Tag Archive for அரசியல்

பாட்டாளி மக்கள் கட்சி – பாதை மாறும் பயணம்

1990கள் வாக்கில் நான் என் அம்மாவுடன் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தேன். அப்போது ஒரு சில குறிப்பிட்ட ஊர்களுக்கு பேருந்துகள் செல்லாது என்று அறிவித்தார்கள். எதோ ஜாதிக் கலவரமாம் என்று என் அம்மா என்னிடம் சொன்னார். எனக்கு அந்த சிறிய வயதில் ஒன்றும் புரியவில்லை. ஆனால், என் கையை இறுகப்பிடித்திருந்த என் அம்மாவிடம் ஒரு பதற்றத்தை மட்டும் உணரமுடிந்தது.

பின்னர் அக்கட்சி பாட்டாளி மக்கள் கட்சியாக வளர்ந்தது. செல்லுமிடமெல்லாம் வெற்றி என்று கொண்டாடினார்கள். திமுக அதிமுக என மாறி மாறி தவம் கிடந்து பாமகவை கூட்டணிக்கு அழைத்தார்கள். பாமக இருக்கும் கூட்டணியே வெற்றிக்கூட்டணி என்று ராமதாஸ் அறிவித்தார். எல்லாம் சட்டென மாறிப்போனது. இரண்டு அடுத்தடுத்த தேர்தல்களில் பாமக இருந்த கூட்டணிகள் தோல்வி கண்டன. பாமக பெரும் தோல்வி கண்டது. பாமக ஒரு தேவையற்ற கட்சி என்பதை மிகவும் தாமதமாக உணர்ந்துகொண்டன தமிழகத்தின் முதன்மைக் கட்சிகள்.

ஆனால் பாமக இங்கேதான் சட்டென சுதாரித்துக்கொண்டது. அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் பாமக தன் கட்சிக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டுவந்தது. அன்புமணி இத்தேர்தலில் முதல்வர் ஆவாரா மாட்டாரா என்பதெல்லாம் ஒரு கேள்வியே இல்லை. ஆனால் தமிழக அரசியலில் எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு வெற்றிடம் தோன்றினால், அன்புமணி தவிர்க்கமுடியாத ஒருவராக இருப்பார். அதற்கான விதையை இன்று பாமக பலமாக ஊன்றியிருக்கிறது.

பாமகவை ஒரு ஜாதிக்கட்சி என்று சொல்லி புறக்கணிக்கமுடியாத அளவுக்கு முக்கியமான சமூகப் பிரச்சினைகளை தொடர்ந்து கையிலெடுத்துப் போராடி வந்திருக்கிறது. அவற்றில் முக்கியமானது மது ஒழிப்பு.

தமிழகத்தில் மது ஆறாக ஓடுவதற்கு அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் காரணம். இவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு, மது ஒழிப்பை நிர்ப்பந்தம் செய்யாத கட்சிகளும் காரணம்தான், பாமக உட்பட. ஆனால் பாமக மது ஒழிப்பை, மற்ற கட்சிகள் போல போலியாக முன்வைக்கவில்லை. அதிலும் கடந்த ஐந்து வருடங்களாக, மது அருந்தாவர்கள் எல்லாம் வரி செலுத்தவேண்டும் என்று ஒரு சட்டம் வந்துவிடுமோ என்று அஞ்சும் அளவுக்கு அதிமுக நடந்துகொண்டு வருகிறது. திமுக இப்போது திடீரென மது ஒழிப்பைக் கையில் எடுத்திருக்கிறது. இதை அரசியல் என்று மட்டுமே பார்க்கமுடியும். பாமகவைப் போல உறுதியான தொடர்ச்சியான நிலைப்பாடாக இதை கொள்ளமுடியாது.

அதேபோல் தொடர்ச்சியாக மாதிரி நிதிநிலை அறிக்கையை பாமக வெளியிட்டு வந்துள்ளது. அரசியலில் இதுபோன்ற ஒன்றை ஒரு கட்சி தொடர்ச்சியாகச் செய்து வருவது முக்கியமானது. அதேபோல் அரசியல் மேடைகளில் அன்புமணி திராவிட பாணியில் வெட்டி வீர முழக்கங்கள் செய்வதில்லை. ஆக்கபூர்வமாகப் பேசுகிறார்.

இப்படி சில நம்பிக்கை தரும் விஷயங்கள் இருந்தாலும், பாமகவைப் பின்னுக்குத் தள்ளுவது, என்ன இருந்தாலும் பாமக ஒரு ஜாதிக்கட்சிதானே என்ற எண்ணம்தான். தலைவர்கள் எதையோ சிந்தித்து பேசிக்கொண்டிருக்க தொண்டர்கள் முன்னெடுக்கும் அரசியல் ஜாதியை சுற்றியே உள்ளது என்பதுதான் காரணம். தமிழ்நாட்டில் நிலவும் ஜாதியப் பிரச்சினைகளில் பாமகவின் பெயரும் அடிக்கடி அடிபடுவதும் இன்னொரு காரணம். என் அம்மா என் கையைப் பிடித்திருந்தபோது அவருக்கு இருந்த பதற்றம், மெல்லிய வடிவில், இது போன்ற செய்திகளைக் கேட்கும் அனைவருக்குள்ளும் பரவுகிறது. இதுவே பாமகவின் ஆகப்பெரிய பலவீனம்.

தங்கள் கொள்கைகளை பரப்ப வேண்டி எந்த எல்லைக்கும் சென்று சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு சவால் விடுப்பது இன்னுமொரு பலவீனம். புகைபிடிக்கும் / மது அருந்தும் காட்சிகள் திரைப்படங்களில் வரக்கூடாது என்பது நல்ல எண்ணம்தான். ஆனால் அப்படி வரும் திரைப்படங்களை அச்சுறுத்தல்மூலம் முடக்கப் பார்ப்பது தவறான வழி.

பாபா திரைப்படம் வந்தபோது இப்படித்தான் பாமக ரஜினியை எதிர்கொண்டது. அப்போது பாமக உள்ள கூட்டணியே வெல்லும் என்ற மாயை நிலவியதால் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் பெரிய அளவில் பாமகவைக் கண்டிக்கவில்லை. என்றென்றும் புன்னகை என்றொரு திரைப்படம் வந்தது. படம் முழுக்க குடிக்காட்சிகள்தான். இதை தயாரித்தவர் பாமகவைச் சேர்ந்த ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம். தமிழ்க்குமரன். இதை எதிர்த்து பாமக எவ்வித ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை. இது ஒரு பெரிய சறுக்கல் அல்லவா? 

இதுபோன்ற விஷயங்களில் பாமக சட்ட ரீதியான அமைதியான போராட்டங்களின் மூலம் மக்களின் மனத்தை மாற்றும் செயல்களில்தான் ஈடுபடவேண்டும். அச்சுறுத்தல்மூலம் பிரச்சினையை அடக்க நினைக்கக்கூடாது. அப்போதுதான் மேடைதோறும் ஆக்கபூர்வமான அரசியலை முன்வைக்கப் போராடி வரும் அன்புமணியின் செயல்பாட்டுக்கு நியாயம் கற்பிக்கமுடியும். இல்லையென்றால் படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்றாகிவிடும்.

அதேபோல் சொன்ன வாக்கைக் காப்பாற்றுவதிலும் பாமக கவனம் கொள்ளவேண்டும். இனி திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு, அதிமுக மற்றும் திமுகவுடன் அவர் கூட்டணி வைத்திருக்கிறார். இனி அப்படி நிகழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இல்லை என்றால், பாமகவின் மீது இருக்கும் கொஞ்சநஞ்சம் நம்பிக்கையும் போய்விடும்.

இதைவிட முக்கியம், இத்தனை ஆக்கபூர்வ அரசியல், மது ஒழிப்புப் போராட்டம் ஆகியவற்றுக்குப் பின்னரும் தொடரும் ஜாதிய அரசியல் என்ற முத்திரையை முற்றிலும் ஒழிக்க, செய்யவேண்டிய சமூகக் கடமைகள் என்ன என்பதை யோசித்து அவற்றைச் செயல்படுத்துவது. இல்லையென்றால் பாமக இப்படியே ஓட்டைப் பிரிக்க அல்லது முதன்மைக் கட்சிகளை ஆட்சியில் அமர்த்த உதவும் ஒரு கட்சியாகவே நிலைபெற்றுவிடும். ஜாதிக் கட்சி முத்திரையுடன் தொடர்ந்து செயல்பட்டு இப்படியே இருப்பதா அல்லது திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பொதுவான கட்சியாக வளர்வதா என்பதே இப்போது பாமக முன் உள்ள கேள்வி. இரண்டில் எது நடந்தாலும் தமிழ்நாட்டுக்கு நல்லதுதான்.

Share

மீண்டும் ஏன் திமுக தேவையில்லை – தேர்தல் களம் 2016 – தினமலர்

மீண்டும் ஏன் திமுக தேவையில்லை!

ஆளுங்கட்சிக்கு இயல்பாகவே எழும் எதிர்ப்பை எல்லா எதிர்க்கட்சிகளுமே தனது ஓட்டுக்களாகப் பார்க்கத்தான் செய்யும். ஜெயலலிதாவின் கடந்த ஐந்து வருட ஆட்சியில் மக்களுக்கு இன்னல்கள் பல ஏற்பட்டிருப்பதாக நம்பும் திமுக, அந்த வெறுப்பை தனது வெற்றிக்குப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது. எதிர்க்கட்சி என்ற தகுதி இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய இரண்டாவது கட்சி திமுகதான். எனவே அதிமுகவுக்கு யதார்த்தமான மாற்று என்று பலரும் திமுகவைக் கருதும் வாய்ப்பு உள்ளது. இதை எவ்விதத்திலும் தவறவிட்டுவிடக்கூடாது என்பதகாவே திமுகவின் காய்-நகர்த்தல்கள் உள்ளன.

ஆனால், திமுகவின் 2006-2011 வரையிலான ஆட்சிக்காலத்தின் வெறுப்பை மக்கள் முற்றிலும் மறந்துவிடவில்லை. அதிமுகவின் மீதான சில கோபங்கள் இருந்தாலும், அந்த எதிர்ப்பு ஓட்டுக்கள் அப்படியே திமுகவுக்குப் போய்விடும் என்று நம்புவதற்கான எந்தச் சூழலும் இங்கே நிலவவில்லை.

திமுகவின் ஆட்சிகாலத்தில் நிலவிய கொடூரமான மின்வெட்டை நினைத்துப் பார்த்தாலே இப்போதும் வேர்க்கிறது. ஜெயலலிதா எப்படி அதைக் கையாண்டார், அதனால் அரசுக்கு ஏற்படும் செலவுகள் என்ன என்ன என்பதெல்லாம் கடைக்கோடி வாக்காளருக்கு ஒரு பொருட்டே இல்லை. இந்த ஐந்தாண்டுகாலத்தில் மின்வெட்டு மிகவும் குறைந்துவிட்டது என்ற ஒரு வரி உண்மை மட்டுமே அவர்களுக்கு முக்கியமானது.

அதேபோல் திமுக ஆட்சியில் ஐந்தாண்டுகளில் நிலவிய நில அபகரிப்பு இப்போதும் மக்களால் மிரட்சியோடுதான் பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் ஆட்சியில் அமைச்சர்களுக்குக் கூட அதிகாரமில்லை என்பது ஒரு பக்கம் என்றால், கருணாநிதியின் ஆட்சியில் ஒவ்வொரு கவுன்சிலருக்கும் அதீத அதிகாரம் வந்துவிடும் என்பது இன்னொரு பக்கமாக உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் மிரட்டல்களையும் நினைத்துப் பார்த்தால், தன்னிச்சையாகச் செயல்படாத அதிமுகவின் அமைச்சர்களே பரவாயில்லை என்ற எண்ணம் மக்களுக்குத் தோன்றிவிடுகிறது.

இன்று திமுக ‘ஊழலற்ற ஆட்சி’ என்பதைச் சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால் திமுகவின் அமைச்சர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது நடந்ததாகச் சொல்லப்பட்ட ஊழல்களை மறந்துவிடமுடியாது. இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக்கே முடிவு கட்டிய 2ஜி ஊழலில் இன்றளவும் திமுகவின் பங்கு பற்றிய வழக்கு முடிவுக்கு வந்துவிடவில்லை. இந்தியாவையே உலுக்கிய ஒரு வழக்கின் முக்கியக் குற்றவாளியாக திமுகவே உள்ளது.

இரண்டாண்டுகளுக்கு முன்பு ஈழப்பிரச்சினையைக் காரணம் காட்டி காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகிய திமுக, மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளது. ஒரு கட்சி ஏற்கெனவே கூட்டணி வைத்து விலகிய கட்சியுடன் மீண்டும் கூட்டணி வைப்பது புதியதில்ல. ஆனால் இந்த இரண்டாண்டுகளில் எவ்வித மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை என்னும்போது இதைப் பொருந்தாக் கூட்டணி என்றோ நிர்ப்பந்தக் கூட்டணி என்றோதான் பார்க்கவேண்டியுள்ளது. இந்த நிர்ப்பந்தம் எதன் மூலம் வந்தது என்பதையும் யோசிக்கவேண்டும்.

அரசியலில் வாரிசுகள் ஆட்சிக்கு வருவதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். கிட்டத்தட்ட எக்கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. என் வாரிசு அரசியலுக்கு வராது என்று சூளுரைத்தவரின் மகன் இன்று முதல்வர் வேட்பாளராகவே அக்கட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார். ஆனால் திமுகவில் வாரிசு அரசியல் பெரிய அளவில் பரிணாம வளர்ச்சி பெற்று ஒட்டுமொத்த குடும்பமும் கட்சியைக் கைப்பற்றியுள்ளது. எனவே திமுகவின் வாரிசு அரசியல் குடும்ப அரசியலாகிப் போயிருக்கிறது.

கருணாநிதிக்கு 92 வயது ஆகிறது. இன்றும் அவரே திமுகவின் முதல்வர் வேட்பாளர். கடந்த மைனாரிட்டி ஆட்சியின்போதே அவர் ஸ்டாலினை முதல்வராக்கியிருக்கவேண்டும். அப்போது இவர்கள் தயவில்தான் காங்கிரஸ் ஆட்சி மத்தியில் நடந்துகொண்டிருந்தது. எனவே இம்முடிவுக்கு காங்கிரஸ் எந்த வகையிலும் எதிர்ப்பு தெரிவித்திருக்காது. ஆனால் அந்த நல்ல சந்தர்ப்பத்தை கருணாநிதி தான் முதல்வராக இருக்கவே பயன்படுத்திக்கொண்டார். இதனால் இன்றளவும் ஸ்டாலின் முதல்வர் பட்டியலுக்கு வரவே இல்லை. ஸ்டாலின் முதல்வர் என்றால் திமுகவை மக்கள் ஓரளவு நம்ப வாய்ப்பிருக்கிறது. காரணம், ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாமே என்று நடுநிலை வாக்காளர்கள் எண்ணக்கூடும்.

திமுகவின் இன்னொரு முக்கியமான பிரச்சினை, ஒரு குறிப்பிட்ட ஜாதியை, நாட்டின் பெரும்பான்மையான மதத்தை எப்போதும் தூஷித்துக்கொண்டே இருப்பது. ஒரு முதல்வர் இப்படி ஒரு குறிப்பிட்ட ஜாதி/மதம் மீதான காழ்ப்புணர்ச்சியை வெளிக்காட்டிக்கொண்டே இருப்பதுதான் திராவிட அரசியலின் முக்கியமான பிரச்சினை. நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு அம்மக்களின் பண்டிகையின் போது வாழ்த்து சொல்லாமலிருப்பதும், ஓட்டரசியலுக்காகவும் பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தவேண்டும் என்பதற்காகவும் வேண்டுமென்றே சிறுபான்மை விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதுமென திமுக என்றுமே மக்களை ஜாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரித்து வைக்கவே விரும்பியிருக்கிறது. இப்படி மக்களைப் பிரிக்க நினைக்கும் ஒரு தலைவரை எக்காரணம் கொண்டும் மீண்டும் முதல்வராக்கவேண்டிய அவசியமோ அவசரமோ அத்தனை மோசமான நிலையோ தமிழகத்துக்கு இப்போதைக்கு வந்துவிடவில்லை.

இதைப் புரிந்துகொண்டுதான் ஸ்டாலின் வேறு ஒரு கண்ணோட்டத்தை முன்வைக்கப் பார்க்கிறார். ஆனால் அது அவரது வீட்டுக்குள்ளே தடுக்கப்பட்டு விடுகிறது. காலமாற்றத்துக்கேற்ப மாறி, இளைஞர்கள் கையில் கட்சியை ஒப்படைத்துவிட்டு, வெறுப்பு அரசியலைக் கைவிட்டு, ஊழல்வாதிகளை வெளியேற்றி, புது ரத்தம் பாய்ச்சாத வரை திமுகவைத் தேர்ந்தெடுக்கவேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லை என்பதை திமுக உணரவேண்டிய தருணம் இது.

Share

சமச்சீர்க் கல்வி – இன்று தீர்ப்பு

சமச்சீர் கல்வி தீர்ப்பு இன்று வருகிறது. ஆகஸ்ட் 2, பின்பு 10ம் தேதிக்குள் புத்தகங்கள் தரப்படவேண்டும் என்று சொல்லி இதுவரை தரப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டும் இதற்கும் ஒன்றும் செய்ததாகத் தெரியவில்லை. பாடப் புத்தகங்களைத் தரவேண்டும் என்று சொல்லிவிட்டதால் சமச்சீர்க் கல்வி இந்த ஆண்டே வரவேண்டும் என்றுதான் தீர்ப்பு வரும், எதிராக வர வாய்ப்பில்லை.

ஒருவேளை எதிராக வந்து, அடுத்த ஆண்டுமுதல் சம்ச்சீர்க் கல்வி, வேறு புதிய பாடங்களுடன் என்று தீர்ப்பு வந்தால், மகிழ்ச்சி! இல்லை என்றால், பசங்களுக்கு படிக்க எதாவது இப்பவாவது கிடைச்சதே என்னும் வகையிலும் கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ச்சியே… 2 மாதங்கள் படிக்காமல் போய்விட்டதால் பசங்க படிப்பே வீணாகப் போச்சு என்று சொல்வதில் கொஞ்சம் உடன்பாடு உண்டுதான் என்றாலும் முழுக்க உடன்பாடில்லை. நான் 8ம் வகுப்பு படித்தபோது 2 மாதங்கள் ஆசிரியர் ஸ்டிரைக் நடந்தது. +2 படித்த போது 2 மாதங்களுக்கும் மேலாக ஸ்டிரைக் நடந்தது. எப்படியோ எதையோ படித்துக்கொண்டிருந்தோம்! பெரிய அளவில் நஷ்டம் நேர்ந்ததாகத் தெரியவில்லை. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போதும் இப்படி 2 மாதங்கள் பள்ளிகள் செயல்படவில்லை என்கிறார்கள்.  நிச்சயம் இது சரியான வழி அல்ல. குடிமூழ்கிப் போகக்கூடியதும் அல்ல. இந்த இரண்டு மாதங்களில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் இலக்கணத்தை உருப்படியாகக் கற்றுக் கொடுத்திருக்கலாம். பாடங்களைப் படிப்பது எப்படி என்றும், அதனை சுவாரயஸ்மாக அணுகுவது எப்படி என்றும் சொல்லித் தந்திருக்கலாம். இதற்கெல்லாம் பொதுவாக ஆசிரியர்களுக்கு நேரமே இருக்காது. கிடைத்த நேரத்தில் இதனைச் செய்திருக்கலாம். முதலில் இதுவெல்லாம் ஆசிரியர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்பதே நம் ஆசிரியர்களின் அடிப்படைப் பிரச்சினை.

இந்த ஆண்டு இதே சமச்சீர்ப் பாடங்கள் என்று தீர்ப்பு வந்தாலும், அடுத்த ஆண்டே இந்தப் பாடங்களை ஜெ. அரசு மாற்றவேண்டும். சமச்சீர்க் கல்வியை வைத்துக்கொண்டு சரியான பாடங்களோடு அதனைக் கொண்டு செல்லவேண்டும். பாடத் திட்டங்களை சரியாக்குகிறோம் என்று இன்னும் மோசமாக ஆக்காமல் இருப்பார்களாக என்று நம்புவோம்!

என்ன தீர்ப்பு வந்தாலும் அதனை ஏற்போம் என்று ஜெ சொல்லியிருப்பது நல்லது. வேறு வழியில்லை என்னும்போது இப்படித்தான் பேசவேண்டும். 🙂 இதனை ஒரு மாதத்துக்கு முன்பே சொல்லத் துவங்கி இருக்கவேண்டும். இதனைச் சொல்லிக்கொண்டே, சமச்சீர்க் கல்வியின்படித் தயாரிக்கப்பட்ட பாடங்களுக்கு எதிரான கருத்துகளை நீதிமன்றத்தில் சொல்லிக்கொண்டிருந்திருக்கவேண்டும். அரசியலை இன்னும் திறமையாகச் செய்யப் பழகவேண்டும் ஜெ. இரண்டாவது முறை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தபோதே இந்த ஆண்டே சமச்சீர்க் கல்வியை அரசு செயல்படுத்தும் என்று அரசு முடிவெடுத்திருந்தால், மக்களிடையே எழுந்துள்ள அதிருப்தியைக் கொஞ்சம் தவிர்த்திருந்திருக்கலாம். தொடர்ந்து உச்சநீதி மன்றத்தில் வழக்காடியது நிச்சயம் தவறல்ல. கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பது சரிதான். ஆனால் மக்களின் நிலையையும் கொஞ்சம் கவனத்தில் கொள்வது நல்லது. இனி இது தேவையில்லை. இன்றுதான் தீர்ப்பு வரப்போகிறதே. இந்த தொடர் வழக்கால் மக்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தி ஜெயலலிதாவுக்கு எதிராக மாறும் என்று நான் நம்பவில்லை. பார்க்கலாம்.

தொடர்ந்து வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது, அடிக்கடி எதையாவது சொல்லாமல், தேவையற்ற விவாதங்களைச் செய்யாமல், மௌனமாக, அதே சமயம் தெளிவாக நீதிமன்றத்தில் மட்டும் அரசு பேசியது நல்ல விஷயம். இதனையே எல்லா விஷயத்திலும் ஜெ கடைப்பிடிக்கவேண்டும். செயல்பாடே முக்கியம் என்னும் விஷயத்தை மக்கள் மனத்தில் பதிய வைக்க யோசிக்கவேண்டும். இல்லையென்றால் ஓட்டுப் போடாமல் விட்டுவிடுவார்கள்.

சமச்சீர்க் கல்வி வழக்கு தீர்ப்பு வருவதையொட்டி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துச் சொல்வதா வருத்தங்கள் சொல்வதா என்று தெரியவில்லை என்பதால் என்னவோ ஒண்ணு என்று மட்டும் சொல்லி வைக்கிறேன்.

Update: 10 நாள்களில் சமச்சீர்க் கல்வியை அமல்படுத்தவேண்டும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

Share