Tag Archive for அதிமுக

ஜோதிமணி – நாகராஜன் விவகாரமும் தமிழ்நாட்டில் ஆபாசப் பேச்சுக்களும் கருத்துச் சுதந்திரமும்

கரு.நாகராஜன் ஜோதிமணியைப் பற்றிப் பேசிய விவகாரம் – நாகராஜன் பேசியது மிகத் தவறானது. கண்டிக்க வேண்டிய ஒன்று. பாஜகவினரும் இப்படிப் பேசுவது நிச்சயம் எனக்கு அவநம்பிக்கையைத் தருகிறது. ஆனால் இதை யாரெல்லாம் கண்டிக்கிறார்கள் என்பதில்தான் கூடுதல் அரசியல் இருக்கிறது.

பெண்களை என்று மதிக்காத திராவிட அரசியல் பாஜகவின் நாகராஜனைக் கண்டிக்கிறது. பெண்களைப் போற்றுகிறோம் என்கிற போர்வையில் அவர்களை எத்தனை மட்டம் தட்ட முடியுமோ அத்தனை மட்டம் தட்டும் அரசியல்வாதிகளுக்கு நாகராஜனைக் கண்டிக்க என்ன தகுதி உள்ளது? நாகராஜன் ‘கேவலமான மகளிர்’ என்று சொன்னார். ஆனால் இவர்கள் என்னவெல்லாம் சொல்லி இருக்கிறார்கள்? கருணாநிதி சிலேடையாகப் பேசுவதாகப் பேசிய பேச்சை எல்லாம், அவரது தமிழ்ப் புலமைக்கும் கழக ஆண்களின் ஆண்மைக்கும் சான்றாகச் சொல்லி விதந்தோதியவர்களே இவர்கள். இவர்களது வரலாறே பெண்களைப் பாலியல் ரீதியாக சுரண்டியதிலும் அவமானப்படுத்தியதிலும்தான் இருக்கிறது. ஆனால் பேச்சிலும் எழுத்திலும் மட்டும், அடேயப்பா!

ஜெயலலிதாவையும் மோடியையும் பற்றி மிகத் தரக்குறைவாகப் பேசினார் ஈவிகேஎஸ் இளங்கோவன். இன்று அவரது கட்சியைச் சேர்ந்தவரை நாகராஜன் விமர்சிக்கவும் அந்தக் கட்சியே மிக யோக்கியமானவர்கள் போலப் பேசுகிறார்கள். இத்தனைக்கும் நாகராஜன் பேசிய கேவலமான பேச்சைவிடப் பல மடங்கு கேவலமாகப் பேசி இருந்தார் இளங்கோவன்.

திருமாவளவன் – இவர் காயத்ரி ரகுராம் பற்றிப் பேசியது,  (“குடித்து விட்டு கார் ஓட்டுகிற, பெண்களை வைத்து தொழில் செய்கிற தற்குறிகளுக்கு என்ன தெரியும்? ஆடைகளை அவிழ்த்து போட்டு நடிப்பது அவர்கள் தொழில்”) நாகராஜன் பேசியதே பரவாயில்லையே என்று சொல்லும் அளவுக்குக் கீழ்த்தரமானது. திருமாவளவன் பேசியதைத் தொடர்ந்து அவரது கட்சியினர் மிக மோசமாக காயத்ரி ரகுராமைக் கீழ்த்தரமாக எழுதினார்கள். திருமணத்துக்கு முந்தைய உறவு பற்றி குஷ்பூ ஒரு கருத்துச் சொல்லப் போக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல்கட்சிகள் குஷ்பூவை அரசியல் ரீதியாக ஓட ஓட விரட்டின. அந்த சமயத்தில் குஷ்பூ திரைப்படங்களில் பிற நடிகர்களுடன் நெருக்கமாக நடித்த படங்களை எல்லாம் இணையத்தில் கொட்டி குஷ்பூவைக் கட்டம் கட்டினார்கள். இன்று இவர்கள் பாடம் எடுக்கிறார்கள்.

இந்த விவகாரம் பற்றித் தமிழ் தி ஹிந்து வலைத்தளத்தில் ஒரு செய்தி (https://www.hindutamil.in/news/tamilnadu/555149-jothimani-vs-karu-nagarajan-3.html) பார்த்தேன். நாகராஜன் திட்டியதைப் பற்றி மட்டும் போட்டிருக்கிறார்கள். பிரதமர் மோடியை கல்லால் மக்கள் அடிப்பார்கள் என்று ஜோதிமணி பேசியதைப் பற்றி ஒரு குறிப்பு கூட இல்லை. இதுதான் ஊடகங்களின் லட்சணம்.

திமுகவின் வெற்றிகொண்டான் பேச்சை ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் உண்டு. வெற்றிகொண்டான் உள்ளிட்டவர்களை நாம் விமர்சித்தால், இந்த ரசிகர்கள் உடனே வந்து நமக்குப் பாடம் எடுப்பார்கள். வெற்றிகொண்டான் பேச்சு கழகக்காரர்களை உற்சாகப்படுத்தவாம். திமுகவின் கட்சி மாநாடு நடந்தபோது நாடகம் என்கிற பெயரில் ஜெயலலிதாவை மிகக் கீழ்த்தரமாக விமர்சித்து இரட்டை அர்த்த வசனத்துடன், சொல்லவே கூச்சம் ஏற்படும் வகையில் ஒரு நாடகம் போடப்பட்டது. கருணாநிதி, அவரது குடும்பம் உட்பட அனைத்து முன்னணித் தலைவர்களும் அதைப் பார்த்தார்கள். சில முன்னணி தலைவர்களே மேடையில் இரட்டை அர்த்தத்துடன் பேசினார்கள். பின்னர் அடுத்து அதே போல அதிமுக மாநாட்டில் அதே போன்ற இரட்டை அர்த்த வசனத்துடனும் கேவலமான சொற்பிரயோகங்களுடனும் கருணாநிதிக்குப் பதிலடி தரப்பட்டது. (http://idlyvadai.blogspot.com/2006/03/blog-post_12.html and https://www.facebook.com/haranprasanna/posts/714427531911952).

இப்போது நாகராஜனுக்குப் பாடம் சொல்கிறார்கள்.

வெற்றிகொண்டான் என்றில்லை, தலைவர்கள் வரை இவர்களது செயல்பாடு இப்படித்தான். இதையேதான் பாஜகவும் பின்பற்ற நினைக்கிறதா என்பதைத்தான் இப்போது பாஜகவும் பாஜகவினரும் பாஜகவின் ஆதரவாளர்களும் யோசிக்கவேண்டும். இதுவே பழக்கமாகவும் பின்னர் வரலாறாகவும் மாறிவிட்டால் அதனால் ஏற்படும் அவமானத்தை எப்போதும் துடைக்கவே முடியாது.

பெண்களைப் பற்றி தரக் குறைவாகப் பேசும் ஒருவரைத் திட்டவும் தகுதி வேண்டும். அந்தத் தகுதி நீங்கள் நினைக்கும் போதெல்லாம் வராது. அது தொடர்ச்சியான ஒன்று. எந்தக் கட்சியினர் பேசினாலும், அவர்கள் தங்கள் கட்சிக்காரர்களே என்றாலும், பெண்களைத் தரக்குறைவாகப் பேசும் ஒரு அரசியல்வாதியைக் கண்டிக்காத வரை, மற்ற அரசியல்வாதிகளைக் கண்டிக்க யாருக்கும் தகுதி இல்லை. நாகராஜன் பேசியதைவிட தரக்குறைவாகப் பேசிய ஈவிகேஸ் இளங்கோவனையும் திருமாவளவனையும் கண்டித்துவிட்டுப் பின்னர் நாகராஜனுக்கு வாருங்கள். ஈவிகேஎஸ், திருமாவளவன், ராதாரவி, நாகாரஜன் உள்ளிட்ட அனைவரையும் கண்டிப்பவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும்.

-oOo-

துக்ளக்கில் வெளியான தொகுப்பு சேமிப்புக்காக இங்கே:

நாகரிகமான பேச்சு. இந்தப் பேச்சின்போது கருணாநிதியின் குடும்பமே மேடையில் இருந்தது. பெண்களை மதிக்க, பெண்களுக்காக போராட திமுகவை விட்டால் நாதியில்லை!!!

கடந்த 2003 திமுக மாநாட்டில் பேசிய சிலரின் பேச்சுக்கள் தான். அது கீழே…

சில சாம்பிள்கள்…

* பைத்தியக்காரி, ஆணவக்காரி, இடி அமீன், ஹிட்லர், குடும்ப வாழ்க்கை
தெரியாதவர் என்றெல்லாம் அர்ச்சனைகள் நிகழ்த்தப்பட்டன.

* திருச்சி செல்வேந்திரன் கதறுந்த ஊசி, வார் அறுந்த செருப்பு, கறை
படிந்த பாவாடை என ஜெயலலிதாவைக் குறிப்பிட்டார். அவரே “தலைவரையும்
அவரது மகளையும் அவமானப்படுத்தி, ஜெயலலிதா தனது தொழில்புத்தியைக்
காட்டினார்” என்றும் குறிப்பிட்டார்.

* வெற்றி கொண்டான், ” இந்த அரசு ஊழியர்கள் இன்னும் இரண்டு வருடம்
பொறுத்திருக்கக் கூடாதா? நான் ஏற்கனவே சொன்னேன்… அம்மா அப்பா
உற்றார் உறவினர் இனத்தைச் சேர்ந்தவன் இப்படி யாரிடத்தில் வேண்டுமானாலும்
கையை நீட்டலாம். பத்துப் பேரிடம் படுத்தவளிடம் போய் கைநீட்டலாமா “
என்றவர், ” அது கொழுப்பெடுத்த குதிரை. அதுக்காகத்தாண்டி மவளே..
பக்காவா ஒரு தலைவனைத் தயார் பண்ணி வெச்சிருக்கோம். அடுத்த
ஆட்சியில் கலைஞர் முதலமைச்சர்; ஸ்டாலின் போலீஸ் அமைச்சர்.
அப்பத்தான் அவ கொழுப்பை அடக்க முடியும்!” என்று குறிப்பிட்டார்.

* கருப்பசாமி பாண்டியன், “பாசிச வெறி பிடித்தவர். சாடிஸ்ட். மனநிலை
தவறியவர். முசோலினி என்றெல்லாம் ஜெயலலிதா மீது அர்ச்சனை
நடத்தினார். இறுதியாக, “அழகான ஆண்களைக் கண்டால், அவர்களை
வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து சண்டை போடுவது அந்தம்மாவின்
சுபாவம்” என்றபடி ஸ்டாலினைப் பார்த்தார்.

* பரிதி இளம்வழுதி, ” கி.மு., கி.பி. மாதிரி சட்டசபை வரலாறு பற்றிப்
பேசினால் கு.மு., கு.பி. என்று குறிப்பிடலாம். அதாவது குண்டம்மாவிற்கு
முன், குண்டம்மாவிற்குப் பின்!” என்று விளக்கம் அளித்தார்.

* திமுக மாநாட்டில் முதல்நாள் பேரணியின் முடிவில் இரவு 10 மணிக்கு
“ஆண்டியும் போண்டியும்” என்ற பிரச்சார நாடகம் நடத்தப்பட்டது.
இந்நாடகத்தில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் முக ஸ்டாலின்
புகழ்பாடும் வசனங்களோடு, காட்சிக்குக் காட்சி முதல்வர் ஜெயலலிதாவைச்
சாடும் வசனங்களும் இருந்தன. அவற்றுள் சில இரட்டை அர்த்தத்
தொனியுடனும் மலிவான இரசனையைக் காட்டும் வகையிலும் அமைந்திருந்தது.

உதாரணத்திற்குச் சில வசனங்கள்…

** “ஒவ்வொரு மந்திரியும் அந்தம்மா காலில் விழுந்து மேலே பார்க்கிறான்.
என்ன பார்க்கிறான் தெரியுமா? அம்மா தூக்குவாங்களா மாட்டாங்களான்னு!”

** மந்திரி பதவிக்கு ஆசைப்படும் ஆளும் கட்சி எம் எல் ஏவிடம், அவரது
மகன் (திமுக ஆதரவாளர்) கூறுவது: ” அம்மா அஜால் குஜாலா இருந்தாங்கன்னா
அன்னைக்கு மந்திரி ஆக்குவாங்க. அஜால் குஜால் இறங்கிடுச்சுன்னா மந்திரி
பதவியை விட்டு எடுத்துடுவாங்க”

** “ஜெகத்குரு சங்கராச்சியார் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?”

“யாரு? அந்த…… குச்சியிலே கோவணம் கட்டியவனா?”

** “நீங்க மந்திரி ஆகணும்னா சின்னம்மாவைப் பிடிங்க. அவங்க
என்ன சொன்னாலும் நடக்கும்… அவங்களைத் தள்ளிக்கிட்டு
வர்றேன். முடிஞ்ச வரைக்கும் செய்யுங்க. இல்லேன்னா ஆளை
வெச்சுச் செய்யுங்க..”

(சுசி என்ற பெயருடைய அந்தச் ‘சின்னம்மா’ வருகிறார்)

சுசியைப் பார்த்து எம் எல் ஏ கூறுவது: “இந்த மாதிரி ஒரு
ஸ்ட்ரக்சரை நான் பார்த்ததே இல்லை.”

சின்னம்மா (சுசி) கூறுவது:

“…கவலையே படாதீங்க. நான் இல்லேன்னா அந்த அம்மாவால எந்த
அவயங்களையும் அசைக்க முடியாது. நாந்தான் அவங்களுக்கு எல்லாமே”

** ஒருவர்; ” என்ன 2 நாள் முன்னாடி அங்கே அம்மா லிங்கத்துக்கெல்லாம்
பூஜை செய்யச் சொல்லி அறிக்கை விட்டுருக்காங்க?”

மற்றொருவர்: ” எங்க அம்மா எத்தனை லிங்கத்தைப் பார்த்திருப்பாங்க!”

** (போண்டி என்பவர் ஆண்டியிடம் கூறுவது)
“உங்க அம்மாவுக்கு ராத்திரியானால் உள்ளே வைக்கணும்”

ஆண்டி” உம்..

போண்டி: அதாவது அரசியல் தலைவர்களைப் பிடிச்சு உள்ளே
வைக்கணும்

** ஆண்டி : “லேடீஸ் ஹாஸ்டல்னு ஒரு படம் பார்த்தேன். ஒரு பொண்ணு
குள்ளிக்கிறதை இன்னொரு பொண்ணு எட்டிப் பார்க்குது… கும்பகோணம்
மகாமகத்துல பெரியம்மாவும் சின்னம்மாவும் கட்டிப்பிடிச்சுக் குளிச்ச
மாதிரி இருந்தது”

** (ஒரு எம் எல் ஏவிடம், மாரியம்மன் போல சாமியாடியவர் கூறியவை)

சாமியாடுபவர்: “எனக்கு வைக்குறேன், வைக்குறேன்னு சொன்னியே
வெச்சியாடா? “

எம் எல் ஏ: என்ன சொல்றீங்க ஆத்தா?

சாமியாடுபவர்: வேல் வைக்கிறேன்னு சொன்னியேடா… புடுங்குறேன்
புடுங்குறேன்னு சொன்னியேடா.. புடுங்கினியாடா?

எம் எல் ஏ: என்ன சொல்றீங்க ஆத்தா?

சாமியாடுபவர்: கோயிலைச்சுற்றி இருக்குற புல்லைப் புடுங்கினியாடா…..
.. ஊத்துறேன் ஊத்துறேன்னியே… ஊத்தினியாடா?

சாமியாடுபவர்: கூழ் ஊத்தினியாடா..

எம் எல் ஏவிடம் சாமியாடுபவர் கடைசியாகக் கூறுவது:

” எங்க அம்மா உங்களை 6 மாசம் வெச்சிருந்து அப்புறம்
கலைச்சிடுவாங்க”

( நன்றி: துக்ளக் 1.10.03 )

Share

அதிமுகவின் ஐந்து வருடங்கள் – தேர்தல் களம் 2016 – தினமலர்

ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்குமான முக்கியமான வேறுபாடுகள் என்று யோசித்துப் பார்த்தால், முடிவெடுப்பதில் உறுதி, வழவழா கொழகொழா இல்லாத அணுகுமுறை, தீவிரவாதம் எவ்வகையில் வந்தாலும் அதை தீவிரமாக எதிர்ப்பது, உறுதியான தலைமை, திறமையான நிர்வாகம், கட்சியை கட்டுக்கோப்புக்குள் வைத்திருப்பது, எந்த ஒரு சமூகத்தையும் அவமதிக்காதது, ஓட்டரசியல் மற்றும் தாஜா அரசியலில் ஈடுபடாதது ஆகியவற்றைச் சொல்லலாம். இவற்றுக்காகத்தான் கருணாநிதியை விடுத்து ஜெயலலிதாவை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். இவற்றைவிட்டால் இவர்களுக்கிடையே பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை. சொல்லப்போனால் இவை தவிர இன்னும் சில விஷயங்களில் கருணாநிதியே முன்னிலை பெறுவார் என்பதே உண்மை. ஆனால் இந்த ஐந்தாண்டுகளில் இவை எல்லாம் காணாமல் போயின என்பதே கசப்பான உண்மை.

ஒவ்வொரு முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதும் திமுக ஆட்சியில் அதிருப்தியில் இருக்கும் சாமானியனின் கனவு, ‘இந்தமுறை ஜெயலலிதா மிகச்சிறப்பான ஆட்சி தருவார்’ என்பதாகவே இருக்கும். உண்மையில் ஜெயலலிதா நினைத்திருந்தால் குஜராத்தின் மோதியைவிட மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கமுடியும். அதற்கான அத்தனை வாய்ப்புகளும் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் அவருக்கு இருந்தன. ஆனால் இந்த அற்புதம் நிகழவே இல்லை.

ஜெயலலிதா இந்த முறை ஆட்சிக்கு வந்தபோது கடும் மின்வெட்டு நிலவியது. இப்போது அது நிச்சயம் குறைந்திருக்கிறது. ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளில், பத்தாண்டுகளில் தமிழகம் எதிர்கொள்ளத் தேவையான, அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது அரசு கிட்டத்தட்ட முடங்கியே கிடந்தது. அந்த மூன்று நாள்களுக்குப் பிறகு நிவாரணத்திலும், நோய்கள் பரவாமல் தடுப்பதிலும் அரசு சிறப்பாகச் செயல்பட்டது என்பது உண்மைதான். ஆனால் இயற்கைப் பேரிடர் ஒன்றில் தேவையான போது அரசு சிறப்பாகச் செயல்பட்டிருக்கவேண்டும். இதுவரை இல்லாத மழைதான், எதிர்பாராத வெள்ளம்தான், ஆனாலும் அரசு தயாராகவே இருந்திருக்கவேண்டும்.

ஸ்டிக்கர் அரசியல் மக்கள் மனத்தில் ஏற்படுத்தியிருக்கும் வெறுப்பு கலந்த ஏளனத்தை அதிமுகவினரும் தலைமையும் புரிந்துகொண்டதாகக் கூடத் தெரியவில்லை. எதிலும் ஸ்டிக்கர் எங்கும் ஸ்டிக்கர். எங்கும் பேனர் எங்கும் விளம்பரம். பேனரை எல்லாக் கட்சிகளுமே இப்படித்தான் பயன்படுத்துகின்றன என்றாலும் அதிமுக அதீதம். ஓர் அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்தவேண்டியது அவசியம்தான். ஆனால் அதுவும் மிதமிஞ்சிப் போனது. அதிலும் குறிப்பாக சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் மதுரை கணேசனின் உடலின்முன்பு ஜெயலலிதாவின் படத்துடன் 10 லட்ச ரூபாய் கொடுத்த வீடியோ கொடுமையின் உச்சம். அரசு சத்தமின்றி பத்து லட்சத்தைக் கொடுத்துவிட்டு அதை அரசு அறிவிப்பில் வெளியிட்டாலே போதுமானது.

இந்த ஆட்சியின் தொடக்கம் முதலே பல்வேறு மிரட்டல்களை அரசு சாமானிய மக்கள் பக்கம் நின்று எதிர்கொள்ளவில்லை. எங்கோ விஷமத்தனமாக எடுக்கப்பட்ட ஒரு படத்துக்கு மௌண்ட் ரோடே ஸ்தம்பித்தது. அரசு இதனை மென்மையாகவே கையாண்டது. அதேபோல் விஸ்வரூபம் திரைப்பட பிரச்சினையில் அரசு நியாயத்தின் பக்கம் நின்று உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. சிறுபான்மையினரின் ஓட்டரசியலில் இதுவரை ஈடுபட்டிராத ஜெயலலிதா இந்தமுறை தன் அணுகுமுறையில் கொஞ்சம் தளர்ந்துவிட்டாரோ என்று யோசிக்க வைத்த விஷயங்கள் இவை. ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளரான சோவே, துக்ளக் ஆண்டுவிழாவில் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். சோவே குறிப்பிட்டிருக்கிறார் என்னும்போது இப்பிரச்சினையின் தீவிரத்தை ஜெயலலிதா உணரவேண்டும்.

கடந்த ஒன்றரை வருடங்களாக, குறிப்பாக பரப்பன அக்ரஹாரா தீர்ப்புக்குப் பின், ஆட்சி ஸ்தம்பித்துவிட்டது போன்ற ஒரு உணர்வே மேலோங்கியுள்ளது. அதிமுகவினர் தலைமையின் புகழ் பாடுவதை ஒரு பக்கமும், தன்னிச்சையாக செயல்படுவதை இன்னொரு பக்கமும் செய்துகொண்டிருக்கிறார்கள். அம்மா உணவகம், காவிரி நீர்ப் பிரச்சினையில் உறுதியான நிலைப்பாடு போன்ற சில நல்ல விஷயங்களைக் கூட இவர்கள் மறக்கடித்துவிடுகிறார்கள். நில அபகரிப்பைக் கட்டுக்குள் கொண்டு வந்த, தற்போது நடந்துமுடிந்த மகாமகத்தை சிறப்பாகக் கையாண்டது போன்ற அரசைத்தான் மக்கள் விரும்புகிறார்களே ஒழிய, எதையும் சாகவாசமாக எதிர்கொள்ளும் அரசை அல்ல. கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தைக் கையாண்ட ஜெயலலிதாவைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்களே அன்றி, இப்படியான தலைவராக அல்ல.

கடந்த ஐந்தாண்டுகளில் அதிமுகவினர் எப்போது அதிகம் கேலி செய்யப்பட்டிருக்கிறார்கள், விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால், ஸ்டிக்கர் விஷயம், ஜெயலலிதாவைக் கண்டாலே எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் காலில் விழுந்துவிடுவது, எப்போதும் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் போஸ் கொடுப்பது, தொலைக்காட்சிகளில் எவ்வித ஆழமும் இல்லாமல் மேம்போக்காகப் பேசுவது, மையப்படுத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு – இவை போன்றவைதான். கட்சியை தன் கைக்குள் முழுவதுமாக வைத்திருக்கும் ஜெயலலிதா போன்ற ஒரு தலைவர் இதை ஒரே நாளில், ஆம், ஒரே நாளில் சரி செய்திருக்கமுடியும். ஆனால் அப்படி ஒன்று நிகழவே இல்லை.ஜெயலலிதாவின் வாழ்நாள் சாதனை என்பது தன்னுடைய உறுதியான செயல்பாட்டால் தீவிரவாதத்தையும் ரவுடியிஸத்தையும் கட்டுக்குள் வைத்திருந்ததுதான். இதுதான் அவரது பலம். அந்த உறுதியான செயல்பாட்டில் எவ்வித சுணக்கம் ஏற்பட்டாலும் அது நாட்டுக்கு நல்லதல்ல. அதன் விளைவு தேர்தலில் தெரியும். தெரியவேண்டும். 

Share