‘Power Cut’

இன்று தமிழ்நாடெங்கும் பல இடங்களில் அறிவிப்பே இல்லாமல், ஒரு நேர வரைமுறை இல்லாமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. (இதுபோல பலதடவை நடந்துகொண்டுதான் இருக்கிறது என்றாலும் இன்று ரொம்ப ஓவர்.)

ராயப்பேட்டை – 3 மணி நேரம்
ராமாபுரம் – 3 மணி நேரம்
தாம்பரம் – 2 மணி நேரம்
திருநெல்வேலி டவுண் – 4 மணி நேரம்
திருச்சி (கேகே நகர் பகுதிகள்) – 2 மணி நேரம்
திருச்சி (முத்தரசநல்லூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகள்) – 6 மணி நேரம்
மதுரை – 3 மணி நேரம்
தே. கல்லுப்பட்டி – 8 மணி நேரம்
நாகர்கோவில் – 3 மணி நேரம்

இன்னும் கோயமுத்தூர், தாராபுரம், ஈரோடெல்லாம் கேட்டால் தெரியும்.

நமது முதல்வருக்கு, ஜெயலலிதாவிற்குப் பதில் சொல்லவும், தோழர்களுடன் மல்லுக்கு நிற்கவும், யாரேனும் ஏதேனும் படங்கள் எடுத்து அதை வெளியிடும் விழாவிற்கு அழைத்தால் உடனே செல்லவும் நேரம் இருக்கிறது. கலைஞர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கேட்டறிந்து அதில் ஆலோசனை சொல்ல ஆசையும், தெம்பும் இருக்கிறது. ஆனால் ஆற்காடு வீராஸ்வாமி என்றொரு அமைச்சர் எதற்காக அமைச்சராக இருக்கிறார் என்பதோ, தமிழ்நாட்டில் மின்வெட்டு எவ்வளவு பெரிய தொல்லை தரும் விஷயமாக, எரிச்சல் தரும் விஷயமாக மாறி, பொதுமக்களை அவதிப்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதை அறிய மட்டும் நேரமில்லை. ஏதேனும் மேம்பாலம் திறந்தால் மின்சாரத்தைத் திருட, மின்சாரம் கிடைக்கிறது. ஆனால் வீட்டுக்கு மின்சாரம் இல்லை. ராமன் குடிகாரனா என்று ஆராய்ச்சி செய்ய, மண்டையை உடைத்துக்கொண்டு யோசித்துக் காரணங்கள் கண்டுபிடிக்க திறமை இருக்கிறது. ஆனால் மின்வெட்டைத் தவிர்த்து மக்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து ஆராய நேரமில்லை. ‘அவாள்’ பற்றிக் கவிதை எழுத நேரமிருக்கிறது. ஆனால் ஆதாரத் தேவையான மின்வெட்டைத் தவிர்ப்பது எப்படி என்று யோசிக்க நேரமில்லை.

இப்படிப்பட்ட முதல்வர் நம் பூர்வஜென்மப் பயன். வேறு வழியே இல்லை, நாமும் பவர் கட் செய்துவிடவேண்டியதுதான்.

Share

Comments Closed