Archive for ஹரன் பிரசன்னா

பிரி பிரி பிரி பிரி பிரி பிரி பிரி பிரி பிரி கண்ணில் நீர்வரப் பிரி

சேரன்மகாதேவி நான் சிறு வயதில் வளர்ந்த நாடு. காலார நடந்தால் ஊரை முழுக்கச் சுற்றிவர நான்கு மணி நேரம் ஆகும். கொழுந்தனா மலைக்கு அடிவாரத்தில் ஆடு மேய்ப்பார்கள். சன் பேப்பர் மில்லில் வேலை பார்த்துவிட்டு ஆற்றில் குளித்துவிட்டு நடந்தே வீடு வந்துவிடுவார்கள். ஒரே ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியும், பஞ்சாயத்து ஸ்கூலும் உண்டு. நான் 6 வயதில் அங்கே இருந்தபோது சித்ரா மெட்ரிகுலேஷன் என்ற ஒரே ஒரு மெட்ரிக் ஸ்கூல் இருந்தது. இப்போது 2 அல்லது 3 இருக்கலாம்.

முன்பு ஒரு டூரிங் தியேட்டர் கூனியூர் நாட்டில் இருந்தது. கூனியூர் என்பது சேரன்மகாதேவி நாட்டுக்குப் பக்கத்து நாடு. ஒரே ஒரு சௌகரியம், கூனியூர் நாட்டுக்குப் போகவோ, கூனியூர் நாட்டு மக்கள் சேர்மாதேவி நாட்டுக்கு வரவோ விசா தேவையில்லை. யூ டோண்ட் பிலீவ் இட், பாஸ்போர்ட்டும் தேவையில்லை யூ நோ. இன்னொரு அதிர்ச்சி, இரண்டு நாட்டுக்கும் நடந்தே போய்விடலாம். கூனியூர் நாட்டுக்குப் பக்கத்து நாடு வீரவநல்லூர் நாடு. Funny countries, isn’t it?

கூனியூர் நாட்டுக்கு இப்படி நம்ம நாட்டுப் பணமெல்லாம் போகுதே என்று யோசித்தவர்கள் சேர்மாதேவியிலேயே தியேட்டர் கட்டிவிட்டார்கள். என் அப்பா சேர்மாதேவியில் பெரிய பிஸினஸ் மேனாக இருந்தவர். பிள்ளையார் கோவில் பின்புறத்தில் நின்றுகொண்டு சுண்டலும் சுக்கு வெண்ணீரும் விற்பார்.

வேத பாடசாலை உண்டு. யச்சு பாகவதர் தனியாக வேதம் பாடுவார். இந்நேரம் அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கவேண்டும். முட்டை ஊதி வைக்க வைத்தீஸ்வரன் கோவிலும் உண்டு.

எனது கோரிக்கை எல்லாம் இந்த பெரிய நாட்டை நிர்வாக வசதி கருதி இரண்டாகப் பிரிக்கவேண்டும் யுவர் ஹானர்!

சோர்ஸ்: http://thatstamil.oneindia.in/news/2011/06/11/bifurcate-tirunelveli-district-says-sarath-kumar-aid0090.html

Share

Facebook Notes – 1

நாள்: 12-ஜூன்-2011

Choose the best answer – கருணாநிதிக்கு உதவுவோம்

கருணாநிதியின் இந்த பேட்டியைப் (http://dailythanthi.com/article.asp?NewsID=652219&disdate=6%2F11%2F2011&advt=1) படித்தால், கலங்காத மனமும் கலங்கிவிடும். திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகாருக்கு அடுத்த உருகார் இதுதான். பல கேள்விகளுக்கு அதிரடி பதில்தான். என்ன பொண்ண கையைப் பிடிச்சி இழுத்தியா (http://www.youtube.com/watch?v=rgANpyU48cw) ரக பதில்கள்தான்.

எப்படி இந்த பத்திரிகையாளர்களும் விடாமல் கேள்வியைக் கேட்கிறார்கள் என்பதுவும் பாவமாகவே இருக்கிறது.

திருவாரூரில் நான் என்ன பேசினேன் என்பதை மறைத்துப் பேசாமல் திரித்துப் பேசாமல் என்று என்னவெல்லாமோ சொல்கிறார். எனது மகள் கனிமொழி என்று சொல்லிவிட்டு, இரண்டு நிமிடங்கள் கண் கலங்கி, உடன்பிறப்புகள் தலைவா கோஷமிட அவர் அன்று மத்திய அரசுதான் காரணம் என்ற வகையில்தான் பேசியதை டிவியில் நானே பார்த்தேன். ஆனால் அவரது பேட்டியோ சத்தியமாகக் கேளுங்கள் என்று வருகிறது. கடவுள் சத்தியமா கேளுங்கள் என்று இன்னொருமுறை நாக்கு தவறாததற்கு அவர் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்.

எல்லாக் கேள்விகளுக்கும் அவர் நிருபர்களையே பதில் சொல்லச் சொல்கிறார். தமிழ் ரத்தம் ஓடுகிறதா என்கிறார். டெல்லியில் நிருபர்கள் கேள்வி கேட்டால் ஹிந்தி ரத்தம் ஓடுகிறதா என்று கேட்காமல் இந்திய ரத்தம் ஓடுகிறதா என்றாவது கேட்கவேண்டும்.

கருணாநிதிக்கு நிருபர்கள் கொஞ்சம் கருணை காட்டி, சூஸ் தி பெஸ்ட் ஆன்சர் அடிப்படையில் கேள்விகளைக் கொடுத்துவிட்டால், அவரும் டிக் போட்டுக் கொடுத்துவிடுவார். மறக்காமல் ‘இவற்றில் எதுவும் இல்லை’ ஆப்ஷனை வைத்துவிடுங்கள்.

Link: http://www.facebook.com/note.php?note_id=207186185991642

————–

நாள்: 10-ஜூன்-2011

பகடியா உண்மையா ரொம்பக் கண்ண கட்டுது!

சாரு எழுதுவதில் எதை சீரியஸாக எடுத்துக்கொள்வது எதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்வது என்பதே குழப்பமாக உள்ளது.

சாரு வாசகர் வட்டம் பற்றி அவர் எழுதியபோது, சிலர் பஸ்ஸில் அதனை நகைச்சுவைப் பதிவு என்றார்கள். ஆனால், நான் படித்தபோது அது பகடியான பதிவாக எனக்குத் தோன்றியிருக்கவில்லை. கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது, எப்படி இவர்கள் அதனை பகடி என்று கண்டுபிடிக்கிறார்கள் என. சாரு இணையக் குழுமம் அல்லது ஃபேஸ்புக்கில் தொடரியாக இருந்தால்மட்டுமே இதெல்லாம் புரியும் என்றார்கள். ஆனால் தொடர்ந்து சாரு வாசகர் வட்டம் பற்றிய பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. இன்னும் அது தொடர் பகடியா அல்லது உண்மையா என்பது குழப்பமாகவே உள்ளது. பகடிதான் என்றால், அக்கவுண்ட் நம்பரெல்லாம் கொடுத்து உண்மை போலவே பகடி செய்ய தில் வேண்டும் என்று ஒப்புக்கொள்கிறேன்!

இப்போது உயிர்மையில் சாருவின் புத்தகங்களுக்கு 25% தள்ளுபடி, மோதிரம் பரிசு என்று தனது வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார் சாரு. (இப்படி சாரு தன் வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார் என்று சொல்வது கூட கொஞ்சம் ரிஸ்க்காக உள்ளது! திடீரென்று அந்தப் பதிவு தூக்கப்பட்டுவிடும் அபாயம் இருப்பதால் ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துவிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது!) இது மனுஷ்யபுத்திரனுக்கும் சாருவுக்கும் இடையேயான பகடியா அல்லது உண்மையா என்பது இன்னொரு குழப்பமாக உள்ளது. உண்மை என்றால், வாழ்த்துகள். பகடி என்றாலும் வாழ்த்துகள்தான்! கண்டனமா செய்யமுடியும்? :>

Link: http://www.facebook.com/note.php?note_id=206725746037686

————–

நாள்: 5-ஜூன்-2011

ராம்தேவ் கைது அராஜகம்

ராம்தேவின் நோக்கங்கள் என்னவாக இருந்தாலும், இந்த காங்கிரஸ் அரசு செய்திருப்பது அராஜகம்.

ஊழலுக்கெதிராக உண்ணாவிரதம் இருப்பதை ஏன் லத்தி சார்ஜாலும் கண்ணீர்ப் புகையாலும் கலைக்கவேண்டும்? வினேச காலே விபரீத புத்தி.

உடனடியாக ராம்தேவின் ஊழல்களை – அப்படி ஒன்று இருந்தாலும் இல்லாவிட்டாலும் – உடனே வெளியிட்டு அவரை கேரக்டர் அஸாஸிநேஷன் செய்யும் அரசு.

1300 கோடி சொத்து என்கிறார்கள். அவ்வளவு வரும் வரை என்ன செய்துகொண்டிருந்தன அரசுகள்?

அதிகமான சொத்து உள்ள சாமியார்களை எல்லாம் என்ன செய்யப் போகிறது இவ்வரசு? சாய்பாபா உடலுக்கு முன் சோனியாவும் மன்மோகனும் தேவுடு காத்தது ஏன்?

காங்கிரஸ் ஒரு கேவலமான ஆட்சியை நடத்துகிறது, மன்மோகன் மிக மோசமான பிரதமர். இதில் இவர்களுக்கு பாபா ராம்தேவைச் சொல்ல எந்தத் தகுதியும் இல்லை.

ராம்தேவின் பின்னால் இதுவரை ஆர் எஸ் எஸ் இருந்ததோ இல்லையோ, இனி இருக்கவேண்டும் – ராம்தேவ் தனிப்பட்ட முறையில் ஊழல்வாதியாக இல்லாதிருந்தால்.

Link: http://www.facebook.com/note.php?note_id=207186185991642

Share

தள்ளுபடி அதிரடி

இந்தப் பதிவை நான் சீரியஸாகத்தான் எழுதுகிறேன் என்றாலும் கடைசியில் இது மார்க்கெட்டிங் பதிவாகவும் எஞ்சும் அபாயம் உள்ளது என்பதை இப்போதே சொல்லிவிடுகிறேன்.

அதிரடித் தள்ளுபடி என்று கிழக்கு பதிப்பகம் சில புத்தகங்களை கிட்டத்தட்ட 80% தள்ளுபடியில் விற்பனை செய்தது, செய்துவருகிறது. இது முதலில் அறிவிக்கப்பட்டபோது சந்தோஷத்துடன் வாங்கிச் சென்ற வாசகர்கள் ஒருபுறம், இது எழுத்தாளர்களை அவமானப்படுத்துகிறது என்று வருத்தப்பட்டவர்கள் ஒருபுறம். வாசகர்கள் இப்படிப் பழகிவிட்டால் புதிய புத்தகங்கள் வரும்போது இனி அதனை வாங்கமாட்டார்கள் என்று கருத்துச் சொன்னவர்கள் ஒருபுறம்.

பொதுவாக ஒரு புத்தகத்தை 1200 அச்சடிப்பது என்பது மரபு. (இப்படி இல்லாமல் குறைத்து, மிகக்குறைத்து, அல்லது நன்றாக விற்பனையாகும் புத்தகங்களை மிக அதிகரித்தும் அச்சடிக்கப்படுகின்றன. அவை பிரச்சினையற்றவை. எனவே, அதைப்பற்றி இங்கே எங்கேயும் பேசவில்லை.) அப்படி அச்சடிக்கும் புத்தகங்கள் நாம் எதிர்பார்த்த மாதிரி விற்பனை ஆகவில்லை என்றால் அவை தேங்கத் தொடங்கும். 3 வருடங்களில் விற்கவில்லை என்றால் அதுவே சுமையாகவும் ஆகலாம். பொதுவாக 100 புத்தகங்கள் அச்சிட்டால், அதில் சூப்பர் ஹிட் புத்தகங்கள் அதிகபட்சம் 5 வரலாம். ஹிட் புத்தகங்கள் 10 வரலாம். மோசமில்லை என்னும் ரகத்தில் இன்னொரு 20 வரலாம். மீதி 65 புத்தகங்கள் இப்படித் தேங்கிப் போகும் அபாயம் கொண்டவைதான். (இந்த எண்ணிக்கைக்கும் புத்தகங்களின் தரத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.)

இந்தப் புத்தகங்களை என்ன செய்வது? அதிலும் 1500 தலைப்புகளில் பல்வேறு புத்தகங்கள் வரை அச்சிட்ட பதிப்பகங்கள் என்ன செய்ய இயலும்? இவற்றை பத்திரமாக வைத்திருக்க புத்தகக் கிடங்குக்கு ஆகும் செலவு, அவற்றைக் கையாளும் பாதுகாக்கும் பணியாளார்களின் சமபங்களங்கள் எல்லாவற்றையும் எப்படி நிர்வகிப்பது?

இந்தப் பிரச்சினை புத்தகத் தொழிலில் மட்டும் இருப்பதில்லை. எல்லாத் தொழிலிலும் உண்டு. ஆனால் அவ்வப்போது ஸ்டாக் கிளியரன்ஸ் சேல்ஸ் என்ற ஒன்றைப் போட்டு காலி பண்ணிவிடுவார்கள். புத்தகம் பொருத்தவரையில், தமிழ்நாட்டில் இப்பழக்கம் இல்லை என்பதால், அதனை கிழக்கு செய்தபோது நிறைய கேள்விகள் எழுந்தன.

உண்மையில் கிழக்கு பதிப்பகம் இது போன்ற புத்தகங்களை இந்த விலையில் மகிழ்ச்சியோடு விற்கவில்லை. இதனை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு புத்தகத்தை 1200 கூட விற்கமுடியாதா என்ற கேள்வி எழலாம். அதற்கான சரியான வழிமுறைகளை எந்தப் பதிப்பகமும் இன்னும் எட்டியிருக்கவில்லை என்பதுதான் சோகமான உண்மை. இதுபோக, ப்ரைடுக்காகவும், மன மகிழ்ச்சிக்காவும் கொண்டு வரப்படும் புத்தகங்கள். அவையும் விற்கவில்லை என்றால் புத்தகக் கிடங்கில் தேங்கவே தொடங்கும். வேறு வழியின்றித்தான் இதனைச் செய்யவேண்டியிருக்கிறது.

இதைச் செய்வதால் ஏற்படும் பிரச்சினைகளாகச் சொல்லப்படுபவை, உண்மையில் கிழக்கை மற்றும் இதுபோன்று இனி வேறு பதிப்பகங்கள் செய்ய முன்வந்தால் அவற்றையும் பாதிக்காது என்றே நான் நம்புகிறேன். இப்படி குறைந்த விலையில் புத்தகம் வாங்கிப் பழகியவர்கள் இனிமேல் புதிய புத்தகங்களை வாங்கமாட்டார்கள் என்று நான் நம்பவில்லை. உண்மையான புத்தக விற்பனை புத்தக விரும்பிகளிடமே முதலில் ஏற்படுகிறது. அவர்கள் இதற்கெல்லாம் காத்திராமல் உடனே வாங்கிவிடுவார்கள் என்பது முதல் பாயிண்ட். இரண்டாவதாக, நாம் எல்லா புத்தகப் படிப்பாளர்களையும் ஏற்கெனவே அடைந்துவிட்டோம் என்னும்போதுதான் இந்த ‘புத்தகம் இனி விற்காது’ என்ற எண்ணமே ஏற்படும். ஆனால் உண்மையில் நாம் பெரும்பாலான புத்தக வாசிபபாளர்களைச் சென்று அடையவே இல்லை. எனவே இந்தத் தள்ளுபடி விற்பனையில் பயன் அடையப்போவது, நாம் ஏற்கெனவே சென்றடைந்திருக்கும் ஒரு சிறிய விகிதத்தில் ஒரு மிகச் சிறிய விகிதம் மட்டுமே. ஏனென்றால்,ஒரு தமிழ்ப் பதிப்பகத்தைத் தெரியாதவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்டதமிழர்களின் எண்ணிக்கைக்குச் சமமானது.

அடுத்ததாக எழுத்தாளர்களின் வருத்தம். முதலில் இது நியாயமானது என்பதைச் சொல்லிவிடுகிறேன். ஆனால் இது மனம் சார்ந்த வருத்தம். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பதிப்பாளர்களுக்கு வேறு வழியில்லை என்பது புரியலாம். புத்தகத்தை எடைக்கு எடை போட்டோ, ரிபிராசஸஸ் செய்ய விலைக்குப் போட்டோ கொன்றுவிடலாம் என்று ஒரு வாதம் வருகிறது. நான் இதனை நிச்சயம் ஏற்கவில்லை. குறைந்த விலையில் கொடுத்தால் வாங்க ஆளிருக்கும்போது ஏன் இதனைச் செய்யவேண்டும்? புத்தகத்தின் விலை தங்கள் பர்ஸைவிட அதிகம் என்னும்போது மட்டும் ஒரு புத்தகத்தை வாங்காமல் செல்பவர் இதனைப் பயன்படுத்தி புத்தகம் வாங்கிக்கொண்டால் அது ஓர் எழுத்தாளருக்கு நிச்சயம் மகிழ்ச்சியே ஏற்படுத்தவேண்டும். ஓர் எழுத்தாளர் எழுதுவதே தனது புத்தகம் பரவலாக வாசிக்கப்படத்தானே!

மேலும், இப்படி வாசித்துப் பழகியவர்கள், சில வருடங்களில் ஒரு புத்தக வாசிப்பாளராகவே மாறும் வாய்ப்பு இருக்கிறது. இதோடு, இப்படி தள்ளுபடி விலையில் விற்பனை செய்யும் பதிப்பகங்களுக்கு நல்ல மார்க்கெட்டிங் கிடைக்கிறது. இதனையெல்லாம் சரியாக விற்காத புத்தகங்களின் மூலம் சம்பாதித்துக்கொள்ள முடியும்.

ஒரு புத்தகத்தை ஏன் 1200 கூட விற்கமுடியவில்லை? புத்தகம் வாசிக்கும் பழக்கம் நம்மிடையே குறைவு என்பது நிச்சயம் உண்மையே. ஆனால் ஒரு புத்தகத்தின் 1200 படிகளை வாங்கும் வாசிப்பாளர்கள்கூடவா இல்லை? இருக்கிறார்கள். தமிழ்நாடெங்கும் பரவலாக இருக்கிறார்கள். (வெளிநாட்டிலும்தான்!) அவர்களை அடையும் வழி காஸ்ட்லியானதாக இருக்கிறது. டிவியில் விளம்பரங்கள் வரத் தொடங்கினால் மிக எளிதில் ஒரு பதிப்பகம் பிரபலமாகலாம். நிச்சயம் புத்தகங்களும் விற்கும். ஆனால் அந்த டிவி விளம்பரத்துக்குத் தரும் காசுக்கு இணையான லாபத்தை புத்தகங்களில் பார்க்க முடியாது அல்லது வருடங்களாகும்.

டிவி விளம்பரம் என்றில்லை, முன்னணி நாளிதழ்கள், முன்னணி வெகுஜன இதழ்கள் எல்லாவற்றின் விளம்பர ரேட்டும் இதேபோலவே இருக்கின்றன. ஆனந்தவிகடன், குமுதம் போன்றவற்றின் ஒரு பக்க விளம்பரம் கிட்டத்தட்ட 1.5 லட்சம். இந்த 1.5 லட்ச விளம்பரத் தொகையை ஈடுகட்ட, 100 மதிப்புள்ள புத்தகம் எத்தனை விற்க வேண்டும் என்று கணக்கிட்டுப் பாருங்கள். ஒரு 100 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் விற்றால் பதிப்பகத்துக்கு நிகர வருமானம் (நிகர லாபம் அல்ல என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்) 30 ரூபாய்தான் கிடைக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரே விளம்பரத்தில் அத்தனை புத்தகம் விற்குமா? விற்காது. இதுதான் பிரச்சினை.

தள்ளுபடி விற்பனையின் ஒரே மகிழ்ச்சி, தான் வாங்க நினைத்திருக்காத புத்தகங்களையும் கூட வாசகர்கள் வாங்கிச் செல்வது. நெடுநாளாக வாங்க விரும்பி, பணம் அதிகம் என்ற ஒரே காரணத்துக்காக வாங்காமல் இருந்த ஒரு புத்தகத்தை வாசகர் கிட்டத்தட்ட நெக்குருகி வாங்கிச் செல்வது. இன்று கிழக்கு முன்னெடுத்திருக்கும் இந்த தள்ளுபடி விற்பனையை நிச்சயம் எல்லாப் பதிப்பகங்களும் முன்னெடுத்தே ஆகவேண்டும். சில வருடங்கள் ஆகலாம். ஆனால் வேறு வழியில்லை. இப்படிச் செய்யாமல், 10 அல்லது 12 வருடங்கள் விற்காமல் ஒரு புத்தகத்தை வைத்துப் பலனில்லை.

இன்னும் ரீ ப்ரிண்ட், டேமேஜ் பற்றியெல்லாம் நான் சொல்லவில்லை. கிழக்கு பதிப்பக விற்பனையில் கிளியரன்ஸும், டேமேஜ் புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. டேமேஜ் புத்தகங்கள் என்பது – அழுக்கடைந்த புத்தகங்கள், ஒரே ஒரு பக்கம் மட்டும் அல்லது அட்டை குறைபாடுடைய புத்தகங்கள். இவற்றையும் விலைக்குப் போடுவதற்குப் பதிலாக மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வைத்திருக்கிறோம். இந்த டேமேஜ் புத்தகங்களில் மிக நன்றாக விற்பனை ஆகும் புத்தகங்களும் வரலாம். இதைப் பார்த்துவிட்டுத்தான் சில எழுத்தாளர்கள் நமது புத்தகம் சரியாக விற்கவில்லை என்று முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். டேமேஜ் புத்தகங்கள் தனியாகவும், கிளியரன்ஸ் புத்தகங்கள் தனியாகவும்தான் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கடைசியாக ஒன்று, ஏற்கெனவே சொன்னதுதான், நல்ல விற்பனை என்பதற்கும் புத்தகத்தின் தரத்துக்கும் தொடர்பில்லை.

பின்குறிப்பு 1: கிழக்கு பதிப்பகத்தின் கிளியரன்ஸ் சேல்ஸ் இப்போது திநகர் எல் ஆர் ஸ்வாமி ஹாலில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திநகர் பஸ் நிலையம் அருகில் உள்ள சிவா விஷ்ணு கோவில் எதிரில்.

பின்குறிப்பு 2: இணையத்திலும் தள்ளுபடி விற்பனை கிடைக்கிறது. பார்க்க: https://www.nhm.in/shop/discount/
 
பின்குறிப்பு 3:  என் கவிதைத் தொகுப்பான நிழல்கள் புத்தகம் எத்தனை வருடங்கள் ஆனாலும் க்ளியரன்ஸ் சேல்ஸில் கிடைக்காது. எனவே இப்போதே வாங்கிவிடவும். :> வாங்க: https://www.nhm.in/shop/AAA-AA-AAAA-AAA-9.html

Share

ரவிக்குமார் – இந்த எழுத்தாளர்களே இப்படித்தான்!

ரவிக்குமார் ரஜினி தொடர்பான இரண்டு இடுகைகளை எழுதியிருந்தார். வழக்கம்போல ரஜினி ரசிகர்கள் அப்பதிவுகள் மோசமாக இருந்ததாகவே எடுத்துக்கொண்டார்கள். அப்படி அவர்கள் எடுத்துக்கொள்ளாவிட்டால்தான் அது செய்தி. உண்மையில் ரவிக்குமாரின் அந்த இடுகைகளில் மோசமாக எதுவுமில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால், அந்த இரண்டு இடுகைகளில் ஒன்றுமே இல்லை! பொருட்படுத்தத்தக்க எதுவுமே அந்த இரண்டு இடுகைகளில் இல்லை. (கூறியது கூறல்!) ரஜினி குறித்தோ ரஜினியின் அரசியல் குறித்தோ திண்ணைப் பேச்சுகளில் பரிமாறப்படும் ‘என் கருத்து’ வடிவிலான இரண்டு கருத்துகளையே இரண்டு இடுகைகளாக இட்டிருந்தார் ரவிக்குமார்.

இன்று 3வதாக ஒரு இடுகை. அதில் ஃபேஸ்புக் மற்றும் வலைப்பதிவை வாசிக்கும் வாசகர்கள் ரஜினி, வடிவேலு, குஷ்பூ குறித்து மட்டும்தான் வாசிக்கிறார்கள் என்று. இன்றுதான் இவர் இதைக் கண்டுபிடித்தார் என்பதே அதிர்ச்சியாக இருக்கிறது. நடிகர்களைப் பற்றி எழுதினால் அதிகம் பேர் படிப்பார்கள் என்று தெரியாமல்தான் எழுதினார் என்று நம்புவது இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது.

ரஜினி குறித்த முதல் இரண்டு இடுகைகளில் ரஜினி குறித்த தீவிரமான அலசல்கள் எவையுமே இல்லை. ஆனால் மூன்றாவது இடுகையில் ரவிக்குமார் தான் ஏற்கெனவே இந்தியா டுடேவில் ரஜினி பற்றி எழுதியிருக்கிறேன் என்றெல்லாம் பேசுகிறார். இந்தியா டுடேவில் ரஜினி பற்றிய தீவிரமான மதிப்பீட்டை நிச்சயம் ரவிக்குமார் முன்வைத்திருப்பார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ரவிக்குமார் மிக முக்கியமான எழுத்தாளரே. ஆனால் அக்கட்டுரையை மையமாக வைத்து, ஒன்றுக்கும் உதவாக இந்த இரண்டு இடுகைகளை அவர் அளக்க முனைவது சரியல்ல. இந்தியா டுடேவுக்கு எழுதியது போல எழுதாமல், கைக்கு வந்த நான்கு வரிகளை எழுதிவிட்டு இவர் வலைப்பதிவு வாசகர்களை நொந்து கொள்வது முரண்.

உண்மையில் so called இந்த வலைப்பதிவு/ஃபேஸ்புக் வாசகர்கள் ரவிக்குமார் போன்ற எழுத்தாளர்களைத்தான் நொந்துகொள்ளவேண்டும். இதே எழுத்தாளர்கள் இந்தியா டுடே, காலச்சுவடு போன்றவற்றில் எழுதும்போது தீவிரமாக உழைத்து எழுதுகிறார்கள். ஆனால் வலைப்பதிவு, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் எழுதும்போது ஏனோ தானோ என்று எழுதிவிடுகிறார்கள். அதே சமயம், சிற்றிதழ்களில் தாங்கள் எழுதும்போது எழுந்த விவாதமோ கருத்துரைகளோ இவற்றுக்கும் எழு வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். இல்லையென்றால், ஃபேஸ்புக், வலைப்பதிவு வாசகர்கள் சரியல்ல என்றும் பேசத் தொடங்கிவிடுகிறார்கள். மறந்தும், எழுத்தாளர்கள் ஃபேஸ்புக், வலைப்பதிவுகளில் சரியாக எழுதுவதில்லை என்று பேசுவதே இல்லை. எழுத்தாளர்களின் எழுத்து உழைப்பில் வேறுபாடு உள்ளதுபோலவே வாசகர்களின் வாசிப்பு உழைப்பிலும் வித்தியாசம் இருக்கிறது. இரண்டு சரிசம உண்மைகளில் ஒன்றை மட்டும் வெட்டிப் பேசினால் எப்படி?

ரஜினி குறித்த இரண்டு இடுகைகளில் (மீண்டும் மீண்டும் நான் இவற்றை இடுகை என்றே அழைப்பதன் நோக்கம், இதனைக் கட்டுரை என்று அழைக்க எவ்வித ஞாயமும் இல்லை என்பதே!) பிளாக்கில் விற்கப்படும் டிக்கெட்டுகளின் நிலையை நினைத்துப் பார்க்கவேண்டும் என்கிறார். மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் ஞானம் வந்துவிட்டதாக ரஜினியைச் சொல்லும் ரவிக்குமார், நன்றாக ஐந்து வருடம் எம்.எல்.ஏவாக இருந்த வேளையில் பிளாக்கில் விற்கப்படும் டிக்கெட் குறித்து நினைத்துப் பார்த்திருக்கவேண்டும். ரஜினியின் எந்திரன் திரைப்படத்துக்கு டிக்கெட் பிளாக்கில் விற்றது குறித்து இவர் கடும் போராட்டங்களை நடத்தியிருக்கலாம். சன் பிக்சர்ஸ் கையில் சிக்கிக்கொள்ளும் தியேட்டர்களில் என்ன என்ன நடக்கிறது, பிளாக்கில் டிக்கெட் விற்பது அத்தியேட்டர்களுடன் தொடர்புடையதா ரஜினியுடன் தொடர்புடையதா என்றெல்லாம் அவர் யோசித்திருக்கலாம். பிளாக்கில் டிக்கெட் விற்பது ரஜினி படத்துக்கு மட்டும்தான் நடக்கிறது என்று நான்கைந்து நாளாக முயன்று தன்னைத்தானே நம்பவைத்துக் கொண்டிருக்கலாம். பதவி போகும்போதுதான் எம் எல் ஏக்களுக்கும் ஞானம் வருகிறது.

மகளையே தயாரிபபாளராக்கி பணம் அள்ளுவது பெரிய குற்றமே. ஐயமே இல்லை. ஒரு படத்துக்கு வசனம் எழுதி 50 லட்சம் சன்மானம் பெறும் முதலமைச்சரின் கவிதைகள் பிடிக்கலாம், தவறில்லை. படங்களை அந்த முதலமைச்சரின் குடும்பங்களே வெளியிட்டுக் கொள்ளலாம். அதைப் பற்றி கூட்டணியில் இல்லாவிட்டால்தான் பேசலாம், அதுவும் தவறில்லைதான். ரஜினியின் மகள் பணத்தை அள்ளுவதுதான் பெரும் தவறு. ’மரணத் தறுவாயிலாவது’ ரஜினி இதனை யோசிக்கவேண்டும். வடிவேலுவின் பக்கத்தில் கைக்கூப்பி நின்று ஓட்டுக் கேட்டபோது, வடிவேலுவும் அவரது குடும்பத்தினரும் பணத்தை அள்ள எதுவுமே செய்வதில்லை என்று ரவிக்குமார் நம்பியிருப்பார் என்று நான் நம்பவில்லை. ஆனாலும் அது அத்தனை முக்கியமல்ல. ஆனால் ரஜினி மட்டும் ‘மரணத் தறுவாயிலாவது’ இதனை யோசிக்கவேண்டும்.

முன்பு ஒரு டிவி ஷோவில் தங்களுக்கு பிடித்த படம் என்ன என்ற கேள்விக்கு, மாபெரும் இலக்கியவாதியான ரவிக்குமார் சொன்ன பதில் ‘சிவாஜி.’ ரஜினியைப் பிடித்திருக்கிறது என்பது தவிர வேறு பெரிய காரணங்கள் இருந்துவிட முடியாது சிவாஜி திரைப்படத்தைப் பிடிக்க. இதில் தவறில்லை. ரவிக்குமாரே தனது 3வது இடுகையில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார், ரஜினி படங்களை மட்டும் முதல் காட்சியில் பார்ப்பேன் என்று. இப்படிச் சொல்லும் ஒருவர், ஏன் ராணா நல்லவிதமாகச் சுருண்டு விட்டது என்று சொல்லவேண்டும்? ரஜினியின் மகளே பணத்தை அள்ளப் போவதினாலா? கருணாநிதியின் மகன்கள், பேரன்கள் பணத்தை அள்ளுவது பற்றி ரவிக்குமார் கடந்த ஐந்து ஆண்டுகளில் (அதற்கு முன்னர் அவர் பேசியிருக்கலாம்!) பேசியிருக்கிறாரா? இலக்கியவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கான அதே அரசியல் சூத்திரம்தானா? இத்தனை ரஜினியைப் பிடிக்கும் என்று சொல்பவர், ஏன் திவ்யா நடிக்காமல் போனது நல்லது என்று சந்தோஷப்படவேண்டும்? தேவையற்ற கேள்விகள். ஏனெனில், ரவிக்குமார் பதில் சொன்னால், அவரது வலைப்பதிவில் அதிகம் பேர் படித்துவிடுவார்கள். ஃபுல் டைம் இலக்கியவாதி மற்றும் பார்ட் டைம் அரசியல்வாதி ஒருவரின் வலைப்பதிவில் நடிகர்கள் பற்றிய பதிவு அதிகம் படிக்கப்படுவது அவருக்கு இழுக்கு. அவருக்கு ஏன் அந்த இழுக்கு இன்னொருமுறை வரவேண்டும்?

இந்தப் பதிவுக்குக் கூட, ரஜினி ரசிகர்கள் இப்படித்தான் ரஜினியைப் பற்றிப் பேசினால் பொறுத்துக்கொள்ளாமல் எதையாவது சொல்வார்கள் என்றோ உளறுவார்கள் என்றோ அவரோ மற்றவர்களோ சொல்லக்கூடும். ரவிக்குமாரைப் போலவே நானும் ரஜினி அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. (வந்தால் அவருக்கே நிச்சயம் ஓட்டு என்பது வேறு விஷயம்!) ரஜினிக்கு அரசியலுக்கு வருவதை விரும்பால பல ரஜினி ரசிகர்கள் உண்டு. ஆனால் அவர் அரசியலுக்கு வருவதற்குக் காரணம் விஜய்காந்தின் வெற்றி என்றெல்லாம் காமெடி பண்ணாதிருக்கவேண்டும். ரஜினி மீண்டும் வந்து நன்றாக வாழ்ந்தாலே போதும். நடிக்கவே தேவை இல்லை. ஒருவேளை அவர் நடிக்கவும் செய்தால் அது போனஸ் மகிழ்ச்சி. இதைத்தான் ரவிக்குமாரும் சொல்ல நினைக்கிறார். ஆனால் அவருக்கு உள்ளேயிருந்து சில குரல்கள் அவரறியாமல் சில வரிகளை எழுதிவிடுகின்றன. இப்போது எனக்கு நடந்துவிட்டதைப் போலவே.

வாசகர்கள் வசதிக்காக…

ரவிக்குமாரின் முதல் இடுகை: (இது அவரால் நீக்கப்பட்டுவிட்டது)

ரஜினி அரசியலுக்கு வரப்போகிறாரா?

ரஜினிகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. அவர் சிங்கப்பூருக்குப் போவதற்கு முன்பு பேசியதாக ஒரு ஒலிப்பதிவு தற்போது இணையத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது. அதில் அவருடைய குரல் மிகவும் ஆயாசத்தோடு ஒலிப்பதைக் கேட்கும்போது அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது என நம்புவது கடினமாக இருக்கிறது.
தான் பணம் வாங்கிக்கொண்டுதான் நடிப்பதாகவும் அதற்கே இவ்வளவு அன்பு செலுத்துகிறீர்களே என்றும் தமது ரசிகர்களைப் பார்த்து அவர் ஆச்சர்யப்பட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாது தனது ரசிகர்கள் தலை நிமிர்ந்து சொல்லிக்கொள்ளும்படி தான் நடந்துகொள்வேன் என்றும் அவர் அதில் வாக்குறுதி அளித்திருக்கிறார். நடிகர் விஜயகாந்த் தற்போது பெற்றிருக்கும் அரசியல் வெற்றி ரஜினியை சிந்திக்கவைத்துவிட்டதுபோல்தெரிகிறது. தானும் அரசியலில் ஈடுபட அவர் முடிவெடுத்துவிட்டார், தான் குணமடைந்து தமிழகம் திரும்பும்போது கடவுள் தன்னை இதற்காகத்தான் பிழைக்க வைத்தார் என்பதுபோல ஒரு வசனத்தைப் பேசிவிட்டு ரஜினி புதிய கட்சி ஒன்றைத் தொடங்கக் கூடும் என்பது என் அனுமானம்.
ரஜினி அரசியல் கட்சி துவக்கினால் அவருக்கான ஆதரவு எப்படி இருக்கும்? விஜய், அஜித் ரசிகர்கள் அவருக்குப் பின்னால் போய்விடுவார்களா? ஓரிரு வாரங்களில் இதற்கான விடை கிடைக்கும் என நம்புகிறேன்.

இரண்டாம் இடுகை: (இதுவும் நீக்கப்பட்டுவிட்டது)

ராணா – இன்னொரு ஜக்குபாயா?

ராணா படத்தின் துவக்கம் இப்படி சோகமாக முடியும் என ரஜினி ரசிகர்கள் நினைத்திருக்கமாட்டார்கள். ஏற்கனவே இப்படி அறிவிக்கப்பட்டு நின்றுபோன ஜக்குபாயின் நிலைதான் ராணாவுக்கும் என்பது என் அனுமானம்.’ ஆண்டவன் சொல்றான் அண்ணாமலை செய்யிறான்’ என்று வசனம் பேசிய ரஜினி இனிமேல் சினிமா வேண்டாம் என்று ஆண்டவன் சொல்லிவிட்டான் என அறிவிக்கக்கூடும்.
ராணா ஒரே நேரத்தில் தமிழிலும் இந்தியிலும் தயாரிக்கப்படுவதாக இருந்தது. தெலுங்கில் டப்பிங் செய்யவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. தனது மகளையே தயாரிப்பாளராக்கி லாபத்தை அள்ளலாம் என நினைத்திருந்த வேளையில் இப்படி சோதனை வந்துவிட்டதே என்று ரஜினி வேதனைப்பட்டிருக்கலாம். ஆனால் எனக்குக் கொஞ்சம் ஆறுதல். நான் ரசிக்கும் மிகவும் திறமைமிக்க நடிகைகளில் தீபிகா ஒருவர். அவர் ராணா படத்தில் நடிக்கிறார் எனத் தெரியவந்ததும் நான் மிகவும் வேதனைப்பட்டேன். ஐஸ்வர்யா ராய்க்கு எந்திரனில் நேர்ந்த கதி தான் தீபிகாவுக்கும் நேரும் என்று தெரிந்ததால் வந்த வேதனை அது. எந்திரனில் ரஜினியின் கேரக்டர்தான் ரோபோ என்றாலும் உண்மையில் ஐஸ்வர்யாவின் பாத்திரம்தான் ரோப்போவாக்கப்பட்டிருந்தது. தீபிகாவை அப்படியொரு நிலையில் எண்ணிப்பார்க்க கஷ்டமாக இருந்தது. எப்படியோ நல்லவிதமாக ராணா சுருண்டுவிட்டது.
மரணம் நெருங்கிவிட்டதாகத் தெரியும்போது எந்தவொரு மனிதனுக்கும் ஞானக்கண் திறந்துகொள்ளும். ரஜினிக்கும் அப்படித்தான் ஆகியிருக்கிறது. தனது ரசிகர்களின் அன்பை நினைத்து அவர் உருகியிருக்கிறார்.அல்லது அப்படி பாவனை செய்திருக்கிறார். வாக்களித்துவிட்டு விலைவாசி ஏறிவிட்டது எனச் சொல்லி எந்த அணிக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை தனது ரசிகர்களுக்கு சமிக்ஞை காட்டினார் ரஜினி. அந்த நேரத்தில் அவர் தான் வாங்கும் சம்பளத்தையும் தான் நடித்து வெளியாகும் படங்களுக்கு ப்ளாக்கில் விற்கப்படும் டிக்கட்டுகளின் விலையையும் நினைத்துப் பார்த்திருக்கவேண்டும்.
எப்படியோ சிங்கப்பூருக்குப் போகும் முன்னால் ரசிகர்களுக்கு வெளியிட்ட ஆடியோ பதிவில் தனது ரசிகர்கள் தலை நிமிர்ந்து பெருமைப்படும் விதமாக நடந்துகொள்வேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். மரண பயம் வரும்போது பேசிய பேச்சாக அல்லாமல் அதை ஒரு வாக்குறுதியாக அவர் கருதுவாரேயானால் நிச்சயம் அவர் அரசியலுக்கு வருவார் என்றே கருதுகிறேன். அவருக்குக் ‘ க்ருபா’ தரும் கடவுளும் , குருவும் என்ன செய்தியை அவருக்குக் கூறியிருக்கிறார்களோ! பொறுத்திருந்து பார்ப்போம்.

மூன்றாம் இடுகை:

ரஜினி குறித்த பதிவுகளுக்கு முடிவு: (விரைவில் நீக்கப்படும்!)

http://nirappirikai.blogspot.com/2011/05/blog-post_31.html

Share

ஆப்புக்கு ஆப்பு

திடீரென்று ஞாநி என்னிடம் நடிக்க வர்றீங்களா என்றார். வழக்கம்போன்ற உரையாடல்கள் நடந்தேறின. நடிக்கத் தெரியாதே, அதெல்லாம் நடிச்சிடலாம், நம்பிக்கை இருந்தா போதும் போன்றவை. ரிகர்சலுக்கு குத்தம்பாக்கம் சமத்துவபுரத்துக்குப் போனோம். கிட்டத்தட்ட 24 பேர் பங்கேற்றார்கள். நல்லவேளை எனக்கு வசனம் இல்லை.

அம்மா ஐயா ஆதரவாளர்களாக நீங்களே பிரிந்துகொள்ளுங்கள் என்றார். நான் உடனே அம்மா பக்கம் வந்து நின்றுகொண்டேன். ஞாநி இங்கயுமா என்றார். நடிப்பில் கூட கருணாநிதியைப் புகழமுடியாது என்றேன்.

முக்கியக் கதாபாத்திரம் அஞ்சலைதான் என்பது முதல் பார்வையிலேயே தெரிந்துவிட்டது. அஞ்சலையாக நடிப்பது கிறிஸ்டினா என்னும் பெண். அன்றைக்குத்தான் எல்லாரையுமே நான் முதன்முதலாகப் பார்க்கிறேன். கிறிஸ்டினா ஸ்கிரிப்டைக் கையில் எடுத்து, எழுத்து கூட்டி வாசிக்க ஆரம்பித்தார். திக்கித் திக்கி வாசித்தார். இதில் நுனி நாக்கு ஆங்கிலம் வேறு. ஸ்கிரிப்ட்டில் பக்கா சென்னைத் தமிழ்! கிழிஞ்சது கிருஷ்ணகிரி என நினைத்துக்கொண்டேன்.

இரண்டு தடவை வசனம் சொல்லிக் கொடுத்ததும் கிறிஸ்டினாவின் வசன வெளிப்பாடு என்னை அசரடித்துவிட்டது. இந்தப் பெண் இந்த நாடகத்தையே எங்கோ கொண்டு போய்விடுவார் என்ற நம்பிக்கை வந்தது. நாடக அரங்கேற்றத்திலும் அதுவே நடந்தது.

ஞாநி, சாய் கிருபா (ஆப்பம்மா), அஞ்சலை – இந்த மூவரை ஒட்டியே ஒட்டுமொத்த நாடகமும். நாங்களெல்லாம் இவர்களின் பாத்திரங்களை மெருகேற்ற மட்டுமே. அதனைச் செய்தோம்.

நீல்சன் கட்டியக்காரனாக நடித்தார். பக்கம் பக்கமாக வசனம். அநாயசமாகப் பேசினார். எனக்கு வசனங்கள் தராத ஞாநிக்கு மானசீகமாக நன்றி சொல்லவேண்டிய தருணம் இது.

ஞாநி முதல்தடவை பேசும்போது, ரிகர்சலுக்கு வாங்க, நீங்க வருத்தபடற மாதிரி இருக்காது என்றார். எனக்கு என்ன வருத்தம்? அப்படியே இருந்தாலும் பரீக்ஷாவை நினைத்துத்தான் இருந்திருக்கும். எப்படியோ தப்பித்தது பரீக்ஷா குழு.

நாடகத்தை யூ டியூபில் பார்க்க: (நல்ல பிரதி வந்ததும் மீண்டும் வலையேற்றி, நல்ல லிங்க் தருகிறேன்!) இதனை பதிவு செய்து வலையேற்றிய பத்ரிக்கு நன்றி. இப்படி ஒரு பொம்பளை கால்ல விழுந்து நடிக்கிறீங்களே, சே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் எங்க வீட்டு ஜெயலலிதா!

Share

வைரமுத்துவை மிஞ்சும் பத்ரி சேஷாத்ரி

http://www.dinamalar.com/E-malar.asp?ncat=391&showfrom=04/01/11

மேலே உள்ள லிங்கில் 4ம் பக்கம் போகவும்!

கிழக்கு எடிட்டோரியல் மக்களுக்கு: இந்த வருடம் 2011ல் மட்டும் 1500 புத்தகங்களாம்! தமிழ்நாடு தாங்குமா? யோசிக்கவும்.

Share

பிச்சைக்காரர்களை உருவாக்குவோம்

…லாப்டாப் எல்லா ஜாதி மாணவர்களுக்கும் கொடுக்கப்படவேண்டும் என்று சொல்வதுகூட இவர்களுக்கு ஸ்டாம்ப்பை வரவழைத்துவிடும் என்பதால் இதைப் பற்றிப் பேசுவதையே தவிர்ப்பார்கள். ஆழங்களுக்குள் செல்லாமல், மேம்போக்காக இலவசங்களையே எதிர்க்கிறோம் என்றோ…

தொடர்ந்து வாசிக்க http://tnvotes2011.blogspot.com/2011/03/blog-post_8892.html

Share

பாலுமகேந்திரா – நிசப்தத்தில் மிதந்துவந்த குரல்

நேற்றைய கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் பாலுமகேந்திரா கலந்துகொண்டார். மிக மின்பு ஞாநி கலந்துகொண்ட மொட்டைமாடிக் கூட்டத்தில் அனல் பறந்தது. அன்று எல்லோருமே ஞாநி என்ன பேசுகிறார் என்பதைக் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதன் பிறகு, நேற்று நடந்த மொட்டைமாடிக் கூட்டத்தில்தான் மீண்டும் அது நடந்தது என நினைக்கிறேன். வந்திருந்த அனைவரும் அத்தனை பெரிய நிசப்தத்தில் மிதந்துவரும் பாலுமகேந்திராவின் குரலை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். எங்கேயிருந்தும் அனாவசிய சத்தங்கள் இல்லை. பாலுமேந்திராவின், அவரே தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ளும், ஹார்ஷ்நெஸ்ஸும் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

எழுத்திலிருந்து திரைக்கு என்பதுதான் பாலுமகேந்திரா பேச எடுத்துக்கொண்ட தலைப்பு. அந்தத் தலைப்பிலிருந்து சிறிதும் விலகாமல் பேசினார். எழுத்து திரைக்கு மாறும்போது ஒரு கலைஞன் எதிர்கொள்ளவேண்டிய முக்கியமான சவால்கள் குறித்து விளக்கினார். உருவமும் உள்ளடக்கமும்தான் ஒரு படைப்பின் சாராசம்ங்கள். அதைத் திரைக்கு மாற்றும்போது அதன் உள்ளடக்கம்தான் முக்கியமே ஒழிய, அதன் உருவம் இரண்டாம்பட்சம்தான் என்று சொன்னார். ஒரு படைப்பிலிருந்து எதனைத் திரைக்கு மாற்றவேண்டும் என்று அவர் கருதுவதாக நினைக்கிறாரோ அதுவே திரையில் மையப்படுத்தப்படுகிறது என்றார். இதன் அர்த்தமாக நான் புரிந்துகொண்டது, எழுத்தாளரின் கவனம் இரண்டாம் இடம் பெற்றுவிடுகிறது என்பதுதான். இதனை சில எழுத்தாளர்கள் முற்றிலுமாக மறுக்கக்கூடும். ஆனால் பாலுமகேந்திரா ஒரு திரைப்படம் எடுக்க முயலும்போது அதில் தனது பங்கை மிகத் தெளிவாகத் திட்டமிட்டுவிட்டே தொடங்குகிறார். ஓர் எழுத்தாளரின் படைப்பில் அவர் விட்டுவிட்ட பகுதிக்கு, அவருக்கான காரணங்கள் அவரளவில் தெளிவாகவே இருக்கின்றன.

இங்கேதான் எழுத்தாளர்கள் கடுமையாக முரண்படும் புள்ளியும் தொடங்குகிறது. பாலுமகேந்திராவின் கதை நேரக் கதைகளில், படைப்பாளியின் பெயர் என்பது எழுத்தாளர்தான் என்பதால், அதில் தங்கள் உரிமைதான் என்ன என்று அதனை எழுதிய எழுத்தாளர்கள் கேட்கக்கூடும். பாலுமகேந்திராவின் பதில் ஒன்றும் இல்லை என்பதுதான். நீங்கள் எழுதிய ஒரு கதையின் படைப்பாற்றலுக்கு என் படைப்போடு யாதொரு தொடர்பும் இல்லை என்கிறார். படைப்பாற்றலும் படைப்பும் இந்த இடத்தில் அடைந்த விலக்கம் என்ன அசர வைத்தது என்றே சொல்லவேண்டும். பாலுமகேந்திரா எழுத்தாளரின் படைப்பிலிருந்து எடுப்பது அதன் உள்ளடக்கத்தை மட்டுமே அன்றி அதன் படைப்பாற்றலை அல்ல. அவரளவில் இது தெளிவான பார்வையே. மட்டுமன்றி, ஒரு திரைமொழிக் கலைஞனுக்குத் தேவையானதும்கூட.

ஓர் எழுத்தாளர் ஒரு வரியில் எழுதிச் செல்லும் ஒரு காட்சிக்கு நான்கைந்து காட்சிகள் வைக்கவேண்டியிருக்கும் என்று சொல்லி, அதற்கு எடுத்துக்காட்டாக மாலனின் தப்புக்கணக்கு கதையை படமாக்கியவிதத்தை விளக்கினார். ஓர் எழுத்தாளர் ஆயிரம் பக்கங்கள் எழுதிச் செல்லும் ஒரு விஷயத்தை ஒரு திரைக்கலைஞன் ஒரு சட்டகத்தில் காண்பிக்கமுடியும் என்றார். உண்மைதான். ஆனால் அதேபோல் இதன் மறுபக்கமான, ஓர் எழுத்தாளன் உருவாக்கும் உன்னதத் தருணங்களை அதற்கு இணையான ஒரு தருணமாக எல்லா சமயங்களில் திரைக்கலைஞன் மாற்றிவிடமுடியாது என்பதும் உண்மையே. இதனால்தான் ஒரு கதையைத் தேர்ந்தெடுக்க பாலுமகேந்திரா ஐம்பது கதைகளைப் படிக்கவேண்டியிருந்திருக்கிறது.

எழுத்திலிருந்து திரைக்கு படைப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தால்தான் திரைமொழியின் அடிப்படை பலமாகவும் தீவிரமாகவும் அமையும் என்று நான் நினைக்கிறேன். அதற்கு பாலுமகேந்திரா போன்றவர்கள் இலக்கியத்துக்கும் திரைக்கும் இடையேயான தூரத்தைக் குறைப்பதில் காட்டிவரும் அக்கறை மிகவும் முக்கியமானது. கதை நேரம் போன்ற வரவேற்கப்படவேண்டிய முயற்சிகளை எழுத்தாளர்கள் எந்த ஓர் ஊடகத்திலும் பதிவு செய்யவில்லை என்கிற பாலுமகேந்திராவின் வருத்தமும் கோபமும் இங்கே இருந்துதான் தொடங்குகிறது. தொடர்ந்து அலுத்துக்கொள்ளும் எழுத்தாளர்கள், அவர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வு அரங்கேறும்போது ஏன் அதனைப் பதிவு செய்யாமல் இருக்கிறார்கள் என்கிறார். அதோடு மட்டுமின்றி எழுத்தாளர்கள், திரைத்துறையைப் பற்றி வானளாவ பேசவும் செய்கிறார்கள் என்பது அவரது கோபம். தங்கள் நல்ல முயற்சிகளை அங்கீகரிக்காத எழுத்தாளர்கள் எவருக்கும் தங்களைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை என்பது பாலுமகேந்திராவின் கோபம். எழுத்தாளர் சுஜாதா கதை நேரம் பற்றி எங்கேயோ குறிப்பிட்டிருக்கிறார் என நினைக்கிறேன். கற்றதும் பெற்றதும் பத்திகளிலா, எங்கே என்று தெரியவில்லை. ஒருவேளை இது பாலுமகேந்திராவுக்குத் தெரியாதா அல்லது அதெல்லாம் ஒரு சிறிய எடுத்துக்காட்டுத்தானே ஒழிய, அதை மட்டும் வைத்துக்கொண்டு எழுத்தாளர்கள் அங்கீகரித்துவிட்டார்கள் என்று எடுத்துக்கொள்ளமுடியாது என நினைக்கிறாரா என்று தெரியவில்லை. இரண்டாம் வகையாக பாலுமகேந்திரா எடுத்துக்கொண்டாலும் அதில் நியாயம் இருக்கவே செய்கிறது.

மொத்தத்தில் பாலுமகேந்திரா சிறப்பாகப் பேசினார். உரையாடல் தொடங்கியது. பின்னர் அவரது தப்புக் கணக்கு திரையிடப்பட்டது. மீண்டும் பாலுமகேந்திரா பேசினார்.

விமலாதித்த மாமல்லன் சார்பாகச் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பாலுமகேந்திரா அவரது பதிலைச் சொன்னார். கேள்வியின் சாரம், விமலாதித்த மாமல்லனின் கதையை பாலுமகேந்திரா மோசமாகப் படம் எடுத்தார் என்பதுதான் என நினைக்கிறேன். அதற்கு பாலுமகேந்திரா ஏற்கெனவே தான் சொன்ன பதில்களிலிருந்தே மேற்கோள் காட்டிப் பதிலளித்தார். ஓர் எழுத்தாளரின் கதை என்பது, அதன் படைப்பாற்றலைத் துறந்துவிட்டால், தினத்தந்தியில் வரும் ஒரு சிறிய செய்தித் துணுக்கைப் போன்றதுதான் என்றார்.

தப்புக் கணக்கு திரையாக்கலில் உள்ள சில குறைகளைப் பற்றி விமலாதித்த மாமல்லன் கேள்வி கேட்ட நேரத்தில் லேசான வெப்பம் பரவியது. மாமல்லன் சொன்ன காட்சிக் குற்றங்கள் எனக்கு ஏற்க இயலாதவை. ஆனால், தப்புக் கணக்கு திரைக்கதையில் ஒரு குழந்தையை அசாதாரணக் குழந்தையாகக் காட்ட அக்குழந்தை கேட்பதாகக் காட்டப்படும் கேள்விகளின் தொடர்வரிசை குறித்த மாமல்லின் குற்றச்சாட்டான செயற்கைத்தன்மையில் உண்மை உள்ளது என்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனால், பள்ளி வெட்டவெளியில் செயல்பட்டால் இப்படி கேள்வி கேட்பார்களா, ஒரு குழந்தை வவுத்துலிங்கம் என்று தினமும் பார்க்கும் தன் தாத்தாவையே சொல்லுமா என்பன போன்ற லாஜிக் கேள்விகளையெல்லாம் நான் ஏற்கவில்லை. இதை ஒருவேளை மாமல்லன் படித்தால் அவருடைய தரப்பைச் சொல்லக்கூடும்.

மொத்தத்தில் ஒரு நல்ல மாலை.இதனை சாத்தியப்படுத்திய தோழர்கள் மருதன், பாலு சத்யாவுக்கு நன்றி சொல்லவேண்டும். நேற்று பாலுமகேந்திரா ஒருவித தத்துவ மூடில் பேசிக்கொண்டிருந்தபோது எனக்குள் தோன்றிய தத்துவ நெறி இது. இது இங்கே தேவையில்லைதான். ஆனால் பாலுமகேந்திராவின் அவரது படைப்பு போல, இது எனது படைப்பு. என்னவேண்டுமானாலும் எழுதலாமே! எனவே… தோழர்கள் என்பதே தோளர்கள் என்பதன் மரூஉ. பிற்காலத்தில் மரபு, பாரம்பரியம் இத்யாதி என்கிற தத்துவங்கள் தங்கள் மீது ஏறிக்கொள்ள வசதியாக முற்போக்குக் காலத்தில் தோள் வளர்ப்பவர்களே தோளர்கள் என்றழைக்கப்பட்டார்கள் என்னும் கண்டடைதல்தான் அது. மீண்டும் தோளர்களுக்கு நன்றி.

Share