ஒரு காதல் கதை

மழை நாள்
—ஹரன் பிரசன்னா

சலனமற்றிருக்கும் வானம் தன்
சல்லடைத் துளைகளின் வழியே
சமைந்த மரங்களுக்குப்
பூப்புனித நீராட்டும்
மழைநாள்

ஆர்ப்பரிக்கும் வானத்தைத் தடுக்கும்
பலவண்ணப் பூக்கள் குடைகளாய்
சில தலைகள்

மாலை கடந்து காலையும் தொடர்ந்தால்
பள்ளிசெல்லும் தொல்லையில்லையெனச்
சில மனங்கள்

இறங்கி வரும் துளிகளில்
ஒரு துளி தொட்டாலும்
விலக்கவொவ்வா களங்கம் வருமென
நீட்டப்பட்ட நிழற்குடைகளில் நிற்கின்றன
சில கால்கள்

மழையை புகையால் துரத்தும்
முயற்சியாய் புகைகின்றன
சில கைகள்

மழைச்சாரல் மனதுள் பதித்துச் சென்ற
மயக்கத் தடங்களில் முந்தானை தொடுகின்றன
சில விரல்கள்

நனைந்து ரசிக்காமல்
வீணாகப்போய்க்கொண்டிருக்கிறது
மற்றுமொரு மழைநாள்

இந்தக் கவிதை மாலனின் மின்னிதழானத் திசைகளில் வெளியாகியிருந்தது.

Share

Comments Closed