Archive for ஹரன் பிரசன்னா

அடியாள் – சிறையும் சிறைசார்ந்த இடமும்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘அடியாள் – ஓர் அரசியல் அடியாளின் ஒப்புதல் வாக்குமூலங்கள்’ புத்தகத்தின் விமர்சனம் உயிரோசையில் வெளியாகியுள்ளது.

சிறையில் நேரும் அனுபவங்களைப் பற்றி, இதற்கு முன்னர் நான் படித்திருந்த புத்தகம் ‘சிறை அனுபவங்கள்.’ (அகல் வெளியீடு.) அது இந்திய விடுதலைக்கு முன்னர் உள்ள சிறை சார்ந்த விஷயங்களைச் சொல்லியது. மலேசியச் சிறைகளில் நிகழும் கொடுமைகளைப் பற்றி நாளிதழ்களிலும், வார இதழ்களிலும், அக்கொடுமையை அனுபவித்தவர்கள் கொடுத்த நேர்காணலை வாசித்திருக்கிறேன். ‘சோளகர் தொட்டி’ நாவலில் சிறை போன்றதொரு அமைப்பில் கைதிகள் படும் அவஸ்தை பற்றிய, உயிர் கொல்லும் வர்ணனை உள்ளது. உயிர்மை வெளியிட்டிருக்கும், சாரு நிவேதிதாவின் புத்தகம் ஒன்றிலும் (தப்புத் தாளங்கள்) சிறை அனுபவங்கள் பற்றி வாசித்திருக்கிறேன். இவை எல்லாவற்றையும் அப்பாவிகளின் குமுறல் என வகைப்படுத்தலாம். ஒரு அரசியல் அடியாளாக இருந்த ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் படிப்பது இதுவே முதல்முறை.

ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்த ஜோதி நரசிம்மன் அக்கட்சியின் அடியாளாக இருக்கிறார். அக்கட்சிக்காக ஒரு அடிதடி வழக்கில் கைதாகிச் சிறை செல்லுகிறார். சிறை என்றால் தண்டனையாக அல்ல, விசாரணைக் கைதியாக. பத்திலிருந்து பதினைந்து நாள்கள் சிறையில் காணும் விஷயங்களைப் பற்றியும், அங்கே உள்ள கைதிகளைப் பற்றியும் அவர் தனது அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறார். பிணைவிடுதலை (ஜாமீன்) கிடைத்து வெளியில் வரும் அடியாள் அரசியலில் ஆர்வம் கொள்கிறார். தமிழர் தேசிய இயக்கத்தில் சேர்கிறார்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 26 பேருக்குத் தூக்குத்தண்டனை கிடைக்கிறது. அதை எதிர்த்து நடந்த பேரணியில், பழ. நெடுமாறன் தலைமையில் கலந்துகொள்கிறார். தடையை மீறிப் பேரணி என்பதற்காக, நெடுமாறன், வைகோ உள்ளிட்ட எல்லோரும் கைதாகிறார்கள். இவரும் கைதாகிறார். மீண்டும் சிறை. மீண்டும் அனுபவங்கள். அரசியல் கைதியாக அவர் சிறை செல்லும்போது, நெடுமாறன், வைகோவைப் பற்றிச் சொல்கிறார். வைகோவை ஆயுள்தண்டனைக் கைதிகள் கெரோ செய்வது போன்ற சுவாரஸ்யமான விவரங்கள் வருகின்றன. முதல் வழக்கில் கைதானதற்கும் இவ்வழக்கில் கைதானதற்கும் உள்ள வித்தியாசங்களை நினைத்துப் பார்க்கிறார். இன்னும் முதல் வழக்கே முடியாத நிலையில் அடுத்த வாய்தாவை எதிர்நோக்கியிருக்கிறார் ஜோதி நரசிம்மன்.

தான் குற்றம் செய்தேன் என்று ஒப்புக்கொள்ளும் ஒருவர் பார்வையில் சிறையின் அனுபவங்கள் விவரிக்கப்படுவது முக்கியமானது. அரசியல் அடியாளாக ஜோதி மாறியது, நெருக்கடியால் அல்ல, தேவையற்ற சகவாசங்களாலேயே என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார். நல்ல குடும்பம், நல்ல தந்தை, தாய் என அவருக்கு அமைந்திருந்தாலும், அந்த அரசியல் அடியாள் என்கிற போர்வையிலிருந்து அவரால் வெளிவரமுடியவில்லை. ஆனால் சிறையிலிருந்து வெளிவரும் அவர் அரசியல் அடியாளாகத் தொடர விரும்பவில்லை. சிறையில் அவர் படிக்கும் புத்தகங்கள் அவரைப் புரட்டிப் போடுகிறது. அரசியலுக்குச் செல்கிறார். அவர் கொள்கைக்காகச் சிறை செல்வது பிடித்திருக்கிறது.

சிறையில் ஜோதி சந்திக்கும் சிறைக்கம்பிகள்கூட தனக்கென கதையை வைத்துள்ளன. கைதிகள் அனைவரும் ஆளாளுக்கு ஒரு கதையைச் சொல்கிறார்கள். தவறாக காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களிலிருந்து, கொலை, கொள்ளையைச் செய்தவர்கள் என எல்லோருக்கும் ஒரு கதையும் காரணமும் இருக்கிறது.

சிறையில் எளிதாக தொலைபேசி கிடைக்கிறது. சிறையிலில்லாமல் பொதுவில் வாழும் மனிதர்களிடம் இருக்கும் பணப்புழக்கத்தைவிட சிறையில் பணப்புழக்கம் அதிகம் இருக்குமோ என்று யோசிக்க வைக்கிறது ஜோதி விவரிக்கும் சம்பவங்கள். நாடெங்கும் ஊழல், சிறையெங்கும் ஊழல். சிறையில் இருக்கும் ஒருவர் நினைத்த நேரத்தில் தொலைபேசியில் பேசமுடிகிறது. எல்லாவற்றிற்கும் பணம் தேவை. சிறைக்கைதிகளை நேர்காண வரும் உறவினர்கள், நண்பர்கள் தரும் பணம் இதற்குப் பெரிதும் உதவுகிறது. ஜோதியின் சிறை விவரணைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ‘மகாநதி’ திரைப்படம் மட்டுமே யதார்த்தத்தோடு ஒட்டிப்போகிறது. அதேபோல் ‘அது ஒரு கனாக்காலம்’ படத்தில் வரும், கருணாஸ் பாடும் கானாப்பாட்டு. சிறையில் இரவுகளில் ஏதேனும் ஒரு அறையிலிருந்து எப்படியும் ஒரு கானாப்பாட்டு கேட்கும் என்கிறார் ஜோதி நரசிம்மன்.

சிறையில் ஜோதி, அரசியல் கைதிகள் என்றில்லாமல், ஒரு ‘ஆன்மிகக் கைதியையும்’ சந்திக்கிறார். பிரேமானந்தா. பல்வேறு கைதிகள் மனிதாபிமானம் மிக்கவர்களாக ஜோதிக்கு அறிமுகமாவது போல, பிரேமானந்தா பற்றியும் உயர்வான கருத்துகளே ஜோதியால் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜாமீன் எடுக்க வசதியில்லாத பல விசாரணைக் கைதிகளுக்கு, பிரேமானந்தா உதவியதாகச் சொல்கிறார் ஜோதி.

விசாரணைக் கைதிகளின் மிக முக்கிய பிரச்சினை சாப்பாடு. ஜோதியின் விவரணையில் சாப்பாட்டிற்கு மிக முக்கிய இடம் உள்ளது. வீட்டில் வேண்டியதைக் கேட்டுச் சாப்பிடும் சுதந்தரம் முதல்நாளே சிறையில் பறிபோகிறது. நாக்கைப் பழக்கப்படுத்துவது அத்தனை எளிதானதல்ல. கைதிகளுக்கு அசைவ உணவு அந்தச் சமயத்தில் இல்லை என்பதால், பெருச்சாளியை சமைத்து உண்கிறார்கள். இப்போது அரசு கைதிகளுக்கு வாரம் ஒருமுறை அசைவ உணவு வழங்குகிறது.

சிறையில் இருக்கும் கைதிகளின் மீதான அணுகுமுறையில் கொஞ்சம் விவாதம் தேவைப்படுகிறது. சிறைகைதிகள் அப்பாவிகள் அல்ல என்பதும் உண்மையே. ஆனாலும் அவர்களுக்குத் தரப்படும் அடிப்படை வசதியைப் பற்றி அரசு விவாதிக்கவேண்டியது தேவையான ஒன்றே. இப்புத்தகத்தைப் படித்தபோது எனக்குத் தோன்றிய சிந்தனை இதுவே.

இந்தப் புத்தகத்தின் குறைகளாகச் சில விஷயங்களைச் சொல்லலாம். ஜோதி தான் கண்ட விஷயங்களைச் சொல்கிறார். அதில் எவ்வித வலியும் தெரிவதில்லை. மாறாக, பார்த்தவற்றைச் சொல்கிறார் என்கிற எண்ணமே மேலோங்குகிறது. மேலும் ‘ஒப்புதல் வாக்குமூலம்’ என்று சொல்லும் ஜோதி, சிறையில் இருந்ததே மொத்தம் பத்திலிருந்து இருபது நாள்களுக்குள்ளேதான் இருக்கும். அதுவும், குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்ட விசாரணைக் கைதியாக மட்டுமே. மேலும் ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லுமளவிற்கு ஜோதியின் வாழ்க்கை அப்படி சம்பவங்களால் நிறைந்து வழியவில்லை, அல்லது அவர் சொல்லவில்லை. ஒருமுறை கூட காவல்துறையினரால் அடிக்கப்படவில்லை. கொடூரமாக தண்டனை கொடுக்கப்படவில்லை. இப்படி எவ்வித அனுபவமும் இல்லாமல் இவர் பார்த்தவற்றை மட்டும் விவரிக்கும்போது, அதை இவர் கண்டவற்றைச் சொல்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ளமுடிகிறதே ஒழிய, ‘ஒப்புதல் வாக்குமூலமாக’ உணரமுடியவில்லை. நிறைய இடங்களில் இது தன் வாழ்க்கையைச் சொல்லுதல் என்கிற இடத்திலிருந்து விலகி, கதை சொல்லும் பாணியைப் பற்றிக்கொள்கிறது. இதனால் தீவிரத்தின் முனை மழுங்கடிக்கப்படுகிறது.

இப்புத்தகத்தில் கால அறிவு சுத்தமாக இல்லை. எந்த நேரத்தில் எது நடைபெறுகிறது என்கிற விவரங்கள் தெளிவாகச் சொல்லப்படவில்லை. நிகழ்காலத்தில் நடந்த சம்பவங்கள் என்பதால், விஷயங்களை வைத்து அது எப்போது நடந்தது என்பதனை யோசித்து, அக்காலகட்டத்தின் ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளை நினைவிற்குக் கொண்டுவரவேண்டியிருக்கிறது. இன்னும் பத்தாண்டுகள் கழித்து யாரேனும் இப்புத்தகத்தைப் படித்தால் குழப்பமே மிஞ்சும்.

ஒப்புதல் வாக்குமூலம் என்கிற வார்த்தைக்கு பலம் சேர்க்கும் வகையில், ஜோதி எக்கட்சியைச் சேர்ந்தவர், ஆளும் கட்சி எது, எதிர்க்கட்சி எது என்பன போன்ற விவரங்களைச் சொல்லியிருந்தால், அது உண்மையில் ஓர் ஒப்புதல் வாக்குமூலமாக ஆகியிருந்திருக்கும். எக்கட்சியிலும் அடியாள்கள் இல்லாமல் இருக்கமுடியாது என்கிற உண்மை எல்லோரும் அறிந்திருக்கிற நிலையில், இதை வெளியில் சொல்வதால் ஒன்றும் மாறிவிடப்போவதில்லை. இதைச் சொல்லாததற்கு ஜோதிக்கும் வேறு காரணங்கள் இருந்திருக்கலாம் என்றும் நினைக்கிறேன்.

இது போன்ற புத்தகங்கள் கைதிகளுக்கு ஒருவித புனித பிம்பத்தைக் கட்டமைக்க வாய்ப்பளிக்கின்றன. ஜோதிக்கும் இது நிகழ்கிறது. ஆனால் ஜோதி பெரிய குற்றவாளியாகவோ, கொலையாளியாகவோ இல்லாததால், இது அதிகம் உறுத்தவில்லை. இல்லையென்றால், ஆட்டோ சங்கருக்கும் வீரப்பனுக்கும் இங்கே ஒரு புனிதப்பிம்பம் ஏற்படுத்தப்பட்டது போன்ற தோற்றம் இவருக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.

ஜோதியை அவர் வாசித்த புத்தகங்கள் மாற்றுகின்றன என்று வாசித்தபோது சந்தோஷமாக இருந்தது. எனி இந்தியனில் இருந்தபோது ஒரு கைதியிடமிருந்து கடிதம் வந்திருந்தது. பசுக்கள் பன்றிகள் போர்கள் சூனியக்காரிகள் ஆகிய கலாசாரங்கள் என்கிற புத்தகத்தைக் கேட்டிருந்தார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. அவர் விசாரணைக் கைதியா, தண்டனைக் கைதியா என்கிற விவரங்கள் தெரியவில்லை. ஆனால் புத்தகம் ஒரு கைதியை இன்னுமொருமுறை மாற்றக்கூடும்.

இன்னும் வழக்கு முடியாத நிலையில் ஜோதியை அரசியல் அணைக்காமல் இருந்து, அவர் விரும்பும் அவர் மகள் தமிழினி அணைக்கட்டும்.

(அடியாள் – ஓர் அரசியல் அடியாளின் வாக்குமூலம், ஜோதி நரசிம்மன், 70 ரூபாய், கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை – 600 018.)

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

நியூ ஹொரைசன் மீடியாவின் புதிய புத்தகங்கள் பற்றிய தகவல்களைப் பெற START NHM என்று டைப் செய்து 575758 என்கிற எண்ணிற்கு SMS அனுப்பவும்.

Share

Good Bye Ganguly


இஷாந்த் சர்மாவும் ஹர்பஜனும் தோளில் தூக்கி வைத்து கங்குலியைக் கொண்டுவர இன்னொரு சடங்கு முடிந்தது. ஒரு வாரத்திற்கு முன்புதான் கும்ப்ளேவிற்கு இந்தச் சடங்கை செய்திருந்தார்கள் இந்தியர்கள் என்பதினால் அனுபவம் அவர்களுக்குக் கைக்கொடுத்திருக்கும். தோனி, கங்குலியின் கடைசி டெஸ்ட் என்பதால், ஆஸ்திரேலியா 9 விக்கட் இழந்தபின்பு அவரை அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்கச் சொல்லிப் பெருமைப்படுத்தியிருக்கிறார். இதுவும் முன்பு நடந்துகொண்டிருந்த சடங்குதானா அல்லது புதிய சடங்கு இப்போது தொடங்கியிருக்கிறதா என்று தெரியவில்லை.

சவுரவ் கங்குலியின் முதல் ஆட்டத்திலிருந்து நான் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இந்தியாவின் மிகச்சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவர். உலகின் சிறந்த ஒருநாள் ஆட்டக்காரர்களில் ஒருவர். அவர் இன்னும் இரண்டாண்டுகள் இந்தியாவிற்காக விளையாடியிருக்கலாம். திடீரென ஓய்வை அறிவித்தது குறித்து அதிர்ந்தேன். மிகச்சிறந்த வெளியேறுதலாக, அவர் வெளியேறும் டெஸ்ட் தொடரில் ஒரு சதமும் ஒரு அரை சதமும் அடித்தது குறித்து சந்தோஷமாக இருந்தது.

கங்குலியைப் போன்ற ஆட்டக்காரர்கள் எப்போதாவதுதான் கிடைப்பார்கள். சச்சின் டெண்டுல்கரின் பிரம்மாண்டத்தில், உள்ளொடுங்கிப் போயின கங்குலியின் சாதனைகள். ஒருநாள் ஆட்டத்தில் 22 சதங்கள் என்பது சாதாரண விஷயமல்ல.

பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில், அசாருதீன் மீது தவறுகள் இருந்த நிலையில், தொடர் தோல்வியால் சச்சின் தலைமைப் பொறுப்பை நிராகரித்த நிலையில், கங்குலி இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். சோர்ந்து போயிருந்த இந்திய அணிக்கு புதிய உற்சாகத்தைப் பாய்ச்சியவர் கங்குலி. அதுவரை தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் சக ஆட்டக்காரர்கள் மீது கோபத்தை, அட்டக்களத்தில் வெளிப்படுத்தியதில்லை. அசாருதீன் ஆட்டக்களத்தில் ஒரு கணவானாகவே நடந்துகொள்வார். அவர் தவறு செய்யும் சகவீரர் மீது ஆட்டக்களத்தில் கோபம் கொண்டது குறைவு. ஆனால் கங்குலி இவற்றையெல்லாம் ஏறக்கட்டினார். ஏதேனும் வீரர்கள் ஆட்டக்களத்தில் தவறு செய்யும்போது, அங்கேயே வெடித்தார். ‘தவறை அங்கே கண்டிக்காமல் எங்கே கண்டிப்பது’ என்று செய்தியாளர்களிடம் சீறினார். கங்குலியின் தலைமையின் கீழ் ஜூனியர் ஆட்டக்காரர்கள் நிறைய பேர் விளையாடியதால் இந்தக் கோபமும் எடுபட்டது.

இந்திய அணியின் மிகப்பெரிய சாபம் அணிவீரர்களுக்குள் இருக்கும் ஈகோ. சச்சின் – திராவிட் – கங்குலி காலத்தில் இது மிகப்பெரிய அளவில் குறைந்தது என்றே சொல்லவேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில உரசல்கள் இவர்களுக்குள்ளே இருந்தபோதும், பெரும்பான்மை சமயங்களில் இவர்கள் இணைந்தே செயல்பட்டார்கள். முக்கியமாக அசாருதீன் தலைமைப் பொறுப்பிலிருந்து டெண்டுல்கல்கரின் தலைக்கு தலைமைப் பொறுப்பு வந்தபோது ஏற்பட்ட தொடர் தோல்விகளின்போது, கங்குலியும் டிராவிட்டும் டெண்டுல்கருக்கு சிறந்த ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இதைப் பற்றி இந்தியா டுடே அப்போது ஒரு கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தது. அதேபோல் கங்குலி தலைமைப் பொறுப்பை ஏற்றபோது இந்தக்கூட்டணி தொடர்ந்தது. ஓர் ஆட்டம் என்பது அக்ரெஸிவ்வானது, அதில் தவறில்லை என்கிற நிலையை இந்திய கிரிக்கெட்டில் நிலை நிறுத்தியவர் கங்குலியே. அவர் சட்டையைக் கழற்றி சுற்றிக் காண்பித்ததற்கு (இங்கிலாந்துடனான ஆட்டமா, நினைவில்லை) வரிந்து கட்டிக்கொண்டு அவரைப் போட்டுத் தாக்கின ஊடகங்கள்.

ஒரு செயலை இந்தியர்கள் (உள்ளிட்ட ஆசியாக்காரர்கள்) செய்யும்போதும், அதே செயலை ஆஸ்திரேலியர்கள் அல்லது ஆங்கிலேயர்கள் செய்யும்போதும் உலக ஊடகங்கள் எப்படி நடந்துகொள்ளும் நாம் அறிந்ததே. அந்த உலக ஊடகங்களை ஒட்டி இந்திய ஊடகங்கள் வால் பிடிப்பதும் புதியதல்ல. சட்டையைக் கழற்றி சுற்றிய விஷயத்திலும் அதுவே நடந்தது. எதிரணி அப்படி நடந்துகொண்டிருந்தாலும், இந்திய அணியின் தலைமை அப்படி செய்திருக்கக்கூடாது என்கிற உபதேசங்கள் முன்வைக்கப்பட்டன. ஆட்டம் என்பது அக்ரெஸிவானது என்கிற எண்ணமுடைய கங்குலி இவற்றையெல்லாம் சட்டை செய்யவே இல்லை. நான் கங்குலியை மிகவும் ரசித்தது இதுபோன்ற தடாலடிகளிலேயே.

கங்குலியின் தலைமைப் பொறுப்பின்போது அவர் யாராலும் அண்டமுடியாத தீவாக மாறினார் என்கிற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. தான் விரும்பாத ஓர் ஆட்டக்காரரை அணியில் சேர்த்துவிட்டால், அவரை ஒழித்துக்கட்டுவதற்குக் கங்கணம் கட்டினார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பெரும்பான்மை ஊடகங்களில் வந்த இந்த செய்தி உண்மையாக இருக்கலாம். இதற்கான தண்டனையை அவர் கிரெக் சேப்பல் மூலம் அனுபவித்தார். ஃபார்ம் என்பது எல்லா நேரத்திலும் ஒருவருக்கு இருக்கமுடியாது என்பதை மறந்திருந்த கங்குலி, சேப்பல் மூலம் அதை நினைவுபடுத்திக்கொண்டார். டால்மியாவின் ஆதரவில் அதிகமாகச் செயல்பட்ட கங்குலியின் தேவையற்ற செயல்கள் சேப்பலின் அதிரடியால் முடிவுக்கு வந்தன. ஓர் அதிரடி இன்னோர் அதிரடியை அடக்கியது என்றே சொல்லவேண்டும். இந்தச் சறுக்கல் இல்லாமல் இருந்திருந்தால் கங்குலி இன்னும் இரண்டாண்டுகள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் விளையாடியிருக்கமுடியும்.

இந்த மோதலுக்கு கங்குலி கொடுத்த விலை அதிகமானது. அவர் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதோடு, அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். இது அதிகபட்ச முடிவு. இந்த முடிவு முட்டாள்தனமானது. கங்குலி போன்ற சிறந்த ஆட்டக்காரர்களுக்கு இந்திய கிரிக்கெட் அரசியல் தரும் தொல்லைகள் எல்லை மீறியவை. டால்மியா மூலம் அரசியல் செய்த கங்குலி அதே அரசியலுக்குப் பலியானார். லக்ஷ்மண் சொன்னது போல, சீனியர் ஆட்டக்காரர்களை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, ஓய்வெடுக்கச் சொல்லி நிர்ப்பந்திக்காமல் இருந்தாலே போதுமானது. எல்லா நேரத்திலும் லக்ஷ்மண் சொன்னதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றாலும், கங்குலி, சச்சின், டிராவிட் போன்ற ஆட்டக்காரர்களுக்கு அது பொருந்தவே செய்கிறது.

கங்குலி சதமடிக்கும் தருணங்கள் மிகச் சிறப்பானவை. 45லிருந்து 6 அடித்து 50ஐக் கடக்கவும், 95லிருந்து 6 அடித்து சதம் கடக்கவும் அவருக்கு மிகவும் பிடிக்கும். கண்ணை கண்ணை முழித்துக் கொண்டு, பிட்ச்சில் பாதி ஏறி சிக்ஸ் அடிக்கும் அழகு இன்னும் கண்ணில் நிற்கிறது. ஒரு பந்து மேலே பட்டுவிட்டால் சுருண்டு உடனே விழுந்துவிடுவார் கங்குலி. நாங்கள் எல்லாரும் ‘சரியான சோளக் கொல்லை பொம்மையா இருக்கானே’ என்று சொல்லிச் சிரிப்போம். இனி அந்தக் காலங்கள் திரும்பி வராது. இன்னும் இரண்டு வருடங்கள் இருந்து ஆடியிருக்கவேண்டிய கங்குலியை ஒழித்துக்கட்டியது கிரிக்கெட் அரசியல். அரசியல் என்றாலே அது அரசியலாகத்தான் இருக்கும். கங்குலி வெளியேறும் இப்போதைய வருத்தத்தில் நிழலாடுகின்றன இரண்டு முகங்கள். சச்சின், டிராவிட். இன்னும் என்ன என்ன சோதனைகளோ இருவருக்கும்.

ஒரு டெஸ்ட் தொடர் வெற்றி என்கிற நிம்மதியோடு வெளியேறும் கங்குலியை என்றென்றும் இந்திய கிரிக்கெட்டும் உலக கிரிக்கெட்டும் மறக்காது.

(குறிப்பு: எவ்வித ஆதாரத்தையும் பார்க்காமல் நான் என் மனதில் இருந்த சித்திரங்களை மட்டும் வைத்து எழுதியது. மேலும் ஒருநாள் ஆட்டங்களை மனதில் வைத்தே எழுதியது. தவறுகள் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். 🙂 )

Share

சூஃபி சொன்ன கதை – பீவியும் பகவதியும்

சூஃபி சொன்ன கதை – பீவியும் பகவதியும் – புத்தக விமர்சனம் உயிரோசை.காமில் வெளியாகியுள்ளது.

நன்றி: உயிரோசை.காம்

சூஃபியிஸம் என்பதை அன்பை முக்கியமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாம் (அதாவது ஷரியத் சட்டங்களை முக்கியமாக வைத்து இயங்காமல்) எனப் புரிந்துகொள்ளலாம். சூஃபிகள் எங்கு வாழ்கிறார்களோ அங்கே இருக்கும் மதங்களோடு ஒன்றிணைந்தே வாழ்கிறார்கள். அவர்கள் மதங்களைவிட மனிதர்களையும் அன்பையும் பிரதானமாகப் பார்த்து அதன்படி தங்கள் செயல்களை வடிவமைத்துக்கொள்கிறார்கள். இந்தியாவில் சூஃபிக்களை இந்துக்களும் முஸ்லிம்களும் முக்கியமானவர்களாகக் கருதுகிறார்கள். ஹிந்துவாக இருந்து, பின்னர் முஸ்லிமாக மாறி, தான் பிறந்து வளர்ந்த மதத்தின் தேவியையும் விக்கிரகத்தையும் கைவிடமுடியாமல் தவிக்கும் ஒரு பெண் பீவியாக மாறும் நாவல் ‘சூஃபி சொன்ன கதை.’ அந்த பீவியை ஹிந்துக்களும் முஸ்லிம்களும் வணங்குகிறார்கள். கார்த்தி என்னும் பெண், சித்தாராவாகி, வாழ்நாளெங்கும் தன்னை விரட்டும் காமம் சார்ந்த அகச்சிக்கல்களைப் புறந்தள்ளமுடியாமல் அதற்குப் பலியாகி, பீவியாகிறாள்.

பீவியின் மஸாரை (புனித சமாதி) ஹிந்துக்களும் முஸ்லிம்களும் வணங்கத் தொடங்குவதோடு நாவல் தொடங்குகிறது, அங்கு வரும் சூஃபி ஒருவர் ‘முதல் பீவி’யின் கதையைச் சொல்லத் தொடங்குகிறார்.

மேலே புல்லாரத் தரவாட்டில் கார்த்தி பிறக்கிறாள். கார்த்தி வளர வளர, அவளின் தாய்மாமன் சங்குமேனன் தன் மருமகள் கார்த்தியின் மீது – கேரள பாரம்பரியக் கட்டுப்பாடுகளுக்கு எதிரானதாகக் கருதப்படுகிறது இது – காமம் கொள்கிறான். கார்த்திக்கும் தன் தாய்மாமன் மீது இனம்புரியாத காமம் இருக்கிறது. ஆனால் சங்குமேனன் தன் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் நினைவில் கொண்டு அவளிடமிருந்து விலகியிருக்கிறான். அதுமட்டுமன்றி, கார்த்தியை பகவதியின் அம்சமாகவே காண்கிறான். கார்த்தியின் வீட்டில் அனைவரையும் பெரியம்மை நோய் தாக்கும்போது, கார்த்தி மட்டும் நோயிலிருந்து விலகி, ஜோதியாக ஒளிர்கிறாள். தறவாட்டைச் சோதனையிட வரும் வெள்ளைக்காரத் துரைமார்கள் பகவதியின் உருவத்தை ஜோதியாகக் கண்டு அஞ்சி ஓடுகிறார்கள். அந்த ஊருக்கு வியாபாரம் செய்ய வரும் மாமுட்டிக்கும் கார்த்திக்கும் ஈர்ப்பு ஏற்படுகிறது. மாமுட்டி மாப்பிள்ளா சமூகத்தைச் சேர்ந்தவன். தறவாட்டை விட்டுவிட்டு மாமுட்டியோடு செல்கிறாள் கார்த்தி. அதைத் தடுக்க நினைத்தாலும், தடுக்க இயலாதவனாக ஆகிறான் சங்குமேனன்.

ஊரே அதிசயிக்க, ஒரு இந்துப் பெண்ணை அழைத்துச் செல்லும் மாமுட்டியை அவரு முஸலியார் இஸ்லாமானவளாக மாற்றுகிறார். குப்பாயம் மாட்டி, ஐவேளை தொழுது இஸ்லாத்தின் கடமைகளை நிறைவேற்றுகிறாள். எப்போதும் படுக்கையறையில் மாமுட்டியுடன் காமத்தைத் தீர்த்துக்கொள்ளும் சித்தாராவாகிய கார்த்திக்கு வாழ்க்கையே புதுமையானதாகவும் இனிமையானதாகவும் தோன்றுகிறது. வியாபார விஷயமாக மாமுட்டி மீண்டும் வெளியூர் செல்லும் இரவில், மாமுட்டி இல்லாமல் அலைபாயும் அவள், தான் புகுந்த வீட்டைச் சுற்றிப் பார்க்கிறாள். அங்கு அவள் எதிர்பாராமல் காணும் தேவி விக்கிரகம் அவளுக்கு அவள் பகவதி தன்மையை மீண்டும் காட்டிக்கொடுக்கிறது. இஸ்லாம் வீட்டுப் பெண்கள் தங்கள் வீட்டிற்குள் ஏதோ இனம்புரியாத ஒன்று வந்துவிட்டதாக அஞ்சுகிறார்கள். ஆனால் மாமுட்டி அவளுக்குத் தனியே கோவில் கட்டித் தருகிறான். இந்த ஹராமான செயலைக்கண்டு, அவனது ஊர்க்காரர்களும் சொந்தக்காரர்களும் அவனை ஒதுக்கிவைக்கிறார்கள். அவரு முஸலியாரும் கடும் கோபம் கொள்கிறார்.

அவரு முஸலியாரின் குடும்பமும் நான்கு தலைமுறைகளுக்கு முன்புதான் மதம்மாறிய குடும்பம். பழம் ஹிந்துக் குடும்பத்தின் நினைவுகள் தாக்கத் தொடங்க, அவரு முஸலியார் தன்வசம் இழக்கிறார். என்ன செய்கிறோம் என்ற நினைப்பில்லாமல் ஹிந்து விக்கிரகங்களைத் தொழவும், நினைவு வந்து அல்லாவிடம் மன்னிப்புக் கேட்கவுமென அலைக்கழிகிறது அவரது வாழ்க்கை. தனது வாழ்க்கை சீரழிவது தன் மனைவியால் என்கிற எண்ணம் எழவும், அவளோடு உறவு கொள்ளமுடியாத அலியாகிறான் மாமுட்டி. தன் காமத்திற்கு வடிகாலாக, பதினைந்தே வயதான அமீருடன் உறவுகொள்ளத் தொடங்குகிறான். இதனை அறியும் கார்த்தி, காமத்தோடும் தாய்மை உணர்வோடும் அவனைத் தன் மார்போடு இறுக்கி, குளத்துக்குள் அமுக்கிக் கொல்கிறாள். ஒரு துரையைப் பார்க்கப் போகும் மாமுட்டி, தனது ஹராமான செயலுக்காகக் கொல்லப்படுகிறான். கார்த்தியும் கடலில் கலந்து பீவியாகிறாள். கடலில் நிலைதடுமாறும் ஆண்களைக் காத்து, கரை சேர்க்கிறாள் பீவி. அம்மக்கள் அவளுக்குக் கல்லறை கட்டித் தொழுகிறார்கள். அவள் பகவதியாகவும் பீவியாகவும் கொண்டாடப்படுகிறாள்.

இரண்டாம் பீவியின் கதையை சூஃபி சொல்லத் துவங்குவதுடன் கதை நிறைவடைகிறது.

ஒரு நாவலின் கதையை இப்படி முழுமையாகச் சொல்வது சரியானதல்ல என்றாலும், இந்த நாவலைப் பொருத்தவரையில் இது மிகவும் முக்கியமானதாகிறது. பகவதியாகத் தன்னை இனம் காணும் ஒரு பெண் பீவியாகும் கற்பனை மிக அசாதாரணமானது. இதைச் சாத்தியமாக்கியிருக்கிறார் எழுத்தாளர் ராமனுண்ணி. கதை முழுவதும் ஒருவித மந்திரச் சொல்லாடல்கள் போன்ற மொழியில் சொல்லப்படுகிறது. எம்.டி. வாசுதேவன் நாயர் இக்கதை பற்றிச் சொன்னதுபோல, பழைய வார்த்தைகளைக் கொண்டு புதிய பொருள்களை உருவாக்குகிறார் ராமனுண்ணி. இப்படி ஒரு நீண்ட, அசாதாரணமான கற்பனையை ஓர் எழுத்தாளர் சாத்தியமாக்கியிருக்கிறார் என்பதே ஆச்சரியமான ஒன்று.

சங்குமேனன் கார்த்தியின் மீது கொள்ளும் காமமும், அவன் பகவதி மீது கொள்ளும் பக்தியும் ஒன்றோடொன்று பொருந்திப் போவது மிகச் சிறப்பாகப் புனையப்பட்டுள்ளது. இந்த விவரிப்பிற்குத் தேவையான, ஒருவித மெஸ்மரிஸத்தை உருவாக்கக்கூடிய எழுத்து நடையை மிக அழகாகக் கையாண்டிருக்கிறார் ராமனுண்ணி. இது மிகவும் எளிதாகப் படித்துமுடிக்கப்படக்கூடிய நாவலல்ல. மாறாக, வாசகனின் முழுக்கவனத்தையும், கடுமையான உழைப்பையும் வேண்டும் நாவல் என்பதை நாவல் ஆரம்பித்த சில பக்கங்களிலேயே உணர்ந்துகொள்ளலாம்.

கார்த்தியின் அகச்சிக்கல்கள் இந்நாவல் முதலிலிருந்து கடைசிவரை விவாதிக்கப்படுகின்றன. அவளது அகச்சிக்கல்கள் முழுக்க முழுக்க காமம் சார்ந்தவையே. அவள் பூப்பெய்தும் காலத்தில் தன் தாய்மாமன் சங்குமேனன் மீது கொள்ளும் காமம் துவங்கி, தன் கணவன் மாமுட்டியோடு கொள்ளும் உறவுகள் வரை, அவள் நிலைகொள்ளாமல் தன்னையும் தன்னுடலையும் தன் வாழ்வையும் பற்றி எப்போதும் யோசிக்கிறவளாக இருக்கிறாள். உடல் மீது கவனமும் கடும் காமமும் இருக்கும்வரை அவள் பகவதியை நினைக்காமல் இருப்பதும், ஒரே நாளில் ஒரு விக்கிரகத்தை அவள் கண்டடையவும் மிக உக்கிரமாக அவளை பகவதி ஆக்கிரமித்துக்கொள்வதும் நடக்கின்றன. தன்மீது வந்து அழுத்தும் சுமைகளை நீக்க, அவள் வீடெங்கும் கிடக்கும் சுமை நிறைந்த பொருள்களாகத் தூக்கி இறக்குவது சிறப்பான குறியீடாக முன்வைக்கப்பட்டுள்ளது.

தன் புகுந்தவீட்டில் தேவி விக்கிரகத்தைக் கண்டடைவதுமுதல், அவள் ஒரு இஸ்லாமானவளாகவும் ஹிந்துவாகவும் இருக்கிறாள். அந்த இடத்தில் அவள் ஒரு பீவியாக மாறத் தொடங்குகிறாள். ஆரம்பத்தில் அவளிடமிருந்து விலகி ஓடும் பெண்கள், அவளுக்குள் இருக்கும் ஒருவித மந்திர சக்தியை அறிந்து, அவளை ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குள்ளாகிறார்கள். மிகப்பெரிய பிரச்சினையைக்கூட மிக எளிதாக அவள் எதிர்கொள்ளும் விதமும், எப்போதும் சாந்தம் தவழும் ஜோதி எரியும் முகமுமென அவளை எளிதாக இஸ்லாம் பெண்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அந்நேரத்தில் அவள் கணவன் அவளிடமிருந்து விலகுவது அவளுக்குப் பெரும் கலவரத்தை ஏற்படுத்துகிறது. எப்போதும் தன்னுள் பொங்கிப் பிரவகிக்கும் தாய்மையைப் பதினைந்து வயது அமீருக்கு அள்ளிக் கொடுக்கும்போது அவன் அதை ஏற்றுக்கொள்ளமுடியாமல் தவிக்கிறான். அவனை காமத்தின் உச்சியில், தாய்மையின் கனிவில், பகவதியின் உக்கிரத்தோடு நீரில் முக்கிக் கொள்ளும்போது கார்த்தி சொல்லும் வசனங்கள் மிக முக்கியமானவை. இத்தகைய அகச்சிக்கல் அலைக்கழிப்புகளுக்கு ராமனுண்ணியின் எழுத்தே அதற்கான உயிர்ப்பைக் கொடுக்கிறது. தறவாடெங்கும் பெயரியம்மை பரவுகிறது என்பதை ராமனுண்ணி சொல்லும் விதத்தை, அவரின் எழுத்து நடைக்கு இன்னொரு உதாரணமாகச் சொல்லலாம். ஜெயமோகனின் ‘டார்த்தீனியம்’ படித்தபோது வீடெங்கும் கருமை சூழ்ந்ததை உணர்ந்ததைப் போல, பெரியம்மை வீடெங்கும் வீரிய விதைகளாகப் பரவும் விவரணையைப் படித்தபோது, என் வீடெங்கும் அதன் விதைகள் காற்றில் உலவுவதுபோன்ற ஓர் எண்ணத்தை அடைந்தேன். இது ராமனுண்ணியின் மிகப்பெரிய வெற்றியல்லவா.

அவரு முஸலியார் அறிவு நிலையில் தன்னை முஸ்லிமாகவும், உணர்வு நிலையில் தன்னை இந்துவாகவும் நினைத்துப் படும் அவஸ்தைகளும் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன. நான்கு தலைமுறைகளுக்கு முன்பு, அவரின் முன்னோர்கள் கூட்டம் கூட்டமாக மதம் மாறுகிறார்கள். உயிர்பயம், காரிய சித்தி போன்றவை காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. இஸ்லாமாக மதம் மாற, சிலர் ஜோதிடம்கூடக் காண்கிறார்கள். மதம் மாற மறுக்கும் சிலர் உயிர் துறக்கிறார்கள். அப்போது மதம் மாறிவிட்டாலும், அவரு முஸலியாரின் தாத்தாவிற்குள் ஹிந்து நினைப்பு ஓடுகிறது. அது காலம் காலமாக மறைந்திருந்து, அவரு முஸலியாரின் உணர்வுக்குள் ஏறிக்கொண்டு அவரைப் பாடாய்ப்படுத்துகிறது. வேறு வழியறியாமல், உண்மையான முஸ்லிமாக வாழவேண்டிய ஆசை நிறைவேறாமல், இறந்துவிட முடிவெடுக்கிறார் அவரு முஸலியார். ஆனால் ஒரு பீவியின் தோற்றம் அவரது அலைக்கழிப்பிலிருந்து அவரை மீட்கிறது. ஒரு சூஃபியின் தேவையை மிக அழகாக இந்த இடத்தில் நிலைநிறுத்துகிறது நாவல்.

குறிஞ்சிவேலன் இந்நாவலை மலையாளத்திலிருந்து தமிழிற்கு மொழிபெயர்த்திருக்கிறார். மலையாளத்தில் ராமனுண்ணியின் நடை எத்தனை கடுமையானதாகவும், சவால் நிறைந்ததாகவும் இருந்திருக்குமென யூகிக்கமுடிகிறது. அதை மொழிபெயர்ப்பது எளிதான வேலையல்ல. அதைத் திறம்படவே செய்திருக்கிறார் குறிஞ்சிவேலன். ஆனால் பல இடங்களில், பல வாக்கியங்கள் பொருளற்றதாகத் தெரிகின்றன. அதேபோல் பல இடங்களில், அவள் – நான், அவனை – தன்னை – என்னை என்கிற குழப்பங்கள் காணப்படுகின்றன. ஒரு ஆசிரியரின் கூற்றும், ஒரு கதாபாத்திரத்தின் தன்கூற்றும் சட்டென மாறும் இடங்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் மொழிபெயர்ப்பாளர். பல இடங்களில் மலையாள வார்த்தைகள் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றிற்கான அடிக்குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்று. ஆனால் தேவையற்ற பல இடங்களில், அதற்கான தமிழ்வார்த்தைகள் உள்ள நிலையில் அவற்றை ஏன் அப்படியே பயன்படுத்தவேண்டும் என்று புரியவில்லை. வெளிச்சப்பாடு என்பதை வெளிச்சப்பாடு என்று எழுதி, அதற்கான ஒரு குறிப்பையும் கொடுப்பது சரியானதுதான். ஆனால் கிக்கிளி என்பதை அப்படியே பயன்படுத்தவேண்டியதில்லை. கிச்சுகிச்சு என்று சொல்லலாம். மேலும், நாவலில் இன்னும் இரண்டு இடங்களில் கிச்சுகிச்சு என்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது. புழை என்பதற்கு ஆறு என்றே பயன்படுத்தி இருக்கலாம். புழை என்று பயன்படுத்தி அதற்கான குறிப்பைத் தந்திருந்தாலும், இது தேவையற்றது என்றே தோன்றுகிறது. மூலச் சொல்லை அப்படியே மொழிபெயர்க்க முடியாத நேரத்திலும், அதன் தேவை அவசியம் என்று கருதுகிற இடங்களிலும் மட்டுமே அவ்வார்த்தையை அப்படியே பயன்படுத்திவிட்டு அடிக்குறிப்பு கொடுப்பது நல்லது என்பது என் எண்ணம். இவற்றை எல்லாம் மீறி, ஒரு சவாலான மொழிபெயர்ப்பை மிகச் சிறப்பாகச் செய்திருக்கும் குறிஞ்சிவேலன் பாராட்டுக்குரியவரே.

சூஃபி சொன்ன கதையின் மலையாள மூலம் கேரள சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுள்ளது. இது ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

சூஃபி சொன்ன கதை, நாவல், கே.பி. ராமனுண்ணி; தமிழில்: குறிஞ்சிவேலன், கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை – 600 018, விலை: 110 ரூபாய்.

Share

நான்கு கவிதைகள்

உயிரோசை.காமில் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன. நன்றி உயிரோசை.காம்.

யோகம்

என் அகமெங்கும் நெருப்பெரிய
தீராத வனத்தில்
அடைமழையில்
காத்துக்கொண்டிருக்கிறாள் குடைப்பெண்

எட்டும் தூரத்திலிருக்கும் அவள் கை
நெருங்க நெருங்க
தூரச் செல்கிறது

உச்சி ஏறியபின்புதான் கேட்கிறது
மரத்தின் கீழே காத்திருக்கும்
செந்நாய்களின் மூச்சிரைப்பு

உச்சிக்குப் பின்னும் மரம் நீட்டும்
யோகமொன்றில் அமர்கிறேன்
கொதி நெருப்படங்க

மெல்ல புன்னகைக்கிறாள் குடைப்பெண்.

அந்தரங்கம்

கண்ணாடியின் அந்தப்புறமிருந்து
செய்கையில் நிறைய சொன்னான்
நான் இப்புறமிருந்து
தலையாட்டிக்கொண்டிருந்தேன்
கண்ணாடியில் பிரதிபலிக்கின்றன
ஏகப்பட்ட கண்கள்

அவனது கண்கள் வழியாக

நிறைய பேசினான்
கேட்டுக்கொண்டே இருந்தேன்
நானும் என்னென்னவோ சொன்னேன்
திடீரென்று தாமரை மலரைப் பற்றிச் சொன்னான்
சட்டென நினைவுக்கு வந்தது
சில நாள்களுக்கு
கனவெங்கும் விரிந்து கிடந்த
தாமரை மலர்கள்
சொன்னேன், கேட்டுக்கொண்டான்.
பின்பும் ஏதேதோ பேசினோம்
வெறுமையடைந்த சொற்களின் ஒரு தருணத்தில்
எலுமிச்சை பற்றி ஏதோ சொன்னான்.
ஒரு நொடி வியப்புக்குப் பின்
என் கண்முன் விரிந்தது
இரண்டு நாள் முன்பு கண்ட கனவில்
சிதறி ஓடிய எலுமிச்சைகள்.
கேட்டுக்கொண்டான்.
தொலைபேசியை வைத்ததும்
மென்மையாகப் புன்னகைத்திருப்பானோ?.


ப்ளாட்ஃபார்ம்

காத்திருந்த இரண்டு ரயில்கள்
எதிரெதிர் நகரத் தொடங்க
இடைப்பட்ட காலத்தின் அதிர்வில்
நிலைகொண்டிருந்தேன்
கண்ணெங்கும் கம்பிகள் கடக்க

Share

கருத்த லெப்பை – அருவத்தின் உருவம்


கருத்த லெப்பை, கீரனூர் ஜாகிர் ராஜா, மருதா பதிப்பகம், ரூ 40.

சிறுவயதில் நாங்கள் சேரன்மகாதேவியில் குடியிருந்தோம். எங்கள் வீட்டிலிருந்து அடுத்த தெருவிற்குச் செல்ல ஒரு குறுக்கு வழியுண்டு. அந்த வழியில், கேஸ் சிலிண்டரின் வடிவத்தில் கல்லாலான ஒரு பீப்பாய் நின்றுகொண்டிருக்கும். அதன் குறுகிய கழுத்தில் கற்களைப் போட்டுவிட்டு ஓடுவார்கள் நண்பர்கள். அதனுள்ளே ஒரு பூதம் காத்திருக்கிறது என்று கதை கட்டிவிட்டார்கள். அதன் உருவம் பற்றிப் பல கதைகள் நிலவி வந்தன. சில நண்பர்கள் அந்த பீப்பாயின் குறுகிய கழுத்திற்குள் நெருங்கிப் பார்த்து, அதன் உருவத்தைப் பற்றிய கதையை அளந்தார்கள். நான் அந்த வழியாக செல்லும்போதெல்லாம் ஒன்றிரண்டு கற்களைப் போட்டுவிட்டு ஓடுவேன். ஒருதடவைகூட அதன் உள்ளே இருக்கும் பூதத்தின் உருவத்தைப் பார்த்ததில்லை. நிலவொளியில் வெட்ட வெளியில் ஒண்ணுக்கிருக்கும்போது அப்பூதம் பற்றிய பல்வேறு கற்பனைகள் எழும். அதன் உருவத்தைக் கண்டுவிட்ட சக வீர நண்பர்கள் மீது பொறாமையும், என் மீது எரிச்சலும் வரும். ‘சின்ன புள்ளைங்க ஆசையா வாட்சும் மோதிரமு செஞ்சு தரக் கேட்டாக்க, நீ சைத்தானச் செய்யச் சொன்னவனாச்சேடா’ என்கிற ஒரு வரியில் ஒட்டுமொத்தமாக விவரிக்கப்படுகிறது கருத்த லெப்பையின் கதாபாத்திரம். ராதிம்மா நாயகத்தின் கம்பீரத்தைச் சொல்லுமிடங்களில் கற்பனையில் அலையும் கருத்த லெப்பை தானாக ஒரு உருவத்தை உருவாக்கிக்கொள்கிறான். அவ்வுருவத்தை களிமண் சிலையாக்குகிறான் கருத்த லெப்பை.

கருத்த லெப்பையின் அக்கா ருக்கையா வயது அதிகமுள்ள, சாத்தான் வாசம் செய்யும் வீட்டிலிருக்கும் பதருதீனுக்கு வாழ்க்கைப்படுகிறாள். பதருதீன் சரியாவான் என நினைக்கும் ருக்கையாவின் வாழ்க்கை நிர்மூலமாகிறது. தன்னை அடைய நினைக்கும், பதருதீனின் அண்ணன் ஈசாக்கைப் புறந்தள்ளிவிட்டு, மனநிலை சரியில்லாத கனவோடு வெளியேறுகிறாள் ருக்கையா.

அஹம்மது கனி, எந்த ராவுத்தர் ஒரு லெப்பைக்கு ஓட்டு போட்டது என்று தீவிரமாக ஆராய்கிறார். பன்னிரண்டு வயதுப்பையன் அன்சாரியை முழுக்கப் பார்த்து முறுக்கேறிப்போகிறார். நூர்லெப்பைக்கு நெஞ்சுவலி வரும்போது பழிவாங்குகிறார்.

கருத்த லெப்பையையும் அவனது அக்கா ருக்கையாவைவும் சுற்றிவரும் கதை, அதன் வழியாக பல்வேறு சித்திரங்களை உருவாக்குகிறது. கருத்த லெப்பையின் உலகம் விசித்திரமானது. அவன் சிறு வயதுமுதலே சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவன் போல வளர்கிறான். உண்மையில் அவன் சரியானவனாக இருந்தாலும், அவன் கேட்கும் கேள்விகள், கொள்ளும் கற்பனைகள் எல்லாமே அவனுக்கு அனுமதிக்கப்பட்டதற்கு எதிரானவையாக இருக்கின்றன. லெப்பைகளுக்கு சரியான மரியாதையும் சம உரிமையும் தராத ராவுத்தர்களையும், ராவுத்தர்களுக்கு இணங்கிப்போகும் லெப்பைகளையும் கேள்வி கேட்கிறான். நாயகத்தின் உருவத்தை உருவாக்குகிறான். பாவாவுடன் சேர்ந்து கஞ்சா உண்கிறான். போர்ட்டரால் ஓரின வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறான். உருவம் செய்த விஷயம் வெளியில் தெரிய கல்லெறி பட்டு உயிரை விடுகிறான். கருத்த லெப்பையின் கதாபாத்திரம் வழியாக ஜாகிர் ராஜா முன்வைக்கும் கருத்துகள் பெரும் விவாத்திற்குரியவை. ‘மீன்காரத் தெரு’ நாவலில் ஜாகிர் ராஜா முன்வைத்த லெப்பை-ராவுத்தர் விஷயங்கள் இந்நாவலிலும் முக்கியத்துவம் கொள்கின்றன. அதோடு, ஓரினப் புணர்ச்சி, வயதான ஆண் ஒரு சிறுவன் மேல் கொள்ளும் ஓரின ஆசை எனப் பல்வேறு விஷயங்களைத் தொட்டுச் செல்கிறார் ஜாகிர் ராஜா.

இரண்டு விஷயங்களில் இந்நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று, லெப்பைகளின் வாழ்க்கையை மிக அழகாகப் பதிவு செய்கிறது. ஏற்கெனவே ‘மீன்காரத் தெரு’ நாவலில் லெப்பைகள் பற்றி எழுதிவிட்டாலும், அவற்றில் சொல்லப்படாத விஷயங்களை எழுதியிருக்கிறார் ஜாகிர் ராஜா. இரண்டாவது, உருவம் பற்றிய சிறுவனின் ஆசை விபரீதமாகப் போகும் விஷயத்தை பிரசார தொனியின்றி சொன்னது. உருவத்தை நினைத்தது மார்க்க ரீதியாகத் தவறு என்பதால் கருத்தலெப்பை இறந்தே ஆகவேண்டிய கட்டாயத்தை நாம் உணர்ந்துவிடுகிறோம். ஜாகிர் ராஜாவும் கருத்தலெப்பைக்கு அதே முடிவையே தருகிறார். இதன்மூலம் நாவலை சமநிலைக்குக் கொண்டு வந்துவிடுகிறார்.

மிகச் சிறிய விவரணைகளில் கதாபாத்திரங்களை நிறுவிவிடுவதில் ஜாகிர் ராஜாவின் திறமை வெளிப்படுகிறது. சாத்தான் உருவத்தில் மிட்டாய் செய்யச் சொல்லிக் கருத்த லெப்பை கேட்கும்போது, கருத்த லெப்பையின் ஒட்டுமொத்த உருவம் அங்கே கிடைத்துவிடுகிறது. ராதிம்மா நாயகத்தைப் பற்றிய விவரணைகளைச் சொல்லத் தொடங்கும்போது, இரண்டே வரிகளில் கருத்த லெப்பையின் உருவ ஆசையை விவரித்துவிடுகிறார். நாவலின் மையம் மிக அழகாக வெளிப்படும் அத்தியாயம் அது. ஈசாக் ருக்கியாவை அடைய நினைத்து, அவள் தன் கணவன் பதருதீனோடு வெளியேறும் காட்சியும் சில வரிகளில் முடிந்துவிடுகிறது. தன்னைவிட்டுவிட்டு வேறொருத்தியிடம் தொடர்பு வைத்திருக்கும் தன் கணவன் இறந்ததும், அவனைத் திரும்பிப் பார்க்காமல் செல்லும் முஸ்லிம் பெண்; அவன் இறந்ததும் அவனோடு தொடுப்பு வைத்திருக்கும் பெண் தன் முலையை அறுத்து கதறும் காட்சி என இரண்டும் எதிரெதிர் நிலைகளில் இருந்தாலும், அவற்றின் மூலம் இரண்டு பெண்களின் இருப்பையும் கவனப்படுத்துகிறார். இப்படி நாவல் அழகு கொள்ளும் இடங்கள் ஏராளம்.

சில அழகழகான விவரணைகள் ஆச்சரியம் கொள்ள வைக்கின்றன. பாவாவும் சோமனும் பேசிக்கொள்ளும் காட்சிகள், அம்மா முறுக்கு பிழியும் அழகிற்கு கருத்த லெப்பை நினைக்கும் உவமைகள், ருக்கையா பதருதீனுக்கு உணவு ஊட்டும்போது கொள்ளும் தாய்மையின் பரவசம் என கவித்துவம் கொள்ளும் வரிகளை நாவல் முழுதும் எழுதியிருக்கிறார் ஜாகிர் ராஜா.

‘மீன்காரத் தெரு’ நாவலில் தென்பட்ட அதே குறைகளே இங்கும் சொல்லப்படவேண்டியதாகிறது. அதிகமான பக்கங்களில் எழுதப்படவேண்டிய நாவல், 74 பக்கங்களில் எழுதப்பட்டிருப்பது மிகப்பெரிய குறை. இதனால் மிகப்பெரிய ஆளுமைகளாக உருவம் பெறவேண்டிய கதாபாத்திரங்கள் சட்டெனத் தோன்றி, சட்டென மறைகின்றன. கருத்த லெப்பை நாயகத்துக்கான உருவத் தேடலில் ஆர்வம் கொள்ளும் முகாந்திரங்கள் சரியாக விளக்கப்படவில்லை. மிக அழகாக ராதியம்மா சொல்லும்போது கற்பனை செய்தாலும், அக்கற்பனை அவனுக்கு ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் இல்லை. ஒரு சிறுவனின் இயல்பு அது என்றால், அது எப்படி உருவம் செய்யும் அளவிற்கு தீவிரம் பெறுகிறது என்பதைப் பற்றிய செய்திகள் இல்லை.

அஹம்மது கனி, பாவா, மாமு, சின்னப்பேச்சி, அபுபக்கர் எனப் பல்வேறு கதாபாத்திரங்கள், எண்ணெய் கலந்த நீரில் தோன்றி மறையும் வர்ணங்கள் போலத் தோன்றி மறைகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விஷயங்களே அவர்களை நாம் நினைத்துக்கொள்ள வைக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் விளக்கியிருந்தால், ஒவ்வொரு கதாபாத்திரமும் தன்னளவில் வளர்ந்து, மிகச்சிறப்பான நாவல் ஒன்றைக் கொண்டுவந்திருக்கும். இதை அதிக ஆர்வத்திலும் அவசரத்திலும் ஜாகிர் ராஜா செய்ததாக எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.

லெப்பைகளின் வாழ்க்கையில் புரையோடிப்போயிருக்கும் சில முக்கியமான விவாதத்திற்குரிய விஷயங்களை இந்நாவல் முன்வைக்கிறது என்கிற வகையில் இது முக்கியமான பதிவாகிறது. இன்னும் அதிகம் தேவைப்படுகிறது என்கிற நிலையில், அதற்கான திறப்புகள் உள்ள நிலையில் அவை சரியாகப் பயன்படுத்தப்படாததால் ஏமாற்றத்தையும் தருகிறது. அதே வேளையில், ஜாகிர் ராஜாவின் பயணத்தில் மிகச்சிறந்த நாவலொன்று வரும் நாள் அதிகமில்லை என்கிற நம்பிக்கையையும் அளிக்கிறது.

ஆன்லைனில் வாங்க: http://www.anyindian.com/product_info.php?products_id=34061

நன்றி: வடக்கு வாசல், நவம்பர் 2008.

Share

கடல்புரத்தில் – புத்தகப் பார்வை

கடல்புரத்தில், கிழக்கு பதிப்பகம், ரூபாய் 75.
ஆன்லைனில் வாங்க: காம்தேனு.காம்.

தமிழில் கடல்புரத்தைச் சார்ந்த நாவல்கள் எல்லாமே பெரிதாகப் பேசப்பட்டவை. ஒரு கடலோர கிராமத்தின் கதை (தோப்பில் முஹம்மது மீரான்), புயலிலே ஒரு தோணி மற்றும் கடலுக்கு அப்பால் (ப.சிங்காரம்), ஆழிசூழ் உலகு (ஜே.டி. குரூஸ்). வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவலும் சிறப்பான ஒன்றே.

கடல்புரத்தில் வாழும் ஒரு மீனவ கிறித்துவக் குடும்பத்தின் கதை. பிலோமியின் நிறைவேறாத காதலின் வழியே, குருஸுவின் உலகத்திற்கும் அவரது மகன் செபஸ்தியின் உலகத்திற்கும் இடையேயான தலைமுறை இடைவெளியின் வழியே, ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் போராட்டம், வன்மம், உறவு, துரோகம் என பல உணர்வுகளை மையமாக வைத்துச் சுழலும் நாவல்.

குருஸு தன் பரம்பரைத் தொழிலான மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு நகரத்திற்குச் செல்ல விருப்பப்படாதவர். மகன் செபஸ்தி எல்லாச் சொத்தையும் விற்றுவிட்டு நகரத்தில் ஆசிரியராக வாழும் வாழ்க்கையைத் தொடர விரும்புபவன். குருஸுவின் மனைவி ஒரு வாத்தியாரோடு தொடர்பு வைத்திருப்பவள். குருஸுவின் மகள் பிலோமி, சாமிதாஸோடு ஏற்பட்ட காதலில் தன்னை இழந்தவள். செபஸ்தியும் ரஞ்சியுடனான காதலில் தோல்வி அடைந்தவனே. குருஸு படகில் மீன்பிடிப்பவர். அங்கே லாஞ்சில் சென்று மீன் பிடிப்பவர்களுக்கும் படகில் சென்று மீன்பிடிப்பவர்களுக்கும் எழும் பிரச்சினையில் ஒரு உயிர்ப்பலி நேர்கிறது. குருஸுவின் மனைவி அதிகம் குடித்து, கீழே விழுந்து அடிபட்டு இறக்கிறாள். இனியும் கடல்புரத்திலேயே மீன் பிடித்து வாழ்க்கையைக் கழிக்கமுடியாது என்பதைப் புரிந்துகொள்ளும் குருஸு, வேறு வழியின்றி, தன் சொத்தை விற்றுவிட்டு நகரத்திற்குச் செல்லமுடிவெடுக்கிறார். முடிவெடுத்துவிட்டாலும், தன் ஊரை, தன் மண்ணை விட்டுப் பிரியும் சோகம் அதிகமாக, அவர் புத்தி பிறழ்கிறது. குருஸுவின் மனைவியோடு தொடர்பு வைத்திருந்த வாத்தியார், பிலோமிக்கு உதவத் தொடங்க, தன் நினைவுகளோடு, அங்கேயே வாழ்க்கையைத் தொடருகிறாள் பிலோமி.

கதை என்பது தனியாக இல்லை என்பதே இந்நாவலின் முக்கியத்துவம். கடல்புரத்தில் அன்றாடும் நிகழும் நிகழ்வுகளும், யாரும் எப்போதும் கடல்புரத்தில் கண்டுவிடக்கூடிய மக்களின் முகமுமே நாவல் எங்கும் காட்டப்படுகின்றன. அதில் கதை தன்னை தக்கவைத்துக்கொள்கிறது. பிலோமி தன் காதல் நிறைவேறாது என்பதை மிக எளிதாக ஏற்றுக்கொள்கிறாள். தன் அண்ணன் ரஞ்சியுடன் கொண்டிருந்த காதலும் இப்படி நிறைவேறாமல் போனதே என்பது அவளுக்குத் தெரிந்திருந்ததால் தன் காதலும் நிறைவேறாமல் போவதில் அவளுக்குப் பெரிய அதிர்ச்சியில்லை. எதிர்பாராமல் அவளுக்கும் சாமிதாஸுக்கும் இடையே ஏற்படும் உடலுறவு அவள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.

குருஸுவின் மனைவி மரியம்மைக்கும் வாத்திக்கும் இருக்கும் உறவு சொல்லப்பட்டிருக்கும் விதம் அழகானது. மரியம்மையின் மரணத்தின்போது வாத்தி அடையும் கலக்கங்களும் ஒன்றிரண்டு வரிகளில் விளக்கப்பட்டுவிடுகின்றன. வாத்திக்கும் பிலோமிக்கும் இடையே உருவாகும் அன்பும், உறவும் புதிர்த்தன்மை கொண்டதாக இருக்கிறது. வாத்தி பிலோமியிடம் மரியம்மையையே பார்க்கிறார். ஊரிலும் பலவாறாகப் பேச்சுகள் அடிபடுகின்றன. ஆனால் கதையில் எந்த ஒரு இடத்திலும் பிலோமியோ, வாத்தியோ அதை மறுப்பதுமில்லை; ஏற்பதுமில்லை.

எல்லா கதாபாத்திரங்களும் தன்னளவில் நிறைவுபெற்று விளங்குகின்றன. அதிலும் பிலோமியின் பாத்திரம் நாவலில் பெரும் எழுச்சி கொள்கிறது. மிகச்சாதாரணமாக, தன் காதலனைக் காண்பதையே இன்பமாகக் கருதும் ஒரு சிறிய பெண்ணாக அறிமுகமாகும் பிலோமி, வாத்தியின் புதிரான அன்பை ஏற்றுக்கொள்வதும், ரஞ்சியின் அன்பைப் பற்றி நினைத்து அடையும் மகிழ்ச்சியும் என வேறு ஒரு பரிமாணம் கொண்ட பெண்ணாக, வாழ்க்கையில் எல்லாவற்றையும் கண்டு அனுபவித்து அதன் பின் கிடைக்கும் அனுபவத்தைக் கைவரப்பெற்றவளாக முதிர்ச்சி பெறுகிறாள். இந்த முதிர்ச்சிக்குக் காரணம் என்று பார்த்தால், அவள் சாமிதாஸுடன் கொள்ளும் உறவு. அந்த உறவுக்குப் பெண் அவளது சிறுமித்தன்மை காணாமல் போகிறது. சாமிதாஸுடன் தனக்குத் திருமணம் நடக்காது என்பது தெரிந்தவுடன், அவள் இவ்வுலகத்தில் எல்லா அனுபவங்களையும் கண்டு தெளிந்துவிட்ட பெண்ணாகிவிடுகிறாள். அவளால் வாத்தியுடன் உறவு வைத்துக்கொண்டிருந்த தன் மரியம்மையை நேசிக்கமுடிகிறது. வாத்தியைப் புரிந்துகொள்ளமுடிகிறது. அவளது உலகம் எல்லாரையும் நேசிக்கும் உலகமாகிவிடுகிறது.

இந்நாவலில் சொல்லப்படும் விவரணைகளே கடல்புரத்தையும் அது சார்ந்த மக்களின் செயல்பாடுகளையும் கண்முன் நிறுத்துகின்றன. இந்த எளிமையான, பலமான விவரணைகள் வழியாகவே கதாபாத்திரங்கள் உயிருள்ளவர்களாக மாறுகிறார்கள். கதையை படித்துமுடித்ததும், கடல்புரத்து மனிதர்களோடு வாழ்ந்துவிட்ட உணர்வைத் தருபவை இந்த விவரணைகளே. இந்த விவரணைகள் தனியே தெரியாமல், மிக நேர்த்தியாக கதையோடு பின்னிக் கிடக்கின்றன என்பதால், அவை நம்மை கடலுக்குள்ளும், அதைச் சுற்றிய ஊருக்குள்ளும் எளிதில் இழுத்துச் செல்கின்றன.

நாவலின் இன்னொரு முக்கியத்துவம் அதன் வட்டார மொழி. கடல்புரத்து கிறித்துவ மக்களின் வட்டார மொழியை அவ்வளவு சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார் வண்ணநிலவன். வண்ணநிலவன் சில மாதங்கள் கிறித்துவராக மதம் மாறி வாழ்ந்திருந்தார் எனக் கேள்விபட்டேன். இது உண்மையா எனத் தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு சிறப்பான நாவலைக் கொண்டுவர, அக்காலகட்டம் உதவியிருக்குமானால், அதற்காக மகிழலாம். இந்நாவலை வண்ணநிலவன் எழுதும்போது 29 வயது. என்னளவில் இது ஓர் ஆச்சரியம்; அதிசயம்.

Share

விமர்சகர் வெங்கட் சாமிநாதனிடம் இருந்த சில புகைப்படங்கள்

பழைய படங்களைப் பார்ப்பதில்தான் எவ்வளவு சந்தோஷம். இன்று தன் வலைப்பதிவில் தளவாய் சுந்தரம் ஒரு புகைப்படத்தைப் போட்டிருந்தார். அதில் அவருக்கே பலரைத் தெரியவில்லை. வெங்கட் சாமிநாதனிடம் மடலில் கேட்டேன், அப்புகைப்படத்தில் இருப்பவர்கள் யார் யாரென. அப்போது அவரிடமுள்ள புகைப்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தது. அதை வலைப்பதிவில் வெளியிடவேண்டுமென்று கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் ஸ்கேன் செய்து வைத்த புகைப்படங்கள் இவை. இப்போதுதான் வெளியிடுகிறேன். வெங்கட் சாமிநாதன் தன் பழைய நினைவுகளில் மூழ்கிவிடுவார் என்பது மட்டும் உறுதி. 🙂

இரா. முருகனைப் பார்த்தால் எனக்கு ஏதோவொரு பழைய படத்தின் வில்லன் போலத் தோன்றுகிறார். அவரிடமே இந்தப் புகைப்படம் இருக்குமா எனத் தெரியவில்லை.

சு.ராவைப் பார்த்தால் பழைய மலையாளப் படத்தில் வரும் ஒரு நடிகர் போலத் தோன்றுகிறார்.

க்ரியா ராமகிருஷ்ணன் வாயிலிருக்கும் சிகரெட்டைப் பற்றவைக்கும் வெங்கட் சாமிநாதன் – அந்தப் புகைப்படம்தான் எவ்வளவு இயற்கை!

நீல. பத்மநாபன் எழுத்தாளருக்கு உரியதாகக் கருதப்படும் சர்வ லட்சணங்களுடன் பொருந்திப் போகிறார்!


வில்லன் நடிகர் போன்றிருக்கும் இரா. முருகன்

மௌனி, வெங்கட் சாமிநாதன்

கிருஷ்ண ஐயர்

மௌனி, வெங்கட் சாமிநாதன்

மௌனி

மௌனி

பிரமிள், முத்துசாமி

பிரமிள், முத்துசாமி

கே.வி. சுப்பண்ணா

சி.சு. செல்லப்பா, வெங்கட் சாமிநாதன்

மலையாள நடிகர் போன்று தோற்றமளிக்கும் சுந்தர ராமசாமி.

வெங்கட் சாமிநாதன், பிரமிள்

வெங்கட் சாமிநாதன், க்ரியா ராமகிருஷ்ணன்

வெங்கட் சாமிநாதன், தி.ஜானகிராமன்

வெங்கட் சாமிநாதன், மௌனி

வெங்கட் சாமிநாதன், மௌனி

வெங்கட் சாமிநாதன், தி.ஜானகிராமன்

நீல பத்மநாபன்

தி.ஜானகிராமன்

சே. ராமானுஜம்

Share

திறப்பு – நெடுங்கதை

ஆசிஃப்மீரான் நடத்தும் பண்புடன் குழுமத்தின் முதலாண்டு விழாவிற்காக எழுதிய குறுநாவல் இது. குறு நாவல் ரொம்ப குறுகிவிட்டதால், நெடுங்கதை என்று பெயரிட்டுவிட்டேன். 🙂

நன்றி: பண்புடன் குழுமம்.

திறப்பு

(1)

அனு ஆழ்ந்த மயக்கத்திலிருப்பதாக சீனிவாச ராவும் விஜயலெக்ஷ்மியும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அனுவின் மூச்சு சீராக இயங்கிக்கொண்டிருந்தது. பெரியதாக திறந்துகிடந்த பழங்கால மருத்துவமனையின் ஓர் ஓரத்தில் உள்ள படுக்கையில், பச்சை நிறப் போர்வை மூடி, அனு செயலற்றுக் கிடந்தாள். ஜன்னல்கள் வழியே வரும் காற்று அங்கிருப்பவர்களின் எண்ணங்களைக் கலைத்துப் போட்டுக்கொண்டிருந்தது. அனுவைப் பார்க்க வருபவர்களிடமெல்லாம் சீனிவாசன் தன் மகளைப் பற்றி டாக்டர்கள் சொன்னதை கொஞ்சம் இட்டுக்கட்டி கூடுதலாகச் சொல்லிக்கொண்டிருந்தார். விஜயலெக்ஷ்மி நொடிக்கொருதடவை வராத கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். போலியோவால் பாதிக்கப்பட்டு சூம்பிக் கிடக்கும் அனுவின் ஒரு காலை அனிச்சையாகத் தடவிக்கொண்டிருந்தாள் விஜயலெக்ஷ்மி. அனு தன் வயிற்றில் பிறந்ததே தேவையற்றது என்று பலமுறை நினைத்துக்கொண்டிருக்கிறாள். அப்போதும் அவளுக்கு அதே எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது. அனுவால் தானும் தன் கணவனும் என்ன சந்தோஷப்பட்டுவிட்டோம் என்று யோசிக்கத் துவங்கினாள். இதில் ஆஸ்பத்திரியில் தங்கவேண்டியதும் இங்கேயே படுத்து உறங்கி இங்கேயே இருக்கவேண்டியிருப்பது குறித்த தீராத எரிச்சலும் விஜயலெக்ஷ்மிக்கு ஏற்பட்டிருந்தது. அனு இங்கு வந்து சேர்ந்து 5 நாள்கள் ஓடிவிட்டிருந்தது. அன்றைக்கு கக்கூஸை ஒழுங்காகக் கழுவியிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருந்திருக்காது. அனு ஐயோ என்ற சத்தத்தோடு விழுந்தாள். தலையில் ரத்தம் சொட்ட அவளைத் தூக்கிக்கொண்டு இங்கு ஓடிவந்தார்கள்.

சீனிவாசனின் வாழ்க்கை அந்த அந்த நிமிடங்களின் நினைப்பிலேயே கழிந்துவிடும். அப்போது அந்த நிமிடத்தில் ஜன்னலில் அங்குமிங்கும் ஓடும் அணிலைப் பார்த்துக்கொண்டிருந்தார். தன் கையில் பணமில்லாதது பற்றியோ, அனுவிற்கு அந்த மருத்துவமனையில் அளிக்கப்படும் மோசமான சிகிச்சை பற்றியோ அவர் யோசிக்கவில்லை. இப்படி அனுவைப் பார்த்துக்கொண்டு, அணிலைப் பார்த்துக்கொண்டு, சதா அழுகை முகத்தோடு எங்கேயோ வெறித்துக்கொண்டிருக்கும் விஜயலெக்ஷ்மியைப் பார்த்துக்கொண்டு இருப்பது அவருக்கு பெரும் எரிச்சல் தந்தது. அந்த எரிச்சல் பழக்கப்பட்டும் விட்டது. எதிர் படுக்கையிலிருந்த சிறுமியுடன் தங்கியிருக்கும் அவளது அம்மாவும் அப்பாவும் ரொம்ப அன்னியோன்யமாக இருந்தது காரணமில்லாமல் அவருக்கு எரிச்சலைத் தந்தது. எப்போது இந்த ஆஸ்பத்திரியை விட்டுப் போவோம் என்றிருந்தது.

அனு அவளைச் சுற்றி நடப்பதையெல்லாம் உணர்ந்துகொண்டிருந்தாள். தலைமாட்டில் அணில் ஓடிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. தன் அம்மா தன் காலைத் தடவிக்கொண்டிருக்கிறாள் என்று உணர்ந்தாள். தான் பிறந்த முப்பந்தைந்து வருடத்தில் அவள் தன் சூம்பிப் போன காலைத் தடவியதாக நினைவில்லை. அதனால் தன் அம்மா இப்போது தன் காலைத் தடவிக்கொண்டிருப்பது பற்றி ஆச்சரியமாக இருந்தது. சந்தோஷப்படவேண்டுமா என்று யோசித்தாள் ஏதேனும் வேறு நினைவில் அவள் காலைத் தடவிக்கொண்டிருக்கலாம் என்றும் நினைத்தாள். எதிர் படுக்கையிலிருக்கும் சிறுமியின் அப்பாவும் அம்மாவும் இப்போதும்கூட ஏதேனும் பேசி சிரித்துக்கொண்டிருப்பார்களோ என்று எண்ணம் ஓடியது. டாக்டர் வந்து ஊசி போடும்போது ‘இன்னும் எத்தன நாள் இப்படி’ என்று கேட்க நினைத்தது நினைவுக்கு வந்தது. ஒரு காலை ஊன்றி, இன்னொரு காலை இழுத்துக்கொண்டு நடக்கும்போது, ஒரு கால் வழுகிவிட்டால் இப்படித்தான் விழவேண்டியிருக்கும். விழுந்து விழுந்து நடை பழகி, பின்பு நடக்கும்போதெல்லாம் விழுவதைப் பழக்கமாக்கிக் கொண்டவள். வயதுக்கு வந்த மறுநாள் திடீரென தான் ஒரே நாளில் பெரிய மனுஷியாகிவிட்ட தோரணையில், இந்த உலகமே சுருங்கிப் போய் சாதாரண விஷயமான நினைப்பில் நடந்துகொண்டிருந்தபோது, பஸ் ஸ்டாண்டில் அவளையொத்த சிறுவர்கள் முன்னிலையில் திடீரெனக் கீழே விழுந்தாள். அவள் கட்டியிருந்த பாவாடையும் மேலேயேறி சூம்பிப் போன காலும் கன்னங் கரேலென தொடையும் வெளியில் தெரிந்தபோது, எத்தனை நாளானாலும் தான் பெரிய மனுஷியாகமுடியாது என்கிற எண்ணம் வந்தது. இப்போதும் நினைத்துக்கொண்டாள், தான் பெரிய மனுஷியில்லை. பெரிய மனுஷி என்றால், கல்யாணம் ஆகியிருக்கவேண்டும். குழந்தை இருக்கவேண்டும். அதட்டவும் திட்டு வாங்கவும் திட்டவும் கணவன் இருக்கவேண்டும். குறைந்தபட்சம் நல்ல காலாவது இருக்கவேண்டும்.

கக்கூஸைக் கழுவி விடச் சொல்லிச் சொல்லி அனு அலுத்த நாளில்தான் நிலைதடுமாறிக் கீழே விழுந்தாள். ‘கால் முடியாது, சரி. அதுக்காக சின்ன சின்ன வேலையயும் பாக்கக்கூடாதா? ஒரு பொண்ணுக்கு இது நல்லதில்லம்மா’ என்கிற அம்மாவின் ஜபத்தின் எரிச்சலில் வேகமாக நடந்தபோதுதான் விழுந்தாள். காலில்லை என்கிற சலுகையே எரிச்சலாக மாறிப்போன வீட்டில் இருக்கவே அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அனுவிற்கு அவள் வீட்டை விட்டு வேறு வீட்டிற்கு நிரந்தரமாகப் போகும் நேரமே வாய்க்கவில்லை.

சூம்பிப் போன கால்களுக்கு மேல் பெருத்துப்போன தொடைகளுடன் பெருத்துப்போன உடலுடன் கன்னங் கரிய நிறந்த்தில் லட்சமணற்ற தனது முகத்திற்கு திருமணம் நடக்காது என்பதை அனு மெல்லவே புரிந்துகொண்டாள். உடலைத் தூக்கி நடக்கமுடியாத நேரத்தில், சோம்பேறித் தனத்தில் அப்படியே அவள் தவழும்போது, சீனிவாசன் தலையில் அடித்துக்கொண்டு, ‘கொட்டிக்காத, கொஞ்சமா தின்னுன்னா புத்தி இருக்குதா. இப்ப பாரு, ஒடம்பு பெருத்துப் போய் இருக்கிற ஒரு கால வெச்சும் நடக்க முடியல’ என்று சலித்துக்கொள்வார். “நானாதான இழுத்துக்கறேன், உன்ன கூப்பிடலயே.” “வாய்க்கு ஒண்ணும் கம்மியில்ல, இன்னும் கொஞ்சம் உடம்பு பெருத்துச்சுன்னா, நாந்தான் அள்ளிப் போடணும்.” இரண்டு கைகளைச் சேர்த்து சைகையில் காண்பித்தபடியே சொன்னார். அனுவிற்கு இப்படி உடம்பை இழுத்துக்கொண்டு போவதைக் காட்டிலும், படுக்கையில் விழுந்துவிட்டால்கூட நல்லது என்று தோன்றியது.

தன் கால்மாட்டில் அம்மாவின் பேச்சுச் சத்தம் கேட்டது. மெல்ல கண்களை திறக்க எத்தனித்தாள். எத்தனை முயன்றும் அவளால் கண்களைத் திறக்கமுடியவில்லை. அம்மாவின் பேச்சிலிருந்து, பக்கத்து வீட்டுப் பையன்கள் வந்திருக்கவேண்டும் என்பது புரிந்தது. இந்த உலகத்தில் பிரச்சினையில்லாதது ஆண்களாகப் பிறந்துவிடுவது. அனுவிற்கு தான் பெண்ணாகப் பிற்ந்ததுகுறித்த பெருத்த அவமானம் எப்போதும் இருந்தது. அதிலும் அழகான கால்களுடன், சிவப்புத் தோலுடன், எடுப்பான மார்போடு கர்வத்துடன் நடக்கும் பெண்களைக் கண்டுவிட்டால், அவளுக்கு தன் பிறப்பைப் பற்றிய அவமானம் பிடுங்கித் தின்றுவிடும். ஆனால் ஆண்களாகப் பிறந்துவிட்டால் அசிங்கமாக இருந்தாலும் பிரச்சினையில்லை. காலில்லாவிட்டால் கூட பிரச்சினையில்லை. ஆண்களை இந்த உலகம் கண்டிப்பதில்லை. அவன் வயசுக்கேற்ற விஷயங்களை அவன் செய்துகொண்டிருக்கலாம். வயசுக்கு ஒத்துவராத விஷயங்களைக் கூடச் செய்யலாம். யாரும் கேட்கப்போவதில்லை. தன் 35 வயதில், முழு நிர்வாணமாக ஓர் ஆணின் படத்தைக்கூட அவள் பார்த்ததில்லை. ஆனால் அன்றொருநாள் தற்செயலாக பக்கத்துவிட்டு ஜன்னல் வழிப் பார்த்தபோது, பையன்கள் உட்கார்ந்து டிவியில் ஏதோ படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். படத்தில் யார் உடலிலும் ஒட்டுத்துணி கூட இல்லை. அவளுக்கு அங்கேயே நிற்பதா, போய்விடுவதா என்கிற எண்ணம் ஒரு நிமிடம் எழுந்தது. அதற்குள் ஒரு பையன் வந்து திறந்திருந்த ஜன்னலை மூடி விட்டுச் சென்றான். சட்டென அந்த இடத்தில் இருந்து விலகி வீட்டிற்கு வந்தாள். அந்த ஒரு நிமிடத்தில் கண்ணில் பட்ட காட்சி அன்று முழுவதும் அனுவை அலைக்கழித்தது. ஆண்களாகப் பிறந்திருந்தால் இந்த அலைச்சல் இல்லை. எப்படியும் குறைந்தது ஒரு பெண்ணையாவது அவன் அனுபவிக்கலாம். இப்படி ஆண் வாசனை என்ன என்றே அறியாமல், கண்ணில் பட்ட ஒரு காட்சியை காலம் முழுவதும் மனதில் இருத்தி கற்பனை செய்துகொண்டிருக்கவேண்டியதில்லை. திடீரென வாசலில் சத்தமும் சண்டையும் கேட்டது. பக்கத்து வீட்டுப் பையனின் அண்ணன் அவன் தம்பியை ஓங்கி செவிட்டில் அறைந்தான். மற்ற பையன்கள் அவமானம் பிடுங்கித் தின்ன அங்கே நின்று கொண்டிருந்தார்கள். அன்று அனுவிற்கு சந்தோஷமாக இருந்தது.

பையன்கள் தன் அம்மாவிடம் சொல்லிவிட்டுப் புறப்படுவது தெரிந்தது. ஆண்களாகப் பிறந்தால், எந்த அவமானம் நேர்ந்தாலும் அடுத்து ஒன்றுமே நடக்காததுபோல் இருக்கலாம். அவளுக்கு அப்போதும் தான் ஏன் ஓர் ஆணாகப் பிறக்காமல் போனோம் என்று தோன்றியது. பெண்ணாகப் பிறந்ததில் கூட பிசகில்லை, கால் நன்றாக இருந்திருந்தால், ஒரு கல்யாணமாவது ஆகியிருந்திருக்கலாம்.

இருபது வயதாக இருக்கும்போது எப்படியும் தனக்கு கல்யாணம் நடக்கும் என்றே நம்பினாள் அனு. 35 வயதில் அந்த நம்பிக்கை மறைந்து, காண்போரிடமெல்லாம் அது எரிச்சலாக வந்து விழ ஆரம்பித்து, உலகத்தில் அவளுக்கு யாரையும் பிடிக்காமல் போனது. தன்னையும் யாருக்கும் பிடிக்காது என்றே நினைத்தாள்.

பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் சில வருடங்களுக்கு முன்யு ஒருநாள் பேசிக்கொண்டிருந்தாள். உடல் பெருத்துப் போயிருப்பதால் நடக்கமுடியவில்லை. முதுகு வலிக்கிறது. வயிற்றின் கீழ்ப்பகுதியில் எப்போதும் ஒருவித வலி இருக்கிறது. இரவு படுத்தால் தூக்கம் வருவதில்லை. இப்படி பல வியாதிகள் அவளுக்கு இருப்பதாக அவள் சொல்லிக்கொண்டாள். அதைக் கேட்டுக்கொண்ட அந்த பக்கத்து வீட்டுப் பெண், ‘காலா காலத்துல கல்யாணம் ஆயிட்டா இந்த நோயெல்லாம் வராது’ என்றாள். அனுவிற்குக் கேட்கவே சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ‘அப்படியா சொல்ற? கல்யாணம் ஆயிட்டா சரியாயிடுமா?’ ‘பின்ன. நைட் ஒழுங்கா தூக்கம் வரும். இந்த மத்த பிரச்சினையெல்லாம் வராது. சீக்கிரம் உங்க வீட்டுல கல்யாணம் பண்ணச் சொல்லு.’ இப்படி பேசியதிலிருந்து தன் பிரச்சினைகளுக்கான மிக எளிய வைத்தியமான திருமணத்தை ஏன் தன் வீட்டார்கள் சிரமேற்கொண்டு செய்வதில்லை என்கிற எரிச்சலும் அனுவிற்குச் சேர்ந்துகொண்டது. பக்கத்துவீட்டுப் பெண் கல்யாணமாகி, கர்ப்பமாகி, குழந்தை பெற்று, இரண்டாவது கர்ப்பமாகி… அவளைப் பார்க்கப்போவதையே தவிர்த்துவிட்டாள் அனு.

டாக்டர் ஊசி போடுவது தெரிந்தது. அணில்களும் பையன்களும் பக்கத்துவீட்டுப் பையன்களும் மெல்ல அவள் நினைவிலிருந்து மறைந்தார்கள்.

(2)

சீனிவாசனை பெண்ணுடல் இரவும் பகலும் தூக்கமின்றி அலைய வைத்தது. விஜயலக்ஷ்மியின் சிணுங்கல்கள் அவனை போதையேற்றின. அவளின் அசட்டுத்தனங்கள் எல்லாம் இரவுகளில் காமத்தில் முடிந்தன. தான் என்ன சொன்னாலும், செய்தாலும் தன் கணவனை இரவில் வீழ்த்திவிடமுடியும் என்று நம்பினாள் விஜயலக்ஷ்மி. திருமணத்தின் ஆரம்பகால மயக்கங்கள் கடைசிவரைக்கும் நிலைக்கும் என்று அவள் நினைத்தாள். திருமண நாளன்று நடந்த பல்வேறு குளறுபடிகளையும் பற்றி சீனிவாசனின் அம்மா புலம்பியதை அவன் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. அவன் இரவுக்காகக் காத்திருந்தான். சீனிவாசனின் அம்மா சீனிவாசனை வாயில் வந்தபடியெல்லாம் வைதாள். விஜயலக்ஷ்மி தன் மகனை முந்தானையில் முடிந்துகொண்டதாகச் சொன்னாள். விஜயலக்ஷ்மி எதுவுமே நடக்காதவாறு முந்தானையை விரித்து உதறி திரும்ப முடிந்துகொண்டாள். சீனிவாசனின் அம்மா கைகளை நெட்டிமுறித்து என் சாபம் சும்மா போகாது என்றாள்.

விஜயலக்ஷ்மி சீனிவாசனிடம் தன் அம்மா தன்னுடன் இருக்கவேண்டும் என்று கேட்டாள். அப்போது சீனிவாசன் விஜயலக்ஷ்மியின் மார்பில் தலைவைத்துப் படுத்து அவளின் திமிறும் இடையை அடக்கிக்கொண்டிருந்தான். அவள் என்ன சொன்னாலும் சரி என்றான். மறுநாளே விஜயலக்ஷ்மியின் அம்மா ஊர் வந்து சேர்ந்தாள். எடுத்த எடுப்பில் சீனிவாசனின் அம்மா தன் மகளை ரொம்பப் படுத்துகிறாள் என்று ஆரம்பித்தாள். விஜயலக்ஷ்மிக்கே தன் அம்மா இப்படி முதல்நாளிலேயே தொடங்குவது குறித்து கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் தன் இடையின்மீதும் முலையின்மீதும் பெரும் நம்பிக்கை இருந்தது. அதனால் தன் அம்மா சொல்வது சரி என்பதுபோல சீனிவாசனிடம் பேசினாள். சீனிவாசனுக்குக் கொஞ்சம் எரிச்சல் வரத் தொடங்கியது. விஜயலக்ஷ்மி சொல்வதற்கும் தன் மாமியார் சொல்வதற்கும் உள்ள வித்தியாசங்களை அவன் உணரத் தொடங்கினான். வீட்டின்பின்னால் இருக்கும் கன்னி தெய்வத்தின் முன்னால் உட்கார்ந்து எப்போதும் அழுதுகொண்டிருக்கும் அம்மாவைப் பார்க்கவும் கொஞ்சம் பாவமாக இருந்தது. ஒருதடவையாவது விஜயலக்ஷ்மியைக் கண்டிக்கத்தான் வேண்டும் என நினைத்துக்கொண்டான்.

வீட்டிற்குள் நுழைந்த சீனிவாசனின் கால்களில் சோற்றுப் பருக்கைகள் ஒட்டின. வீடெங்கும் சிதறிக் கிடக்கும் சோற்றுப் பருக்கைகளைக் கண்டவுடன் கடும் கோபம் கொண்டான். அவனது கோபத்தைக் கவனித்துவிட்ட விஜயலக்ஷ்மியின் அம்மா புலம்பத் தொடங்கினாள். சீனிவாசனின் அம்மாதான் உணவு பிடிக்கவில்லை என்று சிதறி அடித்தாள் என்றாள். இது எதுவுமே நடந்திராத மாதிரி கன்னி தெய்வத்தின் முன்பு உட்கார்ந்து விளக்கிட்டுக்கொண்டிருந்தாள் சீனிவாசனின் அம்மா. சீனிவாசனுக்கு யோசனையாக இருந்தது. விஜயலக்ஷ்மியை அழைத்தான். அவள் உறங்கிக்கொண்டிருப்பதாகச் சொன்னாள் விஜயலக்ஷ்மியின் அம்மா. விளக்கேற்றும் நேரத்தில் என்ன தூக்கம் என்ற கேள்வியைக் கேட்டான். பின்னாலிருந்து அவன் அம்மா பதில் சொன்னாள். ‘அது ஆம்பிளைக்கான கேள்வி. உனக்கென்ன?’ என்று. அவன் கோபம் தலைக்கேறியது. கல்யாணம் ஆகி நான்கு மாதங்கள் ஆகியும் தன் மகள் கர்ப்பமாகவில்லை என்பதைத்தான் அவள் குத்திக்காட்டுவதாக ஆரம்பித்தாள் விஜயலக்ஷ்மியின் அம்மா. இதைக் கேட்டதும் சீனிவாசனுக்கு உடல் பதறத் தொடங்கியது. என்ன செய்வது, யாரைத் திட்டுவது எனத் தெரியாமல், ஒட்டுமொத்த கோபமும் விஜயலக்ஷ்மியின் மீது பாய, அவள் தூங்கிக்கொண்டிருக்கும் கதவை வேகமாகத் திறந்து, அவளை எட்டி உதைத்தான். அவள் கொஞ்சமும் எதிர்பார்க்காத சமயத்தில் அவள் இடுப்பில் ஓங்கி மிதித்தான். அவள் நிலைகுலைந்து தடுமாறி கீழே விழுந்தாள். தன் கணவன் தன்னை மிதித்தான் என்பதை அவள் நம்பவே சில நிமிடங்கள் பிடித்தது. பெரும் சத்தமிட்டு அழுதாள். அவள் அழுதுகொண்டிருக்கும்போது விஜயலக்ஷ்மியின் அம்மா சொன்னாள், ‘இந்த வீடு உருப்படுமா, ஒரு புள்ளத்தாச்சின்னு பாக்காம மிதிக்கிறானே கட்டயில போறவன்’ என்று. சீனிவாசனுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது. முதலில் தன் அம்மா சொன்னதை, தான் ஆண்மையற்றவன் என்று சொன்னதாகத் திரித்தவள் இப்போது மீண்டும் மாற்றிப் பேசுவது ஏன் என்று யோசித்தான். ஏன் தன்னிடம்கூட விஜயலக்ஷ்மி தான் கர்ப்பமுற்றதைச் சொல்லவில்லை என நினைத்தான். அவனுக்குக் குழப்பமாக இருந்தது. ஆதரவாக விஜயலக்ஷ்மியை மெல்ல நெருங்கி தடவிக்கொடுத்தான். அவள் அவன் கையைத் தட்டிவிட்டு, ‘நீங்க வந்ததும் சொல்லணும்னு இருந்தேன்..’ என்றாள் அழுதுகொண்டே. இது எதுவும் நடக்காத மாதிரி அம்மா விளக்கேற்றினாள். இனி தன் மகன் அடிக்கடி மிதிப்பான் என்று நம்பினாள். விரை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணா முளைக்கும் என நினைத்துக்கொண்டாள். சீனிவாசனின் அப்பா அவளை மிதிக்காத நாளில்லை.

தான் அப்பாவின் வாரிசு என்பதை மிக சீக்கிரத்தில் நிரூபிக்கத் துவங்கினான் சீனிவாசன். எது எதற்கு என்றில்லாமல் எல்லாவற்றிற்கும் ஏசவும் அடிக்கவும் மிதிக்கவும் தொடங்கினான் சீனிவாசன். விஜயலக்ஷ்மி வாய் திறப்பதையே நிறுத்தினாள். கல்யாணம் ஆன புதிதில் தன்னைக் கொஞ்சிக் கிடந்த கணவன் இவன் இல்லையோ என்பது போன்ற விநோதமான கற்பனைகள் அவளிடத்தில் ஏற்பட்டன. விஜயலக்ஷ்மியின் அம்மாவால் நடப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை. கர்ப்பிணியை ஒரு ஆண்மகன் மிதிப்பான் என்று அவளால் நினைக்கக்கூட முடியவில்லை. அவளது கணவன் அவளை அதிர்ந்து பேசியதுகூட கிடையாது. அவள் கடும் கோபம் கொண்ட ஒரு நாளில் தன் மாப்பிள்ளைக்கு சாபம் வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினாள். ‘பொம்பளையை மிதிக்கிறவன் ஆம்பளையே இல்லை. இதுக்கெல்லாம் அனுபவிப்ப… அந்தக் கன்னி தெய்வமே வரும்டா…’ என்று சொல்லிவிட்டுப் படியிறங்கினாள். சீனிவாசனின் அம்மா தான் எதுவுமே செய்யாமல் இந்த நல்ல காரியம் நடந்ததை எண்ணி சந்தோஷப்பட்டாள். உள்ளூர தன் மகன் ஒரு கர்ப்பிணியை மிதித்தது பற்றிய பயமும் இருந்தது.

விஜயலக்ஷ்மி வரிசையாகப் பிள்ளைகள் பெற்றாள். ஏதோ ஒரு நோயில் எல்லாக் குழந்தையும் இறந்தன. அவளது உடல் பெருத்து, இடைகள் வீங்கி, முலைகள் சரிந்து, முகம் விரிந்து போயிருந்தது. கல்யாணத்தில் இருந்த கொடியிடைப் பெண் தானல்ல என்றே நினைத்துக்கொள்வாள் விஜயலக்ஷ்மி. சீனிவாசனின் அம்மா இறந்த பத்தாவது மாதத்திலும் அவள் குழந்தை பெற்றாள். ஊரில் இதைப் பற்றி ஓரிருவர் கிண்டலாகப் பேசினார்கள். சீனிவாசன் காதுக்கு இவையெல்லாம் விழுந்தததாகவே தெரியவில்லை. இரவில் அவளோடு படுப்பதும், பகலில் அவளை ஏசுவதும் மிதிப்பதுமன்றி அவன் எதையும் அறிந்திருக்கவில்லை. தன் கணவனைப் பற்றி நினைக்கும்போதே அவன் ஒரு காலைத் தூக்கிக்கொண்டு மிதிக்கவரும் காட்சியே விஜயலக்ஷ்மியின் மனதில் வந்தது. அவள் கன்னி தெய்வத்துக்கு விளக்கிடும்போது மனமுருகிக் கும்பிட்டாள். ‘இந்த நரகத்துலேர்ந்து என்னைக் கூப்பிட்டுக்கோ…’ கன்னித் தெய்வத்தின் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. அந்த ஆண்டும் அவள் கர்ப்பமானாள். அது அவளுக்கு எட்டாவது கர்ப்பம். ஏழு குழந்தைகள் பிறந்து இறந்து போயிருந்தன. பிறந்த ஒரு மாதத்தில், ஐந்து மாதங்களில் என எல்லாம் ஏதோ ஒரு காரணத்தால் இறந்து போயிருந்தன. கன்னித் தெய்வத்தின் பழிதான் அது என்கிற நினைப்பு விஜயலக்ஷ்மிக்குத் தோன்றவும், கன்னித் தெய்வத்திற்கு விளக்கிட்டு கும்பிட ஆரம்பித்தாள். தன் மாமியார் கன்னி தெய்வத்திற்கு பூஜை செய்வதை அவள் பார்த்திருக்கிறாள். கைகளை நெட்டி முறித்து சாபமிடும் மாமியார் நினைப்பு வந்தது. தன் மாமியாரிடமும் மானசீகமான மன்னிப்புக் கேட்டுக்கொண்டாள். எட்டாவது முறையாகக் கர்ப்பமானாள். காலையில் வீடு பெருக்கி, உணவு பொங்கி, உண்பதைப் போல, கர்ப்பமும் அவளுக்கு ஒரு வேலை. அதனுள்ளே இருப்பது ஓர் உயிர் என்கிற எண்ணம் அவளுக்கு வந்ததே இல்லை. தன் வேலையை ஒழுங்காகச் செய்யும் ஓர் ஊழியன்போல அவள் பிள்ளை பெற்றாள். தொட்டால் ஒட்டிக்கொள்ளும் கருப்பில் ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு அனு என்று பெயரிட்டாள். அன்று பெய்த கடும் மழையில் கன்னித் தெய்வம் முழுவதுமாக நனைந்தது. மழையில் கன்னித் தெய்வத்திற்கு விளக்கேற்ற முடியாமல் போனது குறித்து விஜயலக்ஷ்மி விசனப்பட்டாள். அதேசமயம், மழையில் கன்னித் தெய்வம் குளிர்ந்தது என்றும் நினைத்துக்கொண்டாள்.

சீனிவாசனுக்கு உள்ளூர பயம் இருந்தது, இந்தக் குழந்தையும் இறந்துவிடுமோ என்று. அவனை ஏதோ சூனியம் சூழ்ந்துகொண்டிருப்பதாக நினைத்தான். அவன் விஜயலக்ஷ்மியைக் கல்யாணம் செய்துகொண்ட பின்பே இப்படி ஒரு நிலையில்லாமல் அலைக்கழிக்கப்படுவதாக உணர்ந்தான். அதுமுதல் விஜயலக்ஷ்மியை அடிப்பதும் மிதிப்பதும் அதிகமாகிப் போனது. விஜயலக்ஷ்மி விடாமல் கன்னித் தெய்வத்தைப் பூஜித்தாள். ஒருநாள் அவள் கனவில் ஒரு சிறிய பெண் பட்டுப்பாவாடை உடுத்தி வந்தாள். சந்தேகமே இல்லை, அது கன்னித் தெய்வம்தான். வீட்டின் வெளியில் திண்ணையில் உட்கார்ந்திருந்த கன்னித் தெய்வம் அவளைப் பார்த்துச் சிரித்தது. அவள் பலமுறை கன்னித் தெய்வத்தை வீட்டிற்குள் அழைத்தும் அக்கன்னித் தெய்வம் வீட்டிற்குள் வரவே இல்லை. கன்னித் தெய்வத்தின் கண்கள் அருள் பொங்குவதாகவும் முகம் மலர்ந்த செந்தாமரை போலவும் உடல் மென்மையாகவும் சிவந்த நிறத்திலும் இருந்தாள். யாரைப் போல் இருக்கிறாள் என்பது விஜயலக்ஷ்மிக்குப் புலப்படவே இல்லை. ஒரு சாயலில் அவளுக்கு தன் தாயைப் போலத் தெரிந்தது. இன்னொரு சாயலில் தன் மாமியார் போல இருந்தது. இன்னொரு சாயலில் தன்னைப் போலத் தெரியவும் திடுக்கிட்டு விழித்தாள். வாசலில் காற்று வீசிக்கொண்டிருந்தது. கன்னித் தெய்வத்தைக் காணவில்லை. மறுநாள் தன் கணவனிடம் கனவைச் சொன்னாள். கன்னித் தெய்வம் வீட்டிற்குள் வர மறுக்கிறது என்றால் என்னவோ பிரச்சினை இருக்கிறது என்றாள். ஏற்கெனவே சூனியம் பற்றிப் பயந்துபோயிருந்த சீனிவாசன் விஜயலக்ஷ்மி சொன்னதைக் கேட்டு இன்னும் அரண்டு போனான். உப்பு சப்பில்லாத காரணங்களுக்கு அவளை ஏசினான். ரசத்தில் புளிப்பு அதிகம் என்பதற்காக ஓங்கி மிதித்தான். குழந்தை அனு ஓடி வந்து ‘அம்மாவை அடிக்காதீங்க’ என்று சொல்லி, சீனிவாசனை அடித்தாள். என்ன செய்கிறோம் என்கிற நினைப்பில்லாமல் சீனிவாசன் அனுவையும் ஓங்கி மிதித்தான். வீறிட்டுக் கொண்டு தூர விழுந்த அனுவை ஓடிச் சென்று தூக்கிய விஜயலக்ஷ்மி, அழுதுகொண்டே சொன்னாள், ‘பச்ச கொழந்தைய மிதிக்கிறீங்க. உங்க கால் வெளங்காமத்தான் போகும்.’ தனக்கு அடிமையாக இருக்கவேண்டியவள் கொடுத்த சாபம் சீனிவாசனை மேலும் கோபம் கொள்ள வைத்தது. கைக்கு வந்தமாதிரி அவளை அடித்துவிட்டுப் போனான். மறுநாள் காலையில் ஓடி விளையாடிக்கொண்டிருந்த அனு திடீரென்று கீழே விழுந்தாள். ஒரு காலை அவளால் அசைக்கவே முடியவில்லை. டாக்டரிடம் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். விஜயலக்ஷ்மி வாய்விட்டு அழுதாள். எல்லாவற்றிற்கும் காரணம் தன் கணவன்தான் என்றாள். அவனுக்கும் இதேபோல் ஒருநாள் கால் விளங்காமல் போகும் என்றாள். இருக்கும் ஒரு குழந்தைக்கும் கால் விளங்காமல் போனது ஏன் என்று யோசிக்கத் தொடங்கினாள்.

(3)

விஜயலக்ஷ்மிக்கு கதை கேட்பது போலிருந்தது. சீனிவாசனின் சின்ன தாத்தா தனது நடுங்கும் குரலில் சொன்னதையெல்லாம் கேட்கும்போது அதிக பயமும் கொஞ்சம் ஆர்வமும் இருந்தன. ஆனால் அவளால் அதைக் கேட்காமல் இருக்கவோ நம்பாமல் இருக்கவோ முடியவில்லை.

‘நிறைமாச கர்ப்பிணி. தூக்கிக்கிட்டு ஓடினாங்க. மாட்டுவண்டிலதான் கொண்டு போனாங்களாம். மாட்டை அடி அடின்னு அடிச்சான் மாட்டுவண்டிக்காரன். மாடுங்க பயந்து வெறிபிடிச்சு ஓடிச்சுங்க. அவ உள்ள இருந்து வலி தாங்காம கத்துறா. முதல்நாள் நல்ல மழை வேற. அப்பல்லாம் கரண்ட்டு வேற கிடையாது. பிரசவம் பாக்க பக்கத்துக்கு ஊருக்குத் தூக்கிக்கிட்டு ஓடணும். போற வழியெல்லாம் தண்ணி, மேடு பள்ளம். கொண்டு போறதுக்குள்ள உயிர் போயிடும்னுதான் பயந்திருக்காங்க. பனிக்குடமும் உடைஞ்சிடுச்சு போல. கூட இருந்த அவ அம்மா வேண்டாத தெய்வம் பாக்கியில்ல. பக்கத்து கிராமத்துல மருத்துவச்சி வீட்டுக்கு கொண்டு போகும்போது அவளுக்கு நினைப்பே இல்லை. எப்படியோ குழந்தை பொறந்தது. அவ தன் குழந்தையைப் பார்க்காமயே மயங்கிட்டா. பெண் குழந்தை. அதைப் பார்த்தவங்க பயந்து போயிட்டாங்க. அப்படி ஒரு விகாரமான முகம். இதை எப்படி இவ வளர்க்கப்போறான்னு பயம். மெல்ல ஊருக்குள்ள சாமி குத்தம்தான் அப்படி பொறந்திருக்குன்னு பேச்சு பரவிப்போச்சு. பெத்தவனுக்கு என்ன செய்றதுன்னே தெரியலை. ஆனா ஒரு மணி நேரத்துல அந்தக் குழந்தை செத்துப்போச்சு. அதை வீட்டுக்குப் பின்னாடியே பொதைச்சிட்டாங்களாம். அந்த இடத்துலேர்ந்து ஒரு கல்லை எடுத்து வெச்சி கும்பிட ஆரம்பிச்சாங்களாம். என்ன சாமி குத்தம் இருந்தாலும் மன்னிச்சுக்கோமான்னு சொல்லி அதையே கும்பிட ஆரம்பிச்சாங்களாம். அதுதான் கன்னி தெய்வம். இதெல்லாம் முன்னூறு நானூறு வருசத்துக் கதை. அது கல்லுதான். ஆனா நினைச்ச உருவத்துல வரும். சிவப்புப் பாவாடை காட்டிக்கிட்டு சின்ன பொண்ணா நானே பார்த்திருக்கேன்.’ அவர் உடல் விக்கித்துப்போய் இருந்தது.

பின்னாலிருக்கும் புளியமரமும் கிட்டத்தட்ட நானூறு வருடங்களாக அங்கிருக்கிறது என்ற ஒரு கதையைக் கேட்டிருக்கிறாள். இரவுகளில் கருப்பசாமி அங்கே வந்துவிட்டுப் போகும் என்றும் ஒரு கதை உண்டு. சிலர் அதைப் பொய் என்று மறுத்தார்கள். ‘எப்படி கன்னித் தெய்வம் இருக்கிறப்ப கருப்பசாமி வரும்’ என்பது அவர்கள் கேள்வி. இரண்டு காவல்தெய்வங்கள் தங்கள் எல்லைகளை மீறுவதில்லை என்று நம்பினார்கள். இதுபோன்று பல கதைகளைக் கேட்டு வளர்ந்தவள் விஜயலக்ஷ்மி. இந்தக் கதைகளுக்குப் பின்னர் கன்னித் தெய்வத்தின் மீது அவளுக்கு ஒரு பயம் வந்தது. தன் மாமியார் விடாமல் கன்னித் தெய்வத்துக்கு செய்து வந்த பூஜையை அவளும் செய்யத் தொடங்கினாள்.

ஆஸ்பத்திரியில் விஜயலக்ஷ்மி அனுவின் அருகில் உட்கார்ந்துகொண்டிருந்தாள். டாக்டர்கள் அனுவின் இடுப்பெலும்பு பலமிழந்து போய்விட்டதாகச் சொன்னார்கள். அவள் கைகளை ஊன்றி நடப்பதால் உடலின் எடை முழுவதும் இடுப்பெலும்பில் இறங்கி, இடுப்பெலும்பு நொறுங்கிவிட்டது என்றார்கள். தலையில் அடி பட்டால் எப்படி இடுப்பெலும்பு தேயும் என்று விஜயலக்ஷ்மி ஒன்றும் புரியாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். அனு இரண்டு கைகளையும் குறுக்கக் கட்டிப் படுத்துக்கொண்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். சீனிவாசன் வெளியே யாரோ ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் பெயர் ராமச்சந்திர ராவ். விரை வீங்கிப்போய் ஆபரேஷனுக்காக முதல்நாள்தான் அட்மிட் ஆகியிருந்தார். எதிர் படுக்கையில் கொஞ்சிக்கொண்டிருந்த ஜோடிகள் டிஸ்ஜார்ஜ் ஆன அன்று சீனிவாசன் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

வெளியில் ராவும் சீனிவாசனும் பேசிக்கொண்டிருந்தார்கள். ராவுக்குத் தெரியாத விஷயங்களே இருக்காதோ என்று அதிசயப்பட்டுப் போனார் சீனிவாசன். எதைச் சொன்னாலும் அதிலிருக்கும் நியாய, அநியாயங்களை ராவ் பிரித்தெடுத்து வைத்து, இரண்டுக்குமான காரணங்களை அடுக்கியபோது அவன் ஒரு மகான் என்று கூட நினைத்துக்கொண்டார். ஒரு மகானுக்கு ஏன் ஓதம் தள்ளவேண்டும் என்றும் நினைத்தார். ஆனால் உடனே அந்த நினைப்பைப் போக்கிகொண்டார். என்ன இருந்தாலும் அவரும் ஒரு மாத்வர்.

ராவ் ஜோதிடத்தில் பெரும் நம்பிக்கையுள்ளவர் என்பது அவர் பேசிய இரண்டொரு நிமிடங்களில் தெரிந்துவிட்டது. எல்லாவற்றிற்கும் ஒரு ஜோசியம் சொன்னார். காரணங்கள் சொன்னார். சீனிவாசனின் பிறந்த நாள் தேதியைக் கேட்டுவிட்டு, அந்த எண்ணைக் கூட்டி என்னவோ மனதில் நினைத்துக்கொண்டு, ‘நீங்க பிறந்த தேதி சரியில்லை, வேற தேதியில பிறந்திருக்கணும்’ என்றார். நியூமரலாஜியும் அவருக்குத் தெரியும். சீனிவாசனும் விஜயலக்ஷ்மியும் தாலி கட்டிக்கொண்ட நாள் சரியில்லை என்றும், அதற்கு பிராயசித்தமாக மறுதாலி கட்டவேண்டும் என்றும் சொன்னார் ராவ். தனது எழுபதாவது வயதில் மறுதாலி கட்டி என்ன ஆகப்போகிறது என்று யோசித்தார் சீனிவாசன். ‘கொழந்தைங்களுக்கு நல்லது இல்லையா’ என்றார் ராவ். ராவ் சொன்னதிலும் விஷயம் உண்டு என்று எண்ணிக்கொண்டார் சீனிவாசன்.

பேச்சு சீனிவாசனின் பெற்றோர்கள் பக்கம் திரும்பியது. சீனிவாசன் தன் கதைகளை எல்லாம், தன்மீது தவறில்லாதவாறு சொன்னார். அனுவின் நிலைமையையும் அதற்கான தன் வருத்தங்களையும் சொன்னார். சட்டென்று கேட்டார் ராவ். ‘பித்ருக்கள் காரியமெல்லாம் செய்றீங்கள்ல?’ சீனிவாசன் உதட்டைப் பிதுக்கினார். தனது தந்தைக்கும் பித்ருக்களுக்குக் காரியம் செய்யும் வழக்கமில்லை என்றார். உடனே பிடித்துக்கொண்டார் ராவ். எல்லாவற்றிற்கும் பித்ருக்கள் சாபமே காரணம் என்றார். ஏழு குழந்தைகள் பிறந்து இறந்ததும், எட்டாவது குழந்தை நன்றாகப் பிறந்தும் கால் சரியில்லாமல் போனதும் என எல்லாமே பித்ருக்கள் சாபம் என்றார். ‘நாம நல்லது செஞ்சா அது எப்படி நம்ம சந்ததிக்கு வருதோ நம்ம பாவங்களும் அப்படியே அவங்களுக்குத்தான் வருது. வண்டி வண்டியா பாவம் செஞ்சு வெச்சிருக்கிறீங்க. உடனே காரியமெல்லாம் செய்ங்க’ என்றார். சீனிவாசனின் தாய் தந்தை இறந்த திதிக்களைக் கண்டுபிடித்து, எந்த எந்த நாளில் திதி செய்யவேண்டும் என எழுதிக்கொடுத்தார். தனக்கு இந்த வயதில் இப்படி ஒரு நண்பரா என ஏகத்துக்கும் சந்தோஷப்பட்டுப் போனார் சீனிவாசன். இப்படி ஒருத்தன் தன் வயசுக்காலத்திலேயே இருந்திருந்தால் தனக்கு உபயோகமாக இருந்திருக்கும் என நினைத்துக்கொண்டார்.

ராவ் தனக்குத் தெரிந்த ஐயரையே ஏற்பாடு செய்துகொடுத்தார். அனுவைத் தான் பார்த்துக்கொள்வதாகச் சொல்லி, விஜயலக்ஷ்மியையும் சீனிவாசனையும் வீட்டுக்கு அனுப்பிவைத்தார். வீட்டில் ஹோமங்கள் வளர்த்து, மந்திரங்கள் சொல்லி, பிண்டம் வைத்தார் சீனிவாசன். தனது அம்மாவையும் அப்பாவையும் மானசீகமாக வணங்கினார். அம்மாவிடம் பலவாறாக மன்னிப்புக் கேட்டார். கன்னித் தெய்வம் குளிர குளிர அன்றும் மழை பெய்தது.

(4)

அனுவிற்கு ஆச்சரியமாக இருந்தது. பின்பு பொறாமையாகவும் இருந்தது. அவளுக்குத் தெரிந்து ரமணனை சிறிய பையனாகப் பார்த்திருக்கிறாள். இன்று அவன் ஒருத்தியை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டான் என்று அறிந்தபோது அவளால் அதை நம்பவே முடியவில்லை. ஓர் ஆணாய்ப் பிறந்திருக்கவேண்டியதின் அவசியத்தை மீண்டும் உணர்ந்தாள்.

ரமணனிடம் எதைப் பார்த்து மயங்கி ஒருத்தி ஓடினாள் என்று தெரியவில்லை. ரமணன் படித்துக்கொண்டிருக்கிறான். ஓடிப்போனால் மறுவேளை சாப்பாட்டுக்குக்கூட உத்திரவாதமில்லை. ரமணன் மிகப்பெரிய அழகனுமில்லை. ஆறடி உயரத்தில் எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்னும் தோற்றத்தில் இருப்பான். அவன் முகத்திலேயே மூக்கு ஒன்றுதான் இருக்கும். இவனை நம்பி எப்படி ஒரு பெண் ஓடினாள்? ஆனால் ரமணனுக்கு இரண்டு கால்களும் இருக்கின்றன. ஓடிய பெண்ணுக்கும் நிச்சயம் இரண்டு கால்களும் இருந்திருக்கும்.

அன்று இரவு முழுவதும் ரமணனைத் தேடினார்கள். ரமணன் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. ஓடிய பெண்ணின் வீட்டைச் சேர்ந்தவர்கள் ரமணனின் அப்பாவை மிரட்டிவிட்டுப் போனதாக விஜயலக்ஷ்மி சொன்னாள். அன்று இரவு ரமணன் எங்கே தங்கியிருப்பான்? எப்படியும் அன்றிரவு ரமணனும் அப்பெண்ணும் உறவு கொண்டிருப்பார்கள். இப்படி நினைத்தபோதே அனுவிற்கும் பொறாமையும் ஏக்கமும் ஒரு சேர எழுந்தன. தனக்குத் திருமணம் ஆகாதது குறித்து பெரும் வேதனைகள் அவளுக்கு இருந்தன. தன் திருமணத்தைப் பற்றி யாரும் சிந்திக்கிறார்களா என்பதுகூட அவளுக்குத் தெரியவில்லை. அம்மாவிடம் சொன்னால் அவள் தான் பார்த்த வரன்களைச் சொல்லி, ‘எல்லாம் பார்த்துக்கிட்டே இருக்கோம், ஒண்ணும் அமையலை’ என்று சொல்லக்கூடும்.

அம்மாவிடம் திடீரென்று தன் கல்யாணம் பற்றிக் கேட்டாள். ‘பார்த்துக்கிட்டுதான இருக்கிறோம். சனிக்கிழமை சனிக்கிழமை நவக்கிரகத்துக்கு பூஜை செய்யறேன். நிச்சயம் உனக்கு இந்த வருஷத்துல வரன் அமைஞ்சிடும்’ என்றாள். அனுவிற்கு எரிச்சலும் கோபமும் மண்டிக்கொண்டு வந்தது. நிதானம் இழக்கத் தொடங்கினாள்.

அனு நிதானம் இழந்தால் எப்படிப் பேசுவாள் என்பதை விஜயலக்ஷ்மி அறிந்தவள்தான். இதேபோல முன்பொருமுறை தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்பது குறித்து என்னவெல்லாமோ பேசத் தொடங்கினாள் அனு. அவளுக்கு அறிவுரை சொல்ல வந்த அனுவின் ஒன்றுவிட்ட தங்கையை அனு கேட்டகேள்விகள் விஜயலக்ஷ்மியையே அதிர வைத்தன. ‘உனக்கு என்ன வயசு? என்னவிட ரெண்டு வயசு சின்னவதானே? உனக்கு ரெண்டு குழந்தைங்க. உனக்கு தோணினப்பல்லாம் உன் புருஷனோட படுத்துக்கலாம்ல?’ வந்த பெண் கேவலமாக உணர்ந்தாள். விஜயலக்ஷ்மியிடம் ‘ரொம்ப கேவலமா பேசறா. கல்யாணத்துக்காக அலையறா. பார்த்துக்கோங்க’ என்று சொல்லிவிட்டுப் போனாள். உள்ளேயிருந்து அனு கத்தினாள். ‘எவ அலயறா. நீ அலஞ்ச கதை எனக்குத் தெரியாதாடி முண்ட. இனிமே எனக்கு அத சொல்றேன் இத சொல்றேன்னு இங்க வா, தட்டுவாணி பல்ல ஒடைக்கிறேன். உன் புருஷன் செத்தா தெரியும்டி உனக்கு அலயறதுன்னா என்னான்னு.’ விஜயலக்ஷ்மிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அனு கத்திக்கொண்டிருக்க, விஜயலக்ஷ்மி வீட்டின் கதவை அடைத்துவிட்டு கோவிலுக்குப் போனாள்.

எதாவது சொல்லி, அனு மீண்டும் அதேபோல் கத்தத் தொடங்கினால் ஆஸ்பத்திரியில் எல்லார் முன்னும் மானம் போய்விடும் எனப் பயந்து, அனுவோடு பேச்சைத் தொடராமல் ஆஸ்பத்திரியை விட்டு வெளியில் போனாள். வெளியில் ரமணாவின் அப்பா வந்துகொண்டிருந்தார். அவர் நடையில் ஒரு வேகம் இருந்தது. விஜயலக்ஷ்மியிடம் ‘சீனிவாசன் இல்லியா’ என்றார். ‘வெளிய போயிருக்கார்’ என்றாள். ‘வந்தா சொல்லுங்க ரமணன் கிடைச்சிட்டான். அந்த பொண்ணை அவங்க வீட்டுலயே விட்டாச்சு. நாலு நாள் சோத்துக்கு இல்லாம அலஞ்சி வேற வழியில்லாம அவனே வந்துட்டான்…’ என்றார். விஜயலக்ஷ்மி தான் இதை தன் கணவனிடம் சொல்லிவிடுவதாகவும் குழந்தையைப் பார்த்துக்கோங்க என்றும் சொல்லி அனுப்பினாள்.

ஆஸ்பத்திரிக்குள்ளே வந்து அனுவிடம் பேச்சு கொடுத்தாள். ரமணா பற்றிச் சொன்னாள். அனுவிற்கு சந்தோஷமாக இருந்தது. ’19 வயசுல என்ன கல்யாணம்’ என்றாள். ஆனாலும் நான்கு நாள் இரவுகளில் ரமணனும் அப்பெண்ணும் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டாள். அவளை ஏக்கமும் காமும் சூழ்ந்தன.

விஜயலக்ஷ்மி அனுவின் கட்டிலுக்குக் கீழே ஒரு பாயை விரித்து படுத்துக்கொண்டாள். அனுவை பலவிதமான எண்ணங்கள் ஓடின. தனக்கு கால் இல்லாமல் போனது குறித்து தன் வாழ்க்கையில் லட்சத்து ஓராவது முறையாக வருந்தினாள். தான் கொஞ்சம் சிவப்பாகவாவது இருந்திருந்தால் தன் உடலைக்காட்டி யாரையாவது மயக்கியிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டாள். காலை மெல்ல வருடினாள். முழங்காலில் காய் காய்த்து சிறிய சிறிய தோல் உருண்டைகள் காய்த்துத் தொங்க, அவளுக்கே அருவருப்பாக இருந்தது. அதற்குக் கீழே கால் சூம்பித் தொங்கியது. இந்தக் கால்களுக்கு இடையில் படுத்துக்கொள்ள எவன் வருவான் என்று தோன்றியது அவளுக்கு. அவளது பெருமூச்சில் அவளது மார்பு ஒருமுறை விம்மி அடங்கியது. விஜயலக்ஷ்மி அழுவது போலத் தோன்றியது அனுவிற்கு. ‘அம்மா’ என்று அழைத்தாள். பதிலில்லை. மீண்டும் அனு அழைக்காமல் எதையோ யோசிக்கத் தொடங்கினாள்.

(5)

இன்னும் ஒரு வாரம் இருக்கவேண்டியிருக்கும் என்று டாக்டர் சொல்லிவிட்டுப் போனார். அனுவை என்னென்னவோ உடற்பயிற்சிகள் செய்யச் சொன்னார்கள். இதெல்லாம் செய்தால் கல்யாணம் ஆகுமா என்று ஒருதடவை யோசித்து, சிரித்துக்கொண்டாள். ராவ் அவளைப் பார்த்து ‘என்னம்மா தானா சிரிக்கிற’ என்றார். அவள் பதில் சொல்லவில்லை. அவரும் சீனிவாசனும் வெளியில் போனார்கள். இப்போதெல்லாம் ராவ் சொல்லாமல் சீனிவாசன் எதையும் செய்வதில்லை. அவருக்கு ராவ் மீது பெரிய மரியாதை இருந்தது. சீனிவாசனும் ராவும் வெளியில் பேசிக்கொண்டிருந்தார்கள். ராவ் அப்படியே வெளியில் நின்றார். உள்ளே வந்த சீனிவாசன், ‘ராவ்க்கு தெரிஞ்ச ஒரு வரன் இருக்காம். அத சொல்லிக்கிட்டு இருந்தார்’ என்றார். அனுவிற்கு ராவின் மீது சட்டென மரியாதை வந்தது. அவர் வந்ததும் அவரைப் பார்த்து சிரிக்கவேண்டும் என நினைத்துக்கொண்டாள். சீனிவாசன், ‘நானும் அவரும் கொஞ்ச நேரம் வெளியில போயிட்டு வர்றோம்’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

வெளியில் போயிருந்த ராவும் சீனிவாசனும் சற்றைக்கெல்லாம் திரும்ப வந்துவிட்டனர். அனு ராவைப் பார்த்து வலிய சிரித்தாள். சீனிவாசன் விஜயலக்ஷ்மியிடம் தான் பார்த்ததை சொல்லத் தொடங்கினார்.

‘ஸ்ரீதர் செத்துட்டாண்டி. தற்கொலையாம். என்ன ஒரு இருபத்தி அஞ்சு வயசு இருக்குமா? தாமரைக் குளத்துல மொதக்கிறான். ஏன் என்னான்னு தெரியலை’ என்றார். விஜயலக்ஷ்மிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஸ்ரீதர் ஏன் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்று அவளுக்குப் பிடிபடவில்லை. இவனும் ரமணாவைப் போல யாரையாவது காதலித்துத் தொலைத்திருக்கலாம் என நினைத்துக்கொண்டாள். ‘பாக்கவே சகிக்கலைடி. ஒட்டுத்துணியில்லை உடம்புல. ஊதிப்போய் மிதக்குது. நம்ம வீட்டுல வந்து ரசம் ஊத்துங்கன்னு சொல்லி சாப்பிட்டதுதான் நினைவுக்கு வந்தது. பாவம் அவன் அம்மா’ என்றார்.

அனுவிற்கு ஸ்ரீதரை நினைத்தும் கோபமே வந்தது. அவன் வந்து ரசம் கேட்டுக் குடித்த பல தினங்களில் ஒரு தினம் அவன் அங்கேயே உறங்கினான். திடீரென கண்விழித்துப் பார்த்த அனுவிற்கு, அருகில் ஸ்ரீதர் உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் ஏதேதோ எண்ணங்கள் உதித்ததன. மெல்ல புரண்டு அவன் அருகில் படுத்துக்கொண்டாள். அவன் கைகளைத் தன் மேல் எடுத்து வைத்துக்கொண்டாள். அனுவிற்கு பயமாக இருந்தது. அதே சமயம் அவனைவிட்டு விலகவும் முடியவில்லை. மெல்ல நெருங்கி அவனை அணைக்க முயன்றாள். அவன் திமிறி எழுந்து ஓடினான். அவளைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அவளுக்கு அவமானமாக இருந்தது. மறுநாள்முதல் அவன் வீட்டிற்கு வருவதில்லை. இவள் கண்ணில் படாமலேயே நழுவுவான்.

இப்படி ஒரு குளத்தில் ஊதிப் போய் சாகப்போகிற ஒருவன் அன்றைக்கு தன்னைக் கொஞ்சம் சந்தோஷப்படுத்தியிருக்கலாம். ஒருவேளை அவனுக்குத் தேவையான பெண் அழகானவளாகவும் சிவப்பாகவும் கால்கள் நல்ல நிலையிலும் உள்ளவளாகவும் இருக்கவேண்டுமோ என்னவோ. தன்மேல் பட்ட ஒரே ஆணின் கை அவனது கை. அதுவும் அவன் அறியாமலேயே நடந்ததுதான். ஆனாலும் அவள் மேல் ஒரு ஆணின் கை பட்டிருக்கிறது என்கிற நினைப்பைத் தந்தது ஸ்ரீதர்தான்.

அனுவிற்கு ஸ்ரீதரின் மரணம் வருத்தத்தைத் தந்தது.

சீனிவாசன் சொன்னார். ‘வாய் பொளந்து செத்துக் கிடக்கான். வாய் வழியா உயிர் போயிடுச்சு போல இருக்கு. பாவம்.’

உயிர் பிரிவது பற்றி அவளும் கேட்டிருக்கிறாள். ஒவ்வொருவருக்கும் ஒரு வழியாக உயிர் பிரிகிறது. ஸ்ரீதருக்கு வாய் வழியே. தன் வீட்டிற்கு எதிர் வீட்டிலிருந்த ஒரு மாமாவுக்கு மூக்கின் வழியே. அவர் இறந்ததும் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்ததாகச் சொன்னார்கள். மூன்றாம் வீட்டிலிருந்த இன்னொரு மாமி இறந்ததைப் பற்றி அவளது மருமகள் சொன்ன கதை வேறு மாதிரியானது.

‘எப்படியும் போயிடுவான்னு தெரியும். திடீரெனு டர்ர்ர்ர்ன்னு குசு விடற சத்தம். மாமிதான். முகத்தை நெறிக்கிறா. அவ்ளோதான் சட்டுன்னு போயிட்டா. வீடெல்லாம் ஒரே நாத்தம். மாமி போட்ட குசுதான்னு நினைச்சோம். செண்ட் எல்லாம் வாங்கி அடிச்சோம். அப்புறம் அவளைக் குளிப்பாட்டறப்பதான் பார்த்தோம், பின்னாடியெல்லாம் ஒரே நரகல். ஐயோ நினைச்சாலே கொமட்டறது. அதான் அவ்ளோ நாத்தம். அப்புறம் எல்லாரும் சொன்னா, மாமிக்கு பின்னாடி வழியா உயிர் போயிடுத்துன்னு…’

அனுவிற்கு அன்றிரவு பெருங்கனவு சூழ்ந்துகொண்டது.

(6)

அனுவிற்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. ‘இன்னும் அரைமணி நேரத்துல போயிடும்’ என்று எல்லாரும் பேசிக்கொள்வது அவள் காதில் விழுந்தது. அவளுக்கு வாய் விட்டுக் கதறவேண்டும் போல இருந்தது. வார்த்தை வரவில்லை. கன்னித் தெய்வத்தை வேண்டிக்கொண்டாள். தான் பட்டது போதும் என்றும் தான் இன்னும் வாழவேண்டும் என்றும் ஒரே நேரத்தில் நினைத்துக்கொண்டாள்.

அம்மாவிடம் பேசினாள். அது மானசீகமான உரையாடல். அம்மாவிற்கு என்னென்னவோ நன்றிகள் சொன்னாள். தலைமுதல் கால் வரை முத்தங்களிட்டாள். அம்மாவின் மீது அன்பு பொங்கி வழிவது குறித்து அவளுக்கே சந்தோஷமாக இருந்தது. இந்த அன்பு களங்கமற்றது.

அப்பாவை நினைத்துக்கொண்டாள். இப்போது அவளுக்கு அப்பாவைப் பற்றி மிச்சமிருக்கும் ஒரே பிம்பம், பாவம் வயதான ஜீவன். அவர் கஷ்டப்படாமல் கடைசி காலத்தில் நன்றாக இருக்கட்டும் என நினைத்துக்கொண்டாள். இப்போதைய அனுவிற்கு அன்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அவளே இப்படி அவளை அறிந்ததில்லை. அவளுக்கே அவளை நினைத்து சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது.

தனக்காக வராமல் போன ஆண்மேல் மட்டும் கொஞ்சம் கோபமிருந்தது. பின்னர் மீண்டும், அவனும்தான் என்ன செய்வான் தான் இப்படி இருக்கும்போது என நினைத்துக்கொண்டு அவன் மீதும் அன்பைப் பொழிந்தாள். தனக்காக வரன் பார்த்த ராவிற்கு நன்றி சொல்லிக்கொண்டாள்.

தன் உடலை விட்டு உயிர் பிரிகிறது என்பதையும் உணரத் தொடங்கினாள். இனி கால்கள் இல்லை என்கிற குமைச்சல் இல்லை. தான் கருப்பாக இருக்கிறோம் என்கிற தாழ்வு மனப்பான்மை இல்லை. தன் பாவாடை விலகினால் தன் கால்களைப் பார்த்து அதிர்ச்சி அடையும் ஆண்களை இனி காணவேண்டியதில்லை. அவளே வலிய சென்றாலும், எழுந்து ஓடும் ஆண் தரும் அவமானங்கள் இல்லை. யாரேனும் எங்கேயும் ஓடிப்போனால் அவர்கள் இரவில் என்ன செய்வார்கள் என யோசித்து மருகவேண்டியதில்லை. தன் உயிர் பிரியும் தருணம் மிகச் சிறப்பானது என நினைத்துக்கொண்டாள் அனு.

அவளது உயிர் அவளது உறுப்பு வழியாகப் பிரிந்தது. தன் உறுப்பின் வழியே இரத்தம் வழிவதை உணர்ந்த கணத்தில் அனு மரணமடைந்தாள்.

விஜயலக்ஷ்மியின் ஓலம் காற்றில் கரைந்தது. சீனிவாசன் அழுதுகொண்டே தன் கால்களை நீவிக்கொண்டார்.

அன்றைய கொடுங்கனவு முடிந்து, அணில்கள் தலைமாட்டில் ஓடிக்கொண்டிருக்க, மறுநாள் எப்போதும் போலவே விடிந்தது.

-oOo-

Share