Archive for ஹரன் பிரசன்னா

சுஜாதா – சில கணங்கள்

1997ல் TACல் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, அங்கிருந்த புத்தகசாலையில் இருந்த புத்தகங்களில் சுஜாதாவின் புத்தகங்களை ஒன்றுவிடாமல் வரிசையாக வாசிக்க ஆரம்பித்தேன். அப்போது தொடங்கிய சுஜாதா எழுத்தின் மீதான மோகம் இன்றுவரை அப்படியே தொடர்வதை நினைக்கும்போது, காலம் காலமாகத் தன் எழுத்தின் மூலம் வாசகர்களைக் கட்டிப்போட்ட அவரது அசாத்திய திறமை ஆச்சரியம் அளிக்கிறது. அந்த நேரத்தில் நான் தீவிரமாக வாசித்த பாலகுமாரனின் எழுத்துகள் அந்த இடத்திலேயே நின்றுபோனதையும் சுஜாதா என்னுடன் தொடர்ந்து வந்துவிட்டிருப்பதையும் நினைத்துப் பார்க்கிறேன். பல தலைமுறைகளுக்கான எழுத்தாளர் சுஜாதா. அம்பலம்.காமில் சுஜாதா அரட்டைக்கு வருகிறார் என்று தெரிந்தபோது நானும் அரட்டையில் கலந்துகொள்வேன். அப்போது நான் துபாயில் இருந்தேன். சனிக்கிழமை அங்கு விடுமுறை இல்லை. அதனால் என்று சனிக்கிழமை அரசு விடுமுறை வருகிறதோ அன்றுமட்டுமே அவருடன் அரட்டை செய்யமுடியும். அப்படியும் சில சனிக்கிழமைகள் அவருடன் அரட்டை அடித்திருக்கிறேன். நான் அரட்டை செய்த சமயங்களில் அரட்டை செம சூடாக இருந்ததுண்டு. ஆனால் எந்த விதமான கேள்விகளுக்கும் சுஜாதா மிக எளிமையான பதிலால் எளிதாக என் கேள்விகளைத் தாண்டிச் சென்றது நினைவிருக்கிறது. மரத்தடியில் ‘எழுத்தாளர்களைக் கேளுங்கள்’ என்கிற நிகழ்ச்சியை நடத்தியபோது, தேசிகன் மூலம் சுஜாதாவிடம் தொடர்புகொண்டோம். பொதுவாகவே இணையக் குழுமங்களின் மீதும், இணையத் தமிழின் மீதும் மதிப்பு இல்லாதவராக இருந்தார் சுஜாதா. ஆனாலும் மரத்தடியில் அவர் கேள்வி பதில் இடம் பெற வேண்டும் என்கிற எண்ணத்தில், விடுமுறைக்காக மஸ்கட் சென்றிருந்தபோது அங்கிருந்து தொலைபேசினேன். அப்போதுதான் அவருடன் அரட்டையிலும் பேசியிருந்தேன். தொலைபேசியில் அழைத்து, ‘சார் எப்படி இருக்கீங்க’ என்ற கேட்டபோது, ‘தேங்க்ஸ்’ என்றார். நான் பேசிய நான்கைந்து முறையும் எப்படி இருக்கீங்க என்ற கேள்விக்கு தேங்க்ஸ் என்றுதான் பதில் சொன்னார். மரத்தடி குழுமத்தின் மூலம் நடத்தப்படும் ‘எழுத்தாளரைக் கேளுங்கள்’ நிகழ்ச்சியில் அவர் பங்குகொள்ளவேண்டும் என்றபோது, ‘க்ரூப்ஸ்லல்லாம் அப்யூஸிவா எழுதுறாங்க. ஸோ வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார் ராகாகியில் நடந்த விஷயங்கள் அவருக்கு சலிப்பைத் தந்திருக்கவேண்டும். பின்னர் தேசிகன் மூலம் அணுகியதும் சரி என்று ஒப்புக்கொண்டார். ஆனால் சில தினங்களில் அவருக்கு கண்ணில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாகவும் உடல்நிலைக் குறைவு காரணமாகவும் அது சாத்தியமில்லாமல் ஆனது.

அடுத்தமுறை சுஜாதாவுடன் பேசியது ஆசி·ப்மீரானுடன் வசந்தபவன் ஹோட்டலில் சாப்பிடுக்கொண்டிருந்தபோது. அப்போது நாடோடித் தென்றல் படத்திலிருந்து ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. சில நாள்களுக்கு முன்பு துபாய் வந்திருந்த சுந்தர் நாடோடித் தென்றல் படம் சுஜாதாவின் ‘ரத்தம் ஒரே நிறம்’ நாவலைப் பின்னி எடுக்கப்பட்டிருந்தது என்று சொல்லியிருந்தார். நான் அதை ஆசி·பிடம் சொன்னேன். ஆசி·ப் இல்லவே இல்லை என்றார். நான் அந்த நாவலைத்தான் படம் எடுத்திருக்கிறார்கள் என்று சொல்லவும், அவர், ‘சுஜாதா நம்பர் உங்கிட்ட இருந்தா கேளுயா’ என்றார். நான் அவரது நம்பரைச் சொன்னேன். உடனே அவரது தொலைபேசியிலிருந்தே அழைத்துவிட்டார். சுஜாதாவுடன் என்ன பேசுவது என்று தெரியாமல், நேரடியாக ‘நாடோடித் தென்றல் ரத்தம் ஒரே நிறம் நாவலோட வடிவமா சார்’ என்று கேட்டேன். இல்லை என்றார். சரி சார் என்று சொல்லி வைத்துவிட்டேன். வேறெதுவும் பேசாதது மிகவும் கஷ்டமாக இருந்தது. இதைச் சொல்லி ஆசி·ப் நிறைய நாள் சிரித்துக்கொண்டிருந்தார். இப்போது யோசித்துப் பார்த்தால், சுஜாதா தன் எழுத்து மூலம் அவரது வாசகர்களை ஒரு நண்பனைப் போல் அடைந்திருக்கிறார் என்று புரிகிறது. அவரது தீவிர வாசகர்கள் எப்போதும் அவருடன் மானசீகமாகப் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். இல்லையென்றால் அப்படி சட்டென என்னால் சுஜாதாவை அழைத்திருக்கமுடியாது.

தேசிகன் மூலம் நண்பர்கள் சிலர் அவரைச் சந்தித்தோம். ஆறு மணிக்கு சரியாக உட்லேண்ஸ் டிரைவி இன் வந்த அவர் மிக இயல்பாக எல்லாருடனும் பேசினார். இப்படி சிலர் சேர்ந்து அவரை வறுத்தெடுக்கிறோமே என்று எல்லாருக்குமே தோன்றினாலும், விடாமல் அவருடன் பேசிக்கொண்டிருந்தோம். கமல், ரஜினி, சிறுகதை, தொடர்கதை, பிரபந்தம் என ஆளாளுக்குப் பல கேள்விகள் கேட்டோம். எல்லாவற்றிற்கும் பதில் சொன்னார். கவிதைகள் பற்றிப் பேச்சு வந்தபோது என்னைப் பார்த்து ‘நீங்ககூட கவிதை நல்லா எழுதுறீங்களே’ என்றார். இரண்டு முறை சொன்னார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. அவருக்கு அபுல்கலாம் ஆசாத்தின் கஜல் புத்தகத்தையும் ஹரிகிருஷ்ணனின் அனுமன் வார்ப்பும் வனப்பும் புத்தகத்தையும் அன்பளிப்பாகக் கொடுத்தேன். இனிமையாக முடிந்த அந்த சந்திப்புக்குப் பின்னர், இரண்டு நாள்கள் கழித்து வந்த ஆனந்தவிகடன் கற்றதும் பெற்றதும் பகுதியில், இந்த சத்திப்பைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, இதன் மூலம் அவருக்குக் கிடைத்த செய்தியாக ‘வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையேயான இடைவெளி அவசியம்’ என்பதைச் சொல்லியிருந்தார். சந்திப்பில் பங்குகொண்ட அனைவருக்குமே கொஞ்சம் திக்கென்றிருந்தது. சுஜாதாவுடன் சந்த்திப்பில் பேசிக்கொண்டிருந்தபோது, பலர் இடையே வந்து அவரிடம் ஆட்டோகிரா·ப் வாங்குவதும் அவரது ·போன் நம்பர் கேட்பதும் அவரது வீட்டுக்கு வரலாமா என்று கேட்பதுமாக இருந்தார்கள். அவருடைய பாப்புலாரிட்டியின் காரணமாக அவர் எப்போதும் வாசகனுடன் ஒரு இடைவெளியை வைத்திருக்க விரும்பினார். அதுமட்டுமின்றி என் கணிப்பில் அவர் ஒரு தனிமை விரும்பியாக இருந்தார். தனிமையைக் கொண்டாடுவாரோ என்று கூட நினைத்திருக்கிறேன். தேசிகனிடம் ஏன் கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா இப்படி எழுதினார் என்று கேட்டபோது, கற்றதும் பெற்றதும் பகுதியைப் படித்துவிட்டு பலர் அவருக்கு ·போன் செய்து, நாங்களும் டிரீட் தருவோம், எங்களுடனும் பேசவாருங்கள் என்று அழைத்தார்களாம், அதைத் தவிர்க்கவே சுஜாதா அப்படி எழுதினார் என்று விளக்கம் கூறினார். சுஜாதாவின் எழுத்துகள் அவரை அவரது வாசகர்களிடம் ‘சுஜாதா என்பது நண்பன்’ என்கிற தோரணையோடே அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் அவரது எழுத்து நடை. 1965இல் அவர் எழுதிய கட்டுரையை வாசிக்கும்போது நேற்று எழுதிய கட்டுரையை வாசிப்பதுபோன்றே தோன்றுகிறது. மிக நீண்ட நிகழ்வுகளைக் கூட சில வரிகளில் நமக்குச் சொல்லி முடிக்கிறார். அதோடு சம்பந்தமுடைய ஒரு நிகழ்ச்சியை ஒரு வரியில் சொல்வதன் மூலம் வாசகனை மிக நீண்ட பிராயணத்திற்கு சில நொடிகளில் தயார் செய்துவிடுகிறார். இந்த வேகம், எல்லாத் தலைமுறைகளையும் கவர்ந்திருக்கிறது. மட்டுமின்றி, தமிழின் நடையையே புரட்டிப் போட்டிருக்கிறது. இந்த வகையில் சுஜாதாவின் பங்களிப்பு என்றென்றும் முக்கியமானது. புத்தகக் காட்சியில் தமிழினி வசந்தகுமாரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவரும் சுஜாதாவின் பங்களிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொன்னார். மிகக் கறாரான தேர்ந்தெடுப்பின் மூலம் கூட அவர் எழுதிய 60 சிறுகதைகளையாவது சிறந்ததென பட்டியலிட்டுவிடமுடியும். சிறுகதை எழுத்தாளராக சுஜாதாவின் பங்கு மிக முக்கியமானது.

சுஜாதாவுடனான உட்லேண்ட் சந்திப்பு முடிந்த சில நாள்கள் கழித்து எனி இந்தியன் புத்தகக்கடைக்கு ஒருவர் புத்தகம் வாங்க வந்திருந்தார். சில முக்கியமான புத்தகங்களை அவர் வாங்குவதைப் பார்த்ததும் அவரிடம் பேசினேன். பேச்சில் அவர் திருநெல்வேலிக்காரர் என்று தெரிந்தது. ஏதும் எழுதுவீர்களா என்று கேட்டபோது சுஜாதாவுக்கு கேள்வி எழுதுவேன்,வேற ஒண்ணும் எழுதுறதில்லை என்றார். அந்த வாரம் அவர் கேட்ட கேள்விக்கு பாராட்டாக ஒரு புத்தகம் வந்தது என்றார். சாதாரணமாக என்ன புத்தகம் என்றேன். ‘கஜல்னு ஒரு புத்தகம். யாரோ அவருக்கு பிரசண்ட் பண்ணியிருக்காங்க. உள்ள கையெழுத்தெல்லாம் இருக்கு’ என்றார். பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவருக்கு நான் தந்த புத்தகம். இது சாதாரணமாக நடந்த ஒரு பெரிய நிகழ்ச்சியாக எனக்குத் தோன்றியது. தேசிகனிடம் சொன்னேன். ‘நல்ல சிறுகதை எழுதலாம் போல இருக்கே’ என்றார். பின்னர், எல்லாப் புத்தகத்தையும் அவர் யாருக்காவது பிரசெண்ட் பண்ணிடுவார், இல்லைன்னா அது அப்படியே அவர் வீட்டுலயே இருந்து வேஸ்ட் ஆயிடும் என்றார்.

ஒருசமயம், AnyIndian.comல் அவரது பூக்குட்டி புத்தகத்தை விற்பது தொடர்பாகப் பேச அவர் அழைத்தார். மிக அழகாக வடிவமைக்கப்பட்ட புத்தகத்தின் விலையை, விற்பனையாளர்களுக்குத் தரவேண்டிய கழிவு பற்றிய எண்ணமில்லாமல் வைத்துவிட்டதாகச் சொன்னார். இத்தனை நாள் எழுத்துலகில் இருக்கும் சுஜாதாவிற்கு இதுபோன்ற விஷயங்கள் புரியவே இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. கிட்டத்தட்ட ஐம்பது நிமிடங்கள் நீடித்த அந்த சந்திப்பில் அவர் AnyIndian செயல்பாடுகளைக் கேட்டுக்கொண்டார். தமிழில் எல்லாப் புத்தகங்களையும் ஓரிடத்தில் தேடலாம் என்கிற எண்ணமே அவருக்கு நிறைய மகிழ்ச்சியைத் தந்தது. எங்களது கஸ்டமர் சர்வீஸ் பற்றிச் சொன்னபோது, அது ரொம்ப முக்கியம் என்றார். பின்னர் பூக்குட்டி புத்தகம் பற்றி பேச்சு வந்தபோது, எப்படியாது தள்ளிடணும் என்றார். உண்மையில் வயது முதிர்ந்த குழந்தையுடன் பேசுவது போன்ற சித்திரத்தைத்தான் என்னால் யோசிக்கமுடிந்தது. அதற்குப் பின்பு வந்த புத்தகக் காட்சிகளில் சுஜாதாவை சந்திப்பேன். ஜஸ்ட் ஒரு ஹலோ மட்டுமே. அவரும் ஹலோ ஹரன் என்பார். மீண்டும் ஒருமுறை அவரை சந்தித்தபோது, பூக்குட்டியை எப்படியாவது வித்திடணும் என்றார். கூடவே அது மாதிரி இன்னொரு புத்தகம் போடப் போறேன் என்றார். பல விஷயங்களைப் பற்றிப் பேசினார். நாங்கள் பதிப்பித்த புத்தகங்களைப் பார்த்த அவர், எல்லாப் புத்தகங்களின் க்வாலிட்டியும் ரொம்ப நல்லா இருக்கு என்றார். டெக்னாலஜி ரொம்ப முன்னேறினதால எல்லாருமே நல்ல புத்தகங்கள் போட ஆரம்பிச்சிட்டாங்க, முன்னல்லாம் செட்டியாருங்க என்ன க்வாலிட்டி சொல்றாங்களோ அதுதான் க்வாலிட்டி, இப்பல்லாம் யார்வேணா சுலபமா க்வாலிட்டியா புக் போடமுடியுது என்றார். பல விஷயங்கள் பற்றி அன்று பேசினார். சுந்தர ராமசாமி பற்றிய பேச்சு வந்தபோது, எவ்ளோ நல்ல சிறுகதையாளர் என்றார். அவரது ஆரம்ப கால சிறுகதைகளை வெகுவாகச் சிலாகித்தார் சுஜாதா. ‘பிராசதம் படிச்சுருக்கேங்களா? என்ன ஒரு பீஸ்’ என்றார். சு.ராவின் சமீபத்திய சிறுகதைகள் எல்லாம் கதையை விட்டுவிட்டு நடையை மையப்படுத்தி எழுதப்பட்டவை என்றார். ‘குழந்தைகள் ஆண்கள் பெண்கள்ல ஏதோ ஒண்ணு – ஆண்களோ பெண்களோ, நினைவில்லை – மட்டும் நல்லா இருக்கும். மத்ததெல்லாம் வெறும் எழுத்துதான். உத்வேகம் இல்லை’ என்றார். நான் அவரிடம், ‘இதையெல்லாம் நீங்க எங்கயும் எழுதுறதில்லையே சார்’ என்றேன். புன்னகைத்துக்கொண்டார். சுஜாதாவிடம், கணையாழியின் கடைசிப்பக்கங்களில் வெளியான சீற்றமும் கடும் விமர்சனமும் கொண்ட மனிதன் உயிர்ப்போடு கடைசி வரை இருந்தான். ஆனால் அவர் அவனை அடக்கி வைத்திருந்தார். அவன் அவரது கடைசிக் காலங்களில் வெளிப்படவே இல்லை. நட்பு என்னும் பெரிய திரை அவரை முழுதுமாக இறுக்கிவிட்டது. விமர்சனத்தை விட நட்பு முக்கியம் என்கிற கட்சிக்குள் வெகுவேகமாக சென்று சேர்ந்துவிட்டவர் அவர் என்பது என் எண்ணம்.

மீண்டுமொருமுறை அவரைச் சந்தித்தேன். அந்தமுறை சிவாஜி திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகியிருந்தது. அவரைப் பார்க்க அவரது அலுவலகத்திற்குள் நுழையும்போதே என்னைப் பார்த்து, ‘வெயிட் போட்டுட்டீங்க’ என்றார். ‘அதுவா ஏறுது சார்’ என்றேன். ‘லிக்கர் சாப்பிடுவீங்களா?’ என்றார். இல்லை என்றேன். ‘பாருங்க ஷங்கர் எப்படி வெயிட் போட்டுட்டார்னு’ என்று ஆரம்பித்தார். ‘ஸார் நானும் பேட்டில பார்த்தேன். எப்படி இப்படி வெயிட் போட்டார்’ என்று கேட்டேன். ‘சினி ·பீல்ட்ல எல்லாருமே லிக்கர் சாப்பிடுவாங்க. நான் ஷங்கர்கிட்ட சொன்னேன், வெயிட் போட்டது பத்தி. இப்பதான் சிவாஜி முடிச்சிருக்கேன், இது ரெஸ்ட் பீரியட், அடுத்தபட வேலை ஆரம்பிச்சா எல்லாம் சரியாயிடும்னு சொல்றார். அதுவும் உண்மைதான். படம்ங்கிறது பெரிய வேலை. அதுவும் ஷங்கர் மாதிரி படங்களுக்கு அப்படி மெனக்கெடனும்’ என்றார். ‘ஆனா ரஜினி மட்டும் ஸ்லிம்மா இருக்கார்’ என்றேன். ‘அவரோட ·புட் ஹேபிட்’ என்றார். ‘ஸார், நான் பாட்டு கேட்டேன். நெட்ல வந்தப்ப சும்மா ஏமாத்தறாங்களோன்னு நினைச்சேன்’ ‘இல்ல, அதுதான். ஏ.ஆர்.ரஹ்மான் ·பாரின்லேர்ந்து அனுப்பறார். இடையில யாரோ விளையாடிருப்பாங்க. இப்பல்லாம் நெட்ல எதுவேணா செய்யலாம்.’ ‘பாட்டு கேட்டேன், பல்லே லக்கா சுமாரா இருக்கு. மத்ததெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.’ ‘அது சும்மா ஒரு ·பாஸ்ட் பீட் ஸாங். டைட்டில் சாங்’ என்றார். பின் படத்தின் நெகடிவ், பாஸிடிவ் என்றெல்லாம் நிறைய பேசினார். தமிழ்ப்படங்கள் பற்றிய சில கடுமையான அபிப்பிராயங்களையும் சொன்னார். ‘ஏன் இதெல்லாம் எழுதுறதில்லை ஸார்?’ சிரித்துக்கொண்டே, ‘கணையாழியில நிறைய எழுதிருக்கேன். நீங்க பார்த்தீங்கன்னா 35 வருஷமா எழுதறேன். ஆரம்பத்துல கணையாழியில இருந்த fire இப்ப கொண்டுவரமுடியாது. அப்படியே குறைஞ்சு குறைஞ்சு இப்ப கற்றதும் பெற்றதும் பாருங்க வெறும் டைரிக்குறிப்பு மாதிரிதான இருக்கு?’ எனக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. என்ன ஒரு எளிமையான, ஆழமான மதிப்பீடு. சுந்தர ராமசாமியைப் பற்றிய அவரது மதிப்பீட்டிற்கு இணையாக அவரே அவரைப் பற்றிய மதிப்பீடு ஒன்றை வைத்திருக்கிறார். ‘நீங்க உங்களுக்கு இருக்கிற எல்லா நண்பர்களையும் காயப்படுத்தாம இருக்க நினைக்கிறீங்க, அதனாலதான் க.பெ. இப்படி இருக்குன்றது என் எண்ணம்’ என்றேன். காலச்சுவடு, உயிர்மை, ஆனந்தவிகடன் பற்றி பல விஷயங்களைப் பேசினோம். ஜெயமோகன் எழுதி அவருக்குக் காணிக்கையாக்கியிருந்த விசும்பு புத்தகத்தை அவருக்கு அனுப்பியிருந்தேன். அதைப் பற்றிக் கேட்டேன். ஹார்ட் சயின்ஸ் ·பிக்ஷன், சா·ப்ட் சயின்ஸ் ·பிஷன் பற்றிப் பேசிய அவர், ஜெயமோகனின் கதைகள் புதிய திறப்பை ஏற்படுத்துகின்றன என்பதில் ஐயமில்லை என்றார். ‘நானே அவர்கிட்ட பேசறேன்’ என்றும் சொன்னார். எங்கள் புத்தகங்களைப் பற்றிக் கேட்டபோது, பிரதாப சந்திர விலாசம் பற்றி ஆர்வமாகப் பேசினார். ‘அந்த மாதிரி புத்தகங்கள மக்கள் கிட்ட கொண்டு போணும். நீங்க சொல்றதே இண்டிரஸ்டிங்கா இருக்கு. விருத்தம், வசனம் கலந்த நாடகம். இண்டரஸ்டிங். எனக்கு அனுப்புங்க நான் பார்க்கிறேன்’ என்றார். ‘ஸார், நான் அனுப்பலாம்னுதான் நினைப்பேன். ஆனா அப்ப அப்ப கற்றதும்பெற்றதும்ல யாரும் எனக்கு புத்தகங்கள் அனுப்பாதீங்கன்னு எழுதுறதைப் பார்த்து அனுப்பலை’ என்றேன். ‘அது எழுதுறது எதுக்குன்னா, ஒரு நாளைக்கு 50 பார்சல் வருது. யாரு வாங்கி படிக்கிறது? அதுக்காகத்தான். சிடி கூட அனுப்பறாங்க இப்பல்லாம். நேத்துகூட ஒரு சிடி வந்தது.’ ‘ஆனா அப்படி எழுதிட்டு அடுத்த வரில கிடைச்ச புத்தகங்கள்ளேர்ந்து ஒண்ண எழுதிடறீங்க. திரும்பவும் எல்லாரும் அனுப்புவாங்க.’ ‘வேற வழியில்லை’ என்று சொல்லி சிரித்தார். அடுத்த வாரம் க.பெ.வில் பிரதாப சந்திர விலாசம் பற்றி எழுதியிருந்தார்.

அதன்பின்பு அவரைப் பார்த்தது கடந்த புத்தகக் காட்சியில். ‘ஸார் பிரசன்னா எனி இந்தியன்’ என்றேன். ‘ஹலோ ஹரன்’ என்று சிரித்தார். சில புகைப்படங்கள் எடுத்தேன். வா. மணிகண்டனின் ‘கண்ணாடியில் நகரும் வெயில்’ கவிதைப்புத்தகத்தை வெளியிட்டார். அவர் அந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்க்கக்கூட இல்லை. மனுஷ்யபுத்திரன் வெளியிடச் சொன்னார், அவர் வெளியிட்டார். இதுவும் அவர் நட்பு மேல் கொண்டிருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு. கடைசிவரை அப்படியே வாழ்ந்தார் அவர். இரண்டு மாதங்களுக்கு முன்பு எனி இந்தியனுக்காக ஒரு புத்தகம் கேட்டோம். நிச்சயம் தருகிறேன் என்று சொல்லியிருந்தார். சில நாள்களுக்கெல்லாம் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவும் அதைப் பற்றிப் பேசாமல் இருந்தோம். நேற்று கோ.ராஜாராமுடன் இரவு பேசிக்கொண்டிருந்தபோது, ‘நாம சுஜாதாவைப் பார்க்கலாம்’ என்றேன். ‘சரி’ என்றார். இந்தப் பேச்சு நடந்த ஒரு மணி நேரத்தில் தொலைபேசியில் ஒரு சோகக்குரல் என்னை உலுக்குகிறது சுஜாதாவின் மரணத்தைச் சொல்லி. நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்த சோகத்தை நான் அடைந்தேன். எனது shape-upல் சுஜாதாவின் பங்கு கணிசமாக இருக்கிறது என்பதை எப்போதும் உணர்ந்திருக்கிறேன். சமகால எழுத்தாளர்கள் பலர் எழுத்தில் எங்கேனும் ஓரிடத்தில் அவரது பாதிப்பை என்னால் பார்க்கமுடிகிறது. சுஜாதா தலைமுறையையே உருவாக்கிய எழுத்தாளர். தேசிகன் அவரது வாழ்க்கை வரலாறை எழுதும் எண்ணம் கொண்டிருந்தார். அது நிறைவேறுவதற்கு முன்பு சுஜாதா மறைந்தது அவருக்கும் எனக்கும் வருத்தமான விஷயம். இன்று எத்தனையோ பேர் சுஜாதாவின் மரணத்துக்காக வருத்தப்படுகிறார்கள். சுஜாதாவைத் தவிர எதையும் படிக்காத தலைமுறைகூட ஒன்றிருக்கிறது. ‘ஏன் இன்னும் கணேஷ் வசந்தெல்லாம் எழுதுறீங்க’ என்று நான் கேட்டபோது, அதன் வழியாக நல்ல இலக்கியத்திற்கு அதன் வாசகர்களைக் கூட்டி வரலாம் என்று சுஜாதா சொன்னது இதுபோன்ற தலைமுறை ஒன்றை எண்ணியே. இந்தத் தலைமுறையெல்லாம் இன்று தன் வீட்டில் துக்கம் நிகழ்ந்ததாகவே கருதும். இது ஒரு எழுத்தாளனுக்கு அளிக்கப்படும் உச்சகட்ட கௌரவம்.

புத்தகக் காட்சியில் திருமகள் நிலையத்துக்கு வந்த சுஜாதா திரும்பிச் செல்லும்போது மெல்ல நடந்து சென்றார். அவரால் தனியாக நடந்து செல்லமுடியாது. திருமகள் நிலையம் பதிப்பகத்தின் நிறுவனர் அவரை அழைத்துச் சென்றார். அவரும் உடல் நிலை சரியில்லாமல் வேகமாக நடக்கமுடியாத நிலையில் இருப்பவர். அவர் சுஜாதாவை ஆதரவாகப் பிடித்திருக்க, சுஜாதா அவரை ஆதரவாகப் பிடித்திருக்க, இரண்டு பேரும் மெல்ல நடந்து என்னைக் கடந்து சென்றார்கள். என் கண்ணின் வழியே விரிந்த அந்தக் காட்சி என்றும் என் நினைவில் நின்றிருக்கும் என்று அப்போதே தோன்றியது. இரண்டு முதிய குழந்தைகள் தவழ்வதைப் போன்ற சித்திரம் என் கண்ணை இப்போதும் நிறைக்கிறது. அன்புள்ள சுஜாதா, வருத்ததுடன், நெஞ்ச நிறைவுடன் உங்களுக்கு ஒரு good-bye.

Share

எழுத்தாளர் சுஜாதா மரணம்

என் வாழ்க்கையில் மறக்கமுடியாத மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா அரைமணிநேரத்திற்கு முன்பு இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வணங்குகிறேன்.

Share

காலச்சுவடு நடத்தும் ஆதிமுலம் இரங்கல் கூட்டம்

நாளை (26, ஜனவரி 2008) அன்று மாலை 6.00 மணிக்கு புக் பாயிண்ட் அரங்கில்.

Share

வலைக்கும்மி

வலைப்பதிவுலகம் – வலைக்கும்மி

2002 வாக்கில் கணினியில் திக்கித் திணறி தமிழில் தட்டியபோது பெரும் அதிசயமாக உணர்ந்தது இப்போதும் நினைவிருக்கிறது. அன்று முழுவதும் கனவில் தமிழ் எழுத்துகளாக வந்தன! இணையக் குழுமங்களில் இணைந்து எழுதத் தொடங்கி, வலைப்பதிவுகளில் எழுதத் தொடங்கி, இன்றைக்குப் பார்த்தால் 2400க்கும் மேற்பட்ட வலைப்பதிவுகளில் தினமும் தோராயமாக 200 பதிவுகள் எழுதப்படுகின்றன. இன்றைக்குத் தமிழ் ஊடகங்கள் இந்த வலைப்பதிவுகளையும் இணையத் தளங்களையும் புறக்கணிக்கவே முடியாது. அப்படி ஒரு பூதாகரமான வளர்ச்சியை அடைந்துள்ளது தமிழ் இணைய எழுத்துலகம். ஆனால் அந்த வளரச்சி தரும் இலக்கிய அனுகூலங்களோ கேள்விக்குரியனவாகத்தான் இருக்கின்றன.

2000 வாக்கில் இணையத்தில் எழுதிக்கொண்டிருந்த சில எழுத்தாளர்கள், அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் இணையத்திலிருந்தே வருவார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு, கழிந்துவிட்ட இந்த ஏழு வருடங்களில், இணையத்திலிருந்து வந்து அச்சுலகில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் எவருமே இல்லை. இனி வரும் என்று நம்பலாம் என்று சொல்லத்தக்க அளவிலும் இணையத் தமிழ் உலகில் செறிவான எழுத்துகளும் காணக் கிடைப்பதில்லை. அப்படியே ஒன்றிரண்டு கிடைத்தாலும் ஒப்பீட்டு அளவில் அது மிகவும் குறைவாகவே உள்ளது.

இன்றைக்கு வலைப்பதிவுகள் என்பது நினைத்த நேரத்தில், நினைத்த விஷயத்தை எழுதி விடக்கூடிய இடமொன்றை மட்டுமே பெற்றிருப்பதாக நான் நினைக்கிறேன். பரந்து கிடக்கும் 2400க்கும் மேற்பட்ட வலைப்பதிவுகளில் தீவிரமான இலக்கிய நோக்குடையவை என இருபது வலைப்பதிவுகள் தேறினாலே பெரும் விஷயம். இணையத்தில் எழுதப்படும் எழுத்துகளில் பெரும்பாலும் காணக் கிடைப்பவை ஜாதி பற்றிய சொல்லாடல்கள், தமிழக, ஈழ அரசியல் பற்றிய சீற்றங்கள் மற்றும் நிறைய தனிப்பட்ட குறிப்புகள் இவை மட்டுமே. இவற்றில் தீவிரமாக எழுதுபவர்கள் மிகமிகக் குறைவே. அப்படி தீவிரமாக எழுதுபவர்களும் காலம் காலமாக சொல்லிக்கொண்டிருந்தனவற்றையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொ¡ண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட தாக்குதல் மீறிய விவாதம் நிகழ்ந்துவிட்டால் அதை அதிசயங்கள் பட்டியலில் சேர்த்துவிடலாம்.

கட்டற்ற சுதந்திரம் என்னும் மந்திரச் சொல்லே இந்த வலைப்பதிவுக்களின் அடிநாதமாக விளங்குகிறது. உண்மையில் ஒரு தனிமனிதனுக்குத் தரப்படும் கட்டற்ற சுதந்திரம் என்பது, அவன் சமூகத்தோடு சேரும்போது கடுமையாக மட்டுப்படுத்தப்படுகிறது என்பதை உணராமல், கட்டற்ற சுதந்திரம் என்னும் வார்த்தைக் கோவைகள் தரும் நேரடி அர்த்தத்தை மனதில் கொண்டே, பல வலைப்பதிவுகள் எழுதப்படுகின்றன. அதனால் இயல்பாகவே அவை தாக்குதலில் ஈடுபடுகின்றன. செறிவான விவாதம் என்பதே வலைவிரிக்கும் பூடகமான தாக்குதல் நிறைத்தே எழுதப்படுகிறது. அதேபோல் இந்த வலைப்பதிவுகள் நிராகரிப்படாத எழுத்துகளின் தொகையாக விளங்குகின்றன. இதனால் ஒரு வலைப்பதிவு எழுத்தாளன், நியாயமாக ஒரு எழுத்தாளன் அனுபவித்திருக்கவேண்டிய மட்டுறுத்தல் மற்றும் தகுதியில்லாத எழுத்துகள் என்பன போன்ற வடிகட்டுதலை சந்திப்பதே இல்லை. இதனால் வலைப்பதிவு எழுத்தாளன் மனதில் அவனைப் பற்றிய ஒரு மிதமிஞ்சிய அனுமானமும் சித்திரமும் ஏற்பட்டுப்போகிறது. இரண்டு கட்டுரைகள் எழுதிப் போட்ட உடனேயே தான் ஒரு எழுத்தாளன் என்கிற பிரமை ஏற்பட்டுவிடுகிறது. அச்சு உலகில் ஒரு எழுத்தாளன் கடந்து வரவேண்டிய சவால்கள் எவற்றையும் காணாமலேயே ஒரு இணைய எழுத்தாளன் அந்த இடத்தை அடைந்துகொள்கிறான். இதனால் ஏற்படும் சௌகரியம் நம்பிக்கை என்றாலும் அதன் இன்னொரு கோடியான அதீத நம்பிக்கையில் எழும் அபத்தங்களைக் கூட சிறந்த எழுத்து என்றும் நம்பும் எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது. இதனால் வலைப்பதிவுகளில் எழுதத் தொடங்கும் ஒருவன் அடையவேண்டிய இலக்குகளை அடையமுடியாமல், தொடர்ந்து வலைப்பதிவுகளில், எப்படி எழுதத் தொடங்கினானோ அப்படியே எழுதிக்கொண்டிருக்கிற அல்லது மடிந்துபோகிற ஒருவனாகிவிடுகிறான்.

கணினியில் தமிழ் எழுதத்தெரிந்தாலே எழுத்தாளனாகி விடலாம் என்கிற எளிமையான சூத்திரத்தில் ஆட்பட்டு எழுதத் தொடங்கும் எவரும், இதுவரை தமிழ் எழுத்துலகம் கண்டிருக்கிற உயரங்களை, வீழ்ச்சிகளை, சவால்களைப் பற்றிய எந்தவித அறிவும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இன்றைய அச்சு எழுத்தாளர்கள் மீதே ‘தமிழின் மரபை அறியாதவர்கள்’ என்கிற விமர்சனம் வைக்கப்படும் நிலையில், இன்றைய வலைப்பதிவு எழுத்தாளர்கள் தமிழின் தற்போதைய எழுத்தாளர்களின் இலக்கியப் பங்களிப்பைக் கூட அறியாதவர்களாக இருக்கிறார்கள். ஆனந்த விகடன், குமுதம் வழியாக இலக்கியத்தை அடைய இவர்கள் எடுக்கும் முயற்சி இவர்களை ஒரு ரெண்டுங்கெட்டான் நிலையில் கொண்டு சேர்க்கிறது. இதனால் வெகுஜன இதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் வளர்ந்த வெகுஜன திரைப்படங்களும் அது சார்ந்த ஆழமற்ற எழுத்துகளும் மேலும் ‘சிறப்பாக’ இங்கு வளர்கின்றன. குறைந்தபட்சம் எழுதத் தொடங்கிய பின்பாவது, இதற்குமுன் தமிழில் இருக்கும் இலக்கியங்களைப் படிப்பது பற்றிக் கூட யோசிப்பதில்லை என்பது யதார்த்த சோகம். இணையத்தில் எழுதத் தொடங்கி, சிறப்பாக தொடர்ந்து முன்னேற்றம் கண்டுவரும் எழுத்துகளை இனம்கண்டு ஒன்றிரண்டு உதாரணங்களைக் கூறலாம் என்ற போதிலும், அவற்றையே பொதுக்கருத்தாக முன்வைக்க முடியாது என்பதே நிதர்சனம்.

வலைப்பதிவுகள் தொடங்கிய காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வலைப்பதிவுக்களைத் திரட்ட, திரட்டிகள் தோன்றியபோது அவை ஒரு வசதியை முன்னிறுத்தியே செயல்பட்டன. ஆனால் அதிலிருந்து வரும் ஹிட்டுகளின் எண்ணிக்கை வலைப்பதிவுக்களின் தரத்தை நிர்ணயிக்கும் சக்தி என்கிற எண்ணம் நிலைபெற்றபோது, வலைப்பதிவுகளில் எழுதப்படும் எழுத்தின் தரம் மேலும் சரியத் தொடங்கியது. வாசகனை திடுக்கிடச் செய்து உள்ளே அழைத்துவரச் செய்யும் கிறுக்குத்தனமான தலைப்புகளுடன் கும்மிப் பதிவுகள் வரத் தொடங்கின. [இந்த இடத்தில் இன்னொன்றைச் சொல்லவேண்டும். நிறைய வலைபதிவர்கள் எழுதுவதால் புழக்கத்திற்கு வரும் புதிய சொற்களை வலைப்பதிவு உலகம் தானறியாமலேயே தமிழுக்குத் தந்துகொண்டிருக்கிறது.] தொடர்ந்து திரட்டிகள் பின்னூட்டங்களையும் (Comments) திரட்ட ஆரம்பித்தன. அதிக பின்னூட்டங்கள் வேண்டி செய்யப்பட்ட அரசியலைப் பற்றி எழுதவேண்டுமானால் பெரிய புத்தகமே போடவேண்டியிருக்கும். இதில் வலைப்பதிவுவுலகம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது என்றே சொல்வேன். ஒருவகையில் இந்தத் திரட்டிகள் தொடக்கத்தில் வலைப்பதிவுக்களுக்கு புத்துணர்ச்சியைத் தந்தாலும், அதன் எதிர்வினையாக ஒரு பெரிய சரிவையும் தந்துவிட்டன என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இன்றைக்கு இந்தத் திரட்டிகளின் தேவையை நிராகரிக்கவே முடியாது என்பதையும் சொல்கிறேன். இந்தத் திரட்டிகள் இல்லாவிட்டால் எங்கிருந்தோ யாராலோ எழுதப்படும் எழுத்தை ஒரு வாசகன் நினைத்த நேரத்தில் சென்றடையமுடியாது. ஆனால் எத்தனை தூரம் இந்தத் திரட்டிகளின் தேவை மிக மிக முக்கியமானதொன்றாக இருக்கிறதோ, அத்தனை தூரம் அது வலைப்பதிவுகில் ஆரோக்கியமற்ற போட்டியையும் உருவாக்கி விட்டது. இது வலைப்பதிவர்களின் தனிப்பட்ட மனோபாவத்தால்தான் நிகழ்கிறது என்றாலும் பொதுக்காரணியாக இந்தத் திரட்டிகளே விளங்குகின்றன.

தொழில்நுட்பம் தரும் வசதிகளை அனுபவிக்கும்போது தொடர்ந்து அது தரும் இன்னல்களிலிருந்து மீளமுடியாத அதே நிலையை இந்தத் திரட்டிகளுக்கு ஒப்பிடலாம். பின்னூட்டங்கள் திரட்டப்பட்டதைத் தொடர்ந்து வலைப்பதிவுலகில் முதன்மை பெற்றவை விவாதங்கள். பெரும் விவாதங்களெல்லாம் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு விவாதத்தின் மூலம் பொதுக்கருத்தை எட்டிவிடவே முடியாது. அதற்கான வரலாறே நம்மிடம் கிடையாது. உண்மையில் இதுவே சாத்தியமானதும் கூட. இதை உணர்ந்தவர்கள் குறைவாகவும், நம் கருத்தே பொதுக்கருத்து என்னும் ஆரம்பநிலை எழுத்துகளை பிரதிநிலைப்படுத்துபவர்கள் அதிகமாகவும் சேர, விவாதங்கள் அதைமீறிய தாக்குதல் நிலையையும், அதைத் தொடர்ந்து விவாதித்தவர்கள் மீதான முன்முடிவையும் ஏற்படுத்தின. ஒரு அச்சு ஊடகத்தில் நிகழும் உள்ளரசியலுக்கு இணையான, அதை மிஞ்சும் பெரும் அரசியல் இன்றைய நிலையில் வலைப்பதிவுலகில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒருவரின் ஜாதி மற்றும் மதத்தைச் சார்ந்த விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் ஒருவரால் இணையத்தில் எழுதவே முடியாது. பெண்கள் என்றால் இருக்கவே இருக்கிறது கற்பு பற்றிய சொல்லாடல்கள். இதையும் மீறி விவாதம் செய்யும் பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அல்லது எளிதாக இல்லை என்றே சொல்லிவிடலாம்.

வலைப்பதிவுவுலகின் இன்னொரு முக்கிய பின்னடைவு Anonimity. யார் என்கிற விவரம் இல்லாமல், எங்கிருந்து எழுதுகிறீர்கள் என்கிற விவரம் தெரியாமல் நீங்கள் ஒரு வலைப்பதிவை நடத்தலாம், எல்லா வலைப்பதிவுகளிலும் பின்னூட்டம் செய்யலாம். அச்சு ஊடகங்களில் இவை சாத்தியமல்ல. பிற ஊடகங்களில், நீதிமன்றங்கள், வழக்கு உள்ளிட்ட விஷயங்கள் உங்களைக் கேள்விக்குட்படுத்தும். ஆனால் இணைய உலகில் இந்தக் கட்டுகள் இல்லாத சுதந்திரம் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சுதந்திரம் நம்மால் எப்படிப் பயன்படுத்தப்படும் என்பது நாம் அறிந்ததே. அதுவே நிகழ்ந்தது. தனக்குத் தானே வேறுவேறு பெயர்களில் போட்டுக்கொள்ளும் பின்னூட்டங்கள், பொதுவில் வைக்கமுடியாத வாசகங்களைத் தாங்கிய பின்னூட்டங்கள், வசவுகள், கேள்வி கேட்பது யாரென்பது தெரியாததால் தரும் சௌகரியங்கள் நிறைந்த கேள்விகள் என பின்னூட்டங்கள் குவிந்தன. குவிகின்றன. சிலர் எக்கேள்வி என்றாலும் அதன் பொருளைப் பார்ப்பது என்ற நிலையையும், சிலர் கேள்வியின் முகாந்திரத்தை அறியாமல் வெற்று வெளியுடன் மோதிக்கொண்டிருக்கமுடியாது என்கிற நிலையையும் எடுத்தார்கள். உண்மையில் அவரவர் வசதிக்கேற்பவே இந்நிலையை எடுத்தார்கள் என்றே நான் வரையறுக்கிறேன். யார் எழுதுகிறார்கள் என்று தெரியாமல் வலைவிரிக்கப்படும் ஒரு விஷயமாகத்தான் இப்படிப்பட்ட அனானிகளை வகைப்படுத்தமுடிகிறது. இயல்பாகவே ஒரு மனிதனுக்குள் உறைந்து கிடக்கும் அறியாத ஒன்றைத் தேடும் எண்ணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, யார் எழுதுகிறார் என்று தெரியாமலேயே நிறைய வருடங்கள் இயங்கும் வலைப்பதிவுகளும் உண்டு. யார் என்று தெரியாது என்பதே ஒரு identityயாக மாறிவிடும் வலைப்பதிவுகளும் உண்டு. இவர் யார் என்கிற விவரம் தரும் வலைப்பதிவு கும்மிகள் இதில் அதிகம் சுவாரஸ்யம் பெற்றதாகவும் ஹிட்டுகள் பெற்றதாகவும் ஆகிவிடுவது அடிக்கடி நடக்கும். வலைப்பதிவுகளை ஒருவகையில் இன்றைய கணினி சார்ந்த மக்களின் மனவியல் பதிவாகவும் கொள்ளமுடியும். அனானிமிட்டி தரும் சுதந்திரம் முகம் சுளிக்க வைத்தாலும் அதில் நிலவும் உளவியலைப் படிக்கக் கற்றுக்கொண்டால், அது நிகழ்ந்துகொண்டிருக்கும் காலத்தின் ஆகச் சிறந்த பதிவாக அமையும் என்பதையும் சொல்லவேண்டும்.

வலைப்பதிவு எழுத்தாளர்களின் எழுத்துகளை ஆராய்ந்தால் அவர்களில் சுஜாதா ஏற்படுத்திய பாதிப்பு விளங்கும். சுஜாதாவின் எழுத்துகளை முன்மாதிரியாக வைத்தே இன்று எழுதும் பல வலைப்பதிவு எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். சுஜாதாவின் முறையைத் தாங்கள் பயன்படுத்தும்போது அது ஒரு செயற்கைத் தன்மை வாய்ந்ததாகிவிடுகிறது என்பதை இவர்கள் உணர்வதில்லை. அப்படி உணர்ந்தால் அவர்கள் நகரும் புள்ளி, அதற்கு மிகவும் எதிர்த்தன்மை கொண்ட, விளங்கிக்கொள்ள முடியாத எழுத்துகளாகி விடுகிறது. ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இருக்கும் தனித்தன்மையைக் கண்டெடுத்து அதை வளர்க்கும் திறன் நிறைந்தவர்கள் மிகக்குறைந்த நிலையில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.

அதுபோல துறை சார்ந்த எழுத்துகள் என்கிற பிரிவை எடுத்துக்கொண்டால், அதில் ஒரு மிகப்பெரிய தேக்க நிலையையே இன்றைய வலைப்பதிவுகள் கொண்டிருக்கின்றன. அச்சு ஊடமும் இதே நிலையை சமாளிக்க பெரும் போராட்டங்களை மேற்கொள்ளும்போது, வலைப்பதிவுக்களை அதிகம் குறை சொல்வதற்கில்லை. ஒன்றிரண்டு முயற்சிகள் நடந்தாலும், தொடர்ந்து வலைப்பதிவுகளின் உலகம் விரிவடையும்போது இவை தீவிரமடையலாம். துறை சார்ந்த எழுத்துகளில் ஏற்படும் மறுமலர்ச்சிக்கு வலைப்பதிவுகள் ஒரு முக்கிய காரணமாக விளங்கமுடியும். ஆனால் அது எப்போது நிறைவேறும் என்பதை கணிப்பது சவாலானது. பெரும் வெள்ளம் போல விழுந்தடித்துக்கொண்டு ஓடிவரும் நீரில் கலந்திருக்கும் கசடுகள் போலவே இன்றைய பெரும்பாலான வலைப்பதிவுகள் தோன்றுகின்றன. நிஜமாகவே புதிய திறப்பில் ஏற்படும் வெள்ளவேகம் எதிர்பார்க்கக்கூடியதே. அதுவே இன்றைய வலைப்பதிவு உலகில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எதிர்வரும் மிகப்பெரிய காலத்தை மனதில் கொண்டு, இச்சிறிய காலகட்டத்தைக் கணக்கிட்டால், வலைப்பதிவுகள் சிறப்பான ஒரு மாற்று ஊடமாக செயல்படமுடியும் என்கிற நம்பிக்கையை வைக்கலாம். அதற்கு அச்சு ஊடகங்களில் சிறுபத்திரிகை இயக்கங்கள் செய்த வேலையை வலைப்பதிவுகளில் சிறுபத்திரிகையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் செய்ய முன்வரவேண்டும். இணைய உலகம், அச்சு உலகம் என்கிற பிரிவுகளுக்கிடையேயான இடைவெளி சுருங்கி, எல்லா எழுத்தாளர்களும் எங்கும் எழுதும் நிலை வந்தால் வலைப்பதிவுகளில் நிலவி வரும் விபத்துகள் நாளாவட்டத்தில் சீரடையலாம்.

வலைப்பதிவுக்களின் சாதனையாகச் சொல்லவேண்டுமானால், உலகம் அடைந்த குறுக்கத்தை அதிவிரைவுபடுத்தியவை இந்த வலைப்பதிவுகள். எங்கோ நிகழும் ஒரு விஷயத்தில் பல்வேறு கோணங்களை, முக்கியமான முக்கியமற்ற, தரமான தரமற்ற, இலக்கிய ரீதியிலான வெகுஜன ரீதியிலான என பல்வேறு முகங்களை நாம் நிமிடங்களில் அடையமுடியும். இரண்டாவது, எதைக் குறித்த தகவலும் தேடி அடையலாம். உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் நீங்கள் தேடும் விஷயத்தைப் பற்றி நிச்சயம் ஒரு வரியாவது எழுதியிருப்பார். அது எவ்வளவு உங்களுக்குப் பயன்படும் என்பது வேறு விஷயம். மூன்றாவது, எல்லையற்ற எண்ணங்களை எழுதிச் செல்வது. பக்கங்களின் கட்டுப்பாடு இல்லையென்பதால் நீங்கள் எழுத நினைப்பவற்றை எவ்விதத் தடங்கலும் இல்லாமல் எழுதிச் செல்லலாம். இது ஒருவகையில் மனவெழுச்சி சார்ந்த எழுத்துகளை வளர்த்தெடுத்திருக்கவேண்டும். ஆனால் அது நிகழவில்லை. மீண்டும் மீண்டும் குறிப்புகள் போன்ற விஷயங்களே காணக் கிடைக்கின்றன. இந்த தேக்க நிலை மறைந்து, தமிழ் அச்சு ஊடகங்களில் சிறுபத்திரிகைகள் நிகழ்த்திய பெரும் மாற்றத்தை, பாய்ச்சலை உண்டாக்கக்கூடிய எல்லா வசதிகளும் இணைய உலகம் பெற்றிருக்கிறது. அது முழுமையாக, செறிவாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதே விஷயம். சுஜாதா ஒருமுறை வலைப்பதிவுக்களை ’15 நிமிடப் புகழுக்கு எழுதப்படும் டைரிக் குறிப்புகள்’ என்று சொன்னார். இது பெரும் கொந்தளிப்பை வலைப்பதிவர்களிடையே ஏற்படுத்தினாலும், அதிலிருக்கும் உண்மையை அவர்கள் உணரத் தலைப்பட்டால், பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு யானையின் அவலம் நமக்குப் புரியலாம். அப்போது ‘செய்தி ஊடகம்’ என்று மட்டுமே இப்போது வரையறுக்கமுடியக்கூடிய வலைப்பதிவுலகம் மாற்று ஊடகம் என்கிற நிலையை அடையலாம். அடையவேண்டும் என்று ஒரு வலைபதிவுலக எழுத்தாளனாக பெரிதும் விரும்புகிறேன்.

சில திரட்டிகள் (அலெக்ஸா ரேட்டிங் அடிப்படையில். இதைச் சொல்லவில்லை என்றால் பெரிய வெட்டுக்குத்து நடக்கும் வாய்ப்புண்டு.)

http://www.thamizmanam.com/
http://www.thenkoodu.com
http://tamilblogs.com/a/index.php
http://www.tamilveli.com/
http://www.thamizhbharathi.com/

பரவலான இணைய உலக பயன்பாடுகள்

கும்மிப் பதிவுகள்
மொக்கை பதிவுகள்
ஆணி பிடுங்குதல்
பொட்டி தட்டுதல்
பின்னூட்டாங்கள்
அனானி
எலிக்குட்டி சோதனை
உள்குத்து
முதுகு சொறிதல்
சுய சொறிதல்
சுட்டி
உரல்
ஓடை
டிஸ்கி

இணைய உலகில் பயன்படும் நகைப்புக்குறிகள்

அரட்டை (Chat) அடிக்கும்போது பயன்படுத்தப்படும் நகைப்புக்குறிகள் (Smileys) வலைப்பதிவுலகிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன. நீங்கள் வலைப்பதிவுலகில் அடிக்கடி 🙂 :)) 😛 :> 🙁 :(( X-( 😀 போன்ற குறியீடுகளைச் சாதாரணமாகப் பார்க்க நேரிடலாம். இது தமிழ் எழுத்துலகம் பெற்றிருக்கும் இன்னொரு விஷயம்! இனி வரும் காலத்தில் எந்த எழுத்திலும் இந்த நகைப்புக்குறிகள் இடம்பெறும் அளவிற்கு அசுர வளர்ச்சி அரும் அடைந்துவரும் இவற்றின் பயன்பாடுகளை அறிய இணையத்தில் மேயவும்.

நன்றி: தமிழினி மாத இதழ், ஜனவரி 2008.

Share

நதியின் பக்கங்கள் – கவிதை

நீண்ட நாள்களுக்குப் பின்
புரட்டியபோது
அடையாளம் தெரியாமல்
சிதைவுற்றிருந்தது
பழம்புத்தகத்தின் பக்கங்களில்
தடங்கள்
எண்களை இணைத்து
சித்திரம் கூட்டுதல் போல
கோடுகளை ரொப்ப
புதிய தடங்கள்
காற்றெங்கும்
தீராத ஒலிகளை நிரப்பி
என் காலடி மண்ணை
அரித்துக்கொண்டோடுகிறது நதி

Share

புத்தகக் காட்சி – என் கவனத்தை ஈர்த்த புத்தகங்கள்

இந்தப் புத்தகக் காட்சியில் என் கவனத்தைக் கவர்ந்த புத்தகங்களைப் பட்டியலிட்டிருக்கிறேன். நான் பட்டியலிடும் புத்தகங்கள் இந்த ஆண்டு வெளிவந்தவை மட்டுமல்ல, வந்து பல ஆண்டுகள் ஆன புத்தகங்களாகவும் இருக்கலாம். என் கண்ணில் பட்டு, கவனத்தை ஈர்க்க, அதைப் பட்டியலிட்டிருக்கிறேன். அதேபோல், பட்டியலிடும் எல்லாப் புத்தகங்களும் நான் வாசித்தவை அல்ல. இன்னொரு விஷயம், சில புத்தகங்கள் என் நண்பர்கள், நான் அறிந்தவர்கள் எழுதியவை. அதையும் பட்டியலிட்டிருக்கிறேன். மொத்தத்தில் இது என் சார்புள்ள பட்டியல். யாருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சி. எனி இந்தியனின் புதிய வெளியீடுகள் நான்குமே முக்கியமான பதிவுகள் என்று நான் நினைப்பதால் அதையும் சேர்த்திருக்கிறேன்.

கயறு – தகழி சிவசங்கரன் பிள்ளை, தமிழில் சி.ஏ.பாலன் – சாகித்ய அகாடமி
மார்த்தாண்ட வர்மா – சாகித்ய அகாடமி
இருபது கன்னடச் சிறுகதைகள் – சாகித்ய அகாடமி
காந்தியம் – அம்பேத்கர் – விடியல்
இந்துயிஸத்தின் தத்துவம் – அம்பேத்கர் – விடியல்
கிறிஸ்துவமும் தமிழ்ச்சூழலும் -ஆ.சிவசுப்ரமணியன் – வம்சி
சிறுவர் சினிமா – விஸ்வாமித்திரன் – வம்சி
பாதையில்லாப் பயணம் – ப்ரமிள் – வம்சி
நாகம்மாள் – ஆர்.சண்முகசுந்தரம் – காலச்சுவடு
அக்ரஹாரத்தில் பெரியார் – பி.ஏ.கிருஷ்ணன் – காலச்சுவடுப்
புணலும் மணலும் – ஆ.மாதவன் – காலச்சுவடு
புத்தம் வீடு – ஹெப்சிகா ஜேசுதாஸன் – காலச்சுவடு
ஜி.நாகராஜன் ஆக்கங்கள் – காலச்சுவடு
நடந்தாய் வாழி காவேரி – தி.ஜா & சிட்டி – காலச்சுவடு
பேசும்படம் – செழியன் – காலச்சுவடு
இரானிய சினிமா – திருநாவுக்கரசு – நிழல்
உப பாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன் – விஜயா பதிப்பகம்
யாமம் – எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை
சுஜாதாவின் குறுநாவல்கள் – உயிர்மை
சொல்லில் அடங்காத இசை – ஷாஜி – உயிர்மை
நான் வித்யா – கிழக்கு
யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் – கிழக்கு
இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் – கிழக்கு
மாயினி – எஸ்.பொன்னுத்துரை – மித்ர வெளியீடு
சூடிய பூ சூடற்க – நாஞ்சில் நாடன் – தமிழினி
கமண்டல நதி – ஜெயமோகன் – தமிழினி
காந்தி இறுதி 200 நாள்கள் – பாரதி புத்தகாலயம்
விடுதலைப் போரில் பகத்சிங் – பாரதி புத்தகாலயம்
கங்கணம் – பெருமாள்முருகன் – அடையாளம்
புஸ்பராஜா படைப்புகள் – அடையாளம்
முட்டம் – சிறில் அலெக்ஸ் – ஆழி
உலக சினிமா – செழியன் – ஆனந்தவிகடன்
சோழர்கள் – நீலகண்ட சாஸ்திரி – என்.சி.பி.எச்.
பண்டைய இந்தியா (பண்பாடும் நாகரிகமும்) – டிடி கோசாம்பி – என்.சி.பி.எச்.
பாரதிபுரம் – யூ.ஆர்.அனந்த மூர்த்தி – அம்ருதா
உயிர்த்தலம் – ஆபிதீன் – எனி இந்தியன்
வாஸந்தி கட்டுரைகள் – எனி இந்தியன்
வெளி இதழ்த் தொகுப்பு – எனி இந்தியன்
நதியின் கரையில் – பாவண்ணன் – எனி இந்தியன்
ஈழத்து தலித் சிறுகதைகள் – எதிர் வெளியீடு
அரவாணிகள் பற்றிய புத்தகம் ஒன்று – தோழமை வெளியீடு (சரியான பெயரை பின்னர் சொல்கிறேன். மறந்துவிட்டது.)

Share

நாடக வெளியின் ‘வெளி நாடக இதழ்த் தொகுப்பு’ புத்தக அறிமுகக் கூட்டம் மற்றும் கலந்துரையாடல்

Share

மக்கள் தொலைக்காட்சியில் பரன் – இரானியத் திரைப்படம்

க்கள் தொலைக்காட்சியின் சாதனைகளில் இதுவும் ஒன்று. உலகத் திரைப்படங்கள் வரிசையில் இத்திரைப்படம் ஒளிபரப்பாகிறது. எந்த திரைப்படங்கள் என்று ஒளிப்பாகிறது என்று கண்டறிவது பெரிய சங்கடமாக இருக்கிறது. தொலைபேசியில் கேட்டால் ‘மக்கள் பாருங்க, அதுல படம் எப்ப போடுவோம்னு சொல்லுவோம்’ என்கிறார்கள். இதனால் முக்கியமான இந்தப் படங்களைப் பார்க்காமல் போக நேரிடுகிறது. நேற்று சங்கப்பலகை பார்த்தபோது இந்தப் படம் பற்றிய அறிவிப்பைச் செய்தார்கள். பகிர்ந்துகொள்கிறேன்.

25-ஆம் தேதி இரவு 8மணிக்கு (கிறிஸ்துமஸ் அன்று) மஜித் மஜிதியின் பரன் திரைப்படம் தமிழ் சப்-டைட்டிலோடு ஒளிபரப்பாகிறது.

நான் பரன் படம் பற்றி எழுதிய ஒரு பார்வை – http://nizhalkal.blogspot.com/2007/11/majid-majidis-baran-iranian-movie.html

Share