45 Kannada Movie

45 என்றொரு கன்னடப் படம். ரீல்ஸில் ஒன்றிரண்டு காட்சிகளைப் பார்த்துவிட்டு சிவராஜ் குமாரின் ஃபிரஷான நடிப்பை முழுவதுமாகப் பார்ப்போம் என்று நினைத்து அந்தப் படத்தைப் பார்த்தேன். ரீல்ஸில் எத்தனை நேக்காக என்னை மாட்டி விட்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது. அந்த படத்திலேயே எது இரண்டு காட்சியோ அதை மட்டும் ரீல்ஸில் சுத்த விட்டிருக்கிறார்கள் என்பது படம் முடிந்த பின்னர்தான் எனக்கு உரைத்தது.

கருட புராணத்தை மையமாக வைத்து ஒரு திரைப்படம் என்ற போர்வையில் ஒரு படம் எடுத்திருக்கிறார்கள். இதில் இருக்கும் ஸ்பாய்லரை நான் சொல்ல விரும்பவில்லை. படத்தில் என்னவெல்லாமோ வருகிறது. என்ன பிரச்சினை என்றால் படம் ஆரம்பித்த இரண்டாவது நிமிடத்திலேயே இதுதான் கதை என்று நான் தீர்மானித்தேன். ஆனால் படம் போக போக அந்தக் கதை இருக்காது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். கடைசியில் கிளைமாக்ளில் பார்த்தால் நான் நினைத்ததுதான் கதை. ஒரு ட்விஸ்ட்டுடன். 

கிளைமாக்ஸில் ஒரு திருப்பம் கொடுக்கிறார்கள் பாருங்கள், உலகத்திலேயே இப்படி ஒரு கற்பனையை எவனும் செய்ததில்லை.

ரத்த குளிகா பாதாள குளிகா என்று பல குளிகா காந்தாராவில் எட்டிப் பார்ப்பது போல சிவராஜ் குமார் ஒவ்வொரு பெயராக அழைக்க அத்தனை தெய்வங்களும் சிவராஜ்குமாராகவே வருகிறார்கள்‌ கிராஃபிக்ஸில் கலக்குகிறோம் என்று கண்கொண்டு பார்க்க முடியாதபடி என்னவெல்லாமோ செய்து வைத்திருக்கிறார்கள். 

உபேந்திராவை விறைப்பாக நடிக்க வைக்கிறேன் என்று நம்மைச் சாவடித்து விட்டார்கள். உபேந்திரா, ராஜ் பி செட்டி, சிவராஜ்குமார் என்று பல பெரிய கைகள் இருந்தும் படத்தைப் பார்க்க முடியவில்லை என்றால், கதையும் பாழாய்ப் போன திரைக்கதையும்தான் காரணம்.

 கடவுள் நம்பிக்கை இருக்கலாம். ஆனால் இந்த அளவுக்கு இருக்கக் கூடாது.

Share

Comments Closed