Archive for ஹரன் பிரசன்னா

எல்லை

துபாயிலிருந்து மஸ்கட்டிற்குச் சாலைவழியே செல்லும் பயணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம். நானும் என்னுடன் ஒரு குஜராத்தியும் தேவையான எல்லாப் பொருள்களும் இருக்கின்றனவா என்று மீண்டும் ஒருமுறை பரிசோதித்து உறுதிப்படுத்திக்கொண்டு Lab-ல் எங்களுடன் வேலைபார்க்கும் சக நண்பர்களுக்கு பை சொல்லிவிட்டுக் கிளம்பத்தயாரானோம். என் மேலாளர் என்னை அவர் அறைக்கு அழைத்தார்.

என்னுடன் வரும் குஜராத்தியின் மீது எப்போதும் ஒரு கவனம் வேண்டுமென்றும் அவன் வேலையை ஒழுங்காகச் செய்யமாட்டான்; நீதான் அறிவுறுத்த வேண்டும் என்று சொன்னார். குஜராத்திக்கு சாதாரண வேலை நேரத்தில் வேலை செய்யவே பிடிக்காது. எந்தவொரு வேலையையும் இழுத்து இழுத்து, அதிக வேலை நேரத்தில் (Over Time) முடிப்பதே அவனது இஷ்டம், கொள்கை எல்லாம். அதிகவேலை நேரமில்லாத சம்பளத்தை அவன் வாழ்நாளில் பார்த்ததே இல்லை.

முன்பொருமுறை வேலை குறைவாக இருந்த சமயத்தில் சக நண்பர்கள் அரட்டை அடித்துக்கொண்டிருந்தபோது ஒவ்வொருத்தருடைய சர்வீஸ் எத்தனை வருடம் என்ற கேள்வி வந்தது. எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள். குஜராத்தியின் முறை வரும்போது “ஆறு வருடம்” என்றான். இதைக்கேட்ட பாகிஸ்தானி இடைமறித்து, “கமான். எப்படி ஆறு வருஷம் ஆகும்? 9 வருஷம் இல்லையா? ஆறுவருஷம் சர்வீஸ், மூணு வருஷம் OT” என்றான்.

மேலாளர் “குஜராத்தி எப்போதும் அதிக வேலைநேரத்திலேயே கண்ணாக இருப்பான்; நேரத்தில் வேலையை முடிக்கமாட்டான்; கவனம்” என்று சொன்னார். “சரி” என்றேன். ஏதோ யோசித்தவர் “எல்லா குஜராத்திகளுமே இப்படித்தான்” என்றார்.

அலுவலகத் திட்டம் படி எங்கள் வேலை தொடங்கியதென்னவோ நிஜம்தான். ஆனால் அலுவலகத்திலிருந்து என்னை காரில் அள்ளிக்கொண்டு புறப்பட்ட குஜராத்தி எனது அறையில் விட்டுவிட்டு காத்திருக்குமாறு சொல்லிவிட்டுப் போய்விட்டான். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்து வந்தான். அன்றைய கணக்கின்படி வேலை ஆரம்பிக்காமலேயே மூன்று மணிநேரம் அதிகவேலை நேரம் சேர்த்தாகிவிட்டது. மீட்டர் ஓட ஆரம்பித்தாகிவிட்டது. அதே அளவு அதிகவேலைநேரம் எனக்கும் வரும்! “மன்மதலீலை” மேலாளர் நிலைமை எனக்கு. ஒன்றும் சொல்ல இயலவில்லை.

ஒருவழியாகப் பயணம் தொடங்கியது.

குஜராத்தி அவனது இன்னல்களை, அவன் வாழ்வில் பட்ட கஷ்டங்களை, பணியைத் தெய்வமாக மதிக்கும் அவனது பழக்கத்தை, ஒரு வேலையை எத்தனைச் சீக்கிரம் முடியுமோ அத்தனைச் சீக்கிரம் முடிப்பதே அவனது இலட்சியம் என்பதை எத்தனையாவது முறையாகவோ என்னிடம் சொன்னான். நான் வேலைக்குச் சேர்ந்த பொழுதில் அவன் முதல்முறை இதைச் சொன்னபோது அவன் பக்கம் நியாயம் இருக்கிறதென நினைத்தேன். அவன் சொல்லும் லாகவமும் உணர்ச்சிவசப்பட்டு அடிக்கொருதடவை தெய்வத்தைத் துணைக்கழைத்து ‘தான் தவறு செய்தால் ஸ்வாமி நாராயண் சும்மா விடமாட்டார்’ என்றெல்லாம் சொல்லும்போது கேட்பவர் யாருமே அவன் பக்கம் சாய்வார்கள். ஆனால் எனக்குப் பழகிவிட்டது. அவனது முழுமுதல் நோக்கமே “மீட்டரை” ஓட்டுவதே!

துபாய்-ஹட்டா எல்லையில் பலப்பல புதுவிதிகள். நாங்கள் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டோம். வெயில் கருணையில்லாமல் 50 டிகிரி செல்ஷியஷில் காய்ந்தது. பாலைவன அனல்காற்றில் மூக்கு எரிந்தது. ஆனால் அதைப் பற்றிய பிரக்ஞையோ கவலையோ குஜராத்திக்கு இருக்கவில்லை. அவனது மீட்டர் ஓடிக்கொண்டிருக்கிறதே!

ஆங்கிலம் என்றாலே எத்தனைக் கிலோ என்று கேட்கும் அராபிகளின் கூட்டத்தில் எங்கள் வேலைக்கான உபகரணங்களைக் (Instruments for Stack emission) காட்டி அவர்களைப் புரியவைப்பதற்குள் குஜராத்திக்கு இன்னொரு ஒரு மணிநேரம் மீட்டர் ஏறிவிட்டிருந்தது. அதே ஒருமணிநேரம் எனது மீட்டரிலும் ஏறும். புகைபோக்கிக்குள் இருக்கும் வாயுவின் திசைவேகத்தைக் காண உதவும் பிடாட் ட்யூபின் [pitot tube] வடிவம் கிட்டத்தட்ட ஒரு ஆயுதம் மாதிரி நீளமான கம்பி போல இருக்கும். அராபிகள் எங்களைச் சந்தேகப்பிரிவில் வைப்பதற்கு அது ஒன்று மட்டுமே
போதுமானதாக இருந்தது.

வளைகுடாவின் பல அரசுடைமை கம்பெனிகளில் காவலாளிகளாகப் [security] பெரும்பாலும் அராபியர்கள்தான் இருப்பார்கள். மருந்துக்கும் ஆங்கிலம் தெரியாது. “மலையாளம் கூடத் தெரியாது!” என்பதும் இங்கே சொல்லப்படவேண்டியதே.

அராபிகளுக்குப் புரியவைக்க “ஹவா காட்சிங் (காற்றுப் பிடிக்க!)” என்று குஜராத்தி சொல்லியதும் கிட்டத்தட்ட அலறினார்கள். அராபி தெரியாதா என்று அவர்கள் கேட்க, “நான் அராபிதான் பேசினேன்” என்று சொல்ல வாயெடுத்த குஜராத்தியை ஓரம்கட்டிவிட்டு, “மா·பி அராபி, உங்களுக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று பதிலுக்குக் கேட்டேன். அவர்கள் “மா·பி இங்கிலீஷ்” என்றார்கள். குஜராத்தியின் மீட்டர் ஓடிக்கொண்டே இருந்தது.

ஒருவழியாக எல்லையைக் கடந்தோம்.

குஜராத்தி ஆரம்பித்தான். அராபிகள் எல்லாருமே முட்டாள்கள் என்றான். நான் ஆமோதித்தேன். இந்தியர்களே புத்திசாலிகள் என்றான். ஆமோதித்தேன். இந்தியர்கள் இல்லாமல் இந்தப் பாலைவனம் சொர்க்கபூமியாக மாறியிருக்குமா என்றான். பாகிஸ்தானிகளையும், இலங்கைக்காரர்களையும், பங்களாதேசிகளையும் பிலிப்பைன்ஸையும் விட்டுவிட்டாயே என்றேன். ஏதோ போனால் போகட்டும் என்று எனக்காக ஒப்புக்கொண்டான். “ஸ்ரீலங்கா தமிழ்-தமிழ் சேம்-சேம் சானல்?” என்றான். சிரித்தேன்.

வண்டி 130கி.மீ. வேகத்தில் எகிறிக்கொண்டிருந்தது. எல்லையிலிருந்து சோஹாரை 35 நிமிடத்தில்
அடைந்துவிட்டிருந்தோம். குஜராத்தியின் வண்டி ஒடிக்கும்வேகம் எனக்குப் புதுமையாக இருந்தது. மீட்டரில் ஒரு அரைமணி நேரத்தை எப்படிக் குறைக்க அவனுக்கு மனம் வந்தது என்பது பிடிபடவேயில்லை. அப்போதுதான் தெரிந்தது, சோஹாரில் ஒரு குஜராத்தியின் கடையில் மதிய உணவு அருந்த வருவதாக நேரம் குறித்துவைத்திருக்கிறான் என்று. குஜராத்திகளின் கணக்கு மற்றவர்களின் கற்பனைக்கு எட்டாததாக இருக்கும் என்று பாகிஸ்தானி சொன்ன நினைவு வந்தது.

குஜராத்தி எந்தவொரு வேகமும் இல்லாமல் மெதுவாக உணவை இரசித்து உண்டான். ரெஸ்டாரண்ட் உரிமையாளருடன் அரைமணி நேரம் குஜராத்தியில் பேசிக்கொண்டிருந்தான். கடையின் சிப்பந்தி ஒருவர் தமிழர். அவரும் நானும் கொஞ்ச நேரம் கதைத்துக்கொண்டிருந்தோம். அவர் எனக்காக சிறிதுநேரம் ஜெயா டிவி வைத்தார். குஜராத்தியின்
மீட்டரும் எனது மீட்டரும் ஒரு மணிநேரத்தை மேலும் ஏற்றிக்கொண்டது.

சோஹாரிலிருந்து மஸ்கட் கிளம்பினோம். இடையில் இரண்டு இடங்களில் காரை நிறுத்திச் சிறிது தூங்கினான் குஜராத்தி. மஸ்கட் கேரி·போர் [carre four] சென்று அங்கு ஒரு அரை மணிநேரம் கழித்தோம். ஒருவழியாக நாங்கள் சேரவேண்டிய நிஸ்வாவை (மஸ்கட்டிலிருந்து 184 கி.மீ.) அடைந்தபோது எங்கள் மீட்டரில் கிட்டத்தட்ட 10 மணிநேரம் ஏறிவிட்டிருந்தது. குஜராத்தி மிகவும் சந்தோஷப்பட்டான். ஸ்வாமி நாராயண்-க்கு நன்றி சொல்லிக்கொண்டான்.

நாங்கள் வேலைக்குச் சென்றிருந்த கம்பெனி ஒதுக்கியிருந்த ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இளைப்பாறினோம். மறுநாள் காலையில் வேலைக்குத் தயாரானோம். காலையில் 8.00 மணிக்கு கம்பெனியில் இருக்கவேண்டும். அதில் மீட்டரில் ஏற்ற ஒன்றும் வாய்ப்பில்லை என்று குஜராத்திக்குத் தெரியும். 7.30க்கெல்லாம் தயாராகி ஒரு சேட்டன் கடையில் புரோட்டாவும் சாயாவும் சாப்பிட்டுவிட்டு காரில் கிளம்பினோம். காரை இயக்கினான் குஜராத்தி. திடீரென்று ஏதோ நினைத்தவன், ஒரு நிமிடம் ஒரு ·போன் செய்துவிட்டு வருகிறேன் என்று சாவியை காரிலேயே வைத்துவிட்டுக் கீழே இறங்கிப் போனான். மூன்று நிமிடங்கள் பேசியிருப்பான். காருக்குள் இருக்கும் என்னை சைகையால் அழைத்தான். காரை விட்டு இறங்கி வந்து நானும் பேசினேன். மேலாளரிடம் எங்கள் பயணத்தைப் பற்றிச் சொல்வதற்காக அவரை அழைத்திருக்கிறான் குஜராத்தி. பேசி முடித்துவிட்டு மீண்டும் காருக்குள் ஏறச் செல்லும்போது காத்திருந்தது ஒரு அதிர்ச்சி.

இறங்கும்போது கண்ணாடிகளை ஏற்றிவிட்டு வெளியிலிருந்து திறக்கமுடியாதவாறு நான் அடைத்திருக்கிறேன். வண்டியின் சாவி காருக்குள். குஜராத்தி செம டென்ஷன் ஆகிவிட்டான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இன்னும் அரைமணி நேரத்தில் கம்பெனியில் இருக்கவேண்டும். புலம்பிக்கொண்டே குஜராத்தி அங்குமிங்கும் ஓடினான். டீக்கடைச் சேட்டன் போலீஸ¤க்குச் சொல்வதே நல்லது என்றான்.

நான் தொலைபேசியில் மஸ்கட்டில் இருக்கும் அத்தைப் பையனைக் கூப்பிட்டேன். போலீஸ¤க்குப் போ என்றான். அது எனக்குத் தெரியும் என்று சொல்லி ·போனைத் துண்டித்தேன். துண்டிக்கும்போது “கல்லுப்பட்டிக்காரங்க கிட்ட கேட்டா இப்படித்தான், ஒண்ணத்துக்கும் ஆவாத பதிலே வரும்” என்றேன்.

அதற்குள் குஜராத்தி ஒரு ஓமானியைக் கூட்டிக்கொண்டு வந்தான். ஓமானி கையில் ஒரு ஸ்க்ரூ ட்ரைவரும், நெம்புக் கம்பியும் வைத்திருந்தான். இரண்டு நிமிடங்களில் கதவைத் திறந்தான். ஸ்க்ரூ ட்ரைவரை வைத்துக் கதவை லேசாக நெம்பிக்கொண்டு, கம்பியை உள்ளே நுழைத்து லாக்கை எடுத்துவிட்டான். கதவு திறந்துகொண்டது. எனக்கும் குஜராத்திக்கும் உயிர் வந்தது. அவனுக்கு ஐந்து ரியால் கொடுத்தோம். நிஜச்சாவி இருந்தால் கூட இத்தனைச் சீக்கிரம் திறந்திருக்க முடியாது என்று அவனை வாழ்த்தினேன். குஜராத்தி “இப்ப பேசு” என்றான். ஓமானியிடம் திரும்பி நன்றி சொல்லி அவனை அணைத்துக்கொண்டான்.

மீண்டும் அத்தைப் பையனைக் கூப்பிட்டேன். கதவைத் திறந்த விஷயத்தைச் சொன்னேன். போலீஸ¤க்குப் போவதே நேரான வழியென்றும் அதைத்தான் தான் சொன்னதாகவும் சொன்னான். இப்படி பல ஓமானிகள் ஐந்து நிமிடத்தில் திறந்துவிடுவதாகவும் மீண்டும் காரை அதே இடத்தில் நிறுத்தவேண்டாம் என்றும் சொன்னான். கடைசியாக “ஓமானிகள் என்ன வேணா செய்வாங்க” என்றான்.

குஜராத்தியிடம் என் அத்தைப்பையன் சொன்னதைச் சொன்னேன். “ஆஹாம்! தமிழ் புத்திசாலிகள்” என்று சொல்லிவிட்டு “இனிமேல் காரை அங்கே நிறுத்தக்கூடாது” என்றான். காலை நேரத்தில் வந்து உதவிவிட்டுப் போன ஓமானிக்கு இது தேவைதான்.

ஐந்து நாள்கள் வேலை. மலையாளிகள் என்றாலே மோசம் என்று தினமும் இரண்டு முறையாவது சொல்வான் குஜராத்தி. அந்தக் கம்பெனியில் இருக்கும் இரண்டு மலையாளிகள் மிக நல்லவர்களாக இருந்தார்கள் என்பதைக் குஜராத்தியால் ஏற்கவே முடியவில்லை. மலையாளிகளை நம்பவேமுடியாது, முன்னாடி ஒன்று பேசி பின்னால் ஒன்று பேசுவார்கள் என்றான். குஜராத்திகளை நம்பாதே என்று என் மேலாளர் மலையாளி சொன்னது நினைவுக்கு வந்தது. குஜராத்தி “தமிழர்கள் அச்சா” என்றான். எல்லாவற்றையும் ஆமோதித்துக்கொண்டே இருந்தேன். அவனிமிருந்து தப்பிக்க அதுவே வழி. இல்லையென்றால் கையிலிருக்கும் நாவல்களைப் படிக்க நேரமிருக்காது. அதுபோக ஒன்றிரண்டு கவிதைகளாவது எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன்.

ஐந்து நாள் வேலையை முடித்துக்கொண்டு மஸ்கட்டில் அத்தைப்பையனைச் சந்தித்துவிட்டு மீண்டும் துபாய் திரும்பினோம். குஜராத்தி அதிகவேலை நேரம் எத்தனை என்று கணக்கிடச் சொன்னான். ஐந்து நாள்களில் 44 மணிநேரம் அதிக வேலை நேரம் வந்திருந்தது. இன்னும் ஒரு ஆறு மணி நேரம் கூட்டவேண்டும் என்றான் குஜராத்தி.

மேலாளர் பற்றிப் பேச்சுத் திரும்பியது. மீண்டும் மலையாளிகள் புராணம் ஆரம்பித்தான். தமிழர்களை வாயார வாழ்த்தினான். நேரம் கிடைக்கும்போது மலையாளிகளிடத்தில் “தமிழர்கள் ரூட்[rude]. கர்வம் அதிகமிக்கவர்கள்” என்று அவன் சொன்ன விஷயங்கள் என் காதுக்குப் பலமுறை எட்டியிருந்ததை அவன் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் அவன் சொல்வதை ஆமோதிக்கத் தயங்கவில்லை. இல்லையென்றால் பெரிய பெரிய கதைகளை ஆரம்பித்துவிடுவான். என்னால் பொறுக்க இயலாது.

மீண்டும் ஹட்டா – துபாய் எல்லையை அடைந்தோம். விசா எக்ஸிட் அடிக்க வரிசையில் நின்றிருந்தோம். எங்கள் வரிசையில் எங்களுக்குப் பின் நின்றிருந்த ஒரு அமெரிக்கன் வரிசையைப் புறக்கணித்துவிட்டு, முன்னுக்கு வந்து, எக்ஸிட் வாங்கிப்போனான். காத்திருந்த குஜராத்தி புலம்பத் தொடங்கிவிட்டான். இந்த அநியாயத்தை அராபிகள் கேட்பதே இல்லை; ஐரோப்பியர்கள் என்றால் அவர்களுக்குத் தனிச்சலுகைதான் என்றான். அடுத்த வரியாக, ஐரோப்பியர்களுக்குத் தங்கள் மனதில் தங்களைப் பற்றி எப்போதுமே உயர்ந்த எண்ணம்தான், எல்லா ஐரோப்பியர்களுமே இப்படித்தான் என்றான். நான் ஆமாம் என்றேன்.

நாங்கள் வேலைக்காகக் கொண்டு போயிருந்த உபகரணங்களைச் சோதிக்க ஆரம்பித்தான் அராபி ஒருவன். நிறையக் கேள்விகள் கேட்டான். எல்லாமே அராபியில் இருந்தன. எங்களால் பதில் அளிக்கவே முடியவில்லை. குஜராத்தி சிரித்துச் சிரித்து மழுப்பினான். அப்போது குஜராத்தியைப் பார்க்கவே வேடிக்கையாக இருந்தது. நான் ஆங்கிலத்தில் பதில் சொல்லத் தொடங்கும்போதெல்லாம் அராபி “மா·பி இங்கிலீஷ்” என்று சொல்லி என்னை ஒரேடியாக நிராகரித்தான். ஒரு நிலைக்கு மேல் குஜராத்திக்குக் கோபம் வந்துவிட்டது. கொஞ்சம் சூடாகிவிட்டான். ஆங்கிலத்தில் அவன் படபடக்க ஆரம்பிக்க, அந்தக் கட்டத்தில் இருந்த மற்ற அராபிகள் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். எல்லோரும் சேர்ந்து குஜராத்தியை வறுத்தெடுத்து, கடைசித் தீர்ப்பாக “எல்லா இந்தியர்களுமே இப்படித்தான். பொறுமையில்லாதவர்கள். மேலும் இந்தியர்கள் கரப்பான்பூச்சிகள்” என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு மேல் எங்களால் ஒன்றும் பேச இயலவில்லை. அமைதியாக இருந்துவிட்டு, பல விளக்கங்களுக்குப் பின் விசா – எக்ஸிட் வாங்கிக்கொண்டு காரைக் கிளப்பினோம்.

எனது எண்ணம் முழுவதும்

* யார் யார் எப்படி? இப்படி ஒரு இனத்தை வரையறுக்க இயலுமா?

* பொதுவான ஒரு கருத்து எல்லாத் தனிமனிதர்களுக்கும் பொருந்துமா? எல்லாத் தனிமனிதர்களும் அவரவர்கள் அளவில் வேறல்லவா? பின் எப்படிப் பொதுப்படுத்த?

* ஒரு ஐரோப்பியன் போல் குணமுள்ள தமிழனோ ஒரு குஜராத்தி போல் குணமுள்ள மலையாளியோ இருந்தே தீர்வார்கள் அல்லவா?

* ஒரு இந்தியன் போன்ற அமெரிக்கனின் பொறுமைக்கு என்ன பெயர்? ஒரு அமெரிக்கத்தனம் கொண்ட இந்தியத் தன்னுணர்வுக்கு என்ன பெயர்?

என்பதிலேயே இருந்தது.

குஜராத்தி வண்டியை ஓரமாக நிழலில் நிறுத்திவிட்டு, “ஹே ஸ்வாமி நாராயண்” என்று மறக்காமல் சொல்லிவிட்டு, அரை மணி நேரம் தூங்கப்போவதாக என்னிடம் சொன்னான். அவனது மீட்டர் ஓடத்தொடங்கியது. அந்த மீட்டரில் எனக்கும் பங்குண்டு.

துபாய் – மஸ்கட்டின் எல்லை என்று சொல்லப்படும் ஒன்றை இன்னும் சிறிது நேரத்தில் கடப்போம்.

Share

சுவர்கள் : சில குறிப்புகள் – கவிதை

[முன்குறிப்பு:

ஒரே சுவர் பிரித்தாலும்

எம் வீட்டின் சுவர் ஆகாது உம் வீட்டின் சுவர்]

எதிர்வீட்டின் வெளிச்சுவரில் பம்பரம் சின்னம்

முனியம்மா வீட்டுச் சுவர் காரைகள் உதிர்ந்து

என் வீட்டுச் சுவரில்

கண்ணீர் விட்டுக்கொண்டு படபடக்கும் போஸ்டர்

(குணசேகர பாண்டியன் செத்துப்போனது பற்றி பிறிதொரு சமயம்)

சில சுவர்களில் கோலியின் புள்ளித் தடங்கள்

இன்னும் சில சுவர்கள்

மழை வெயிலில் பட்டு நீலம் வெளுத்துப்போய்

பாம்புகளும் பல்லிகளும் ஊர்ந்த தடங்களை

சுவர்கள் மறைத்துவிடுகின்றன

வீட்டுக்குள் நடப்பதை உலகிலிருந்து பிரிப்பது போலவே

தெருக்களின் ரேகைகளாக நிற்கும் சுவர்கள்

ஒருவகையில் நம்மை மட்டுப்படுத்துகின்றன

கொஞ்சம் உற்று நோக்குங்கள்,

உங்கள் தெருவில் கிடக்கும் சுவர்கள்

ஒரு கணத்தில் முகிழும் முப்பரிமாணப் பிம்பம் போல

நவீன ஓவியங்களாய் கிடக்கலாம்

எம் தெருக்கள்

சில சமயம்

ஆகலாம் உம் தெருக்கள்

Share

தமிழ்மணம்

http://www.thamizmanam.com/

காசியின் முயற்சிக்குப் பாராட்டுகள். இதுவரை வலைப்பதிவுகளில் ஒவ்வொன்றாகச் சென்று பார்க்கவேண்டியிருந்தது. இனி அப்படியில்லாமல் தமிழ்மணத்திலேயே பார்த்துக்கொள்ளமுடியும். பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை புதிதாக வந்த உள்ளிடுகைகளைச் சேகரிக்கிறது தமிழ்மணம். இதுவரை பார்க்காத வலைப்பதிவுகளையெல்லாம் இன்றுதான் பார்வையிட்டேன். தலைப்பிலிருந்து அதைப் பற்றி வாசிக்கவேண்டுமா வேண்டாமா என்று இனி தீர்மானித்துவிடலாம். ஒவ்வொரு வலைப்பதிவையும் ஓடையில் சேர்த்துப் பார்க்கலாம்தான். ஆனால் காசியின் தமிழ்மணம் ஒவ்வொரு வலைப்பதிவாக ஓடையில் சேர்க்கும் பணியைக் குறைக்கிறது.

காசிக்கு நன்றி பல.

மரத்தடியில் அவர் உள்ளிட்ட மடல் உங்கள் பார்வைக்கு.

==============================================================

அன்புள்ள நண்பர்களே,

வணக்கம்.

தமிழ் வலைப்பதிவுகள் எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் பாலமாக இருக்கும்படி ‘தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம்’ என்ற பெயரில் ஒரு மேடைத்தளம் (வெப்போர்ட்டல்) அமைத்துள்ளேன்.

அதன் முகவரி:

http://www.thamizmanam.com/

இயங்கும் வலைப்பக்கங்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கம் கீழ்க்கண்ட வசதிகளைப் பெற்றிருக்கிறது.

வலைப்பதிவுகளுக்குப் புதியவர்களுக்கு:

– வலைப்பதிவுகளைப் பற்றிய சிறு அறிமுகத்தோடு, முழு வலைப்பதிவர் பட்டியலும் காணக்கிடைக்கிறது

– இந்தப் பட்டியல் உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுதும் வலைப்பதிவர்களை பெயரின் முதலெழுத்து வாரியாகவோ, தொடங்கிய தேதி வாரியாகவோ, வசிப்பிடம் வாரியாகவோ தேர்ந்தெடுத்து வாசிக்கவும் முடிகிறது.

வழக்கமான வலைப்பதிவு வாசகருக்கு:

கூடுதலாக

– புதிதாக வலைப்பதிவுகளில் எழுதப்பட்டவற்றின் தலைப்பும் சாரமும் 15 நிமிடத்துக்கு ஒருமுறை திரட்டப்பட்டு காட்டப்படுகின்றன. இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட வலைப்பதிவுகளுக்கு ஒருவர் தேடிப்போய் புதிதாக எதுவும் எழுதப்பட்டுள்ளனவா என்று தேடுவது தவிர்க்கப்படுகிறது.

– தங்கள் செய்தியோடை படிப்பான்களிலேயே வாசிக்க விருப்பமிருப்பவ்ர்களுக்காக செய்தியோடைத் தொகுப்பும் (OPML file ofNewsfeeds) பதிவிறக்கம் செய்துகொள்ளக்கிடைக்கிறது.

வலைப்பதிவு தொடங்க விருப்பமிருப்பவர்களுக்கும், ஏற்கனவே செய்துகொண்டிருப்பவர்களுக்கும்:

– வலைப்பதிவு தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எளிய ஐயங்களைத் தீர்க்க ஏதுவாகும் சில கட்டுரைகளின் தொடுப்புக்கள் காட்டப்படுகின்றன. (இது இன்னும் முழுமையாக அமைக்கப்படவில்லை)

– வலைப்பதிவு தொடங்கியவர் தன் வலைப்பதிவின் விபரங்களைப் பட்டியலில் உடனடியாக சேர்க்கும் வசதி

– பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட வலைப்பதிவின் செய்தியோடை முகவரி உடனடியாக செய்தியோடைத் தொகுப்பில் ஏற்றப்படுகிறது. எனவே திரட்டியின் மூலம் காட்டப்படும் ‘புதிதாக

எழுதப்பட்ட விஷயங்கள்’ பட்டியலில் இந்தப் புதிய பதிவும் இடம் பெறுகிறது. இதன் மூலம் ஒரு புதிய வலைப்பதிவர் உடனடியாக ஒரு வாசகர் வட்டத்தைப் பெறுகிறார்.

இதுபோக ஒவ்வொரு நிலையிலும் (விருந்தினர், வாசகர், வலைப்பதிவர்) இருப்பவர்களுக்குப் பொருத்தமான தொடுப்புகள் அங்கங்கே காட்டப்படுகின்றன.

எந்த மனித ஈடுபாடும் இன்றி இவை அனைத்தும் தானியங்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருப்பதால், பிழையின்றி, ஓய்வின்றி இந்தத் தளம் இயங்கிக்கொண்டிருக்கும்.

இத்தகைய புதிய முயற்சிகளில் ஆர்வம் உள்ளவர் என்ற முறையில் இந்தத் தளத்தை பயன்படுத்திக்கொள்ளவும், பொருத்தமானவர்களுக்கு சுட்டிக்காட்டவும் உங்களை வேண்டிக்கொள்கிறேன்.

இது பற்றி மேலும் கேள்விகள்/கருத்துக்கள்/ஆலோசனைகளை எனக்கு எழுதவும் கேட்டுக்கொள்கிறேன்.

மிக்க நன்றி.

அன்புடன்,

-காசி ஆறுமுகம்

============================================================

Share

English titles Vs Tamil films

சேரன் தனது அடுத்த படுத்திற்கு “டூரிங் டாக்கீஸ்” என்று பெயர் வைத்திருக்கிறார். சட்டென்று மனதில் நிற்கும் பெயர்தான். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சேரன் துபாய் வந்திருந்தபோது “ஆட்டோகிரா·ப்” என்கிற பெயரை ஏற்கனவே வைத்துவிட்டதாகவும் துபாய் வந்து தூய தமிழில் பேசிக்கொள்ளும் ஆசி·ப் உள்ளிட்ட நண்பர்களைச் சந்தித்தித்திருந்தால் அப்படி ஆங்கிலத்தில் பெயர் வைப்பதைத் தவிர்த்திருப்பாரெனவும் சொன்னதாகத் தெரிகிறது. (மரத்தடியில் முன்பு ஆசி·ப்உள்ளிட்ட மடல் இப்படிச் சொல்கிறது). இப்போது எடுக்கப்போகும் படத்திற்கும் “டூரிங்டாக்கீஸ்” என்று ஆங்கிலத்தில்தான் பெயர் வைத்திருக்கிறார்.

தமிழ்ப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர்களை வைப்பது தவறு என்று பா.ம.க. உள்ளிட்ட பலஅமைப்புகள் கண்டனம் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. வணிக ரீதியில் எடுக்கப்படும் படங்கள் எல்லா வகையிலும் மக்களைக் கவர்வதையே முக்கியக் குறிக்கோளாகக் கொள்ளும். அப்போது படங்களின் பெயர்களைத் தமிழில் வைக்கவேண்டும் என்றோ தமிழில் வைக்கக்கூடாது என்றோ யோசிக்கமாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. எந்தப் பெயர் பொருத்தமானதாகவும் சட்டென்று கவரக்கூடியதாகவும் இருக்குமோ அதை வைக்கிறார்கள்.

எச்சூழ்நிலையிலும் தமிழில் மட்டுமே பெயர் வைப்போம் என்கிறவர்களை மெச்சும் நேரத்தில் தமிழில் படத்திற்குப் பெயர் வைக்காதவர்களைத் தமிழுணர்வு அற்றவர்களாக சிலர் அறிவிக்க முயல்வதை ஏற்கமுடியவில்லை. தமிழ்ப்படங்களுக்குத் தமிழ்ப்பெயர் வைப்பதையும் தமிழுணர்வையும் முடிச்சு போடுவது வேடிக்கையானது. தமிழுணர்வைத் தமிழ்ப்படங்களில், அதுவும் “நியூ” மாதிரியான தமிழ்ப்படங்களுக்குத் தமிழில் ஏன்பெயர் வைக்கவில்லை என்று வாதம் செய்வது ஒரு வகையில் தமிழ் எதிர் உணர்வு. இன்னும்சொல்லப்போனால் “நியூ” மாதிரியான படங்களுக்குத் தமிழில் பெயர் வைக்காததை, தமிழில் பெயர் வைப்பதைக் கட்டாயமாக்க முயல்பவர்கள் பாராட்டவேண்டுமென்பேன்.

சேரனுக்கு வருவோம். சேரன் “டூரிங் டாக்கீஸ்” என்று படத்திற்குப் பெயர் வைப்பதில் என்னளவில் எந்தவிதமான எதிர்ப்புமில்லை. “டூரிங் டாக்கீஸ்” நல்ல பெயர்; சட்டென்று மனதைக் கவரும், மனதில் நிற்கும், பழைய நினைவுகளைக் கிளறிவிடும் பெயர்தான். ஆனால் துபாயில் அப்படிச் சொல்லிவிட்டு, அதை மறந்துவிட்டு அவர் மீண்டும் ஆங்கிலத்தில் பெயர் வைப்பதை எப்படி ஏற்பது? குறைந்தபட்சம் துபாயிலேயே தன்னிலையை விளக்கியிருக்கவேண்டும். “ஆட்டோகிரா·ப் படத்துக்கு நினைவேடுன்னு பேர்வெச்சா நீங்க மட்டும்தான் பார்ப்பீங்க” என்று ஆசி·பிடம் சொல்லும்போதே “உங்களைச் சந்தித்திருந்தால் அந்தப் பெயர் வைத்திருக்கமாட்டேன்” என்று சொல்வதைத் தவிர்த்திருக்கவேண்டும். அவர் பேச்சுவாக்கில் சொன்னாரா, சீரியஸாகச் சொன்னாரா என்பது ஆசி·ப்பிற்கே வெளிச்சம்.

தமிழ்ப்படங்களுக்குத் தமிழிலிலேயே பெயர் வைப்பது நல்லது. அதே சமயம் ஆங்கிலத்தில் பெயர் வைப்பது தமிழ்த்துரோகம்; கடுங்குற்றம் என்பதை என்னால் ஏற்கமுடியாது. ஆனால் அதைப் பாவமென்றோ தவறென்றோ ஒப்புக்கொள்கிறவர்கள் மீண்டும் ஆங்கிலப்பெயரை வைக்காமல் இருக்கவேண்டும்.

Share

சின்னச் சின்னக் கவிதைகள் – 2

[6]

உன் பேச்சில்

நிதானமிழந்துவிட்ட ஒரு வார்த்தைக்காக

குமுறிக்கொண்டிருக்கிறேன்,

எச்சிற் தெறிப்பைக்

கவனிக்காதது போலிருந்து

இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும்போது

ஒடுங்குகிறது என் சுயம்

[7]

கூடையிலிருந்து சிதறி ஓடும்

ஆரஞ்சுப்பழத்தை விரட்டிப் பிடிக்காதீர்கள்,

திக்குகளறுத்து

எல்லையறுத்து

மானுடம் வெல்லும் அது.

[8]

நான் வீசிய சோழிகளெல்லாம்

குப்புற விழுந்தன

நீ வீசிய சோழிகளெல்லாம்

வானம் பார்த்து

இந்தத் தலைகீழ் விகிதங்களுக்கு இடையில்தான்

எப்போதும் அலைகிறது வாழ்க்கை

[9]

அந்நியப்பட்டு வீட்டுள் நுழைந்துவிட்ட

றெக்கைகள் படபடக்கும் தட்டான்

தனிமையை விரட்டி

மீட்டெடுக்கிறது

மழையின் குதூகலத்தை

மண்வாசத்தை

வீடெங்கும் பச்சைத் துளிர்ப்பை.

[10]

என் டயரியின் பக்கங்களில்

சில குறிப்புகள் எழுதியிருக்கிறேன்

இரு புறாக்கள் புணர்ந்ததைக் கண்டது முதல்

என் ஆழ்மனதில்

கேட்கும் சங்கொலிக் குறிப்பைத் தவிர.

Share

சின்னச் சின்னக் கவிதைகள் – 1

[1]

கட்டுகளின்றி எழுதப்போகிறேன்

கவிதையாக இல்லாமல்

கட்டுரையாகவோ கதையாகவோ இல்லாமல்

யாருக்கேனும் பதில்களாய் இல்லாமல்

சுவரில் கிறுக்கும் சிறுகுழந்தைபோல

மருதாணி, கருநாவல்பழம்

புல்லாங்குழல், சிப்பி என

ஒன்றுக்கொண்டு தொடர்பில்லாத

வார்த்தைகளாய்.

[2]

காற்றுவெளியில்

வெயிலில் மழையில் நனைந்தபடி

அலைந்துகொண்டிருக்கிறது

இன்னும்

புரிந்துகொள்ளப்படாத

என் அன்பு

என்னைப் போலவே தனிமையாய்

எதிர்நிற்க முடியாத அகங்காரத்துடன்

தீச்சுவாலையென எரியும் ஆணவத்துடன்

மிகுந்து ஒலிக்கும் தன் ஆகிருதியுடன்.

[3]

இரண்டு கூழாங்கற்கள்

உரசி உண்டாகும் நெருப்புப்பொறியின்

சந்தோஷத்தைத் தருவதில்லை

அரற்றி எரியும் தீப்பந்தம்

ஒரு மின்மினிக்கு ஈடாவதில்லை

சூரியன்

சோப்புக்குமிழி

மறையுமுன்

சொக்க வைத்துவிடுகிறது

இப்படியாக

இவ்வுலகில்

என் சிறிய ஆளுமை

அதற்கான மகோன்னதத்துடன்.

[4]

பிஞ்சுக்குழந்தையின் உள்ளங்கைச் சூட்டை

சேமித்துவைத்து

பின்னொருநாளில் வழங்கமுடிந்தால்

அப்போது புரியும்

தொலைத்தவற்றின் பட்டியல்

தொலைத்தவற்றின் தொன்மை

-oOo-

Share

நையாண்டி

கேரளத் தொலைக்காட்சிகளில் பிரதானப்பட்ட ஒரு விஷயம் அரசியல் தலைவர்களை மையமாக வைத்து நடத்தப்படும் நையாண்டிக் காட்சிகள். இந்த நையாண்டிக்காட்சிகளை ஏசியாநெட், கைரளி போன்றவற்றின் முக்கிய நேரங்களில் காணலாம்.

அச்சுதானந்தனும் ஏ.கே.ஆண்டனியும் ஏ.வி.பி.பரதனும் ரமேஷ் சென்னிதாலாவும் அடிக்கடி நம் வீட்டு வரவேற்பரைக்கு வந்துபோவார்கள். அவர்களைப் போலவே உருவ ஒற்றுமையுள்ள நடிகர்களைத் தேடிப்பிடித்து நடிக்கவைக்கிறார்கள். அவர்களது ஒப்பனையும் நடிப்பும் மிமிக்கிரியும் அசலான தலைவர்களை அப்படியே கண்முன்நிறுத்தும்.


ஆரம்பத்தில் மலையாளத் தொலைக்காட்சிகளைப் பார்க்கத் தொடங்கிய காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தின. நம்பவே இயலாத ஒன்று என் கண்முன்னே நிகழ்ந்துகொண்டிருப்பதாகத்தான் நான் நம்பினேன்.

கருணாநிதியும் ஜெயலலிதாவும் ராமதாஸ¤ம் வைகோவும் இப்படி வேற்று மனிதர்கள் வாயிலாக நம் வீட்டுக்கு வந்துபோவதை என்னால் எப்படி நினைத்துப்பார்க்க முடியும்? அப்படியொரு சூழலில் வளர்ந்த தமிழனாதலால் இதுபோன்ற அரசியல் தலைவர்கள் மீதான நையாண்டிக்காட்சிகள் பெரும் அதிசயமாகத்தான் தோன்றின.


ஆசியாநெட்டில் ஒளிபரப்பாகும் நையாண்டிக் காட்சிகளில் ஏ.கே.ஆண்டனியும் கருணாகரனும் அச்சுதாநந்தனும் தனித்தனியே காரசாரமாக திட்டிக்கொள்கிறார்கள். ரமேஷ் சென்னிதாலா ஏ.கே.ஆண்டனியையும் கருணாகரனையும் சமாதானப்படுத்த கேரளம் வருகிறார். ரமேஷ் சென்னிதாலா முன்னர் கருணாகரனும் ஏ.கே.ஆணடனியும் பரஸ்பரம் மீண்டும் திட்டிக்கொள்ளத் தொடங்க செய்யும் வழியறியாது ஓட்டமெடுக்கிறார் ரமேஷ் சென்னிதாலா. அன்றைய தினத்தின் மாலையில் ஒரு வீட்டின் மாடியில் அச்சுதானந்தனும் ஏ.கே.ஆண்டனியும் மிக நெருங்கிய நண்பர்களாக, உல்லாசமாகப் பேசிக்கொண்டும் பாடிக்கொண்டும் பொழுதைக் கழிக்கிறார்கள். “எண்டே எல்லாம் எல்லாம் அல்லே” என்று பாடிக்கொண்டு சைக்கிளில் போகும்போது முத்தமிட்டுக்கொள்கிறார்கள்.

வெளியில் பகையுடனும் உள்ளுக்குள் பெரும் நட்புடனும் இருக்கிறார்கள் என்று சித்தரிக்கும் அந்தக் காட்சியின் நகைச்சுவையின் பின்னே ஒரு விமர்சனத்தை வைக்கிறார்களே என்று கேரள அரசியல்வாதிகள் யாரும் யோசிப்பதில்லை. இன்று வரை அந்த “சினிமாலா” நிகழ்ச்சி வெற்றிகரமாக வந்துகொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அச்சுதானந்தனோ ஆண்டனியோ கருணாகரனோ நையாண்டி செய்யப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த சினிமாலா நிகழ்ச்சி வெற்றிவிழாவில் பேசிய கேரள அரசியல்வாதிகள் அனைவரும் அந்த நிகழ்ச்சி தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சியென்றும் ஆரம்பத்தில் காணும்போது சிறிய அதிர்ச்சி

இருந்ததாகவும் பின்னர் பழகிவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல. தமிழில் முன்பு நகைச்சுவையை மட்டுமே பிரதானமாக வைத்து ஆடியோ கேசட்டுகள் வந்ததுபோல இப்போதும் கேரளத்தில் அரசியல் நையாண்டியை வைத்து ஆடியோ கேசட்டுகள் வருகின்றன. இன்று கேட்டுக்கொண்டிருந்த ஆடியோ கேசட் ஒன்றில் இதேபோல கேரளத்தில் முன்னணி அரசியல்வாதிகள் யாவரும் நையாண்டி செய்யப்பட்டிருந்தனர்.

நையாண்டியை நகைச்சுவையின் அடிப்படையில் மட்டுமே அணுகவேண்டும் என்கிற தெளிவு எத்தனை தமிழக அரசியல்வாதிகளுக்கு இருக்குமென்று தெரியவில்லை. தனிப்பட்ட முறையில் விமர்சிக்காத வகையில் (இது பற்றிக் கடைசியில்) இதுபோன்ற நையாண்டி நிகழ்ச்சிகளில் தவறேதும் இருப்பதாகப் புலப்படவில்லை.


ரஜினிகாந்தையும் கமல்ஹாசனையும் மணிரத்னத்தையும் வைரமுத்துவையும் இதுபோல நையாண்டிக்குள்ளாக்குபவர்கள் அதைக் கொஞ்சம் விரித்தெடுத்து தமிழகத்தின் அரசியல் தலைவர்களூக்கும் முடிந்தால் இலக்கியவாதிகளுக்கும் பரப்பவேண்டும்.

தமிழக அரசியல்வாதிகளும் இலக்கியவாதிகளும் நையாண்டி, நகைச்சுவைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். எத்தனைத்தூரம் தீவிர இலக்கியவாதியாக ஒருவர் செயல்பட்டாலும் இலக்கியம் தவிர்த்த பிற வேளைகளில் அவர் ஓர் மனிதரே. அவருக்கும் இயல்பிலேயே நகைச்சுவை உணர்வுகள் இருக்கக்கூடும். அதைத் தொடும் நையாண்டிகளை அவர்கள் எதிர்க்கக்கூடாது. இதுவே அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.

அரசியல்வாதிகள் ஒருவித பணபலத்திற்கும் பதவிபலத்திற்கும் உட்பட்டு, நையாண்டியாகக்கூட தங்கள் மீது விமர்சனங்கள் வரக்கூடாது என்று எதிர்பார்க்கிறார்களோ என்று எண்ண வைக்கிறது தமிழக அரசியல்வாதிகள் தங்கள் முன்னிறுத்துக்கொள்ளும் போக்கு.

நையாண்டிகளை முன்வைக்கும் படைப்பாளிகளும் நையாண்டி தனிப்பட்ட தாக்காக மாறாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியம். கேரளத்தின் நகைச்சுவை ஆடியோ கேசட் ஒன்றில் ஒரு தமிழக அரசியல்வாதி “ஆனை போல தடி” என்று விமர்சிக்கப்பட்டதாகவும் அப்படி விமர்சித்தவர் ஒரு ஷ¥ட்டிங் சமயம் தமிழ்நாடு வந்தபோது “நன்கு” கவனிக்கப்பட்டதாகவும் அறிந்தேன். நையாண்டிகளை அவரவர்களின் துறையோடும் துறை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளோடும் வைத்துக்கொள்வதுதான் சரி.


உடல்வாகைக் கேவலமாகச் சித்தரிக்க முயலும் இவை போன்ற தனிப்பட்ட தாக்குதல்கள் தவிர்க்கப்படவேண்டும் என்பதும் கவனத்திற்கொள்ளவேண்டியதே.

துக்ளக்கில் “சத்யா” எழுதும் நையாண்டிக்கட்டுரைகளில் சில ஆழமான நகைச்சுவை உணர்வைக்கொண்டதாக இருக்கும்.

குழுமங்களிலும் வலைகளிலும் இவைபோன்ற நையாண்டிக்கட்டுரைகள் வருவதில்லை. குழுமங்களிலும் வலைகளிலும் எழுதும்போது இந்த நையாண்டியை இலக்கியவாதிகளுக்கும் சேர்த்தே எழுதலாம். எழுதும்போது கவனத்தில் வைக்கவேண்டியது சுயவிருப்பு வெறுப்பை எழுத்தில் கொட்டாதிருப்பது, தனிப்பட்ட தாக்குதலைச் செய்யாமல் இருப்பது போன்றவையே.

யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லையோ அப்படி யாரும் நையாண்டிக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். ஏனென்றால் நையாண்டியும் ஒருவகை விமர்சனம்தான். நையாண்டிகள் எந்தவொரு வக்கிரத்தையும் அடிப்படையாகக் கொள்ளாதிருக்கும் பட்சத்தில் அவை வரவேற்கப்படவேண்டியவையே.


நையாண்டிக்கட்டுரைகள் அடிப்படையில் நகைச்சுவை உணர்வை முன்வைத்தாலும் அவை நையாண்டி செய்யப்படுவர் எப்படி மக்கள் மன்றத்தில் அறியப்படுகிறார் என்கிற அறிதலையும் முன்வைக்கின்றன. ஆரம்பத்தில் நையாண்டியை மட்டும் கணக்கில் கொள்ளும் வாசகர்கள்/பார்வையாளர்கள் அந்த நகைச்சுவைக்குப் பின்னர் யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்த நகைச்சுவைக்கு ஏன் இந்த அரசியல்வாதி/இலக்கியவாதி/நடிகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்? அவர்களுக்கு அங்கே ஒரு விடை கிடைக்கிறது. அந்த அரசியல்வாதி/இலக்கியவாதி/நடிகர் அப்படித்தான் அறியப்பட்டிருக்கிறார். அந்த அரசியல்வாதி/இலக்கியவாதி/நடிகர் தன் மனதில்

தங்களைப் பற்றிய வேறு ஒரு எண்ணத்தைக் கொண்டிருக்கலாம். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் அவர்கள் அறியப்பட்டதற்கும் அறியப்பட விரும்புவதற்குமான வித்தியாசத்தை உணர்ந்துகொள்ளலாம். இங்கேதான் நையாண்டி நிகழ்ச்சிகளின் வெற்றி இருக்கிறது. இப்படி ஒரு அரசியல்வாதியோ இலக்கியவாதியோ தன்னை அறிந்துகொள்ள இதுதான் வழியா என்றால் இதுவும் ஒரு வழி.

நையாண்டிக் கட்டுரைகள், நிகழ்ச்சிகள் தமிழகத்தில் இன்னும் பரவலாக்கப்படவேண்டும். அதற்கான சகிப்புத்தன்மை அரசியல்வாதிகளிடமும் இலக்கியவாதிகளிடமும் உடனே தோன்றிவிடாது. அதை நையாண்டிக்கட்டுரையாளகளும் நிகழ்ச்சிகள் தயாரிப்பாளர்களுமே ஏற்படுத்தவேண்டும்.


இணையத்தில் ஆரம்பத்தில் ஒருசில கட்டுரைகள் இப்படி எழுதப்பட்டிருந்தாலும் (பொய்யப்பன் செய்திகள்) பின்பு அவை நின்றுபோய்விட்டன. பின்னர் எழுதப்பட்ட ஒன்றிரண்டு ஸ்கிட்டுகளும் அந்த அந்தக் குழுமத்தின் உறுப்பினர்களை மையமாக வைத்து மட்டும் எழுதப்பட்ட “சீசன் ஸ்கிட்டுகளாக” அமைந்துவிட்டன. இன்றிருக்கும் நையாண்டிக்கட்டுரைகளின் வெறுமையைத் தீர்க்க குழுமத்திற்கு ஒருவர் முன்வருதல் அவசியம்.

அவை நகைச்சுவைப் பூர்வமாக கருத்தை முன்வைப்பதற்கும் அதிலிருந்து ஒரு சேரிய விவாதம் தொடங்குவதற்கும் வழிவகுக்கும்.
Share

குறும்பா முயற்சி

ஈழத்து மகாகவி உருத்திரமூர்த்தியின் குறும்பாக்கள் தமிழின் கவிதைப் பரப்பை அதிகப்படுத்தியது என்றால் மிகையில்லை. அவரின் குறும்பாக்கள் நகைச்சுவையுணர்வை அடிப்படையாகக் கொண்டிருந்ததாகவே நான் காண்கிறேன். அதேசமயம் தீவிரமான சிந்தனயைத் தூண்டுவதாகவும் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

அ.யேசுராஜாவின் பத்திகளின் தொகுப்பான “தூவானம்”-ல் மகாகவியைப் பற்றியும் அவரின் குறும்பாக்கள் பற்றியும் அப்புத்தகத்தில் எஸ்.பொன்னுத்துரை எழுதிய முன்னுரையில் சில வரிகளையும் குறித்துள்ளார். அதைப்பற்றி பின்னொரு சமயம். (புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்தவர் லண்டன் பத்மநாப ஐயர். அவருக்கு நன்றி பல.)

உருத்திரமூர்த்தியின் குறும்பா இலக்கணத்தை அடிப்படையாகக்கொண்டு நானும் சில குறும்பாக்கள் முயன்றேன். அவை இங்கே.

-oOo-

ஓடிப்போய்த் தாலிகட்டிக் கொண்டு

ஓயாமல் புலம்பியபெண் மண்டு

வாடிப்போய் வந்தாள்;

கைபிடித்துச் சொன்னார்

“நாடியிலும் பொட்டயேதான்” எண்டு.

-oOo-

மஞ்சசட்டைப் போட்டிருந்த மாக்கான்

திறந்தவாய் மூடாமல் பாக்கான்

பஞ்சுவெச்சு செஞ்ச

பேரழகி மூக்காள்

தஞ்சமென்றால் முத்தமிடக் கேப்பான்

-oOo-

ஊசியிட்டார் டாக்டரவர் வாலி

பின்னறிந்தார் வந்தோன்பர்ஸ் காலி

காசில்லாக் கோபமதை

மறந்துடனே மீண்டாரே;

மாசில்லை வாலியவர் போலி!

-oOo-

கடும்பூட்டைத் தேர்வானக் கள்ளன்

தேறுமார்க்கம் கேட்டாலோ சொல்லன்

படம்காணும் நேரம்தன்

சாவிவிட, கிடந்தானே

மடத்தினில், வேறுவழி யில்லன்

-oOo-

காவியமென்(று) உரைத்தாரப் புலவர்

எதிராய்வாய் திறந்தோரோ சிலவர்

பூவோடு பணம்பழமும்

எடுத்துச்சென்று பார்த்தபின்,இப்

பூவுலகில் எதிர்ப்போரே இலவர்!

-oOo-

கற்கடையில் கூட்டமோ கூட்டம்

அவனுக்கோ கள்ளிலிலை நாட்டம்

சொற்சுருக்கி இடுப்பசைத்து

சிரித்துவந்தாள் சிங்காரி;

பல்தெரிய பின்னெடுத்தான் ஓட்டம்!

-oOo-

முதல்வகுப்பில் சந்தைபோல் சத்தம்

இன்றல்ல நேற்றல்ல நித்தம்

புதிதில்லை நெடுநாளாய்

ஆசிரியர் அவருக்குண்டு

கதியில்லாப் பெண்ணோடு பித்தம்

-oOo-

Share