Tag Archive for வாசு முருகவே

ஆக்காண்டி

ஆக்காண்டி – தைரியமான நாவல். முக்கியமான நாவல். சில நாவல்களை எழுத தைரியம் தேவை. இது அந்த வகை நாவல். ஈழப் படைப்புகள் அனைத்தும் தமிழகத் தமிழர்களின் பார்வையில் முன்பெல்லாம் ஒரே வகையினதாகத் தெரிந்துகொண்டிருக்க, வாசு முருகவேலின் நாவல்கள் அவற்றிலிருந்து வேறுபட்டு வருகின்றன. ஒற்றைப்படைத் தன்மையிலிருந்து மேலேறி உள்முரண்களையும் அதே சமயம் ஈழக் குரலின் அடிநாதத்தை விட்டுவிடாமலும் இருக்கின்றன. இதனாலேயே அவருக்கு ஆதரவை விட எதிர்ப்பே அதிகம்.

அடிப்படைவாதக் குரல்கள் என்று முத்திரை குத்தப்பட்ட குரல்களில் ஒன்று, இஸ்லாமியர்களையும் அதன் பயங்கரவாதத்தையும் நியாயமாக வேறுபடுத்திப் பார்க்கச் சொல்வது. இந்த நிதர்சனம் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்தக் குரலின் மீது அடிப்படைவாதக் குரல் என்று முத்திரை குத்தப்பட்டது. இது முற்போக்காளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அரசியலுக்கு உகந்ததாகவும் இருந்தது. வாசு முருகவேல் இந்தக் கருத்தாக்கத்தைத் தரவுகளுடன் கூடிய புனைவால் உடைக்கிறார். இதனாலேயே அவருக்கு எதிர்ப்பு அதிகமும் வருகிறது. அதே சமயம் இவர், முற்போக்காளர்கள் சொல்லும் அடிப்படைவாதக் குழுவில் இருப்பவரும் அல்ல என்பது இவரை முழுவதுமாகக் கை கழுவ முடியாமல் அவர்களைப் படுத்துகிறது.

ஈழத் தமிழ் மக்கள், அங்கே வசிக்கும் இஸ்லாமியத் தமிழ் மக்கள் இருவருக்குமான முரண், பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் நாவல், இவர்கள் மீதான சிங்கள பௌத்த ஆதிக்கத்தையும் ஒருங்கே பேசுகிறது. அரசியலில் பகடைகள் எப்படி நேரம் பார்த்து வீசப்படுகின்றன என்பதை இந்த நாவல் தெளிவாக்குகிறது.

வாசு முருகவேலின் நாவல்களில் எனக்கிருக்கும் குறைகள் இந்த நாவலிலும் உண்டு. ஒன்று, புதிர் போலப் பேசிச் செல்வது. இது புரிந்தவர்களுக்குப் பெரிய வாசிப்பனுபத்தைத் தரும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அலுப்பைத் தந்துவிடக் கூடும். அடுத்தது, விரிவாகச் சொல்லவேண்டிய விஷயத்தை ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போவது. இதை ஓர் உத்தியாகவே அவர் நினைவோடு செய்யக் கூடும். ஆனால் இதை அவர் பரிசீலிப்பது நல்லது.

இன்னொரு வகையில் பார்த்தால், எப்படா நாவல் முடியும் என்பதைவிட, நாவல் முடிந்துவிட்டதே என்று நினைப்பதுவும் நல்லதற்குத்தான். நிச்சயம் வாசித்துப் பாருங்கள். அகிலன், தாசன், அவன் தங்கைக்காகவாவது வாசியுங்கள்.

Share