Tag Archive for தேர்தல்

S.I.R – my views

SIR திருத்தம் மிக முக்கியமானது. இது குறித்து முன்பே பலமுறை பேசி இருக்கிறோம். இன்று வரும் இத்தனை சதவீத ஓட்டுப் பதிவு என்பதெல்லாம் 80% மட்டுமே சரியாக இருக்க வாய்ப்பு. ஏனென்றால், இறந்தவர்கள் பெயர் நீக்கப்படாதது, பலருக்கும் இரண்டு இடங்களில் வாக்கு இருப்பது, நாம் நீக்கச் சொல்லி இருந்தாலும் நீக்கப்படாமல் இருப்பது, சில உள்நுழைப்புகள் என்று ஏகப்பட்ட குளறுபடிகள். இதனால் இந்தத் திருத்தம் அவசியமானது.

ஆனால் இதன் நடைமுறைதான் தேவையின்றிப் பலரைக் கலங்கடித்துவிட்டது. இப்போதும் கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு வேண்டுமென்றே பரப்பப்பட்ட அரசியல் உள்நோக்கமும் ஒரு காரணம் என்றாலும், குழப்பம் இல்லாமல் இல்லை என்பதுதான் உண்மை.

நான் இந்த SIR நடவடிக்கையை எப்படி எதிர்கொண்டிருப்பேன்? இதைத் தேர்தல் ஆணையம் செய்திருக்கவேண்டும் என்று சாமானியனாகக் கருதுகிறேன். அவர்களுக்கு இருக்கும் அழுத்தங்கள் எல்லாம் எனக்கும் புரியும். ஆனாலும் இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் ஆணையத்தின் பார்வையில் மட்டுமே பார்த்ததே அன்றி, தமிழக மக்கள் பார்வையில் பார்க்கத் தவறிவிட்டது அல்லது வேறு வழியின்றி அமைதியாக இருந்துவிட்டது என்றே நான் புரிந்துகொள்கிறேன்.

• முதலில் தேர்தல் ஆணையம் மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கவேண்டியது, 2024 வரை வாக்களித்து அதே இடத்தில் அதே முகவரியில் நீங்கள் இருந்தால் இந்த முறையும் வாக்களிப்பதில் ஒரு சிக்கலும் இல்லை என்பதை. அதாவது, தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்தில் உங்கள் பெயர் இருந்து, அதே முகவரியில் இருந்தால் நீங்கள் வாக்களிப்பதில், எஸ் ஐ ஆர் படிவம் தருவதில் எந்தச் சிக்கலும் இல்லை என்பது.

• பின்னர் சொல்லி இருக்கவேண்டியது, நீங்கள் முகவரி மாறி இருந்து, பழைய முகவரியில் வாக்களித்துக் கொண்டிருந்தால், உங்கள் பெயர் நிச்சயம் நீக்கப்படும் வாய்ப்பிருக்கிறது, ஆனால் அஞ்சத் தேவையில்லை, உங்கள் பழைய ஐடியையும் புதிய முகவரி நிரூபணங்களையும் கொடுத்து, வரைவுப் பட்டியல் வெளியான பிறகு அப்ளை செய்யலாம், அதுவரை பொறுமையாக இருங்கள் என்பதை.

• ஒருவேளை நீங்கள் முகவரி மாறி இருந்தாலும், அதே தொகுதியில் இருந்தால், இதே படிவத்தில் நீங்கள் நிரப்பிக் கொடுக்கலாம் என்பதை.

• முதலில் சில படிவங்கள்தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன, உங்கள் வீட்டுக்கு வர 15 நாளாவது ஆகும், அப்படியும் வரவில்லை என்றால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கவேண்டும்.

• எப்போது பி எல் ஓ வருவார் என்பதை, யார் யாரெல்லாம் மொபைல் எண்ணை தங்கள் வாக்காளர் அட்டையுடன் இணைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு எஸ் எம் எஸ் அல்லது இமெயில் மூலம் தகவல் அனுப்புவோம் என்ற முடிவை எடுத்திருக்கலாம்.

• பி எல் ஓ உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் வீடு பூட்டி இருந்தால், அவர் இன்னும் இரண்டு முறை வருவார், மொத்தம் 3 முறையும் உங்கள் வீடு பூட்டி இருந்தால், அந்தப் புகைப்படத்தை பி எல் ஓ எங்களுக்கு அனுப்புவார். இதையும் சொல்லி இருக்க வேண்டும். சில இடங்களில் இப்படி ஃபோட்டோ அனுப்பச் சொல்லி வாய்மொழித் தகவல் மூலம் கட்டளை இடப்பட்டிருப்பதாக அறிந்தேன். இது நல்ல விஷயம். சும்மா வராமல் வீட்டில் ஆள் இல்லை என்று சொல்வதைக் கணிசமாகக் குறைக்க முடியும்.

• ஆன்லைனில் தாங்களாகவே முன்வந்து எஸ் ஐ ஆர் பதிவு செய்ய விரும்புவர்கள், ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர் இனிஷியல் உட்பட ஒரே போல் இருந்தால், உங்களுக்கு லாகின் இருந்தால், அதைச் செய்யலாம். இல்லையென்றால் பி எல் ஓ மூலமாக மட்டுமே இதைச் செய்யவேண்டும் என்று சொல்லி இருக்கவேண்டும்.

• மூன்று முறை வந்தும் நீங்கள் இல்லை என்றால், எங்களைத் தொடர்புகொள்ளுங்கள் என்று சொல்லலாம்.

• இந்தப் படிவத்தை எப்படி நிரப்புவது என்று ஒரு வீடியோவை எங்கள் வலைத்தளத்தில் ஏற்றி இருக்கிறோம், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், உருது மொழிகளில் உள்ளது, பாருங்கள் என்று சொல்லலாம்.

• இப்படி எல்லாம் சொல்லி முடித்துவிட்டு, 2002 மற்றும் 2005 சிறப்புத் திருத்தப் பட்டியல் பற்றிச் சொல்லவேண்டும். அப்படிச் செய்யாமல், முதலில் இதைச் சொல்லிவிட்டு, எல்லாரும் குழம்பி, அப்பா அம்மாவின் பெயர், தன் பெயர் எதுவும் 2002 சிறப்புத் திருத்தப் பட்டியலில் கிடைக்காமல் – இதெல்லாம் அவசியமே இல்லை. திருத்தப்பட்டியலில் இருந்தால் நிரப்புங்கள், இல்லை என்றால் அவசியமில்லை என்று சொல்லிவிட்டு, 2004 வரை நீங்கள் வாக்களித்து சரியான முகவரியில் இருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை, இது அவசியமில்லை என்று சொல்லி இருக்கவேண்டும்.

• அடுத்து மிக முக்கியமாக, வரைவுப் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்யச் சொல்வது.

• வரைவுப் பட்டியலில் பெயர் இருப்பவர்களுக்கு அவர்களது மொபைல் எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்பலாம். இமெயில் அனுப்பலாம்.

இவற்றை எல்லாம் செய்யாமல், எடுத்த எடுப்பில் 2002/2005 சிறப்புப் பட்டியலைப் பற்றி பேசி, 1987க்குப் பின்னர் பிறந்திருந்தால் என்று சொல்லிக் குழப்பி, இன்று என்னடா என்றால் அதை ஃபில்லப் செய்யத் தேவை இல்லை என்கிறார்கள். அவர்களே நிரப்புவார்களாம். எப்படி முடியும்? நம்மாலேயே முடியவில்லை, அவர்களால் எப்படி முடியும்? அன்று மொபைல் இல்லை, ஆதார் இல்லை, பெயரோ கிருஷ்ணனைக் குரங்கு என்று அடித்து வைத்திருந்தார்கள், எப்படி நிரப்புவார்கள்?

மிக முக்கியமாக, ஆளும் கட்சிகள் இதை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்யச் சொல்லவேண்டும். தேர்தல் வரும் நேரத்தில் இப்படி முட்டி மோதிக் கொண்டிருப்பது அவசியமற்றது.

இதை எளிதாக்க என்னவெல்லாம் செய்யலாம்?

• புதிய வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைப் படிவத்தை கல்லூரியிலேயே நிரப்பச் சொல்லவேண்டும். இது அனைத்துக் கல்லூரியின் வேலையாக வேண்டும். எப்படி பள்ளிகள் ஆதார் எண் வழங்க ஏற்பாடு செய்தார்களோ அதைப் போல. ஒரு ஊரைச் சேர்ந்த மாணவன் இன்னொரு ஊரில் இருந்தாலும் ஆன்லைனில் அப்ளை செய்து வாக்காளர் அட்டை வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும்.

• இறந்தவர்களுக்கான டெத் சர்ட்டிஃபிகேட் தரப்படும்போது அவர்கள் வாக்குச் சீட்டின் நகல் அதனுடன் சேர்க்கப்பட்டு மாதம் ஒருமுறை இவர்களது பெயர்கள் கட்டாயமாக நீக்கப்படவேண்டும்.

• ஆதார் எண்ணை வாக்காளர் எண்ணுடன் இணைத்தால் பாதிப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அதைச் செய்ய ஏன் இத்தனை யோசனை என்று தெரியவில்லை.

இனி நாம் செய்யவேண்டியது என்ன?

• பி எல் ஓ உங்களிடம் வந்து படிவங்களைத் தருவது வரை ஓயவே ஓயாதீர்கள். யார் என்ன சொன்னாலும் காதில் வாங்காமல், அவருக்கு ஃபோன் செய்வது, மெசெஜ் அனுப்புவது, அவர் பதில் அளிக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையத்துக்கு மெயில் அனுப்புவது என்று தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருங்கள். வாக்கு உங்கள் உரிமை. அதை சரியாகத் தரவேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. அவர்கள் சொன்ன வேலையை பி எல் ஓ செய்ய வேண்டியது கட்டாயம்.

• பி எல் ஓ ஏக்கப்பட்ட அழுத்தத்தில் இருப்பதால் அவரிடம் அமைதியாக உரையாடலாம். அவர் வேண்டுமென்றே சதி செய்கிறார் என்கிற கான்ஸ்பிரஸிக்குள் போகவேண்டாம்.

• பெரும்பாலான பி எல் ஓக்கள் சரியாக உங்கள் படிவத்தைத் தந்துவிடுவார்கள். ஆனால் சிலர் உங்கள் வீடு பூட்டி இருக்கிறது என்று சொல்ல முற்படலாம். காரணம், ஏன் அலையவேண்டும், ஒரு வாக்குதானே என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதை நாம்தான் முறியடிக்கவேண்டும். ஆனால் 90% பி எல் ஓக்கள் இப்படிச் செய்வதில்லை.

• படிவத்தை நிரப்புவது மிக எளிது. படிவம் கையில் கிடைப்பதுதான் பிரச்சினை. அதை நிரப்புவது ஒரு விஷயமே இல்லை. 2002 / 2005 ஐ மறந்துவிட்டு நிரப்புங்கள்.

• மீண்டும் படிவத்தை அவரிடம் சேர்ப்பது மிக முக்கியமானது.

• வரைவுப் பட்டியல் வந்த உடனேயே உங்கள் வாக்கு இருக்கிறதா என்று உறுதி செய்து ஒரு பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

• வரைவுப் பட்டியலில் இல்லை என்றால், மீண்டும் வாக்காளர் அட்டைக்கு அப்ளை செய்யுங்கள். சரியான முகவரி மற்றும் சான்று இருந்தால் இது மிக எளிதான விஷயம். நம்மால் செய்யமுடியவில்லை என்றால் இ சேவை மையத்தில் சிறப்பாகச் செய்து தருவார்கள்.

நான் இப்போது எந்த நிலையில் இருக்கிறேன்? சிலர் லூசுத்தனமாக நான் என்னவோ பிஜேபிக்கு எதிராகப் பேசுவது போல் உளறினார்கள். அவர்களை எல்லாம் ப்ளாக் செய்துவிட்டேன். வாக்குரிமை இருந்தால்தான் பிஜேபி வரும். இல்லையென்றால் மாங்காய் பறித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். மாங்காய் மந்திரத்தில் முளைக்காது மோனே!

என் படிவம் (பல குழப்படிக்குப் பிறகு) என் கையில் கிடைத்துவிட்டது. நிரப்பித் தயாராக வைத்திருக்கிறேன். இன்று வாங்கிக் கொள்கிறேன் என்று பி எல் ஓ சொன்னார். இன்று வேலையோ என்னவோ. வரவில்லை. நாளை வாங்கிக் கொள்வார். நாளையும் அவரால் வரமுடியவில்லை என்றால் நானே அவர் இருக்கும் இடத்துக்குச் சென்று கொடுத்துவிடுவேன்.

நம் வாக்கு நம் உரிமை.

Share