Archive for ஹரன் பிரசன்னா

குறும்பா முயற்சி

ஈழத்து மகாகவி உருத்திரமூர்த்தியின் குறும்பாக்கள் தமிழின் கவிதைப் பரப்பை அதிகப்படுத்தியது என்றால் மிகையில்லை. அவரின் குறும்பாக்கள் நகைச்சுவையுணர்வை அடிப்படையாகக் கொண்டிருந்ததாகவே நான் காண்கிறேன். அதேசமயம் தீவிரமான சிந்தனயைத் தூண்டுவதாகவும் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

அ.யேசுராஜாவின் பத்திகளின் தொகுப்பான “தூவானம்”-ல் மகாகவியைப் பற்றியும் அவரின் குறும்பாக்கள் பற்றியும் அப்புத்தகத்தில் எஸ்.பொன்னுத்துரை எழுதிய முன்னுரையில் சில வரிகளையும் குறித்துள்ளார். அதைப்பற்றி பின்னொரு சமயம். (புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்தவர் லண்டன் பத்மநாப ஐயர். அவருக்கு நன்றி பல.)

உருத்திரமூர்த்தியின் குறும்பா இலக்கணத்தை அடிப்படையாகக்கொண்டு நானும் சில குறும்பாக்கள் முயன்றேன். அவை இங்கே.

-oOo-

ஓடிப்போய்த் தாலிகட்டிக் கொண்டு

ஓயாமல் புலம்பியபெண் மண்டு

வாடிப்போய் வந்தாள்;

கைபிடித்துச் சொன்னார்

“நாடியிலும் பொட்டயேதான்” எண்டு.

-oOo-

மஞ்சசட்டைப் போட்டிருந்த மாக்கான்

திறந்தவாய் மூடாமல் பாக்கான்

பஞ்சுவெச்சு செஞ்ச

பேரழகி மூக்காள்

தஞ்சமென்றால் முத்தமிடக் கேப்பான்

-oOo-

ஊசியிட்டார் டாக்டரவர் வாலி

பின்னறிந்தார் வந்தோன்பர்ஸ் காலி

காசில்லாக் கோபமதை

மறந்துடனே மீண்டாரே;

மாசில்லை வாலியவர் போலி!

-oOo-

கடும்பூட்டைத் தேர்வானக் கள்ளன்

தேறுமார்க்கம் கேட்டாலோ சொல்லன்

படம்காணும் நேரம்தன்

சாவிவிட, கிடந்தானே

மடத்தினில், வேறுவழி யில்லன்

-oOo-

காவியமென்(று) உரைத்தாரப் புலவர்

எதிராய்வாய் திறந்தோரோ சிலவர்

பூவோடு பணம்பழமும்

எடுத்துச்சென்று பார்த்தபின்,இப்

பூவுலகில் எதிர்ப்போரே இலவர்!

-oOo-

கற்கடையில் கூட்டமோ கூட்டம்

அவனுக்கோ கள்ளிலிலை நாட்டம்

சொற்சுருக்கி இடுப்பசைத்து

சிரித்துவந்தாள் சிங்காரி;

பல்தெரிய பின்னெடுத்தான் ஓட்டம்!

-oOo-

முதல்வகுப்பில் சந்தைபோல் சத்தம்

இன்றல்ல நேற்றல்ல நித்தம்

புதிதில்லை நெடுநாளாய்

ஆசிரியர் அவருக்குண்டு

கதியில்லாப் பெண்ணோடு பித்தம்

-oOo-

Share

காற்றுத்தோழமை – கவிதை

வானம் நோக்கிக் குவிந்திருக்கும்

மொக்கின் இதழ்கள் ஒவ்வொன்றாய்

தன்னை அறுத்துக் காற்றில் பரவுகிறது

காற்றின் உக்கிரம் தாளாமல்.

     -காற்று

      தொடர்ந்து நிரம்பும் வண்ணக்கனவுகள்

      உச்சந்தொட்டு வண்ணப்பிரிகைகளாய் பிரியும் கணத்தில்

      வேர்வையை ஆசுவாசப்படுத்தி

      தொலையும் என்னை மீட்டெடுக்கும்

      நட்புத் தொடக்க காலத்தில்.

     -எஸ்.எஸ்.எல்.சி.யில் நானூற்றிச் சொச்சமெடுத்த தினமுழுதும்

      கூடவிருந்து சாமரம் வீசி

      சிரித்துத் தோளிற் கைவைத்து

      சந்தோஷம் பகிர்ந்துகொண்டது

      தலைவாராமல் பரட்டைத் தலையுடன்

      சிக்கிற் சிக்குண்ட தாடியுடன்

      ஒரு கூலிங்-கிளாஸ¤ம் அணிந்து

      மிக வேடிக்கையாய் இருந்தது அதனுருவம்.

     -கையில் ஒற்றைப் பூவுடன்

      எச்சில் இலைகளில் மாடுகள் மேயும் தேரடி முடுக்கில்

      காத்திருந்தபோது, வேகம் குறைத்து

      மெலிந்து வீசி

      சுற்றுப்புறத்தில்வீணையை மீட்டிப் போனது

     -இறுகிப் பிணைந்து கிடந்த காலத்தில்

      முதுகில் வருடி மீச்சிலிர்ப்பைத் தந்து

      எப்போதும் உடனிருந்தது.

பிளாஸ்டிக் மக்கில் நீரூற்றவரும் சிறுமி

நேற்றிருந்த மொக்கு இன்றில்லாத காரணமறியாமல்

கண்ணைப் பணிக்கும்போது

இசையற்ற பேரோசையை நான் உணர்வேன்

பின்னர் விடையென்னவோ

நம் தோழமையின் முற்றுப்புள்ளிதான்.

(02.07.2004, நிஸ்வா, மஸ்கட், அதிகம் காற்றடித்த ஓர் இரவு.)

Share

நிறம் – கவிதை

காலையில் தொடங்கி

வெள்ளை நிறங்கொண்ட வார்த்தையைக்

கருத்துக்குமிழிகள்

நுரைத்துத் துப்புகின்றன

மிகக்கவனமெடுத்து

தேர்ந்தெடுத்த வண்ணம் பூசுவேன்

இரண்டாம் முறை நிதானித்து

பச்சைக் கலப்பில் முக்கியெடுத்து

வெளியனுப்பிவைத்தேன்

என் நுரையீரல் காற்றறைகள்

மூச்சை இழுத்துப்பிடித்துக்கொள்ளும்

அடுத்த வார்த்தையொன்றை வெளித்துப்ப

இரண்டாமதன் பிறவி நிறம் கருப்பு

பெரிய யோசனைக்குப் பின்

வெள்ளிமுலாம் பூசி

வீதியனுப்பி வைத்தேன்

பெரும்பாலும்

நீல நிற வார்த்தைகளை

வெளிர் நீலமாக்கி மென்மையாக்குவேன்

அன்றைய என் தினம்

என் நிறத் தேர்ந்தெடுப்பைத் தீர்மானிக்கும்

கணந்தோறும் கருத்துக்குமிழிகள் கர்ப்பந்தரிக்கவும்

குழந்தை பிறக்கவும்

நிறம் பூசி நான் அனுப்பி வைக்கவும்

வளரும் என் கர்வம்

சிற்றறைகளின் வீரியம் குறைய

பெரும்பாலும் இரவாகும்

இப்போதுதான் கவனிக்கிறேன்

எனக்குத் தெரியாமல்

எவனோ என் வெள்ளைச்சட்டையின் பின்னே

சிவப்பு நிற மையைத் தெளித்திருக்கிறான்

நாளைக்கான கர்ப்பந்தரித்தலுக்கு

புணரத் தொடங்குகின்றன கருத்துக்குமிழிகள்

நான்

சிவப்பு நிற மையைத் தெளித்தவனைப் பற்றிய

பிம்பத்திற்காக யோசிக்கத் துவங்குகிறேன்

-oOo-

Share

இரத்த உறவு – நாவல் – யூமா. வாசுகி

===================================================

தமிழினி பதிப்பகம், 342, டிடிகே சாலை, ராயப்பேட்டை, சென்னை-600014.

====================================================

இதுதான் நான் முதன்முதலாக வாசிக்கும் யூமா. வாசுகியின் நாவல். அதனால் முன்னேற்பாடுகள் எதுவுமில்லாமல் வாசிக்க முடிந்தது.

இரத்த உறவு – குடிகார, கொடுமைக்காரத் தந்தை மற்றும் இரக்கமற்றவர்கள் நிறைந்த குடும்பத்தில் தாயும் மகளும் இரு மகன்களும் படும் பாட்டை, இரத்த உறவுகளால் ஏற்படும் மனவலியை, சித்திரவதையை அதீத உணர்ச்சிகளோடு மிகச் சொல்லி முன்வைக்கிறது.

எடுத்த எடுப்பிலேயே மூத்த அண்ணனின் மரணம் சம்பவிக்க ஒருவித இறுக்கச் சூழலுக்குள் நம்மை அழைத்துக்கொண்டுவிடுகிறது நாவல். இந்த இறுக்கச் சூழலும் சோகமும் அதீத உணர்ச்சியும் கடைசி வரை நாவலில் கூடவே வருகிறது. ஒரு சில இடங்களில் சலிப்பு ஏற்படும் அளவிற்குக் கூடவே விடாமல் துரத்துகிறது.

குடிகாரத் தந்தை. தன் செலவுக்கெல்லாம் தம்பி மனைவியிடம் காசு வாங்குவதால் தம்பி மனைவிக்கும், நல்ல நிலைமையில் இருக்கும் தம்பிக்கும் அடங்கியே வாழ்கிற தந்தை. தன் மனைவியை விட தன்னைப் பெற்ற அம்மாவையே அதிகம் விரும்பும் தந்தை. மனைவி, மகன் மற்றும் மகளின் நன்மையை, அவர்களின் வாழ்க்கையை, அவர்களில் கனவை எல்லாவற்றையும் புறக்கணிக்கும் அளவிற்குத் தன் நிலையில் இல்லாத தந்தை. கையில் கிடைத்ததை எடுத்துக் கண்மண் தெரியாமல் அடிக்கும் அவரது செய்கைகள் மகன், மகள் மற்றும் மனைவி மீது மட்டுமே செல்லுபடியாகின்றன. அத்தனைக்குப் பின்னரும் அம்மாவும் மகனும் மகளும் அப்பாவிடம் அன்பு மழை பொழிகிறார்கள். நாவல் நெடுகிலும் இதுதான் முக்கியக்கதை . கிளைக் கதையாக சுற்றுப்புறத்தில் வாழும் மனிதர்களின் கதைகளும் சிறு வயதுத் தம்பிகளின் வாழ்க்கையும் அவர்களின் உலகமும் சொல்லப்படுகின்றன.

சிறுவர்களின் உலகம் இந்த அளவுக்கு விஸ்தாரமாகவும் அழகாகவும் அதிக விவரணைகளோடும் சொல்லப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அவர்களின் பொழுதுபோக்குகளாகச் சொல்லப்படாத விளையாட்டுகளே இல்லை. பொன்வண்டு வளர்ப்பதிலிருந்து காந்தித் தாத்தாப் பஞ்சைப் பார்த்து பாஸா ·பெயிலா எனக் கேட்பது வரை எல்லா விளையாட்டுகளுமே சொல்லப்பட்டிருக்கிறது. சில இடங்களில் நினைவலைகள் படிக்கிறோமோ என்று சந்தேகத்தை எழுப்பும் அளவிற்கு, தேவையில்லாமல், நுழைத்தே ஆகவேண்டும் என்கிற எண்ணத்துடன் சில அத்தியாயங்கள் எழுதப்பட்டிருக்கிறதோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

பாட்டியின் உலகமும் பாட்டியின் வசனங்களும் படு யதார்த்தம். ஒரு கொடுமைக்காரப் பாட்டி கூடவே இருக்கிற மாதிரியான தோற்றத்தை உருவாக்கிவிடுகிறார் ஆசிரியர்.

அக்கா. நாவலின் மிக முக்கியமான கதாபாத்திரமும் மிக அதிகமாகத் தியாகம் செய்து, தியாகம் செய்வதற்காக மட்டுமே படைக்கப்பட்ட பாத்திரம். தம்பிகளின் மீது அன்பைப் பொழிந்து, தம்பிகளுக்குத் தாயாக, தாயை விட மேலாகப் பணிவிடை செய்யும் பாத்திரம். பொறுமையின் உச்சம். அந்தப் பெண்ணின் வயது பதிமூன்று. அக்கா பாத்திரத்தின் பொறுமையும் தியாக உணர்வும் தமிழ்த்திரைப்படங்களின் அதீத உணர்ச்சியையும் சகிக்க முடியாத பொறுமையின்மையையும் நமக்கு ஏற்படுத்துகிறது. ஆசிரியர் அனுபவித்த கதையாகவோ (கதை சமர்ப்பணம் வாசுகி அக்காவிற்கு என்று வருகிறது. கதையில் அக்கா பாத்திரத்தின் பெயரும் வாசுகியே) அல்லது நேரில் நின்ற நெருங்கித் தொடர்ந்த உறவாகவோ இருக்கலாம். நாவல் என்ற அளவில் அக்கா கதாபாத்திரத்தைப் பார்க்கும்போது மிகுபடச்சொல்லி அதீத உணர்வைத் தூண்டும் ஒரு சாதாரணத் தமிழ்ப்படத்தின் ஒரு கதாபாத்திரமாகவே உணரமுடிகிறது. அத்தனை அடித்துத் துரத்தும் அப்பாவிடம் பொறுமையாய் மிகச் சகிப்புத் தன்மையுடன் வீட்டுக்கு வாங்கப்பா என்னும்போது கதையின் நம்பகத்தன்மை குறைகிறதோ என்று எண்ணுமளவிற்கு அக்கதாபாத்திரத்தின் தன்மை மிகையாக ஊட்டப்படுகிறது. தியாக வடிவத்தின் மறு உருவே அக்கா என்னும்படியாக இருக்கும் ஒரு நாவலை 2004ல் படிக்கும்போது ஒரு செயற்கைத்தன்மையும் கதையை வாசிக்கிறோம் என்கிற கரையாத் தன்மையும் மேலோங்குகிறது.

பெரியப்பாவின் தற்கொலையும் பெரியப்பாவை பெரியம்மா அடிக்கும் காட்சிகளும் என கதாபாத்திரங்களுக்கு இரத்தம் வராத அத்தியாயங்கள் மிகக்குறைவு.

கதை முழுவதும் அப்பா, அம்மா, அக்கா, தம்பி மற்றும் பாட்டி போன்ற பொதுச்சொல்லே சொல்லப்படுவது நல்ல உத்தி.

கதையின் இடையிடையே வருகிற மாந்தீரிக யதார்த்தப் பாணியிலான – அப்படித்தான் நினைக்கிறேன்! – பக்கங்கள் (எனக்குப்) புரியா கதியில் பயணிக்கின்றன.

கதை நெடுகிலும் வரும் எழுவாய்-பயனிலை மாற்றி அமைக்கப்பட்ட வாக்கியங்களும் தன் பங்குக்குச் செயற்கைத் தன்மையை ஏற்படுத்துகின்றன. இந்த ஒன்றை விடுத்துப் பார்த்தோமானால் யூமா. வாசுகியின் நடையே நாவலின் பெரும்பலம். ஆனாலும் ஒரு நாவலை முழுவதுமாகத் தூக்கிப் பிடிக்க நடை மட்டுமே போதுமானதா என்பது யோசிக்கவேண்டிய விஷயம்.

கதையில் வரும் துணைக் கதைமாந்தர்களின் இயல்பான வசனங்களும் வாழ்க்கையும் கதையின் இன்னொரு பலம். கதையின் முடிவில் அம்மாவும் அக்காவும் தம்பிகளும் அப்பாவின் மரணத்துக்குப் பின்னர் நல்ல வாழ்வை நோக்கிச் செல்லும்போது “அப்பாடா” என்று மனதுள் தோன்றுவது, சில சமயங்களில் அலுப்பைத் தந்தாலும் விஸ்தாரமாகச் சொன்ன நடையின் வெற்றியே.

நாவலின் முடிவில், சோகமயமான, உணர்ச்சிப் பிழம்பான ஒரு தமிழ்த்திரைப்படத்தைப் பார்த்த உணர்ச்சியே மேலோங்குகிறது.

Share

கும்பகோணம் தீ விபத்து – பெருத்த சோகம்


இன்று ஒரு சோகமான நாள். கும்பகோணத்தில் பள்ளியொன்றில் குழந்தைகள் தீக்கிரையாக்கியிருக்கின்றன. தொலைக்காட்சியில் கருகிய நிலையில் குழந்தைகளைப் பார்த்தும் பத்திரிகைகளில் வெளியாகியிருக்கும் புகைப்படங்களைப் பார்த்தும் மனது வெம்பிப்போனது.

படம்-நன்றி: ஆனந்தவிகடன்

ஏற்கனவே ஒரு தீக்கிரையான சம்பவம் திருவரங்கத்தில் நடந்தபின்பும் எத்தனைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது கேள்விக்குறி. எத்தனையோ சத்துணவுக்கூடங்கள் இன்னும் கூரை வேய்ந்த கூடத்தில்தான் நடந்துகொண்டிருக்கின்றன. நிறைய திரையரங்குகளிலும் கூரை போட்ட ஸ்டால்கள் இருக்கின்றன. இறந்த பின்பு அஞ்சலியுடன் தலைக்கு ஓர் இலட்சம் என அறிவிக்கும் அரசு உயிருடன் இருக்கும் மனிதர்களின் பாதுகாப்புப் பற்றி ஆலோசிக்குமா?

நான் படித்த பள்ளிகளெல்லாம் விஸ்தாரமான அறைகளுடன் இருந்தன. அவையெல்லாம் பெரும்பாலும் அரசு பள்ளிகள். மெட்ரிகுலேசன் பள்ளிகள் வந்தபின்பே பெரிய வீட்டைப் பிடித்து அதில் பள்ளியை ஓட்டும் நிலை ஆரம்பமானது. பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கும் அரசு ஒரு பள்ளிக்கான அடிப்படை வசதிகளில், அதன் பராமரிப்பில் தீவிரம் காட்டியே ஆகவேண்டும்.

இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலியும் அவர்களின் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும்.

Share

உன் மதமா என் மதமா?

மரத்தடியில் இடப்பட்ட ரூமியின் கவிதையொன்று மதரீதியான கேள்விகளை முன் வைக்கச் செய்திருக்கிறது.

கவிஞர்களுக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கவேண்டும். அவர் எப்படி விஷ்ணுவை அப்படிச் சொல்லலாம் என்கிற கேள்வியையே நான் முற்றாகப் புறக்கணிக்கிறேன். எனக்குக் கடவுள் நம்பிக்கையுண்டு, ஹிந்து மத நம்பிக்கையுண்டு என்றாலும், கவிதையளவில் அதைச் சொல்லும் கவிஞனின் மீது கேள்வி கேட்கமாட்டேன். இந்த நேரத்தில், மற்ற மதங்களையல்லாது ஹிந்து மதத்தை மட்டுமே சாடும் அரசியல்-வோட்டுச்சிந்தை கவிஞர்களுக்கு இருக்காது என்று நம்புகிறேன், என்பதையும் சொல்லிக்கொள்ள நினைக்கிறேன்.

கவிதைகள் அவை எப்படி இருந்தாலும் ஒரு சமுதாயத்தின் குரலாகத்தான் அங்கீகரிக்கப்படுகிறது. ஒரு சமுதாயத்திலிருந்து தொடர்ந்து கவிதைகள் வருவது அந்தச் சமுதாயம் இயங்குகிறது என்பதன் வெளிப்பாடு. அந்த வகையில் கவிதைகள் வருவது நல்லது. ஆனால் எல்லாக் கவிதைகளையும் தேடிப்படிக்கும் நபர்களுக்கு, நாளாவட்டத்தில் இரண்டொரு கருத்தை மட்டும் வைத்து அதை நேரடியாகச் சொல்ல நினைக்கும் மனப்பாங்கைக் கொண்ட கவிதைகள் அசதியைத் தந்துவிடுவது யதார்த்தம். அவர்கள் நல்ல கவிதைகளை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை மௌனமான விலக்கலால் புறந்தள்ளிவிடுவார்கள். நாகூர் ரூமியின் கவிதை அப்படியொரு புறந்தள்ளலுக்கு ஆளாகவேண்டிய கவிதை.

சமுதாயத்தைச் சீர் திருத்த நினைத்தும் கருத்துப்போக்குள்ள தீவிரக் கவிஞர்களாக ஆரம்பிக்க நினைக்கும் கவிஞர்கள் கண்ணில் பட்டதையெல்லாம் சாடுவது போல ஒரு சாடல்தான் நாகூர் ரூமியின் கவிதையும். அதில் விஷ்ணு, சிவனைப் பற்றி அவர் சொன்னது தவறில்லை, கவிதையில் அதை ஒரு குறியீடாகக் கொள்ளலாம். அதைத் தொடர்ந்து சிவனைச் சொன்னவர் அல்லாவைச் சொல்வாரா என்பதும் அவர் எப்படி சிவனைச் சொல்லலாம் என்பதும் பாமரத்தன்மை கொண்ட கேள்விகள்.

என்ன ஆனாலும் அது கவிதையே ஆனாலும் மற்ற மதத்தினரைப் ண்படுத்தக்கூடாது என்பது சிலரது வாதமாக இருக்கலாம். அவர்களுக்கு விஷ்ணு, சிவன் போன்ற பெயர்கள் எரிச்சலை ஏற்படுத்துவது இயல்பே. ஆனால் கவிதையின் கருவை வைத்து விஷ்ணு, சிவன் போன்ற கடவுளர்களின் மீது எழுப்பப்படும் கேள்விகள் எனக்கு எரிச்சலை ஏற்படுத்துவதில்லை. காரணம் அது போன்ற கவிதைகளை எப்போது வாசிக்க முற்படும்போதும் விஷ்ணு, சிவன், அல்லாஹ், ஜீஸச் என்று நீட்டியே வாசிக்க விழைகிறேன்.

எழுதியது ஒரு முஸ்லீம் என்பதால் “அதுவும் பிறமதத்தவர் எப்படி எழுதலாம்” என்கிற கேள்வி அடிப்படையற்றதும் ஆழமான பார்வையில்லாததும். இந்தக் கேள்விகள் எழுப்பும் பிற்கேள்விகள் என்னென்ன? அப்படியானால் ஹிந்துவே ஹிந்து மதக்கடவுளர்களின் மீது கேள்விகளை எழுப்பினால் பிழையில்லையா? அல்லது இதுவரை எந்த ஹிந்துவும் ஹிந்துமதக் கடவுளர்களின் மீது கேள்விகளை எழுப்பியதில்லையா? ரூமி எழுதிய கவிதையின் சாரம் பிடிக்கவில்லை என்பதை எழுதியவர் ரூமி என்பதால் பிடிக்கவில்லை என்றபடியாகக் காட்டுவது ஒரு எழுத்தாளனுக்கு ஏற்படுகிற இன்னொரு தடசம்.

நாகூர் ரூமியின் கவிதை ஒரு கருத்தை நேரடியாகச் சொல்ல முனைகிறது; கடவுளை நிந்தனை செய்கிறது என்பது மட்டுமே. ஆனால் அடிப்படையில் கடவுள் நம்பிக்கையுடைய நாகூர் ரூமி இக்கவிதையின் மூலம் சொல்ல நினைப்பது என்ன? பூராவும் விஷமான பின்னும் விழிப்பானா கடவுள் என்ற அவர் முன் அவரே எழுப்பிக்கொண்டுள்ள கேள்விக்கு, இறை நம்பிக்கையுடைய அவரே பதில் சொல்லவேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. உலகில் நடக்கும் கொடுமைகளையும் மக்களின் துயர்களையும் கண்ணுற்று நான் இறைநம்பிக்கையைத் துறக்கிறேன் என்ற அறிவிப்போடு இக்கவிதையை அவர் சொல்வாரானால் அந்தக் கவிதையின் உண்மையின்பால் வந்தது; மனக்குமுறலின், கவிஞருக்குச் சமுதாயத்தின் மீதிருக்கும் கோபத்தினால் வந்தது என, கருத்தை நேரடியாகச் சொல்லும் கவிதை என்றளவிலாவது பாராட்டலாம். இல்லாத பட்சத்தில் எதையாவது எழுதி, தனக்கு ஒப்புமையில்லாவிட்டாலும் (தனக்கு ஒப்புமையற்ற விஷயங்களைக் கவிஞன் எழுதக்கூடாதா என்றால் எழுதாமல் இருப்பதே சிறப்பு, அதுவும் இதுபோன்ற ஆழ்நம்பிக்கையுடைய, பிற ஆழ் நம்பிக்கையின்பால் கேள்வி எழுப்பும் கவிதைகளை எழுதாமலிருப்பதே நேர்மையானது என்று நினைக்கிறேன்.) எழுதிக் கவிதையென்று இடும் வேகத்தில் வந்த சப்பையான கவிதை என்றே நான் கொள்வேன்.

அதைத் தொடர்ந்து ரூமியின் பதிலில் முற்றாகக் மரத்தடிக்குழுமம் புறக்கணிக்கப்பட்டிருப்பது அவரைப்போன்ற எழுத்தாளர்களுக்கு அழகா என்ற கேள்வியையும் முன்வைத்திருக்கிறது. ஒரு படைப்பை வைத்துவிட்டு அதற்கான விமர்சனங்களுக்குப் பதில் சொல்வது ஒருவகை. பதில் சொல்லாமல் இருப்பது ஒரு வகை. ரூமி மூன்றாம் வகையாக இனிமேல் மரத்தடியில் எழுதுவதில்லை என்கிறார். இத்தனைக்கும் மரத்தடியில் அந்தக் கவிதையின் பொருளில் தவறில்லை என்று எழுந்த குரல்களே அதிகம்.

ஒல்லி மழை/குண்டு மழை என்று வார்த்தைகளை வைத்து விளையாடியா ஒரு சாதாரணமான கவிதைக்குப் பெரும் விளம்பரமும் மறுமொழிகளும் கொடுத்து மறைமுகமாக இதுபோன்ற முகத்திருப்பலுக்காக எழுதப்படும் ஒன்றிற்கு ஆதரவளித்துவிட்டோமோ என்று தோன்றாமலுமில்லை.

Share

God is with us…

நேற்று கேள்விப்பட்ட விஷயமொன்று.

பெண்களின் குரல் கொஞ்சம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருப்பது, ஒரு குழுவாகப் பார்க்குமிடத்துப் போதாது என்றாலும் சில தனிப்பட்ட பெண்களின் சுயப்பிரக்ஞை ஆச்சரியமளிப்பதாகவும் சந்தோஷமேற்படுத்துவதாகவும் உள்ளது.

எங்கள் ராயர் ஜாதியில் (எனக்கு ஜாதி நம்பிக்கையில்லை யென்றாலும் நான் என்ன ஜாதியென்று சில சமயங்களில் சொல்ல வேண்டியிருக்கிறது. இதைச் சொல்லும்போது கல்யாண்ஜியின் நல்ல கவிதையொன்று நினைவு வருகிறது.) நல்ல மாப்பிள்ளைகள் அமைவது கஷ்டமென்பார்கள். சிலர் ஆசிரியர்களாக இருக்கலாம். வேறு சிலர் அரசாங்கப்பணிகளில். பெரும்பாலானோர் என்னவோ சமையல் தொழிலில் மற்றும் கோவில் பூஜைகளில்தான். இன்றுவரை இந்த நிலைமை அதிகம் மாறியதாகத் தெரியவில்லை.இப்படி சமையலோ, கோவில் பூஜையோ அல்லாத நல்ல மாப்பிள்ளையொருவர் என் நண்பரின் அண்ணனாகிப்போனார்.

நண்பர் மிகுந்த இலக்கிய ஆர்வம் மிக்கவர். ஒரு வகையில் எனக்கு இருப்பதாக நான் நினைத்துக்கொள்ளும் இலக்கிய ஆர்வம் கூட அவரிடமிருந்து எனக்கு வந்ததுதானோ என நான் யோசிப்பதுண்டு. நண்பரின் மீது நான் வைத்திருந்த “மாதிரி” (Model) என்ற பிம்பம் அவரது சில தவறான முடிவுகளால் உடைந்தது, இத்தனைக்கும் அந்த முடிவுகளின் போதே அது தவறென்று நான் சொல்லியும் அவர் ஏற்காததால் அந்தப் பிம்பம் உடைந்ததென்றே நினைக்கிறேன். அது ஒருபுறமிருக்கட்டும்.

நிஜமாகவே இலக்கிய ஆர்வம் உள்ளவர் என்பதால் என் கடுமையான குற்றச்சாட்டு மற்றும் அவர் மீதான தனி நபர் விமர்சனம் எல்லாவற்றையும் ஒரு சிரித்த புன்முகத்தோடு எடுத்துக்கொள்பவர். நிஜ இலக்கியவாதிகள் சண்டையிட்ட மறுநாளே பூங்கொத்துக் கொடுத்துக்கொள்வர் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை. 🙂 அப்படி அற்றவர்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளாகத்தான் இருக்கமுடியும் என்பதும் இன்னொரு அ.மு.ந. 🙂

நண்பரின் அண்ணனுக்குக்காகப் பெண் பார்க்கப்போனார்கள். நண்பரின் அண்ணா நான் மேலே சொன்ன சமையல் மற்றும் பூஜைப்பணியில் இல்லாததால் பெண் தகைவதில் அத்தனைச் சிரமமிருக்காதென்பதே நண்பரின் குடும்ப நம்பிக்கையாக இருந்தது. எனது தனிப்பட்ட நம்பிக்கையும் அதுவாகத்தான் இருந்தது.

நேற்று நண்பரிடமிருந்து “God is with us!” என்று ஒரு தலைப்பிட்டுக் கடிதம் வந்தது. ஸ்பேம் மெயிலோ என்ற சந்தேகத்துடனேதான் திறந்தேன். பிரித்துப் படிக்காமல் போயிருந்தால் நல்லதொரு நிகழ்ச்சியினைப் படிக்காமற் போயிருப்பேன்.

“அன்பார்ந்த ஹரி, (என்னை என் சொந்தக்காரர்கள் ஹரி என்றேயழைப்பார்கள்)

நேற்றுப் பெண் பார்க்கப் போயிருந்தோம். எல்லாருக்கும் பெண்ணைப் பிடித்திருந்தது. அண்ணா உடனே பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டான். அவன் முகத்தில் வெட்கமும் சந்தோஷமும் போட்டிப்போட்டுக்கொண்டிருந்தது. என் மாமா பெண்ணும் பையனும் தனியாகப் பேசட்டும் என்று சொன்னார். அண்ணா “எனக்குப் பேசுவதற்கு ஒன்றுமில்லை, எனக்குப்பிடித்திருக்கிறது” என்றான். ஆனால் பெண் பேசவேண்டுமென்று சொன்னாள். எல்லாரும் கொஞ்சம் ஆச்சரியப்படும்போதே தீர்மானமாகப் பெண் எல்லார் முன்னிலையும் பேசத்தொடங்கினாள்.

“எனக்கு ஹிந்துமத நம்பிக்கைகளிலே நம்பிக்கையில்லை. நான் எந்த ஹிந்துக் கடவுள்களையும் தொழமாட்டேன். கோவில்களுக்கு வரமாட்டேன். பூஜை, புனஸ்கார வகையறாக்கள் ஆகவே ஆகாது.”

அண்ணா கொஞ்சம் அரண்டுவிட்டான் என்றேதான் சொல்லவேண்டும். “ஏன்” என்றான்.

“எனக்குப் பிடிக்கலை”

“அப்ப யாரைத்தான் கும்பிடுவீங்க?”

“ஜீஸஸ். எனக்குக் கிறிஸ்தவத்துலதான் நம்பிக்கை. I like Jesus!”

“ஓ”

அதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை. அண்ணா இதைக் கேட்ட பின்பு ஒரேடியாக மறுத்துவிட்டான். அங்கேயே வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நிலைமை இரசாபாசமாவதற்குள் வீடு வந்துவிட்டோம்.

நல்லவேளை! அந்தப் பெண் தைரியமாக இப்போதே சொன்னாள். இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும்? Thank God!.

உன் வீட்டில் அனைவரையும் கேட்டதாகச் சொல்லவும்….. ”

என்று தொடர்ந்தது அக்கடிதம்.

என் நண்பரின் அண்ணாவின் மறுப்பில் எனக்குப் பேதமில்லை. அவர் துணைவி எப்படி இருக்கவேண்டும் என்று நினைப்பது அவர் உரிமை. என் நண்பர் God is with us” என்று தலைப்பிட்டிருந்ததையும் புரிந்துகொள்ளமுடிந்தது. நண்பரின் அண்ணாவின் அன்றைய மனநிலை எப்படி இருந்திருக்குமென்பதையும் சில நிமிடங்கள் யோசித்தேந்தான். ஆனால் அதையெல்லாம் மீறி வியப்பில் ஆழ்த்தியது அந்தப் பெண்ணின் உறுதியும் தெளிவும்.

சமையற்காரர்கள் மற்றும் கோவிலில் பூஜை செய்பவர்களுக்கு மத்தியில் ஓர் அரசாங்கப் பணி மாப்பிள்ளைக்காக அந்தப் பெண்ணை எத்தனைச் சொல்லிச் சொல்லித் தயார்ப்படுத்தியிருப்பார்கள்? அத்தனையும் தூள் தூள்!

ஆடைக்குறைப்புப் புதுமைப் பெண்களுக்கு மத்தியில் நிஜத்திலேயே ஒரு புதுமைப்பெண். அண்ணாவின் திருமணம் நிச்சயமாகாமற் போனதே என்ற நண்பரின் வருத்தத்தில் கூட என்னைப் பங்குகொள்ள வைக்கமுடியாமற் செய்தது அந்த முகம் தெரியாத பெண்ணின் துணிவும் தெளிவும்.

வாழ்க வளமுடன்.

(இந்த உள்ளிடுகையைத் தொடர்ந்து நான் வலைப்பதிவிற்கென்றே தனியாக எழுதுவதில்லையென்ற, உலகைப் பீடித்திருந்த பெருநோய் அகன்றது!)

Share

ஏழாம் உலகம் (நாவல்) – ஜெயமோகன்

–ஹரன்பிரசன்னா

===============================================================

ஏழாம் உலகம், நாவல், ஜெயமோகன், யுனைடட் ரைட்டர்ஸ் பதிப்பகம், 130/2, அவ்வை

சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை – 86.

===============================================================

ஜெயமோகனின் நாவல்கள் எந்தத் தளத்தில் இயங்கினாலும் அந்தத் தளத்தில் ஆழ ஆழச்சென்று அது இயங்கும் சூழலின் மனிதர்களை இரத்தமும் சதையுமாகக் கண்முன் நிறுத்தும். அவர்களின் வட்டார மொழி நம்மை அவர்களின் உலகத்திற்குள் இட்டுச் செல்லும். தமிழ்நாடு-கேரள எல்லையில் பேசப்படும் தமிழுமல்லாத, மலையாளமுமல்லாத, இரண்டும் கலந்த மொழிதான் ஏழாம் உலகத்திலும் கையாளப்பட்டிருக்கிறது. விஷ்ணுபுரம் மற்றும் பின் தொடரும் நிழலின் குரலை ஒப்பிடும்போது ஏழாம் உலகம் எளிதான நடையிலிருக்கிறது.

ஜெயமோகனின் ஆறாவது நாவல் இது. பழநியில் குறைப்பிறவிகளைப் பிச்சை எடுக்க வைப்பதை ஒரு தொழிலாக நடத்தும் பண்டாரத்தையும் குறைப்பிறவிகளையும் மையமாக வைத்துக் கதை சுழல்கிறது. நம்மையும் சுழற்றுகிறது. கதையின் களமும் போக்கும் நம்மை பதறச்செய்கிறது, அருவருப்புக் கொள்ளச் செய்கிறது, மனதுள் புகுந்து பதிலற்ற கேள்விகளை எழுப்புகிறது. 1986களில் நிகழ்வதாக வரும் கதையின் நிகழ்ச்சிகள் நாம் நாகரீகம் அடைந்தவர்கள்தானா என்ற கேள்வியை தவறாமல் எழுப்புகிறது. நம்மைச் சுற்றிய, நாம் கவனிக்கத் தவறிய மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றிய பிரக்ஞையை உருவாக்குகிறது. எப்படி நாம் கவனிக்காமல் போனோம் என்கிற பதைபதைப்பையும்

உருவாக்குகிறது.

குறைப்பிறவிப் பெண்ணான முத்தம்மையை இன்னொரு குறைப்பிறவியோடு அணையச் செய்து, பிறக்கும் குறைப்பிறவியை பழநியில் வைத்து பிச்சை எடுக்க வைக்கிறார்கள். இதையே தொழிலாக நடத்தும் இன்னொரு பார்ட்டிக்குக் கைமாற்றுகிறார்கள். பெரிய அளவில் நடக்கிறது வியாபாரம். அதிகம் குறையுள்ள, பார்க்கவே பயங்கரமாக இருக்கும் பிறவி அதிக விலைக்குப் போவார். பிறந்த குறைப்பிறவியை தாய்ப்பாசத்தோடு முத்தம்மை கொஞ்சும் இடங்களும் தன் குழந்தையை ஒரு தடவையாவது கொஞ்சிவிடவேண்டும் என்று விரும்பும் முத்தம்மையை அணைந்த குருடனும் நாவலின் பல இயல்பான பாத்திரங்களின் ஒரு பகுதி.

இப்படியான மிக அவருவருப்பான சூழலுள் நகரும் கதையினூடே ஒன்றிற்குள் ஒன்றாகப் பிணைந்து கிடைக்கிறது எழுத்தாளரின் நகைச்சுவை உணர்வு. அதற்குப் பெரும்பலமாக அமைகிறது வட்டார வழக்கு. முத்தம்மை தனக்குப் பிறக்கும் குறைப்பிறவி மகனுக்கு “ரசனிகாந்து” என்று பெயர் வைத்துக் கொஞ்சுவதும், நிரபராதி என்கிற வார்த்தை குய்யனுக்குப் பிடித்துப்போக நேரம்கிடைக்கும் போதெல்லாம் நிரபராதி எனப் பயன்படுத்துவதும் அதைக்கேட்டு எரிச்சலில் ராமப்பன் சீறுவதும்- என விரிகிறது கதையில் நகைச்சுவை. இவையெல்லாமே வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு, யாரோ ஒரு

எஜமானனுக்காக கையேந்திப் பிச்சையெடுக்கும் வாழ்வு வாழ்பவர்களின் வறுமை சூழலில் இயல்பாக வருகிறது. போலீஸ் கேஸில் இருந்து தப்பிக்க பெருமாள் எருக்கிற்குத் தாலி கட்ட, எருக்கு பெருமாளைக் காணும்போதெல்லாம் “இஞ்சேருங்க” என்றழைக்கும் இடமும் பெருமாள் கொதிக்கும் இடமும் அசத்தல்.

பண்டாரம் முதல் பெண்ணுக்காக வரன் பேசிக்கொண்டிருக்க, அக்காவின் நகைகளையெல்லாம் திருடிக்கொண்டு ஓடிப்போகிறாள் இரண்டாவது பெண். பண்டாரம் நிலை குலைந்து போனாலும் ஒருவாரியாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு முதல் பெண்ணுக்குக் கல்யாணம் செய்துவைக்கிறார். ” நான் இண்ணி தேதிவரை ஒருத்தருக்கு ஒரு கெடுதல் நினைச்சிட்டில்ல.. உன்னாணை ஏக்கி…. நான் ஒரு ஆளிட்ட கெடுத்து ஒரு சொல்லு சொன்னதா நீ கேட்டேண்ணாக்க என்னைய, இப்படி – இப்படி கூப்பிடு” என்று பண்டாரம் தன் மனைவி ஏக்கியம்மாவிடம் சொல்லும் வசனம் கதையின் வரும் இயல்பான வசனங்களில் ஒரு மைல்கல். தான் செய்வது குறைப்பிறவியை வைத்துச் செய்யும் தொழில் என்றாலும் மற்ற எல்லா மனிதர்களைப் போலவே பண்டாரமும் பேசுகிறார். நிஜமாகவே இப்படித்தான் இருக்கிறது உலகம். “நாம யாருக்கும் ஒரு கெடுதல் செய்யலை” என்று சொல்லாதவர்களே இல்லை.

விரை பெருத்துத் தொங்கும் அகமது ஆங்கிலத்தில் பேசுவதும் சட்டம் பேசுவதும் கோயிலுக்குப் பூசை செய்யும் போத்தி கர்ப்பகிரகத்துக்குள்ளேயே வெற்றிலைத் துப்புவதும் கோவிலில் பிச்சையெடுக்கும் குறைப்பிறவியான முத்தம்மையை ஒரு தடவை முழுதாகப் பார்க்க ஆசைப்படுவதும் நிகழ்முரண்கள்.

பண்டாரம் முருக பக்தராக இருக்கிறார் என்றாலும் நாவல் நெடுகிலும் குறைப்பிறவிகள் மத்தியில் தெய்வம் கேலிப்பொருளாக்கப்பட்டிருக்கிறது. “ஆண்டவன் பாத்துக்கிடுவான்” என்று ஒரு குறைப்பிறவி சொல்லும்போது இன்னொருவர் “ஆண்டவன் மோண்டான்” என்பதும் ஒரு பாலியல் தொழிலாளி படிகளில் கீழேயிறங்கிவரும்போது, மேலே யாருடா இருக்கா என்ற கேள்விக்கு “மேல முருகன் இருக்கான்” என்ற பதிலுமாக குறைப்பிறவிகள் தெய்வத்தின் மீது பற்றில்லாதவர்களாகவும் நிறைய நிந்தனை செய்பவர்களாகவுமே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவை கதாபாத்திரங்கள் சொல்பவையாகவும் சரியாகவும் கையாளப்பட்டிருக்கிறது.

குறைப்பிறவிகள் மத்தியில் பேசப்படும் மொழி ஆபாசம் கலந்த மொழியாக இருந்தாலும் எங்குமே நெருடவில்லை என்பது வட்டார வழக்கின் பலம். சர்வ சாதாரணமாகப் பேசிக்கொள்ளும்போது கூட உறவுமுறை குறித்த கேள்விகளும் ஆபாச வார்த்தைகளும் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. அவையெல்லாமே அவர்களின் அன்னியோன்யத்தின் அடையாளமாகவும் பொழுதுபோக்கின் ஒரு பகுதியாகவும் நாவலைக் கடக்கிறது.

தன்னிச்சையாகப் பாட்டுப்பாடும் குறைப்பிறவிகளுள் ஒருவரான மாங்காண்டி சாமியும் , கிழவியும், தாணுப்பிள்ளையின் மனைவியும் சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள்.

காலில்லாத பெண்ணை இரவுக்கு அழைத்துச்செல்லும் போலீஸ், அந்தப் பெண்ணை திரும்ப அழைக்கச் செல்லும் பண்டாரத்திடம் பணம் பிடுங்குவதும் அவரை அடிப்பதும் இந்தத் தொழிலிலும் பண்டாரம் படும் அல்லலைக் காண்பிக்கிறது. அஹமதுவின் கமெண்ட்டுகள் கேரள அரசியலைப் பற்றிய அவனது குமுறலைச் சொல்கிறது. ரஜினிகாந்த் போஸ்டரும் நான்கு இலக்க தொலைபேசி எண்ணும் எம்.ஜி.யார் பற்றிய சம்பாஷனைகளும் 1986ஐ நினைவுக்குக் கொண்டுவருகின்றன.

ஒருமுறையாவது குறையற்ற ஒருவனுடன் அணைந்து குறையற்ற குழந்தை பெற ஆசைப்படும் முத்தம்மை, மலக்குவியலில் “ஒடயாரே இவன் வேண்டாம். ஒத்த வெரலாக்கும் ஒடயாரே” என்று கூவித் தோற்று “என்றெ பொன்னு தெய்வமே” என்னும்போது முற்றிலும் நம் பார்வையில் வராத ஒரு உலகத்தின் ஒட்டுமொத்த தோற்றமும் வளைய வருகிறது. ஏழாம் உலகம் என்பதற்கான விளக்கமும் ஒரு கதாபாத்திரத்தின் வாயிலாகச் சொல்லப்படுகிறது.

கதை அதற்கான நடையை அதுவே தேர்வு செய்துகொள்வது இயல்புதான் என்றாலும் மற்ற ஜெயமோகனின் நாவல்களில் காணப்படும் சவாலான நடையில்லாதது அவரது கதையைத் தொடர்ந்து வாசிக்கும் நுட்பமான வாசகர்களுக்குக் கதையின் பலவீனமாகத் தோன்றும். “பெரும்பாலும் நேரடி அனுபவ அடிப்படை மட்டுமே இதில் உள்ளது. ஆகவே நாவலின் களம் மிகச் சுருங்கிவிட்டது. வேறு வழியில்லை” என்கிறார் ஜெ.மோ. அதனால்தானோ என்னவோ நாவல் அதிகம் சம்பாஷணைகளைக் கொண்டதாகவும் வர்ணனைகள், தற்சிந்தனைகள் அற்றதாகவுமாகி ஒரு எளிய நாவல் என்கிற தோற்றத்தைத் தந்துவிடுகிறது.

காடு நாவல் மிகச்சிறப்பான நடையையும் சரியாகப் பயன்படுத்தப்பட்ட வட்டார வழக்கையும் கொண்டிருந்தாலும் அதிலிருந்த ஒரு வெறுமை ஏழாம் உலகத்தில் களையப்பட்டிருக்கிறது.

கதையில் வரும் மலையாள வார்த்தைகளுக்கும் பிரத்யேக வட்டார வழக்கிற்கும் பிற்சேர்க்கையாக பொருள் கொடுத்திருக்கிறார்கள். அதைப் பற்றிய குறிப்பு ஒன்றை நாவல் ஆரம்பிப்பதற்கு முன்பு கொடுத்திருந்தால் வசதியாக இருந்திருக்கும். நாவல் படிப்பவர்கள் புரியாமலே படித்துவிட்டுக் கடைசிப் பக்கத்தைப் பார்க்கும்போது வார்த்தைகளுக்கு விளக்கம் இருக்கும். இதனால் என்ன பயன்? அடுத்த பதிப்பிலாவது முதல் பக்கத்தில் ஒரு குறிப்பைத் தருவது நல்லது. இதுவரை மற்ற நாவல்களில் இல்லாத இந்தப் பிற்சேர்க்கை பாராட்டிற்குரியது.

Share