ஒரு விநோதமான கனவு.
நான் என் பையனை அவனது காலேஜுக்கு வானில் பறக்கும் ராட்சத பலூனில் டிராப் செய்கிறேன். இந்தக் கனவு ஏற்கெனவே ஒரு முறை வந்திருக்கிறது. மறந்துவிட்டது. நேற்றுமுன்தினம் மீண்டும்.
ராட்ச பலூனில் ஒரு ஸ்டேஷனில் அபிராம் ஏறிக் கொள்கிறான். அது சென்னைதான். நான் ஏறவில்லை. அஞ்சுகிறேன். அவனைப் பார்த்துப் போய்விட்டு வா என்கிறேன். ஒரு பக்கக் கயிற்றை நான் பிடித்துக் கொள்கிறேன். வானத்தில் பறக்கிறது ராட்சத பலூன். மறுநாள் அதேபோல் அவன் போகத் தயாராகிறான். குமார் வருகிறார்(ன்). என் மனைவியின் சித்தப்பா என்றாலும் எனக்கும் அவனுக்கும் 2 வயசுதான் வித்தியாசம். ஒன்றாக திருநெல்வேலியில் கிரிக்கெட் விளையாண்டவர்கள். அவனும் அபிராமை அன்று வழியனுப்ப வருகிறான்.

அபிராம் பலூனில் ஏறிக்கொள்ள, நான் ஏறப் பயப்பட, அபிராம் குமாரை வந்து பார்க்கச் சொல்ல, குமாரும் அதில் ஏறிக்கொள்கிறேன். சென்னை முழுக்கப் பறந்து வண்டலூர் தாண்டிப் போகும் என்கிறான் அபிராம். நான் மீண்டும் ஒரு பக்கக் கயிற்றைப் பிடித்துக் கொள்கிறேன். அபிராம் ராட்சத பலூனில் பறந்தவாறு, கடல் தெரிகிறது என்கிறான், ஸ்பென்ஸர் ப்ளாஸா என்கிறான். பலூன் அப்படியே ஓரிடத்தில் நிற்க, ஒரு பெரிய கட்டடத்தின் மொட்டை மாடியில் அபிராம் இறங்கிக் கொள்கிறான்.
காலேஜ் போகலயாடா என்று நான் கேட்க, ஒரு திரைப்பட ப்ரொமோஷன் என்கிறான். குமாரைக் காணவில்லை. ஆனால் நான் அங்கே இருக்கிறேன். எப்படி வந்தேன் என்பது கனவுக் கடவுளுக்கே வெளிச்சம். அங்கே பல முன்னணி இளைய நடிகர்கள் தங்கள் படங்களை ப்ரொமோட் செய்ய வரிசையாக நிற்கிறார்கள். அபிராம் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறான். நான் எடுக்க மாட்டேன் என்கிறேன். எடுப்பா என்கிறான்.
கனவு கலைந்தது.
பின்குறிப்பு: இந்தக் கனவும் மறந்துவிடக் கூடாது என்று, இரவு 2 மணி வாக்கில் என் மனைவியை எழுப்பி, “கனவு வந்தது, அபிராம் ராட்சத பலூனில் காலேஜுக்குப் பறக்கிறான், நாளை ஞாபகப்படுத்து” என்று சொல்லிவிட்டுப் படுத்தேன். சரியான லூசு என்று திட்டியபடி மீண்டும் தூங்கத் தொடங்கினாள். மறுநாள் காலை, நான் எதிர்பார்த்தது போலவே கனவு மறந்துவிட்டது. “என்னவோ அபிராம் ராட்சத பலூன்னு சொன்னீங்க” என்று சொல்லவும், அனைத்தும் படம் போல ஞாபகத்துக்கு வந்தது.


