Tag Archive for புத்தகக் கண்காட்சி

சென்னை புத்தகக் கண்காட்சி 2019

நேற்று பொங்கல் நாளன்று ஒரு பார்வையாளனாகப் புத்தகக் கண்காட்சியில் பங்குபெற்றேன்.

தமிழ்ப் புத்தகங்களை மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்டதால் எப்போதுமே தமிழ்ப் புத்தகங்கள் மட்டுமே கண்ணில் படும். இந்தமுறை அபிராமுக்காக ஆங்கிலப் புத்தகங்கள் பக்கம் போனேன். உண்மையில் அங்கே குவிந்திருக்கும் இத்தனை ஆங்கிலப் புத்தகங்களில் எதை எடுப்பது விடுப்பது என்றே தெரியவில்லை. ஆங்கிலப் புத்தகங்களில் அதிக பரிட்சயம் இல்லை என்பதால் எதைப் பரிந்துரைப்பது, எதை வேண்டாம் என்று சொல்வது என்றே விளங்கவில்லை.

தமிழ்ப் பதிப்பகங்கள் கடை போட்டிருப்பதால் அங்கிருக்கும் புத்தகங்களைப் பற்றி எதாவது கேட்டால் நான்கு பேருக்கு ஒருவராவது அதைப் பற்றிச் சொல்வார்கள். ஆங்கிலப் புத்தகங்கள் டிஸ்ட்ரிப்யூட்டர் வழியாக விற்பதால் அங்கிருப்பவர்களுக்கு, அரங்கினுள்ளே குவிந்திருக்கும் புத்தகங்கள் பற்றித் துளியும் தெரிந்திருக்கவில்லை. எழுத்தாளர்கள் பற்றி எந்தக் குறிப்பும் அவர்களுக்குத் தெரியவில்லை.

எதை எடுத்தாலும் 100 ரூ புத்தகக் கடையில் இருக்கும் புத்தகங்கள்தான் என்ன, அவை ஏன் இப்படி யாரும் எடுப்பாரற்று அங்கே வந்தன, அவற்றுள் நமக்குத் தேவையானவற்றைத் தேடி எப்படி எடுப்பது – ம்ஹூம். ஒரு துப்பும் இல்லை. இந்நிலை ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம், ஆங்கிலப் புத்தகங்களின் விலைக்கு யானையை வாங்கிக் கட்டி மேய்த்துவிடலாம். சாணித் தாளில் அச்சடித்துப் பளபள அட்டை போட்டுக் கூசாமல் 699 ரூ என்கிறார்கள். அதிலும் கொஞ்சம் பிரபலமான புத்தகங்கள் என்றால், பக்கத்திலேயே போகத் தேவையில்லை. கிட்டத்தட்ட ஷாக் அடிக்கிறது.

கடைசியில் Selected Ghost Stories மட்டும் 100 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு வந்தான் அபிராம். அதில் என்ன இருக்கிறது என்று மேய்ந்துவிட்டுப் படிக்கக் கொடுக்கவேண்டும். ஆங்கிலப் புத்தகங்களுக்கு கிண்டில், கூகிள் புக்ஸ்தான் சரி என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். பாதி விலையிலும், கிண்டில் அன்லிமிடெட்டில் இலவசமாகவும் கிடைக்கும் புத்தகங்களைப் படித்து அறிவை இப்போதைக்கு வளர்த்துக்கொண்டால் போதும்.

பதிப்பாளராகப் புத்தகக் கண்காட்சியைப் பார்ப்பதற்கும் பார்வையாளனாகப் பார்ப்பதற்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கின்றன. அத்தனை பெரிய பிரமாண்ட அநாவசியப் புத்தகக் கண்காட்சியில் உட்கார இடம் இல்லை. வெளியே அரங்கில் பேச்சாளர்கள் பேசும்போது உட்கார இடம் கிடைப்பதும் கிடைக்காததும் பேசுபவரைப் பொருத்தது. நன்றாகப் பேசினால் நமக்கு உட்காரம் இடம் கிடைக்காது. இடம் கிடைத்தால் யாரோ பேசுவதைக் கேட்க சகிக்காது. ரொம்ப டெலிகேட் சிச்சுவேஷன்.

புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருக்கும் கழிப்பறைகள் ஒப்பீட்டளவில் இந்தமுறை பரவாயில்லை. இன்னும் பல மைல் தூரம் முன்னேற வேண்டும் என்றாலும், இதுவே ஓரளவுக்கு நல்ல முன்னேற்றம்.

வெளி கேட்-டில் இருந்து உள்ளே புத்தகக் கண்காட்சி அரங்குக்குள் வர ஒரு கிலோமீட்டராவது இருக்கும். ஏன் ஒருவர் இத்தனை தூரம் நடந்து வந்து புத்தகம் வாங்கவேண்டும் என்பது மில்லியன் டாலர் கேள்வி. பபாஸி கடந்த சில தினங்களாக இலவசப் பேருந்து வசதியை அறிவித்துள்ளது. அது எங்கே நின்று எந்த நேரத்தில் வரும் போகும் என்பது ரகசியம். ஒரு பேருந்து முழுக்க ஆள் ஏறினால்தான் எடுப்பார்கள் போல. நாம் நேரம்கெட்ட நேரத்தில் ஏறினால், அதிலேயே ஒரு நெடுந்தூக்கம் போட்டுவிடலாம். நானும் மனைவியும் குழந்தைகளும் அரை மணி நேரம் காத்திருந்தும் வண்டியைக் காணவில்லை. வேறு வழியின்றி ஓலா புக் செய்து ஆட்டோக்காரரிடம் விடாமல் வழி சொல்லி ஒருவழியாக கண்காட்சியை விட்டு வெளியே வந்தோம்.

ஒருவர் ஏன் புத்தகக் கண்காட்சிக்கு வரவேண்டும் என்ற காரணங்களை எப்படித் தொகுத்தாலும் என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆனால் மக்கள் நிஜமாகவே குவிகிறார்கள். பொழுதுபோக்குக்காக வருகிறார்களா? நிச்சயம் இல்லை. இதைவிடத் தரமான பொழுது போக்குகள் ஆயிரம் இருக்கின்றன. 10% தள்ளுபடி கிடைப்பதாலா? ஒருவர் புத்தகக் கண்காட்சியில் 1000 ரூபாய் புத்தகம் வாங்கினால் 100 ரூ தள்ளுபடி. இந்த நூறு ரூபாய்க்கு யாராவது 500 ரூபாய் செலவழித்து வருவார்களா? 3000 ரூபாய்க்குப் புத்தகம் வாங்கினாலே 300 ரூபாய்தான் தள்ளுபடி. புத்தகக் கண்காட்சியில் 10% பேர்கூட 3000 ரூபாய்க்குப் புத்தகம் வாங்கமாட்டார்கள். ஒரே இடத்தில் புத்தகங்கள் குவிந்து கிடப்பதைப் பார்த்து அதிலிருந்து தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வருகிறார்களா? தேவைக்கு அதிகமாகக் குவிந்திருக்கும் ஓரிடத்தில் இருந்து உங்களுக்குத் தேவையான ஒன்றைத் தேர்வு செய்யவே முடியாது என்பதே யதார்த்தம். கிடைக்காத புத்தகங்களை வாங்கவா? இது ஒரு மாயை. கிடைக்காத புத்தகங்கள் எங்கேயும் கிடைக்காது. 🙂 ஒருவேளை இங்கே கிடைக்கத் தொடங்கினால் பின்பு எங்கேயும் கிடைத்துவிடும்.

இன்றைய நிலையில் வீட்டில் இருந்தபடியே புத்தகங்களை வாங்க ஆயிரம் வழிகள் உள்ளன. எத்தனையோ இணையக் கடைகள் வந்துவிட்டன. அலைச்சல் இல்லாமல் பொறுமையாகப் பார்த்து வாங்கலாம். தள்ளுபடி கிடைக்காது. கொரியர் செலவு கூடுதல் ஆகும். ஆனால் ஒருவர் தன் குடும்பத்துடன் கண்காட்சிக்கு வந்து செல்ல ஆகும் செலவைவிடக் குறைவாகவே ஆகும். ஆனாலும் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். எழுத்தாளர்களுடன் பேசலாம் என்பதற்காகவா? இதற்காக வருபவர்கள் குறைவே. விற்கும் புத்தகங்களில் 5% எழுத்தாளர்களை இவர்களுக்குத் தெரிந்திருந்தாலே அதிகம் என நினைக்கிறேன். எப்படியோ சென்னை புத்தகக் கண்காட்சி பெரிய ஒரு பழக்கமாக மாறிவிட்டிருக்கிறது. ஒரு இயக்கமாகவே ஆகிவிட்டது. ஒரு வகையில் இது மகிழ்ச்சிதான். பெரிய சாதனைதான். ஆனாலும் எனக்கு இதற்கான விடைதான் கிடைக்கவில்லை.

ஒன்றே ஒன்று சொல்லலாம். இத்தனை பெரிய புத்தகக் கண்காட்சியில் அலைந்து, எளிதாக எங்கேயும் கிடைத்துவிடும் இரண்டு புத்தகங்களை வாங்கிக் கொண்டு மனநிறைவுடன் சென்றாலும்கூட அது ஒருவகையில் தோல்வியே. அரிய புத்தகங்களைத் தேடி வாங்கிக்கொண்டால் புத்தகக் கண்காட்சியின் பயன் முழுமையாகக் கிடைக்கலாம். எளிதாகக் கிடைக்கும் புத்தகங்களை எங்கேயும் பிறகு வாங்கிவிடலாம். இன்னொரு தேவை, குழந்தைகளுக்கு இந்த உலகத்தை அறிமுகப்படுத்துவது. அப்போதும் புத்தகம் வாங்கும் பழக்கமும், அதற்குப் பின் ஒருவேளை அதைப் படிக்கும் வழக்கமும் வரலாம். இதுவே புத்தகக் கண்காட்சியின் மிக முக்கியத் தேவை என்று நினைக்கிறேன்.

புத்தகக் கண்காட்சியைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. நம் நேரம், பணம் என எதையும் வீணாக்கமல் பயன்படுத்த யோசித்துச் செயல்படவேண்டும்.

Share

சென்னைப் புத்தகக் கண்காட்சி தொடர்பாக

பாம்புகள் உலவும் வெளியில் பாம்புகளுக்கு மத்தியில் புத்தகங்களை வாசகர்கள் வாங்குகிறார்கள் என்று மட்டும் சொல்லாத ஒரு கட்டுரையை நேற்று தினமலரில் வாசித்து அதிர்ந்தேன். சென்னை புத்தகக் கண்காட்சி பல இன்னல்களுக்கு மத்தியில் நடைபெறுகிறது. சில குறைகள் உள்ளன என்பதும் உண்மையே. ஆனால் ஒட்டுமொத்தமாக புத்தகக் கண்காட்சியைப் புறக்கணிக்கும் அளவுக்கோ, வாசகர்கள் பயந்து பின்வாங்கும் அளவுக்கோ குறைகள் எவையுமே இல்லை என்பதே உண்மை.

புத்தகக் கண்காட்சி என்பது ஒரு மாபெரும் கூட்டு முயற்சி. நிச்சயம் சில சுணக்கங்கள், சில பின்னடைவுகள் இருக்கவே செய்யும். இவையெல்லாவற்றையும் மீறி ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியும் மெருகேறிக்கொண்டேதான் வருகிறது.

இம்முறை தீவுத்திடலில் நடத்தப்பட ஒரே காரணம், கடந்த டிசம்பரில் வரலாறு காணாத மழையினால் ஏற்பட்ட பின்விளைவுகளே. ஜூனில் வெயில் கடுமையாகவே இருக்கும். அதை நாம் ஒன்றும் செய்யமுடியாது. எதிர்பாராத மழை வேறு. இத்தனைக்கும் 700க்கும் மேற்பட்ட அரங்குகளில், நீர் ஒழுகியது என்னவோ பதினைந்து அரங்குகளுக்கும் கீழாகவே இருக்கும். மற்ற அரங்குகளில் பெரிய பாதிப்பு இல்லை. இத்தனை செய்ததே பெரிய விஷயம். ஆனால் நாம் குறைகளை மட்டுமே சொல்லப் பழகிவிட்டோம். குறைகள் சொல்லப்படவேண்டியது நிச்சயம் தேவைதான், ஆனால் புத்தகக் கண்காட்சியில் குறைகள் தவிர வேறு எதுவுமே இல்லை என்ற வகையில் எழுதுவது அர்த்தமற்றது.

புத்தகக் கண்காட்சிக்கு வருகிறவர்கள் நிச்சயம் வேர்வையில் நனைந்தே செல்கிறார்கள். இதற்கு ஒன்றும் செய்யமுடியாது. அதேசமயம் இத்தனை வேர்வையிலும் எத்தனை பேர் புத்தகம் வாங்குகிறார்கள் என்பதே நாம் பார்க்கவேண்டியது. கடும் வெயில் காரணமாக எல்லா வரிசைகளிலும் அதிக மின்விசிறிகளை நிர்வாகம் வைத்தது. அதன் பிறகு கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் ஜூனில் வேர்க்கவே செய்யும். வேர்வையில் புத்தகம் வாங்குவது ஒரு அனுபவம்தான், ஒரு பெருமைதான் என்று நினைத்துக்கொள்ளவேண்டியதுதான்.

வருகின்றவர்களுக்கு அருந்த நீர் வைக்கப்பட்டுள்ளது. கையிலேயே வாசகர்கள் நீரை சுமந்துகொண்டு வருவது நல்லது. குறைந்தபட்சம் நீர் பிடிக்க வாட்டர் கேனாவது கொண்டு வருவது நல்லது. திரைப்படத்துக்குப் போகும்போது, தொடர்வண்டியில் ஊருக்குச் செல்லும்போது நாம் நீர் கொண்டு போகிறோம். புத்தகக் கண்காட்சிக்கும் கையில் நீர் கொண்டு செல்லலாம், தவறில்லை.

மிகவும் தூரம் என்பது ஒரு பிரச்சினை. சென்னை போன்ற ஒரு மாநகரத்தில் எங்கே புத்தகக் கண்காட்சி வைத்தாலும் ஏதேனும் ஒரு பகுதி மக்களுக்கு நிச்சயம் வெகுதூரமாகவே இருக்கும். நந்தனத்தில் புத்தகக் கண்காட்சி நடந்தபோது தாம்பரத்தில் இருந்து ஒருவர் எப்படி வருவார் என்றோ வியாசர்பாடியில் இருந்து ஒருவர் எப்படி வருவார் என்றோ நாம் கேட்கவில்லை. ஆனால் தீவுத்திடலில் வைக்கவும் தென்சென்னைக்காரர்கள் எப்படி வருவார்கள் என்ற கேள்வி வருகிறது. இதே தீவுத்திடலில்தான் பொருட்காட்சி நடக்கிறது. பெருங்கூட்டம் கூடுகிறது. அப்போது எப்படி வருகிறார்கள்? இப்போது ஏன் அங்கலாய்ப்பு? புத்தகம் வாசிப்பது என்பது நம் பண்பாட்டோடு ஒன்றி வரவில்லை என்பதுதான் காரணம். புத்தகம் வாசிப்பது என்பது எதோ யாருக்கோ செய்யும் சேவை என்னும் மனப்பான்மையே காரணம். புத்தகம் வாசிப்பது கடமைக்காக அல்ல, ரசனைக்காக. இப்படி எண்ணம் உள்ளவர்கள் நிச்சயம் குறைகளை மட்டுமே அங்கலாய்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். புத்தகம் இருக்கும் இடம் தேடி புத்தகத்தைக் கண்டடைந்து வாசித்துவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள்.

அதோடு, பழக்கமான ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு புத்தகக் கண்காட்சியை மாற்றும்போது எழும் பொதுப்புத்தி சார்ந்த பிரச்சினைகளும் ஒரு காரணம். காயிதே மில்லத் கல்லூரியில் இருந்து செய்ண்ட் ஜார்ஜ் பள்ளிக்கு மாற்றியபோதும், பின்னர் அங்கிருந்து நந்தனம் வொய் எம் சி ஏவுக்கு மாற்றியபோதும் இதே முணுமுணுப்புகள் இருந்தன. இப்போது நந்தனத்தில் இருந்து தீவுத்திடலுக்கு வரவும் அதேபோல் வருத்தப்படுகிறார்கள். இதுவும் பழகும்.

நந்தம்பாக்கத்தில் ஏன் வைக்கவில்லை என்று ஒரு கேள்வி. நந்தம்பாக்கத்தில் வைத்தால் ஏற்படும் செலவுகளை ஒரு பதிப்பாளரால் சமாளிக்கமுடியாது. நந்தம்பாக்கத்தில் நடத்தும் அளவுக்கு நம் வாசகர்கள் அதிகப் புத்தகங்கள் வாங்கும் சமயத்தில் அதுவும் நடக்கத்தான் போகிறது.

தீவுத்திடலில் புத்தகக் கண்காட்சிக்கு அதன் அருகில் உள்ள சில முக்கிய இடங்களில் இருந்து இலவச ஆட்டோ சேவையும் வழங்கப்பட்டது. தியேட்டருக்குச் செல்லும்போது தியேட்டர் முன்பாக பேருந்து நிறுத்தம் இல்லையே என்று நாம் நொந்துகொள்வதில்லை. தியேட்டரில் டிக்கட் கிடைக்குமா என்பதிலேயே கவனமாக இருக்கிறோம். ஆனால் புத்தகக் கண்காட்சிக்கு வரும்போது நமக்கு ஆயிரம் வசதிக்குறைபாடுகள் கண்ணுக்குப் படுகின்றன.

புத்தகக் கண்காட்சி நூறு சதவீதம் நிறைகளோடு செயல்படுகிறது என்று நான் சொல்லவில்லை. நிச்சயம் பல விதங்களில் முன்னேற்றம் தேவை. அதே சமயம் புத்தகக் கண்காட்சிக்கே வரமுடியாதபடிக்கான அடிப்படைத் தேவைகளே இல்லை என்பது அநியாயமான வாதம். சென்னையில் கொஞ்சம் தூரம் உள்ள எந்த ஒரு இடத்துக்கும் செல்லும்போது உள்ள அதே பொதுவான வசதிக்குறைவுகள் மட்டுமே புத்தகக் கண்காட்சிக்குச் செல்லுவதிலும் உள்ளன. தனியாக வேறு குறைகள் இல்லை. புத்தகம் வாங்க சிறந்த இடம் புத்தகக் கண்காட்சியே. இதில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லை. பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் கொட்டிக்கிடக்கின்றன. நிச்சயம் வாருங்கள். இந்தியாவிலேயே வாசகர்கள் அதிக அளவு புத்தகங்களை நேரடியாக பதிப்பாளர்களிடம் இருந்து வாங்கும் பெரிய புத்தகக் கண்காட்சி இது. இதைத் தவறவிடாதீர்கள். அதோடு, புத்தகக் கண்காட்சி என்பது மார்க்கெட்டுக்குப் போய் கத்தரிக்காய் வாங்கி வரும் ஒரு அனுபவம் அல்ல. புத்தகக் கண்காட்சியில் நீங்கள் உங்கள் வாழ்க்கையையே மாற்றப் போகும் ஒரு புத்தகத்தைக் கண்டடையலாம். உங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு எழுத்தாளரை சந்தித்து உரையாட நேரலாம். யாருக்காகவோ யாரோ எழுதிய ஒரு வரி உங்களுக்காக அங்கே காத்திருக்கலாம். இந்த அனுபவங்களுக்கு முன்பு குறைகள் ஒரு பொருட்டே அல்ல என்பது சரிதானே?

Share

மாதிரிக்கு ஒரு புத்தகக் கண்காட்சி – எஸ்.ஆர்.வி பள்ளி, திருச்சி

திருச்சியில் உள்ள எஸ் ஆர் வி பள்ளியில் சென்ற மாதம் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. அதில் டயல் ஃபார் புக்ஸ் சார்பில் முதன்முறையாக நாங்கள் பங்கேற்றோம். இது அப்பள்ளி நடத்தும் 9வது வருடப் புத்தகக் கண்காட்சி. பொதுவாக கிழக்கு சார்பில் கிழக்கு புத்தகங்களை மட்டுமே அங்கே விற்பனைக்கு வைப்போம். மற்ற பதிப்பகங்கள் அவர்களது புத்தகங்களை காட்சிக்கு வைப்பார்கள். இந்தமுறை அப்படி அல்லாமல் டயல் ஃபார் புக்ஸ் சார்பில் அனைத்துப் பதிப்பகங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களை விற்பனைக்குக் காட்சிப் படுத்தியிருந்தோம். 

IMG-20141127-WA0000

புத்தகக் கண்காட்சியை சிறப்பாக நடத்த பள்ளி நிர்வாகம் தந்த ஒத்துழைப்பு அபாரமானது. அப்பள்ளியின் முதல்வர் துளசிதாசன் எடுத்துக்கொண்ட முயற்சிகளைப் பற்றித் தனியே சொல்லவேண்டும்.

புத்தக வாசிப்பை வளர்க்க என்ன செய்யவேண்டும் என்று பலரும் யோசிக்கிறோம். ஒரு கையறு நிலையில்தான் நாம் உறைந்துவிடுகிறோம். எங்கே சென்றாலும் அவ்வாசல் மூடப்பட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இன்றைய நிலையில் புத்தக வாசிப்பை மேம்படுத்த நாம் எடுக்கும் முயற்சிகளெல்லாம் தடைப்படுகின்றன. எங்கோ தவறு செய்கிறோம், அது எது என்று கண்டறியவோ, அப்படியே கண்டறிந்தாலும் அதை சரி செய்யவோ இயலாத நிலை ஒன்றை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

எல்லோருக்குமே தெரியும், மாணவர்களிடம் இருந்து புத்தக வாசிப்பைத் தொடங்கவேண்டும் என்பது. பதில் நம்மிடையே இருக்கிறது. ஆனால் அதைச் செயல்படுத்த வழிகள் தெரியவில்லை. ஏனென்றால் அதைச் செய்யும் பொறுமையும் பக்குவமும் இல்லை. அதைச் செய்யவேண்டிய ஆசிரியர்களே புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் பற்றித் தெரியாதவர்களாக இருப்பது பெரிய சோகம். அதையும் மீறி ஒரு சில ஆசிரியர்கள் புத்தக வாசிப்பின் அவசியம் பற்றித் தெரிந்து அதை முன்னெடுக்க நினைத்தால், அடுத்த தடை பெற்றோர்கள் வழியே வருகிறது. பக்கத்துவீட்டு மாணவனோ சொந்தக்காரப் பையனோ அதிகம் மதிப்பெண் பெற்றால், அதைவிட அதிக மதிப்பெண்ணைத் தன் மகன் பெறவேண்டும் என்ற அழுத்தத்தை பெற்றோர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். இப்படி பாடப் புத்தகத்தைப் படிக்காமல் வேறு புத்தகங்களைப் படிப்பதால் என்ன பயன் என்று அவர்கள் மிகத் தெளிவாகவே கேள்வி எழுப்புகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் இக்குரலை நீங்கள் தொடர்ந்து கேட்கமுடியும். இதைமீறி ஆசிரியர்களால் என்ன செய்துவிடமுடியும்? இப்படி பல இடங்களில் மோதிய பந்து கடைசியில் தஞ்சமடையும் இடம், புத்தக வாசிப்பைப் பிறகு பார்த்துக்கொள்ளாம் என்னும் இடமே.

IMG_20141128_121119

எஸ் ஆர் வி பள்ளியின் முதல்வர் துளசிதாசன் தன் தொடர் முயற்சியின் காரணமாக, மாதிரி ஒன்றை நமக்கு உருவாக்கிக் காண்பித்துள்ளார். அதை அப்படியே பின்பற்றினாலே, மேலே சொன்ன அத்தனை தடைகளையும் நாம் உடைத்து, மாணவர்களை புத்தக வாசிப்பாளர்களாக மாற்றும் பெரிய சாதனையை சுலபமாகச் செய்யமுடியும். ஒரு பள்ளி தொடர்ந்து 20 ஆண்டுகளில் அதன் மாணவர்களில் பாதி பேரையாவது புத்தக வாசிப்பாளர்களாக மாற்றுமானால், அப்பள்ளி மிகப்பெரிய சமூக சாதனை செய்திருக்கிறது என்றே அர்த்தம். படிக்க சாதாரணமாகத் தோன்றினாலும், உண்மையில் இது அசுர சாதனை. ஒவ்வொரு பள்ளியும் இதில் பத்தில் ஒரு பங்கைச் செய்தாலே போதும், அடுத்த பத்து ஆண்டுகளில் வரும் தலைமுறையினரிடையே வாசிப்புப் பழக்கம் பெரிய அளவில் ஊக்கம் பெறும். அடுத்த இருபது ஆண்டுகளில் அது ஒரு இயக்கமாகும். அத்தலைமுறை பெற்றோர்களாகும்போது, ஆசிரியர்களும் அவர்களும் இணைந்தே இதைப் பெரிய அளவில் – அவர்கள் அறியாமலேயே – முன்னெடுத்துச் செல்வார்கள். இத்தகைய பெரிய சாதனையை அமைதியாகச் செய்திருக்கிறது எஸ் ஆர் வி பள்ளி.

இந்தக் கண்காட்சிக்கு முன்னர் நான் துளசிதாசன் அவர்களை இரண்டு முறை சந்தித்துப் பேசினேன். கண்காட்சியின் வெற்றி பற்றி ஐயம் பெரிய அளவில் இல்லை என்றாலும், இது சாத்தியமாகுமா என்ற சிறிய சந்தேகம் இருக்கத்தான் செய்தது. ஆனால் துளசிதான் மிக நம்பிக்கையுடன் பேசினார். துளசிதானின் மிகப்பெரிய பலம் அவரது அபாரமான புத்தக வாசிப்பு. வீட்டில் மிகப்பெரிய நூலகம் ஒன்று இருப்பதாகச் சொன்னார். துளசிதாசன் வயதொத்தவர்கள் இளமையில் ஒரு வேகத்தில் புத்தகம் வாசிக்கத் துவங்கி, ஒரு நிலையில் தேங்கிவிட்டிருப்பார்கள். ஆனால் இவர் இன்றுவரை தொடர்ந்து புத்தகம் வாசித்துக்கொண்டு தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார். எனவே எப்புத்தகங்களை மாணவர்களுக்கு பள்ளி வயதில் படிக்கத் தரவேண்டும், எவற்றைப் படிக்கத் தரக்கூடாது என்பதில் தீர்மானமான கருத்துகள் கொண்டிருக்கிறார். மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லும்போது அவர்களே தேடிப் படிக்கவேண்டிய நூல்கள் பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறார். இவையே ஒரு நல்ல புத்தக கண்காட்சி இயக்கத்தை உருவாக்க அவருக்கு மூலதனமாக இருந்திருக்கவேண்டும். ஆம், அவர் உருவாக்கி இருப்பது நிச்சயம் ஒரு இயக்கம்தான்.

பள்ளியில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு மாணவர்களையும் பெற்றோர்களையும் வரவைக்க மிக எளிமையான வழியைப் பின்பற்றுகிறது பள்ளி நிர்வாகம். பெற்றோர் ஆசிரியர் தினம், புத்தகக் கண்காட்சியை ஒட்டி வைக்கப்படுகிறது. இதனால் எல்லாப் பெற்றோரும் நிச்சயம் பள்ளிக்கு வந்தே தீரவேண்டும். இதுவரை நாங்கள் எத்தனையோ பள்ளிகளில் புத்தகக் கண்காட்சிகளில் பங்கேற்றிருக்கிறோம். அங்கே பெற்றோர்கள் வரவு குறைவாகவே இருக்கும். ஏனென்றால் பெற்றோர்களுக்குப் பல வேலைகள். அதற்கிடையில் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க அவர்களுக்கு நேரமில்லை. அதை, இந்தப் பெற்றோர் ஆசிரியர் தினத்தின் மூலம் எஸ் ஆர் வி பள்ளி எளிதாகத் தாண்டிவிட்டது.

புத்தகக் கண்காட்சியின் முன்பிருந்தே, அதைப் பற்றி தொடர்ந்து மாணவர்களிடம் பேசுவது, மாணவர்களின் பெற்றோர்களுக்கு அதைப் பற்றிய செய்திகளை அனுப்புவது, குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் அனுப்புவது என எல்லா வழிகளிலும் புத்தகக் கண்காட்சி பற்றிய ஆர்வம் மாணவர்களிடையேயும் பெற்றவர்களிடையேயும் வளர்க்கப்படுகிறது. பள்ளியில் நடைபெறும் தினசரி வழிபாட்டின்போதும் இதைப் பற்றிப் பேசுகிறார்கள் ஆசிரியர்கள்.

ஒவ்வொரு மாணவரும் பள்ளியில் சேரும்போது ஒவ்வொரு வருடமும் அவருக்கு ஓர் உண்டியில் தரப்படுகிறது. அம்மாணவர் அந்த உண்டியலை அவர் வீட்டில் ஒரு நூலகம் உருவாக்கப் பயன்படுத்தவேண்டும். வீட்டுக்கு ஒரு நூலகம் என்ற பெயரில் இதை எஸ் ஆர் வி பள்ளி பிரபலப்படுத்தியுள்ளது. புத்தகக் கண்காட்சி வரை சேமிக்கப்படும் பணத்தை எடுத்துக்கொண்டு வந்து மாணவர்கள் புத்தகம் வாங்குகிறார்கள். பல மாணவர்கள் தங்கள் உண்டியிலில் இருந்த சில்லறையை எண்ணிக்கொண்டு வந்து எங்களிடம் தந்து புத்தகம் வாங்கியபோது, தனிப்பட்ட முறையில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மாணவர்கள் வரிசையில் நின்று புத்தகம் வாங்குகிறார்கள். நான்கு நாள்கள் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு வகுப்பின் மாணவர்களை ஆசிரியர்கள் கண்காட்சிக்கு அனுப்பி வைக்கிறார்கள். மாணவர்கள் தங்களிடையே, “நான் சச்சின் வாங்கிட்டேன், நீ எங்க வாங்கிருக்க?”, “நான் பஞ்ச தந்திரக் கதை வாங்கிருக்கேன்” என்று பேசிக்கொண்டே புத்தகம் வாங்குவதைப் பார்ப்பது ஒரு மறக்கமுடியாத அனுபவம்.

IMG_20141129_113517

மாணவர்கள் தாங்கள் வாங்கிய புத்தகங்களின் பட்டியலை மறுநாள் வகுப்பாசிரியரிடம் தரவேண்டும். எந்த மாணவர்கள் அதிகப் புத்தகங்கள் வாங்கியிருக்கிறாரோ அவருக்குப் பாராட்டு உண்டு. அதேபோல் பெற்றோர்கள் வாங்கியிருக்கும் புத்தகங்களை வீட்டில் அடுக்கி, அதைப் புகைப்படம் எடுத்து, வீட்டுக்கு ஒரு நூலகம் என்று பெயரிட்டு வகுப்பாசிரியர்களிடம் தரச்சொல்லியும் ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார்கள். 

வாங்கிய புத்தகங்களை மாணவர்கள் படிப்பது பற்றியும் அதைத் தொடர்ந்து உரையாடுவது பற்றியும் ஆசிரியர்கள் கவனம் கொள்கிறார்கள். அடிக்கடி ஏதேனும் ஒரு முக்கியஸ்தர் அப்பள்ளிக்கு வந்து விரிவுரை ஆற்றுவது வழக்கமாகவே உள்ளது. இப்படி மாணவர்களிடையே புத்தக வாசிப்பை மேம்படுத்த எஸ் ஆர் வி பள்ளியும், அதன் முதல்வர் துளசிதாசனும் எடுத்துக்கொண்டிருக்கும் முயற்சிகள் அசரடிக்கின்றன.

மயிலாப்பூரில் மயிலாப்பூர் திருவிழாவில் தெருவில் நாங்கள் புத்தகக் கண்காட்சி நடத்தியிருக்கிறோம். எதிர்பாராத பலர் வந்து புத்தகங்களை வாங்கிச் செல்வார்கள். கோவில் அர்ச்சகர் ஒருவர் ஒவ்வொரு நாளும் வரும் காணிக்கையை எடுத்துக்கொண்டு வந்து அவருக்குத் தேவையான புத்தகத்தை வாங்கிச் செல்வார். அவர் தரும் காணிக்கையில் விபூதி ஒட்டியிருக்கும். ரூபாய் தாள்கள் கசங்கி குங்குமத்தோடு வரும். அன்று நான் அடைந்த அதே மகிழ்ச்சியை எஸ் ஆர் வி பள்ளியில் மாணவர்கள் புத்தகம் வாங்கும்போதும் அடைந்தேன். 

IMG_20141127_125442

இன்றைய நிலையில் இப்படி செயல்படும் முதல்வர்களையும், அதை அனுமதித்து சிறப்பாக முன்னெடுக்கும் பள்ளி நிர்வாகத்தையும் பார்ப்பது அரிது. உண்மையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் இதை ஒவ்வொரு வருடமும் செய்யமுடியும். பள்ளி முதல்வர்கள் திடத்துடன் இருந்தால், இதை வழக்கமாக்கிவிடலாம். இதனால் மாணவர்கள் பெறப்போகும் அனுகூலங்கள் சொல்லி மாளாது. அத்தோடு ஒரு சமூக மாற்றத்துக்கான வித்து ஊன்றப்படும். ஆனால் இப்படிச் செய்யும் ஆசிரியர்களும் பள்ளிகளும் மிகக்குறைவே என்ற உண்மை முகத்தில் அறைகிறது. இதைப் படிக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு, இதைப் போன்ற புத்தகக் கண்காட்சி நடத்துவதைப் பற்றி ஆலோசனை அளிக்கலாம். எங்கே இருந்தாவது ஒரு மாற்றத்தை நாம் தொடங்கியாகவேண்டும். புத்தக வாசிப்பு அதிகமாகாமல் நாம் எந்த ஒரு மாற்றத்தையும் தீவிரமாகச் செய்துவிடமுடியாது என்று நான் நம்புகிறேன். நாம் செய்யப்போகும் எந்த ஒரு செயலுக்கும் நம் புத்தக வாசிப்பு நமக்குப் பின்புலமாக இருந்து பெரிய தன்னம்பிக்கையை அளிக்கும் என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். அந்த வகையில் என் மனமார்ந்த நன்றியை எஸ் ஆர் வி பள்ளிக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

Share