந்திஜி” என்று சொல்லி அவரை நோக்கிச் சுட்டான்.
காந்திஜி அதே இடத்தில் இரத்த வெள்ளத்தில் பிணமாக மிதந்தார்.
அனைவரும் அவனைச் சூழ்ந்துகொண்டார்கள். நான் அவனை நோக்கி ஓடினேன். அனைவரும் அவனைப் பிடித்து உலுக்கி யாரென்று கேட்டார்கள்.
அவன், “நாதுராம் கோட்ஸே” என்றான்.
சிதறியிருந்த ரத்தத் துளிகளில் கஹானி வதேராவின் முகம் தோன்றி, “என்னை இந்நாடு மறக்கவே முடியாது” என்றது.
அவன் – சிறுகதை
அன்று மிக மன உளைச்சலாக உணர்ந்தேன். மீண்டும் மீண்டும் மனம் விஷ்ணுவையே நினைத்துக்கொண்டிருந்தது. சிறிய குடுமி வைத்து, நெற்றியிலும் வயிற்றிலும் நாமம் போட்டுக்கொண்டு, பஞ்ச முத்திரை இட்டுக்கொண்டு சமிஸ்கிரதத்தை வாசிக்கும் அவனது தோற்றத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. சயின்ஸ், மேத்ஸ் தொல்லை இல்லை என்றானாம். முதல் முறை மிக சந்தோஷமாகப் போனானாம். இரண்டு முறை ஃபோன் செய்தபோது அழுதிருக்கிறான். நான் யாருக்கும் ஃபோன் செய்யவில்லை. மாதங்கி இரண்டு தடவை என்னைக் கூப்பிட்டு, விஷ்ணுவைப் போய் பார்த்துவிட்டு வா என்றாள். எப்படி அவனை அனுப்பின என்று மீண்டும் மீண்டும் கேட்டேன். இதுல என்னடா இருக்கு என்று படு கேஷுவலாகச் சொல்லிவிட்டு விக்கி விக்கி அழுதாள். வயித்துல இருக்கும்போதே நேந்துக்கிட்டது என்றாள். அப்படி ஆம்பளைப் பையன் பொறக்கணுமா? பொறந்து என்ன ஆச்சு? பன்னெண்டு வருஷம் பார்க்காம இருக்கப் போற? இதுக்கு எதுக்குப் பெத்துக்கிட்ட? – என்ற எல்லாக் கேள்விகளுக்கும் அவளது பதில் வெறும் அழுகை மட்டும்தான். என்னால போய்ப் பாக்க முடியாது. மாமா, உன் கூட வர்றேன்னு சொன்னா கூட்டிக்கிட்டு வருவேன். ஸ்ரீதர் பாவா திட்டுவார். எனக்கெதுக்கு? அம்மா, அப்பா ரெண்டு பேரும் முடிவு பண்ணி கொண்டு போய் விட்டாச்சு. நல்ல காரணம், நேத்திக்கடன். அதை மீற முடியுமா? எத்தனை வருஷம்? பன்னெண்டு வருஷமாம். முதல் நாலு வருஷம் திருவேற்காட்டிலேயே இருக்கலாம். அடுத்த எட்டு வருஷங்கள் பெங்களூருக்குச் சென்று சமிஸ்கிரதமும் புரோகிதமும் படிக்கவேண்டும். ஸ்ரீதர் பாவா ரொம்ப சந்தோஷப்பட்டுச் சொன்னாராமே. நாமம் போட்டுக்கிட்டு, பஞ்சகச்ச கட்டிக்கிட்டு செண்டிக வெச்சிக்கிட்டு பார்க்கவே அழகா இருக்குன்னு. மாதங்கி பதில் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். நான் பேசுறது கேட்குதா இல்லையா என்று கேட்டபோதெல்லாம் ம் என்று மட்டும் சொன்னாள். லேசான குரலில் மாத்வ சம்பதி தெரிஞ்சா நல்லதுதானே என்றாள். இவன் கூட படிச்ச பையன்கள் எல்லாம் டாக்டரா வரட்டும். இவன் அவர்களுக்கே கல்யாணம் செய்து வைக்கட்டும். மாதங்கி மீண்டும் என்னைப் போய்ப் பார்த்துவிட்டு வா என்றாள். சரி என்றேன். மாதங்கி பதில் சொல்லாமல் இருந்தாள். சிறுது நேர மௌனம். பிறகு, “பழம் பிஸ்கட் கொண்டு போடா. வெளிய எதுவும் வாங்கிக்கொடுக்காத. வெங்காயம், பூண்டு சாப்பிடக்கூடாதாம். போன் வாரம் வந்திருந்தான் வீட்டுக்கு. குருமா செஞ்சிருந்தேன். அவனுக்கு உசுரு பாத்துக்கோ. சாப்பிடுடா, பரவாயில்லை, வீடுதானேன்னு சொன்னேன். மாட்டவே மாட்டேன்னுட்டான். உங்க பாவாவுக்கு ஒரே பெருமை. அவன் வாயிலயே வேண்டாம்னு வரவெச்சிட்டாங்கன்னு ரொம்ப பெருமைப்பட்டார். ரெண்டு வாரம்தான் ஆகுது. அதுக்குள்ள மாறிட்டானேன்னு எனக்கும் ஆச்சரியம்…..” போதும் உன் புராணமும் உன் பாவா புராணமும் என்று சொல்லி ஃபோனைத் துண்டித்தேன். ஸ்ரீதர் பாவா மீண்டும் என்னைக் கூப்பிட்டார். என்னடா வீட்டுப் பக்கம் வரலை என்றார். பிஸி என்றேன். உடம்பைப் பாத்துக்கோ என்றார். நான் வண்டியில போய்க்கிட்டு இருக்கேன், அப்புறம் பேசுங்க என்று சொல்லி ஃபோனை கட் செய்தேன்.
ஸ்ரீ சுந்தர தீர்த்த மடத்தில் சென்று விஷ்ணுவைப் பார்க்கப் போனேன். காவியை மார்பு வரை கட்டியிருந்த ஒரு ஆச்சார் “யாருன நோட பேக்கு” என்றார். செல்லும் வழியைக் காட்டினார். அங்கே ஒரு மரத்தடியில் விஷ்ணு தனியாக உட்கார்ந்திருந்தான். என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கொண்டான். சுற்றியும் பல மரங்கள் இருந்தன. நிறைய பையன்கள் வெள்ளை நிற பஞ்சகச்சம் கட்டி அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தார்கள். காம்பவுண்ட் சுவற்றில் கரியால் ஸ்டம்ப் வரைந்திருந்தார்கள். கிரிக்கெட் ஆடுவியாடா என்றேன். என்னை இப்ப வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போவியா என்றான். “அது அப்புறம். கிரிக்கெட் ஆடுவியா?” “ஆமா. ஆச்சாரும் எங்க கூட ஆடுவார். நேத்து அவர் பால்ல சிக்ஸ் அடிச்சேன். அடுத்த பால்ல அவுட்டாயிட்டேன்” “அவுட்டாயிட்டியா? அடுத்த தடவை அவர் பால் போடும்போது, சட்டுன்னு நிறுத்தி, நான் அவுட் ஆகாம இருக்கிறதுக்கு என்ன ஸ்லோகம்னு கேளு” கண்ணில் நீர் வரும் அளவிற்குச் சிரித்தான். “ஏண்டா வீட்ல குருமா சாப்பிடமாட்டேன்ன?” “ஆச்சார் திட்டுவார்” “அந்நியன் பாத்தியாடா?” அந்நியன் மாதிரி குரலை மாற்றிப் பேசிக் காட்டினான். “சிடி போட்டாங்க” “சிவகாசி வரவும்மாமா உன்னைக் கூட்டிக்கிட்டுப் போறேன். சரியா?” “இப்போ?” “இப்ப இல்லை. உனக்கு பிஸ்கட் பிடிக்கும்னு பிஸ்கட் வாங்கிட்டு வந்தேன். இந்தா வெச்சிக்கோ” “இதையே தின்னு தின்னு எரிச்சலா வருது மாமா. அம்மா, அப்பா வாராவாரம் இதுதான் வாங்கிட்டு வர்றாங்க.” “உனக்கு வேற என்னவேணும்?” “ஜெம்ஸ் வாங்கிட்டு வருவியா?” “அடுத்த தடவை வாங்கிட்டு வர்றேன்” “அடுத்த வாரம் என் பிறந்தநாள் வருது. கண்டிப்பா வாங்கிட்டு வரணும்… அத்தையையும் கூட்டிக்கிட்டு வா.” “எத்தனாவது பிறந்தநாள்டா?” “பதிமூனு” “ஒன் ஃபிரண்ட்ஸ் எல்லாம் காமிடா” “வேணாம். எல்லாரும் என் மேல பொறாமைல இருக்காங்க. நாந்தான் இங்க ஆச்சாருக்கு பெட். அவர் சொன்ன ஒடனே படிச்சி ஒப்பிச்சுடுவேன். அதனால எல்லாரும் என் மேல பொறாமைல இருக்காங்க.” “சரி மாமா போகணும்” சட்டென அவன் முகம் மாறியது. மீண்டும் ஒரு சந்தோஷத்துடன் அடுத்த வாரம் அத்தைய கூட்டிக்கிட்டு வருவேல்ல என்றான். வர்றேன் என்றேன்.
ஸ்ரீதர் பாவா மிகவும் விளக்கினார். படித்தாலும் வேலை கிடைக்காது என்று சொல்லி அதற்கான காரணங்களைப் பட்டியலிட்டார். “கிருஷ்ணாச்சார் பாத்தியா? ஒனக்கு பூணூல் போட்டப்ப அவர்தான் வந்தார். அப்ப அவருக்கு வயசு இருபத்தொண்ணு. இப்ப பார், மதுரைல அவர்க்கு சொந்த வீடு இருக்கு” கொஞ்சம் நேரத்தி, “நேந்துக்கிட்டோ ம். அதான்” என்றார். கடைசியாக படிக்க வைக்க முடியலை; செலவு கட்டுப்படியாகலை என்றார். “நீ கோச்சுக்கிட்டு வராம இருந்துடாத. உன் அக்கா அதுக்கும் சேர்த்து அழறா” என்றார். அவரே “ஒரு வார்த்தை உன்னைக் கேட்டிருக்கலாம்தான். எல்லாம் சேர்ந்து என்னை மாத்திடுவீங்க. அதான் கேக்கலை” என்றார்.
அன்று விஷ்ணுவிற்குப் உபநயனம். அன்று காலையிலேயே உத்ராய மடத்திற்கு என்னை வரசொல்லியிருந்தார் ஸ்ரீதர் பாவா. நான் போக நேரமாகிவிட்டது. மடத்தில் மூன்றாவது மாடியில் விஷ்ணுவுக்குப் பூணூல் போட்டுக்கொண்டிருந்தார்கள். மூன்று மாடி ஏறுவதற்குள் வயிற்றில் குழந்தையைச் சுமந்துகொண்டிருந்த ப்ரியா மிகவும் கஷ்டப்பட்டுவிட்டாள். என்னால முடியல பாவா என்று சொல்லிக்கொண்டே மூன்றாவது மாடியை அடைந்துவிட்டாள். ஹோமப் புகை கலந்த, அதிகம் காற்றோட்டமில்லாத, ஒரு ஃபேன் மட்டும் சுற்றிக்கொண்டிருக்கும் அறையில் ஹோமத்தின் முன்பு நின்றிருந்தான் விஷ்ணு. நான் வந்தவுடன் என்னையும் அவன் அத்தையையும் மாறி மாறிப் பார்த்துச் சிரித்தான். நிமிடத்திற்கொருமுறை ஸ்ரீதர் பாவா அவன் தலையை மந்திரம் சொல்லிக்கொண்டிருக்கும் ஆச்சாரைப் பார்த்துத் திருப்பினார். அவன் ஆச்சார் சொல்லச் சொல்ல மந்திரங்களைச் சொல்லிக்கொண்டே, ப்ரியாவுடன் சைகையில் ஏதேதோ பேசினான். அவனது பால் நிற பிஞ்சு உடம்பில் பூணூல் அணிவித்திருந்தார்கள். பிரம்மோபதேசம் செய்யும்போது தலையை எட்டிப் பார்த்துப் பார்த்துச் சிரித்தான். பூணூல் போட்டு முடிந்ததும் ஓடி வந்து, “தேவுடா தேவுடா” என்று பாடினான். ப்ரியாவின் மடியில் பொத்தென விழுந்தான். மாதங்கி அவனைத் திட்டினாள். எல்லோரும் கீழே சாப்பிடப்போனோம். ஆண்களெல்லாம் சட்டையைக் கழற்றினார்கள். மாதங்கி என்னைத் தனியே அழைத்துப்போய் என் கையில் பூணூல் தந்தாள். நானும் சாப்பிட வந்தேன். உத்ராய மடத்தில் வித்தியாசமாகப் பரிமாறினார்கள். அனைவரும் கையில் நீரை எடுத்துக்கொண்டு, ஆச்சார் மந்திரம் சொல்லும் வரையில் காத்திருந்தார்கள். முதலில் பரிமாறப்பட்ட சாம்பார் இரசம் மாதிரி இருக்கிறதென்றேன். விஷ்ணு, இது ரசம்தான் மாமா என்றான். இங்க அப்படித்தாண்டா போடுவாங்க என்றாள் மாதங்கி. “இப்பவே இவனுக்கு பூணூல் அவசியமா? பதிமூனு வயசுல எதுக்கு பூணூல்? ஸ்கூலெல்லாம் முடிஞ்ச பின்னாடி போட்டாப் போதாதா? இவன் பி.டி.பீரியட் எல்லாப் பசங்களும் இவனை ஒரு மாதிரி பார்க்கமாட்டாங்களா?” “இதுல என்னடா ஒரு மாதிரி பார்க்கவேண்டியிருக்கு? இதுவே லேட்டாயிடுச்சுன்னு ஸ்ரீதர் பாவா பொலம்பினார் தெரியுமா? ஏழு வயசுல போட்டா ஸ்லாக்கியமாம். நமக்குக் கொடுத்து வைக்கலைன்னு அவன் பாட்டியும் சொல்லிக்கிட்டே இருந்தாங்க” “நல்ல குடும்பம்” “நீ பேசாம சாப்பிடு. இடது கையால தொடாத. தண்ணியைத் தொட்டுட்டு, இடது கையை அந்தாண்ட வெச்சிட்டுச் சாப்பிடு” “உன் தமிழே ஒரு மாதிர் இருக்கு” “நீயாவது நல்லா இரு. எப்ப கொண்டு போய் விடப்போற அவளை” “அவளையே கேட்டுக்கோ” விஷ்ணு நூறு முறை என் தொடையைப் பிராண்டியிருந்தான். “என்னடா பேசவிடமாட்டேங்கிற?” “சந்திரமுகி பார்த்துட்டீங்களா?” “ம். நீ?” “நாயர், உங்க ஊர் டெண்டர் எங்க கைக்கு வந்தாச்சு. உங்க நாலு லட்ச ரூபாய் காண்ட்ராக்ட எங்க முதலாளி செந்தில்நாதன் வாங்கிட்டார்….. மாப்பு வெச்சிட்டாண்டா ஆப்பு….ரஜினி ஒரு சீன்ல பறந்து அடிப்பானே? யப்பா… அடி தாங்காம அவன் என்னமா போய் விழுவான்? மாமா, இன்னொரு தடவ கூட்டிக்கிட்டுப் போவியா?” “போவீங்களான்னு கேளு” என்றாள் மாதங்கி. “யார்கிட்டயும் கேக்கக்கூடாதுன்னு சொன்னேன்ல?” என்றார் ஸ்ரீதர் பாவா. “பாவா, அவன விடுங்க. நாங்க பேசும்போது நீங்க எதுக்கு அவனைத் திட்றீங்க? விடுங்க” என்றேன். ஸ்ரீதர் பாவா மாதங்கியை முறைத்தார். ப்ரியா விஷ்ணுவைப் பார்த்து போலாம் என்று சைகை காட்டினாள். நான் அவளை முறைத்தேன். ‘சரி, விஷ்ணு.. லாய்.. உன்னைத்தான். லாய்…” “என்ன மாமா?” “ஏன் இன்னைக்கு ஒனக்குப் பூணூல் போட்டிருக்கு தெரியுமா?” “ஏன்?” “இந்த வாரம் ஞாயித்துக்கிழமை உனக்குப் பூணூல். அடுத்த வாரம் ஞாயித்துக் கிழமை உனக்குக் கல்யாணம். அதுதான்” “போங்க மாமா” “இல்லடா. நெசமாத்தான். உங்க பாலாஜி சித்தப்பாவுக்கு என்ன பண்ணாங்க? மொத வாரம் பூணூல். அடுத்த வாரம் கல்யாணம். அது மாதிரிதான் ஒனக்கும்” என்று கூட சேர்ந்துகொண்டாள் மாதங்கி. “ஐயோ எனக்கு வேண்டாம்ப்பா. நானும் உன்ன மாதிரி பெரியவான ஒடனே ப்ரியா அத்தை மாதிரி பெரிய பொண்ணைக் கட்டிக்குவேன்” “அது என்னடா ப்ரியா அத்தை மாதிரி?” “அவங்க ஸ்கூல்ல ஒரு பொண்ணைப் பார்த்துட்டானோ என்னவோ” என்றார் ஸ்ரீதர் பாவா. “போப்பா” என்றான் விஷ்ணு.
“பூணூலுக்கு வந்திருக்கும்போதாவது சொல்லியிருக்கலாம். ஒண்ணுமே நடக்கப்போறதில்லைன்ற மாதிரி பேசிக்கிட்டு இருந்தீங்க. உங்க இஷ்டம்தான். உங்க முடிவுதான். இல்லைன்னு இல்லை. ஆனாலும் ரொம்ப கஷ்டமா இருக்கு” “சரி விடு. எவ்வளவோ விஷயம். எங்களுக்கு மட்டும் என்ன அவனைக் கொண்டு போய்விட்டா சந்தோஷமா? தினமும் அழுதுக்கிட்டேதான் தூங்றா உங்க அக்கா” உள்ளே அழுதுகொண்டே காப்பி போட்டுக்கொண்டிருந்தாள் மாதங்கி. சரி நாங்க கிளம்புறோம் என்று சொல்லிவிட்டு நானும் ப்ரியாவும் வீட்டிற்கு வர பஸ் பிடித்தோம். குழந்தைய சுமந்துக்கிட்டு இருக்கிறவளை இந்த நேரத்துல கூட்டிக்கிட்டுப் போணுமா என்று ஸ்ரீதர் பாவாவும் மாதங்கியும் சொல்லிக்கொண்டே பஸ் ஸ்டாப் வரையில் வந்து பஸ் ஏற்றிவிட்டார்கள். மாதங்கி ஒரு வேப்பிலையைப் பறித்து ப்ரியாவுக்கு வைத்துவிட்டாள். “மாமா, விஷ்ணுவ மட்டும்தான் பார்க்கப் போவீங்களா? என்னைப் பார்க்க வரமாட்டீங்களா?” என்றாள் விஜி. “உன் தம்பி இல்லாம எப்டிடி இருக்க?” “அவந்தான் அடிக்கடி வர்றானே. அவன் அங்க இருந்து படிச்சா அவன் ஃப்யூச்சருக்குத்தான நல்லது?” நான் ஸ்ரீதர் பாவாவைப் பார்த்து “நல்ல ட்ரெயினிங்” என்றேன். மாதங்கி என்னைக் கிளம்பு என்றாள். பஸ் மெல்ல நகர்ந்தது. நான் வழியோரக் காட்சிகளில் கவனம் செலுத்திக்கொண்டு வந்தேன். “இருந்தாலும் நீங்க ரொம்ப பேசறீங்க. பாவான்ற ஒரு மரியாதை இருக்கா? அவர் கொண்டு போய் விட்டுட்டாரு. ஆச்சு. அதென்ன அத்தனை தடவை சொல்லிக் காண்பிக்கிறது?” “ரொம்ப பாவமா இருக்குதுடி. அங்க போய் ஐயோ பாவம்” “சரி இல்லைன்னு சொல்லலை. அவர் கேட்டப்ப நீங்க விஜியை தத்து எடுத்துக்கிட்டு இருக்கலாம்ல? கொள்கை அது இதுன்னீங்க. அப்ப விஜியையே தத்து எடுத்துக்கோன்னு சொன்ன உடனே தத்து எடுக்கிற ஐடியாவையே விட்டுட்டீங்க?” “சும்மா ஒளராத. ரெண்டு கொழந்தைங்க. ஒண்ணு மடத்துக்கு. இன்னொன்னும் தத்துன்னா பாவா எதுக்கு?” “அவங்களுக்கு ஆயிரம் கஷ்டம். இனிமே போனா நல்லா இருக்கீங்களான்னு கேட்டுட்டு வாயை மூடிக்கிட்டு இருங்க. உங்க ஆர்க்யூமெண்ட்டெல்லாம் நம்ம குடும்பத்துக்குள்ள வேண்டாம். ஐயோ பாவம் மாதங்கி அக்காதான் ரெண்டு பக்கமும் மாட்டிக்கிட்டு தவிக்கிறாங்க”
அதற்குப் பின் இரண்டு மூன்று முறை விஷ்ணுவைப் பார்க்க மடத்திற்குப் போனேன். ஆச்சார்கள் சிலர் என்னைப் பரிச்சயப் பட்டுக்கொண்டார்கள். ஸ்ரீ ஹரி கதா புத்தகம் எங்கு கிடைக்கும் என்று கேட்டார்கள். அவுட் ஆஃப் ஸ்டாக் என்றேன். விஷ்ணு சுரத்தில்லாமல் பேசினான். எங்களில் யாரையாவது பார்த்தால்தான் அப்படிச் சோர்ந்து போவதாக ஆச்சார் கூறினார். வேத பாடங்களை ஒப்புவிப்பதிலும் சமிஸ்கிரத ஸ்லோகங்களை எழுதுவதிலும் அவனே முதல் என்று அவனைப் பாராட்டினார். “ஸயின்ஸ் மேத்ஸ் எல்லாம் கிடையாதா?” “இந்தக் காலத்துல அதுவும் வேண்டியிருக்கே. வாரத்துக்கு ரெண்டு ட்யூட்டர்ஸ் வந்து சொல்லித் தர்றாங்க” என்றார். “மாமா, அன்னைக்கு ஆராதனை அன்னைக்கு மத்தியானம் மூணு மணிக்குத்தான் சாப்பாடு போட்டாங்க” என்று சொன்னான் விஷ்ணு. “காலேல அவல் உப்புமா தருவாங்களாமே. அம்மா சொன்னாளே” “தந்தாங்க. எனக்குப் பிடிக்கலை” “சாப்பாடு எல்லாம் நல்லா இருக்கா?” “சூப்பரா இருக்கு. மூணு வேளையும் சுடச்சுட. ஆனா எல்லாம் இனிப்பா இருக்கு. சாம்பார், இரசம் எல்லாம் இனிக்குது” “இப்ப ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேக்கா போட்டுட்டாங்களா?” “சேக்கான்னா?” “ராசி ஆயிட்டாங்களா?” “அப்பப்ப ஃப்ரெண்ட்ஸ். அப்பப்ப எனிமீஸ்”
சில வாரங்கள் போகமுடியவில்லை. விஷ்ணுவே எனக்கு ஃபோன் செய்தான். நான் மீண்டும் மடத்திற்குப் போனேன். விஷ்ணு மிகவும் சந்தோஷமாய் இருந்தான். ஆச்சார் காலில் விழும்போது அபிவாதயே சொன்னான். சாப்பிட உட்காரும்போது சுற்றிக் கட்டினான். சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்கும்போது ஸ்லோகம் சொன்னான். காயத்ரி மந்திரம் சொன்னான். எச்சி சாப்பிடமாட்டேன் என்றான். சூழலுக்குள் வாழப்பழகிக்கொண்டுவிட்டான் என்று புரிந்தது. நிறைய நண்பர்களுடன் பேசினான். எல்லாரிடமும் மாமா என்று அறிமுகம் செய்துவைத்தான். இவருக்குத் தெரியாததே கிடையாது என்றான். “உன்னோட பெஸ்ட் ஃபிரண்ட் யாருடா?” “அவ இங்க இல்லை” “அவளா?” “ஆமாம்.. வாங்க காட்றேன்”
மடத்திற்கு வெளியே செல்லும் சாலை நீண்டு போய் வலது பக்கம் திரும்பியது. அதன் ஓரத்தில் ஒரு பள்ளி இருந்தது. “அது கவர்மெண்ட் ஸ்கூல்தான?” அதன் பின் வாசல் வழியே அழைத்துச் சென்றான். மதிய உணவிற்காக சமைத்துக்கொண்டிருந்தார்கள். இவனைப் பார்த்ததும் ஒரு சின்ன பெண் ஓடி வந்தது. “இவதான் செல்வி. என் பெஸ்ட் ஃப்ரெண்ட்” என்றான். “உங்க அம்மா எங்க இருக்காங்க?” “அதோ சமைக்கிறாங்களோ அவங்கதான்” “அப்படியா. எப்பவும் நல்ல ஃபிரண்ட்ஸா இருக்கணும்” “சரி அங்கிள்” விஷ்ணு “அப்றம் வர்றேன்” என்று அவளிடம் சொல்லிவிட்டு வந்தான். “எப்படிடா இவளை ஃபிரண்ட் பிடிச்ச?” “இவ எங்க மடத்துக்குப் பக்கத்துல இருக்கிற ஸ்கூல்லதான் படிக்கிறா. சைக்கிள் ஓட்டிக்கிட்டு இருக்கும்போது கீழ விழுந்துட்டா. நாந்தான் ஹெல்ப் பண்ணேன். அப்படியே ஃபிரண்ட்ஸ் ஆயிட்டோ ம்” “சரி மாமா கிளம்பறேன். நீ ஒழுங்கா படி” “அடுத்த தடவை வரும்போது அத்தையைக் கூட்டிக்கிட்டு வா. நா செல்வியைக் காட்டணும்” “சரி.”
பஸ்ஸில் வரும்போது நினைவுகள் முழுதும் எங்கெங்கோ சிறகிட்டுப் பறந்தன. மிகவும் நிறைவாக உணர்ந்தேன். வீட்டிற்கு வந்ததும், எப்போது எப்படி முடியப்போகிறது என்ற முடிவறியாத ஒரு புனைவை ஆரம்பித்தேன். இங்கேயே இக்கதை முடிகிறது அல்லது தொடங்குகிறது.
நான்கடி உயரம் உடைய மஞ்சள் நிறச் சுற்றுச் சுவர் நீண்டு கொண்டே செல்லும். அதன் முடிவில் கரி அப்பிய அந்தச் சமையலறை இருக்கும். எப்போது அங்கிருந்துதான் பேசிக்கொண்டிருப்பார்கள் அவர்கள் இருவரும். அவனுக்கு வயது 13 ஆகப்போகிறது. அவளுக்கு வயது 12 ஆகிறது. அவன் உயரத்தை அவள் கரிக்கோடால் அந்தச் சமையலறையின் சுவரில் வரைந்திருந்தாள். அதற்குச் சற்று கீழே அவளின் உயரத்தை அவன் அளந்திருந்தான். அணில்கள் உள்ளே வந்து கிழே சிதறிக் கிடக்கும் சில பருக்கைகளையோ தானியங்களையோ கொறித்துக்கொண்டு அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டுச் செல்லும். முதலில் அணில்கள் உள்ளே வந்த போது அவன் மிகப் பதறினான். அவள் அதைப் பார்த்து இரசித்து வெகுவாய்ச் சிரித்தாள்.
“அணிலுக்கு போய் பயப்படுறியே”
அவன் பேசவில்லை. அவனைப் பொறுத்தவரை அவன் பேச அவளும் அவள் குடும்பமும் தகுதியற்றது. அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் விலகிச் சென்றான். இப்போதெல்லாம் அப்படியில்லை. அவன் அங்கு வந்து அவளுடன் பேசிக்கொண்டிருப்பதை மற்றவர்கள் யாரும் பார்க்கக்கூடாது என்றுதான் அதிகம் பயந்துகொண்டிருந்தான். அங்கு வராமல், அவளைப் பார்க்காமல் அவனால் இருக்கமுடியாது என்பது அவனுக்குத் தெரியும். யாருமில்லாமல் அவள் மட்டும் எந்த நேரத்தில் தனியாக இருப்பாள் என்பதை அவன் நன்கு அறிந்து வைத்திருந்தான்.
“என்ன என்னயவே முறைச்சிப் பார்த்துக்கிட்டு இருக்க?”
“ஒண்ணுமில்ல. சும்மாத்தான்….. நீ கூடத்தான் என்னயவே பாத்துக்கிட்டு இருக்க”
“ஏன் பாத்தா என்னவாம். எவ்வளவு செகப்பா இருக்க தெரியுமா நீயி?”
“அவ்ளோ செகப்பா? இருக்கும். அம்மா கூட அடிக்கடிச் சொல்லுவாங்க”
அம்மா என்று சொல்லவும் அவன் பேச்சு தடைபட்டது. அவள் அவனைச் “சொல்லு” என்றாள்.
“அம்மா கூடச் சொல்லுவாங்க. ஆனா நீ கருப்பு. நாங்க ஸ்கூல்ல படிக்கும்போது கருப்பா இருக்கிற பொண்ணுங்களை கருப்பிம்போம்”
ஸ்கூல் என்று சொல்லும்போது அவன் கொஞ்சம் உடைந்தான்.
“அப்போ நானும் கருப்பியா? ஒனக்கு ரொம்பத்தான் வாய்”
“கருப்பா இருந்தாலும் நல்லா இருக்க. நாந்தான் செகப்பாயிட்டேன். ஆம்பளப் பசங்க கருப்பா இருந்தாத்தான் அழகுன்னு அக்கா சொல்லுவா”
அக்கா என்னும்போதும் கொஞ்சம் உடைந்தான்.
“எங்க வூட்ல எல்லாரையும் கருப்பா பாத்து பாத்து உன்னைப் பாக்கும்போது எனக்கு ஆச்சரியமா இருக்கு”
சமையலறைக்குள்ளிருந்த சிறிய மேடொன்றில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். அந்த மேடு சமையலறையை இரண்டாகப் பிரித்தது. அவள் இரண்டாம் அறையின் ஒரு மூலையில் சாய்ந்து நின்ற படி பேசிக் கொண்டிருந்தாள். கைகளால் கழுத்திலிருந்த பாசியை உருட்டிக்கொண்டிருந்தாள். வெளியிலிருந்து உள்நோக்கி வேகமாகக் காற்றடித்தது. ஓரத்தில் எரிந்துகொண்டிருந்த அடுப்பு காற்றால் உக்கிரமாகி சத்தத்துடன் எரிந்தது. காற்றில் அவன் அணிந்திருந்த பஞ்ச கச்சம் சிறிது விலகி அவனது தொடை பளீர் என்று தெரிந்தது. அவள் அவன் தொடையையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் கொஞ்சம் வெட்கமடைந்தான். விலகியிருந்த கச்சத்தை சரி செய்துகொண்டான்.
அவள், “தொடை ரொம்ப செகப்பு” என்று சொல்லிச் சிரித்தாள். அவன் எழுந்து அவளருகே சென்றான். அவள் சிரிப்பை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். சட்டென அவளை நெருங்கி முத்தமிட்டு, அவளைக் கட்டிக்கொண்டான். அவளும் அவனை இறுக்கிக் கட்டிக்கொண்டாள். அவன் முதுகில் கிடந்த பூணூலை கைகளில் சுற்றிக்கொண்டு இறுக்கினாள். அவன் கையிலும் மார்பிலும் இட்டுக்கொண்டிருந்த கோபிச்சந்தனம் வேர்வையில் கரைந்து வழிந்தது.
எப்போதும்போல் உள்ளே வந்த அணில், அக்கம் பக்கம் பார்த்துவிட்டு சட்டென்று வெளியில் தாவி, புகை படிந்திருந்த மஞ்சள் சுவரில் ஏறி ஓடியது.
திறந்திருக்கும் ஜன்னலோடு சில மணித்துளிகள் – கவிதை
நீண்ட நெடுவனமாய்
மாறிவிட்ட நிலத்தில்
நான் நடந்துகொண்டிருந்தபோது
பூ கொண்டுவந்து கொடுத்தாள்
ஒரு சிறுமி
நேற்று காலையில்
சாலையைக் கடக்கும்போது
அடிபட்ட நாய்க்குட்டி
துடிதுடித்துக்கொண்டிருந்தது;
அதன் இரத்தத் துளிகளை
அப்பூவில் கண்டேன்
பழம் வேண்டுமா என்றாள் ஒரு பாட்டி.
இன்று காலையில்
வீட்டின் முன்பு
வெகு நேரம்
பிச்சைக்காகக் காத்துக்கொண்டிருந்தவளின்
சாயலில் இருந்தாள் அவள்.
தேன் கொண்டுவந்தவனின்
முகத்தைப் பார்க்க நான் மறுத்தேன்
அவன் என்னைக் கேலி செய்யத் தொடங்கினான்
நடந்துகொண்டிருந்த என் கால்கள்
ஓடத் துவங்கின.
நீண்ட நெடும் வனம்
முடியவே இல்லை.
பெரும் மூச்சிரைப்புக்கு நடுவே
தேன் கொண்டு வந்தவன்
கத்தத் துவங்கும்போது
அறைந்து சாத்தினேன்
என் ஜன்னல்களை.