Archive for ஹரன் பிரசன்னா

Death of a President – பரிபூரண சுதந்திரத்தின் உச்சம்

சோனியா காந்தி ஜூலை 2009ல் கொலை செய்யப்பட்டுவிட்டார். யார் எதற்காகக் கொன்றார்கள் என ஆராய்கிறது சிபிஐ. கொலை செய்தவர்கள் யாராக இருக்கும் என்று யோசிக்கும்போது, இலங்கைத் தமிழர்களின் பட்டியலை முதலில் பார்க்கத் தொடங்குகிறது சிபிஐ.

இப்படி ஒரு திரைப்படத்தை இந்தியாவில் யோசிக்கவாவது முடியுமா எனத் தெரியவில்லை.

ஓர் அதிபரின் மரணம் என்னும் ஆங்கிலத் திரைப்படம் இதனைச் சாதித்திருக்கிறது. இத்திரைப்படம் ஆவணப்பட உத்தியில் இயக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் புஷ் கொல்லப்பட்டுவிடுகிறார். அதனை விசாரிக்கும் எஃ பி ஐ, புஷ்ஷின் மெய்க்காப்பாளர்கள், அமைச்சர்கள், எஃபிஐ அதிகாரிகள், சந்தேகத்திற்கு உரிய கலவரக்காரர்கள் உள்ளிட்ட எல்லாரையும் விசாரிக்கிறது. அவர்கள் நடந்தவற்றை விவரிக்க விவரிக்க காட்சிகள் உருப்பெறுகின்றன. ஆவணப்படத் தன்மையில் இப்படம் இயக்கப்பட்டுள்ளது மிகப் பெரிய பலமாக அமைகிறது.

சிகாகோவில் வணிகர்களின் கூட்டத்தில் பங்கேற்க வரும் ஜார்ஜ் புஷ்ஷை எதிர்த்து பெரிய கூட்டம் மறியல் செய்கிறது. அதை மீறி புஷ் அக்கூட்டத்தில் சிறப்பாகப் பேசுகிறார். அக்கூட்டம் முடிந்ததும் சிகாகோ மக்களைப் பார்த்துப் பேசும் புஷ் சுடப்படுகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறக்கிறார். ஜார்ஜ் புஷ் பேசும் இடத்துக்கு எதிரே இருக்கும் பலமாடி உணவகத்திலிருந்தே யாரேனும் சுட்டிருக்கவேண்டும் என்று கருதும் எஃபிஐ, அங்கே பணிபுரியும் அலுவலர்களின் பட்டியலைப் பார்க்கிறது. அங்கிருக்கும் முஸ்லிம்களை முதலில் சந்தேகிக்கத் துவங்குகிறது. முதலில் சந்தேகத்துக்கு உள்ளாகும் ஒரு முஸ்லிம் தனது தரப்பைக் கூறுகிறார். அவரது சகோதரர் ஈராக்கில் போரில் இறந்ததுக்குக் காரணம் புஷ்தான் என்று அவரது தந்தை நம்புகிறார். புஷ் கொல்லப்பட்டதும், அவரது தந்தை தன் மகனுக்கு கடிதம் ஒன்றை எழுதிவிட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார். இன்னொரு முஸ்லிம்தான் கொலைகாரனாக இருக்கவேண்டும் என்று எஃபிஐ முடிவு செய்கிறது. கைரேகைத் தடங்கள் ஒத்துப் போவதாலும், அவர் ஆஃப்கானிஸ்தான் சென்றிருப்பதாலும் அவர்தான் கொலையாளியாக இருக்கமுடியும் என்று முடிவெடுக்கிறது எஃபிஐ.

யாரையேனும் கொலையாளி என்று முடிவு கட்டவேண்டிய அழுத்தம் எஃபிஐக்கு. அவர் முஸ்லிமாகவும், ஆஃப்கானிஸ்தானுக்குச் சென்றவராகவும் இருந்தால், அவரை அல்க்வைதாவுடன் எளிதில் தொடர்புபடுத்திவிட முடியும் என்று நினைக்கிறது எஃபிஐ. 11 ஜூரிகள் அடங்கிய சபை இவரையே குற்றவாளி என்றும் தீர்ப்பளிக்கிறது. அவர் இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவெடுக்கிறார். இவரது மேல்முறையீட்டை இழுத்தடிக்கிறது எஃபிஐ. குற்றவாளியின் வழக்கறிஞர் இந்த இழுத்தடிப்பைக் கேள்வி கேட்கிறார். விசாரணை தொடர்கிறது என முடிகிறது திரைப்படம்.

எது உண்மை, எது கற்பனை என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு, படம் முழுதும் விரவிக் கிடக்கும் ஆவணப்படத் தன்மை நம்மை ஆச்சரியப் படுத்துகிறது. உண்மையில் ஜார்ஜ் புஷ் இப்போது உயிரோடு இருக்கிறாரா அல்லது உண்மையில் கொன்றுதான்விட்டார்களா என்று ஒரு நிமிடம் நம்மை யோசிக்க வைத்துவிடுகிறது திரைப்படத்தின் கச்சிதமான ஆக்கம்.

குற்றவாளி யாராக இருக்கலாம் என்னும்போது முதலில் முஸ்லிம்களின் பட்டியலைத்தான் பார்த்தோம் என்கிறது எஃபிஐ. இது ஒரு இனத்துக்கு எதிரான நடவடிக்கை என்று பார்க்கவேண்டாம், அந்த நேரத்தில் அங்கே இருந்துதான் தொடங்கமுடியும் என்கிறார் அவர். இதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், ஒரு முஸ்லிமை, இத்தனை பெரிய கொலைக்கு வெறும் கைரேகையை மட்டுமே வைத்து பொறுப்பாக்க முனைவது, அமெரிக்காவின் மனத்தின் அடியில் உறைந்துகிடக்கும் அல்க்வைதா பயத்தை படம்பிடித்துக் காட்டுகிறது. கைரேகை நிபுணர் ஒருவர் சொல்கிறார், கொலை செய்தவனின் கைரேகை பொதுவாகத் துப்பாக்கியில் கிடைக்காது; நீங்கள் பார்க்கும் திரைப்படங்களில்தான் இப்படிக் காண்பிப்பார்கள், ஆனால் உண்மை அதுவல்ல என்று. இதையும் சேர்த்துக்கொண்டு பார்த்தால் எஃபிஐயின் அவசரத்தையே இயக்குநர் (Gabriel Range) காண்பிக்க நினைத்திருக்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இயக்குநர் சொல்ல வருவது, அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தேவையான, கடுமையாக்கப்படவேண்டிய சட்டங்களைப் பற்றி. அந்த நோக்கில் அவர் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

குற்றவாளி என்று அறியப்படும் முஸ்லிமின் மனைவியும் விசாரணையில் தன் கருத்தைச் சொல்கிறார். ஆஃப்கானிஸ்தானில் அல்க்வைதா அணியில் தன் கணவர் பலவந்தமாகச் சேர்க்கப்பட்டார் என்றும், உடல்நிலை சரியில்லை என்று அவர் நடித்ததால் விடுவிக்கப்பட்டுவிட்டார் என்றும், இதனை யாரிடமும் சொல்லவேண்டாம், பாகிஸ்தான் சென்றதாக மட்டும் சொன்னால் போதும் என்று அவர் சொன்னதாகவும் இவர் சொல்கிறார். உண்மையான ஒரு விசாரணையில் ஏற்படும் குழப்பத்தை திரையில் கொண்டுவருவதில் இக்காட்சியில் பூரணத்துவத்தை எட்டியிருக்கிறார் இயக்குநர். இதைப் பார்க்கும் ஒருவர் குற்றவாளி உண்மையில் யார் என்னும் குழப்பத்தோடே திரைப்படம் பார்க்க வேண்டியிருந்திருக்கும்.

இத்திரைப்படத்தின் வழியாக நாம் காண்பது அமெரிக்கா தரும் சுதந்திரத்தை. முதலில் இது போன்ற ஒரு படத்தை எடுத்தது, இரண்டாவதாக குற்றவாளி என்று சொல்லப்படும் முஸ்லிமுக்கு ஆதரவாகப் பேசும் வழக்கறிஞரின் கேள்விகள், அடுத்ததாக புஷ்ஷுக்கு எதிராகக் காட்டப்படும் கலவரக்காரர்களின் மறியல்களும் கூச்சல்களும். எல்லாவற்றிலும் சுதந்திரம். இதையே இத்திரைப்படம் நமக்கு முகத்தில் அடித்தாற்போல் காண்பிக்கிறது. இந்தியாவில் இது சாத்தியமாகுமா என்ற ஏக்கத்தை உருவாக்கிவிடுகிறது திரைப்படம்.

ஒரு தலைவரின் கொலையை விசாரிப்பது என்பது நாம் கதை போலச் சொல்லப் பிறர் அதனை அப்படியே புரிந்துகொள்வது அல்ல. நாம் எதிர்பார்க்காத திசைகளிலெல்லாம் பயணிக்கும் காற்றைப் போன்றது அது. ராஜிவ் காந்தி கொலை வழக்கின் சிறப்பு அதிகாரியாக இருந்த ரஹோத்தமனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னதையெல்லாம் கேட்டபோது, ஒரு வழக்கின் பல்வேறு புதிர்கள் எப்படி விடுவிக்கப்படுகின்றன என்றும், விடுவிக்கப்பட்ட அதே புதிர்கள் எப்படி மீண்டும் சிக்கலாகிக்கொள்கின்றன என்றும் ஒரு சேரப் பார்க்கமுடிந்தது. ராஜிவ் காந்தி கொலை வழக்கு பற்றிய சிடி ஒன்றையும் ரஹோத்தமன் வெளியிட்டிருக்கிறார். அதைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதுவேன்.

நேரில் காண்பது என்னவோ ஒரு குண்டு வெடிப்பு அல்லது தோட்டா. அதற்குப் பின்னர் சிதறிக் கிடக்கும் பல்வேறு செய்திகளை அள்ளிக் கூடையில் போடும் காவல்துறையின் ஒரு பரிமாணத்தை வெற்றிகரமாகத் திரையில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர்.

Share

M.A – Mokkai Thoughts

சென்னைப் பல்கலைக் கழக துணை வேந்தர் தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே பவுண்டரி அடித்திருக்கிறார். நடப்பட்ட மரத்துக்கு நீரூற்றலா அல்லது புதிய தென்னங்காலா என்பது போகப் போகத்தான் தெரியும். திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்னும் பழமொழியின் நுண்ணர்த்தம் கருணாநிதிக்கும் இந்நேரம் விளங்கியிருக்கும். எம். ஏ. – கலைஞர் எண்ணங்கள். இதை ஏற்படுத்தும் கையோடு, எம். ஏ. காந்திய எண்ணங்களை நீக்கவும் துணை வேந்தர் அவர்கள் பெருமனது செய்து முயற்சி எடுக்கவேண்டும்.

கருணாநிதியையும் காந்தியையும் ஒரே இடத்தில் வைக்கும் எண்ணத்தை கருணாநிதி பெருமனம் செய்து பொறுத்துக்கொண்டாலும், அவரது தொண்டரடிகள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதையும் நாம் பொறுத்துக்கொண்டாலும், கருணாநிதி எண்ணங்களையும் காந்தி எண்ணங்களையும் படிக்கும் மாணவர்கள் ஒரு சேர சந்திக்கும்போது, இந்த காந்தி என்ன செய்தார் என்று இவரைப் பற்றிய எண்ணங்களைப் படித்து பட்டம் வாங்க வேண்டி கிடக்கிறது என்று கலைஞர் எண்ணக்காரர்கள் கேட்டால், காந்திய மாணவர்கள் திருதிருவென்று முழிக்க நேரிடும். இதே கதியே காந்திய எண்ணங்களைக் கற்பிக்கும் பேராசிரியர்களுக்கும் ஏற்படும். இத்தகைய அவமானங்களைக் காந்திய மாணவர்கள் பெறக்கூடாது என்ற பொதுநல நோக்கை மனதில் கொண்டு, துணைவேந்தர் அவர்கள் காந்திய எண்ணங்களை நீக்கிவிட்டால் நல்லது. பிழைத்துப் போகட்டும் காந்தி.

சோ தனது கருத்தை டிவியில் இப்படி சொன்னார். எம்.ஏ. ஸ்டாலின் எண்ணங்கள், எம்.ஏ. அழகிரி எண்ணங்கள், எம்.ஏ. கனிமொழி எண்ணங்கள் என்றெல்லாம் ஏற்படுத்தவேண்டும் என்றார்.

கூடவே எம்.ஏ. மொக்கை எண்ணங்களையும் ஏற்படுத்தலாம். என்னைப் போன்ற வலைப்பதிவாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். ஜோக்கர்களின் பூமியான நம் தமிழ்நாட்டில் எம்.ஏ. மொக்கை எண்ணங்கள் என்கிற படிப்பு இத்தனை நாள் இல்லாததே தவறு என்பதை திருவாசகம் அவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இதற்கு முன்பு இருந்த துணை வேந்தர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் செய்யவேண்டிய எல்லா வேலைகளையும் முடித்துவிட்டார்கள் என்பதில் ஐயமில்லை. உலகின் முன்மாதிரி பல்கலைக்கழகங்களில் சென்னையே முதலிடம் வகிக்கிறது. இத்தனை நடந்த பிறகு திருவாசகம் அவர்கள் இப்பதவிக்கு வந்திருப்பதால், எல்லா வகையிலும் தன்னிறைவுக்கும் மேலாக நிறைவு பெற்றுவிட்ட சென்னைப் பல்கலைக்கழகத்துக்கென, புதிய ஒன்றை யோசித்துச் செய்யவேண்டிய கடும்பணி அவருக்கு இருக்கிறது. அதற்காகவே யோசித்து இந்த அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார். எம்.ஏ. கலைஞர் எண்ணங்கள் என்று ஓர் அறிவிப்பைக் கண்டபின்பு கருணாநிதியின் பொறுப்புணர்வும் கூடியிருக்கும். திருவாசகம் அவர்களின் புதிய முயற்சிகள் இப்படி தமிழக அரசியலைப் பாதித்து, அதன் வழியாக இந்திய அரசியலையும், அதனால் உலக அரசியலையும் கருணாநிதியின் வழியாகப் பாதிக்கவிருக்கிறது என்பதைத் துணைவேந்தரே அறிந்திருக்கமாட்டார்.

எம்.ஏ. களையெடுப்பு என்ற ஓர் பட்டப்படிப்பையும் திருவாசகம் அவர்கள் யோசிக்கவேண்டும். பிற்காலத்தில் இதுவே அதிகம் பயன்படும் என்பதால் இதனை உடனடியாகக் கொண்டுவருவதில் திருவாசகம் அவர்கள் சிறிது நேரம் செலவிட்டால் தேவலை.

Share

சேவை அமைப்புகளும் ஒரு ஞாயிற்றுக் கிழமையும்

இந்தியா சுடர் என்னும் சேவை அமைப்பு இந்தியாவெங்கும் உள்ள கிராமங்களில் நிறைய சேவைகளை முன்னின்று செய்துவருகிறது. பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்து தருதல், மாணவர்களுக்கு தனிப்பட்ட மனப்பயிற்சி வகுப்புகள் அமைத்தல், பள்ளிகளில் நூலகங்கள் உருவாக்குதல், ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் அமைத்தல் எனப் பல்வேறு செயல்பாடுகளைச் செயல்படுத்தி வருகிறது.

இந்தியா சுடர் ஏற்கெனவே கிழக்கு, ப்ராடிஜி உள்ளிட்ட பதிப்பகங்களில் இருந்து புத்தகங்களை வாங்கி, பள்ளி நூலகங்களுக்கு வழங்கியிருக்கிறது. இன்று, சென்னையில் உள்ள அனாதை (இந்த வார்த்தையைத் தவிர்க்கவே விரும்புகிறேன். வேறு எந்த வார்த்தை சரியான வார்த்தை எனத் தெரிந்தால், அதனைப் பயன்படுத்துவேன்) அமைப்புகள் பலவற்றைச் சேர்ந்த குழந்தைகளுக்கென பிரத்யேகமாக சில போட்டிகளை நடத்தினார்கள். இந்தியா சுடருன் இணைந்து, ட்ரீம்ஸ் இண்டியா, ஹெல்பிங் மைண்ட்ஸ் உள்ளிட்ட சேவை அமைப்புகளும் இதில் கலந்துகொண்டன. திருக்குறள் போட்டி, ஓவியப் போட்டி, மொழிபெயர்ப்புப் போட்டி, வினாடி வினா போட்டி எனப் பலப் போட்டிகள் நடந்தன.

கிழக்கு பதிப்பகத்தின் சார்பில் ‘இந்தியாவின் அடுத்த ஐந்து ஆண்டுகள் – என் கனவு’ என்னும் போட்டி நடத்தப்பட்டது.

இந்திய வரலாறு புத்தகத்தைப் படித்த திரு. டி.ஆர். சந்தான கிருஷ்ணன், இந்தப் புத்தகம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களையும் சென்றடைய வேண்டும் என்று விரும்பினார். அதற்குத் தன்னால் ஆன முயற்சியைச் செய்வதாகச் சொல்லி, இன்னும் சில ஆர்வர்லர்களுடன் சேர்ந்து, இந்தப் புத்தகத்தை இலவசமாக மாணவர்களுக்குக் கொடுக்க முன்வந்தார். இதனை ஒரு போட்டியின் வழியாகச் செயல்படுத்தினால், மாணவர்களை அது ஊக்குவிப்பதோடு, புத்தகத்தின் மதிப்பும் – அது ஒரு பரிசு என்ற அளவில் – கூடும் என்று கருதி, ‘இந்தியாவின் அடுத்த ஐந்து ஆண்டுகள் – என் கனவு’ என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டிகள் நடத்த விரும்பினார். அதனை கிழக்கு பதிப்பகம் செயல்படுத்துகிறது. இது குறித்த மேலதிக விவரங்களுக்கு: bookstokids.blogspot.com

இந்த இரண்டையும் ஒன்றாகச் செயல்படுத்த முடிவெடுத்து, இந்தியா சுடருடன் இணைந்து, மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி இன்று நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ‘இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு’ நூலின் முதல் பாகம் பரிசளிக்கப்பட்டது. இதன் இரண்டாம் பாகம் வெளிவந்தபின்பு, அப்புத்தகமும் இந்த மாணவர்களுக்கு தரப்படும்.

வெற்றி பெற்றவர்களின் புகைப்படங்கள், அவர்கள் எழுதிய கட்டுரைகள் bookstokids.blogspot.com வலைத்தளத்தில் பதிப்பிக்கப்படும்.

இந்தத் தலைப்பை முதலிலேயே கொடுக்காமல், அந்த நேரத்தில் மாணவர்களுக்கு அறிவித்தோம். சில மாணவர்கள் மிகச் சிறப்பாக எழுதினார்கள் என்றே சொல்லவேண்டும். எல்லா மாணவர்களுக்குள்ளும் ஒற்றுமை என்னும் உணர்வு வேரூன்றியிருப்பதைப் பார்க்கமுடிந்தது. எல்லாரும் சொல்லி வைத்தாற்போல் வறுமையைப் பற்றிப் பேசினார்கள். சில மாணவர்கள் கணினித் துறையில் இந்தியா உலகை ஆளவேண்டும் என்று எழுதினார்கள். லஞ்சம் ஒழியவேண்டும் என்று மாணவர்களுக்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால் அது எப்படி என்றுதான் தெரியவில்லை. இந்தியா ஒரு வல்லரசு ஆவதில் மாணவர்களுக்குப் பெரும் ஆர்வம் இருப்பதைப் பார்க்கமுடிந்தது.

சில மாணவர்கள் வித்தியாசமாகவும் எழுதியிருந்தார்கள்.

ஒரு மாணவர் அப்துல்கலாம் பிரதமராகவேண்டும் என்று எழுதியிருந்தார்.

ஒரு மாணவர் இனி அமெரிக்கா இந்தியாவை ஆளமுடியாது என்றும், ஆளக்கூடாது என்றும் எழுதியிருந்தார்.

ஒரு மாணவர் சுற்றுப்புறச் சூழல் தூய்மை பற்றி எழுதியிருந்தார். அதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பது அவர் எண்ணம்.

இரண்டு மாணவர்கள் விடுமுறை விண்ணப்பம் எழுதியிருந்தார்கள்.

வித்தியாசமான நாளாக இன்று கழிந்தது.

இந்தியா சுடரைப் பற்றி ஆசிரியர் சண்முக வடிவு சொல்லும் கருத்துகளைக் கேளுங்கள்.

கட்டுரைப் போட்டியில் பங்குபெற்ற மாணவர்களில் ஒரு பிரிவு மாணவர்களைக் காண்பிக்கும் வீடியோ:

இது போல, கிழக்கு பதிப்பகத்தின் மூலம் போட்டிகள் நடத்தி, மாணவர்களுக்குப் புத்தகங்களை பரிசளிக்க விரும்புகிறவர்கள் haranprasanna at nhm.in என்னும் முகவரிக்கு மடல் அனுப்பலாம். பள்ளி மாணவர்களுக்கு படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்க வேறு ஏதேனும் கருத்துகள் இருந்தாலும் சொல்லவும்.

இது போக, இன்று ஒரு ஆசிரியர் – கரூர் என நினைக்கிறேன் – பேசினார். அவரை வீடியோ எடுத்தேன். ஏதோ ஒரு கணத்தில் அது அழிந்துவிட்டது. 🙁 அதனை எப்படியும் நாளை மீட்டெடுத்துவிடுவேன். அதனைத் தனிப்பதிவாகப் போடுகிறேன். இன்றைய ஹைலைட்டே அந்த அரசு தலைமை ஆசிரியரின் பேசுத்தான். அது அழிந்தது பெரிய வருத்தமாகிவிட்டது. 🙁

Share

ஈரம், ஸ்பிரிட் திரைப்படங்கள்

மெண்ட்டல் ப்ளாக் பற்றி எழுதும்போதே சொல்லியிருக்கவேண்டும்.

வார்த்தை இதழில் ஆலோசனைக் குழுவில் இருந்தபோது, பிரசுரிக்கச் சொல்லி கவிதைகள் வரும். அஞ்சல் அட்டையில் அனுப்பவேண்டாம் என்று வார்த்தை இதழில் தெளிவாகத் தெரிவித்த பின்பும் அனுப்புவார்கள். அஞ்சலட்டையில் வந்த மறக்கமுடியாத கவிதை:

“அன்பே
என் உடலைத்தான்
உனக்குத் தரமுடியும்
ஏனென்றால்
என் உயிர்
இந்தியாவுக்கு.”

என்ன ஒரு இந்தியன்!

-oOo-

ஈரம் படம் பார்த்தேன். ஷங்கர் தயாரிப்பில் வந்த நல்ல மொக்கைப் படம் இதுதான். ஆரம்பத்தில் நன்றாக ஆரம்பித்த திரைப்படம், ஆவி, பேய் என்று நுழைந்து கழுத்தை அறுத்துவிட்டது. நல்ல மேக்கிங் இருந்தாலே எந்த ஒரு கதையையும் பார்க்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் ஷங்கருக்கு இடி விழுந்திருக்கும்.

நல்ல துப்பறியும் படம் என்று நினைத்துப் பார்க்கத் தொடங்கிய எனக்கு ஆவி அது இது என்றெல்லாம் படம் அலையத் தொடங்கியது முதல் எரிச்சல் என்றால், அதிலும் ஒரு புதுமையில்லாமல் பழைய ‘13ம் நம்பர் வீடு’ ரேஞ்சுக்கு, கார் தானாக ஓடுவதும், நீரில் விழுந்து சாவதும், திடீரென ஒரு குழந்தை பேய் போல வேஷம் போட்டு அதிரும் பின்னணி இசையில் பயமுறுத்துவதும் என ஒரே இம்சை. படம் முழுக்க எங்கேயாவது தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது. தியேட்டரிலும் சொட் சொட் எனச் சொட்டியிருக்கும், அதன் பெயர் கண்ணீர்! முடியல.

நான் எங்க வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வந்துடுவேன் என்று ரஜினி ரேஞ்சுக்கு எல்லார்க்குள்ளும் பேய் வருவதுதான் ஹைலைட். அதிலும் தன்னைக் கொன்ற கணவனுக்குள்ளேயே பேய் வந்து அவனை மாட்டிவிடுவது மிகப்பெரிய டிவிஸ்ட் என்று இயக்குநர் கருதியிருக்கவேண்டும். பாவம்.

மேலே உள்ள வீடியோவில் பேயே சாட்சி சொல்லும் காட்சியையும், எஸ்.வி.சேகர் நாடகம் போல ஹீரோ படத்தின் பெயரைக் கடைசியில் சொல்லும் காட்சிகளையும் கண்டு ‘ரசிக்கலாம்.’

படம் ஊத்திக்கொண்டதும் அந்தப் பேய் ஷங்கருக்குள் இறங்கியிருக்கும். இயக்குநர் அறிவழகன் ரிச்நெஸ் முகமூடி போட்டு ஏமாற்றப் பார்த்திருக்கிறார். 🙂

இந்தப் படத்தை நிச்சயம் பாருங்க சார் என்று சொன்ன அந்தப் பையனைத் தேடிக்கொண்டிருக்கிறேன். எங்கள் அலுவலகத்தில்தான் வேலை பார்க்கிறான்.

-oOo-

SPIRIT என்று ஒரு திரைப்படம் பார்த்தேன். அனிமேஷன் திரைப்படம். குழந்தைகளுக்கான அனிமேஷன் என்று சொல்வது தவறு. ஒரு ரஜினி படத்தை ரசிப்பது போல இந்தப் படத்தை நான் ரசித்தேன். ‘நீயே குழந்தை மாதிரிதான்’ என்று என்னை நினைப்பவர்கள் இது குழந்தைகளுக்கான அனிமேஷன் என்று சொல்லிக்கொள்ளலாம். 🙂

ஒரு குதிரை பிறக்கிறது. சுட்டியாய் வளர்கிறது. எதிலும் வேகம், ஆர்வம், விவேகம். கழுகைவிட விரைவாக ஓடுகிறது. குதிரைக் குட்டிகளை வேட்டையாட வரும் சிங்கத்தை ஓட ஓட விரட்டுகிறது. வேட்டைக்காரர்கள் இதனை சிறைப் பிடிக்கிறார்கள். ஆனால் அவர்களால் இக்குதிரையை அடக்கமுடியவில்லை. என்னென்னவோ செய்கிறார்கள். அவர்களை வீழ்த்திவிட்டு, அவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் காட்டுவாசியுடன், அங்கிருக்கு மற்ற குதிரைகளையும் விடுவித்துவிட்டு ஓடுகிறது. அந்தக் காட்டுவாசி தன்னைக் காப்பாற்றிய குதிரையையே சிறைப்பிடிக்கிறான்! அவனிடம், நம் ஹீரோ குதிரையை ஒத்த, அதே வேகம் விவேகம் உள்ள ஒரு பெண் குதிரை உள்ளது. பிறகென்ன காதல்தான்.

ஹீரோ குதிரை காட்டுவாசியைப் புரிந்துகொள்கிறது. அவனுடன் நட்பாகிறது. குதிரையைத் தேடி வரும் வேட்டைக்காரர்களிடமிருந்து காட்டுவாசியைக் காப்பாற்றுகிறது பெண் குதிரை. காப்பாற்றும்போது ஓடும் வெள்ளத்தில் விழ, அந்தப் பெண் குதிரையைக் காப்பாற்றுகிறது ஹீரோ குதிரை. ஆனால் மீண்டும் வேட்டைக்காரர்களிடம் சிக்கிக் கொள்கிறது.பின்னர் எப்படி காட்டுவாசியைக் காப்பாற்றி, பெண் குதிரையோடு தன் வீட்டுக்குத் திரும்புகிறது என்பது கதை.

குதிரையின் ஸ்டைல் பற்றிச் சொல்லவேண்டும். முன் பக்கம் பறக்கும் தலைமயிரும், பிடரி மயிரும் அக்குதிரைக்கு ஒரு பிரத்யேகமான அழகைத் தந்துவிடுகிறது.

இந்தப் படத்தில் குதிரைக்குப் பதிலாக ரஜினி நடித்தால் (அனிமேஷனில் அல்ல!) இது ஒரு கச்சிதமான ரஜினி திரைப்படமாக மாறிவிடும். இதனால்தான் ரஜினி படத்தை குழந்தைகள் அப்படி விழுந்து விழுந்து பார்க்கிறார்கள் போல.

ஒரு ஆள் எப்படி நூறு பேரை அடித்து வீழ்த்தமுடியும் என்ற லாஜிக்கை மறந்துவிட்டு சுரேஷ் கண்ணன் போன்றவர்கள் ஸ்பிரிட் படத்தைப் பார்க்கமுடியும் என்பதால், அவர் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதோடு இன்னொரு வேண்டுகோள். எந்திரன் திரைப்படம் வெளிவர இருக்கிறது. எந்த ஒரு ரஜினி திரைப்படம் வந்தாலும் அதனை நாலு திட்டு திட்டி எழுதுவார் சுரேஷ் கண்ணன். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிடும். ஆனால் எந்திரன் திரைப்படத்தை இதுவரை அவர் திட்டாமல் இருப்பது ரஜினி ரசிகர்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களின் மனமறிந்து உடனே அவர் எந்திரனைத் திட்டி ஒரு பதிவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

Share

கொஞ்சம் மெண்ட்டல் ப்ளாக்

நீண்ட நாள்களாக எதுவுமே எழுதவில்லை. கொஞ்சம் மெண்டல் ப்ளாக். 🙂

நேற்று வந்த ஒரு லிங்க்கை க்ளிக் செய்யக்கூடாது என்று நினைத்துக்கொண்டே ஞாபகமாக க்ளிக் செய்தேன். உடனே ‘தமிழ்க் கவிதைகள் சப்ஸ்கிரைப் செய்யப்பட்டுவிட்டது’ என்றார்கள். கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. எப்போதெல்லாம் ஃபீட் பர்னரில் கவிதைகள் வருமோ அப்போதெல்லாம் எனக்குக் கவிதைகள் வருமாம். சரி, என்ன பெரிய என்று இருந்துவிட்டேன்.

இன்றே ஒரு கவிதை வந்தது.

இன்று சம்பள நாள் என்பது கவிதைத்தலைப்பு. மங்களகரமாகத் தலைப்பு வைத்திருக்கிறார்கள் என்று மேற்கொண்டு படித்தேன்.

பால்காரனுக்கு இவ்வளவு…
பள்ளிக் கட்டணம் இவ்வளவு…
மளிகை சாமானுக்கு இவ்வளவு…
வீட்டு வாடகைக்கு இவ்வளவு…
தீபாவளி செலவுக்கு இவ்வளவு…
என வரிசையாய்
கணக்கு போட்டபடி
அலுவலகம் வந்து சேர்ந்தேன்…

மாலைக்குள் அத்தனை வேலையையும்
முடித்து விட்டு சம்பளத்திற்காகக்
காத்திருந்தேன்..!
அழைத்துச் சொன்னார் முதலாளி
இம்மாதம் சம்பளமில்லை
அடுத்த மாதம் பார்க்கலாமென்று.

என்னுடைய அத்தனை
கணக்குகளும்
இந்தியனின் எண்கணிதக்
கண்டுபிடிப்பில் வந்து நின்றன..!

ஏமாற்றத்தோடு
வீடு திரும்பினேன்…
சிரித்தபடி வரவேற்ற
என் இல்லாள்
விபரமறிந்ததும்
வாடி நின்றாள்..!

எனைப் பார்த்து ஓடி வந்த
என் நான்கு வயது மகன்
வெற்றுக் காகிதத்தைக் காட்டி
சிரித்தபடி கேட்டான்
‘அப்பா..! இதோ என் சம்பளம்…
உன் சம்பளம் எங்கே..?’

அவனுடைய சம்பளத்தைப் பார்த்தேன்
அந்த வெற்றுக் காகிதம்
எனைப் பார்த்து சிரித்தது..!

உடனே அன்சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன்.

இந்த மாதிரி கவிதைகளையெல்லாம் படித்து, எழுதித்தான் வளர்ந்தோம் என்பது உண்மைதான். நான் இதுபோன்று கவிதைகள் எழுதியபோது, அதனை வாசித்தவர்கள் எப்படி தவித்திருப்பார்கள் என்பது தெளிவாகப் புரிகிறது. பாவம் அவர்கள். அவர்களின் வயிற்றெரிச்சல் என்னைத் தொடர்ந்து வந்து மிரட்டுகிறது போலும். இப்படி கவிதை எழுதுபவர்கள் கொஞ்சம் மெனக்கெட்டால் நல்ல கவிதைகள் எழுதிவிடமுடியும் என்பதும் உண்மைதான். இந்தக் கவிதையை எழுதியவர் சீக்கிரமே மிக நல்ல கவிதைகள் எழுதத் தொடங்கிவிடுவார் என்று நம்புவோம்.

(பின்குறிப்பு: மெண்டல் ப்ளாக்கைத் தடுக்கு இனி இது போன்ற டைரிக் குறிப்புகள் அடிக்கடி வரும்!)

Share

குதலைக் குறிப்புகள் – 9

கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சிகள் கடந்த ஆறு வாரங்களாக வந்துகொண்டிருக்கின்றன. ஒரு நிகழ்ச்சியை லைவ்வாகக் கொண்டு செல்வது எத்தனை கஷ்டம் என்பது முகத்தில் அறைந்தாற்போல் புரியத் தொடங்குகிறது. நாம் மனதில் நினைத்திருக்கும் வடிவத்தில் 50% நிஜத்தில் வந்துவிட்டாலே பெரிய வெற்றிதான் போல. பங்கெடுக்கும் எழுத்தாளர்கள், மருத்துவர்கள் அவர்களின் அலைவரிசையிலேயே பேசுகிறார்கள் என்பதுதான் பொதுவான சவால். இதை மீறிவிட்டாலே பாதி வெற்றிதான்.

லிவிங் ஸ்மைல் வித்யாவின் நிகழ்ச்சி மிக நன்றாக வந்திருந்தது. (ஒலிவடிவம் இங்கே.) இதன் காரணங்கள் மிக எளிமையானவை. வித்யா நேரடியாக, எளிமையாக, யதார்த்தமாகப் பேசினார். வித்யாவின் மெச்சூரிட்டி இன்னொரு காரணம். வித்யாவின் வருகை, திருநங்கைகளின் மீதான, என்னைப் போன்ற வலைப்பதிவர்களின் பார்வையை வெகுவாக பாதித்துள்ளது போன்றே, வேறொரு நோக்கில் வித்யாவும் பாதிக்கப்பட்டிருக்கிறார் – பாஸிடிவ்வாக. அவரது கோபங்கள் மிக நேர்த்தியாக வெளிப்பட்டன. வித்யாவின் இந்த மெச்சூரிட்டி நிகழ்ச்சிக்கு ஒரு புதிய பரிமாணத்தையே அளித்துவிட்டது. அவரது ‘நான் – வித்யா’ புத்தகம் பல தளங்களில் மிக முக்கியமான பாதிப்பை ஏற்படுத்தியதை உணரமுடிகிறது. திருநங்கைகளைப் போன்றே, உடலளவில் பெண்ணாகவும், உள்ளே ஆணாகவும் உணரும் வகையினரின் கஷ்டத்தை வித்யா சொன்னவிதம் வெகு நேர்த்தியாக இருந்தது.

-oOo-

கிழக்கு வெளியிட்ட சமீபத்திய மூன்று புத்தகங்கள் மிக முக்கியமான இடத்தைப் பெறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சீனா – விலகும் திரை, இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு, சென்னை – மறுகண்டுபிடிப்பு ஆகிய இந்த மூன்று புத்தகங்களுக்குக் கிடைத்த வரவேற்பும் மிக முக்கியமானது. கிழக்கு பதிப்பகம் புதிய வாசகர்களை உருவாக்கும் அதே வேளையில், தனது வாசகர்களை மெல்ல இந்தப் புத்தகங்கள் பக்கம் கொண்டு செல்வதும் முக்கியமான ஒன்றாகும். அது இப்போது தீவிரமாக நடக்கத் தொடங்கியிருப்பது சந்தோஷம் தருகிறது.

வயதானவர்களின் மீதான என் பார்வை எப்போதுமே அனுதாபம் சார்ந்ததாகவே இருக்கும். நான் என் வாழ்க்கையில் எதிர்கொண்ட என் தாத்தா பாட்டி ஆகியோரின் உருவத்தையே ஒவ்வொரு வயதானவரிலும் பார்ப்பதால் இப்படி இருக்கலாம். இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு புத்தக வெளியீட்டில், புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் ஆர்.பி.சாரதி (பாராவின் அப்பா) கலந்துகொண்டார். இந்த விழாவில் எல்லாரும் பேசியதை விட, அந்த வயதானவர் கொண்ட நெகிழ்ச்சியே முக்கியமானதாகப் பட்டது எனக்கு. அவர் மேடைக்கு அழைக்கப்பட்டபோது அவர் கொண்ட நெகிழ்ச்சியைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மிகவும் இன்ஃபார்மலாக நடக்கும் கிழக்கு கூட்டத்தில், நூலின் மூல ஆசிரியரான ராமசந்திர குஹாவுக்கு, அவர் ஒரு பொன்னாடையைப் போர்த்திய தருணத்தில், விழாவில் ஒரு பாரம்பரியத் தன்மை புகுந்துகொண்டதாக உணர்ந்தேன். நான் ரசித்த நல்ல தருணங்களுள் அதுவும் ஒன்று.

-oOo-

பிள்ளையார் சதுர்த்திக்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நிறைய பிள்ளையார் சிலைகள் முளைத்திருந்தன. எங்கள் வீட்டிலிருந்து கிழக்கு பணியிடத்துக்கு செல்லுமுன்பு கிட்டத்தட்ட 20 பிள்ளையார்களைப் பார்த்தேன். ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

பைத்தியக்காரன் தன் பதிவில் பிள்ளையார் எப்போது தமிழகத்துக்கு வந்தார் என்று ஒரு பதிவு எழுதியுள்ளார். பிள்ளையாரை அரசியலுக்கு உரிய ஒரு சாதனமாகப் பயன்படுத்தப்போகிறார்கள் என்று வருத்தப்பட்டிருக்கிறார். இதில் திடீரென்று வருத்தப்பட ஒன்றுமில்லை. எப்படி இஸ்லாமிய, கிறித்துவ, ஹிந்து மதங்கள் தொடர்ந்து அரசியலுக்குப் பயன்படுத்தப்படுகின்றனவோ, அதன் ஒரு அங்கமாக இதுவும் அமையும். நாம் ஒட்டுமொத்தமாக, தொடர்ச்சியாகக் கவலைப்படலாமே ஒழிய, இதற்காக தனியாக வருத்தப்படவேண்டியதில்லை. ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் தமிழகத்துக்குப் பிள்ளையார் வந்தார் என்கிறார் பைத்தியக்காரன். 1400 வருட காலப் பழமையே போதுமானதற்கும் மேலான வலு என்ற எனது தனிப்பட்ட கருத்து ஒருபுறமிருக்க, சோ துக்ளக் இதழில் இதுகுறித்து, சில வருடங்களுக்கு முன்பு சிறந்த கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். வழக்கம்போல கருணாநிதி ஏதோ சொல்லிவைக்க, அதற்கு பதில் சொல்லும் வகையில்தான் அக்கட்டுரை எழுதப்பட்டிருந்தது. பைத்தியக்காரனுக்கு அதில் சில பதில்கள் கிடைக்கலாம். அதுபோக, ஜாவா குமார் சொல்லியுள்ள பதில்களும் முக்கியமானவை. அதற்கு பைத்தியக்காரன் பதில் சொல்வார் என எதிர்பார்க்கலாம். இதுபோக, எந்த எந்தக் கடவுளர்கள், எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், எப்போது தமிழ்கத்துக்கு வந்தார்கள் என எழுதவேண்டும். அப்போதுதான் பைத்தியக்காரன் பின்னூட்டங்களின் வலிமையையும், முற்போக்கின் மகத்துவத்தையும் அறிவார். 🙂

-oOo-

பிள்ளையாருக்கு இணையாக, தெருவெங்கும் மாலைகளுடன் காணப்பட்டார் ராஜசேகர ரெட்டி. அவர் மறைவுக்கு அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

ஊடகங்கள் இந்தியாவெங்கும் ஒரு மாயையையும், பரபரப்பையும் உருவாக்கிவிடமுடியும் என்பதற்கு இவை சமீபத்திய உதாரணங்கள். ஆந்திராவின் ஏழைப் பங்களான், அகில இந்திய ரட்சகராக்கப்பட்டார். எதிர்பாராத, இரக்கம் தரும் விதமான மரணம் அன்றி, அவர் இந்த அளவுக்கு இந்தியாவெங்கும் கொண்டாடப்பட அதிக காரணங்கள் எனக்குத் தெரியவில்லை. இது ஆந்திராவில் நிகழ்வது குறித்து பிரச்சினையில்லை; ஏற்கக்கூடியதே. தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் நடப்பது ஆச்சரியம். நல்லவேளை கேரளாவில் இத்தனை ஆர்ப்பாட்டம் இல்லை போலும். எப்படி ஒரு மனிதர் தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் ரட்சகராகவும், கேரளாவில் மனிதராகவும் ஆகிப் போனார் எனத் தெரியவில்லை. எல்லாம் ஊடக மாயை. சர்வக்ஞர் சிலை திறப்பில் கிடைத்த உற்சாகத்தைத் தொடர்ந்து, இரு மாநிலங்களுக்கு இடையேயான உறவைப் பலப்படுத்துகிறேன் என்று, தேவையற்ற ஒரு விடுமுறையை அறிவித்தார் கருணாநிதி. இது அநாவசியமான விடுமுறை. கருணாநிதிதான் ஸ்டண்ட் அடிக்கிறார் என்றால், கர்நாடகமும் விடுமுறை அறிவித்து, திராவிடக் கட்சிகளுக்குப் போட்டியாக நின்றது இன்னொரு கொடுமை. எதற்கெடுத்தாலும் விடுமுறை என்று அறிவிக்கும் வழக்கத்தை கருணாநிதி கைவிடவேண்டும்.

ஹிந்துத்துவவாதிகள் ராஜசேகர ரெட்டியை ராஜசேகர சாமுவேல் ரெட்டி என்கிறார்கள். இதற்கான ஆதாரங்களைக் கேட்டால், வாய்வழி பரப்பப்பட்ட உண்மை என்கிறார்கள். இணையத்தில் தேடினால், சில தளங்கள் அவரை ராஜசேகர சாமுவேல் ரெட்டி என்று சொல்கின்றன. இவையெல்லாம், ரெட்டி மரணத்துக்கு முன்பே எழுதப்பட்டவை என்பது முக்கியமான விஷயம். அவர் சாமுவேல் ரெட்டியாக இருந்தாலும், யாராக இருந்தாலும் பிரச்சினையில்லை. இதையெல்லாம் மீறித்தான் அவர் ஆந்திராவில் செல்வாக்குப் பெற்றிருக்கிறார். உண்மையில் அவர் கிறித்துவராகவே மதம் மாறி இருந்தாலும் பிரச்சினையில்லை. அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில் என்ன தயக்கம் என்பதுதான் கேள்வி. இரு மத அரசியல் ஆதாயங்களையும் பயன்படுத்த அவர் இப்படி நடந்துகொண்டாரோ என்று நினைக்கத்தோன்றுகிறது.

-oOo-

கந்தசாமி திரைப்படம் பார்த்தேன். முதல் நாள் முதல் ஷோ. ரஜினி, கமல் படமில்லாமல் இன்னொரு நடிகரின் படத்தை முதல் ஷோவில் பார்ப்பதே கேவலமாக இருந்தது. 🙂 இருந்தாலும் என்ன செய்ய, பார்க்கவேண்டிய கட்டாயம். ஓசி டிக்கட்!

ரிச்நெஸ் இல்லை படத்தில். கேமரா ஒரே எரிச்சல். எல்லா காட்சிகளிலும் மஞ்சள் ஷேட், ப்ளூ ஷேட் ஒரே கலர் ஜிங்கிச்சா.

இத்தனை ஹிட்டான பாடல்களையெல்லாம் எப்படி சொதப்பவேண்டும் என்று சுசி கணேசனிடம் கற்கலாம்.

ஸ்ரேயே பாதி மார்பு வெளித்தெரியும்படி வருகிறார். படம் முடியும் நேரத்தில் வில்லனுக்கு ஒரு குத்துப் போட்டு. சகித்துக்கொள்ள முடியவில்லை. அதில் ஆடும் ‘ஆப்பிள் நைஸா கடிச்சிக்கோ’ புகழ் நடிகை, கிட்டத்தட்ட மேலாடையே இல்லாமல் குதிக்கிறார். இதை மட்டும் சகித்துக்கொண்டேன். 🙂

இத்தனை எரிச்சலையும் மீறி…

படம் முழுக்க ஒரே அரோகராதான். எல்லாவற்றையும் அந்த கந்தசாமியே செய்கிறான்! கடவுள் பெயரால் ஆசாமி செய்கிறான் என்று போலிஸ் குறிவைத்துப் பிடிக்கிறது ஆசாமி கந்தசாமியை. இதிலெல்லாம் விஷேஷமில்லை…

ஒவ்வொருதடவை விகரம் சிக்கலில் மாட்டும்போதெல்லாம் அவர் முருகனை நினைத்து வழிபடுகிறார். ஒவ்வொருதடவையும் சிக்கலில் இருந்து மீள்கிறார். இதுதான் முக்கியம். சமீபத்தில் இப்படி கடவுள் நம்பிக்கைக்குக் காவடி எடுத்து ஒரு மாஸ் படம் வந்ததில்லை என நினைக்கிறேன். சரத்குமாரின் ‘ஏய்’ இந்த ரேஞ்சுக்கு இருந்தது நினைவுக்கு வருகிறது. மெக்ஸிகோவில் ஐந்து வில்லன்கள் துப்பாக்கி முனையில் கந்தசாமியைக் கொல்லப் போகிறார்கள். கடைசி நொடியில், இறக்கும்போது அவர் முருகனை நினைக்கிறார். எங்கிருந்தோ வரும் ஒரு கார் அவரைக் காப்பாற்றுகிறது.

மக்கள் எல்லாருமே முருகந்தான் கந்தசாமி என்று படம் முழுக்கச் சொல்கிறார்கள்.

பின்னணி இசைகூட ‘முருகா முருகா முருகா முருகா’தான்.

இது ஒரு ஹிந்துத்துவா படம் என்று கிளப்பிவிடலாம் என்றால், படத்தின் தரம் அதைச் சொல்லவே நாகூச வைக்கிறது.

இந்தப் படம் இத்தனை மோசமாக இருந்தாலும், ஃப்ளாப் ஆகாது, சூப்பர் ஹிட் ஆகவிட்டாலும், நஷ்டமில்லாமல் ஓடிவிடும் என நினைத்தேன். அதற்கான உழைப்பை விக்ரம் கொடுத்திருக்கிறார். சேவல் மாஸ்க் இலவசம் என்று சொன்னதும், மக்கள் கூட்டம் அதிகமாகி லாபம் வருகிறது என செய்திகள் பார்த்தேன். உண்மையா எனத் தெரியவில்லை. சேவல் போல வரும் விக்ரமை சிறுவர்கள் ரசிப்பார்கள் எனத்தான் நினைக்கிறேன்.

-oOo-

இப்போது டிவியில் ராமாயணம் ஓடிக்கொண்டிருக்கிறது.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு ராமானந்த சாகரின் ராமாயணம் ஹிந்தியில் வந்தபோது, வீடு வீடாக அலைந்து டிவி பார்த்தது நினைவுக்கு வருகிறது. தினமலரில் அதன் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடுவார்கள். அதை முதலிலேயே படித்துவிட்டு, அதை ஒப்பிட்டுப் பார்த்து, புரிந்துகொள்வோம். இப்போது தமிழிலேயே வருகிறது.

இந்த ராமாயணத்தில், கோசலை, கைகேயி, சீதை எல்லாம் மிகவும் செக்ஸியாக வந்தார்கள். இவர்கள் ராமாயணத்தை உள்குத்தாகக் காண்பிக்கிறார்களோ என்றெல்லாம் தோன்றியது. எல்லார் வீட்டிலும் சிறுவர்கள் இந்த ராமாயணத்தை விழுந்து விழுந்து பார்க்கிறார்கள். வயது வந்தவர்கள் தவிர, இந்த ராமாயணத்தை யாருமே பார்க்கமாட்டார்கள் என நினைத்திருந்தேன். ராமாயண நாடகத்தின் டைட்டில் பாட்டான ‘ஜெய்ஸ்ரீராம்’ எனக் கேட்டதும், சிறுவர்கள் ஓடி வந்து டிவி முன் உட்கார்கிறார்கள். எந்த சிறப்பு நிகழ்ச்சி வந்தாலும், ராமாயணத்தை நிறுத்தாமல் ஒளிபரப்பிவிடுகிறது சன் டிவி.

இப்படி பத்து வருடங்களுக்கு ஒருமுறை ராமாயணத்தையும், மகாபாரத்தையும் காண்பிப்பது நல்லது என்ற எண்ணம் வந்துவிட்டது! என்ன, கைகேயி, கோசலை, சீதைக்கெல்லாம் நல்ல மாராப்புத் துணியைக் கொடுத்து, இடுப்பை மறைத்துக்கொண்டு நடிக்கச் சொல்லித் தந்தால் நல்லது.

-oOo-

உதயா டிவியில் சில கன்னடப் படங்கள் பார்த்தேன். எல்லாப் படங்களுமே தமிழில் இருந்து சென்றவைதான். கன்னட ரமணாவிலும், நாட்டாமையிலும் விஷ்ணு வருத்தன். கன்னட ஆண்பாவத்திலும், எங்க சின்ன ராசாவிலும் ரவிச்சந்திரன். இன்று இரவு கன்னட முத்துவில் இருவருமே வரப்போகிறார்களாம்!

மலையாளத்திலும் தெலுங்கிலும் தசாவதாரம் பார்த்தேன். மலையாளத்தில் நாயுடு கமல் தெலுங்கு பேசுபவராகவே வந்துவிட்டார். தெலுங்கில் நாயுடு கமல் தமிழ் பேசுகிறார். ‘நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான்’ என்று பாடுகிறது அவரது மொபைல். ‘தெலுகா’க்கு பதில் தமிழா என்கிறார். ‘இல்லை மலையாளி’ என்கிறார், தமிழில் கன்னடம் என்றும் மலையாளத்தில் கன்னடம் என்றும் சொல்லும் ஒரு நடிகர். தமிழ் நாயுடு கமல், தெலுங்குப் படத்தில், மலையாளத்துக்கும் தமிழுக்கும் ஒரே ஸ்க்ரிப்ட்தான் என்று தமிழில் சொல்கிறார். நான் என்ன சொல்ல வருகிறேன் என்று எனக்கே குழப்புவதுபோல, தெலுங்கு, மலையாள தசாவதாரங்கள் நல்ல காமெடியாக இருந்தன.

-oOo-

சாரு நிவேதிதா…

… பற்றி நான் என்ன எழுதிவிடப் போகிறேன்..? அவர் நித்யானந்தர் வழியாக எங்கோ போய்க் கொண்டிருக்கிறார். வாழ்க நித்ய ஆனந்தத்துடன். :))

-oOo-

தோழமை வெளியீடாக ‘இருள் விலகும் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு – நிறைய எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு – வெளிவந்துள்ளது. கடந்த சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வரவேண்டியது. இன்னும் நான் பார்க்கவில்லை. எனது கதை ஒன்றும் இதில் உள்ளது. புத்தகம் கைக்கு வந்ததும் சொல்கிறேன். எனது கதை இந்த சிறுகதை உலகை எப்படி மாற்றியமைக்கிறது என்பது பற்றி நாம் நிறையப் பேசலாம். 🙂

-oOo-

Share

கிழக்கு பாட்காஸ்ட் – ஆஹா FMல்.

ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமை மதியம் 12 மணி முதல் 1 மணி வரை, கிழக்கு பாட்காஸ்ட் என்னும் ஒரு புதிய நிகழ்ச்சி நாளை முதல் ஒலிபரப்பாகும்.

எப் எம் என்றாலே வெறும் திரைப்பாடல்கள் என்கிற அளவில் பழக்கப்பட்டுப்போய்விட்ட பண்பலையில் ஒரு மாறுதலான நிகழ்ச்சி வரப்போவது மகிழ்ச்சியளிக்கிறது. திரைப்படப் பாடல்கள் இல்லாத ஒரு நிகழ்ச்சி, இதுவரை எதாவது ஒரு பண்பலையில் ஒலிபரப்பாகியிருக்குமா என்பது சந்தேகமே. வானவில் பண்பலையில் ஒருவேளை ஒலிபரப்பாகியிருந்திருக்கலாம்.

இப்படி ஒரு நிகழ்ச்சியை ஒப்புக்கொள்ளவே பல பண்பலைகள் தயங்கின என்பதே உண்மை. தமிழ்நாட்டில் இன்றைக்கு வரைக்கும் பண்பலை என்பது வெறும் திரைப்படத்துக்கான ஒரு கருவியாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலை மாற, இந்த நிகழ்ச்சி உதவுமானால் உண்மையிலேயே ஒரு பெரிய வெற்றியே.

பல பண்பலைகளுக்கு இப்படி ஒரு நிகழ்ச்சியை ஒலிபரப்ப முடியும் என்பதையே உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. என்ன சொன்னாலும், எவ்வளவு பேசினாலும், மீண்டும் மீண்டும் திரைப்படப் பாடல்களை ஒலிபரப்புவதிலேயே வந்து முடித்தார்கள். பாடல்கள் இல்லாத நிகழ்ச்சியை யாருமே கேட்கமாட்டார்கள் என்பதே அவர்களது முடிவான நம்பிக்கை. இப்படி பாடல்கள் இல்லாமல், ஓர் அரட்டை நிகழ்ச்சியைக் கேட்கவென்றே நிறையப் பேர் இருபபார்கள் என்பதை அவர்களால் யோசிக்கவே முடியவில்லை.

நாம் ஒரு நிகழ்ச்சியை பாடல்களின் பாதிப்பே இல்லாமல் ஒலிபரப்பிவிட்டால் உடனே அதை அனைவரும் கேட்டுவிடமாட்டார்கள் என்பதையும் நாங்களும் புரிந்துகொண்டிருக்கிறோம், மற்றவர்களைக் கேட்க வைக்க நாமும் முயல்வேண்டும் – என்றெல்லாம் சொன்ன பின்பும் அவர்கள் யோசிக்கத் தயாராக இல்லை.

முதலில் இருந்த இந்த நிகழ்ச்சிக்கான எங்கள் தேர்வைப் புரிந்துகொண்டவர்கள் ஆஹா எஃப் எம் மட்டுமே.

தொலைக்காட்சிகள் எங்கேயோ போய்க்கொண்டிருக்க, இன்னும் பண்பலை வானொலிகள் வெறும் திரைப்படப் பாடல்களிலேயே மூழ்கிக் கிடப்பது அவலம்தான்.

ஒவ்வொரு வாரம் ஞாயிறு அன்று பகல் பனிரெண்டு மணிக்கு அரட்டை. கொஞ்சம் வித்தியாசமான அரட்டை. அறிவுபூர்வமான அரட்டை. நிச்சயம் கேளுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சியில் எதைப் பற்றி விவாதிக்கப் போகிறோம் என்பதை முன்பே அறிந்துகொள்ள விரும்புகிறவர்களும், ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியைப் பற்றி நினைவூட்டவேண்டும் என்று எதிர்பாக்கிறவர்களும் START NHM என டைப் செய்து, 575758 என்கிற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்பி பதிவு செய்துகொள்ளவும். ஏற்கெனவே பதிவு செய்துகொண்டவர்கள் மீண்டும் பதிவு செய்துகொள்ளவேண்டியதில்லை. இதில் பதிவு செய்துகொண்டால் கிழக்கு பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள், புத்தகக் கண்காட்சி பற்றிய அறிவிப்பு போன்றவற்றையும் எஸ் எம் எஸாகப் பெறலாம்/பெறவேண்டியிருக்கும்!

இந்நிகழ்ச்சியை சென்னையில் இருக்கும் நேயர்கள் மட்டுமே கேட்கமுடியும் என்பதால், இந்நிகழ்ச்சி பற்றிய எஸ் எம் எஸ்ஸும் சென்னை மொபைல் நம்பர்களுக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படும்.

இனி, வாரா வாரம் புது அவதாரம்!

Share

அலை – சிறுகதை

அலை சிறுகதை சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது.

Share