Tag Archive for படேல்

Nehru’s rule

நேருவின் ஆட்சி – பதியம் போட்ட 18 ஆண்டுகள்

விஎஸ்வி ரமணன் எழுதி சுவாசம் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் நூல்.

நேருவைப் பற்றி இன்று பலருக்கும் இருக்கும் பிம்பம், நேரு இந்திய எதிரி என்பது. நேருவால்தான் இந்தியா இன்று இத்தனை பாடு படுகிறது என்பது பலரும் சொல்வது. ஆனால் இது உண்மையல்ல.

நேரு நிஜமான ஜனநாயகவாதி. நிச்சயம் இந்தியாவின் மீது பற்று கொண்டிருந்தவர். எந்நிலையிலும் இந்தியாவுக்கு எதிராகச் சிந்திக்கவே சிந்திக்காதவர்.

நேருவின் சில நம்பிக்கைகள் தகர்ந்து போயிருக்கலாம். நேரு ஏமாற்றப்பட்டிருக்கலாம். அவையெல்லாம் நேரு உண்மை என்று நம்பி ஏமாந்தவையே ஒழிய, இந்தியாவுக்கு எதிராக நேரு சிந்தித்தவை அல்ல.

இந்தியா மிகவும் சோதனையான காலகட்டத்தில் இருந்தபோது நேரு பிரதமரானவர். இந்தியாவின் இன்றைய வளர்ச்சிக்குப் பல வழிகளில் நேரு விதை ஊன்றியவர். அதே சமயம் அவர் ஓர் அரசியல்வாதியும் கூட. எனவே நேரு தன் கட்சியையும், தன் பதவியையும் காப்பாற்ற வேண்டிய தேவை இருந்தது. தனக்குப் போட்டியாளர்களை அடக்கித் தான் முன்னேற வேண்டி இருந்தது. அதையும் செய்தவர் நேரு. இதுவும் ஜனநாயகத்தில் ஒரு அங்கமே. இதில் முக்கியமான விஷயம், இதைச் செய்வதற்காக ஒரு தலைவர் அநியாயமான வழிகளைக் கை கொள்கிறார்களா என்பதுதான்.

இந்தப் புத்தகம் நேரு எப்படிப்பட்ட ஜனநாயகவாதி என்பதைப் பறை சாற்றுகிறது. அதே சமயம் நேரு மேல் எந்தத் தவறும் இல்லை என்று பூசி மெழுகவும் இல்லை. நேர் நம்பி ஏமாந்து போனவற்றையும் பதிவு செய்கிறது. நேருவின் அந்தத் தோல்விகள் கூட, நேருவின் ஜனநாயகத் தன்மையால் விளைந்தவையே என்று பறைசாற்றுகிறது.

இந்தியாவின் சமஸ்தானங்கள் ஒருங்கிணைப்பட்ட போது, நேரு ராணுவ நடவடிக்கைகளை முதலில் ஆதரிக்கவில்லை. ஆனால் படேல் உறுதியாக இருக்கிறார். அதை நேரு ஏற்கவில்லை என்றாலும், ஹைதராபாத்தில் நடந்த வன்முறைகளைத் தொடர்ந்து, படேலின் நிலைப்பாடே சரி என்று நேரு புரிந்துகொள்கிறார். ராணுவ நடவடிக்கைகளை ஏற்கிறார். தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள நேரு தயங்கவில்லை.

உண்மையான செக்யூலராக இருக்க நேரு முயன்றிருக்கிறார். காந்தியைப் போலவே இவரும் மற்றவர்களால் ஏமாற்றப்படுகிறார். அது ஹிந்துக்களுக்கு எதிராகப் போய் நிற்கிறது. முக்கியமாக இவர் ஷேக் அப்துல்லாவை நம்புகிறார். நேருவின் நட்பை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் ஷேக் அப்துல்லா காஷ்மிர் விவகாரத்தில் நேருவின் நம்பிக்கை தவறு என்று அவருக்கே பாடம் கற்பிக்கிறார்.

ஜின்னாவைப் போன்ற அரசியல் ஆட்டத்தை நேருவுக்கு எதிராக, மதத்தை மையமாக வைத்து அரங்கேற்றுகிறார் ஷேக் அப்துல்லா. சிறப்புச் சட்டப்பிரிவு 370 காஷ்மிருக்குத் தரப்பட்டும் ஷேக் அப்துல்லாவின் இரட்டை வேடம் நேருவை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. ஹரி சிங்கிற்கு எதிராக களம் இறங்கிய ஷேக் அப்துல்லாவை, ஹரி சிங்கிடம் இருந்து பெற்ற அதே காஷ்மீருக்கு தலைவராக்கிய நேருவுக்கு ஷேக் அப்துல்லா அளிக்கும் அதிர்ச்சி வைத்தியம் இந்த நூலில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதுவேதான் நேருவின் சீனா மீதான பாசத்திலும் நிகழ்கிறது. நேரு கம்யூனிஸ்ட் அல்ல. அதே சமயம் ஒரு ஜனநாயக சோஷியலிஸம் நம் நாட்டுக்குத் தேவை என்பதில் உறுதியாக இருக்கிறார். கம்யூனிஸம் உலகம் முழுக்கத் தேவை என்பதை நேரு உணர்ந்துகொண்டுதான் இப்படி நடிக்கிறார் என்று கம்யூனிஸ்ட்டுகள் நேருவை சாதாரண அரசியல்வாதி என்று குற்றம் சாட்டுகிறார்கள். அண்ணாதுரையும் நேருவை ‘காங்கிரஸின் சோஷலிஸம் இனிக்காது’ என்று விமர்சிக்கிறார்.

நேரு சோஷலிசத்தை ஆதரித்தாலும், கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸுக்கு சமமாக வளர்ந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஒரு காங்கிரஸ்காரராகவும் இருக்கிறார். இதுவும் அவர் இந்தியாவுக்குச் செய்த முக்கியமான பங்களிப்பு என்றால் மிகையில்லை!

சீனா மீது நேருவுக்கு வந்த பாசம் வரலாற்றுப் பிழை. ஆனால் நேரு அதை உணரவில்லை. திபெத் விஷயத்தில் சீனாவுக்கும் நேருக்கும் எழும் கருத்து மாறுபாடு பெரியதாகிறது. ஆரம்பம் முதலே படேலும் ராஜாஜியும் இதைப் பற்றி எச்சரித்தும், நேரு தான் நம்பியது சரி என்று தீவிரமாக நினைக்கிறார். ஆனால் இந்தியா தயாராக இல்லாத ஒரு சமயத்தில் சீனாவின் படைகள் இந்தியாவை ஆக்கிரமிக்கும்போது நேருவுக்குத் தன் நம்பிக்கை இந்தியாவுக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கும் பிரச்சினையின் தீவிரம் புரிகிறது. அதற்குள் நிலைமை கைவிட்டுப் போய்விடுகிறது.

இப்படிப் பல விஷயங்கள் இந்த நூல் முழுக்கக் கொட்டிக் கிடக்கின்றன. ஜனசங்க எதிர்ப்பு, காந்தி படுகொலை, ஆர் எஸ் எஸ் தடை, பெண்களுக்கான சொத்துரிமை, இந்துச் சட்ட மசோதாக்களும் நேரு மீதான அம்பேத்கரின் வருத்தமும் எனப் பல விஷயங்கள் இந்த நூலில் உள்ளன.

நேருவைப் பற்றி மட்டுமின்றி, அந்தக் கால அரசியல் சூழலையும், மாபெரும் அரசியல் ஆளுமைகளின் நிலைப்பாடுகளையும் பதிவு செய்கிறது இந்த நூல்.

அதே சமயம், வரலாற்று நோக்கில் நேருவின் அரசியல் சறுக்கல்கள் குறித்து விரிவாகப் பேச வேண்டிய வரலாற்று அவசியம் இருப்பதையும் நினைவூட்டுகிறது.

நூலை வாங்க https://www.swasambookart.com/books/9788198341419

ஃபோன் மூலம் வாங்க 81480 66645

Share

ஞாநி, அ.மார்க்ஸ், மோதி, படேல், தி தமிழ் ஹிந்து

படேலின் இறுதி ஊர்வலத்தில் நேரு கலந்துகொள்ளவில்லை என்று மோதி சொன்னதாகவும் அது தவறான செய்தி என்றும் ஒரு கருத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதைக் கடுமையாக விமர்சித்து ஞாநி ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடிருந்தார். இன்றைய தமிழ் தி ஹிந்துவில் அ.மார்க்ஸும் இதைப் பற்றி மிகவும் எள்ளலாக ஒரு வரி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இப்படி மோதி சொல்லவே இல்லை. அப்படிச் சொன்னதாக செய்தி வெளியிட்ட திவ்யபாஸ்கர் தினசரி தான் சொன்னது தவறு என்றும் சொல்லிவிட்டது. தவறாகச் சொன்னதை ஒப்புக்கொண்டுவிடும்போது சொன்ன தவறு சிறியதாகிப் போய், பெருந்தன்மை மேலெழுந்துவிடுகிறது. ஆனால் இதே தவறை மீண்டும் மீண்டும் சொல்லி அதை உண்மையாக்கப் பார்க்கிறார்கள். தி தமிழ் ஹிந்து நாளிதழ் வரை இந்தப் பொய் பிரசாரம் வந்தாகிவிட்டது. இனி சில வருடங்கள் கழித்து  இதுவே அதிகாரபூர்வ செய்தியாகிவிடும். மீண்டும் மீண்டும் இதையே நிரூபணமாகக் காட்டுவார்கள்.

மோதி வெற்றிபெற்றுவிடுவாரோ என்னும் பயம் இவர்களையெல்லாம் எப்படி ஆட்டுவிக்கிறது பாருங்கள்.

ஞாநியின் ஃபேஸ்புக் பக்க ஸ்டேட்டஸின் லின்க்: https://www.facebook.com/gnani.sankaran/posts/10201577288946767

அ.மார்க்ஸ் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில் மூஞ்சாவைப் பற்றி அவன் இவன் என்று ஏக வசனத்தில் குறிப்பிட்டிக்கிறார். பேராசிரியரின் மொழி இது. ஹிந்துத்துவர்களும் இப்படிப் பேசுவது உண்டு. நான் இல்லை என்று பொய் சொல்லமாட்டேன். நிச்சயம் ஹிந்த்துத்துவர்கள் இப்படிப் பேசுவது அநாகரிகம். ஆனால் இந்த அநாகரிகத்தை உலகமே கண்டுபிடித்துச் சொல்லும். திட்டும். ஆனால் அதே உலகம், அ.மார்க்ஸ் போன்ற பேராசிரியர்கள் இப்படிப் பேசும்போது கள்ளமௌனம் சாதித்துவிட்டுக் கடந்து செல்லும்.

இந்த ஃபேஸ்புக் இடுகையில், மூஞ்சே முசோலினியைப் பார்த்துவிட்டுப் பாராட்டியதாகச் சொல்லியிருக்கிறார் அ.மார்க்ஸ். கள்ள மௌனத்துக்கு இன்னொரு உதாரணம் இந்த இடுகை. அ.மார்க்ஸ் பாராட்டும் காந்தியாரும் முசோலினியைப் பார்த்து, முசோலினியைப் பாராட்டியிருக்கிறார். இதே அளவுகோலில் காந்தியாரை ஏன் அ.மார்க்ஸ் அவன் இவன் என்று பேசவில்லை? இத்தனைக்கும் காந்தி முசோலினியைச் சந்திக்கக்கூடாது என்றெல்லாம் கோரிக்கைகள் எழுந்தன. அத்தனையையும் புறக்கணித்திருக்கிறார் காந்தி. அதோடு முசோலினியைப் பாராட்டியும் இருக்கிறார் காந்தி. எப்படி முசோலினியைப் பாராட்டலாம் என்று கேட்கப்பட்டபோது, வன்முறைக்காக முசோலினியை எதிர்க்கவேண்டும் என்றால் ஒட்டுமொத்த ஐரோப்பாவையும்தானே எதிர்க்கவேண்டும் என்ற ரீதியில் பதில் சொன்னாராம் காந்தி. (இது பற்றிய ஆதாரங்களை நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். கிடைத்ததும் உள்ளிடுகிறேன்.) காந்தியார் உட்பட இரண்டாம் வட்டமேஜை மாநாட்டுக்குச் சென்ற அனைவரும் முசோலினியைச் சந்தித்திருக்கிறார்கள். இன்று மோதியைக் கட்டம்கட்ட எங்கே இருந்து எப்படி வரலாற்றை திரித்துக்கொள்கிறார்கள் பாருங்கள்.

அ.மார்க்ஸின் ஃபேஸ்புக் இடுகைக்கான லிங்க் இங்கே.

நேருவை மோதி வெறுப்பதில் என்ன வியப்பு கட்டுரை லின்க் இங்கே.

டிவிட் லாங்கர் லின்க்: http://www.twitlonger.com/show/msqcbi

 

gnani facebook status

amarx facebook status

twit longer image

Share

மறக்கப்பட்ட 1949 வாக்குறுதி கட்டுரையை முன்வைத்து

இன்றைய (15-அக்டோபர்-2013) தமிழ் தி ஹிந்துவில் வித்யா சுப்ரமணியம் எழுதிய ஆர் எஸ் எஸ் குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது. மோசமான கட்டுரை. படேலிடம் ஆர் எஸ் எஸ் வாக்குக் கொடுத்ததாம். என்னவென்று? அரசியலில் பங்கேற்காது என்று. அதனால்தான் ஆர் எஸ் எஸ்ஸின் தடை நீக்கப்பட்டதாம். அப்படி இருக்கும்போது இப்போது எப்படி அரசியலில் பங்கேற்கலாம் என்று கேட்கிறது கட்டுரை. இப்போது ஆர் எஸ் எஸ் என்ன பங்கெடுத்தது? மோதியின் பிரதம வேட்பாளர் அறிவிப்பில் ஆர் எஸ் எஸ்ஸின் பங்கு இருக்கிறதாம்.

* இத்தனை நாளாக ஆர் எஸ் எஸ் பிஜேபியின் நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை என்று வித்யா சுப்பிரமணியம் நம்புவது வேடிக்கை. இப்போதைப் போலவே எப்போதும், நேரடியாகவா மறைமுகமாகவா என்று சொல்லமுடியாத வண்ணம், ஆர் எஸ் எஸ் பாஜகவில் தன் அதிகாரத்தைச் செலுத்தியே வந்திருக்கிறது.

* ஆர் எஸ் எஸ் தன் அதிகாரத்தை பாஜகவிலிருந்து விலக்குமானால் நான் பாஜகவை மற்றுமொரு சாதாரணக் கட்சியாகவே பார்ப்பேன். அத்தனையையும் மீறி பாஜவை ஓரளவு நான் நம்பக் காரணம் இந்த ஆர் எஸ் எஸ் அதிகாரமே. பாஜகவில் இருக்கும் ஆர் எஸ் எஸ் தொண்டர்களே கட்சியின் தூண்கள். 

* படேலிடம் வாக்குக் கொடுத்துவிட்டார் என்று பலமுறை வித்யா சுப்ரமணியம் கிட்டத்தட்ட கதறியிருக்கிறார். படேல் மேல் அத்தனை மதிப்பா? சரி ஒழியட்டும். அன்று வாக்குக் கொடுத்துவிட்டால், அதன் பின்பு ஆர் எஸ் எஸ் தன் நிலையிலிருந்து மாறவே கூடாதா என்ன? 

* படேலிடம் வாக்குக் கொடுத்ததைச் சொல்லும் வித்யா சுப்ரமணியம், ஆர் எஸ் எஸ் தன் தொண்டர்களை கட்சிகளில் இணைந்து பணியாற்ற அனுமதித்தது என்றும் சொல்கிறார். அப்புறம் என்ன? கட்சிகளில் சேர்ந்து பணியாற்ற அனுமதிப்பது என்பது கைதட்டிக்கொண்டிருக்கவா? அதிகாரத்தைச் செலுத்தத்தானே!

* கோல்வல்கர் அதிகாரத்தின் மேல் வெறுப்பு உள்ளவராக இருந்தார். எனவே அவர் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். ஆனால் அப்போதே அரசியலில் நேரடியாகப் பங்குபெறவேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத்தான் செய்தன. தேவரஸ் இதனை முக்கியமான விஷயமாகவே பார்த்தார். எனவே இது புதிய கண்டுபிடிப்பல்ல.

* கோல்வல்கர் மன்றாடினார் என்றொரு எள்ளல். உண்மையில் அவர் மன்றாட மட்டும் செய்யவில்லை. மிகக் கடினமான காலகட்டத்தில் ஆர் எஸ் எஸ் என்ற இந்தியாவின் உன்னத அமைப்பை வழி நடத்தும் அவருக்கு தன் காரியம் ஒவ்வொன்றும் எத்தனை முக்கியமானது என்று தெரிந்திருந்தது. எனவே அரசுக்கு உகந்தமொழியில் சொல்லிப் பார்த்தார். பின்பு வேறு வழியில்லை என்றால் ஆர் எஸ் எஸ் அரசியலில் நேரடியாகப் பங்குபெற வேண்டியிருக்கும் என்ற முடிவை நோக்கி ஆர் எஸ் எஸ் செல்வதைப் பார்த்து பயந்த நேரு அரசு தடையை நீக்கியது. ஏன் இந்தப் பயம்? அன்றைய காங்கிரஸில் ஹிந்துமதத்தைப் போற்றிய, தேசியத்தை உயிராக மதித்த பலர் இருந்தனர். எனவே ஆர் எஸ் எஸ் நேரடியாக அரசியல் களத்துக்கு வந்தால் காங்கிரஸை உட்கொண்டுவிடும் என்று நேருவுக்குப் புரிந்திருந்தது. இதைவைத்து விளையாடித்தான் ஆர் எஸ் எஸ் தடையை நேருவிய அரசு நீக்கியது. எனவே மன்றாடுதல் என்னும் வார்த்தை எள்ளலோடு வரலாறு முடிந்துவிடவில்லை. தன் கட்சியைக் காப்பாற்றவே நேருவிய அரசு தடையை நீக்கியது. காந்தி கொலையில் ஆர் எஸ் எஸுக்குப் பங்கிருக்க வாய்ப்பில்லை என்று படேலும் நேருவிய அரசும் உறுதியாக நம்பியபின்பும் ஏன் ஆர் எஸ் எஸைத் தடை செய்யவேண்டும்? இந்த உறுதிமொழியைப் பெறத்தான்.

இத்தனை உண்மைகளைப் புதைத்துவிட்டு ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது.

இதேபோல் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் வால் பிடித்த கம்யூனிஸ்ட்டுகளின் கணக்குகளுக்குப் பணம் வந்த கதையையும் தமிழ் தி ஹிந்து எழுதவேண்டும்.

இதைப் பற்றிய ஃபேஸ்புக் குறிப்பு இங்கே.

Share