Tag Archive for காலச்சுவடு

பேட்டை – சிந்தாதிரிப் பேட்டையின் சித்திரம்

பேட்டை: சிந்தாதிரிப் பேட்டையின் சித்திரம்

தமிழ்ப் பிரபா எழுதி இருக்கும் நாவல், காலச்சுவடு வெளியீடு. நாவலின் முக்கியமான பலம், இதன் அசல் தன்மை. தன் வாழ்க்கையில் இருந்து மனிதர்களையும் கதைகளையும் எடுத்துக்கொண்டதால் நாவலாசிரியரின் நெஞ்சிலிருந்து உணர்வுபூர்வமாக முகிழ்ந்த நாவலாகிறது. இது ஒரு வகையில் பலம், சிறிய வகையில் பலவீனமும்கூட. ஆனால் அந்த பலவீனத்தைத் தாண்டி நாவலின் அசல் தன்மை, இந்த சுய சரிதைச் சாயலாம் கூடுதல் கனம் கொள்கிறது.

சென்னைத் தமிழ் இத்தனை சிறப்பாகக் கையாளப்பட்ட இன்னொரு நாவல் இருக்குமா என்பது சந்தேகமே. சென்னைத் தமிழோடு அதன் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அவர்களுக்கே உரிய தனித்துவத்தையும் பெறுவது நாவலின் மிகப் பெரிய வெற்றி. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்தனியே மெனக்கெட்டு விவரிக்காமல் கதை மற்றும் நிகழ்வுகளின் போக்கிலேயே அவை அவற்றுக்குரிய உச்சத்தைப் பெறும் வகையில் நாவல் எழுதப்பட்டுள்ளது.

சென்னையின் சேரிகளில் இருக்கும் கிறித்துவ தாழ்த்தப்பட்டவர்களின் கதைகளை இத்தனை அருகில் நான் வாசித்ததில்லை. அவர்கள் மதத்தில் கிறித்துவர்களாகவும் பண்பாட்டில் கிறித்துவ மற்றும் ஹிந்துக்களாகவும் வாழ்கிறார்கள். ஐயப்பனுக்கு மாலை போட்டுக்கொள்ளும் கிறித்துவர்களின் பண்பாடு ஒரு சான்று. மதத்தைப் பரப்ப நினைக்கும் சபைகளை இத்தனை உடைத்துப் போட்டு எழுதியது ஆச்சரியம்தான். அதனால் இது ஹிந்து மதத்தைத் தூக்கிப் பிடிப்பதும் இல்லை. சேரிகளின் வாழ்க்கை முறை இப்படித்தான் என்று வெளிப்படையாகப் பேசும் நாவல். கூடவே ஹிந்து மதத்துக்காரர்களின் பிரச்சினைகளையும் சேரி வாழ் மக்களின் பார்வையில் நாவன் முன்வைக்கவும் செய்கிறது.

இடையில் ரூபன் நாவல் எழுதுவதாகச் சொல்லும் அத்தியாயங்கள் மட்டுமே நிலையில்லாமல் அலைபாய்கின்றன. சௌமியனின் ஆவி இறங்கிவிட்ட பின்பு ரூபனைச் சுற்றி நாவல் வேகம் கொள்கிறது. ரூபன், சௌமியன், ரெஜினா, நகோமியம்மா, குணசீலன், இவாஞ்சலின் என பல கதாபாத்திரங்கள் நம் மனதில் நிற்கின்றன.

வட சென்னைக்கே உரிய பல குணங்களை நாவல் தொட்டுச் செல்கிறது. சுவரில் படம் வரைவது, கேரம் விளையாட்டு எனப் பல விஷயங்கள் நாவலில் வெறுமனே களம் என்கிற அளவில் இல்லாமல், கதையோடும் கதாபாத்திரங்களோடும் இடம்பெறுகின்றன.

பேட்டை, நல்ல முயற்சி.

Share

ஒரு கூர்வாளின் நிழலில்

சமீபத்தில் மிகவும் சர்ச்சைக்குள்ளான புத்தகம் கூர்வாளின் நிழலில். பதினெட்டு ஆண்டுகள் புலிகள் இயக்கத்தில் பொறுப்பில் இருந்த ஒரு போராளியான தமிழினியின் தன்வரலாற்று நூல் இது. தொடக்கத்தில் புலிகள் இயக்கத்தின்பால் தான் எவ்வாறு ஈர்க்கப்பட்டார் என்பதையும் புலிகள் இயக்கத்தில் தன் வளர்ச்சியைப் பற்றியும் அதில் தனக்கும் தன் இயக்கத்தவர்களுக்கும் உள்ள சவால்கள், உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் பற்றியும் மிக விரிவாகப் பதிவு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து புலிகள் இயக்கம் எவ்வாறு வீழ்ச்சிப் பாதைக்குச் சென்றது என்பதையும் விரிவாக விவரித்துள்ளார் தமிழினி. இப்பகுதியில் புலிகளின் மீதான தீவிரமான விமர்சனங்கள் இடம்பெறுகின்றன. போரில் பிரபாகரன் கொல்லப்பட்ட பின்பு தான் சரணடைந்ததையும் தண்டனைக் காலம் முடிந்து விடுதலையானதையும் கடைசியில் சொல்கிறார்.

புலிகளைப் பற்றிப் பல குற்றசாட்டுகளைச் சொல்லி வந்தவர்களுக்கு இப்புத்தகம் மிக முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. புலிகளைப் பற்றி பல்வேறு அமைப்புகளாலும் மனிதர்களாலும் சொல்லப்பட்ட குற்றங்களுக்கு நேரடி சாட்சியமாக தமிழினி இருந்துள்ளார். அவற்றைப் பதிவு செய்துள்ளார்.

ஒருவரை ஒழித்துக்கட்டவேண்டுமென்றால் புலிகள் செய்வது மூன்று விஷயங்களை. அதாவது,

“தலைவருக்கெதிராகச் சதி செய்தார், இயக்கத்தின் நிதியை மோசடி செய்தார், பாலியல் குற்றமிழைத்தார்”

என்பவையே ஆகும். தமிழினி இதைச் சொல்வது, மாத்தையாவின் விவகாரத்தை ஒட்டியே என்றாலும் ஓர் இந்தியனாக எனக்கு இந்திய அமைதிப்படையின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நினைவுக்கு வந்தன. மாத்தையா விவகாரம் பற்றி RAW வை மையமாக வைத்துப் புலிகள் கட்டிவிட்ட கதையையும் விவரிக்கிறார் தமிழினி.

“தலைவர் மேலிருந்த பக்தி விசுவாசத்தால் துரோகியான மாத்தையாவைக் கிருபன் அழித்ததாக நம்பும் போராளிகள் கிருபனையே தலைவராக ஏற்றுக்கொண்டு அவரின் கீழ் செயற்படுவதற்கு முன்வருவார்கள் என்பதுதான் ‘றோ’வின் உண்மையான திட்டம் எனவும் கூறப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை ‘றோ’வின் கைப்பொம்மையாக்குவதற்குப் போடப்பட்ட திட்டம் முறியடிக்கப்பட்டுவிட்டதாக அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.”

இயக்கத்தில் நிலவிய தனிமனித வழிபாட்டைப் பற்றியும் தமிழினி குறிப்பிடுகிறார்.

“அண்ணை சொல்லுறார், செய்யத்தானே வேணும்”, “எல்லாத்திற்கும் அண்ணை ஒரு திட்டம் வைத்திருப்பார்” என்பவையாகவே இருந்தன. இதனைப் பலரும் தனிமனித வழிபாடு எனக் குறை கூறினார்கள். உண்மையும் அதுதான்.”

இயக்கத்தின் தோல்விக்கு தமிழினி சொல்லும் மிக முக்கியப் பிரச்சினை வரி விதிப்பு தொடர்பானது. நீண்ட காலப் போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் தாங்கள் சுரண்டப்படுவதாக நினைத்தார்கள் என்பதுதான் முக்கியக் குற்றச்சாட்டு.

புலிகளின் மீது வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு, இயக்கத்தில் சேர விருப்பம் இல்லாதவர்களைக் கூட, வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்வது. இதையும் தமிழினி உறுதி செய்கிறார்.

ஒரு கட்டத்தில் பிரபாகரன் முன்னிருந்த கேள்வி, மக்களைப் பாதுகாப்பதா அல்லது கோடானகோடி பணத்தைச் செலவு செய்து சேர்த்திருந்த ஆயுதங்களைப் பாதுகாப்பதா என்று சுருங்கிப் போனது

என்று இந்நூலில் தமிழினி சொல்கிறார்.

மகிந்த ராஜபக்ஷே வெல்லவேண்டும் என்பதே புலிகள் இயக்கத்தின் விருப்பமாக இருந்தது என்பதை உறுதி செய்கிறார் தமிழினி. அதற்கான காரணம், புலிகள் தாங்கள் வென்றுவிடுவோம் என்று நம்பியதுதான். ஆனால் வரலாற்றில் நிகழ்ந்தது என்னவோ புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்பட்டதுதான்.

“மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும், இப்பிடி இவங்களோட பேச்சு வார்த்தையெண்டு இழுபட்டுக் கொண்டிருக்கிறதுக்கு சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்; அதுக்கு சரியான ஆள் இவர்தான்”

என்று தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டதை பதிவு செய்திருக்கிறார்.

போரில் தப்பித்தால் போதும் என மக்கள் ராணுவத்திடம் தஞ்சமடையப் போகும்போது புலிகள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதை இக்குறிப்பில் பார்க்கலாம்.

“சனம் இனி ஏலாத கட்டத்தில ஆமியிட்ட போகுது, அப்பிடிப்போற சனத்திற்குக் காலிற்கு கீழே சுடச் சொல்லி இயக்கம் சொல்லுது. என்ர கடவுளே சனத்திற்குச் சுடு எண்டு எந்த மனசோட நான் சொல்லுறது. அப்பிடியிருந்தும் சில பிள்ளைகளிட்ட இயக்கம் இப்பிடிச் சொல்லுது என்ற தகவலைச் சொன்னபோது, அந்தப் பிள்ளைகள் கேக்குதுகள் ‘என்னக்கா எங்கட அம்மா அப்பா சகோதரங்களையோ நாங்கள் சுடுறது. இதைவிட எங்களை நாங்களே சுட்டுச் சாகிறது நல்லது’ எண்டு சொல்லிக் குழம்புதுகள். உண்மை தானேயடி. இப்பிடி கேவலமான ஒரு வேலையை செய்ய வேண்டிய கட்டத்திற்கு இயக்கம் வந்திட்டுது” என்று புலம்பினார்.

சகோதர இயக்கத்தவர்களைக் கொன்றவர்களின் பரிணாம வளர்ச்சி, தன் சொல் கேட்காத தன் மக்களையே சுடுவதில் வந்து நின்றிருக்கிறது. அதுமட்டுமல்ல, இன்னொரு குறிப்பும் முக்கியமானது.

“மக்கள் மத்தியில் தமது குடும்பங்களுடன் கலந்திருந்த அவர்கள் மீண்டும் இயக்கத்தின் செயற்பாடுகளுடன் வந்து இணைந்துகொள்ளாது விட்டால் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்படியான ஓரிரு சம்பவங்கள் கடற்புலிப் போராளிகள் மத்தியில் நடந்தன.”

இந்நூலை எழுதியது ஒரு பெண் என்பதால், பல வரிகள் பெண்களுக்கே உரிய பிரச்சினைகள் பற்றி எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக அவர்களது எதிர்காலம் பற்றிய தமிழினியின் சிந்தனைகள் மிக முக்கியமானவை. திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்க புலிகள் இயக்கம் முடிவெடுத்தபோது, உயர் பதவியில் இருக்கும் வயதான போராளிகள் கூட, கையிழந்த கால் இழந்த பெண் போராளிகளை மணந்துகொள்ள முன்வரவில்லை என்பதைப் படிக்கும்போது ஏமாற்றமாகவே இருந்தது.

பெண் போராளிகளுக்குத் தரப்படும் பயிற்சிகள் பற்றிய தமிழினியின் ஒரு குறிப்பு:

குறுகிய மனப்பாங்கும் வக்கிர குணங்களும் கொண்டவர்களின் கரங்களில் ஆயுதங்களும் அதிகாரமும் போய்ச் சேரும்போது எத்தகைய மோசமான அத்துமீறல்கள் நடைபெறும் என்பதற்கு அந்தப் பயிற்சி முகாமின் ஒரு சில ஆசியர்கள் அரசியல் போராளிகளாகப் பணியாற்றிய பின்னர் ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக வந்தார்கள் என்ற காரணத்திற்காக வயது வித்தியாசமின்றி அங்கே கொடூரமான முறையில் பயிலுநர்கள் நடத்தப்பட்டிருந்தனர். இரத்தக் காயங்கள் ஏற்படுமளவுக்கு அடியுதைகளும், மனதை நோகடிக்கும் குரூரமான வார்த்தைகளும், தனிப்பட்ட பழிவாங்கல்களும் என அந்த மகளிர் பயிற்சி முகாமில் அரங்கேறிய சம்பவங்கள் ஒட்டுமொத்தமான பெண் போராளிகளுக்கும் மிகத் தவறான முன்னுதாரணங்களாகவே இருந்தன.” 

இப்படிச் சொல்லும் தமிழினி ஒன்றைச் சொல்கிறார், இறுதிகட்டப் போரில் தப்பிச் செல்ல முடிவெடுக்கும் தலைவர்கள் குழுவில் ஒரு பெண் போராளி கூட இல்லை என்கிறார்.

அதேபோல் புலிகள் மீதான இன்னுமொரு முக்கியக் குற்றச்சாட்டு, இதே நோக்கத்தோடு போராடிய ஏனைய சகோதர இயக்கங்களைக் கொன்றொழித்தது. அது பற்றியும் இந்நூல் பல விஷயங்களைப் பதிவு செய்கிறது.

“ஏனைய இயக்கங்கள் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்ட விடயம் தொடர்பில் புலிகள் இயக்கத்தின் போராளிகளுக்கு எந்தக் காலத்திலும் சரியான விளக்கம் கொடுக்கப்பட்டதில்லை.”

இன்னொரு இடத்தில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களின் கதறல் இப்படி இருந்திருக்கிறது.

“எங்கட புள்ளைகள் நாட்டுக்காக எண்டுதானே கொன்னு போட்டுதே” என்று அவர்கள் கதறினார்கள்.”

பாலியல் தொடர்பான விஷயங்களில் கடைப்பிடிக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் முகம் சுளிக்க வைக்கின்றன. திருமணத்திற்கு முன்னதாக அவர்கள் பாலியல் உறவில் ஈடுபடுவது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது என்று குறிப்பிடுகிறார் தமிழினி.

“அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. வடமராட்சி முகாம் ஒன்றில் தங்கியிருந்த அவர்கள் இயக்கத்தைச் சாராத ஆண்களுடன் பாலியல் தொடர்புகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற குற்றத்திற்காகவே இயக்கத்தின் ஒழுக்க நடைமுறைகளுக்கமைவாக அவர்களுக்கு அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்தக் குற்றச் செயலோடு தொடர்பு கொண்டிருந்த ஆண்களுக்கும் பொதுமக்கள் மத்தியில் மரண தண்டனை தீர்ப்பு நிறைவேற்றப்பட்டிருந்தது.”

புலிகளைப் பற்றி இங்குப் பரப்படும் ஏகப்பட்ட பிம்பங்களுக்கு இந்நூல் கடும் எதிர்க்கருத்தை நேரடி சாட்சியமாக முன்வைக்கிறது. எல்லாத் தீவிரவாதத் தரப்பைப் போலவே புலிகள் தரப்பும் பல்வேறு படுகொலைகளைச் செய்திருக்கிறது. போட்டியில் வெல்ல சகோதர இயக்கங்களைக் கொன்று குவித்திருக்கிறது. உதவி அளித்த நாட்டின் முக்கியமான தலைவரைக் கொன்றிருக்கிறது. அவரோடு சேர்ந்து அப்பாவி மக்கள் உருத்தெரியாமல் சிதறடிக்கப்பட்டிருக்கின்றனர். கட்டுப்பாடு என்ற பெயரில் பல்வேறு உரிமைகள் போராளிகளுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன. விருப்பமே இல்லாதவர்களும் புலிகள் இயக்கத்தில் சேரக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆண்டன் பாலசிங்கம் சொல்வதாக தமிழினி சொல்லியிருக்கும் இவ்வரிகளே புலிகளை சரியாக விளங்கிக் கொள்ளப் போதுமானவை:

“புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை. நாங்கள் ஒரு படுகொலைப் பட்டியலைக் கொடுத்தால் அவர்களும் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைப் பட்டியலுடன் வருவார்கள். ஆகவே இப்படியான விடயங்களைக் கிண்டிக் கிளறுவது இரண்டு தரப்புக்கும் பிரச்சனையான விடயமாகத்தான்.”

தமிழினின் இந்த வரிகளைப் பாருங்கள். தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்துக்கான பதில் இதில் உள்ளது.

ஒரு ஆயுதப் போராட்டத்தைப் பாதுகாப்பதற்காக எத்தனை அன்பு நிறைந்த வழிகளை மூடிக்கொண்டு நாம் தனித்துப் போயிருந்தோம் என்பதை முள்ளிவாய்க்காலின் இறுகிப்போன நாட்கள் எனக்கு உணர்த்தின.

 நான் யாழ்ப்பாணம் சென்று வந்ததைப் பற்றி எழுதிய கட்டுரைகள் இங்கே உள்ளன. (http://idlyvadai.blogspot.in/2010/09/1.html, http://idlyvadai.blogspot.in/2010/09/2.html, http://idlyvadai.blogspot.in/2010/09/1.html) அங்கே நாங்கள் சந்தித்த நண்பர் சொன்னதும் தமிழினி சொன்னதும் எப்படி ஒத்துப் போகிறது என்பதைப் பாருங்கள். ஆனால் புலிகளின் பேரைச் சொல்லி தங்கள் இருப்பை நிலைநிறுத்த விரும்புகிறவர்கள் அன்று நான் எழுதியபோது கடும் வசைகளையே பதில்களாகத் தந்தார்கள். இன்று ஒரு புத்தகமே மிக முக்கியமான ஒரு பதிப்பகத்தால் (காலச்சுவடு) வெளியிடப்பட்டிருக்கிறது. புலிகள் பேரைச் சொல்லி தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இப்புத்தகத்தையும் பல காரணங்களைச் சொல்லி மறுக்கக்கூடும். ஆனால் உண்மைகள் என்னவோ தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டேதான் இருக்கும்.

இப்புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000025292.html

இ புத்தகமாங்க வாங்க: கூகிள் ப்ளே

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234

Share

வாஸவேச்வரம் – காமம் விளையும் நிலம்

 

வாஸவேச்வரம் நாவலை வாங்கி வைத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. சென்ற வாரம்தான் திடீரென்று அதனைப் படிக்கவேண்டும் என்று தோன்றியது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல். பெண்கள் எழுதிய நாவல்கள் இதுவரை எத்தனை படித்திருக்கிறேன் என்று யோசித்துப் பார்த்தால் ஒன்றிரண்டுதான் நினைவுக்கு வருகின்றன. சுமதியின் கல்மண்டபம், ஹெப்சிகாவின் புத்தம் வீடு. இன்னும் சில படித்திருக்கலாம், நினைவுக்கு வரவில்லை. பெண்கள் எழுதிய நாவலைப் படிக்கிறோம் என்னும்போதே அந்நாவல் பெண்ணியக் கருத்துகளை மிக வெளிப்படையாய்ப் பேசுமோ என்ற அச்சம் உள்ளே இருக்கிறது. பேசினால் என்ன தவறு? தவறொன்றுமில்லை. எனக்கு அச்சம். அவ்வளவுதான். இது தவறான அச்சமாகவே இருக்கலாம். ஒருவேளை இதற்கான நியாயமும் இருக்கக்கூடும். ஆனால் அச்சம் இருப்பதென்னவோ உண்மைதான். வாஸவேச்வரத்தில் இந்தப் பிரச்சினைகள் எழவில்லை. இந்நாவலை பெண்ணியப் பிரதியாகவே வாசிக்கமுடியும். ஆனால் அது ஒருவகையில் நாவலை குறுக்கிவிடும். எப்படி ஆண் எழுதிய நாவல் ஒன்றை வெளிப்படையாக வாசிக்கிறோமோ அப்படியே இந்நாவலையும் வாசிப்பதுதான் இந்நாவலுக்குச் செய்யும் மரியாதை.

கிருத்திகா தான் கண்ட 3 கிராமங்களைக் கொண்டு ஒரு புதிய கிராமத்தை உருவாக்கியிருக்கிறார். வாஸவேச்வரம் என்ற அக்கிராமத்திலுள்ள பிராமணக் குடும்பங்களுக்கு இடையேயான கதையே நாவல். நான் சிறிய வயதில் ஒரு சில அக்ரஹராகத்தில் இருந்தபோது அக்ரஹாரத்தில் நிலவும் பேச்சுக்களுக்களின் அடிநாதமாக பாலுறவே இருப்பதைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலான சமயங்களில் அது மறைமுகமாகவும், சில சமயங்களில் வெளிப்படையாகவும் இருக்கும். இந்நாவலில் அப்படிப்பட்ட பாலியல் ஒழுக்கங்களும் ஒழுக்க மீறல்களும் முன்வைக்கப்படுகின்றன. இதற்குத் தேவையான காரணத்தை புராணங்களில் இருந்து அம்மக்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். புராணக் கதைகளில் பாலுறவுக் காட்சிகள் சொல்லப்படும்போதெல்லாம் கிராமத்தில் இரவு வெப்பம் மிகுந்ததாகவே இருக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்னும் மரபெல்லாம் புராணக் கதைகள் தரும் எழுச்சியில் காணாமல் போகிறது.

40 அல்லது 50 வருடங்களுக்கு முன்பு நடந்த கதை என்பதுதான் நாவல் எனக்குத் தந்த பிம்பம். ஆனால் நாவலின் முன்னுரையில் பெருந்தேவியோ நாவல் நடந்த காலகட்டம் 1930கள் எனச் சொல்லியிருக்கிறார். எனக்கு நாவலின் காலகட்டம் குழப்பமாகவே உள்ளது. 1930கள் எனக்கொண்டால், சுந்தரப் போராட்டம் பற்றியோ காந்தியைப் பற்றியோ வெள்ளையர்களைப் பாராட்டியோ எதிர்த்தோ நாவலில் எந்த கதாபாத்திரமும் எப்படிப் பேசாமல் இருந்திருப்பார்கள் என்பது பெரிய கேள்வியாக உருவெடுக்கிறது.  பெண்கள் தங்களுக்குள் நல்ல படிப்பு படித்து நவீன வாழ்க்கை வாழவேண்டும் என்று எண்ணியதாகவெல்லாம் நாவலில் வருகிறது. 30களில் எத்தனை பெண்கள், அதுவும் கட்டுப்பெட்டித்தனமாக வளர்க்கப்பட்டு சிறிய வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்படும் பிராமணப் பெண்கள் இப்படி நினைத்திருபபார்கள்? கம்யூனிஸ்ட்டுகள் கூடி கூடிப் பேசுகிறார்கள். அவர்களும் சுதந்திரம் பற்றியோ வெள்ளையர்கள் பற்றியோ வாயே திறப்பதில்லை. 1960கள் என்று கொண்டால் மட்டுமே கிருத்திகா எழுதியிருப்பது பொருந்திவருகிறது.

கதை நடந்த காலகட்டத்தில் பிராமணர்களுக்குள்ளேயே எட்டிப் பார்த்த கம்யூனிசமும் முற்போக்கும் அதற்கு வரும் எதிர்ப்பும் இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முற்போக்கு மிக எளிதாகத் தோற்கடிக்கப்பட்டும்விடுகிறது. அதிலும் பிறன்மனைப் பெண்ணொருத்திக்காக தனது எல்லாக் கொள்கைகளையும் விட்டுவிடுபவனாகவே முற்போக்காளன் பிச்சாண்டி வருகிறான். அவனது முற்போக்குத்தனத்தைக்கூட வாஸவேச்வரத்தின் மரபு கட்டிப் போட்டுவிடுகிறது. மிக எளிதான சதியில் அவனது கூட்டாளிகளே அவனுக்கு எதிராகப் போகவும் அவன் தன் வழி பார்த்துக்கொண்டு போக முடிவெடுக்கிறான்.

புராணக் கதைகளை கதாகாலக்ஷேபமாகச் சொல்லும் ஐயருக்கும் தொடுப்பு உண்டு. சொல்லப்போனால் எல்லா ஆண்களுக்குமே ஏதோ ஒரு வகையில் மோகம் கரைபுரண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. தன்னால் எதுவும் முடியாது என்று நினைக்கும் ஆணிலிருந்து தனக்கு சமம் யாரும் இல்லை என்று நினைக்கும் ஆண்வரை மனதில் எப்போதும் காமத்தையே சுமந்து திரிகிறார்கள். பெண்களும் அப்படியே. 

ஒரு கொலை நிகழ்ந்துவிடவும் நாவல் தேவையற்ற விவரிப்புகளில் அலைபாய்கிறது. அதுவரை அந்நாவல் கொண்டிருந்த இறுக்கமும் நோக்கமும் சிதைந்துவிடுகிறது. விச்சுவின் கணவன் தற்கொலை செய்துகொள்வதும், பிச்சாண்டி தியாகியாவதும் நாடகத்தன்மை வாய்ந்த காட்சிகளாகிவிடுகின்றன. இறுதியில் வரும் பாட்டாவைப் பற்றிய விவரணைகளும் இப்படியே. இவற்றையெல்லாம் வாசகர்களின் கவனத்துக்கே விட்டிருக்கலாம். ஆனால் 40 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல் என்ற எண்ணத்தோடு வாசிக்கும்போது இதனைப் பெரிய பிழையாகக் கொள்ளமுடியாது என்பதும் உண்மையே.

நாவல் முழுக்கப் பயன்படுத்திருக்கும் பிராமணப் பேச்சு வழக்கு கச்சிதம். இத்தனை கச்சிதமாக பிராமண வழக்கு கையாளப் பட்டிருக்கும் நாவல்கள் குறைவாகவே இருக்கமுடியும். சில இடங்களில் வாஸவேச்வரத்துக்கென்றே பிரத்யேக பிராமண வழக்கும் உண்டோ என்றெல்லாம் நினைக்கும் அளவுக்கு மொழியை அபாரமாகப் பயன்படுத்தியிருக்கிறார் கிருத்திகா. முதல் இரண்டு மூன்று பக்கங்கள் படிக்க வித்தியாசமான சூழலைக் கொடுக்கும் நாவல் பிற்பாடு நம்மோடு சேர்ந்துவிடுகிறது. ஏற்கெனவே பழக்கப்பட்ட மொழியைப் போல நாமும் விரைவாகப் படித்துக்கொண்டு போகமுடிகிறது. 

மிக நேரடியான நாவல். முக்கியமான நாவலும் கூட.

வாஸவேச்வரம், நாவல், கிருத்திகா, காலச்சுவடு வெளியீடு, விலை: 140 ரூ, ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-074-0.html

Share