Tag Archive for நகைச்சுவை

Throat pain

உங்களுக்கு தொண்டை வலின்னு நியூஸ்ல பார்த்தேன்

நியூஸ்லயா? என்ன சார் சொல்றீங்க?

ரொம்பத்தான் ஓவர் பில்டப் சார் உங்களுக்கு. இதெல்லாமா நியூஸ்ல வரும்? ஃபேஸ்புக்ல பாத்தேன்.

ஓ, சொல்லுங்க சார்

போஸ்ட் பாத்ததும்தான் உங்க ஞாபகம் வந்துச்சி. ஒரு புக் பத்தி சொன்னேனே..

சொல்லுங்க சார்.

நான் எழுதி அனுப்பினா எத்தனை நாளாகும் உங்களுக்கு ப்ரிண்ட் பண்ண.

அனுப்புங்க சார், பாத்துட்டு சொல்றேன்.

சும்மா தோராயமா சொல்லுங்க சார்.

மே மாசம் கொண்டு வரலாம் சார். அனுப்பறீங்களா சார்?

எதை அனுப்பணும்?

புக்?

நான் இன்னும் எழுதவே ஆரம்பிக்கலையே! பெரிய சப்ஜெக்ட் சார். எழுதி முடிக்க ஒரு வருஷம் ஆகும். எழுதி அனுப்பினா எத்தனை நாள்ல வரும்னு தெரிஞ்சிக்கிறதுக்காக கேட்டேன்.

அந்த புக்கை இங்கிலீஷ்ல டிரான்ஸ்லேட் பண்ண எவ்ளோ நாளாகும் சார்?

அனுப்புங்க சார், பாத்துட்டு சொல்றேன்.

தோராயமா எத்தனை நாள் ஆகும்? சரி விடுங்க, பாத்துக்கலாம். அப்புறம் சார், தொண்டை வலின்னு போட்டிருந்தீங்கல்ல..

ஆமா…

என்ன என்ன கை வைத்தியமெல்லாமோ சொல்வாங்க. எதையும் செய்யாதீங்க.

ம்

வாயையும் வயித்தையும் புண்ணாக்கிக்கிட்டா யாரு சார் பாப்பா?

ம்

நான் சொல்றதை கேளுங்க.

ம்

ரெண்டு ஓம இலை, ஒரு கிராம்பு எடுத்துக்கோங்க.

எடுத்துட்டேன் சார்

அதுக்குள்ளயா? எப்படி சார்?

நேத்து கமெண்ட்ல வந்த எல்லாத்தையும் வாங்கி ரெடியா முன்னாடி வெச்சிருக்கேன் சார். இருபத்து ரெண்டாயிரம் ரூபா ஆச்சு. எப்படி இதையெல்லாம் காலி பண்ண போறேன்னுதான் தெரியல.

ஏன் சார் எல்லாத்தையும் வாங்கினீங்க? எல்லாம் சுத்த ஹம்பக் சார். ரெண்டு ஓம இலை, ஒரு கிராம்பு, வெறும் வாய்ல போட்டு மென்னீங்கன்னா… ஒலகத்துல இருமலே வராது.

ஆமா சார், அமெரிக்கால இதுக்கு காப்பி ரைட் வாங்கப் போறானாம். கண்டுபிடிச்சது நாம, ஆனா காப்பிரைட் அமெரிக்காவுக்கும். அமெரிக்காவை ஆப்படிச்சாத்தான் சார் இந்தியா வல்லரசாகும்.

ம்.

அப்புறம் இன்னொரு விஷயம். தொண்டை வலி வெச்சிக்கிட்டு யாருகிட்டயும் ரொம்ப பேசாதீங்க சார்.

ஓகே சார்

சும்மா ஓகேன்னு சொல்லிட்டு, இப்ப என்கிட்ட பேசின மாதிரி பேசிக்கிட்டே இருக்காதீங்க சார். புக் ஒரு வருஷம் கழிச்சி வரப் போகுது, அதுக்கு எதுக்கு இப்பவே இத்தனை டிஸ்கஷன்? வெச்சிடறேன் சார்.

Share

போராட்டம் – சில விதிமுறைகள் – நீதிமன்றத்துக்குப் பரிந்துரைகள்

போராட்டம் – சில விதிமுறைகள் – நீதிமன்றத்துக்குப் பரிந்துரைகள்

* அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் உடைக்கப்படும் பஸ்கள் மற்றும் ரயில்களுக்கான சேதாரத்தை அந்தக் கட்சியிடமிருந்து வசூலிக்கவேண்டும். அப்படித் தராத பட்சத்தில் அந்தக் கட்சியைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. கடைக்காரரே உடைத்துக்கொண்டார் என்றால் அதை கட்சியே நிரூபிக்கவேண்டும். நிரூபிக்க முடியாதே என்றால் போராட்டம் நடத்தக்கூடாது. இது பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, அதிமுக, திமுக என எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவானதென்பதறிக.

* அரசியல் கட்சிகள் அல்லாத அமைப்புகள் போராட்டம் நடத்தி அதனால் ஏற்படும் நஷ்டங்களை அந்த அமைப்பு தரவேண்டும். இல்லையென்றால் அந்த அமைப்பைத் தடை செய்யவேண்டும். இது ஆர் எஸ் எஸ் உட்பட்ட எல்லா அமைப்புக்கும் பொருந்துமென்பதறிக.

* பரிட்சை நடக்கும் நாளில் எவ்விதப் போராட்டமும் நடக்கக்கூடாது. அப்படி அல்லாமல் ஏதேனும் கட்சியோ அமைப்போ போராட்டத்தை அறிவிக்குமானால் அந்த அமைப்பின் தலைவர்களைக் கைது செய்யவேண்டும். போராட்டத்தை வாபஸ் பெறாவிட்டால், அந்தக் கட்சி தேர்தலில் பங்கேற்பதை ஒரு தடவை தடை செய்யவேண்டும். அமைப்பை ஒரு வருடத்துக்குத் தடை செய்யவேண்டும்.

* உண்ணாவிரதம் என்பதே குறைந்தது மூன்று நாள் உண்ணாவிரதமாக இருக்கவேண்டும். காலை 9 மணி முதல் இரவு 6 மணி வரையிலான டுபாக்கூர் உண்ணாவிரதத்தை உடனே தடை செய்யவேண்டும். மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்து, முதல் ஒரு மணி நேரத்திலேயே உண்ணாவிரதத்தின் காரணம் சரியானால்கூட, மூன்று நாள் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து நடத்தி முடிக்கவேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயவேண்டும். அப்படி ஒருவேளை, தெரியாத்தனமா இருந்துட்டேன் என்று உண்ணாவிரதம் இருப்பவர் கதறினால், பொதுவில் இனி ஒருநாளும் என் வாழ்நாளில் உண்ணாவிரதம் இருக்கமாட்டேன் என்று அவரைச் சொல்லச் சொல்லி அதை லைவ் வீடியோவாக ஒளிபரப்பவும் வேண்டும். பின்னர் மட்டுமே அவர் அந்த உண்ணாவிரதத்தைக் கைவிடலாம். கருணாநிதி தொடங்கி ஜீயர் வரை அனைவருக்கும் இவ்விதி பொருந்துமென்றறிக.

* வெள்ளிக் கிழமையோ திங்கள் கிழமையோ அல்லது இரண்டு விடுமுறைகள் வரும் நாளுக்கு முதல் நாளோ மறுநாளோ பந்தோ கடையடைப்போ நடத்தக்கூடாது.

* எந்தத் தொலைக்காட்சியும் பந்தை நேரடியாக அரை மணி நேரத்துக்கு மேல் ஒளிபரப்பக்கூடாது. கலவரம் என்றால் நிச்சயம் ஒளிபரப்பக்கூடாது. இரண்டு நாள் கழித்து கொஞ்சம் வேகம் அடங்கியதும் அந்தக் காட்சிகளை ஒளிபரப்பிக்கொள்ளலாம்.

நிபந்தனைக்குட்பட்டு நீங்க போராட்டம் நடத்தி எங்களுக்கு நல்லது செஞ்சா போதும்.

#மனம் நதிநீர் போல அமைதியாக இருக்கும்போது எழுதிய பதிவு இது.

Share

Fire for books

"ஹலோ ஃபயர் பார் புக்ஸா?”

“இல்லைங்க, டயல் ஃபார் புக்ஸ்.”

“ஓ, ஸாரிங்க. தப்பா கூப்பிட்டுட்டேன்.”

“சொல்லுங்க சார், என்ன புத்தகம் வேணும்.”

“இல்லை, அவசரமா ஒரு புத்தகத்தை எரிக்கணும். அதுக்கு ஒரு புத்தகம் வேணும்.”

“சார், நாங்க புத்தகத்தை விப்போம். அவ்ளோதான். எரிக்கணும்னா…”

“எரிக்கணும்னா எரிக்கணும். அவ்ளோதான். சரி, சட்டுன்னு ஒரு புத்தகம் சொல்லுங்க.”

“நீங்கதான் என்ன புத்தகம்னு கேக்கணும். எங்ககிட்ட 20,000க்கும் மேல புத்தகம் இருக்கு. சட்டுன்னு சொல்லுங்கன்னா என்ன சொல்றது?”

“இருபதினாயிரத்தையும் எரிக்க முடியாது. வசதியில்லை. ஒண்ணு மட்டும் சொல்லுங்க.”

“சார், என்ன புத்தகம் வேணும்னு சொல்லுங்க. நிறைய கஸ்டமர்ஸ் லைன்ல இருக்காங்க.”

“அவ்ளோ பேர் எரிக்க ஆரம்பிச்சிட்டாங்களா?”

“ஹலோ. உங்களுக்கு வேணும்ன்ற புத்தகத்தை சொல்லுங்க.”

“சரி, இப்ப பரபரப்பா நிறைய எழுதுற ஆள் பேர் யாராவது சொல்லுங்க.”

“ஜெயமோகன். அவர் புத்தகம் வேணுமா?”

“ஆமா, அவரையே எரிப்போம்.”

“சார், என்ன சொல்றீங்க.”

“அவர் புத்தகத்தைத்தான் சொன்னேன். எதாவது புத்தகம் 10 காப்பி அனுப்புங்க.”

“சார், நாங்க விக்கிறது மட்டும்தான் செய்யறோம். எரிக்கிறதெல்லாம் சரியா வராது.”

“அதான் அதை நான் பாத்துக்கறேன். நீங்க பத்து காப்பி அனுப்புங்க.”

“வண்ணக்கடல்னு ஒரு புத்தகம். ஒரு காப்பி 1500 ரூ. பத்து காப்பி 15,0000 ரூபாய். தபால் செலவு கிடையாது. சர் சார்ஜ் உண்டு…”

“என்னது பதினஞ்சாயிரமா? ஏன் இருபது ரூபா முப்பது ரூபாய்க்கெல்லாம் எழுதுறதில்லையா அவரு?”

“இருக்கு சார். உலோகம்னு இருக்கு. 50 ரூபாய்தான். அதுல பத்து காப்பி?”

“உலோகம்ன்றீங்க. எரிக்க முடியுமா?”

“சார், நாங்க எரிக்க அனுப்பலை. நான் திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கேன்.”

“நானும் திரும்ப திரும்ப சொன்னேனே.”

“சார் இது சரிப்பட்டு வராது.”

“என்ன சரிப்பட்டு வராது? சொல்லாம வாங்கி எரிச்சா நல்லவன். சொல்லிட்டு செஞ்சா கெட்டவனா?”

“நீங்க என்னமோ செய்ங்க, சொல்லாதீங்கன்னு சொல்றேன்.”

“சரி விடுங்க. பத்து காப்பி, புத்தகம் பேர் என்ன சொன்னீங்க? இரும்பா? செம்பா? அதை அனுப்புங்க.”

“உலோகம் சார்…”

“ஏன் இரும்பு உலோகம் இல்லையா?”

“அனுப்பறேன் சார். போஸ்ட்மேன் கிட்ட பணம் கொடுத்துட்டு புத்தகம் வாங்கிக்கோங்க.”

“ஓ போஸ்ட்மேன் வேற வருவாரா? உடனே போய்டுவார்ல? இல்லை அவர் முன்னாடியே எரிக்கலாமா?”

“சார், உங்க ஆர்டரை எடுத்துக்கறோம். உங்கள் வீடு தேடி புத்தகம் வரும்.”

“போஸ்ட்மேன் எத்தனை மணிக்கு வருவார்னு சரியா சொல்லுங்க.”

“அது சொல்லமுடியாது சார். எப்ப வேணா வருவார்.”

“என்னங்க பொறுப்பே இல்லாம சொல்றீங்க. போட்டோகிராபர் எல்லாம் அரேஞ்ச் பண்ணனும், நிறைய வேலை இருக்கு. சரியா எப்ப வருவார்னு சொல்லுங்க.”

“அதை சொல்லமுடியாது சார். அது உங்க வேலை. உங்க ஆர்டருக்கு நன்றி. புத்தகம் வீடு தேடி வரும்.”

“வரலைன்னா நான் அங்க தேடி வருவேன். சரி, அந்த புத்தகம் எழுதுனவர் பேர் என்ன்? நடிகர் மோகனா?”

“சார், ஜெயமோகன்.”

“கூட வேற யார் புத்தகம் இருந்தாலும் அனுப்புங்க.”

“நீங்கதான் சொல்லணும் யார் புத்தகம் வேணும்னு.”

“நின்னு எரியணும். யார் இதா இருந்தா என்ன?”

“ஜெயமோகன் புத்தகத்தை ஏற்கெனவே எரிச்சிருக்காங்க. நின்னு எரிஞ்சதாத்தான் பேச்சு.”

“என்னது ஏற்கெனவே எரிச்சுருக்காங்களா? நல்லவேளை சொன்னீங்க. அப்ப அவர் வேண்டாம். வேற சொல்லுங்க. நேரமாச்சு. நீங்க புத்தகம் எழுதிருந்தா அதைக்கூட அனுப்பலாம்.”

“சார்… சார்…”

“ஏன் திடீர்னு ரகசியமா பேசறீங்க?”

“இல்லை, நானும் ஒரு புத்தகம் எழுதிருக்கேன். பத்து நூறு காப்பி விக்காம அப்படியே இருக்கு.”

“மொதல்லயே சொல்லிருக்கலாம்ல. சரி விலை என்ன? 20 ரூபாய்ல இருக்கா?”

“புத்தக விலை 90 ரூபாய் சார். பத்து காப்பி வாங்கினா நான் 10% டிஸ்கவுண்ட் தர்றேன். யார் கிட்டயும் சொல்லிடாதீங்க.”

“நான் ஏன் சொல்லப்போறேன்?”

“உங்க அட்ரஸ் சொல்லுங்க, இப்பவே அனுப்பறேன்.”

“உங்க புத்தகம் என்னத்த பத்தினது?”

“கவிதை சார்…”

“கவிதையா? அப்ப வேண்டாம். எரிக்கது கஷ்டம்.”

“என்ன சார் சொல்றீங்க. 20% டிஸ்கவுண்ட்கூட தர்றேன் சார்.”

“அடுத்த தடவை பார்க்கலாம். வேற யாராவது இருந்தா சொல்லுங்க.”

“இப்படி சட்டுன்னு கேட்டா?… பா.ராகவன்னு ஒருத்தர்… இல்லை, மருதன்… வேணாம் சொக்கன். ஹ்ம்ம்ம் இருங்க, அரவிந்தன் நீலகண்டன்னு ஒருத்தர்… இல்லை முகில்… இருங்க சார்… மகாதேவன்னு ஒருத்தர்… நிறைய இருக்கா சட்டுன்னு குழப்புது சார், சாரி.”

“அப்பம் ஒண்ணு செய்ங்க. ஒரு லிஸ்ட் எடுத்து எனக்கு அனுப்புங்க. ஒவ்வொண்ணா எரிக்கேன். அப்பம் இப்பம் போனை வைக்கேன்.”

“சார்.. ஹலோ… சார்… சார்… போனை வெச்சிட்டீங்களா?”

Share