ஜமா

ஜமா – இத்தனை தீவிரமான படமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. பல குறைகள் இருக்கின்றன. முதலில் நிறைகளைப் பார்த்துவிடலாம்.

இயக்குநருக்கு ஒரு தீவிரமான திரைப்படம் என்றால் என்ன என்று தெரிந்திருக்கிறது. தன் கதையின் மீதும் காட்சிமொழியின் மீது நம்பிக்கை இருக்கிறது. பெரிய அளவில் முத்திரை பதிப்பதற்கான அழுத்தமான தடயங்கள் தெரிகின்றன. சாதிக்க வாழ்த்துகள்.

இந்தக் கதை அவதாரம் திரைப்படத்தை நினைவூட்டுவதாகச் சிலர் எழுதி இருந்தார்கள். என்னளவில், இல்லை என்றே சொல்வேன். பெண் வேடம் கட்டும் ஒற்றை இழையைத் தவிர, இரண்டுக்கும் தொடர்பே இல்லை. இன்னும் சொல்லப் போனால், எடுத்துக்கொண்ட களம் என்ற வகையில், அவதாரத்தைவிட இத்திரைப்படம் எள்ளளவு கூட அங்கும் இங்கும் அலைபாயவில்லை. அவதாரம் படத்தில் இருந்தது போன்ற, கொலை, கற்பழிப்புக் காட்சிகள் இதில் இல்லை.

இளையராஜாவின் பின்னணி இசை பல இடங்களில் அபாரம். ஆனால் கூத்துக்கு ஏற்ற பாடல் ஒன்று கூட இல்லை. அவதாரம் போன்ற ஃபீல் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இப்படி இயக்குநர் யோசித்துவிட்டாரோ என்னவோ. கடைசியில் கதாநாயகன் தலையில் அம்மனைச் சுமந்து வரும் காட்சியில் ஒரு பாடல் வைத்திருக்கலாம்.

நம் மண்ணின் மரபான பக்தியை இத்திரைப்படம் வெகு சிறப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கிறது. இன்றைய இயக்குநர்கள் பக்தியைக் காட்டினால் அது ஹிந்து மதத்துக்கு ஆதரவு தெரிவித்ததாகிவிடும் என்ற போலி முற்போக்குத்துவத்தில் மயங்கிக் கிடக்க, இத்திரைப்படம் அவ்வகைக்குள் சிக்கவில்லை என்பது பெரிய ஆறுதல்.

இன்னொரு முக்கியமான ஆச்சரியம், பல காட்சிகள் படு யதார்த்தம். நம் கிராமத்தில் நேரில் நடப்பது போன்ற ஓர் உணர்வு. இத்தனைக்கும் நடிப்பவர்கள் அத்தனை பேரும் முகம் தெரியாத நடிகர்கள். அசத்திவிட்டார்கள். உறுத்திக்கொண்டு தெரியும் சென்னை வட்டார வழக்கு போல் அல்லாது, இயல்பான, தேவையான அளவுக்கான வட்டார வழக்கு கூடுதல் பலம்.

ஆனாலும் ஏன் ஒரு திரைப்படமாக இது முழு அனுபவத்தைத் தரவில்லை? அற்புதமான பல நீண்ட காட்சிகளுக்கு இணையான அமெச்சூர் காட்சிகளும் இருப்பது. ஒரே இடத்தில் கதை சுற்றி சுற்றி வருவது போதாது என்று, ஒரே ரீதியிலான வசனங்கள். அதுவும் குறிப்பாக முதல் முக்கால் மணி நேரம் ரொம்பவே இவை அதிகம்.

இது கதை காதல் கதையா, ஜமா உரிமைக் கதையா என்கிற தேவையற்ற குழப்பம் இன்னொரு மைனஸ். ஜமாதான் கதை என்றான பிறகு, கதை கொள்ளும் வேகம் முன்பகுதியில் இல்லை.

ஹீரோவாக வரும் நடிகர் ( இயக்குநரே நடித்திருக்கிறார்) உயிரைக் கொடுத்து நடிக்கிறார் என்றாலும், பல காட்சிகளில் ஏனோ ஒட்டவில்லை. குருவி தலையில் பனங்காய் வைத்தது போன்று ஆகிவிட்டது. இது மிகப்பெரிய சறுக்கல்.

சேத்தன் மிக அருமையாக நடித்திருக்கிறார். ஆனாலும் நாசரோ பிரகாஷ்ராஜோ நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அதேபோல் ஹீரோவின் அப்பா கேரக்டருக்கும் இன்னொரு நல்ல நடிகரை தேர்ந்திருக்கவேண்டும். இந்த மூன்று விஷயத்தில் நடந்ததுதான் படத்தை இன்னொரு தளத்துக்குக் கொண்டு போகாமல் கைவிட்டு விட்டது.

துணை நடிகர்களின் இயல்பான நடிப்பு இத்திரைப்படத்துக்கு பெரிய பலம். அவர்களே இப்படத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். அவர்களுக்காகவாவது இத்திரைப்படத்தை அவசியம் பாருங்கள்.

இயக்குநருக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல் பாராட்டு.

பிரைமில் கிடைக்கிறது.

Share

Comments Closed