ஜிஎஸ்டி தொடர்பான சீர்திருத்தங்களைப் பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இந்தியா முழுமைக்கும் பாஜக திணறிய நிலையிலும், அமெரிக்கா தொடர்ச்சியாக இந்தியாவுக்குக் கொடுத்து வரும் நெருக்கடியால் இந்தியப் பொருளாதார நிலைமை என்ன ஆகுமோ என்று எதிர்க்கட்சிகள் பயமுறுத்தி வந்த நிலையிலும், இவை இரண்டையும் எதிர்கொள்ளும் விதமாக மோடி இன்று தொலைக்காட்சியில் தோன்றி மக்களிடையே பேசி இருக்கிறார்.
இந்தியா முழுமைக்கும் ஜிஎஸ்டி குறைப்பு தரப் போகிற பயனைத் தெளிவாகப் புரிய வைத்திருக்கிறார்.
அமெரிக்கா பற்றி நேரடியாக எதுவும் பேசாவிட்டாலும் இந்தியா தன்னைத்தானே பொருளாதார ரீதியாகக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையைச் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
இந்தியப் பொருட்களைப் பயன்படுத்துவது பற்றிக் குறிப்பாக பேசியிருக்கிறார். இதனால் அனைவரும் இந்தியப் பொருள்களை வாங்குகிறார்களோ இல்லையோ, இந்தியப் பொருளாதாரம் இன்குளுசிவ் ஆக தன்னைத் தானே தேற்றிக் கொள்கிறதோ இல்லையோ, ஆனால் ஒன்று முக்கியமாக நடக்கும். அது இந்திய அளவில் அனைவருக்கும் ஒரு தைரியத்தை கொடுக்கும். உலக அளவில் இந்தியாவின் பொருளாதார இன்க்ளூசிவ்நெஸ் குறித்துப் பேசப்படும்.
அனைவரும் இல்லாவிட்டாலும் பலர் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் சுதேசிப் பொருட்களை வாங்க இயன்றவரை ஆர்வம் காட்டினால், (இதன் பொருள் முழுமையாக விதேசிப் பொருள்களைப் புறக்கணிப்பதல்ல, அது இயலாது என்பது எல்லோருக்கும் தெரியும்) அது உண்மையிலேயே இந்தியப் பொருளாதாரத்திற்கு பயனுள்ளதாகவும் அமையும்.
இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு பேசி இருக்கிறார் பிரதமர்.
ஏன் மோடி போன்ற ஒரு தலைவர் தேவை என்பதை இந்த நேரத்தில் தொலைக்காட்சியில் தோன்றிப் பேசியதன் மூலம் மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்தி இருக்கிறார் மோடி.
நவராத்திரியில் நயோ இந்தியா பிரகாசமாகத் தொடங்கட்டும்.
பாகிஸ்தானுக்குள் எல்லை கடந்துசென்று அதன் தீவிரவாதப் பகுதிகளைத் (லாஞ்ச் பேட்) தாக்கிய இந்திய ராணுவத்தின் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நம் பெருமைகளுள் ஒன்று. மோடியைப் பற்றிப் பேசினாலே, பக்தாஸ் என்றும் எல்லையில் இந்திய ராணுவம் என்றும் பகடி செய்தும், தேசப்பற்று என்ற ஒன்றைக் கிண்டலுக்கும் கேவலத்துக்கும் உரியது என்றும் ஒரு பெருங்கூட்டம் இன்று ஆக்கிவரும் நிலையில், இத்திரைப்படத்தின் தேவை முன்னெப்போதையும்விட மிக அதிகமாக இருக்கிறது. அதாவது மோடியை ஓட்டுகிறோம் என்ற போர்வையில் இவர்களுக்குள்ளே இருக்கும் இந்திய வெறுப்பைக் கிண்டல் என்ற பெயரில் உலவவிடுகிறார்கள் என்பதெல்லாம் நமக்குப் புரியாமலில்லை. அர்பன் நக்ஸல்களின் ஃபேஸ்புக் அப்ரெசெண்டிகளுக்கு இத்திரைப்படத்தைக் காணிக்கையாக்குவது சரியானது.
கதை என்ற ஒன்று கிடையாது. இந்தியாவின் ராணுவத் தாக்குதல் என்ற மூன்று வார்த்தைகளே இலக்கு. இப்படி ஒரு படத்தை ஹாலிவுட்டில் நிறையப் பார்க்கலாம். இந்திய வரலாற்றின் முக்கியப் பக்கங்களை நம்மால் திரையில் கொண்டு வரமுடியவில்லை. பணத் தேவை தொடங்கிப் பல காரணங்கள் இருந்தாலும் நம்மால் இதுவரை இவற்றைத் திறம்படச் செய்யமுடியவில்லை என்பதே உண்மை. அதிலும் சமகால வரலாற்றுத் திரைப்படங்கள் என்றால் நம்மைக் குழி தோண்டிப் புதைத்துவிடுவார்கள். குறைந்தது ஹிந்தியிலாவது சில படங்கள் வந்திருக்கின்றன. அந்தவகையில் நம்மைப் பெருமை கொள்ளச் செய்யும் ஒரு படமாக இத்திரைப்படம் வந்திருக்கிறது.
முதலில் இத்திரைப்படத்தின் குறைகளில் இருந்து துவங்குவோம். திரைக்கதை என்ற ஒன்றை உருவாக்குவதற்காக தேய்வழக்கை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அல்ஸைமைர் அம்மா, தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழக்கும் அக்காவின் கணவர், இறக்கும் சிப்பாய்க்கு ஒரு அழகான மகள் மற்றும் கர்ப்பிணி மனைவி, இவர்களுக்கு மத்தியில் ஹீரோ. இவை எதுவுமே இல்லாமல் நேரடியாக சர்ஜிகல் ஸ்ட்ரைக்-க்குள் போயிருந்தாலும் சரியாகவே இருந்திருக்கும். ஆனால் உணர்வு ரீதியாக இணைக்கிறேன் என்று இயக்குநர் இப்படிச் செய்திருக்கிறார் போல.
ஒரு பிரசாரப் படம் என்று பார்த்தால் திரைக்கதையை இப்படி அமைத்துக்கொள்வதில் தவறில்லை. இயக்குநரும் இப்படி இப்படத்தை பாஜகவுக்கான பிரசாரப் படமாக எடுத்துக்கொண்டிருக்கலாம் என்றே யூகிக்கிறேன். என்னதான் ஒரு பொதுவான ஒன்றுக்காகப் போராடினாலும் அதன் பின்னே ஒரு சுயநலமும் அல்லது தனிப்பட்ட காரணமும் உள்ளது என்பது மிக வெற்றிகரமான சூத்திரமே. அதிலும் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழக்கும் மேஜரின் கர்ப்பிணி மனைவியும் மகளும் அழும் அந்த இரண்டு நிமிடக் காட்சி நெஞ்சை உலுக்குகிறது. (அந்த இரண்டு பேரும் ஜஸ்ட் ஒரு நிமிடத்தில் எப்படி நடிக்கிறார்கள்!)
மோடி, அஜித் தோவல், ராஜ்நாத் சிங், மனோஹர் பரிக்கர், அருண் ஜெட்லி (?) என மிகத் தேவையானவர்களை மட்டுமே படத்தில் காண்பிக்கிறார்கள். அஜித் தோவல் மட்டுமே மிக நீண்ட நேரம் படம் முழுக்க வருகிறார். மற்றவர்கள் எல்லாம் சில காட்சிகள் மட்டுமே. மனோகர் பரிக்கராக வரும் நடிகரின் தேர்வு அசரடிக்கிறது. மனத்தின் மூலையில் இனம்புரியாத சோகமும் வருகிறது. ராஜ்நாத் சிங்காக நடித்திருக்கும் நடிகரைப் பார்த்தால் அவரைப் பார்த்து பரிதாபப்படுவதா ராஜ்நாத் சிங்கைப் பார்த்து பரிதாபப்படுவதா என்று புரியாமல் போகிறது.
ஒரு ட்ரோனை வைத்துக்கொண்டு இத்தனை தூரம் செய்யமுடியுமா என்பது புரியவில்லை. இதைக்கூடவா பாகிஸ்தானால் கண்டுபிடித்திருக்கமுடியாது என்பதும் தெரியவில்லை. பாகிஸ்தானில் இருக்கும் உளவாளிகள் இந்தியர்களைவிட அதிகம் உதவுகிறார்கள்! ஆனால் சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்பது வெற்றிகரமான ஒன்று. அதன் உண்மைத்தன்மையின் பின்னணியில்தான் இதையும், இதுபோன்ற பிற குறைகளையும் கடக்கவேண்டி இருக்கிறது.
படத்தின் துல்லியங்களே மிகப் பெரிய பலம். இதுபோன்ற உண்மைகளைப் படமாக எடுப்பவர்கள் அமெர்ச்சூர்த்தனமாக எடுத்து வைத்து நம்மைக் கலங்கடிப்பார்கள். இத்திரைப்படத்தில் அக்குறை எங்கேயும் இல்லை. எதிலும் துல்லியம். அசரடிக்கும் ஒளிப்பதிவு, வியக்க வைக்கும் ஒலித் துல்லியம் – இந்த இரண்டும் நம்மைக் களத்துக்கே கொண்டு செல்கின்றன.
இறுதிக் காட்சிகள் மட்டும் அரை மணி நேரம் – வெறும் துப்பாக்கிச் சூடும் எறி குண்டுகளுமே. இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன அந்த ஒலிகள்.
யூரி பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து 19 இந்திய ராணுவத்தினரைக் கொன்றொழிக்கும் பாகிஸ்தானுக்குப் பாடம் புகட்டுகிறது இந்தியா. துல்லியமான பிசகாத சர்ஜிகல் ஸ்ட்ரைக்கில் ஒரு இந்திய ராணுவத்தினர்கூட பலியாகவில்லை என்பதுதான் இதில் முக்கியமான விஷயமே. ஐஎன்ஏ பேட்டியில் மோடி இதைக் குறிப்பிட்டிருந்தார். “சர்ஜிகல் ஸ்ட்ரைக் தோல்வி என்றாலும்கூடப் பிரச்சினையில்லை, ஒரு வீரர்கூட உயிரிழக்கக்கூடாது” என்று. இந்திய ராணுவத்துக்கு மோடியின் ஆட்சி நிச்சயம் பொற்காலம் என்றே சொல்லவேண்டும்.
இப்படம் நிச்சயம் பாஜகவின் பிரசாரமாகத்தான் பார்க்கப்படும் என்றாலும், மிகத் தெளிவாக, மிக சப்டிலாக இதை எடுத்ததில் வென்றிருக்கிறார்கள். எங்கேயும் பிரசாரத் தொனி இல்லை. எப்படியோ பாஜகவுக்கு புத்தி வந்திருக்கிறது என்பது பெரிய ஆச்சரியம். அதிலும் இறுதிக்காட்சி சட்டென முடிகிறது. எவ்வித விளக்கமும் அறிவுரையும் வேண்டுதல்களும் இல்லை. பெரிய ஆசுவாசம்.
ஒலி/ஒளிப்பதிவின் துல்லியத்துக்காகவும் விக்கி கௌஷலின் நடிப்புக்காகவும் (ராஸியில் நடித்தவர்), ஒரு முழுமையான இந்திய சமகால வரலாற்றுத் தருண திரைப்படமாக வந்ததற்காகவும் நிச்சயம் பார்க்கவேண்டும்.