Archive for ஹரன் பிரசன்னா
சசிகலாவைப் பற்றிய மீம்ஸ்கள்
சுப்ரமணியம் சுவாமியின் சட்ட (சசிகலா) ஆதரவு
ரூபெல்லா தடுப்பூசியும் வாட்ஸப் முட்டாள்களும்
என் மகனும் மகளும் படிக்கும் பள்ளியில் இன்று ரூபெல்லா தடுப்பு ஊசி போடப்பட்டது. நான்கு நாள்களுக்கு முன்பே ஊசி போடச் சம்மதம் என்று ஒரு படிவத்தில் எழுதி வாங்கிக் கொண்டார்கள். நேற்று அழைத்து, இன்று ஊசி போட வரச் சொன்னார்கள். அழக்கூடாது மஹி என்று அவளை அழைத்துகொண்டு சென்றேன். சாக்லேட் வாங்கித் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டாள். அபிராமுக்கு இன்று ப்ரவீன் பூர்வார்த் பரிட்சை என்பதால் அவனுக்கு ஊசி போடவில்லை. அடுத்த முகாமில் போடவேண்டும்.
—
பள்ளியில் கூட்டமே இல்லை. நான் 8 வயதில் இருக்கும்போது காலரா தடுப்பூசி போட்டார்கள். அப்போதும் இதேபோல் ஒரு வதந்தி இருந்தது. காலரா ஊசி போட்டால் கண்ணு போகுதாம், காது போகுதாம், அதுவா டாம் டாம்னு வெடிக்குதாம் என்ற வதந்திகளை மீறி மக்கள் சாரை சாரையாக வந்து வரிசையில் நின்று போட்டுக்கொண்டார்கள். சேரன்மகாதேவியில் நாங்கள் குடி இருந்த தெருவில் எங்கள் வீட்டுக்கு எதிரே தெருவை அடைத்துப் பந்தல் போட்டு விழா போல நடந்தது. ஊர் நண்பர்கள் குழந்தைகளை அலேக்காகத் தூக்கிக் கொண்டு வந்து ஊசி போட்டார்கள். ஊசி போட்டால் ஆரஞ்சு மிட்டாய் தருவார்கள். காய்ச்சல் நிச்சயம் வரும் என்றார்கள். காய்ச்சல் வந்தால் 2 நாள் பள்ளிக்கு மட்டம் போடலாம் என்ற என் ஆசையில் மண் விழுந்தது. சரியாக எனக்கு மட்டும் காய்ச்சலே வரவில்லை. நம் வாழ்க்கையில் இப்படி ஒரு தோல்வியா என்று நான் துக்கித்துக் கிடந்தது நினைவில் இருக்கிறது. ஆனால் 40 வயது மாமாவுக்கும் அத்தைக்கும் கை வீங்கி அதற்கு தனியே மருத்துவம் பார்க்க ஹைகிரவுண்டு போனார்கள்.
இன்று வாட்ஸப் ஃபேஸ்புக் காலம். விவஸ்தையே இல்லாமல் புரளிகள் மட்டுமே உண்மை என்று சுற்றி வரும் காலம். எவ்வித யோசனையும் இன்றி, காசா பணமா என்று எல்லாவற்றையும் ஃபார்வெர்ட் செய்து பெருமை பீற்றிக்கொள்ளும் முட்டாள் கூட்டம். எதை அனுப்புகிறோம், அது உண்மையா பொய்யா என்றெல்லாம் எந்த யோசனையும் கிடையாது. மீம்ஸா அனுப்பு. செய்தியா அனுப்பு. எதையும் யோசிக்க நினைப்பதில்லை. யோசிக்க கொஞ்சம் மூளையும் அவசியம் என்பதால் இப்பிரச்சினை. இதில் உச்சம் என்னவென்றால், இதையே செய்தியாக நம்பி வெளியிடும் பத்திரிகைகளில் பொறுப்பற்ற மூடத்தனம். இதனால் இப்பிரச்சினை இன்னும் கூடுதல் சிக்கல் கொள்கிறது. இன்னும் அதிகம் பகிரப்படுகிறது. வாட்ஸப் மற்றும் ஃபேஸ்புக்கின் புரளிகளின் ஆதாரம், ரூபெல்லா தடுப்பூசிக்கு வந்திருக்கும் பயம்.
அரசு கரடியாகக் கத்தினாலும், புத்தி உள்ளவர்கள் இதன் தேவை பற்றிக் கதறினாலும், இவர்களின் செயல்பாட்டைவிட லட்சம் முறை அதிகம் பேசப்படுவது புரளிகளே. இந்த ஒட்டுமொத்த தடுப்பூசிகளினால் ஏற்படும் நன்மை என்ன, தேவை என்ன என்பதன் விவாதம் நிச்சயம் தேவைதான். ஆனால் அதை முன்னெடுக்கும் விதம், இதைப் போட்டால் உயிர் போய்விடும் என்ற ரீதியில் அல்ல. இதனால் பயந்துபோய் பலர், பெருவாரியானவர்கள் ஊசி போடவில்லை.
இன்று பள்ளியில் பேசிக்கொண்டிருந்தபோது, 40 பேர் உள்ள வகுப்பில் 5 பேர்தான் போடச் சம்மதித்திருக்கிறார்கள். பலருக்கு வாட்ஸப்பில் வந்த வதந்தியால் பயம். இவர்கள் புத்திசாலித்தனமான வாதமாகச் சொல்வது, “அது பொய்யாவே இருக்கட்டும். ஆனாலும் எதுக்கு ரிஸ்க்?” என்பது. இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை.
மிகச் சொற்ப அளவில் வந்திருந்த குழந்தைகளுக்கே இன்று ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டது. போட்டவுடன் ஒரு அறையில் அரை மணி நேரம் காத்திருக்கச் சொன்னார்கள். அப்வர்வேஷனில் இருக்கவேண்டும் என்றார்கள். இதெல்லாம் வாட்ஸப்பின் கைங்கர்யம்தான். அரை மணி நேரம் காத்திருந்துவிட்டு, நர்ஸுகளுக்கு நன்றி சொல்லிவிட்டு மஹியை அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டேன்.
—
“என்னப்பா வீட்டுக்கு போகாம எங்க போற?” என்றாள் மஹி. “சாக்லெட் வாங்க” என்றதும், அவள் சொன்னது. “என்னப்பா நீ. நெஜமாவே வாங்கித் தர! மிஸ்ஸெல்ல்லாம் நாங்க சேட்டை செஞ்சா டார்க் ரூம்ல போடுவோம்னு சொல்லுவாங்க. ஆனா போடவே மாட்டாங்க. எங்களுக்கெல்லாம் நல்லா தெரியும் அவங்க போடமாட்டாங்கன்னு. ஆனாலும் நாங்கள்லாம் அப்படியே பயந்து போய் அமைதி ஆயிடுவோம். நீ என்னடான்னா சாக்லெட் வாங்கித் தர!”
🙂
ஓபிஎஸ்ஸின் தியானம் அல்லது திடீர்ப் புரட்சி
அடுத்து என்ன?
எப்படியும் இன்று ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவார். அடுத்த பொதுத் தேர்தலுக்கு நான்கரை வருடங்கள் உள்ள நிலையில், இதே வேகத்தை மக்கள் மத்தியில் நீட்டித்து வைத்திருப்பது சாத்தியமே இல்லாதது. ஓபிஎஸ் பின்னால் ஒரு எம் எல் ஏ கூட வரமாட்டார் என்பதுவே இப்போதைய நிலை. ஒருவேளை ஒரு எம் எல் ஏ கூட வரவில்லை என்றால், ஓபிஎஸ் என்ன செய்வார் என்பதைவிட எதிர்க்கட்சிகள் அவரை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே முக்கியத்துவம் பெறும். ஏனென்றால் மக்கள் ஆதரவை நிரூபிக்க நான்கரை வருடங்கள் காத்திருக்கவேண்டும். நான்கரை வருடங்கள் என்பது அரசியலில் மிக நீண்ட காலம். ஜெயலலிதா மறைந்து இரண்டு மாதங்களில் என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்று பாருங்கள். அதுவே ஜெயலலிதா ஆண்ட ஐந்தரை ஆண்டுகளில் (ஜெயலலிதாவின் தனிப்பட்ட வழக்கு விவகாரங்கள் நீங்கலாக) இப்படி பரபரப்பாக பெரும்பாலும் எதுவும் இல்லை என்பதையும் யோசித்துப் பாருங்கள். அரசியல் உறுதித்தன்மை இல்லாதபோது சிறுநிகழ்வு கூட பெரிய உருவம் கொள்ளும். அதைத்தான் கட்சிகள் பயன்படுத்திக்கொள்ளும்.
ஒரு கட்சியின் வளர்ச்சி அக்கட்சியின் உள்ளார்ந்த வளர்ச்சியைப் பொருத்தது என்பதோடு, போட்டிக் கட்சியின் தாழ்விலும் அமையும். இன்னொரு கட்சியின் அழிவுக்கு நாங்கள் எதுவும் செய்யமாட்டோம் என்று வெளியில் பேசிக்கொண்டாலும், உள்ளே குழிப்பறி வேலைகள் நடந்தவண்ணம் இருக்கும். இதில் வெளிப்படைத்தன்மையுடன் உள்ள நேர்மையான செயல்களும், மோசமான நடவடிக்கைகளும் அடங்கும். அரசியல் இப்படித்தான்.
சசிகலா முதல்வராகப் பதவி ஏற்கும் பட்சத்தில், அவர் எப்படியும் ஆறு மாதத்துக்குள் ஒரு தொகுதியில் நின்று எம் எல் ஏவாக வென்றே ஆகவேண்டும். அத்தொகுதியில் ஓபிஎஸ் நிற்கவேண்டும். இது சசிகலாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தலாம். ஓபிஎஸ் மனதில் வேறு பெரிய எண்ணங்கள் இருக்குமானால், நல்ல ஒரு வேட்பாளரை நிற்கவைக்கலாம். ஒருவேளை ஓபிஎஸ் நின்று தோற்றுப் போனால், உடனடியாக அவரது அரசியல் வாழ்வு பின்னடைவு கொள்வதை இது தடுக்கலாம். வேறொரு வேட்பாளரை நிறுத்தும்போதோ அல்லது ஓபிஎஸ்ஸே நிற்கும்போதோ, திமுக தன் வேட்பாளரை நிறுத்தாமல், தன் ஆதரவை ஓபிஎஸ்ஸுக்கு அளிப்பதன்மூலம் சசிகலாவின் தோல்வியை உறுதி செய்யலாம். இதை ஸ்டாலின் செய்வது திமுகவுக்கும் ஒரு வகையில் நல்லது.
சசிகலாவின் தோல்வி அவரது முதலமைச்சர் கனவைத் தூளாக்குவதோடு, அதிமுகவின் வளர்ச்சிக்கும் பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தும். இது ஸ்டாலினின் உடனடி வளர்ச்சிக்கு நல்லது. திமுக வேட்பாளரை ஓபிஎஸ் ஆதரிக்கட்டும் என்று கருணாநிதி பாணியில் யோசிக்காமல், தன் சிறுநலனை விட்டுக்கொடுத்து பெரிய நலனில் அக்கறை கொள்வது ஸ்டாலினுக்கு நல்லது. இதனால் ஏற்படப்போகும் இன்னொரு நன்மை, ஓபிஎஸ்ஸின் திடீர்ப் புரட்சிக்குப் பின்னால் திமுக உள்ளது என்று சொன்னவர்கள் இதைக் கையில் எடுத்துக்கொள்வார்கள். இதனால் ஓபிஎஸ்ஸுக்கு ஒரு தர்ம சங்கடம் ஏற்படும். இன்னுமொரு நன்மை, தொடர்ச்சியாக ஸ்டாலினைச் சுற்றி நிகழும் அரசியல். இவற்றையெல்லாம் மனதில் வைத்து ஸ்டாலின் முடிவெடுக்கவேண்டும்.
இதில் ஒரு பின்னடைவு ஸ்டாலினுக்கு உள்ளது. திமுக போட்டியிடாத நிலையில், ஏதேனும் ஒரு கட்சி கொஞ்சம் அதிகம் செல்வாக்குடன் இரண்டாவது இடத்துக்கு வரும். இடைத்தேர்தல்தான் என்பதாலும் அடுத்து வரும் பொதுத்தேர்தலில் திமுக எளிதாக முதலாவதாகவோ இரண்டாவதாகவோ வரும் என்பதால் திமுக அல்லாத ஒரு கட்சி இரண்டாம் இடத்துக்கு வருவது மிகத் தற்காலிகமே என்பதாலும் இந்தச் சிறிய பின்னடைவை ஸ்டாலின் பொறுத்துக்கொள்ளலாம்.
இந்த உடனடி நன்மையைக் கணக்கில் கொண்டால் மட்டுமே ஓபிஎஸ் மூலம் கொஞ்சம் அறுவடையைத் தமிழ்நாடு பெறும். இல்லையென்றால் இந்தப் புரட்சி ஒருநாள் புரட்சியாக மட்டுமே வரலாற்றில் தேங்கிப் போகும்.
சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றால், இது எதுவுமே தேவை இல்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெறாவிட்டால், மேலே உள்ளதைத் தவிர வேறு வாய்ப்புகளை யோசிக்கமுடியவில்லை.
ரஜினியின் அரசியல் பிரவேசம்? (2017)
ரோலக்ஸ் வாட்ச்
அதே கண்கள்
அதே கண்கள் – முகில் நண்பர். தூத்துக்குடிக்காரர். எனவே கிட்டத்தட்ட திருநெல்வேலிக்காரர். 🙂 ஸ்க்ரிட்ப் கன்சல்டண்ட்டாக இந்தப் படத்தில் பணி புரிந்திருக்கிறார். தனிப்பட்ட வகைப் பழக்கத்தில் முகிலின் பலம் என்று நான் நினைப்பது – அவரது ஹ்யூமர். தன் பலத்தைத் திரைப்படத்தில் கொண்டு வருவது ஒரு கலை. கூடவே அதிர்ஷ்டமும் வேண்டும். அதே கண்கள் படத்தில் முகிலுக்கு இந்த இரண்டும் சரியாக வாய்த்திருக்கின்றன. இந்த அணிக்கு என் வாழ்த்துகள்.
அதே கண்கள் – த்ரில்லர் வகை திரைப்படம். ஆஹோ ஒஹோ என்று புகழ்த்தக்க ஒரு படமல்ல. அதே சமயம் முற்றிலும் புறக்கணிக்கத்தக்க ஒரு படமும் அல்ல. தன் எல்லைகளைப் புரிந்துகொண்டு எடுக்கப்பட்ட ஒரு படம்.
அதே சமயம் ஏன் இத்திரைப்படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கவில்லை என்று யோசித்தால் –
* நடிகர்கள் தேர்வு முதல் சொதப்பல். கலையரசனால் ஒரு அளவுக்கு மேல் படத்தைத் தூக்கிக்கொண்டு போகமுடியவில்லை. மதயானைக்கூட்டம், மெட்ராஸ் படங்களில் சிறப்பாக நடித்தவர் இவர். ஆனால் முழுப்படத்தையும் தன் தோளில் சுமக்க இவரால் முடியவில்லை.
* படத்தில் ஏமாற்றும் பெண்ணாக வரும் நடிகையின் நடிப்பு அமெச்சூர் ரகம். நகைக்கடையில் அவர் அவமானப்படுத்தப்படும் ஒரு காட்சியில் மட்டும் அத்தனை யதார்த்தம். மிடுக்குடன் வரவேண்டிய மற்ற காட்சிகளில் எல்லாம் ரொம்ப சுமாராகவே நடித்திருந்தார். ஒரு பலமான நடிகை நடித்திருக்கவேண்டும். பச்சைக்கிளி முத்துச்சரம் ஜோதிகா போல.
* மிகவும் கணிக்கத்தக்க கதை மற்றும் திரைக்கதை. அதிலும் யார் கொலைகாரர் என்ற தெரிந்த பின்பும் நீளும் திரைக்கதை.
* பார்வையற்றவர்கள் தொடர்பாக வரும் கதைக்குள் வருவதற்கு, ஹீரோவுக்கு பார்வை இல்லாமல் இருப்பதும், மீண்டும் பார்வை வருவதும் என அலைபாயும் முதல் அரை மணி நேரக் காட்சிகள்.
* மிக மோசமான இசை, ஒளிப்பதிவு.
* மிக நீளமான ஒரே மாதிரியான காட்சிகள்.
இந்த அத்தனை அலுப்பையும் தன்னந்தனியாளாகப் போக்குகிறார் பால சரவணன். இவர் வந்ததும்தான் இறுக்கம் தளர்ந்தது. ஏன் அத்தனை நேரம் இறுக்கமாக இருந்தோம் என்பது பதிலற்ற கேள்வி! பால சரவணனின் மேனரிஸத்துக்கேற்ற வசனங்கள். இந்த வசனங்களில் முகிலின் பங்களிப்பு எப்படி இருந்திருக்கும் என்பதை யூகிக்கமுடிகிறது. மலையாளத்தில் ரீமேக் செய்தால் சூப்பர் ஹிட்டாகும் என்று படம் பார்க்கும்போது தோன்றியது. இங்கேயும் இத்திரைப்படம் பரவலாக பாஸிட்டிவ் பாராட்டுகளைப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. திரைத்துறையில் முகில் வெற்றி பெறவும் அழுத்தமான தடம் பதிக்கவும் வாழ்த்துகள்.