Archive for ஹரன் பிரசன்னா

மாதிரிக்கு ஒரு புத்தகக் கண்காட்சி – எஸ்.ஆர்.வி பள்ளி, திருச்சி

திருச்சியில் உள்ள எஸ் ஆர் வி பள்ளியில் சென்ற மாதம் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. அதில் டயல் ஃபார் புக்ஸ் சார்பில் முதன்முறையாக நாங்கள் பங்கேற்றோம். இது அப்பள்ளி நடத்தும் 9வது வருடப் புத்தகக் கண்காட்சி. பொதுவாக கிழக்கு சார்பில் கிழக்கு புத்தகங்களை மட்டுமே அங்கே விற்பனைக்கு வைப்போம். மற்ற பதிப்பகங்கள் அவர்களது புத்தகங்களை காட்சிக்கு வைப்பார்கள். இந்தமுறை அப்படி அல்லாமல் டயல் ஃபார் புக்ஸ் சார்பில் அனைத்துப் பதிப்பகங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களை விற்பனைக்குக் காட்சிப் படுத்தியிருந்தோம். 

IMG-20141127-WA0000

புத்தகக் கண்காட்சியை சிறப்பாக நடத்த பள்ளி நிர்வாகம் தந்த ஒத்துழைப்பு அபாரமானது. அப்பள்ளியின் முதல்வர் துளசிதாசன் எடுத்துக்கொண்ட முயற்சிகளைப் பற்றித் தனியே சொல்லவேண்டும்.

புத்தக வாசிப்பை வளர்க்க என்ன செய்யவேண்டும் என்று பலரும் யோசிக்கிறோம். ஒரு கையறு நிலையில்தான் நாம் உறைந்துவிடுகிறோம். எங்கே சென்றாலும் அவ்வாசல் மூடப்பட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இன்றைய நிலையில் புத்தக வாசிப்பை மேம்படுத்த நாம் எடுக்கும் முயற்சிகளெல்லாம் தடைப்படுகின்றன. எங்கோ தவறு செய்கிறோம், அது எது என்று கண்டறியவோ, அப்படியே கண்டறிந்தாலும் அதை சரி செய்யவோ இயலாத நிலை ஒன்றை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

எல்லோருக்குமே தெரியும், மாணவர்களிடம் இருந்து புத்தக வாசிப்பைத் தொடங்கவேண்டும் என்பது. பதில் நம்மிடையே இருக்கிறது. ஆனால் அதைச் செயல்படுத்த வழிகள் தெரியவில்லை. ஏனென்றால் அதைச் செய்யும் பொறுமையும் பக்குவமும் இல்லை. அதைச் செய்யவேண்டிய ஆசிரியர்களே புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் பற்றித் தெரியாதவர்களாக இருப்பது பெரிய சோகம். அதையும் மீறி ஒரு சில ஆசிரியர்கள் புத்தக வாசிப்பின் அவசியம் பற்றித் தெரிந்து அதை முன்னெடுக்க நினைத்தால், அடுத்த தடை பெற்றோர்கள் வழியே வருகிறது. பக்கத்துவீட்டு மாணவனோ சொந்தக்காரப் பையனோ அதிகம் மதிப்பெண் பெற்றால், அதைவிட அதிக மதிப்பெண்ணைத் தன் மகன் பெறவேண்டும் என்ற அழுத்தத்தை பெற்றோர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். இப்படி பாடப் புத்தகத்தைப் படிக்காமல் வேறு புத்தகங்களைப் படிப்பதால் என்ன பயன் என்று அவர்கள் மிகத் தெளிவாகவே கேள்வி எழுப்புகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் இக்குரலை நீங்கள் தொடர்ந்து கேட்கமுடியும். இதைமீறி ஆசிரியர்களால் என்ன செய்துவிடமுடியும்? இப்படி பல இடங்களில் மோதிய பந்து கடைசியில் தஞ்சமடையும் இடம், புத்தக வாசிப்பைப் பிறகு பார்த்துக்கொள்ளாம் என்னும் இடமே.

IMG_20141128_121119

எஸ் ஆர் வி பள்ளியின் முதல்வர் துளசிதாசன் தன் தொடர் முயற்சியின் காரணமாக, மாதிரி ஒன்றை நமக்கு உருவாக்கிக் காண்பித்துள்ளார். அதை அப்படியே பின்பற்றினாலே, மேலே சொன்ன அத்தனை தடைகளையும் நாம் உடைத்து, மாணவர்களை புத்தக வாசிப்பாளர்களாக மாற்றும் பெரிய சாதனையை சுலபமாகச் செய்யமுடியும். ஒரு பள்ளி தொடர்ந்து 20 ஆண்டுகளில் அதன் மாணவர்களில் பாதி பேரையாவது புத்தக வாசிப்பாளர்களாக மாற்றுமானால், அப்பள்ளி மிகப்பெரிய சமூக சாதனை செய்திருக்கிறது என்றே அர்த்தம். படிக்க சாதாரணமாகத் தோன்றினாலும், உண்மையில் இது அசுர சாதனை. ஒவ்வொரு பள்ளியும் இதில் பத்தில் ஒரு பங்கைச் செய்தாலே போதும், அடுத்த பத்து ஆண்டுகளில் வரும் தலைமுறையினரிடையே வாசிப்புப் பழக்கம் பெரிய அளவில் ஊக்கம் பெறும். அடுத்த இருபது ஆண்டுகளில் அது ஒரு இயக்கமாகும். அத்தலைமுறை பெற்றோர்களாகும்போது, ஆசிரியர்களும் அவர்களும் இணைந்தே இதைப் பெரிய அளவில் – அவர்கள் அறியாமலேயே – முன்னெடுத்துச் செல்வார்கள். இத்தகைய பெரிய சாதனையை அமைதியாகச் செய்திருக்கிறது எஸ் ஆர் வி பள்ளி.

இந்தக் கண்காட்சிக்கு முன்னர் நான் துளசிதாசன் அவர்களை இரண்டு முறை சந்தித்துப் பேசினேன். கண்காட்சியின் வெற்றி பற்றி ஐயம் பெரிய அளவில் இல்லை என்றாலும், இது சாத்தியமாகுமா என்ற சிறிய சந்தேகம் இருக்கத்தான் செய்தது. ஆனால் துளசிதான் மிக நம்பிக்கையுடன் பேசினார். துளசிதானின் மிகப்பெரிய பலம் அவரது அபாரமான புத்தக வாசிப்பு. வீட்டில் மிகப்பெரிய நூலகம் ஒன்று இருப்பதாகச் சொன்னார். துளசிதாசன் வயதொத்தவர்கள் இளமையில் ஒரு வேகத்தில் புத்தகம் வாசிக்கத் துவங்கி, ஒரு நிலையில் தேங்கிவிட்டிருப்பார்கள். ஆனால் இவர் இன்றுவரை தொடர்ந்து புத்தகம் வாசித்துக்கொண்டு தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார். எனவே எப்புத்தகங்களை மாணவர்களுக்கு பள்ளி வயதில் படிக்கத் தரவேண்டும், எவற்றைப் படிக்கத் தரக்கூடாது என்பதில் தீர்மானமான கருத்துகள் கொண்டிருக்கிறார். மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லும்போது அவர்களே தேடிப் படிக்கவேண்டிய நூல்கள் பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறார். இவையே ஒரு நல்ல புத்தக கண்காட்சி இயக்கத்தை உருவாக்க அவருக்கு மூலதனமாக இருந்திருக்கவேண்டும். ஆம், அவர் உருவாக்கி இருப்பது நிச்சயம் ஒரு இயக்கம்தான்.

பள்ளியில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு மாணவர்களையும் பெற்றோர்களையும் வரவைக்க மிக எளிமையான வழியைப் பின்பற்றுகிறது பள்ளி நிர்வாகம். பெற்றோர் ஆசிரியர் தினம், புத்தகக் கண்காட்சியை ஒட்டி வைக்கப்படுகிறது. இதனால் எல்லாப் பெற்றோரும் நிச்சயம் பள்ளிக்கு வந்தே தீரவேண்டும். இதுவரை நாங்கள் எத்தனையோ பள்ளிகளில் புத்தகக் கண்காட்சிகளில் பங்கேற்றிருக்கிறோம். அங்கே பெற்றோர்கள் வரவு குறைவாகவே இருக்கும். ஏனென்றால் பெற்றோர்களுக்குப் பல வேலைகள். அதற்கிடையில் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க அவர்களுக்கு நேரமில்லை. அதை, இந்தப் பெற்றோர் ஆசிரியர் தினத்தின் மூலம் எஸ் ஆர் வி பள்ளி எளிதாகத் தாண்டிவிட்டது.

புத்தகக் கண்காட்சியின் முன்பிருந்தே, அதைப் பற்றி தொடர்ந்து மாணவர்களிடம் பேசுவது, மாணவர்களின் பெற்றோர்களுக்கு அதைப் பற்றிய செய்திகளை அனுப்புவது, குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் அனுப்புவது என எல்லா வழிகளிலும் புத்தகக் கண்காட்சி பற்றிய ஆர்வம் மாணவர்களிடையேயும் பெற்றவர்களிடையேயும் வளர்க்கப்படுகிறது. பள்ளியில் நடைபெறும் தினசரி வழிபாட்டின்போதும் இதைப் பற்றிப் பேசுகிறார்கள் ஆசிரியர்கள்.

ஒவ்வொரு மாணவரும் பள்ளியில் சேரும்போது ஒவ்வொரு வருடமும் அவருக்கு ஓர் உண்டியில் தரப்படுகிறது. அம்மாணவர் அந்த உண்டியலை அவர் வீட்டில் ஒரு நூலகம் உருவாக்கப் பயன்படுத்தவேண்டும். வீட்டுக்கு ஒரு நூலகம் என்ற பெயரில் இதை எஸ் ஆர் வி பள்ளி பிரபலப்படுத்தியுள்ளது. புத்தகக் கண்காட்சி வரை சேமிக்கப்படும் பணத்தை எடுத்துக்கொண்டு வந்து மாணவர்கள் புத்தகம் வாங்குகிறார்கள். பல மாணவர்கள் தங்கள் உண்டியிலில் இருந்த சில்லறையை எண்ணிக்கொண்டு வந்து எங்களிடம் தந்து புத்தகம் வாங்கியபோது, தனிப்பட்ட முறையில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மாணவர்கள் வரிசையில் நின்று புத்தகம் வாங்குகிறார்கள். நான்கு நாள்கள் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு வகுப்பின் மாணவர்களை ஆசிரியர்கள் கண்காட்சிக்கு அனுப்பி வைக்கிறார்கள். மாணவர்கள் தங்களிடையே, “நான் சச்சின் வாங்கிட்டேன், நீ எங்க வாங்கிருக்க?”, “நான் பஞ்ச தந்திரக் கதை வாங்கிருக்கேன்” என்று பேசிக்கொண்டே புத்தகம் வாங்குவதைப் பார்ப்பது ஒரு மறக்கமுடியாத அனுபவம்.

IMG_20141129_113517

மாணவர்கள் தாங்கள் வாங்கிய புத்தகங்களின் பட்டியலை மறுநாள் வகுப்பாசிரியரிடம் தரவேண்டும். எந்த மாணவர்கள் அதிகப் புத்தகங்கள் வாங்கியிருக்கிறாரோ அவருக்குப் பாராட்டு உண்டு. அதேபோல் பெற்றோர்கள் வாங்கியிருக்கும் புத்தகங்களை வீட்டில் அடுக்கி, அதைப் புகைப்படம் எடுத்து, வீட்டுக்கு ஒரு நூலகம் என்று பெயரிட்டு வகுப்பாசிரியர்களிடம் தரச்சொல்லியும் ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார்கள். 

வாங்கிய புத்தகங்களை மாணவர்கள் படிப்பது பற்றியும் அதைத் தொடர்ந்து உரையாடுவது பற்றியும் ஆசிரியர்கள் கவனம் கொள்கிறார்கள். அடிக்கடி ஏதேனும் ஒரு முக்கியஸ்தர் அப்பள்ளிக்கு வந்து விரிவுரை ஆற்றுவது வழக்கமாகவே உள்ளது. இப்படி மாணவர்களிடையே புத்தக வாசிப்பை மேம்படுத்த எஸ் ஆர் வி பள்ளியும், அதன் முதல்வர் துளசிதாசனும் எடுத்துக்கொண்டிருக்கும் முயற்சிகள் அசரடிக்கின்றன.

மயிலாப்பூரில் மயிலாப்பூர் திருவிழாவில் தெருவில் நாங்கள் புத்தகக் கண்காட்சி நடத்தியிருக்கிறோம். எதிர்பாராத பலர் வந்து புத்தகங்களை வாங்கிச் செல்வார்கள். கோவில் அர்ச்சகர் ஒருவர் ஒவ்வொரு நாளும் வரும் காணிக்கையை எடுத்துக்கொண்டு வந்து அவருக்குத் தேவையான புத்தகத்தை வாங்கிச் செல்வார். அவர் தரும் காணிக்கையில் விபூதி ஒட்டியிருக்கும். ரூபாய் தாள்கள் கசங்கி குங்குமத்தோடு வரும். அன்று நான் அடைந்த அதே மகிழ்ச்சியை எஸ் ஆர் வி பள்ளியில் மாணவர்கள் புத்தகம் வாங்கும்போதும் அடைந்தேன். 

IMG_20141127_125442

இன்றைய நிலையில் இப்படி செயல்படும் முதல்வர்களையும், அதை அனுமதித்து சிறப்பாக முன்னெடுக்கும் பள்ளி நிர்வாகத்தையும் பார்ப்பது அரிது. உண்மையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் இதை ஒவ்வொரு வருடமும் செய்யமுடியும். பள்ளி முதல்வர்கள் திடத்துடன் இருந்தால், இதை வழக்கமாக்கிவிடலாம். இதனால் மாணவர்கள் பெறப்போகும் அனுகூலங்கள் சொல்லி மாளாது. அத்தோடு ஒரு சமூக மாற்றத்துக்கான வித்து ஊன்றப்படும். ஆனால் இப்படிச் செய்யும் ஆசிரியர்களும் பள்ளிகளும் மிகக்குறைவே என்ற உண்மை முகத்தில் அறைகிறது. இதைப் படிக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு, இதைப் போன்ற புத்தகக் கண்காட்சி நடத்துவதைப் பற்றி ஆலோசனை அளிக்கலாம். எங்கே இருந்தாவது ஒரு மாற்றத்தை நாம் தொடங்கியாகவேண்டும். புத்தக வாசிப்பு அதிகமாகாமல் நாம் எந்த ஒரு மாற்றத்தையும் தீவிரமாகச் செய்துவிடமுடியாது என்று நான் நம்புகிறேன். நாம் செய்யப்போகும் எந்த ஒரு செயலுக்கும் நம் புத்தக வாசிப்பு நமக்குப் பின்புலமாக இருந்து பெரிய தன்னம்பிக்கையை அளிக்கும் என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். அந்த வகையில் என் மனமார்ந்த நன்றியை எஸ் ஆர் வி பள்ளிக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

Share

மாதொரு பாகன் எரிப்பு – கண்டனம்

மாதொரு பாகனுக்கு தடை, புத்தக எரிப்பு எல்லாம் எரிச்சல் தரக்கூடியது. ஜனநாயகத்தன்மை அற்றது. ஆனால் இதை மைலேஜாக எடுத்துக்கொண்டு பலர் தங்களுக்கு புனிதர் இமேஜ் தேடிக்கொள்கிறார்கள். யாரோ 50 பேர் செய்த கலாட்டா ஒட்டுமொத்த ஹிந்துத்துவ இமேஜ் என்றாக்கப்படுகிறது. இதுதான் ஹிந்துத்துவம் என்ற கொள்கை இன்று இவர்களை வைத்திருக்கும் இடம். எங்கே ஹிந்துத்துவம் இன்னும் போய்ச் சேராத ஹிந்துக்களைக் கண்டடைந்துவிடுமோ என்னும் பதற்றம். மோடிக்கும் இப்படி பதறினார்கள். மோடி பிரதமரானார். ஹிந்துத்துவவாதிகள் அமைதியாக இருந்தால் எதிர்ப்பாளர்களே ஹிந்துத்துவத்தை வளர்த்துத் தருவார்கள் இவர்கள். அதில்லாமல் இப்படி புத்தக எரிப்பு, கோட்சே சிலை என்னும் பைத்தியக்காரத்தனத்தைச் செய்துகொண்டிருந்தால் அந்நியப்பட்டுப் போவார்கள். உண்மையில் ஹிந்துத்துவவாதிகளில் அட்ரஸ் இல்லாதவர்களே இதைச் சொல்கிறார்கள். இதை மீடியா பரப்பி ஒருவித மாயையை உருவாக்குகிறது. இதை ஹிந்துத்துவர்கள் உணர்ந்துகொண்டு செயல்படவேண்டும்.

ஔரங்கசீப் பற்றிய கண்காட்சி தடை செய்யப்பட்டபோது அமைதி காத்தவர்களே இன்று மாதொருபாகனுக்கு கொடி பிடிக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஜனநாயகம் வேண்டுபவர்கள் இரண்டையும் எதிர்ப்பவர்களாக இருக்கவேண்டும். மாதொரு பாகனை நான் ஆதரிக்கிறேன்.

Share

அபிலாஷின் வர்க்க விசுவாசம் தொடர்பாக

அபிலாஷ் எழுதியதை முதலில் இங்கே வாசித்துவிடுங்கள். 

https://www.facebook.com/abilash.chandran.98/posts/10203521830711028

//கிழக்கு பதிப்பகம் வெளிப்படையாக தன்னை வியாபார நிறுவனமாய் அறிவித்துக் கொள்கிறது. அவர்களின் தரப்பு சுவாரஸ்யமானது. அவர்களுக்கு ஒரே முனை தான் – வருவாய். பேஸ்புக்கில் அப்பதிப்பகத்தின் ஹரன் பிரசன்னா விலை குறித்து ஒரு கருத்து சொல்கிறார். ஒரு நூலின் விலை பதிப்பகத்தின் தனிப்பட்ட முடிவு அல்லது நிலைப்பாடு சார்ந்தது என்கிறார். இதையும் கவனிக்க வேண்டும். பதிப்பு இன்று ஒரு குறிப்பிட்ட வர்க்கம் சார்ந்ததாக மாறி இருக்கிறது. அவர்களுக்கு என்று ஒரு பதிப்பு தரமும் விலையும் உள்ளது. விலையை குறைத்தால் பதிப்பகத்தால் அந்த வர்க்கத்தினருக்கு விசுவாசமாக இருக்க முடியாது. ஒரு பொருளை நாம் அதன் உள்ளடகத்திற்காக மட்டும் அல்ல, விலைக்காகவும் தான் வாங்குகிறோம். அதாவது அதிக விலைக்காகவே அதிக விலை கொடுத்து வாங்குகிறோம்.//

அபிலாஷ் சந்திரனின் வார்த்தை விளையாட்டைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லவேண்டும். இவற்றிலெல்லாம் ஆர்வமே இல்லாமல் போனாலும் சொல்லி ஆகவேண்டியுள்ளது.

மிக முக்கியமான விஷயம், ஹரன் பிரசன்னாவின் பதிப்பகத்தின் நிலைப்பாடு என்று சொல்கிறார் அபிலாஷ். இது என் நிலைப்பாடு மட்டுமே. கிழக்கு பதிப்பகத்தின் நிலைப்பாடு அல்ல. ஒருவேளை கிழக்கு பதிப்பகத்தின் நிலைப்பாடு நான் சொல்வதற்கு எதிரானதாகக்கூட இருக்கலாம் அல்லது நான் சொல்வதாகவேகூட இருக்கலாம். எனவே என் கருத்தை என் நிலைப்பாடு என்று மட்டும் வாசிக்கவும். இல்லை, இது கிழக்கு பதிப்பகத்தின் கருத்துதான் என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல!

அபிலாஷ் அவரது வசதிக்கும் வாய்ப்புக்கும் வாழ்க்கைக்கும் ஏற்றதாய் பதிப்பகத்தின் புத்தகப் பதிப்பித்தலை இரண்டாகப் பிரித்துக்கொள்கிறார். அதாவது அதிகம் விலை வைத்துப் புத்தகம் பதிப்பிடுபவர்கள் இரண்டு பேர், ஒருவர் இலக்கியப் புத்தகப் பதிப்பாளர். இன்னொரு இலக்கியமன்றி வணிகப் புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பாளர். இலக்கியப் பதிப்பாளரின் வாசகர்கள் 500 பேர் மட்டுமே, எனவே அவர்கள் லாபத்துக்காக வேறு வழியின்றி புத்தக விலையை அதிகம் வைக்கிறார்கள். ஆனால் வணிகப் பதிப்பகங்களுக்கு விற்பனை கொட்டோ கொட்டென்று கொட்டியும் அதிக லாப நோக்கில் விலை அதிகமாக வைக்கிறார்கள், ஏனென்றால் விலை குறைவாக வைத்து குறைவான லாபத்தை அதிக அளவில் பெற்றுச் செயல்படும் வாய்ப்பு இருந்தும், ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் விசுவாசம் காரணமாக அப்படிச் செய்கிறார்கள், எனவே மற்ற வர்க்க எதிரிகள்.

இப்படி யோசிக்க ஒன்றுமே தெரியாமல் இருக்கவேண்டும் அல்லது குயுக்தி தெரிந்திருக்கவேண்டும்! அபிலாஷ் சந்திரனின் நிலைப்பாடுகளுக்குக் காரணம், அவர் இயங்கும் வெளியைப் பகைத்துக்கொள்ள முடியாது என்பதோடு, வணிகப் பதிப்பகங்களை வர்க்க விசுவாசப் பதிப்பகம் என்று சொல்வதன் மூலம் அவர்களைத் தனிமைப்படுத்தி விமர்சிக்க நினைப்பது. தன் விசுவாசத்தை மீண்டுமொருமுறையாகத் தெரியவைப்பது.

கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம். இலக்கியப் புத்தகங்களின் வாசகர்கள் 500 பேர் என்பதால், அதிக விலைக்குப் புத்தகம் பதிப்பிக்கும் பதிப்பாளர்கள் 500 புத்தகங்களோடு (அல்லது இரண்டு மடங்காக வைத்து ஆயிரம் புத்தகங்களோடு) அக்குறிப்பிட்ட இலக்கியப் புத்தகத்தை அச்சிடுவதை நிறுத்தி விடுகிறார்களா? அல்லது 500க்கும் மேல் புத்தகம் பதிப்பிக்கும்போது, அவர்களது வாசகர்கள் பரப்பு முடிந்துவிட்டது என்பதைக் கருத்தில்கொண்டு, இனி குறைவாக விலை வைப்போம் என்று விலையைக் குறைக்கிறார்களா? முதலில் இந்த ஐநூறு என்பதே வாய்க்கு வந்த ஒரு எண். எனவே இந்தச் செயல்களை எந்த ஒரு இலக்கியப் பதிப்பகமும் செய்யமுடியாது.

அடுத்தது, இலக்கியப் பதிப்பகங்கள் என்பவை வெளியிடும் 100% புத்தகங்களும் தூய இலக்கியப் புத்தகங்கள் அல்ல. அவை ஒவ்வொன்றுக்குள்ளேயே இலக்கிய மதிப்பு கடுமையாக மாறுபடும். பிரமிள் புத்தகத்தைப் பதிப்பிக்கும் ஒரு பதிப்பகம் சுஜாதாவின் புத்தகங்களை பதிப்பிக்கலாம். ஆனால் எந்த ஒரு பதிப்பகமும் வர்க்க விசுவாசத்தை மனத்தில் வைத்து பிரமிளுக்கு ஒரு ரேட்டும் சுஜாதாவுக்கு ஒரு ரேட்டும் வைப்பதில்லை. அப்படியானால் யார் வர்க்க விசுவாசப் பதிப்பகம்? இலக்கியப் பதிப்பகங்கள் என்றுதானே அபிலாஷ் சொல்லவேண்டும்? ஆனால் அவர் இலக்கியப் புத்தகப் பதிப்பகங்களுக்கு இட ஒதுக்கீடு அளித்துவிடுகிறார். அதில் அவரும் ஒளிந்துகொள்ள வசதியாக.

இன்னொரு விஷயம், வணிகப் பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களில் பல (அல்லது சில) தீவிர இலக்கியப் புத்தகங்கள். (இதற்கு உதாரணம் தேவை என்றால் அள்ளித் தர ஆயத்தமாக இருக்கின்றேன்.) இப்புத்தகங்களுக்கும் வணிகப் புத்தகங்களுக்கும் ஒரே நோக்கிலேயே வணிகப் பதிப்பகங்கள் விலை வைக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் இலக்கியப் புத்தகங்களுக்கு லாபம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்றும் வணிகப் பதிப்பகங்கள் பதிப்பிக்கின்றன என்பதே உண்மை. இலக்கியப் பதிப்பகங்களின் கடுமையான பண நெருக்கடி வணிகப் பதிப்பகங்களுக்கும் பல்வேறு காரணங்களை முன்வைத்து ஏற்படுகின்றன.

உண்மையில் வணிகப் பதிப்பகங்களோ இலக்கியப் பதிப்பகங்களோ ஒரு புத்தகத்துக்கு விலையை நிர்ணயிப்பது அதன் செலவுகளின் அடிப்படையில்தான். அதிகம் அச்சிட்டு அதிகம் விற்பனையாகும் புத்தகங்களுக்கு விலையைக் குறைவாக வைப்பார்கள். இலக்கியப் புத்தகம் மிக அதிகம் விற்றால் அவற்றின் விலை குறைவாக வரும். இல்லையென்றால் விலை கூட வரும். இதுவே இலக்கியமற்ற புத்தகங்களுக்கும் பொருந்தும். இந்த இரண்டே விலை வைப்பதற்கான அடிப்படை. இவற்றைத் தவிர வேறு பொதுவான அடிப்படைகள் எங்கேயும் இல்லை. வர்க்க விசுவாசமெல்லாம் தண்ணீருக்குள் முங்கி உயிர் போய்க்கொண்டிருப்பவனுக்கு எவ்வளவு இருக்குமோ அவ்வளவுதான் ஒரு பதிப்பகத்துக்கு இருக்கமுடியும். அபிலாஷின் சிந்தனையெல்லாம் மிகப் பெரிய வர்க்கத் திட்டத்தோடு சில வணிகப் பதிப்பகங்கள் களம் இறங்கி இருப்பதாகவும், ஒரு கம்யூனிஸ ஹீரோ அத்திட்டத்தை உடைப்பதாகவும் இருக்கின்றன. அந்த கம்யூனிஸ ஹீரோ அவரேதான்!

இது போக இன்னொன்று உண்டு. ஒரு இலக்கியப் பதிப்பகத்தில் வேலை பார்ப்பவர்கள் சொற்ப அளவிலும், ஒரு வணிகப் பதிப்பகத்தில் வேலை பார்ப்பர்கள் கொஞ்சம் அதிகமாகவும் இருப்பார்கள். இதையும் மனத்தில் வைத்துத்தான் வணிகப் பதிப்பகங்கள் விலை வைக்கவேண்டும். ஆனால் அப்படி வைப்பதில்லை என்பதே உண்மை. யார் வேண்டுமானாலும் எந்த ஒரு இலக்கிய / வணிகப் பதிப்பகங்களின் புத்தகங்களின் விலையைப் பட்டியலிட்டுப் பார்க்கலாம். அதையும் ஆண்டு வாரியாகப் பட்டியலிட்டுப் பார்த்தால் உண்மை விளங்கிவிடும். இதையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். எனவேதான் எந்த ஒரு இலக்கியப் பதிப்பகத்தின் மீதும் எனக்குப் புகார்கள் இல்லை. ஏனென்றால் புத்தகம் பதிப்பிக்கும் தொழிலே இன்று இருட்டில் கம்பு சுற்றும் வேலையாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது. ஒரே ஒரு வெளிச்சக்கீற்று கண்ணில் படும் என்ற நம்பிக்கையில்தான் பதிப்பகங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அபிலாஷ் போன்றவர்களுக்கு இதில் வர்க்க விசுவாசத்தையும், இந்துத்துவத்தின் செயல்பாட்டையும் இணைக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. பதிப்பகங்கள் வெகுசில புத்தகங்களுக்கு லாபம் குறைவாக இருந்தால் போதும் என்று செயல்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால் அந்தப் புத்தகங்களின் விற்பனையும் அப்படியே பிய்த்துக்கொண்டு பறப்பதில்லை என்பதுதான் சோகம். 

நம் புத்தக வாசிப்புச் சூழல் மோசமாக உள்ளதை உணர்த்து அதை மேம்படுத்த நாம் செய்யவேண்டியது, பதிப்பகங்களை வர்க்க விசுவாசிகளாகவும் வர்க்க எதிரிகளாகவும் தம் வசதி வாழ்க்கை வாய்ப்புக்காக வண்ணம் பூசும் வேலையல்ல. குறைந்த பட்ச நேர்மை அதைச் செய்யாமலாவது இருப்பது.

பின்குறிப்பு:

யுவ புரஸ்கார் அபிலாஷின் கால்கள் நாவலை வாங்க இங்கே செல்லவும். https://www.nhm.in/shop/100-00-0000-202-2.html

Share

ஜீவா – காட்சிப்பட்ட தந்திரமும் காட்சிப்படவேண்டியவையும்

ஜீவா திரைப்படத்தை நேற்றுத்தான் பார்த்தேன். கிரிக்கெட் அரசியல் பற்றிய திரைப்படம். பிராமணர்களின் ஆதிக்கத்தால் திறமை இருந்தும் மற்ற சாதிக்காரர்களுக்கு ரஞ்சி டிராபியில் இடம் கிடைக்காததை அழுத்தமாகச் சொல்லும் படம். இது முக்கியமான விஷயமே. இதுவரை தமிழ்நாட்டிலிருந்து ஆடிய 16 பேர்களில் 14 பேர் பிராமணர்கள் என்பது தற்செயல் அல்ல. நிச்சயம் பின்னணி ஏதோ உள்ளது. அதைத் தெளிவாகக் காட்டிய வகையில், அதுவும் நெஞ்சைப் பிசையும் வகையில் காட்டியதால் மிக ஆழமாகவே இக்கேள்வி மனத்தில் பதிகிறது. 

முக்கியமான விஷயத்தைவிட்டு காதல் என்று சுற்றுவதற்கே பாதிப் படம் போய்விடுகிறது. நான் திரைப்பட விமர்சனமாக இதை எழுதவில்லை என்பதால் இந்த திரைப்பட கோணல்களையெல்லாம் விட்டுவிட்டு, அரசியலுக்குப் போகிறேன். படம் நெடுகிலும் மிகத் தெளிவான கிறித்துவப் பின்னணியை வைத்திருக்கிறார் இயக்குநர். இந்தப் பக்கத்து வீடும் கிறித்துவர், அந்தப் பக்கத்து வீடும் கிறித்துவர். ஹிந்துக் குழந்தை கிட்டத்தட்ட கிறித்துவனாகவே வளர்கிறது. எந்த அளவுக்கு? ஹிந்துப் பையனின் காதல் வெளியே தெரியவரும்போது பாதிரியார் கூப்பிட்டுப் பேசுகிறார். ஒரு ஹிந்துப் பையன் கிறித்துவ குடும்பத்தோடு பழகினாலே அவன் கிறித்துவன், எனவே நாம் ஒரு கிறித்துவக் குடும்பத்தை விசாரிப்பதைப் போலவே விசாரிக்கலாம் என்ற அளவுக்கு ஒரு பாதிரியாரும், அவன் கிறித்துவனே என்று ஒரு கிறித்துவ தம்பதி பெற்றோரும் நம்பும் அளவுக்கு! 

சீனியர் சூரி கிறித்துவர். கோச் கிறித்துவர். பக்கத்துவீட்டுக்கு வந்து சேரும் பின்னாள் காதலி கிறித்துவர்! பிராமணர்களுக்கு மட்டும் இடம் கிடைப்பது எப்படி தற்செயலல்ல என்று இயக்குநர் நம்புகிறாரோ, அதேபோல் சுசீந்திரனின் இந்த பின்னணித் திணிப்பு தற்செயலானதல்ல என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் ஆதலால் காதல் செய்வீர் திரைப்படத்திலும் வெகுவான கிறித்துவ பின்னணி. கிறித்துவ பின்னணி வருவதில் எனக்குப் பிரச்சினை இல்லை. (நீர்ப்பறவை ஆழமான கிறித்துவப் பின்னணி கொண்ட திரைப்படம். ஆனால் அதில் அரசியல் இல்லை. நிஜமான பதிவு மட்டுமே இருந்தது.) ஆனால் தொடர்ந்து இயக்குநர் ஒருவரின் படத்தில் இப்படி வருமானால் அதை தற்செயல் என்று ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும்?

அதிலும் ஒரு காட்சி வருகிறது. காதலுக்காக இரண்டு நிபந்தனைகள். ஒன்று, ஹீரோ மதம் மாறவேண்டும். இரண்டாவது, கிரிக்கெட்டை விட்டுவிடவேண்டும். அப்போது ஹீரோ சொல்கிறார், மதம் மாறுவது ஒரு பிரச்சினையில்லை. அதாவது வாயசைப்பில் இப்படி வருகிறது. டப்பிங்கில் மாற்றி இருக்கிறார்கள், மதம் மாறுவதை அப்புறம் பார்த்துக்கலாம் என்பது போல. ஸ்கிரிப்ட்டில் மிகத் தெளிவாகவே இயக்குநர் மதம் மாறுவது பிரச்சினையில்லை என்றே எழுதியிருக்கிறார். (பார்க்க: கடைசியில் உள்ள 11 நொடி வீடியோ.) கல்யாணத்துக்காக மதம் மாறுவதைப் பற்றி சமூக அக்கறையுள்ள இயக்குநர் இப்படி சிந்திப்பாரென்றால், பிராமண ஆதரவுக் குழுக்கள் வேறெப்படி சிந்திக்கவேண்டும் என்று இயக்குநர் எதிர்பார்க்கிறார்? இப்படிச் சொன்னாலும், பிராமண ஆதரவு கிரிக்கெட் தேர்வில் இல்லவே இல்லை என்று நான் சொல்லவில்லை. நிச்சயம் அதைப் பற்றிப் பேசத்தான் வேண்டும். ஆனால், அத்தோடு, திறமை இருந்தும் முன்னேற முடியாத அதேசமயம் திறமை இல்லாமல் முன்னேறிவிடுகிற மற்ற சாதிகளைப் பற்றிய பிராமணர்களின் குமுறலையும் பேசவேண்டுமே. சுசீந்திரன் என்ன பைத்தியமா இதைப் பேச. எது எடுபடுமோ அதைப் பேசுகிறார். ஒரே படத்தில் அத்தனையையும் காட்டிவிடமுடியாது. திரைக்கதை வீரியத்துக்கு ஒருமுனையில் படத்தை குவிப்பது தேவைதான். ஆனால் அதைப் பற்றிய ஒரு வரி கூட படத்தில் இல்லை! ஏனென்றால் இயக்குநருக்கு அது பற்றிய அக்கறை இல்லை.

ஆனால் இன்னொன்றில் அக்கறை உள்ளது. அபிராமணர்கள் என்ன சாதி என்று சொல்லக்கூடாது என்பதில் அக்கறை இருந்திருக்கிறது. நல்லது. போகட்டும். ஜீவாவின் வாழ்க்கையில் விளக்கை ஏற்றி வைக்கும் கதாபாத்திரம் ஒரு முஸ்லிமாக இருக்கவேண்டும் என்பதில் அக்கறை உள்ளது. தமிழகத்தில் இருந்து உருவான கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் பெரும்பான்மை பிராமணர்கள் என்று தெரிந்துகொண்ட சுசீந்திரனுக்கு, இந்திய அளவில் தன் செல்வாக்கு மூலம் இன்னொருவனுக்கு வாய்ப்புத் தர முடியக்கூடிய ஒரு கிரிக்கெட்காரர் ஹிந்துவாகத்தான் இருக்கமுடியும் என்று தெரிந்திருக்கவில்லை. இந்திய அளவில் வெற்றிபெற்ற இஸ்லாமிய ஆட்டக்காரர்கள் எத்தனை பேர், அவர்களில் அத்தனை செல்வாக்குப் பெற்று, ரஞ்சி டிராஃபியில்கூட விளையாடியிருக்காத ஒருத்தனுக்கு ஐபிஎல் (படத்தில் சிபிஎல்) குழுவில் இடம்வாங்கித்தரும் அளவுக்கு உள்ள முஸ்லிம் ஆட்டக்காரர் என்று ஒருவரைக் காட்டமுடியுமா? பிராமணர்களைச் சொல்லும்போது தரவோடு வருகிறவர், ஹிந்துக்களைப் புறக்கணிக்க எந்தத் தரவோடும் வருவதில்லை. இது புதியதல்ல. ஏற்கெனவே நன்கு போடப்பட்ட பாதை. அதிலே சுசீந்திரனும் மிக இலகுவாகச் செல்கிறார்.

குறைந்தபட்சம், இந்தியாவின் முக்கிய அச்சுறுத்தலான தீவிரவாதம் பற்றியும் அதில் அதிகமான இஸ்லாமிய பயங்கரவாதத்தைப் பற்றியும் சுசீந்திரன் படம் எடுக்கவேண்டும். இந்தப் படத்தில் கிறித்துவர்களை நல்லவர்களாக வைத்ததுபோல் புதிய படத்தில் ஹிந்துக்களை அப்பாவி நல்லவர்களாக வைக்கவேண்டியதில்லை. இந்திய அப்பாவி பொதுஜன முஸ்லிம்களை நல்லவர்களாக வைக்கட்டும். உண்மையும் அதுதான், எனவே யதார்த்தமாகவும் இருக்கும். இப்படி வைத்தாவது அவரால் ஒரு படத்தை இயக்கிவிட முடியுமா என்ன? முடியும். செய்யட்டும். செய்யவேண்டும்.

இதை ஒட்டி வேறு சில வாய்ப்பரசியலைப் பார்க்கவேண்டும். திறமை இருந்தும் புறக்கணிப்படுகிற பிராமணர்களின் குமுறலைப் படமாக்கினால் அதுவே அந்த இயக்குநருக்குக் கடைசிப் படமாக இருக்கலாம். இடஒதுக்கீட்டில் கைவைக்கும் திரைப்படம் ஒன்றை எடுப்பது சாதாரணமானதல்ல. எதிர்ப்புக் கூட்டம் போட்டே சாகடித்துவிடுவார்கள். ஆனால் பிராமணர்களைத் திட்டி, ஹிந்துக்களைத் திட்டி படம் எடுப்பதால் இந்தப் பிரச்சினைகள் இல்லை. ஒருவேளை தொடர்ச்சியான லாபம்கூட இருக்கலாம்! இதை எந்த ஒரு இடத்திலும் நாம் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும். ஒரு ஹிந்துத்துவ ஆதரவுத் திரைப்படம், அதிலும் கலை ரீதியாக மேம்பட்ட படம் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ஹிந்துத்துவப் படமே வராது, சரி, ஜஸ்ட் வைத்துக்கொள்ளுங்கள், ப்ளீஸ். அதைப் பாராட்டி ஒரு கட்டுரையை நீங்கள் எங்கேயும் பார்த்துவிடமுடியாது. எந்த இதழும் வெளியிடாது. ஒருவேளை நீங்கள் எழுதினால், கட்டுரையோடு அந்தப் பத்திரிகை உங்களையும் நிராகரிக்கும் அந்தப் படத்துக்கு எதிர்க்கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளிவரும் என்பதற்கு நான் உத்திரவாதம்.

ஏதேனும் ஒரு படம் வந்தால், ஒரே பத்திரிகையில் அதே படத்தை ஐந்து விதமாக விமர்சிப்பார்கள். ஐந்து விமர்சனங்களும் ஒரு புள்ளியில் ஒன்றிணையும். ஒரு பொது அடித்தளத்தைப் பெற்றிருக்கும். இந்த அடித்தள சமரசத்துக்குட்பட்டே நீங்கள் அந்தப் பத்திரிகையில் எழுத முடியும். சமரசமே இல்லாமல் கட்டுரை எழுதுவது என்று அந்த எழுத்தாளர்கள் சொல்லிக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் குறைந்தபட்ச சமரசம் என்பது உங்கள் கொள்கையாக இருந்தால்மட்டுமே நீங்கள் அங்கே எழுதமுடியும். அடித்தளம் மறைந்திருக்கும், அது ஒன்றேயானது. மேலே கட்டுமானங்கள் மட்டும் விதம்விதமாக.

இது ஹிந்த்துத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கிற இதழுக்கும் பொருந்தும். ஆனால் ஹிந்துத்துவ இதழ் இங்கே நடுநிலை இதழ் இல்லை. மற்றவை நடுநிலை இதழ்கள். சமரசமற்ற இதழ்கள். இதுவே முக்கியமான வேறுபாடு.

ஒரு ஐயாயிரம் பிரதி விற்க கஷ்டப்படும் இதழில் எழுதக்கூட இத்தனை வாய்ப்பரசியல் என்றால், கோடிகள் புரளும் விளையாட்டும் வாய்ப்பரசியல் இருக்காது என்று நம்ப யாருமே முட்டாளல்ல. ஆனால் வாய்ப்பரசியலை ஹிந்துக்களையும் பிராமணர்களையும் விமர்சிக்கப் பயன்படுத்துவதோடு நிறுத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். சுசீந்திரனும் புத்திசாலியாகத்தான் இருக்கவேண்டும் என்பதை எதிர்வரும் அவரது படங்கள் நிரூபிக்கும் என்றே நம்புகிறேன்.


வாயசைப்பையும் டப்பிங்கையும் கூர்ந்து நோக்க.

Share

பாரதியார் கவிதைகள் (விளக்க உரையுடன்)

பாரதியார் கவிதைகள் உரையுடன் வெளிவந்திருக்கிறது. பாரதியார் கவிதைகளுக்கெல்லாம் உரையா என்று ஒரு காலத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் நிச்சயம் உரை வேண்டும் என்பதுதான் என் எண்ணம். இப்போது முதன்முறையாக ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது. கற்பகம் புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது. கவிஞர் பத்மதேவன் உரை எழுதியிருக்கிறார்.

சமீபத்தில் கண்ட அட்டகாசமான புத்தகம் இது. தவறாமல் வாங்கிவிடுங்கள். நிச்சயம் நம் வீட்டில் இருக்கவேண்டிய பொக்கிஷம் இந்தப் புத்தகம். உரை தெளிவாக புரியும்படியாக அழகான தமிழில் உள்ளது. பாரதியின் தீவிர அன்பர்கள் இப்புத்தகத்தைப் படித்தால் சில வரலாற்றுத் தரவுகளைச் சொல்லக்கூடும். அவையும் சேர்க்கப்படுவது நல்லது.

ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு மாணவன் கையிலும் இந்தப் புத்தகம் இருப்பது அவசியம். நம் ஒவ்வொரு கையிலும் இந்தப் புத்தகம் இருப்பது தேவை. 

புத்தகத்தின் அச்சு, அட்டை நேர்த்தி எல்லாம் கூடி மிக அழகாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது இப்புத்தகம். 

விலை ரூ 750 (1096 பக்கங்கள்)

இப்புத்தகத்தின் விற்பனையைப் பொருத்தே மறுபதிப்பெல்லாம் வரும் என நினைக்கிறேன். கிடைக்கும்போதே வாங்கிப் பத்திரப்பத்தி வைத்துக்கொள்ளுங்கள். 

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0002-364-7.html

போன் மூலம் வாங்க: Dial for books 94459 01234

Share

பதிப்புலகம் குறித்து (கிழக்கை முன்வைத்து) – பத்ரி சேஷாத்ரி எழுதியது

பத்ரி ஃபேஸ்புக்கில் எழுதியது இவை. ஒரு தேவை கருதி இங்கே சேமித்து வைக்கிறேன்.

 

(1) புத்தக விலையை, அதன் கட்டமைப்புக்கு ஆகும் செலவை வைத்தே தீர்மானிக்கிறேன். உலோகத்தை அடிப்படையாக வைத்து உதாரணம் சொல்கிறேன். முதலில் அந்தப் புத்தகத்தை 1,200 பிரதிகள் அச்சிட்டோம். அப்போது ஒரு புத்தகம் அடிக்க ஆன செலவு சுமார் 25 என்று ஞாபகம். அதைப்போல நான்கு மடங்கு எம்.ஆர்.பி. எனவே ரூ. 100/- எம்.ஆர்.பி. அந்தப் புத்தகத்தை விற்க ஆரம்பித்ததும், எதிர்பார்த்த வேகத்தைவிட அதிகமாக விற்றது. எனவே பேசாமல் 5,000 பிரதிகள் அச்சடித்துவிடலாமே என்று ஒரு ஐடியா தோன்றியது. அப்படி அடிக்கும்போது ஒரு பிரதிக்கு ஆகும் செலவு சுமார் ரூ. 15/- மட்டுமே. அதனை நான்கு மடங்காக்கி, ரூ. 60/- என்று வைக்காமல், ரூ. 50/- என்று வைத்து, ஊரெங்கும் பிளாஸ்டிக் பவுச்சில் தொங்கவிட்டு விற்க முயற்சி செய்தோம். கடைசியில் 4,500 விற்றுவிட்டது. கடைசி 500 விற்க வெகு தாமதமானது. அதன்பின் அந்தப் புத்தகத்தை அச்சிடவில்லை. இப்போது நான் அதனை அச்சிட நேர்ந்தால் மீண்டும் ரூ. 100/- அல்லது ரூ. 125/- என்று வைத்து விற்பேன். ஒரு லட்சம் பிரதிகள் சீராக மாதம் 10,000 என்று போகும் என்றால் ரூ. 40 அல்லது ரூ. 50 என்று வைத்து விற்பேன். இதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

(2) புத்தகக் கட்டுமான விலையைப் போல எவ்வளவு மடங்கு வைத்து புத்தகங்களை விற்பது? 3 மடங்கு, 4 மட்னக்கு, 5 மடங்கு? இந்த மூன்றையும் நான் பின்பற்றியுள்ளேன். ஏன் இந்தக் கணக்கு? நாங்கள் எங்கள் சூப்பர் ஸ்டாக்கிஸ்டுகளுக்கு புத்தக விலையில் 40% டிஸ்கவுண்ட் தருகிறோம். அவர்கள் எங்கள் டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு 35%-மும், கடைகளுக்கு 30 அல்லது 35%-மும் கொடுக்கிறார்கள். எங்களைப் பொருத்தமட்டில், எல்லாப் புத்தகத்துக்கும் 40% எங்கள் கையை விட்டுப் போய்விடுகிறது. அது டிஸ்ட்ரிபூஷன் சானலுக்குப் போகும் தொகை. அடுத்து, 10% எழுத்தாளர் ராயல்டி. தாமதமானாலும் இன்றுவரை மிகச் சரியாகக் கொடுத்துக்கொண்டு வந்திருக்கிறோம். ஆக எம்.ஆர்.பியில் 50% சானலுக்கும் ஆசிரியருக்கும். மீதமுள்ள 50%-த்தில், (நான்கு மடங்கு வைத்தால்) 25% கட்டுமானத்துக்கு, 25% நிறுவனத்துக்கு. இந்த 25%-ல் வாடகை, சம்பளம் (எங்களிடம் 70 பேர் வேலை செய்கிறார்கள் – 20 பேர் சேல்ஸ், 8 பேர் எடிட்டோரியல், அட்மின், மார்க்கெட்டிங், வேர்ஹவுஸ் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள் – இவர்கள் அனைவருக்கும் தலையே போனாலும் ஒன்றாம் தேதிக்கு முதல் தேதியிலேயே சம்பளம் கொடுத்துவிடுகிறேன், பி.எஃப், இ.எஸ்.ஐ, கிராஜுவிட்டி உண்டு), நிறுவனத்தை நடத்த வாங்கும் கடனுக்கான வட்டி, இதெல்லாம் போக கையில் ஒன்றும் எஞ்சுவதில்லை. இதில் முதலீட்டாளர்களுக்குக் கொடுக்க ஒன்றும் இல்லை.

இதனால்தான் ஐந்து மடங்கு விலை வைக்கலாம் என்று யோசித்தேன். அப்படிச் செய்தால் எங்கள் பங்காக 30% நிற்கும். ஆனால் அதற்கு சேல்ஸ் டீமிடமிருந்து எதிர்ப்பு. சில புத்தகங்கள் போகும் வேகத்தை வைத்து, மீண்டும் நான்கு மடங்கு என்று வந்துவிட்டோம்.

(3) எங்கள் தயாரிப்புச் செலவு அதிகம். எனவே எம்.ஆர்.பி அதனோடு சேர்த்து மடங்காக்குதலில் அதிகரிக்கிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் பத்தாண்டுகளாக புத்தகத்தை உருவாக்கிவிட்டு, சொர்ந்துபோய் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் புத்தக உருவாக்கத்தைக் கொடுத்திருக்கிறோம். குவாலிட்டி கண்ட்ரோல் என்றால் என்னவென்றே தெரியாத நிலைதான் சென்னை குடிசைத் தொழில் அச்சகங்களில். நாங்களே பேப்பர் வாங்கி, நாங்களே பத்து பிரிண்டிங் பிரெஸ்ஸில் பிரிண்ட் செய்து, நாங்களே எட்டு பைண்டிங் இடங்களில் போய் பைண்டிங் செய்து எடுத்து வந்தால் ஒரே செட்டில் உள்ள பத்து புத்தகங்களும் பல்வேறு உயரங்களில் இருக்கும், அச்சு கோணல் மாணலாக இருக்கும்., பைண்டிங்கெல்லாம் அப்படித்தான் சார் வரும் என்று ஒரே போடாகப் போடுவார்கள்.

இப்போது ஒட்டுமொத்தமாக மும்பையில் ரெப்ரோ அல்லது மங்களூரில் மணிபாலில் கொடுத்துச் செய்கிறோம். அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுக்கிறோம்.

ஏன், மற்ற நிறுவனங்கள் மிக அற்புதமாகப் புத்தகங்களைக் கொண்டுவரவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஒருவேளை அவர்களிடம் இருக்கும் சீக்ரெட் சாஸ் என்னிடம் இல்லை. அவர்கள் மாதம் அச்சடிக்கும் புத்தக எண்ணிக்கைக்கும் நான் அச்சடித்து விற்கும் புத்தக எண்ணிக்கைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்த்து ஃபேஸ்புக்கில் சண்டை போட நான் விரும்பவில்லை.

(4) இறுதியாக, நாங்கள் சானலுக்குத் தரும் டிஸ்கவுண்ட் அதிகம். வானதியெல்லாம் 25%-க்கு மேல் தரமாட்டார்கள். சிலர் 30, சிலர் 35. நாங்கள் 40 தரக் காரணம் உள்ளது. ஒரு வலைப்பின்னலை உருவாக்கியிருக்கிறோம். அனைவரும் பணம் சம்பாதித்தால்தான் இந்த நெட்வொர்க்கில் இருக்க விரும்புவார்கள். புஸ்தகத்தைப் பரவலாக விற்பனை செய்ய முயற்சி எடுப்பார்கள். அதனால்.

இப்போது எக்ஸைல் விலைக்கு வருவோம். நேரடியாக கஸ்டமருக்கு விற்பதால், 40% டிஸ்கவுண்ட் போகிறது. எனவே நேரடியாக எந்தப் புத்தகத்தை பதிப்பகத்திடம் சென்று வாங்கினாலும் டிஸ்கவுண்ட் கொடுக்க வேண்டியதுதானே என்று கேட்காதீர்கள். டிஸ்கவுண்ட் கொடுக்க மாட்டோம். ஏனெனில் அது விற்பனை சானலின் வெறுப்பைச் சம்பாதிக்கிறது. அங்குதான் எங்கள் புத்தகங்களின் பெரும்பகுதி விற்பனையாகிறது. இந்தக் குறிப்பிட்ட புத்தகத்தை 50% டிஸ்கவுண்டில் விற்க ஒப்புக்கொண்ட ஒரே காரணம் இதில் லாபம் உள்ளது என்பதற்காக அல்ல. சாரு கேட்டுக்கொண்டதற்காக மட்டுமே. இப்படி எல்லா எழுத்தாளர்களும் கேட்டால் எனக்குக் கட்டுப்படியாகாது.

ப்ரீ-ஆர்டரில் இருக்கும் வசதி காரணமாகவே இந்த டிஸ்கவுண்ட். மொத்தம் எத்தனை புத்தகம் அச்சிட வேண்டும் என்பது தெரிந்துவிடும். கையில் காசு முதலிலேயே வந்துவிடும்.

ஆனால் இதனை எல்லாப் புத்தகங்களுக்கும் செய்ய முடியாது. ஒருசிலருடைய புத்தகங்களுக்குத்தான் கணிசமான ப்ரீ-ஆர்டர் வர வாய்ப்புள்ளது.

ஆனாலும் லாபம் உண்டு, லாபம் உண்டு என்று நீங்கள் சொல்வதை நான் ஏற்கவில்லை. கடந்த பத்தாண்டுகளில் கிழக்கு பதிப்பகத்துக்குத் துளிக்கூட லாபம் இல்லை என்பதுதான் உண்மை. பொதுவாக நான் இதுகுறித்துப் பேசுவதில்லை. புலம்புவதில்லை. இப்போதும் இது புலம்பல் இல்லை. அச்சுப் புத்தக பிஸினஸின்மீதான என் ஆர்வம் வெகுவாகக் குறைந்துவிட்டது. வேறு பிசினஸில் இறங்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. நன்றி. இதுதொடர்பான கேள்விகளுக்கு இங்கு மேற்கொண்டு நான் பதில் ஏதும் எழுதப்போவதில்லை.

 

தனியாக நீங்கள் புத்தகம் போட்டாலும் அதில் எழுத்துக்கு மேற்பட்ட உழைப்பு இருக்கிறது. அதற்கு நீங்கள் ஒரு விலை போடவேண்டும். எழுத்துக்கு ராயல்டி. மற்ற உழைப்புக்கு ஒரு கூலி. பின் கடனுக்கு வட்டி. எல்லாம் சேர்த்தால் உபயோகப்படாது என்பதால்தான் 100 ரூ. வைக்கவேண்டும். மாற்றுவழி, புத்தகங்கள் பல ஆயிரக் கணக்கில் விற்கவேண்டும் என்பதுதான். அது நிகழும்வரை நாம் அபத்தமாக அடித்துக்கொண்டிருக்கிறோம். அதைப் பற்றி யாராவது பேச விரும்பினால் நான் பேசத் தயார். இன்னமும் 1000 பிரதிகள் விற்பதிலேயே ஆயிரத்தெட்டு அக்கப்போர். அங்கே சேத்தன் பகத் ‘அசால்டாய்’ லட்சத்தைத் தாண்டி, பத்து லட்சத்தைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறார். அது… பிசினஸ். மற்றபடி, கலை, இலக்கியம் வளர்ப்போர் மட்டுமே சொந்தக் காசை அழித்து போண்டியாக்கி 1000 பிரதியை விற்க அல்லாடிக்கொண்டிருப்பார்கள். எனக்கு அதையெல்லாம் தொழிலாகச் செய்ய நாட்டமில்லை.

 

 

-பத்ரி சேஷாத்ரி

https://www.facebook.com/rasanaikkaaran/posts/1542645925977441?comment_id=1542651565976877&notif_t=like

Share

அசோகமித்திரன், நீங்க நல்லவரா கெட்டவரா?

அசோகமித்திரன், நீங்க நல்லவரா கெட்டவரா?

நேற்றைய வெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழாவில் அசோகமித்திரன் பேசினார். நேற்று என்றல்ல, அசோகமித்திரன் எப்போதுமே ஒரு கறாரான பேச்சைப் பேசுவதில்லை. அது அவரது பாணியாக இருக்கலாம். ஆனால் அவரது கருத்து என்ன என்பதை ஒவ்வொரு நேயரும் ஒவ்வொரு விதமாக உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு உருவாகிவிடுகிறது என்பதே அதிலிருக்கும் அரசியல். எனக்குத் தெரிந்தவரையில் அசோகமித்திரன் இதைத் திட்டமிட்டே செய்கிறார் என்றுதான் நினைக்கிறேன்.

தன்னோடு எழுதவந்த தனக்குப் பின் எழுத வந்த தன்னை ஒத்த அல்லது தன்னைக் கடந்த எழுத்தாளர்களை முழுக்கப் பாராட்டுவதில் அவருக்குப் பெரிய தயக்கம் உள்ளது. மனத்தடை உள்ளது. இதுதானே இயல்பு என்று ஒருவர் சொல்லக்கூடும். ஒருவரைப் பாராட்டத் தோன்றும்போது முழுமையாகப் பாராட்டுவது பெரிய பிழையல்ல. அப்போதும்கூட அதில் ஒரு புள்ளி வைத்துப் பேசுவது தேவையற்றது. அது பேசுபவரின் அதீத தன்முனைப்பையே காட்டுகிறது என்று நினைக்கிறேன்.

இதே அசோகமித்திரன் தனக்குப் பின் வந்த சில எழுத்தாளர்களை மனமாரப் பாராட்டியிருக்கிறார். ஆனால் அவர்களெல்லாம் அசோகமித்திரனை எவ்வகையிலும் தொடமுடியாதவர்கள், தாண்ட முடியாதவர்கள். ஆனால் அசோகமித்திரன் ஜெயமோகனைத் தன்னைத் தாண்டிவிட்ட ஓர் எழுத்தாளராக உள்ளே நினைக்கிறார். எனவே அவருக்கு ஜெயமோகனை முழுமையாகப் பாராட்டிவிடுவதில் சிக்கல் உள்ளது. பாராட்டத் துவங்கும்போதே, தப்பா நினைக்காதீங்க, நீங்க எல்லாம் கைதட்டறேள், நான் இல்லை என்று சொல்கிறார். ஒரு நாடகத்தில் இவர் நடித்தபோது தெரியாமல் இவரது மூக்குக் கண்ணாடி விழுந்துவிட அனைவரும் பிரமாதம் என்று கைதட்டினார்கள் என்கிறார். ஆனால் ஜெயமோகன் எழுதுவதைத் தடை சொல்லக்கூடாது என்று சொல்லி, வயதில் மூத்தவர் என்பதால் ஆசிகள் என்று சொல்லிவிடுகிறார். 30,000 பக்கம் எழுதினா பயமா இருக்கு என்று சொல்லிவிட்டு, தான் எழுதித் தள்ளிய கையெழுத்துப் பிரதிகள் குவிந்து கிடக்கின்றன என்கிறார். அசோகமித்திரனின் பிரச்சினை, ஜெயமோகன் அவரைத் தாண்டுவதை மனதார ஏற்றுகொள்ள முடியாமல் போவதே என்பதே என் முடிவு.

இத்தனைக்கும் அசோகமித்திரன் ஒரு மிகப்பெரிய படைப்பாளி. சாதனையாளர். எத்தனை காலம் தாண்டியும் வாழப்போகும் மிக நுணுக்கமான எழுத்து அவரது. அவருக்குரிய அங்கீகாரம் அவர் நினைக்கும் அளவுக்கு அவருக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் அதை எதிர்கொள்ளும் வழி இதுவல்ல. இப்போது என்றில்லை, அவர் யாரைப் பற்றிப் பேசினாலும் இப்படி ஒரு புள்ளி வைத்துப் பேசுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஜெயமோகனுக்கு கைத்தடிகள் இருப்பதாக சிலர் சொல்லுவதுபோலவே அசோகமித்திரனுக்கும் கைத்தடிகள் சிலர் உண்டு. அவர்கள் இதைச் சொல்லி சிலாகிப்பார்கள். என் காதாலேயே கேட்டிருக்கிறேன். அசோகமித்திரனின் பூடகமான விமர்சனத்தை ஊதிப் பெரிதாக்கி தங்கள் வயிற்று உபாதையை அவர்கள் தீர்த்துக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். அது அவர்களுக்குப் பொருத்தமானதுதான். ஏனென்றால் அவர்கள் எப்போதுமே ஜெயமோகனை உயர்ந்துதான் பார்க்கப் போகிறவர்கள். ஆனால் அசோகமித்திரன் முகத்தோடு முகம் பார்க்கத்தக்க ஒரு சாதனையாளர்கள். வயதும் கைவிடப்பட்ட தருணங்களும் தரும் சோகத்தை அசோகமித்திரன் வெல்லவேண்டும். அதற்கு நிஜமான சாதனையாளர்களாக அவர் மனம் அங்கீகரிக்கும் எழுத்தாளர்களைப் பாராட்டும் தருணம் வரும்போது மனமாரப் பாராட்டுவது ஒரு வழியாக இருக்கக்கூடும். கறாரான விமர்சனம் தேவைப்படும்போது அதையும் செய்துகொள்ளட்டும். அது அவர் தேர்வுதான். பாராட்டும்போதே ஒரு குறையைச் சொல்வதும், விமர்சிக்கும்போதே ஒரு பாராட்டைச் சொல்வதுமென இலக்கிய உலகின் ரஜினியாக அவர் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதே வேண்டுதல்.

Share

விக்கிரமாதித்தனும் வேதாளமும் – கத்தியை முன்வைத்து

முன்னொரு காலத்தில் விக்கிரமாதித்தன் என்றொரு அரசன் வாழ்ந்துவந்தான். தன் வாழ்நாளெல்லாம் வேதாளத்தைத் துரத்துவதே அவன் வேலை. அன்றும் அவன் துரத்தி அந்த வேதாளத்தைப் பிடித்து, தோளில் போட்டுக்கொண்டு நடந்தான்.

“என்ன விக்கிரமா பேசாமல் வருகிறாய்?” என்று வேதாளம் கேட்டது. விக்கிரமாதித்தன் பதில் சொல்லாமல் வந்தான். பதில் சொன்னால் அவன் மௌனம் கலைந்து வேதாளம் மரத்திற்கு போய்விடுமல்லவா.

வேதாளம் தன் வழக்கம்போல் கதை சொல்லத் தொடங்கியது.

“விக்கிரமா, முன்னொரு காலத்தில் கத்தி என்றொரு திரைப்படம் வெளிவந்தது. அது துப்பாக்கியின் வெற்றிக்குப் பிறகு ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் வெளி வந்து பெரிய வெற்றி பெற்றது. படத்தை லைக்கா என்றொரு ராஜபக்ஷேயின் பினாமி நிறுவனம் தயாரித்ததாகக் குற்றம் கூறியவர்கள், என்னவோ டீலுக்குப் பின்னர் அமைதியாகிப் போனார்கள் என்றொரு பேச்சும் உண்டு. படத்தில் விவசாயிகளின் பிரச்சினையைக் காட்டியதால் என்ன செய்வது என்று குழம்பிப்போன கம்யூனிஸ்ட்டுகளும் தமிழ்த் தேசியவாதிகளும் கள்ளமௌனம் சாதித்து மெல்ல நழுவிப் போனார்கள். கடைசியில் ராஜபக்ஷே மூலம்தான் தமிழ்நாட்டில் புரட்சி வரவேண்டியிருக்கிறது என்றெல்லாம் அன்றைய தமிழர்கள் பேசிக்கொண்டார்கள். 

அதில் ஒரு வரி கம்யூனிஸம் பற்றி வரும். மிக யதார்த்தமான காட்சி அது. கம்யூனிஸம் படித்துக்கொண்டு ஃபிலிம் காட்டும் யாருக்குமே கம்யூனிஸம் என்றால் என்னவென்று தெரியாது என்பதை தெளிவாகக் காண்பித்த காட்சி அது. ஆம், அந்த ஜீவானந்தமும் கம்யூனிஸம் என்றால் இட்லி சட்னி என்று விளக்கிய காட்சியைப் பார்த்து, இப்படி கிண்டலாவது செய்கிறார்களே என்று விரல்சூப்பிக்கொண்டு உத்சொ கொட்டியது கம்யூனிஸக் கூட்டம் என்பது வரலாறு.

அந்தப் படத்தைப் பற்றி பொதுவாக இப்படி கருத்து இருந்தது விக்கிரமா. படம் நன்று. குறிப்பாக விஜயின் நடிப்பு நன்றாக இருந்தது. ஷங்கருக்கு அடுத்தபடியாக ஷங்கரின் ஃபார்முலாவை வெற்றிகரமாகப் படமாக்கிய முருகதாஸ் பாராட்டுக்குரியவர்தான். சில காட்சிகளில் லாஜிக் ஓட்டை இருந்தாலும், படத்தின் வேகத்தில் அது தெரியவில்லை. இறுதிக்காட்சி சண்டை மட்டுமே தாங்கமுடியாததாக இருந்தது. இப்படி மக்கள் பேசிக்கொண்டார்கள். அது ஒருவகையில் சரிதான் விக்கிரமா.

ஆனால் விக்கிரமா நான் கேட்கப்போவது இதைப் பற்றி அல்ல. படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் விமர்சனம் எழுதித்தள்ளிய அன்றைய இணையவீரர்கள் யாருமே ஒன்றைக் கவனிக்கவில்லை.

மூன்று விவசாயிகள் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கிறார்கள். அப்போது அவர்களின் கைவிரல் ரேகையில் மையைப் பார்க்க ஓடி வருகிறார் விஜய். முதல் பிணம் ஹிந்துப் பிணம். யாரிடமும் கேட்காமல் உரிமையாக அவரே பிணத்தைத் திறந்து கைவிரலில் மை இருக்கிறதா என்று பார்க்கிறார். இரண்டாம் பிணம் இஸ்லாமியப் பிணம். அங்கே ஓடுகிறார் விஜய். பேஸ்த் அடித்து நின்றுவிடுகிறார் விக்கிரமா. ஆம். அங்கே இருக்கும் இஸ்லாமிய உறவினர்களிடம் அனுமதி கேட்டு கைவிரலைப் பார்க்கிறார். ஏன் விக்கிரமா இப்படி?

இதுமட்டுமல்ல. ஆறு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஹிந்து விவசாயிகள் சாகும்போது ஹிந்துமதம் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் இஸ்லாமிய விவசாயி சாகும்போது மதத்தைப் பற்றிக் குறிப்பிட்டுச் சாகிறார். ஹிந்து மதம் செத்துப் போவதற்குப் பெத்துப் போட்டதா விக்கிரமா?

இந்தக் கேள்விகளை யாரும் எழுப்பவில்லை. ஏன்? ஆனால் விக்கிரமா இதற்கான பதில் உனக்குத் தெரியும். ஆனால் இந்தமுறை நம் விளையாட்டில் ஒரு விதிமுறை மாற்றம் விக்கிரமா. உனக்குப் பதில் தெரியும் என்று எனக்குத் தெரியும். ஆனால் அந்தப் பதிலைச் சொன்னால் உன் தலைவெடித்துச் செத்துப் போவாய். நான் ஓடிப்போய் மரமேறிக் கொள்வேன். பதில் சொல்லாமல் கள்ளமௌனம் சாதித்தால் நான் உன்னுடன் வந்துவிடுவேன். உன் கோடானகோடி தேடல் முடிவுக்கு வரும் என்றான்.

நொடி யோசித்தான் விக்கிரமன். மெல்லப் புன்னகைத்தான். “வேதாளமே, என் தலைவெடித்தாலும் பரவாயில்லை. நான் பதில் சொல்லியே தீருவேன். இந்த நோயின் பெயர்…” என்று சொல்வதற்குள் அவன் தலை சுக்கு நூறாக வெடித்தது. வேதாளம் ஓடிப்போய் மரத்தின் மேலேறி அமர்ந்துகொண்டு லூசுப்பய என்றது.

Share