Tag Archive for பிரபாகரன்

ஈழம் அமையும் – புத்தக விமர்சனம்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘ஈழம் அமையும்’ புத்தகத்தை வாசித்தேன். சமீபத்தில் நான் வாசித்த மிக முக்கியமான புத்தகமாகவே இதை நினைக்கிறேன். இதிலுள்ள அரசியல் என் நிலைப்பாடுகளுக்கு எல்லா வகையிலும் எதிரானதுதான் என்றாலும், இது எழுதப்பட்டிருக்கும் விதம் இந்நூலின் முக்கியத்துவத்தைக் கூட்டுகிறது.

cover_104771
ஈழம் அமையும், கா.அய்யநாதன், கிழக்கு பதிப்பகம்
அச்சுப் புத்தகம் ரூ 250, மின் புத்தகம் ரூ 100
அச்சுப்புத்தகத்தை வாங்க: NHM site | Flipkart | Amazon
மின்புத்தகத்தை வாங்க: DailyHunt (NewsHunt)

ஈழம் அமையும் என்ற தலைப்பிலேயே நாம் எத்தகைய நிலைப்பாட்டுள்ள நூலை வாசிக்கப்போகிறோம் என்பதைப் புரிந்துகொண்டுவிடலாம். எனவே மிக எளிதான முன் தயாரிப்புகளுடன் இந்நூலை அணுகமுடிகிறது. ஆனால் ‘ஈழம் அமையும்’ என்று தலைப்பிருந்தாலும், இந்நூல் 99% பேசுவது எப்படி விடுதலைப்புலிகளும் அப்பாவி ஈழத்தமிழ் பொதுமக்களும் கொன்றொழிக்கப்பட்டார்கள் என்பதையே. ஈழம் எப்படி அமையும் என்பதற்கு இந்நூல் அரசியல் ரீதியாகவோ செயல்பாட்டு ரீதியாகவோ எவ்வித தீர்வையும் சொல்லவில்லை. இந்நூலாசிரியர் சொல்லியிருக்கும் தீர்வு, இந்நூலின் கனத்துடன் ஒப்பிடுகையில் இதை வாசிக்கும், இக்கொள்கையையொத்த மனமுடையவர்களுக்கு பெரிய அதிர்ச்சியாகவே இருக்கும். ஆம், அரவிந்தர் அருளில் ஒருநாள் ஈழம் அமையும் என்கிறார்.

ஒரு தமிழ்நாட்டுத் தமிழனாக உண்மையில் தனி ஈழம் அமைகிறதா இல்லையா என்பதில் எனக்கு எவ்வித தீவிரக் கருத்தும் இல்லை என்பதே உண்மை. ஏனென்றால் உடல்சார்ந்தோ சுதந்திரம் சார்ந்தோ நான் எந்தவொரு இன்னலையும் அனுபவிக்கவில்லை. மிகச் சாதாரண ஒரு சுயநலமியாகவும் நான் இருக்கலாம். ஆனால் அங்கே நடக்கும் இனப்படுகொலை நிச்சயம் மனத்தை உலுக்கியது என்பதில் மாற்றமில்லை. ஒருவகையில் இப்பார்வை இந்தியாவின் பார்வைதான். என் பார்வை இந்தியாவின் பார்வையாகத்தான் இருக்க முடியும். என் போலவே பெரும்பாலான தமிழ்நாட்டுத் தமிழர்களும் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். மிகக் குறைவானவர்களே உணர்ச்சிபொங்க இந்த அரசியலை அணுகுகிறார்கள் என்பது என் எண்ணம்.

இதில் மிக முக்கியமான விஷயம், விடுதலைப் புலிகளையும் அப்பாவி ஈழத் தமிழர்களையும் பிரித்துக்கொள்வது. விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள், எனவே அவர்கள் அழித்தொழிக்கப்படவேண்டியவர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர்களை சாக்காக வைத்து பொதுமக்களைக் கொல்வது என்பது ஏற்புடையதல்ல. இங்கேதான் பெரிய அரசியலை இருபக்கமும் நாம் பார்க்கலாம். ஈழத் தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் பிரித்துக்கொள்ளாதவாறு விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்களை ஈழத்தமிழர்களின் எதிரிகளாகச் சித்தரிப்பார்கள். இந்த சித்தரிப்பு ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது என்பதுதான் இன்றைய நிலை.

இப்புத்தகம் மிகத் தெளிவான திட்டமிடலுடன் விடுதலைப்புலிகளையும் ஈழப் பொதுமக்களையும் எவ்விதத்திலும் பிரிக்காமல் பார்த்துக்கொள்கிறது. எங்கெல்லாம் விடுதலைப்புலிகள் பற்றிய குறிப்புகள் வருகின்றனவோ அதை ஒட்டியே ஈழத்தமிழர்கள் பற்றிய குறிப்புகள் மிகக் கவனமாகச் சொல்லப்படுகின்றன. எவ்வித அரசியலும் இன்றிப் இப்புத்தகத்தைப் படிப்பவர்கள் அவர்களறியாமலேயே இதில் விழுந்துவிடுவார்கள்.

இப்புத்தகம் முன்வைக்க வரும் மிகமுக்கியமான ஒரு விஷயம், விடுதலைப்புலிகளின் அழித்தொழிப்புக்கு, எனவே ஈழத்தமிழர்களின் ஒழிப்புக்கு மிக முக்கியக் காரணம் இந்தியாதான் என்பது. தொடக்கம் முதல் புத்தகத்தின் இறுதிவரை இந்திய வெறுப்பு இலங்கையின் சிங்கள பேரினவாத அரசின் மீதான வெறுப்புக்கு இணையாக அல்லது அதற்கும் மேலாக ஆசிரியரின் கொள்கைக்கு வலுவூட்டும் ஆதாரங்களுடன் அடுக்கப்பட்டுள்ளது. அத்தனை ஆதாரங்களின் அடிப்படையும் ஒன்றுதான். புவிசார்நலனுக்காக இப்போரை இந்தியா நடத்தியது என்பதுதான் அது. இந்தியாவுக்குப் போட்டியாக சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இப்போருக்கு ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக உதவின என்றும் சொல்லப்படுகிறது. இப்படி ஒட்டுமொத்த உலகங்களின் முக்கிய நாடுகளும் விடுதலைப்புலிகளை எனவே ஈழத்தமிழர்களை ஒழித்துக்கட்டினார்கள் என்கிறார் ஆசிரியர் அய்யநாதன்.

மறந்தும்கூட ஒரு வார்த்தைகூட விடுதலைப்புலிகளின் மீதான விமர்சனத்தை வைக்கவில்லை. விடுதலைப்புலிகள் சமாதானத்துக்குத் தயாராக இருந்தார்கள் என்பதை மீண்டும் மீண்டும் பல்வேறு இடங்களில் பல்வேறு ஆதாரங்களுடன் சொல்லும்போது, விடுதலைப்புலிகள் காந்திய இயக்கம்தானோ, நமக்குத்தான் உண்மை புரியாமல் போனதோ என்றும் குழப்பமே ஏற்பட்டுவிடுகிறது. அதிலும் விடுதலைப்புலிகள் சுனாமியின்போது எப்படி சிங்களவர்களுக்கும் உதவினார்கள் என்று மறுபடி மறுபடி சொல்லும்போது, இது ஒன்றைத்தவிர விடுதலைப்புலிகள் சிங்களவர்களுக்கு எப்போதும் உதவியதில்லையோ என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது.

இந்தியாவின் பிரதமர்களின் இந்திரா காந்தி மட்டுமே தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவாக உண்மையாக நடந்துகொண்டார் என்று சொல்லும் இந்நூல், இந்தியாவின் மற்ற எல்லா பிரதமர்களையும் ஒரே தட்டில் வைக்கிறது – வாஜ்பாய் உட்பட. இன்று ஈழம் அமையும் புத்தக வெளியீட்டில் பேசிய வைகோ இக்கருத்தை மறுத்து வாஜ்பாய்க்கே தெரியாமல் அதிகாரிகளின் லாபியால்தான் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலை இந்திய அரசால் அச்சமயத்தில் எடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்றார். இந்திரா காந்தியின் ஈழப்பாசத்துக்குக் காரணம் கூட, இலங்கை அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்ததுதான் என்றும் அய்யநாதன் இந்நூலில் சொல்கிறார்.

இந்நூலின் முக்கியத்துவம் என்பது – மிக வரிசையாக அத்தனை நிகழ்வுகளும் ஆதாரங்களுடன் அடுக்கப்பட்டுள்ளன. மிகத் தெளிவான எழுத்துநடை. ஆதாரங்களுக்கு இடையேயான புள்ளிகள் மிகத் தெளிவான தர்க்கத்தால் இணைக்கப்பட்டுள்ளன. தன் கொள்கை நிலைப்பாட்டில் இருந்துகொண்டு எப்படி ஒரு சிறந்த புத்தகத்தை எழுதவேண்டும் என்பதற்கு இந்நூல் ஒரு கையேடு. அதே சமயம் இந்நூல் சறுக்கும் இடங்களைப் பார்க்கலாம்.

முதல் குறை என்பது, கூறியதைப் பலமுறை மீண்டும் மீண்டும் கூறுவது. ஒருகட்டத்தில் சலிப்பேற்பட்டுவிடுகிறது.

இன்னொருகுறை, அய்யநாதனின் கொள்கை நிலைப்பாட்டுக்கு எதிர்நிலைப்பாட்டுடையவர்களுக்கு இந்நூல் எப்படி உதவும் என்பது. இதை மிகக் குழப்பான ஒரு மொழியில், புத்தகம் படிக்காதவர்களுக்குப் புரியாத வகையில், ஜென்ராம் இன்று ‘ஈழம் அமையும்’ புத்தக வெளியீட்டில் குறிப்பிட்டார். இந்நூலை இக்கொள்கையை ஏற்காதவர்களும் கொண்டாடமுடியும் என்பதுதான் அவர் சொல்ல வந்தது. அதை என் உதாரணம் மூலமே விளக்குகிறேன்.

விடுதலைப் புலிகள் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டியவர்களே என்பதே என் நிலைப்பாடு. அதை இந்தியா செய்து முடித்தது என்றால் அதை நான் இந்தியாவின், காங்கிரஸின், அதற்கு உதவிய எதிர்க்கட்சிகளின், அண்டைநாடுகளின் சாதனையாகவே பார்ப்பேன். இந்நூலே அதற்கான தரவாக அமையும். இதைத்தான் ஜென்ராம் சொல்லவந்தார் என்று நினைக்கிறேன். அப்படித்தான் இந்நூல் உள்ளது. விடுதலைப்புலிகள் ஒழிக்கப்படும்போது பொதுமக்கள் கொல்லப்படக்கூடாது என்பதற்கான உறுதியை இந்திய அரசு பெறவில்லை, அப்படிக் கேட்டுப் பெறும் வகையில் இந்திய அரசு இல்லை அல்லது அதை முக்கியமாக இந்திய அரசு நினைக்கவில்லை, அல்லது ஈழத்தமிழ்ப்பொதுமக்கள் ஒழிந்தாலும் பரவாயில்லை புலிகள் ஒழியட்டும் என்று இந்திய அரசு நினைத்திருக்கலாம் என்பதில் எது ஒன்று உண்மையென்றாலும் அது இந்தியாவின் பக்கம் நிகழ்ந்த பெரிய சறுக்கல்தான். அதுவும் மீண்டும் சரிசெய்யப்பட இயலாத ஒரு தோல்வி. ஒருவகையில் யோசித்துப் பார்த்தால் இத்தகைய ஒரு பயங்கரவாத ஒழிப்பில் இப்படி நடப்பதுதான் உலகம் முழுக்க நடந்த வரலாறுகளில் இருந்து நாம் தெரிந்துகொள்வது. இப்படிச் சொல்லி எவ்வகையிலும் நான் இதை நியாயப்படுத்தவில்லை என்பதை உறுதியாகச் சொல்லிவிடுகிறேன். ஆனால் இப்படித்தான் நடக்கிறது. இந்திய அமைதிப்படையின் மீதான குற்றச்சாட்டுகளிலும் நாம் இதைப் பார்க்கலாம். இதைவிட மிக முக்கியமான எடுத்துக்காட்டாகச் சொல்லவேண்டுமென்றால் – விடுதலைப்புலிகளின் செயல்பாட்டிலேயே நாம் பார்க்கலாம். அவர்கள் எத்தனை பேரை எதற்காகக் கொன்றார்கள் என்று யோசித்துப் பார்த்தால் புரியும். சிறுவர்களை, தமிழ் முஸ்லிம்களை, சக இயக்கத்தவர்களைக் கொன்றார்கள். அதற்கான நியாயங்கள் மெல்ல அத்தரப்பிலிருந்து உருவாகிவரும். இதுவே மிகப்பெரிய பரப்பில் ராணுவத்தரப்பிலும் நடந்துவிடுவது கொடுமைதான்.

இந்நூலின் இன்னொரு சறுக்கல் – இறுதி அத்தியாயங்களில் அய்யநாதன் சொல்லும் ஆதாரமற்ற வம்புகள் பற்றிது. ராஜிவ் காந்தி கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கவேண்டும் என்றும், அவரைக் கொல்வதற்கான காரணம் எதுவும் விடுதலைப்புலிகளுக்கு இல்லை என்றும், சர்வதேச சதியில் ராஜிவை ஒழிக்க விடுதலைப் புலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றும் ஜெயின் கமிஷனை சுட்டிக்காட்டி அய்யநாதன் சொல்கிறார். (புத்தகத்திலிருந்து: ராஜிவ் காந்தியை படுகொலை செய்யச் சர்வதேச அளவில் சதித் திட்டம் தீட்டப்பட்டது; அத்திட்டம் தீட்டியவர்களே ராஜிவ் காந்தியைக் கொல்வதற்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்என்கிற உண்மைகள் எல்லாம் மத்திய அரசு அமைத்த நீதிபதி மிலாப் சந்த் ஜெயின் விசாரணை ஆணையத்தில் வெளிவந்தது.) ஆயிரத்தோராவது முறை இந்த வம்பை நாம் படிக்கிறோம். விடுதலைப்புலிகள் கொல்லவில்லை என்ற ஒருதரப்பிலிருந்து வேறுபட்ட இன்னொரு புலிஆதரவு தரப்பு இது. புலிகள்தான் கொன்றார்கள், ஆனால் சதி அவர்கள் செய்யவில்லை என்பது. அய்யநாதன் ஒருபடி மேலேபோய், புலிகள் கொன்றிருக்க வாய்ப்பில்லையோ என்ற சந்தேகத்துடன் நிச்சயமாக சதியை அவர்கள் செய்திருக்கமாட்டார்கள் என்கிறார். கருமைக்கும் வெண்மைக்குமிடையேதான் எத்தனை நிறங்கள். சிபிஐ ஏன் சதிக்கான காரணத்தைக் கண்டறியவில்லை என்பதைப் பெரிய விஷயமாக முன்வைக்கிறார் அய்யநாதன்.

இந்திராகாந்தி கொலையில் உள்ள மர்மங்கள், அதில் சோனியாவின் பங்கு என்ன (தாக்கர் ஆணையத்தை முன்வைத்து சொல்கிறார் ஆசிரியர்), நரசிம்மராவ் சந்திராசாமி பங்கு என்ன, லக்குபாய் பதக்கிடம் சந்திராசாமி சொன்னது என்ன, சுப்ரமணியம் சுவாமி திருச்சி வேலுச்சாமியின் கேள்விகளுக்கு எப்படி உளறினார், எப்படி நடுங்கினார் என்றெல்லாம் திண்ணைப் பேச்சுகளில் அலைபாய்கிறது இப்புத்தகம். சுப்ரமணியம் சுவாமிக்கு கொலையில் பங்கிருக்கிறது என்றால் அதே சுப்ரமணியம் சுவாமி சோனியாவுக்குப் பங்கிருப்பதாகச் சொல்கிறாரே, சோனியாவும் மௌனமாக இருக்கிறாரே என்ற கேள்விக்கு ‘அது புரியாத ஒரு புதிர்’ என்று ஓரிடத்தில் நழுவும் அய்யநாதன், இன்னொரு இடத்தில் இப்படிச் சொல்கிறார்: இந்திரா காந்தி படுகொலையில் சோனியாவின் பங்கு பற்றிய உண்மைகளை இந்திய மக்கள் அறியாதிருக்கலாம், ஆனால், இந்திரா காந்தியைச் சதி செய்து வீழ்த்திய அந்த சக்திகளுக்கு தெரியாமல் இருக்குமா? அதனால்தான், சந்திராசாமி, சுப்ரமணியம் சுவாமி ஆகியோரின் முகத்திரைகள் விசாரணை ஆணையங்களில் கிழித்தெறியப்பட்ட பின்னரும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் சோனியா காந்திக்கு இல்லாமல் போனது. இல்லையென்றால், சோனியாவை இன்றுவரை சுப்ரமணியம் சுவாமி மிரட்டிக்கொண்டிருக்கிறாரே, என்ன காரணம்? அதன் பின்னணி என்ன?” இவ்வாறாக ஒரு பட்டியலை இட்டுவிட்டு, சோனியா தன் கணவர் ராஜிவின் கொலைக்காக விடுதலைப்புலிகளை ஒழிக்கவில்லை, தன் மீதான பழியை மறைக்கவே விடுதலைப்புலிகளை ஒழிக்கும் இலங்கையின் போருக்கு உதவியுள்ளார் என்று முடிக்கிறார் அய்யநாதன்.

இதைவிட இன்னொரு வம்பு என்னவென்றால், சிவராசன் எப்போதோ புலிகள் இயக்கத்திலிருந்து விலகிவிட்டார் என்றும் இவர்களையெல்லாம் வழிநடத்துவதெல்லாம் சந்திராசாமியும் சுப்ரமணியம் சுவாமியும்தான் என்று பெங்களூர் ரங்கநாத் (ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர், சிவராசன், சுபா உள்ளிட்டவர்களுக்கு பெங்களூருவில் தங்குவதற்கு வீட்டை ஏற்பாடு செய்தவர்) சொன்னதையும் இந்நூலில் காணலாம்! ராஜிவ் கொலையில் சுப்ரமணியம் சுவாமியைப் பற்றி திருச்சி வேலுச்சாமி கூறியுள்ளதையும், ரகோத்தமன் அவரது ‘ராஜிவ்கொலை – மர்மம் விலகும் நேரம்’ புத்தகத்தில் மரகதம் சந்திரசேகர் பற்றியும் மறைக்கப்பட்ட வீடியோ பற்றியெல்லாம் கூறும் அய்யநாதன், திமுகவின் ஸ்ரீபெரும்புதூர் கூட்டம் ரத்து செய்யப்பட்டதைப் பற்றியும்  வைகோ ஏன் சாட்சியாக சேர்க்கப்பட்டார், ஏன் ரகோத்தமனால் விசாரிக்கப்படவில்லை, சிவராசனுக்கு உதவியது சீனிவாசய்யா என்ற நபர் வைகோவின் சகோதர் ரவிச்சந்திரனாக இருக்கலாம் என்றெல்லாம் ரகோத்தமன் சொல்லியிருப்பதை எங்கேயும் சொல்லவில்லை. ஆனால் விடுதலைப்புலிகளை ஒழிக்க ராஜபக்ஷே மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கருணாநிதியும் உதவினார் என்று பல இடங்களில் பதிவு செய்கிறார். அதாவது கருணாநிதி மேற்கொண்ட திடீர் உண்ணாவிரதம் முன்னரே திட்டமிடப்பட்டது என்றும் அதை தில்லி வட்டாரங்கள் அறிந்திருந்தன என்றும் சொல்கிறார். 2ஜி வழக்கின் கோப்புகளைக் காட்டி கருணாநிதியை எம்.கே.நாராயணன் மிரட்டினார் என்றும் சொல்கிறார்.

இந்நூலின் மிக மோசமான அத்தியாயம், கேரளா மாஃபியா என்று எழுதப்பட்டிருக்கும் அத்தியாயமே. உண்மையில் இந்திய அரசின் முடிவுக்குக் கட்டுப்பட்டு செயலாற்றிய பலரில் முக்கியமான மலையாளிகளைப் பொறுக்கியெடுத்து (எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், டி.கே.ஏ.நாயர், சதீஷ் நம்பியார், விஜய் நம்பியார், நிருபமா மேனன் ராவ்) கேரள மாஃபியாவே விடுதலைப்புலிகளின் எனவே ஈழத்தமிழர்களின் இனஒழிப்புக்கு காரணம் என்கிறார். ஏன் ‘கேரளா மாஃபியா’ ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடக்கிறார்கள் என்பதற்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து அய்யநாதன் சொல்கிறார் பாருங்கள்! இந்நூலை ஒட்டுமொத்தமாகத் தகர்க்கும் அத்தியாயம் அது. ஹனி டிராப்பிங் என்பதை வைத்து ஒரு மலையாளியை விடுதலைப்புலிகள் மாட்டிவிட்துதான் ‘கேரள மாஃபியா’வின் ஒட்டுமொத்த வெறுப்புக்கு காரணமாம்! முக்கியமான புத்தகம் கிசுகிசு கட்டுரைக்கு இணையாக இறங்கிவிடும் இடம் இது. உண்மையில் அங்கே கேரளாவைச் சேர்ந்தவர்கள் இல்லாமல் வேறு யார் இருந்திருந்தாலும் அப்படித்தான் செயல்பட்டிருப்பார்கள். 2-10-15 அன்று நடந்த ‘ஈழம் அமையும்’ புத்தக வெளியீட்டில் ‘கேரள மாஃபியா’வை மறுத்த ஒரே ஜீவன் ஜென்ராம் மட்டுமே. மிக மோசமான வன்மத்தை வெளிப்படுத்தும் இப்புத்தகத்தின் ஒரு மிகப்பெரிய கறை என்றே சொல்லவேண்டும். மிகத்தெளிவாக இந்திய வெறுப்பு, விடுதலைப்புலி ஆதரவு என்ற மடையை தமிழ்த்தேசியத்தின்பால் திருப்பும் உத்தி இது என்றுதான் தோன்றுகிறது.

புத்தகத்தின் முதல் பகுதி மிக நேர்த்தியான (கூறியது கூறல் ரொம்பவே அதிகம் என்றாலும்) ஆய்வுநூல் போன்று தோற்றம் கொள்ள, பிற்பகுதி வெற்று வம்புகளில் உழன்றுவிட்டது. இதைத்தான் ஜென்ராம் (ஈழம் அமையும் புத்தக வெளியீட்டில்) நாசூக்காக பத்திரிகையாளர் அய்யநாதன் என்றும் அரசியல்வாதி அய்யநாதன் என்றும் பிரித்துக்கூறினார். கூறிவிட்டு, ஆனாலும் பத்திரிகையாளர் அய்யநாதனே முழுக்க வெளிப்பட்டிருக்கிறார் என்று சொல்லிவிட்டார். சபை நாகரிகம் கருதி இருக்கலாம் என எடுத்துக்கொண்டேன்.

இந்நூலின் கடைசி அத்தியாயமே மிக முக்கியமானது. பலருக்கு அதிர்ச்சிகரமானது. அதில் நாம் புரிந்துகொள்ள பல விஷயங்கள் உள்ளன. அரவிந்தரின் அருளால் ஈழம் அமையும் என்கிறார் அய்யநாதன். இதை வைகோ (ஈழம் அமையும் புத்தக வெளியீட்டில்) மிக நாசூக்காகக் குறிப்பிட்டு, ஆங்கிலத்தில் ஹிந்தியில் மொழிபெயர்க்கும்போது கொஞ்சம் பார்த்து செய்ங்க என்று கேட்டுக்கொண்டார். அரவிந்தரின் அருளில் ஈழம் அமையும் என்றால் அத்தனை பிரச்சினை எல்லாருக்கும். விடுதலை பத்திரிகையில் இந்நூலைக் கைகழுவியே விட்டார்கள். ஈவெரா வகுத்துக்கொடுத்த பாதையில் எதையும் ஒற்றைவரியில்தான் இவர்களால் புரிந்துகொள்ளமுடியும் போல. நூல் முழுக்க மாங்குமாங்கென ஒருவர் தொகுத்து ஒரு தரப்பை முன்வைத்திருக்கிறார். கடைசியில் அவரது நம்பிக்கையின்பாற்பட்ட ஒன்றைச் சொல்கிறார். உடனே நூலை நிகாகரிக்கிறார்கள். ‘அரவிந்தரின் அருளில் அமையும் என்றால் அது இஸ்லாமிய கிறித்துவ நாடாக இருக்க வாய்ப்பில்லை, ஹிந்து நாடாக இருந்துவிடுமோ’ என்று பயந்து இந்நூலை நிராகரிக்கிறார்களோ என்னவோ யார் கண்டது.

Share

The killing of a young boy

http://www.thehindu.com/opinion/op-ed/the-killing-of-a-young-boy/article4428792.ece

பிரபாகரன் கொல்லப்பட்டதை என்னதான் ஓநாயின் பார்வையிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தாலும், இந்தச் சிறுவன் கொல்லப்பட்டதை ஓநாயாக வாழ்ந்து பார்த்தாலும் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றவில்லை. பிரபாகரன் பிறருக்குச் செய்தது அவருக்கே நிகழ்ந்தது என்னும் தத்துவங்கள் எனக்கும் தெரியும். ஆனாலும் இந்தப் படங்கள் மனதை உலுக்குகின்றன. முதலிரண்டு படங்களில் தெரியும் சிறுவனின் விளங்கமுடியாத கண்கள் தரும் பாதிப்பு சொல்லமுடியாதது. மனதை உலுக்கும் புகைப்படம். மேலதிக விவரங்களுக்கு தி ஹிந்துவில் வெளியாகியிருக்கும் கட்டுரையை வாசிக்கவும்.

Share

A trip to Sri Lanka – 3

இலங்கையின் அன்றாட வாழ்க்கையைப் பற்றிப் பலர் கேட்கிறார்கள். உண்மையில் அங்கிருந்த 9 நாளில், பெரும்பாலும் புத்தகக் கண்காட்சியில் இருந்துவிட்டு, இலங்கையின் பெரும்பாலான, பிரச்சினைக்குரிய பகுதிகளைப் பார்க்காமல் இதைப் பற்றி எழுதுவது சரியல்ல. நான் கண்ட பகுதிகள் யாழ்ப்பாணமும், கொழும்பும்தான்.

இரண்டிலுமே பாதுகாப்பு மிக முக்கியமான விஷயமாக உள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு இதைவிட மிகக் கடுமையான பாதுகாப்பு இருந்ததாகவும், இப்போது மெல்ல மெல்ல பாதுகாப்பைக் குறைத்துக்கொண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் அங்கிருப்பவர்கள் சொன்னார்கள். யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் உள்ள ராணுவ வீரர்களும் காவல்துறை வீரர்களும் ஒருவித அமைதியான மனநிலையில் இருப்பதாகத்தான் தோன்றியது.

போர் பற்றிய பயம் குறைந்துவிட்டதால், யாழ்ப்பாணத்தில் இரவுகளில் 9 மணி வரை எல்லாம் கடைகள் திறந்திருக்க ஆரம்பித்திருக்கின்றன. முன்பெல்லாம் கடைகளை மாலை 4 அல்லது 5 மணிக்கே பூட்டிக்கொண்டு போய்விடுவார்களாம்.

கொழும்பில் மிக இயல்பான வாழ்க்கையைப் பார்க்கமுடிந்தது. நாங்கள் வேனில் சென்றபோது கிட்டத்தட்ட 4 முறை நிறுத்தப்பட்டு, வேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சோதனை என்றால், வேன் டிரைவரிடம் மட்டும் பேசி, ஆவணங்களைச் சரி பார்த்து அனுப்பிவிடுகிறார்கள். டிராக் மாறி வந்தால், அதிக வேகத்தில் வந்தால் உடனே அங்கே ஃபைன் கட்டச் சொல்லிவிடுகிறார்கள்.

யாழ்ப்பாணத்தின் விளையாட்டு மைதானங்களில் நிறைய சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. முன்பெல்லாம் விளையாடுவார்களா என்று உடனிருந்த இலங்கைத் தமிழர்களிடம் கேட்டபோது, விளையாடுவார்கள் ஆனால் எப்போது செல் வெடிக்கும் என்ற பயத்துடனேயே விளையாடுவார்கள் என்று சொன்னார்கள். இப்போது அந்தப் பயம் முற்றிலும் இல்லை.

இப்போதைக்கு இலங்கையின் முக்கியக் கவலை, அங்கிருக்கும் அண்டர் வேர்ல்ட் தாதாக்கள்தான் என்றார் ஒரு நண்பர். இவர்களை ஒழிப்பதையே இப்போதைக்கு முக்கிய லட்சியமாக அரசு வைத்திருக்கிறது என்றார் அவர். நிறையப் பேர் திடீர் திடீரென்று காணாமல் போகிறார்கள். இதைப் பற்றிய செய்தியைத் தொடர்ந்து தினசரிகளில் காணமுடிந்தது.

நாங்கள் அங்கிருந்த சமயத்தில் எதிர்பாராத விபத்தொன்றில் டேங்கர் ஒன்று வெடித்து இரண்டு சீனர்கள் உட்பட சிலர் பலியாகிவிட்டனர். கிட்டத்தட்ட அனைவருக்கும் இது சாதாரண விபத்தா அல்லது புலிகளின் எழுச்சியா என்னும் ஆசை தோய்ந்த சந்தேகம் இருப்பதை உணர முடிந்தது. ஒருவகையில் நிம்மதியுடனும் இன்னொரு நிலையில் இனி என்னாகும் என்னும் கவலையோடும் அவர்கள் இருப்பதாகத்தான் தோன்றியது. நான் பார்க்காத மற்ற இடங்களில் என்ன நிலை என்று தெரியவில்லை. மேலும், நான் பார்த்த இடங்களிலும் நான் சொன்னதுதான் சரியான நிலை என்று அறுதியிட்டும் கூற இயலவில்லை.

* – * –

இனி இங்கே எழுதப்போவது நாங்கள் கண்ட மனிதர்கள் எங்களுடன் பகிர்ந்துகொண்டவை மட்டுமே. பெரும்பாலும் நானே நேரடியாகக் கேட்டவை, சில நான் நேரடியாகக் கேட்காமல், என்னுடன் வந்த நண்பர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்டவை. இதை நான் அப்படியே பகிர்ந்துகொள்கிறேனே ஒழிய, இதன் அரசியல் சரி தவறுகளுக்குள் நான் நுழையவில்லை. இதில் உண்மை பொய் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்கவில்லை. மேலும், தமிழர்கள் அவதிப்படும் இடங்களுக்குச் சென்று பார்த்தெல்லாம் எழுதவில்லை. அங்கிருந்த தமிழர்கள் ஓரிருவர் சொன்னதை மட்டுமே இங்கே பகிர்ந்துகொள்கிறேன். அவர்கள் ஆண்டுக் கணக்கோடு, நிலவியல் விவரணையோடு தெளிவாகச் சொன்னார்கள். என்னால் அதனை சரியாகச் சொல்லமுடியுமா எனத் தெரியவில்லை. மேலும் அவர்களது யாழ்ப்பாண தமிழ் வழக்கு மொழி அதி வசீகரமுடையது. சோதனை என்னும் பெயரில் அதனை எழுதி அழகிய தமிழைக் கொடுமைப்படுத்த விரும்பவில்லை. எனவே அப்படியே எனக்குத் தெரிந்த தமிழில் எழுதுகிறேன். நம்மிடம் பகிர்ந்துகொண்ட நண்பர்களிடம் ஒலி அல்லது ஒளிப்பதிவு செய்து அதனையே வலையேற்றிவிடலாம் என்று எண்ணியபோது அனைவரும் பின்வாங்கிவிட்டார்கள். தங்கள் கருத்து உலகெங்கும் பரவவேண்டும் என்ற எண்ணமும் உள்ளது, (ஒருவர் ஆவேசமாக பிபிசி வரைக்கும் இதெல்லாம் தெரியணும் என்றார்) அதே சமயம் தங்கள் பெயர் வெளிவரக்கூடாது என்பதிலும் கவனம் உள்ளது. இனி நீங்களே படியுங்கள்.

அந்த நண்பருக்கு ஒரு மனைவி, மூன்று குழந்தைகள். முல்லைத்தீவில் பிறந்தவர். மட்டக்களப்பில் வாழ்பவர். வேலை நிமித்தம் சில ஆண்டுகள் யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்திருக்கிறார். தற்போது யாழ்ப்பாணத்தில், ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறார். இன்னொருவர் வீட்டு மராமத்து வேலைகள். கலவையாக அவர்கள் தங்களது வாழ்க்கையில் இருந்து சொன்ன விஷயங்கள் இங்கே.

அவரது தம்பி இயக்கத்தைச் சேர்ந்தவர், அதாவது சேர்க்கப்பட்டவர். இயக்கத்தில் 4 மாதங்கள் மட்டுமே இருந்திருக்கிறார். காலில் ஒரு குண்டு பாய்ந்து, இன்னும் அக்குண்டு எடுக்கப்படாமலேயே உள்ளது. இப்போது அவருக்கு 29 வயது இருக்கலாம். திருமணம் ஆகிவிட்டது இப்போது. இயக்கத்தில் தமிழ்ப் போராளிகளின் எண்ணிக்கை குறைந்தபோது, இயக்கத்திலிருந்து வலுக்கட்டாயமாக வந்து தமிழர் பகுதியில் இருக்கும் இளைஞர்களைக் கூட்டிச் சென்றிருக்கிறார்கள். இதனை அறிந்த நம் நண்பரும் அவரது குடும்பமும், அந்த நண்பரின் தம்பியை மறைத்து வைத்துவிட்டது. இயக்கத்தை சேர்ந்தவர்கள் வந்தபோது அவரது தம்பி இல்லாததால், அவருக்குப் பதிலாக நம்மோடு பேசிய நண்பரையே கூட்டிக்கொண்டு போய்விட்டார்களாம். தம்பியைக் கொண்டுவந்து விட்டுவிட்டு, இவரைக் கூட்டிச் செல்லலாம் என்று சொல்லிவிட்டார்களாம். வேறு வழியின்றி, தம்பியை விட்டுவிட்டு, இவரை அழைத்து வந்திருக்கிறார்கள். அப்படி அங்கு சேர்ந்த அந்தத் தம்பி 4 மாதங்கள் அங்கே இருந்திருக்கிறார். பின்னர் கடைசி கட்டப் போரில் எப்படியோ அங்கிருந்து தப்பி வந்துவிட்டார். இயக்கத்திலுள்ளவர்களை சரணடையச் சொல்லியபோது இவரும் சரணடைந்துவிட்டார். இவர் இருந்தது 4 மாதங்கள் மட்டுமே என்பதாலும், இவர் மிக அடிப்படை நிலையில் மட்டுமே பணி புரிந்திருந்ததாலும் அவருக்கு ஒரு வருடம் 7 நாள்கள் சிறைத்தண்டனை கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னார் நண்பர். இன்னும் பலர் வீட்டில் சிறார்களை அழைத்துச் சென்று, மறுநாளே ஒரு பெட்டியில் கொண்டு வந்து தருவார்களாம், அவன் இறந்துவிட்டான் என்று. இப்படி இறந்ததாக நினைத்துவிட்ட இரண்டு பையன்களை இப்போது உயிருடன் பார்த்துக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படியானால் புதைக்கப்பட்டது யார் என்று தெரியவில்லை என்றார்.

யாழ்ப்பாணம் (1985?) இலங்கை அரசு வசம் இருந்த நேரம். புலிகள் இயக்கம் யாழ்ப்பாணத்தைச் சுற்றி வளைத்துவிட்டது. புலிகளின் கட்டளை, யாழ்ப்பாணத்துத் தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்குச் செல்லவேண்டும் என்பது. அங்குள்ள தமிழ் மக்கள் புலிகளின் மீது பெரிய நம்பிக்கை இருந்ததால், கையில் கிடைத்த பொருள்களுடன் வன்னி நோக்கிச் சென்றது. கிட்டத்தட்டட் 5 லட்சம் பேர் என்றார் அவர். இரண்டு நாளாக கிட்டத்தட்ட 40 கிமீ நடந்ததாகச் சொன்னார். யார் உணவு தருவார்கள் என்றபோது, பல தமிழர்கள் அங்கங்கே உணவு உண்டாக்கிக் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள் என்றும், வன்னியிலும் உணவெல்லாம் தயாராகவே இருந்ததாகவும் சொன்னார். ஆனால் அத்தனை எளிதில் அவர்களை வன்னிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை ராணுவம். இவர்கள் செல்லும் வழியெங்கும் குண்டுகள் வீசி, பல பொதுமக்களைக் கொன்றிருக்கிறார்கள். எப்போது என்ன நடக்கும் என்ற பதைபதைப்பில்தான் வன்னி சென்றதாகச் சொன்னார். இவர்கள் வன்னி சென்றதும், பின்னாலேயே இயக்கமும் வன்னி வந்துவிட்டது என்றும் சொன்னார்.

எப்போது எங்கே எதற்காக செல் வெடிக்கிறது என்பதே தெரியாது. வீடெங்கும் பங்கர் அமைத்து வைத்துக்கொள்வோம். கொஞ்சம் வசதி உள்ளவர்கள் பங்கரை நன்றாகவே வடிவமைத்துக்கொள்வார்கள். பலர் உடைந்துபோன பலகையின் மீது தென்னம்பாளையைப் போட்டு (இன்னும் நிறைய சொன்னார், ஞாபகமில்லை) பங்கர் உருவாக்கிக்கொள்வார்கள். செல் விழவும் குழந்தைகள் பழக்கப்படுத்தியதைப் போல அங்கே சென்று ஒளிந்துகொள்ளும். கடும் மழையில் பங்கரில் நீர் சேர்ந்திருக்கும். பாம்புகளும்கூட குடிவந்திருக்கும். அது தெரியாமல் அங்கே ஒளிந்துகொண்டு, பாம்பு கொத்தி இறந்தவர்கள் அநேகம்.

சண்டை என்பது எப்போதும் தமிழ் இயக்கங்களுக்கும் ராணுவத்துக்கும்தானே ஒழிய, தமிழ் மக்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் பெரிய அளவில் இல்லை. ஒருவித இறுக்கம் இருக்கும் என்பது உண்மைதான் என்றாலும், பெரிய பெரிய சண்டைகள் எல்லாமே இயக்கத்துக்கும் ராணுவத்துக்கும்தான் என்றார்.

கடைசி 3 மாத காலக்கட்டத்தில் ரொம்ப கஷ்டப்படுவிட்டோம். முல்லைத் தீவில் இருந்தோம். அரசு எச்சரிக்கை விட்டு சரணடையச் சொல்கிறது. இயக்கமோ எங்களை சரணடைய அனுமதிக்கவில்லை. மீறிச் சென்றால் இயக்கமே எங்களைக் கொன்றுவிடுமோ என்ற அச்சம் நிலவியது. மட்டகளப்பு, சண்டை நடக்கும் பகுதி, அதைத் தாண்டி அந்தப் பக்கத்தில் கேம்ப். நாங்கள் இங்கிருந்து கேம்புக்குச் செல்லவேண்டும். கேம்ப்பில் இருந்து சண்டை நடக்கும் பகுதிக்கு அரணாக பல தடைகளை இயக்கம் ஏற்படுத்தியிருந்தது. சிறுவர்களை பணிக்கு அமர்த்தியிருந்தது. அவர்களும் சரியாகப் பயிற்சி அளிக்கப்படாதவர்கள். இயக்கத்தின் வசம் ஆளே இல்லை என்னும் நிலையில் சிறுவர்களை பணிக்கு கட்டாயமாக அமர்த்தவேண்டியது தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது. இயக்கத்தைச் சேர்ந்த பலர் போரில் ஈடுபட மனமில்லாமல் ராணுவத்திடம் சரண்டைந்துகொண்டிருந்தார்கள். நம் நண்பர் முல்லைத்தீவிலிருந்து தன் மனைவி, மூன்று குழந்தைகளிடமிருந்து இயக்கத்திடமிருந்து தப்பித்து கேம்ப் சொல்ல முடிவெடுத்தார். இடையில் சிறிய சாக்கடை போன்ற ஒன்றைக் கடக்கவேண்டியிருக்கும். அங்கே இருப்பதெல்லாம் மல மூத்திரம்தான். வேறு வழியில்லை, அதனைக் கடக்கவேண்டும். நண்பர் தன் இரு மகன்களைக் கூட்டிக்கொண்டு அதில் இறங்கிவிட்டார். அவருடன் பல தமிழர்கள் அப்படிக் கடந்தார்கள். ஆனால் பாதியில் இயக்கம் தப்பிக்க நினைத்தவர்களை வளைத்து, அழைத்துக்கொண்டு சென்றுவிட்டது. நண்பரின் மனைவியும், மூன்றாவது கைக்குழந்தையும் (ஒன்றரை வருடம்) அந்தப் பக்கம் இயக்கத்தின் பக்கத்தில். எப்படியோ தப்பிய நமது நண்பரும் அவரது இரண்டு மகன்களும் இந்தப் பக்கம். ராணுவம் தப்பி வந்தவர்களையெல்லாம் வண்டி வைத்து கேம்புக்கு அழைத்துச் சென்றது. அங்கு, தப்பி வந்தவர்களிடம், இயக்கத்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். தப்பி வந்தவர்களில் பலரது குடும்பம் அங்கேயே இருந்ததால், பலரும் தாங்களாகவே முன் வந்து இயக்கம் எப்படியெல்லாம் அரண் அமைத்திருக்கிறது, எந்த வழியில் சென்றால் பிடிக்கலாம் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். அடுத்த இரண்டு நாள்களில் ராணுவம் அப்பகுதியை நோக்கி முன்னேறியது. இயக்கம் தன் பிடியில் உள்ளவர்களை இனி சமாளிக்க முடியாது என்று சொல்லி, தான் தப்பிக்க நினைத்து ஓடியிருக்கிறது. அப்போது நடந்த கடும் சண்டையில் உயிரிழந்த பொது மக்கள் பலர். நண்பரின் மனைவி தன் கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு, தான் தப்பிக்கவேண்டிய பகுதியில் சண்டை நடப்பதால், அதன் எதிர்வழியாகச் சென்று கேம்ப்புக்குப் போய்விடலாம் என நினைத்து, எதிர்ப்பக்கமாக ஓடியிருக்கிறார். வழியெங்கும் பொது மக்களின் பிணங்கள், தலைகள், கைகள், ரத்தம். அதற்குமேல் அந்த வழிச் செல்ல முடியாது எனக் கருதி, வேறு வழியின்றி, முதலில் நண்பர் தப்பித்த அதே வழியிலேயே சென்றிருக்கிறார். அதே முத்திர மலக் குளத்தின் வழிச் செல்லும்போது, தன் முதுகில் சுமத்திக்கொண்டு வந்த கைக்குழந்தை அந்த நீரில் விழுந்துவிட, இவருக்கும் மயக்கம் வர, என்ன நடந்தது என்றே தெரியவில்லை. யாரோ ஒரு பெண் கைக்குழந்தையைக் கைப்பற்றித் தூக்கி எதிர்ப்புறம் விட்டிருக்கிறார். அவரே இவரது தலைமுடியைப் பிடித்துக்கொண்டு இழுத்துவந்து அக்கரையில் போட்டுவிட்டுப் போயிருக்கிறார். விழித்துப் பார்த்தவருக்கு பெரிய ஆச்சரியம். எப்படியோ தப்பித்து குழந்தையுடன் கேம்ப் சென்றிருக்கிறார். நமது நண்பர் ஒரு கிறித்துவர். மரியாள்தான் தன் குழந்தையைக் காப்பாற்றியது என்றும், யேசுவே தன் மனுஷி ஜீவித்திருக்கக் காரணம் என்றும் கூறினார். இப்படி தப்பித்து வந்தவர்களுள், கேம்ப் பக்கம் ஓர் ஆணும் அவரது ஒன்றரை மாத சிசுவும் மாட்டிக்கொண்டு விட்டது. மனைவியோ இயக்கத்தின் பிடியில். பசிக்கு அழும் குழந்தைக்கு, ஒரு பெண்ணைப் பிடித்து பால் புகட்டச் சொன்னதாம் ராணுவம். அன்று சமைந்த பெண்கள் பற்றியெல்லாம் பல கதைகளைச் சொன்னார் நண்பர்.

மட்டக்கிளப்பில் இருந்து கிளம்பும்போது, பெரிய குழி வெட்டி, அதனுள்ளே பாலிதீன் பையைப் போட்டு, மூன்று டிவி, கிரைண்டர் மிக்ஸி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷினெல்லாம் போட்டு, மூடி வைத்துவிட்டு வந்தாராம். எப்படியும் சில நாள்களில் திரும்பிவிடலாம் என்று நினைத்தாராம். ஆனால் இதுவரை அங்கே திரும்ப போகமுடியவில்லை. இன்னும் ராணுவத்தின் பிடியில் இருக்கும் அப்பகுதியில், கன்னி வெடிகள் பல இருப்பதால், அதனை நீக்கிய பின்பே மக்கள் வசம் ஒப்படைப்போம் என்று ராணுவம் கூறிவருகிறதாம். அழகான வீட்டைக் கட்டி இரண்டு ஆண்டுகள் அங்கே வாழ்ந்திருக்கிறார். இலங்கை மதிப்பில் 40 லட்ச ரூபாய் வீடு. அந்த வீட்டின் புகைப்படத்தைக் காட்டினார் நண்பர். இப்போது அந்த வீடு செல்லடித்து உருவமே இழந்துவிட்டிருக்கிறதாம். மேற்கூரைகள், விலையுயர்ந்த பொருள்களையெல்லாம் ராணுவத்தவர்களே கொண்டு சென்றுவிடுகிறார்களாம். அவரது பைக் ஒன்றை அங்கேயே வைத்துவிட்டு வந்தாராம். அங்குள்ள பைக்களையெல்லாம் மக்களுக்கு மீண்டும் ஒப்படைப்பது என்று ஒரு கேம்ப் நடைபெற்றதாம். அதில் ஒன்றுக்கும் ஒப்பேறாத வண்டிகளை மட்டுமே மக்களுக்குத் தந்து, பெரிய கண் துடைப்பில் ஈடுபட்டார்களாம் ராணுவத்தவர்கள். இவரது நல்ல வண்டியை அவர்கள் தரவில்லையாம் இன்னும். இதே நிலைதான் இவரது நண்பரின் நல்ல வண்டிக்குமாம். இது போல பல வீடுகளின் பொருள்கள் எல்லாம் எங்கே போயின என்றே தெரியவில்லையாம்.

கடைசி மூன்று மாத காலத்தில் பலசரக்குப் பொருள்களின் விலை தாறுமாறாக விற்கப்பட்டதாம். ஒரு கிலோ அரிசியின் விலை 12,000 இலங்கை ரூபாய். ஒரு கிலோ சர்க்கரையின் விலை 3,000 இலங்கை ரூபாய். கேம்பில் ராணுவம் அரிசியும் சர்க்கரையும் வழங்குமாம். அதனை வாங்க பெரிய கியூ நிற்குமாம். காலையில் சென்றால் மாலைதான் வாங்கிவரமுடியுமாம். இப்போதெல்லாம் அங்கேயே ரேஷன் கடை அமைத்து பொருள்களை விநியோகிக்கிறார்களாம். பணமில்லாதவர்கள் எப்படி வாழ்வார்கள் என்றபோது, அப்படி அப்படித்தான் என்றார். கையில் பொருள் இருப்பவர்கள் உணவு தந்து உதவுவதும் உண்டாம்.ஒரு 20க்கு 20 அறையை நான்காக துணி போட்டுப் பிரித்து, ஒவ்வொரு இடத்திலும் ஒரு குடும்பம் தங்க வைக்கப்படுமாம். சிறிய வியாதிகளுக்குப் பார்க்க அங்கேயே மருத்துவமனையும் டெண்ட் அடித்துக்கொண்டு இருக்குமாம். லட்சக் கணக்கில் அங்கு இருந்த மக்களை ஒவ்வொரு பகுதியாக பரிசோதித்து பரிசோதித்து வெளியே அனுப்பியதாம் ராணுவம். மீண்டும் விடுதலைப்புலிகளின் தலை தூக்கிவிடக்கூடாது என்பதற்காக இந்த எச்சரிக்கையாம். தற்போது அந்த முகாமில் 30,000 பேர் இருப்பதாகச் சொன்னார். (நேற்று இலங்கை அரசு வெளியிட்டிருக்கும் குறிப்பில் முகாமில் 27000 பேர் உள்ளதாக அறிவித்திருக்கிறது.) இது போக கிட்டத்தட்ட 9,000 பேர் சரண்டைந்த புலிகள் சிறைகளில் உள்ளார்கள் என்றார். நமது நண்பர் எத்தனையோ முறை மனு அளித்தும் அவரை வெளியில் விடவில்லை ராணுவம். உடல்நிலை சரியில்லை என்று சொல்லி, வெளியில் மருத்துவமனைக்குச் சென்று, அங்கிருந்து மனைவி குழந்தையுடன் தப்பித்திருக்கிறார் நம் நண்பர். ராணுவம் மீண்டும் தேடி வரவில்லையா என்று கேட்டதற்கு, அதெல்லாம் வரமாட்டார்கள் என்றார். அவர் கேம்ப்பில் இருந்தபோது அவருக்குக் கொடுக்கப்பட்ட ஐடி கார்ட்டை எல்லாம் காட்டினார் எங்களிடம்.

ராணுவம் சண்டையின்போது பொதுமக்களின் மீதும் தாக்குதல் நடத்தியதும் உண்மை. அதேபோல இயக்கமும் சிறுவர்களையும் பொது மக்களையும் கேடயமாகப் பயன்படுத்தியதும் உண்மை என்றார். ராணுவம் பயன்படுத்திய குண்டு பாஸ்பரஸ் குண்டுகள். ஒரு குண்டை எறிந்தால், அது ஒன்பது குண்டாகப் பிரிந்து தாக்குமாம். மேலே பட்டால் அந்த இடமே ரணமாகிக் கொப்பளித்துவிடுமாம். (ஒருவித புன்னகையுடன், இதை சப்ளை செய்தது உங்கட இந்தியாதான் என்றார்.)

மட்டகிளப்பிலிருந்து கேம்புக்கு தப்பிப்பதைத் தடுக்க, இயக்கம் பல்வேறு யுத்திகளைச் செயல்படுத்தியதாம். அதில் ஒன்று, அங்கே இருக்கும் ராணுவத்தவர்கள் பெண்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துகிறார்கள் என்பது. ஆனால் அப்படி நடந்தது குறைவுதான் என்றார். உடனே அப்படி நடக்கவே இல்லை என்று சொல்லிவிடமுடியாது, நடந்தது என்றும் சொன்னார். ஆனால் புலிகள் சொன்ன அளவு நடக்கவில்லை என்றார். சட்டென, உங்கட ஐபிகேஎஃப் செய்ததைவிடக் குறைவுதான் சிங்களவர்கள் செய்தது என்றும் சொன்னார். ஐபிகேஎஃப்பும் எல்லா இடங்களிலும் அப்படி நடந்து கொள்ளவில்லை என்றும், ஆனால் சில இடங்களில் மிக மோசமாக நடந்துகொண்டது என்றும் சொன்னார்.

செஞ்சோலை படுகொலை பற்றிச் சொன்னார். பள்ளியில் படிக்கும் சிறார்களை இரு நாள் பயிற்சிக்கென வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது இயக்கம். பயிற்சி கொடுத்தால் நிச்சயம் ராணுவம் அழிக்கும் என்று தெரிந்தே இதைச் செய்தார்கள். ராணுவத்துக்கு பயிற்சி பெறுவது பள்ளி சிறார்களா எனத் தெரியுமா தெரியாதா என்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை. முதல் குண்டு விழவும், பயிற்சி அளித்தவர்கள் சிறார்களை ஓடிச் சென்று வண்டியில் ஏறச் சொன்னார்கள். பயந்து போன பிள்ளைகள் வண்டியில் ஏறவும் வண்டியிலும் குண்டு விழுந்தது. படுகொலை ராணுவம் செய்ததுதான் என்றாலும், பயிற்சிக்கென அழைத்துச் சென்றது இயக்கம்தான் என்றார்.

பிரபாகரன் இறந்த அன்று எப்படி உணர்ந்தீர்கள் என்றேன். சட்டென அவர் இறந்துட்டதா இன்னும் தெரியலையே என்றார். பின்னர், 3 மாத காலம் நடந்த சண்டையின் வெறுப்பில் பிரபாகரன் மீது கடும் கடுப்பில் இருந்தோம். ஆனால் அவர் இறந்ததாகச் சொன்ன அன்று ரொம்ப வருத்தப்பட்டோம் என்றார். இனி ஏதேனும் பிரச்சினைகள் என்றால் என்ன செய்வது என்றும் தோன்றியதாகச் சொன்னார். ஆனால் இலங்கை ராணுவம் அவரது உடல் போன்ற ஒன்றையும், அவரது முகம் போன்ற ஒன்றையும் வைத்து பொய் சொல்லிவிட்டதாகச் சொன்னார். உண்மை என்றால் ஏன் அவரது உடலை பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

பிரபாகரனைப் பாத்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, 1985ல் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானபோது, யாழ்ப்பாணம் அருகில் ஏதோ ஒரு கோவிலில் அவர் வந்தார் என்றும், அப்போது பார்த்ததுதான் என்றும் சொன்னார். கடைசியாக இயக்கத்தில் சேர்ந்தவர்கள் ஐந்து ஆண்டுகாலம் இயக்கத்தில் இருந்திருந்தாலும் அவரைப் பார்த்திருக்க இயன்றிருக்காது என்றார்.

இனி இயக்கம் துளிர்விடுமா என்று கேட்டோம். அதற்கான வாய்ப்பே இல்லாமல் செய்துவிட்டது அரசாங்கம் என்றார். ஒருவேளை துளிர்விட்டால் நீங்கள் ஆதரிப்பீர்களா என்று கேட்டோம். நிச்சயம் இல்லை என்றும், தெரிந்தால் அவர்களைக் காட்டிக்கொடுத்துவிடுவோம் என்றும், இன்னொருமுறை இப்படி போரின் இன்னல்களைத் தாங்கிக்கொள்ள இயலாது என்றும் சொன்னார். வெளி நாட்டிலிருந்து பணம் கொடுக்கிறவர்களுக்கு இங்கே நாங்கள் படும் வேதனை புரிவதில்லை என்றார். பின்னர் மீண்டும், இனி சில வருடங்கள் கழித்து ஏதேனும் பிரச்சினை என்றால் என்ன என்ன நடக்கும் என்றெல்லாம் தெரியவில்லை என்றார்.

புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நார்வே தூதுக் குழுவின் மூலம் நடந்த போர் அமைதி உடன்படிக்கைக் காலம்தான் புலிகளுக்கு இப்படி ஒரு வீழ்ச்சியைத் தந்துவிட்டது என்று சொன்னார். கிட்டத்தட்ட 4 வருடங்கள் போரில்லாமல் பழகிவிட்டவர்கள் மீண்டும் போருக்குத் தயாராக இருக்கவில்லை. காட்டிலும் மேட்டிலும் திரிந்தவர்களுக்கு போர் என்பது எளிமையான விஷயமாக இருந்தது. அது மாறி, இனி போர் செய்ய இயலாது என்னும் நிலைமைக்குச் சென்றதும், பலர் சரணடையத் தொடங்கியதும் பெரிய இழப்பு என்றார். கருணாவை விட்டிருக்கக்கூடாது என்றார். அதுவும் பெரிய பலவீனம் என்றார். கிழக்கு பகுதியில் கருணா பொருட்படுத்தத்தக்க ஒரு பெரிய பிரிவை தன் வசம் வைத்திருந்தார் என்றார்.

அமைதி ஒப்பந்தம் இருந்த காலத்தில், இயக்கத்தின் வசம் இருந்த தமிழர் பகுதிகளுக்குள் சரக்குகள் செல்ல, இயக்கம் வரி விதித்தது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தரை வழியாகச் செல்ல இன்று ஓர் இரவு போதும். யாழ்ப்பாணத்தின் பேருந்து நிலையத்தில் இப்போதெல்லாம் கொழும்பு கொழும்பு என்று பஸ்ஸில் ஏறச் சொல்லிக் கூவிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது நிலைமையே வேறு. சரக்கு வண்டிகளுக்கு, ராணுவத்துக்கு ஒரு வரி, இயக்கத்துக்கு ஒரு வரி என இரு முனை வரி கட்டவேண்டும். ஒரு சரக்கு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து சேர 4 நாள்கள் ஆகும். 15 நாள் ஆனதெல்லாம் உண்டு. அப்படி வரும் பணம் மூலமும், வெளிநாட்டிலிருந்து வரும் உதவிப் பணம் மூலமும் இயக்கத்துக்கு பெரிய அளவில் பணம் சேர்ந்தது. கடைசி சண்டையின்போது அந்தப் பணத்தை ஆளாளுக்கு எடுத்துச் சென்றார்கள். ஒரு செல் பட்டு அந்தப் பணம் அப்படியே தீ பிடித்து எரிந்ததைப் பார்த்ததாகச் சொன்னார்.

தமிழ் மக்களின் இன்னல்களுக்குக் காரணம் இயக்கமா, ராணுவமா எனச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் நாங்கள் பட்ட கஷ்டம் யாரும் பட்டிருக்கமுடியாது. இது மட்டும் உண்மை. இந்தியா எங்களை கைவிட்டுவிட்டது. தமிழ்நாட்டு மக்களுக்கு எங்களைப் பற்றி நினைப்பே இல்லை என்றார். இன்னொரு முதியவர், இந்திரா காந்தி இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்கவே நடந்திருக்காது என்றார்.

நான் மேலே சொன்னவை எல்லாம், இரண்டு மூன்று மனிதர்களின் கருத்துகள். அவர்கள் யாருமே புலி/ராணுவ/இந்திய வெறுப்பு/ஆதரவு மனநிலையில் இருந்து பேசவில்லை என்பது என் அவதானிப்பு. ஆனால், இலங்கையில் வாழ்ந்த, இலங்கையின் அரசியல் பற்றிய தொடர் அவதானிப்பில் இருப்பவர்கள் வேறு மாதிரி இதனை எதிர்கொள்ளலலாம். அதற்கான அத்தனை நியாயங்களும் இருக்கின்றன. நான் கேட்டவரையில் என் நினைவில் உள்ளதைப் பகிர்ந்திருக்கிறேன். என் அரசியல் நிலைப்பாடுகளின் காரணமாக எதையும் திரித்து எழுதவில்லை என்பதை மட்டும் படிப்பவர்கள் நம்பினால் போதுமானது. என்னுடன் வந்த ஐவருமோ அல்லது ஐவரில் இருவரோ இதனை நான் கேட்கும்போது கூட இருந்தார்கள் என்பது முக்கியமானது.

முற்றும் 🙂

Share