Archive for ஹரன் பிரசன்னா

வேர்ப்பற்று – ஆவதும் ஆக்கப்படுவதும்

முற்போக்கு பேசும் பிராமணர்கள் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். ஒருவகையில் பிராமணர்கள் என்ன செய்தாலும் அது நடிப்பாகவே இங்கு கருதப்படுகிறது எனலாம். எவ்வளவு உண்மையாக முற்போக்கு பேசி, எத்தனை தூரத்தில் தன்னை ஜாதியில் இருந்து பிரித்து வைத்துக்கொண்டாலும், பிறப்பால் ஒருவன் பிராமணனனாக இருக்கும்பட்சத்தில், அவன் எப்போதும் இச்சமூகத்தால் பூணூலாலேயே பிணைக்கப்பட்டிருக்கிறான். நிகழ்காலத்தில் ஞாநியிலிருந்து கமல்ஹாசன் வரை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லமுடியும். ஒருவகையில் ஞாநி, கமல்ஹாசன் போன்றவர்கள் பிராமணர்களாலும், பிராமணர்களின் எதிர்த்தர்ப்பாலும் ஏற்கப்படவும் புறக்கணிக்கப்படவும் ஆளாகிறார்கள். இவர்களைப் போன்றவர்கள் சொல்லும் கருத்துகளை வைத்து அவர்கள் மீது தம் எண்ணத்தை ஏற்றுவதை இச்சமூகம் செய்துகொண்டே இருக்கிறது. கருணாநிதிக்கு வயதாகிவிட்டதற்காக ஞாநியும் தசாவதாரம் படத்திற்காக கமலும் பல இடங்களில் பிராமணர்களாக்கப்பட்டார்கள். இதற்கான எதிர்க்கருத்தும் பதிவு செய்யப்பட்டதும் உண்மையே. இன்றைய இந்நிலையை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எழுதியிருக்கிறார் இந்திரா பார்த்தசாரதி.

திராவிடர் கழகம் முன்னிறுத்தியது போல பிராமணர்கள் அனைவரும் எத்தர்கள் அல்ல. அதேபோல் பிராமண ஆதரவாளர்கள் பிராமணர்களை முன்னிறுத்துவதுபோல் அவர்கள் அப்பாவியுமல்ல. இதையே நாவலின் எல்லா இடங்களிலும் கதாபாத்திரங்கள் வழியே பேசியபடியே செல்கிறார் இபா. இபா பிறப்பால் ஒரு பிராமணர் என்பதால் அவரை விடுத்து, நாவலை வெறும் கற்பனையாகப் பார்க்கமுடிவதில்லை. அதனால் கதாபாத்திரங்கள் சொல்லும் அனைத்து வசனங்களையும் இபாவின் விவாதமாகவே என்னால் எடுத்துக்கொள்ளமுடிகிறது. எந்த ஒரு சமூகத்தையும் பிரதிபலிக்கும் மனிதர்களைப் போலவே பிராமண சமூகத்தையும் அம்மக்கள் பிரதிபலிக்கிறார்கள். பிராமணன் ஏமாற்றுகிறான் என்பது பிரதானமாகிறது என்பதைவிட, எச்சமூகத்திலும் நிலவும் பல்வேறு வகைப்பட்ட மனிதர்கள் போலவே பிராமண சமூகத்திலும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். இதுவே கழகக்காரர்களால் பிராமணியம் என்றழைக்கப்படுகிறது. எப்போதெல்லாம் நாம் மனதில் பட்டதைச் சொல்லத் துவங்குகிறோமோ அப்போது அதற்கு பிராமணியச் சாயமும், ஹிந்த்துவச் சாயமும் பூசப்படுவது புதியதல்ல. இதிலிருந்து இன்றைய நிலையில் விடுபடுவது கடினம். ஒரு கருத்தைச் சொல்லிவிட்டு, உங்கள் மேல் சாயம் பூசப்படுமுன் நீங்கள் அதற்கெதிரான கருத்தைச் சொல்லியே தீரவேண்டும் என்கிற ஒரு கட்டாய நிலையிலேயே நிகழ் சமூக நிலை இருக்கிறது. இந்தக் கட்டாயத்தை மீறும்போது வேறு வழியே இன்றி நீங்கள் என்னவாக இருக்கப் பிறர் தீர்மானிக்கிறார்களோ அவராக மாறியே தீரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுப்போகிறது. இதோடு சேர்ந்து துரத்தும் வாழ்தல் தொடர்பான அவசியங்கள். வேறு வழியில்லாமல் உங்கள் மனதோடு தொடர்பே இல்லாத சில முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கிறது. இது போன்றவர்கள் ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். வேறு வழியின்றி, வாழ்தல் பொருட்டு ஒருவர் எடுக்கும் முடிவின் மீதான அவரது பங்கைவிட அவர்கள் மேல் அவர்கள் சார்ந்த சமூகம் செலுத்தும் பங்கு அதிகம் எனலாம். வேர்ப்பற்றின் கதாநாயகன் இத்தகைய ஒரு முடிவுக்குத் தள்ளப்படுகிறான். வாழ்தல்வேண்டி அவன் பூணூலானாக வேண்டியிருக்கிறது.

வேர்ப்பற்று நாவல் 1946ல் இருந்து 1952 வரை, ஓர் ஆசார பிராமணக் குடும்பத்தில் பிறந்த, சாதிகளை மறுக்கும் ஓர் இளைஞனை மையமாக வைத்துச் சொல்லப்படுகிறது.

ஆசாரமான குடும்பத்தின் பிராமண வாழ்க்கையும், அக்குடும்பத்தில் உழலும் பிராமணக் குழந்தைகள் எதிர்கொள்ளும் வெளி உலகமும் ஒன்றோடு ஒன்று சிறிதும் தொடர்பில்லாதவை. அதனால் தன்னை வெளி உலகத்தில் ஒரு வினோத மனிதனாக, பிராமணனாகப் பிறந்த ஒரு இளைஞன் நினைப்பது தவிர்க்கமுடியாதது. இதைத் தொடர்ந்து அவன் சிந்திக்கத் தொடங்கினால் அவனுக்கு பைத்தியம் பிடிக்கலாம் அல்லது மார்க்ஸிடம் சரணைடையலாம். இரண்டாவது விஷயம், வேர்ப்பற்றின் கேசவனுக்கு நிகழ்கிறது. பிராமணன் என்கிற சாதியிலோ, அது சார்ந்த சின்னங்களிலோ சற்றும் நம்பிக்கையில்லாத கேசவன் தன்னை கம்யூனிஸ்டாக அறிகிறான். தன் தந்தையை மீறி, தன் சாதிக் கட்டுப்பாடுகளை மீறி ஒரு கம்யூனிஸ்ட்டாக மாறுகிறான். புத்தகங்களில் இருக்கும் சித்தாந்தங்களின் வழியாக அவன் கண்டடையும் கம்யூனிஸம் அவனைக் கிறங்கடிக்கிறது. ஒரு கம்யூனிஸ்டாக கல்லூரிக்குள் நுழையும் கேசவன், கல்லூரியில் நடக்கும் கழக – கம்யூனிஸ மோதலுக்குப் பின் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறான். மன்னிப்பு கேட்டால் மீண்டும் கல்லூரியில் சேரலாம் என்கிற நிலையில், அவன் மன்னிப்பு கேட்பதை கேவலமாக நினைக்கிறான். ஆனால் அவனுடன் சேர்ந்து போரிட்ட கம்யூனிஸ்ட்டுகள் மன்னிப்பு கேட்டுவிட்டு கல்லூரியில் சேர்ந்துவிட, அவனுக்கு கம்யூனிஸத்தின் மீதிருக்கும் அபரிமித ஈர்ப்பு விலகுகிறது. அதோடு காந்தியின் மரணம் அவனுக்குள் தரும் சலனங்களைக் கண்டு அவனே அரண்டு போகிறான். காந்தியின் மீது தனக்கிருந்த வெறுப்பின் கீழே, மிக அடியாழத்தில் குடிகொண்டிருந்த காந்தியின் பிம்பம் விஸ்வரூபம் எடுக்கும்போது அவன் காந்தியைப் புதியதாகக் கண்டடைகிறான். அவனது கம்யூன் நண்பர்கள் அவனுக்கு, ‘நாம காந்திய கெட்டவர்னு சொல்லலே, நல்லவர்னுதான் சொல்றோம்’ என்று புதுவிளக்கம் கொடுக்கிறார்கள். தொடர்ந்து கம்யூனிஸ்ட்டாகவே வலம் வரும் கேசவனின் உலகம், கல்லூரியில் நடக்கும் கலகத்திற்குப் பின் தடம் புரள்கிறது.

எல்லா பிராமண இளைஞர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினையின் வழியிலேயே செல்லும் கேசவன் அடுத்த எதிர்நிலையாக ஆன்மிகத்தில் செல்ல முடிவெடுத்து, துறவறம் மேற்கொள்ள சிந்திக்கிறான். ஒரு பிராமண இளைஞன் தவிர்க்கவே முடியாத இன்னொரு புள்ளி இது என்பதை இபா மிகத் தெளிவாக, மிக இயல்பாகச் சொல்லிச் செல்வது நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. துறவறம் கொள்வது கல்லூரியில் இடம்பெறுவது போன்றதல்ல என்பது அவனுக்கு விளங்குகிறது. வெளியில் தன்னை பிராமண துவேஷியாகக் காட்டிக்கொள்ளும் ஒரு பெரியாரிஸ்ட், கேசவனுக்கு வேலை வாங்கிக் கொடுக்கிறார். ஒன்று கேசவன் பிராமணனாக இருக்கவேண்டும், இல்லையென்றால் கலப்பு மணம் செய்துகொண்டு கிறிஸ்துவனாகவேண்டும் என்கிற நிலை வரும்போது, பிராமணனாக இருப்பதே எளிதானது என்கிற முடிவுக்கு வரும் கேசவன் பிராமணனாக்கப்படுகிறான். அவனது அறுபதாவது வயதில் திருச்சூர்ணத்துடனும், பஞ்சகச்சத்துடனேயுமே அவன் உலவேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது.

நாவலின் போக்கில், கதாபாத்திரங்களின் பேச்சில் பல்வேறு வரலாறு தொடர்பான விஷயங்கள் அலசப்படுகின்றன. குறிப்பாக 1947ல் நிலவிய கழக எழுச்சியும், கம்யூனிஸ ஆதரவும் அதற்கு உண்டான போட்டியும். கழகங்களும் கம்யூனிஸமும் கல்லூரிகளில் அப்போதிருந்தே வன்முறையையே முன்வைத்திருக்கின்றன போலும். இன்றுவரை அரசியலில்லாத கல்லூரி தேர்தல்களை நாம் பார்த்துவிடமுடியாது. வீரிய விதை.

அதேபோல் நாவல் முழுவதும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் ஒரு விஷயம் பிராமணனுக்குத் தமிழ் எதற்கு என்பது. கேசவனைக் காணும் ஒவ்வொருவரும், பிராமணர், பிராமண ஆதரவாளர்கள், பிராமண எதிர்ப்பாளர்கள் என்கிற பேதமில்லாமல், அவன் தமிழ் படிப்பதற்கு கேலி செய்கிறார்கள் அல்லது உபதேசிக்கிறார்கள். அதில் பிராமண எதிர்ப்பாளர் கேட்கும் கேள்வி ருசிகரமானது, “இதையும் நீங்க எடுத்துக்கிட்டா நாங்க என்னதாண்டா பண்றது?” தடையை எல்லாம் மீறி தமிழ் படிக்கும் கேசவன் வேலைக்காக வேறு வழியே இன்றி பிராமணனாக மாறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுப் போகிறது. தமிழோ சமிஸ்கிரதமோ அல்ல, கடைசிவரை வரப்போவது ஜாதியே என்கிற உண்மை அவனுக்கு முகத்தில் அறைகிறது.

நாவலில் சில இடங்களில் மட்டுமே தென்பட்டாலும், இபாவின் நகைச்சுவை உணர்வு அசரவைக்கிறது. எங்கெல்ஸ் பற்றியும் மார்க்ஸ் பற்றியும் கேசவன் சொல்லும்போது முருகேசன் (கேசவனின் கம்யூன் தோழன்) என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறும் இடம் (பக் 62), கழகக்காரர்கள் போல அடுக்குமொழியில் கவிதை எழுதும் ஒரு கம்யூனிஸ்ட்டைச் சுற்றிய விவாதங்கள் (பக். 73), நேரு, ராஜாஜி உள்ளிட்டோர்கள் பேசிய ஆங்கிலத்தால்தான் சுதந்திரம் கிடைத்ததோ என்பது (பக். 81), ஒரு பெரிய கதையில் தமிழாசிரியர் ஒற்றுப் பிழைகளைக் கண்டுபிடிப்பது, கதையில் கம்பனைப் பற்றிக் குறிப்புகள் இல்லை என்று வருத்தப்படுவது (பக். 97), கேசவனின் அப்பா மகானாக்கப்படும் தருணங்கள், இப்படி பல இடங்கள்.

பிராமண இளைஞனின் கதையில் பிராமணர்களைப் பற்றி எல்லா வகையிலும் யோசித்திருக்கிறார் இபா. அவர் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களிடமிருந்து இதைக் கொண்டிருந்திருக்கவேண்டும். கேசவனின் தந்தையின் கதாபாத்திரம் ஒரு கட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கிறது. தன் வீட்டில் வேலை பார்க்கும் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை கையைப் பிடித்து இழுக்கும் ஒரு பிராமணருக்கு எதிராகப் பேசாமல் எல்லா பிராமணர்களும் அமைதியாக இருக்கும்போது, கேசவனின் அப்பா பிராமணனாக இருப்பதைவிட முக்கியம் நேர்மையானவனாக இருப்பது என்று முடிவெடுக்கிறார். இச்சம்பத்தில்தான் தன் தந்தையை தானே கண்டடைகிறான் கேசவன். ஒரு கம்யூனிஸ்ட்டுக்கான சிந்தனையை ஓர் ஆசார பிராமணரிடத்தில் காணும் அவன் அதற்குப் பின் தன் தந்தையைப் பற்றிய பெருமையான தருணங்களையே தொடர்ந்து தரிசிக்கிறான். கேசவனின் பெரியப்பா பல்வேறு பெண்களிடம் தொடர்பு வைத்துக்கொண்டு சொத்தை இழந்து திரும்ப வருகிறார். அதற்குப் பின் அவர் கொள்ளும் நிலையில் பெரும் ஆன்மிக அமைதி காணக்கிடைக்கிறது. இத்தகைய பெரியப்பாவை வைத்து காசு பார்க்க அவர் குடும்பத்தவர்கள் முயலும்போது கேசவனின் தந்தை அப்போதும் நேர்மையே முக்கியம் என முடிவெடுக்கிறார். இப்படி ஒரு சமூகத்தில் நிலவும் எல்லாவிதமான மனிதர்களையும் வெளிப்படுத்துவதில் முழுவெற்றி காண்கிறார் இபா.

இக்கதையில் வரும் இடறல்கள் எனச் சிலவற்றைச் சொல்லலாம். முதல் விஷயம், இது ஒரு நாவலுக்கான கட்டமைப்பைப் பெறுவதைவிட, தொடருக்கான மனோநிலையிலேயே எழுதப்பட்டுள்ளது என்பது. திடீரென மாறும் காட்சிகளுக்குள் தொடர்பு இல்லாமல் போவது முதல் சறுக்கல். ஒரு கதாபாத்திரம் வரும்போது அதைப்பற்றிய இரண்டு வரிகள் தந்தே தீரவேண்டிய கட்டாயம் தொடர்களுக்கு ஏற்படுவதுண்டு. இதை இபாவால் சமாளிக்கமுடியவில்லை. அடுத்தது கதையில் அரசியல் நிகழ்ச்சிகள் உக்கிரம் கொள்ளும் சமயத்தில் அது தடாரெனத் தடம் விலகி, கிருஷ்ணன் (கேசவனின் கல்லூரி நண்பன்) மற்றும் கேசவனின் ஈகோவில் முட்டி நிற்பது. இதிலிருந்தும் விலகும் கதை கேசவனின் பெரியப்பா வழியாக ஆன்மிக வழிக்குச் செல்கிறது. இதையாவது, கேசவன் கடைசியாக ஆன்மிக வழியை அடைவதற்கான முகாந்திரம் என்ற அளவில் ஏற்கலாம். கேசவனின் பெரியப்பாவும் கேசவனும் பேசிக்கொள்ளும் விஷயங்கள் அதிகமாக பாலகுமாரனை நினைவுபடுத்துகின்றன. வெகுஜன எழுத்தாளர்களாக அறியப்படுபவர்களில் (மாலன், ஆதவன், சுப்ரமண்ய ராஜு போன்றோர்) பாலகுமாரனே சிறந்தவர் என்பது என் எண்ணம். இபாவின் பாலகுமாரத்தனமான வசனங்களைப் படிக்கும்போது, மீண்டும் பாலகுமாரனைப் படித்து, நாஸ்டால்ஜியாவை மீட்டெடுக்கலாம் என்று தோன்றிவிட்டது. :)அதேபோல் நாவலுக்கான முடிவு என்பது ஒருவித எதிர்பார்த்த முடிவு என்பது தெரிந்துவிடுகிறது. ஆனால் இன்றளவும் இது யதார்த்தமாக இருப்பதால், இம்முடிவைத் தவிர்க்கமுடியாததாகவும் எடுத்துக்கொள்ளலாம். என் பெயர் ராமசேஷன் நாவலின் முடிவு இத்தகைய தன்மை கொண்ட ஒன்று. அதாவது எதிர்பார்த்த ஒன்று; ஆனாலும் யதார்த்தமானது என்கிற அளவில்.

1994ல் எழுதப்பட்ட நாவல் இன்னும் நூறாண்டுகளுக்குப் பொருத்தமாக இருக்கப்போகிறது என்பதுதான் இதன் முக்கியத்துவம்.

வேர்ப்பற்று, நாவல், இந்திரா பார்த்தசாரதி, கிழக்கு பதிப்பகம், விலை: 120 ரூ.

Share

நான்கு கவிதைகள்

முற்று

நண்ப
உன் நீண்ட கடிதம்
என் முரண்களில்
நீ கொள்ளும் கோபம்,
என்னைப் பற்றி
நான் படிப்பது
சலிப்பானது என்றாலும்
வாய் பிளந்து நிற்கும்
முதலையை மிதிக்காமல்
இருக்க முடிந்திடுவதில்லை
நீண்ட வரிகளுக்குள்
சிக்கி மீளும்போது
கொலை பற்றிய எண்ணமும்
தற்கொலை பற்றிய எண்ணமும்.
என் கூடாரத்தின்
மூடிய போர்வையை
இழுத்துப் பார்க்காமல்
இருந்திருக்கலாம்.
என் ரசனை,
தேவையற்ற இடமொன்றில்
நீ வைத்திருந்த முற்றுப்புள்ளி.

முளை

நிழலின்றி நடக்கும்
மிருகமொன்றின்
கழுத்தைத் திருகத் திருக
பெரிதாகும் உடலும்
புதைத்து வைத்த
கோபக் குழியிலிருந்து
வெளி நீட்டித் தெரியும்
முள்மரத்தின் முளையொன்றும்
வாலாட்டித் திரிய
எள்ளல் சிரிப்போடு
கவிகிறது அன்றைய இரவு
தொடர்கனவின் காத்திருப்போடு.

என் மீது நிகழும் வன்முறை

யாருக்காகவோ
ஒலித்துக்கொண்டிருந்த
வானொலியிலிருந்து
சன்னதம் கொண்ட தேவதை
வெட்டியெடுத்த கையொன்றை
கையில் ஏந்தி
கண்கள் சிவக்க
தொட்டு எழுப்பினாள்
அதிகாலை
என் மீது இறங்கியது
வழியெங்கும்
ரத்தத் துளிகள்
சிதறிக் கிடக்க

வீட்டின் பாடல்

வனத்தைத் தொலைத்த
வீட்டிலிருந்து
வெளியேறிபடி இருக்கிறது
வீட்டின் பாடல்
சதா கேவல்களாகவும்
சீற்றங்களாகவும்
இரவுகளில்
வீடெங்கும் சன்னதம்
கொண்டலையும் மிருகமொன்று
பகலில் பறவையாகி
சாலைகளில் நத்தையாக
ஒடுங்கும்போது
வீட்டின் பாடலில்
உச்சம் கொள்கிறது
விலங்குகளின் பறவைகளின்
பூச்சிகளின் சேர்ந்திசை.

மேலே உள்ள கவிதைகள் ‘மணல் வீடு’ செப்-அக் 2008 இதழில் வெளியானவை. நன்றி: மணல் வீடு.

Share

பொம்மைகள் – கவிதை

ஆடும் பொம்மைக்கு
தான் சாவி கொடுக்கவில்லை என்றான் என் மகன்
பொம்மைக்கும் தனக்கும்
சம்மந்தமே இல்லை என்கிற பாவனையில் என் மனைவி
அம்மாவிடம் கேட்டால்
தான் அந்த பொம்மையை கண்டதே இல்லை என்பாள்
எப்போது நம் வீட்டிற்கு வந்தது என்று
எதிர்க்கேள்விகூட கேட்கலாம்
மூன்று பேரும் சத்தியம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள்.
அப்பா ஃபோட்டோவில் இருப்பதால்
அவரை கேள்விகள் கேட்க நியாயம் இல்லை.
நானே என்னைச் சந்தேகப்பட முடியாது.
மௌனச் சிரிப்புகளுக்கிடையில்
சத்தமெழுப்பி
ஆடும் பொம்மைகள் ஆடிக்கொண்டிருக்கின்றன.

Share

‘Power Cut’

இன்று தமிழ்நாடெங்கும் பல இடங்களில் அறிவிப்பே இல்லாமல், ஒரு நேர வரைமுறை இல்லாமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. (இதுபோல பலதடவை நடந்துகொண்டுதான் இருக்கிறது என்றாலும் இன்று ரொம்ப ஓவர்.)

ராயப்பேட்டை – 3 மணி நேரம்
ராமாபுரம் – 3 மணி நேரம்
தாம்பரம் – 2 மணி நேரம்
திருநெல்வேலி டவுண் – 4 மணி நேரம்
திருச்சி (கேகே நகர் பகுதிகள்) – 2 மணி நேரம்
திருச்சி (முத்தரசநல்லூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகள்) – 6 மணி நேரம்
மதுரை – 3 மணி நேரம்
தே. கல்லுப்பட்டி – 8 மணி நேரம்
நாகர்கோவில் – 3 மணி நேரம்

இன்னும் கோயமுத்தூர், தாராபுரம், ஈரோடெல்லாம் கேட்டால் தெரியும்.

நமது முதல்வருக்கு, ஜெயலலிதாவிற்குப் பதில் சொல்லவும், தோழர்களுடன் மல்லுக்கு நிற்கவும், யாரேனும் ஏதேனும் படங்கள் எடுத்து அதை வெளியிடும் விழாவிற்கு அழைத்தால் உடனே செல்லவும் நேரம் இருக்கிறது. கலைஞர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கேட்டறிந்து அதில் ஆலோசனை சொல்ல ஆசையும், தெம்பும் இருக்கிறது. ஆனால் ஆற்காடு வீராஸ்வாமி என்றொரு அமைச்சர் எதற்காக அமைச்சராக இருக்கிறார் என்பதோ, தமிழ்நாட்டில் மின்வெட்டு எவ்வளவு பெரிய தொல்லை தரும் விஷயமாக, எரிச்சல் தரும் விஷயமாக மாறி, பொதுமக்களை அவதிப்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதை அறிய மட்டும் நேரமில்லை. ஏதேனும் மேம்பாலம் திறந்தால் மின்சாரத்தைத் திருட, மின்சாரம் கிடைக்கிறது. ஆனால் வீட்டுக்கு மின்சாரம் இல்லை. ராமன் குடிகாரனா என்று ஆராய்ச்சி செய்ய, மண்டையை உடைத்துக்கொண்டு யோசித்துக் காரணங்கள் கண்டுபிடிக்க திறமை இருக்கிறது. ஆனால் மின்வெட்டைத் தவிர்த்து மக்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து ஆராய நேரமில்லை. ‘அவாள்’ பற்றிக் கவிதை எழுத நேரமிருக்கிறது. ஆனால் ஆதாரத் தேவையான மின்வெட்டைத் தவிர்ப்பது எப்படி என்று யோசிக்க நேரமில்லை.

இப்படிப்பட்ட முதல்வர் நம் பூர்வஜென்மப் பயன். வேறு வழியே இல்லை, நாமும் பவர் கட் செய்துவிடவேண்டியதுதான்.

Share

குசேலன் – பெண்களின் கிருஷ்ணன்?

படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலெல்லாம் நெளிய ஆரம்பித்துவிட்டேன். தொலைக்காட்சிகளில் வரும் மெகா சீரியல் போல ஆளாளுக்கு பேசும் வசனங்கள். ஒரு நல்ல கதையை கமர்ஷியலாக்குகிறேன் என்று அதீத தன்னம்பிக்கையில் (அகம்பாவத்தில்) கதையைக் கூறு போட்டு, ‘ஒரு சீன் பசுபதி சார், அடுத்த சீன் வடிவேலு சார்’ என்று யோசித்துவிட்டார் பி.வாசு. வடிவேலு வரும் காட்சிகள் மருந்துக்கும் சிரிப்பைத் தருவதில்லை. பசுபதியிடம் ‘சீரியஸ் கேரக்டர்’ என்று வாசு மிரட்டியிருப்பார் என நினைக்கிறேன். எப்போதும் ஒரு சோகத்தை வலிய வைத்துக்கொண்டு உயிரை எடுக்கிறார். ரஜினியின் என்ட்ரியின் போது 75 ஆண்டுகால சினிமாவிற்கு இப்பாடல் சமர்ப்பணம் என்று ஒரு வரியைப் போட்டு ஒரு பாட்டையும் போடுகிறார்கள். 75 ஆண்டுகால சினிமாவின் மீது வாசுவுக்கு என்ன கோபமோ, பழிதீர்த்துவிட்டார். இசை ‘சின்னப்பையன்’ என்பதை நிரூபித்துவிட்டார்.

வடிவேலு காட்சிகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக நீக்கிவிட்டு, ஒரு சின்ன கதையை அடிப்படையாக வைத்து, நேர்க்கோட்டுப் படமாக, உருப்படியாக எடுத்திருக்கலாம். அதற்குத் திறமை வேண்டும். வாசுவின் திறமை நாம் அறிந்ததே. திரைக்கதை என்றால் என்னவென்றே தெரியாது என்பதை கற்பூரம் அடித்து சத்தியம் செய்து, பணக்காரன், உழைப்பாளி, சாது, தாலாட்டு கேட்குதம்மா, கட்டுமரக்காரன் எனப் பல படங்களில் நிரூபித்தவர்தான் அவர். அதை மீண்டும் இன்னொருமுறை அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கிறார். படத்தில் அழுத்தமான காட்சியோ, அழுத்தமான வசனமோ, மனதைக் கொள்ளை கொள்ளும் நல்ல நடிப்போ எதுவும் கிடையாது. பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி முகங்களைக் காட்டிக்கொண்டு, ஆளாளுக்கு உளறித் திரிகிறார்கள். இதில் நரிக்குறவர் இனத்தைப் பெருமைப் படுத்துகிறேன் என்று படுத்தித் தள்ளிவிட்டார். ஆனால் ரஜினிக்கு ‘இதெல்லாம் போணிக்காகாது’ என்பது கூடவா தெரியாது?

அண்ணாமலை வெளிவரும் முன்பு ஒரு கூட்டத்தில் பேசிய ரஜினி, ‘அண்ணாமலை வெள்ளிவிழா படமாக அமையும். நஷ்டமானால், தயாரிப்பாளர்களுக்கு பணத்தைத் திருப்பித் தருகிறேன்’ என்று சொன்னார். அவர் சொன்னது போலவே அண்ணாமலை வெள்ளிவிழா படமாக அமைந்தது. குசேலன் படத்தின் வெளியீட்டுவிழாவில் இப்படம் 25 வாரங்கள் ஓடும் என்றார் ரஜினி. 25 வாரங்கள் ஓடுவதற்கு இந்தப் படத்தில் என்ன இருக்கிறது? திடீர் திடீரென்று பாடல்களும், சம்பந்தமில்லாத காட்சிகளும் என கத்தரித்துச் சேர்த்த பிட்டு படம் போலவே ஓடுகிறது குசேலன். மூன்று குழந்தைகள் மட்டுமே அமைதியாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் நன்றாக நடித்துவிடுவார்களோ என்கிற சந்தேகம் வந்ததோ என்னவோ இயக்குநருக்கு, அவர்கள் வரும் காட்சிகளை ஒரேடியாகக் குறைத்துவிட்டார்.

படத்தில் ரசிக்கத்தக்க காட்சிகள் இரண்டே இரண்டு. ஒன்று, ஆர். சுந்தரராஜன் ரஜினியைக் கேள்வி மேல் கேள்வி கேட்கும் வசனம். அடுத்து வடிவேலு ரஜினியைப் பார்த்தவுடன், ‘பார்த்துட்டேன்’ என உடலை வளைத்து ஹைபிட்ச்சில் அலறும் காட்சி. வேறெந்தக் காட்சிகளும் மனதில் கொஞ்சம் கூட ஒட்டுவதில்லை. பெரும் எரிச்சல் தரும் பாடல்களும், மட்டமான பின்னணி இசையும், சந்திரமுகி, அண்ணாமலை பார்ட் 2 என்று சொல்லி வாசு அடிக்கும் கொட்டங்களும் தாங்கமுடியாதவை. இதில் ‘தலைவா நயந்தாராவையே பார்க்கிறியே எங்களைப் பார்க்கமாட்டேன்கிறியே’ போன்ற வசனங்கள் எல்லாம் கண்ணில்படாமல் போகின்றன.

கடைசி 15 நிமிடங்கள் படம் செண்ட்டிமெண்டாக அமைந்து, படத்துக்கு வந்த எல்லாப் பெண்களையும் ஈர்த்துவிடுகிறது. தன் ஆரம்பகால படங்களில் நாம் பார்த்திருக்கும் ரஜினியின் எதார்த்தமான நடிப்பை இந்த 15 நிமிடங்களில் பார்க்கமுடியும். அசர வைக்கிறார். சின்ன இடத்தில்கூட எல்லை தாண்டாமல், சறுக்காமல், அவர் மேடையில் பேசும் விதமும், கண் கலங்கி கண்ணீர் விடும் இடமும் எல்லாரையுமே கவர்கிறது. கடைசி 15 நிமிடங்களால் மட்டும் வெள்ளிவிழா சாதனை புரிந்த ‘காதலுக்கு மரியாதை’, ‘பாரதி கண்ணம்மா’, ‘லவ் டுடே’, ‘சந்திரமுகி’ வரிசையில் இந்தப் படமும் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நாடகம் போன்ற ஒரு படம், க்ளைமாக்ஸில் பெண்களை ஈர்க்கும் படமாகிவிடுகிறது. இதில் அசந்துதான் ரஜினியும் 25 வாரங்கள் என்று சொல்லியிருக்கவேண்டும். பி.வாசுவின் திறமையை ஆணித்தரமாக நிரூபித்திருக்கும் இப்படம், 25 வாரம் ஓடிவிட்டால், தமிழ்நாடு என்னாகும்? அதற்கான வாய்ப்பிருக்கிறது என்பதுதான் சோகம் தரும் விஷயம்!

மதிப்பெண்கள்: 39/100

Share

கவிதைகள்

கனவு

நீண்ட நாளுக்குப் பின் தோட்டம்
மீண்டும் கனவில் வந்தது
தானகவே முளைத்திருந்த
பப்பாளி மரங்களின் கிளைகளில்
வெள்ளை வெள்ளையாகக் காய்ந்து கிடந்தது
காகத்தின் எச்சம்
சிறுவர்கள் எறிந்த பந்து
கண்டெடுக்கப்படாமல் அலைந்து
நிலைத்திருக்கவேண்டும், அதன்
உடலெங்கும் மண்ணாக
கரிய சுவரில்
நிழலில்லா கரும்பூனை
தோட்டத்தைப் பார்த்தபடி நடக்க
மண்வாசனையுடன் லேசான தூரலென
திசை மறக்கத் தொடங்கினேன்
கனவு கலையும் நேரம்
கை பிரிந்து செல்லும்
காற்றைப் பற்றிக் கவலையில்லை
எங்கேனும் சுற்றித் திரிந்து
மீண்டு ஏகும்
எனக்கான கனவைப் போல
எனக்கான காற்றும்.

-oOo-

மாயக் கண்ணாடி

லாயத்திலிருந்த சிவப்புக் குதிரை
என்னை வலப்பக்கம் செல்லச் சொன்னது
அங்கிருந்த ஆற்றில் கண்விழித்து நின்றபோது
குளித்துக்கொண்டிருந்த மீனொன்று
நீரில் மூழ்கச் சொன்னது
பாதாள உலகத்தில் படுத்துக்கிடந்த பாம்பு
மாயக் கதவொன்றைத் திறக்க
இரட்டைச் சாலைகள் விரிந்தன
சுமைதாங்கிக் கல்லில்
காத்துக்கொண்டிருந்த
அதி யௌவனப் பெண்ணொருத்தி
என் ரேகையைப் பார்த்து
தென்மேற்குத் திசை போகச் சொன்னாள்
அங்கே நான் தெய்வமென்றறியும்
சிலை ஒன்று காத்துக் கிடப்பதாக
வழியெங்கும் நமத்துக் கிடந்த கோரைப் புற்கள்
என் வழி தவறென்றன
மாயக் கண்ணாடியைக் கோபம் கொண்டு உடைத்தேன்
சிதறி விழுந்த கண்ணாடிகள்
ஆளுக்கொரு திசை சொல்லி நின்றன.

-oOo-

இரவுகளின் வரைபடம்

தினம் தினம் வரைந்துவைத்த
இரவுகளின் படங்களில்
வழியும் கருமையிருந்தது
தெருநாய்களின் ஊளையிருந்தது
கழட்டி வைக்கப்பட்ட கொலுசிருந்தது
எரியும் சிறு அகலும்
வியர்வையும் அலுப்பும்
தோல்வியும் வெற்றியும்
ஒன்று சேர்ந்து குழம்பிக் கிடந்த
காகிதம் இருந்தது
அழும் குழந்தையின் எரிச்சலைப் போல
விடிகிற வானமும் இருந்தது.

-oOo-

Share

சாகித்ய அகாடமி வழங்கும் குறும்பட விழா

குறும்பட விழா

29 ஜூலை 2008 முதல் 31 ஜூலை 2008 வரை

ஜூலை 29

இந்திரா கோஸ்வாமி – இயக்குநர் ஜானு பரூவா
ஜெயகாந்தன் – இயக்குநர் சா. கந்தசாமி
தகழி – இயக்குநர் எம்.டி. வாசுதேவன் நாயர்

ஜூலை 30

மகா சுவேதா தேவி – இயக்குநர் சந்தீப் ராய்
இந்திரா பார்த்தசாரதி – இயக்குநர் ரவி சுப்பிரமணியன்
ஐயப்ப பணிக்கர் – இயக்குநர் கே. ராஜகோபால்
யு.ஆர். அனந்த மூர்த்தி – இயக்குநர் கிருஷ்ண மாசதி

ஜூலை 31

வடகிழக்குப் பகுதிக் கவிதைகள் – இயக்குநர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா
கமலா தாஸ் – இயக்குநர் சுரேஷ் கோகிலி
சசி தேஷ் பாண்டே – இயக்குநர் சுரேஷ் கோகிலி
கோபாலகிருஷ்ண அடிகா – இயக்குநர் கிரிஷ் கர்னாட்

இடம்:

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை திரையரங்கம்,
அண்ணா மேம்பாலம் அருகில்,
604, அண்ணா சாலை, சென்னை – 6.

நேரம்:

மாலை 6.00 மணி முதல் 9 மணி வரை.

Share

தசாவதாரம் – ஒட்டாத முகங்கள்

இன்னும் விமர்சிக்க என்னவிருக்கிறது என்ற அளவிற்கு ஆளாளுக்கு விமர்சித்தாகிவிட்டது. தசாவதாரத்தைப் பார்த்துவிட்டு விமர்சிக்காதவர்களுக்கு வலைப்பதிவர்கள் சங்க அட்டை கிடைக்காது என்று கேள்விப்பட்டேன். தசாவதாரம் பற்றிய என் எண்ணங்களைச் சொல்லி, வலைப்பதிவாளர்கள் சங்கத்தில் என் பெயரை தக்க வைத்துக்க்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தவிர வேறு என்ன காரணம் இருந்திருக்கமுடியும் தசாவதாரம் பற்றிய எண்ணங்களைச் சொல்ல?

அடியேன் ரங்கராஜன் நம்பி என்கிற கமலின் கர்ஜனையில் நம்மை உள்வாங்கிக்கொள்ளும் படம், ரங்கநாதர் சிலை கடலுக்குள் வீசி எறியப்பட்டதும் தியேட்டரில் நம்மைத் துப்பிவிடுகிறது. மீண்டும் சுனாமியில் நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது. இந்த பத்து நிமிஷத்திற்காகத்தான் இவ்வளவு ஆர்பாட்டமுமா என்கிற எண்ணம் ஏற்பட்டுப்போகிறது. கல்லை மட்டும் கண்டால் கடவுள் கிடையாது என்கிற பொருளே அற்ற வாலியின் வரியில் பாடலும் அது படமாக்கப்பட்ட விதமும் அமர்க்களமாகத்தான் இருக்கிறது. சைவ மன்னன் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. வைணவக் கடவுளான ரங்கநாதர் இல்லை என்றே சொல்லுகிறான். அப்படியிருக்க ஏன் கல்லை மட்டும் கண்டால் கடவுள் கிடையாது ரங்கராஜன் நம்பி பாடுகிறார் எனத் தெரியவில்லை. கேயாஸ் தியரி என்று கமல் கதையளக்க கிராஃபிக்ஸ் பட்டாம்பூச்சி சிறகடித்துப் பறக்கிறது. உண்மையில் இந்த கேயாஸ் தியரிக்கும் ரங்கராஜன் நம்பியை மையமாக வைத்துச் சொல்லப்பட்டிருக்கும் சைவ வைணவ மோதலுக்கும் படத்திற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. கமல் ஆரம்பத்தில் பேசத் தொடங்கும்போது நாம் 12ஆம் நூற்றாண்டுக்குப் போகவேண்டிய தேவையுள்ளது என்று சொல்லி என்னவோ காரணம் சொல்கிறார். ஆனால் எனக்குத் தெரிந்தவரை இந்த சைவ வைணவ மோதல் படத்திற்கு அவசியமே இல்லாத ஒன்று. பிராமணக் காட்சிகளின்மேல் கமலுக்கிருக்கும் காதல் நாம் அறிந்ததே. தொடர்ந்து நாத்திகக் கருத்துகளைச் சொல்லி வரும் கமல், தொடர்ந்து பிராமணர்கள் தொடர்பான காட்சிகளைத் தன் படத்தில் காண்பிக்காமல் இருப்பதில்லை. தனக்குத் தேவையான விளம்பரங்களைப் பெற இதுபோன்ற காட்சிகளையும், தனக்கு முற்போக்கு முகம் தரும் கருத்துகளைப் படம் முழுக்க அள்ளி வீசியுமிருக்கும் கமலின் பேனா மறந்தும் இஸ்லாமிய, கிறிஸ்துவ மதம் பக்கம் திரும்பிடவில்லை. பேனா முனை முறிந்துவிடும் அபாயம் பற்றித் தெரிந்திருப்பதால், ‘இந்து மதமே அபயம்’ என்கிறார் கமல். ஸூடோ செக்யூலர்களின் தொடர் ஓட்டத்தில் கமலுக்கு இல்லாத இடமா, அன்போடு அழைத்து ஏற்றுக்கொள்கிறது ‘எவ்வளவு நல்லவண்டா’ மதம்.

கமலின் நடிப்பைப் பற்றியும் கமலின் கடும் உழைப்பைப் பற்றியும் சொல்லப் புதியதாக ஒன்றுமில்லை. அதே ஆர்வம், அதே அர்ப்பணிப்பு, அதே உழைப்பு. அசர வைக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்த முறை மேக்கப் கமலுக்கு ஒத்துழைக்க மறுத்திருப்பதுதான் ஆச்சரியம். தெலுங்கு பேசும் நாயுடுவும் புரட்சி செய்யும் தலித் கிறித்துவ போராளியும் கமலோடும் அதன் மேக்கப்போடும் ஒட்டிப்போவதுபோல் மற்ற வேஷங்கள் ஒட்ட மறுக்கின்றன. அவர் போட்டிருக்கும் ஐயங்கார் வேஷமும் எப்போதும்போல் ஒட்டிப்போகிறது, மேக்கப் இல்லாமலேயே. மொட்டைப் பாட்டியும் அவ்தார் சிங்கும் ஜார்ஜ் புஷ்ஷும் தங்கள் முகம் எப்போது பிய்ந்து விழுமோ என்கிற பயத்துடன் நடிப்பது போலவே இருக்கிறது. குரலில் வித்தியாசம் காண்பிக்கிறேன் என நினைத்துக்கொண்டு, சன் டிவி மூப்பனார் பேசிய தமிழுக்கே சப்-டைட்டில் போட்ட தேவையை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டார் கமல்.

உடல் மொழியைப் பொருத்த வரையில் பாட்டியின் குறுகலான உடலமைப்பை கடைசிவரை காப்பாற்றுவதில் கமல் ஜெயிக்கிறார். அதேபோல் தெலுங்கு நாயுடுவும் பூவரகனும் தங்கள் உடல்மொழியை சிறப்பாகவே வெளிப்படுத்துகிறார்கள். அவ்தார் சிங்கின் உடல்மொழியும் பேச்சும் செயற்கைத்தனமாக இருக்கிறது. இப்படி பத்துவேடங்களைப் பத்து பேர் செய்திருக்கிறார்கள் என்கிற எண்ணம்வர கமல் எடுத்துக்கொண்டிருக்கும் தீவிரமான உழைப்பு நிச்சயம் பாராட்டப்படவேண்டியதே. ஆனால் கதை? உலகம் சுற்றும் வாலிபன், குருவி என அதன் தொடர்ச்சியில் வந்திருக்கும் இன்னொரு அம்புலிமாமா கதை. ஒரு வணிகப்படத்திற்கு அம்புலிமாமா கதை போதுமானதே. எந்தவொரு படமும் பார்வையாளர்களையும் பங்கேற்பாளர்களாகச் செய்யும்போது வெற்றி பெறுகிறது. ஆனால் பெரும்பாலான வணிகப்படங்களில் இது சாத்தியமல்ல. ஆனால் அவை பார்வையாளர்களைப் பங்கேற்பாளர்களாக மாற்றாமல், பார்வையாளர்களாக வைத்துக்கொண்டு, படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரையில் வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவிடமால் கட்டிப்போடுவதில் பெரும் கவனம் கொள்கிறது. இதுவே கில்லி முதல் சிவாஜி வரையிலான வணிகப்படங்களின் முக்கிய நோக்கம். அந்த மூன்று மணி நேரத்தில் பார்வையாளர்களை லாஜிக் பற்றியோ படத்தில் தெரியும் சிறிய குறைகளைப் பற்றிப் பெரியதாக நினைக்கவோ நேரம் கொடுக்காமல், படத்தை செறிவாக அடைக்கப்பட்ட பண்டமாக மாற்றுவதில் தீவிர கவனம் கொள்கின்றன. இதைத் தவற விட்டிருக்கிறது தசாவதாரம். லாஜிக் ஓட்டையை அடிப்படையாக வைத்துக்கொள்வதில் தவறில்லை. ஆனால் அதன்மேல் கட்டப்படும் காட்சிகளில் லாஜிக் தவறில்லாமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியமானது. திரைக்கதை ஆசிரியராக இதில் பெரும் கோட்டை விட்டிருக்கிறார் கமல்.


அமெரிக்காவிலிருந்து வரும் வில்லன் கமலுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா சந்து பொந்துகளும் தெரிந்திருக்கிறது. அவர் பைக் ஓட்டுவதுபோல் தமிழ்நாட்டில் யாரும் பைக் ஓட்டமுடியாது. அப்படி ‘ஓட்டியிருக்கிறார்’ கமல். இந்த வில்லன் கமல் செய்யும் அக்கிரமங்களுக்குச் சற்றும் இளைத்ததல்ல, பகுத்தறிவு பேசிக்கொண்டு திரியும், அறிவியல் முனைவரான இன்னொரு கமல் செய்யும் ஓட்டுதல்கள். எப்படியும் கீழே விழும்போது அங்கே கார்கோ இருக்கப்போகிறது, அதன் கம்பி தட்டி மயக்கமாகப் போகிறோம் என்பதை முடிவு செய்தபின்பு ஏன் அத்தனை இழுவை அந்தக் கிருமியும் கமலும் கார்கோவில் ஏற எனத் தெரியவில்லை. மிக நீண்ட காட்சிகள் பொறுமையைச் சோதிக்கின்றன. கார்கோவிலிருந்து வரும் முனைவர் கமல் வசம் ஒரு ஐடி கார்டு கூட இருக்கக்கூடாது. ரா பிரிவின் உயரதிகாரி கிட்டத்தட்ட ஒரு லூஸு. இரண்டு நிமிடங்களில் போலிஸிடம் சொல்லியிருந்தால் தீர்ந்திருக்கவேண்டிய பிரச்சினையை திரைக்கதையாளர் கமல் பெருமாளுக்குச் சொல்லிவிடுகிறார். கலிகாலம் என்று பெருமாளும் ஓடுகிறார். உண்மையில் பைத்தியகாரப் பாட்டியாக வரும் கமல் செய்யும் பைத்தியக்காரத்தானங்களே மிக்குறைவு என்னுமளவிற்குப் பைத்தியக்காரத்தனங்கள் செய்கிறார்கள் மற்ற எல்லாரும். இருநூறு முகவரிகளில் சரியாகச் சிதம்பரம் போகிறார்கள் வில்லன் கமலும் மல்லிகா ஷெராவத்தும். ஒரு போலிஸ் தப்பித்து ஓடுகிறார். அவர் சென்று யாரிடமும் சொல்வதில்லை அறிவியலறிஞரான கமல்தான் நல்லவர் என்று. அவர் என்ன செய்துகொண்டிருந்தார்? யாருக்கும் தெரியாது. நட்டநடுத் தெருவில் மல்லிகா ஷெராவத்தைச் சுடுகிறார் வில்லன் கமல். ஆனால் போலிஸ் அறிவியலறிஞரை தீவிரவாதியாக அறிவிக்கிறது. மல்லிகா ஷெராவத் மார்பையும் இடுப்பையும் பிருஷ்டத்தையும் ஆட்டிவிட்டு, கடைசியில் தலையையும் ஆட்டிவிட்டுச் சாகிறார். இவரால் வேறெந்தப் பயன்களும் இல்லை, ஐந்து நிமிடங்கள் குஜாலான காட்சிகள் இருந்தது என்பதைத் தவிர. ஜெயப்பிரதாவைப் பற்றிச் சொல்ல அதிகமில்லை, கொடுமை என்பதைத் தவிர. அவ்தார் சிங் சீக்கிரம் செத்தால் நல்லது என்பதுபோல நடிக்கிறார். இந்தக் கொடுமைகளிலிருந்து நம்மையும் படத்தையும் கொஞ்சம் காப்பாற்றுகிறது நாயுடு பாத்திரம். அவர் தமிழே அழகு. மொபைல் ரிங்டோன் என்று தெரியாமல் பாட்டை ரசித்து ஆடுமிடமாகட்டும், எப்படி போலிஸ் துன்புறுத்துவார்கள் என்று லெக்சர் கொடுக்குமிடமாகட்டும் சிரிப்பை வரவழைக்கிறார். அதேபோல் தலித் இளைஞனாக வரும் கமலின் நடிப்பும் கொஞ்சம் ஆசுவாசம் தருகிறது. ஆனால் கதையமைப்பைப் பொருத்தவரை இக்கதாபாத்திரமும் அசாருதீன் மாதிரி வந்து யாருக்குமே புரியாமல் என்னவோ பேசும் அப்பாவி முஸ்லிமும் அவசியமே இல்லாத பாத்திரங்கள்.

அறிவியலறிஞர் கமலின் தந்தையின் பெயர் ராமசாமி நாயக்கர். இசைக் ‘கலைஞர்.’ இவை இரண்டும் போதாதா நாத்திகக் கருத்துகளைப் பேச? படம் முழுக்க நேரம் கிடைக்கும்போதெல்லாம் கமல் நாத்திகம் பரப்பித் தள்ளுகிறார். ஆனால் காட்சி அமைப்பைப் பார்த்தால் ஆத்திகத்தை ஆதரிக்கும் காட்சிகளாக வருகின்றன. ‘நான் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டேன்’ என்று சொன்ன மறுநிமிடமே ‘ஆனா நாளைக்கு என்ன நடக்கும்னு எனக்குத் தெரியாது’ என்று சொல்லிக் குழப்பும் ரஜினிக்கும் மேலாகக் குழப்புகிறது நாத்திகக் கருத்துகளும் ஆத்திகக் காட்சிகளும். கமல் எந்தப் பாலத்திலிருந்து எப்போது குதித்தாலும் எப்படியாவது ஒரு வண்டி வந்து அவரைக் காப்பாற்றிவிடுகிறது. எப்படி வண்டி வந்தது? அப்படி ஒரு வண்டியில் ஸ்ரீ ராமஜெயம் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் கமல் கடவுள் இருந்திருக்கலாம் என்பார். அந்தக் கல்லும் ஒரு கடவுள். அதுவும் சுனாமி வழியாக வந்து தன்னைக் கரைசேர்த்துக்கொண்ட கடவுள்.

பகுத்தறிவு பேசும் அறிவியலறிஞர் கமலுக்கு மூளை இல்லையோ என யோசிக்கவைக்கும் கிளைமாக்ஸ் வசனங்கள் கமலின் டாப் நகைச்சுவை. சுனாமியில் பத்தாயிரம் பேர் சாகிறார்கள். ஆனால் கிருமி பரவியிருந்தாலோ தமிழகமே, ஏன் இந்தியாவே இல்லாமல் போயிருந்திருக்கும். அப்படியானால் ஒரு பகுத்தறிவுவாதி எப்படி யோசிக்கவேண்டும்? நல்லவேளை சுனாமி வந்தது என்றுதான் யோசிக்கவேண்டும். ஆனால் அறிவியலறிஞர் கமலோ ராமசாமி நாயக்கரின் மகன். அவர் கேட்கிறார், பத்தாயிரம் பேர் செத்ததுதான் கடவுளோட செயலா என்று. அந்தப் பகுத்தறிவு நமக்கு வராது என்று ஏற்கெனவே புரிந்துவிட்டதால் அது பற்றிப் பேச ஒன்றுமில்லை என்பதும் தெரிந்துவிடுகிறது. பகுத்தறிவு அதோடு நிற்பதில்லை. ஒரு இஸ்லாமியர் சொல்கிறார், நாம இருநூறு பேர் மசூதிக்குள் இருந்ததால்தான் தப்பித்தோம் என்று. அப்போது அங்கே யாரும் கேள்விகள் எழுப்பவதில்லை, செத்த பத்தாயிரம் பேருக்கு என்ன பதில், அதுதான் அல்லாவின் கருணையா என்று. ஏனென்றால் பகுத்தறிவு பேசுபவராக வரும் கமல் பிறந்தது தமிழ்நாட்டில். அவர் எங்கு வேலைக்குச் சென்றாலும், என்ன டாக்டர் பட்டம் பெற்றாலும் அவருக்குத் தெரிவதென்னவோ தமிழகம் தந்த பகுத்தறிவு மட்டுமே. இந்து மதத்தை விமர்சிப்பது நடுநிலைமை, மற்றெந்த மதத்தையும் பாராட்டுவதும், விமர்சிக்காமல் இருப்பதும் முற்போக்கு என்பது கமலுக்கு மிக நன்றாகத் தெரிந்துவிட்டிருக்கிறது. அறிவியலறிஞர் கமலை நாயுடு விமர்சிக்கும்போது தேவையே இல்லாமல் கேட்கிறார், ‘நீ ஐஎஸ்ஐயா, அல் குவைதாவா’ என்று. என்னடாவென்று பார்த்தால், கடைசியில் ஒரு இஸ்லாமியரிடம் அதே கேள்வியைக் கேட்கவேண்டியிருக்கிறது. முதலில் ஒரு காட்சியில் இதைச் சொல்லாமல் கடைசியில் மட்டும் கேட்டுவைத்தால் வரும் எதிர்ப்பு எப்படியிருக்கும் என்பது கமலுக்குத் தெரியும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அரசியலில் இந்தப் பாகுபாடு கமலுக்கு இல்லை. உச்சகட்ட காட்சியில் கருணாநிதி வரப்போகிறார் என்றதுமே சுனாமியைப் பார்வையில் ஜெயலலிதா வந்துவிடுகிறார். ஏனென்றால் நிஜக்கமல் பிறந்ததும் தமிழ்நாடு என்பதால் அவருக்கு எப்படி இருக்கவேண்டும் என்று தெரிந்திருக்கிறது. இந்து மதத்தின் மீது வைக்கும் விமர்சன ‘தைரியம்’, அரசியலின் மீது கிடையாது. நல்லதுதான், இல்லையென்றால் அடுத்த ஆட்சியில் அடுத்த படம் வருமா என்பது யாருக்குத் தெரியும். ‘சண்டியரை’ ‘விருமாண்டியாக்கிய’வரிடம் மோத யாருக்குத் தைரியம் வரும்? மோதவேண்டுமென்றால் இருக்கிவே இருக்கிறது ஒரு ‘தமிழ்நாட்டு செக்யூலரின்’ வழி. பிறகென்ன கவலை?

வசனகர்த்தாவாக கமல் அதிகம் சொதப்பிய படம் இதுவாகத்தான் இருக்கும். ஒரு வசனம் என்பது அது பேசும் ஒரு கதாபாத்திரத்தை வடிவமைப்பது என்பதைக்கூடவா கமல் புரிந்துகொள்ளவில்லை? மிகவும் சீரியஸான கட்டங்களில் ஆளாளுக்கு கிரேஸித்தனமாக வசனம் பேசிக்கொண்டு திரிகிறார்கள். அறிவியலறிஞரில் தொடங்கி, லூஸு பாட்டியிலிருந்து, அவ்தார் சிங் வரை எல்லாரும் நாயுடு மாதிரியே பேசிக்கொண்டு திரிகிறார்கள். போதாதற்கு நேரம்கெட்ட நேரத்தில் ஜோக்கடிப்பதாக நினைத்துக்கொண்டு உளறிக்கொட்டும் நாகேஷும் கே.ஆர். விஜயாவும். இப்படி ஆளாளுக்குப் பேசும் வசனங்களில் படம் பல காட்சிகளில் கிரேஸி மோகன் நாடகம் போல ஆகிவிட்டது. இந்த சொதப்பலில் சில நல்ல வசனங்கள் நினைவுக்கு வராமலேயே போயிவிடுகின்றன. (‘உங்கள மாதிரி ஒரு தெலுங்கன் வந்து தமிழைக் காப்பாத்துவான் சார்’ – நான் ரசித்த வசனத்தில் ஒன்று.)

பின்னணி இசையில் பேரிசைச்சலே முதன்மை பெறுகிறது என்றாலும் மோசமில்லை. குறிப்பாக நாயுடு ‘தெலுங்கா’ என்று கேட்கும் காட்சியில் வரும் இசை. பாடலில் கல்லை மட்டும் கண்டால் பாடலும் முகுந்தா முகுந்தா பாடலும் நன்றாக இருக்கின்றன. முகுந்தா முகுந்தா பாடலில் தோல் பாவைக்கூத்து காட்டுகிறார் பிராமணரான அசின். எனக்குத் தெரிந்து எந்த பிராமணரும் தோல் பாவைக்கூத்து செய்வதில்லை. மண்டிகர் சாதியைச் சேர்ந்தவர்களே தோல் பாவைக்கூத்து செய்கிறார்கள்.

ஒளிப்பதிவின் குளுமை படம் முழுக்க வரும் கிராஃபிக்ஸில் காணாமல் போய் ஒருவித எரிச்சலே காணக் கிடைக்கிறது. நெட்டைக் கமல் வரும் பெரும்பாலான காட்சிகளில் அவர் தலை பாதி தெரிவதில்லை. நெட்டைக் கமலைப் பார்த்து பேசுவதாக நினைத்துக்கொண்டு ஆளாளுக்கு எங்கோ பார்த்துக்கொண்டு பேசுகிறார்கள். கிராஃபிக்ஸ் கோளாறு. அதிகம் செலவு செய்துவிட்டால் பிரம்மாண்டம் வந்துவிடாது என்பதற்கு குருவியும் தசாவதாரமும் உதாரணங்கள். சிவாஜி திரைப்படத்தின் பிரம்மாண்டம் அதன் செலவுகளில் மட்டுமில்லை, ஷங்கரின் திறமையில் உள்ளது.

பல லாஜிக் ஓட்டைகளுக்கு மத்தியில், நாத்திகப் பிரசாரத்திற்கு மத்தியில், ஒட்டாத மேக்கப்புகளூக்கு மத்தியில் கதையையும் சுவாரஸ்யமான காட்சிகளையும் கண்டுபிடிக்கவேண்டியிருக்கிறது. அசின் நன்றாக நடித்திருப்பதும், நாயுடு கொண்டு வரும் சிரிப்பும் இல்லாவிட்டால் படத்தை குப்பையாகச் சேர்த்திருந்திருக்கலாம். கமலின் உழைப்பை மட்டும் மனதில் கொண்டு, மாறுவேடப் போட்டி பார்ப்பது போல் பார்க்கலாம்.

கடைசியாக ஒரேயொரு சந்தேகம். ‘தசாவதாரம்’ என்பது தமிழ் கிடையாது. எப்படி இந்தப் படத்திற்கு வரிச்சலுகை தந்தார்கள்? சிவாஜி படம் வந்தபோது அதற்குப் பெயர்ச்சொல் என்கிற விளக்கம் தரப்பட்டது. இதற்கு என்ன விளக்கமோ? பேசாமல் தன்னைப் புகழும் எந்தவொரு நடிகரின் படத்திற்கும் வரிவிலக்கு தரலாம் என்று அரசு அறிவித்துவிடலாம். கேள்விகள் எழாது.

மதிப்பெண்கள்: 41/100

Share