Archive for பொது

செங்குதிரையும் இருட்பாம்பும் (நாள் 5)

செங்கிஸ்கான் நூலை இகாரஸ் பிரகாஷ் வெளியிட முத்துராமன் பெற்றுக்கொண்டார். இருளர்கள் ஓர் அறிமுகம் நூலை ப்ரவாஹன் வெளியிட கணேசன் பெற்றுக்கொண்டார்.

முகில் எழுதிய செங்கிஸ்கான் நூலை இகாரஸ் பிரகாஷ் வெளியிட்டுப் பேசினார். வரலாற்றில் தனக்கு அதிக அறிவு இல்லை என்பதால் இந்த நூலை வெளியிட்டு எப்படி பேசுவது என்று யோசித்ததாகவும் அதற்கான சில ஆயத்த முயற்சிகளைச் செய்ததாகவும் பிரகாஷ் கூறினார். இணையத்தில் செங்கிஸ்கான் குறித்த தகவல்களைச் சேகரித்ததாகவும், செங்கிஸ்கான் குறித்த ஆவணப் படம் ஒன்றைப் பார்த்ததாகவும், அதன் பின்னரே இந்த நூலில் அவரால் எளிதில் அவரைப் பொருத்திக்கொள்ளமுடிந்தது என்றும் பிரகாஷ் சொன்னார். செங்கிஸ்கானின் போர்த்தந்திரங்களைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய பிரகாஷ், செங்கிஸ்கானின் வெற்றிக்கான முறைகளாக பத்துக் கட்டளைகளைக் குறிப்பிட்டுச் சொன்னார். பொதுவாக கிழக்கு பதிப்பகத்தின் பெரும்பாலான புத்தகங்களின் நடை, பா.ராகவனின் பாதிப்பில் இருக்கும் என்றும், ஆனால் இப்புத்தகத்தின் நடை அதிலிருந்து விலகி இருப்பதை தன்னால் கவனிக்கமுடிந்தது என்றும் குறிப்பிட்டார். முகிலின் உழைப்பைப் பற்றிப் பாராட்டிய பிரகாஷ், இந்நூல் மிக எளிமையான முறையில், மிக அழகாக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது என்றும், இதற்காக உழைத்த முகிலைப் பாராட்டியும் பேசினார்.

குணசேகரன் எழுதிய இருளர்கள் ஓர் அறிமுகம் நூலை வெளியிட்டு ப்ரவாஹன் பேசினார். ப்ரவாஹன் (ஆய்வாளர், Sishri.org) சிறந்த பேச்சாளர் என்பதை நான் அறிவேன். அதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்யும் வண்ணம் மிகச் சிறப்பாகப் பேசினார். ஒரு இண்டலெக்சுவல் தன்மையோடு, நூலை மிக ஆழமாக விமர்சனம் செய்தார். இருளர்கள் போன்ற ஒரு சமூகத்தைப் பற்றிய ஒரு நூல் நிச்சயம் தேவை என்கிற நிலையில் கிழக்கு பதிப்பகத்தின் முயற்சியையும் அந்நூலின் ஆசிரியர் குணசேக்ரனின் முயற்சியையும் பாராட்டிய அவர், இந்நூலில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டினார். இது போன்ற ஒரு மானுடவியல் சார்ந்த புத்தகத்தை வெளியிடும்போது, பதிப்புக்குழு இன்னும் அதிகம் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும், புத்தகத்தின் துறைசார்ந்த ஒருவரிடம் கொடுத்து புத்தகம் பற்றிய கருத்துகளைப் பெறவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். இன்றைய நிலையில் ஒரு கருத்து ஒரு புத்தகத்தில் வந்துவிட்டாலே அது உண்மை என்று நம்பப்படுகிறது; அதனால் இதுபோன்ற புத்தகங்களில் அதிகம் கவனத்தோடு இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஆரியப் படையெப்டுப்புப் பற்றிப் பேசிய ப்ரவாஹன், அது இப்புத்தகத்தில் தவறாகக் கையாளப்பட்டுள்ளது என்று சொன்னார். தஸ்யுக்கள் எனப்படுபவர்கள் இருளர்களாக இருக்கமுடியாது என்று குறிப்பிட்டார். பல்வேறு நிலங்களில் அலைந்து திரிந்தவர்கள் என்று சொல்லப்படும் இருளர்கள் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்ததாக நூலாசிரியர் எழுதியிருப்பதும் சரியல்ல என்றார். அதேபோல் இருளர்கள் கடல்கன்னிகளை வழிபடும் மரபு ஒன்று உள்ளது என்றும், அதுபற்றி இப்புத்தகத்தில் குறிப்புகள் இல்லை என்றும் அது விடுபட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.


பின்னர் கலந்துரையாடல் தொடங்கியது. இருளர்கள் பற்றிய கேள்விகள் தொடங்கின. தரவுகள் இல்லை என்று சொல்லி மறுத்துப் பேசிய ப்ரவாஹன் அதற்கான தரவுகளைத் தராமல் யூகத்தில் மட்டுமே பேசியதாகவும், ஆனால் அந்த யூகம் ஓர் ஆசிரியருக்கு மறுக்கப்படுவது ஏன் என்றும் லக்கிலுக் கேட்டார். பதிலளித்த ப்ரவாஹன், ஒரு நூல் எழுதப்படும்போது ஒரு கருத்தைச் சொல்ல முற்படும்போது அதற்கான தரவுகளோடு எழுதவேண்டும் என்று தான் சொன்னதாகவும், தான் பேசும்போது கூட ஒரே ஒரு கருத்தை மட்டுமே (கடல் கன்னிகள் சார்ந்தது) யூகத்தின் அடிப்படையில் சொன்னதாகவும், அதையும் தான் வெளிப்படையாகக் குறிப்பிட்டதாகவும் சொன்னார். மேலும், தரவுகளோடு ஒப்பிடவேண்டிய, தரவுகளைக் கேட்கவேண்டிய விஷயங்களைக் கூட, ஆசிரியரின் குறைகளாகச் சொல்லாமல், அதை பதிப்புக்குழுவின் குறைகளாகவே முன்வைத்ததாகக் குறிப்பிட்டார். ஆரியப் படையெடுப்பு என்பது நடக்கவில்லை என்பதற்கான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா அல்லது ஆரியப் படையெடுப்பு நடந்ததற்கான காரணங்களை மறுப்பதன்மூலமே அது நடக்கவில்லை என்கிறீர்களா, தஸ்யுக்கள் என்பவர் யாராக இருக்கமுடியும் என்ற கேள்விகளைக் கேட்டேன். ஆரியப்படையெப்பு பற்றி மிக நீண்ட விளக்கங்களைத் தரமுடியும் என்றும், அதற்கான தரவுகளைத் தான் தயாராக இருப்பதாகச் சொன்ன ப்ரவாஹன், தஸ்யுக்கள் என்பவர்கள் நிஷகாதர்களாகவே இருக்கமுடியும் என்று குறிப்பிட்டார். மூவேந்தர்கள் திராவிடர்களா என்பன போன்ற கேள்விகளுக்கும் விரிவாக பதிலளித்தார். மானுடவியல் ஆய்வுமூலம் வெளியாகும் கருத்துகளைக் கொண்டு இனம் பற்றிய முடிவுக்கு வரலாமா என்பது பற்றிய கேள்விக்கு, மானுடவியலில் நடந்த பல்வேறு ஆயுவுகளை வெளியிடாமல் இந்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாகவும் அது வெளிக்கொண்டுவரும் முடிவுகள் அதுவரை இருந்த கருத்தியல்களை உடைக்கும் என்பதால் இப்படி ஒரு நிலை என்பதாகவும் கனடா வெங்கட் குறிப்பிட்டார். (நான் சரியாகக் குறிப்பிட்டிருக்கிறேனா என்பது தெரியவில்லை. இது பற்றிய நீண்ட விவாதம் நிகழ்ந்தது. கல்வெட்டாய்வாளர் இராமசந்திரன் தனது கருத்துகளைச் சொன்னார். தொல்லியல் ஆய்வு, பாப்ரி மசூதி, இந்திரா காந்தி என நீண்ட இந்த விவாதத்தை ஒலிப்பதிவாகக் கேட்டுக்கொள்ளவும். வெங்கட்ரமணன் மிகச் சிறப்பாகப் பேசினார். ) இருளர்கள் புத்தகத்தை இருளர்கள் பார்த்தார்களா, எப்படி உணர்ந்தார்கள் என்று கேட்டபோது, இருளர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இப்புத்தகத்தின் மூலமாகவே சாதிச் சான்றிதழ் பெற முடிந்தது என்றும், இருளர் இனத்தைச் சேர்ந்த இன்னொருவர் இப்புத்தகத்தைப் பார்த்துவிட்டு மிகவும் பாராட்டியதாகவும் (இன்னும் ஒரு கருத்தைச் சொன்னார் குணசேகரன். மறந்துவிட்டது.) சொன்னார்.

செங்கிஸ்கானின் கேள்விகள் தொடங்கின. செங்கிஸ்கான், பின்பு நெப்போலியன், பின்பு ஹிட்லர் என வரிசைப்படுத்திக்கொண்டால், செங்கிஸ்கானின் முக்கியத்துவம் என்ன, அவர் ஏன் போற்றப்படவேண்டும், அவரது போர்முறைகள் என்ன என்ற பத்ரியின் கேள்விக்கு முகில் விரிவாகப் பதிலளித்தார். போர்முறைகளே செங்கிஸ்கானின் மிக முக்கியமான பங்கு என்றும், சிதறிக்கிடந்த இனக்குழுக்களை ஒன்றாக்கியது, வென்ற இனக்குழுக்களில் இருந்தே ஒரு குழந்தையைத் தத்து எடுத்து செங்கிஸ்கானின் தாய் வளர்த்தது போன்ற முறைகளைக் குறிப்பிட்ட முகில், இந்த தந்திரமுறைகளே செங்கிஸ்கானை முக்கியமானவராக்குகிறது என்றார். செங்கிஸ்கான் என்கிற பெயர் ஏன் வந்தது என்ற கேள்விக்கு செங்கிஸ்கான் என்பது நீல ஓநாய்களின் தலைவன் என்ற பொருள் என்று சொன்னார் முகில். அப்போது குறுக்கிட்ட அதிஷா (ஆதிஷா அல்ல!), செங்கிஸ்கான் என்றால் இடியோடு தொடர்புடைய பெயர் என்றும், இடியால் வென்றதால் அப்பெயர் வந்ததாக ஒரு கருத்து உண்டு என்றும், மங்கோலியப் படையெடுப்புக்குப் பின்னர் சவுதி வெற்றிக்குப் பின்னர் இப்பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார். ஆனால் செங்கிஸ்கானுக்கும் இஸ்லாத்துக்கும் தொடர்பில்லை என்றார் முகில். கான் என்பது அரசன் என்ற பொருளில் வழங்கப்படுவதாகச் சொன்னார். செங்கிஸ்கான் என்ற பெயரே, ஜிங்கிஸ்கான் என்பதுபோன்ற பல்வேறு உச்சரிப்பில் அழைக்கப்படுவதாக விவரித்தார்.

நேற்றைய கலந்துரையாடல் மிகச் சிறப்பாக இருந்தது. ஒரு தோழர் எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பி இந்தக் கேள்வியைக் கேட்க சொன்னார். ‘ஆஞ்சநேயர் இருளரா?’

நான் எதாவது இப்படி கேட்கப்போக, அதற்கான தரவுகள் இருக்கின்றன என்று ப்ரவாஹன் ஆரம்பித்துவிட்டால் என்னாகும் என எனக்கு வந்த பயத்தில் இந்தக் கேள்வியைக் கேட்காமல் விட்டேன்.

(இந்தக் கூட்டத்தில் பேசியவை, கேள்விகளின் மீதான கலந்துரையாடல் போன்றவற்றை நினைவில் இருந்து எழுதியிருக்கிறேன். அதனால் தவறுகள் இருக்கலாம். எனவே பத்ரி பதிவில் வெளியிடப்பட்டிருக்கும் ஒலித்துண்டைக் கேட்பது மட்டுமே மிகச் சரியானதாக இருக்கும்.)

அனைத்து தோழர்களுக்கும் உடன்பிறப்புகளுக்கும் ஹனுமந்த ஜெயந்தி வாழ்ந்த்துகள்!!!

Share

விண்வெளியில் ஒரு வெற்றிலைத் தாத்தா (நாள் 4)

நெ.40 ரெட்டைத் தெரு புத்தகத்தை ஜே.எஸ். ராகவன் வெளியிட ஸ்ரீகாந்த் பெற்றுக்கொண்டார். விண்வெளி புத்தகத்தை பத்ரி வெளியிட முரளி கண்ணன் பெற்றுக்கொண்டார்

ராமதுரை எழுதிய விண்வெளி புத்தகத்தை வெளியிட்டு பத்ரி பேசினார். தமிழில் அறிவியல் கட்டுரைகள் எழுதுபவர்கள் மிகக் குறைவு என்கிற நிலையில், ராமதுரை எழுதும் அறிவியல் புத்தகங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிட்டார். பெ.ந. அப்புசாமி போன்ற ஒன்றிரண்டு அறிவியல் கட்டுரையாளர்கள் மட்டுமே கண்ணுக்குத் தென்படுகிற நிலையில், கிழக்கு பதிப்பகம் ராமதுரையைக் கண்டறிந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். மிக எளிய தமிழில், யாருக்கும் புரியும் வண்ணம் ராமதுரை எழுதும் அறிவியல் கட்டுரைகளை மிகவும் சிலாகித்த அவர், ராமதுரை பயன்படுத்தும் உவமைகள் அப்படியே மனதுக்குள் தங்கிவிடுவதைப் பற்றிச் சொன்னார். பூமியை மையமாக வைத்து ஒரு குறிப்பிட்ட சுற்றுப் பாதையில் சுற்றும் ஒரு பொருளின் எடை என்பது முக்கியமற்றதாகிறது என்பதை விளக்க ராமதுரை கையாண்டிருக்கும் உவமை, ‘சுற்றுப்பாதையில் ஒரு அம்மிக் கல் சுற்றினாலும், ஒரு கரண்டி சுற்றினாலும் இரண்டு ஒரே வேகத்தில் சுற்றும்’ என்பதாகும் என்று எடுத்துக்காட்டிய பத்ரி, அந்த உவமை எப்படி ஒரு விஷயத்தை எளிமையாக விளக்குகிறது என்பதைப் புகழ்ந்தார். விண்வெளி மட்டுமன்றி, ப்ராடிஜி வெளியீடு மூலமாக மாணவர்களுக்கான அறிவியல் புத்தகங்களை ராமதுரை எழுதும் விதத்தையும் சிலாகித்தார். ஓர் அறிவியல் தாத்தாவைத் தான் கண்டறிந்திருப்பது தன்னுடைய மிகப்பெரிய சாதனை என்றும் தானும் அறிவியல் கட்டுரைகள் எழுதும் வகையில் ராமதுரையே தனது முன்னோடி என்றும் பத்ரி குறிப்பிட்டார்.

இரா. முருகன் எழுதிய நெ.40 ரெட்டைத் தெரு புத்தகத்தை வெளியிட்டு ஜே.எஸ். ராகவன் பேசினார். தன்னால் நகைச்சுவையாக மட்டுமே பேசமுடியும் என்றும், வோல்ட்டேர் அல்லது சூஃபியிசம் போன்ற ஆழமான கருத்துகளைப் பேசமுடியாது என்றும், அப்படி யாரேனும் எதிர்பார்த்து வந்திருந்தால் அவர்கள் ஏமாற்றம் அடையவேண்டியிருக்கும் என்றும் ஆரம்பித்திலேயே குறிப்பிட்டார். தொடர்ந்து ந்கைச்சுவையாகப் பேசிக்கொண்டிருந்த ஜே.எஸ்.ராகவன், புத்தகத்தில் இருந்து எந்தவொரு கேரக்டர் பற்றியும் தான் விளக்கப்போவதில்லை என்றும், அது தன் வாழ்க்கையில் எப்படி தன்னை பாதித்தது என்பதை முன்வைத்து, தன் வாழ்க்கையில் உள்ள கேரக்டர்கள் பற்றி மட்டுமே பேசப்போவதாக நான்கைந்து முறை சொன்னார். இரா. முருகனின் எழுத்து சுயிங்கம் அல்ல, பாதாம் அல்வா என்றெல்லாம் குறிப்பிட்டார். சும்மா இரா முருகன் என்பதுதான் இரா முருகனின் சுருக்கம் என்று சொல்லி பட்டிமன்ற நினைவுகளை மீட்டினார். அவர் பேசப் பேச நிறைய நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் சிரித்துக்கொண்டே இருந்தார்கள். பெரிய பட்டை அடித்துக்கொண்டு தனது நிறத்தை இன்னும் அதிகமாக எடுத்துக்காட்டிய ராம்கியும் அப்போது ஏன் சிரித்தார் என்பது புரியாத புதிர். ஜே.எஸ். ராகவன் புத்தகத்தைப் பற்றிக் கொஞ்சமும், தன் வாழ்க்கையில் அது எப்படி நினைவுகளைக் கிளறுகிறது என்பது பற்றி நிறையவும் பேசினார். இன்னும் ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் இவர் பேசியிருந்தால், அது வரலாற்றின் முக்கியமான பதிவுகளில் ஒன்றாக இருந்திருக்கும். மயிலாப்பூர் டைமிஸில் தொடர்ந்து 7 வருடங்கள் எழுதுவதாகக் குறிப்பிட்டபோது, அவரது வாசகர்களை நினைத்துப் பெருமையாக இருந்தது. சும்மா இரா முருகனின் நாஸ்டால்ஜியா நினைவுகளின் தொகுப்பு எந்த ஊரை மையமாகக் கொண்டது என்கிற விவரிப்பு இல்லை, அது சிவகங்கையாக இருக்கலாம் என்றார் ஜே.எஸ். ராகவன். ஆர்.கே. நாராயண் மால்குடி (மல்லேஸ்வரம் மற்றும் லால்குடியின் இணைப்பு) என்ற ஒரு கற்பனையூரை உருவாக்கியதுபோல, இரா. முருகனும் ஓர் ஊரை நம் கண்முன் கொண்டுவந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். முன்னுரையில் கிரேஸி மோகன், ‘சுஜாதாவின் ஆவி கூடுவிட்டுக் கூடு பாய்ந்து இரா. முருகனுக்குள் வந்துவிட்டது’ என்று எழுதியிருப்பதைத் தன்னால் ஏற்கமுடியாது என்றும், ஒவ்வொருவருக்கும் ஓர் எழுத்துப் பாணி உண்டென்றும், அது இரா. முருகனுக்கும் உள்ளது என்றும் குறிப்பிட்டு இரா. முருகனை வாழ்த்தினார்.

ஜே.எஸ். ராகவனைப் பற்றிப் பேசிய பா.ராகவன், இன்று நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதும் ஒரே எழுத்தாளர் ஜே.எஸ். ராகவன் மட்டுமே என்று புகழ்ந்தார்.

கலந்துரையாடல் தொடங்கியது. தமிழில் ஏன் அறிவியல் கட்டுரைகள் வளரவில்லை என்று கேட்டதற்கு, கிழக்கு பதிப்பகம் மூலம் அந்தக் குறை நீங்கும் என்று ராமதுரை குறிப்பிட்டார். அறிவியல் கட்டுரைகளில் சில தொழில்நுட்ப, அறிவியல் வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவதா இல்லை தமிழ்ப்படுத்துவதா என்று கேட்கப்பட்டதற்கு, தமிழில் சாத்தியமில்லை என்பதைத் தன்னால் ஏற்கமுடியாது என்றும், ஆனால் ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு போன்ற அறிவியல் வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவது என்கிற அரசுமுடிவு சரியானதுதான் என்றும் குறிப்பிட்டார். இரா. முருகன், தான் என்னதான் தமிழில் எழுதினாலும் கல்கி உள்ளிட்ட இதழ்களில் அதை ஆங்கிலத்திலேயே எழுதுவதாகவும், காரணமாக மக்களுக்குப் புரியாது என்று சொல்வதாகவும் குறிப்பிட்டார். சுஜாதா எழுதும்போது ஆரம்பத்தில் ஒரு தமிழ் வார்த்தையைக் குறிப்பிட்டு அதற்கான ஆங்கில வார்த்தையை அதனருகில் அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுவிட்டு, அக்கட்டுரை முழுக்கத் தமிழிலேயே பயன்படுத்துவார் என்று சிலாகித்தார். ‘நீங்களும் ஏன் அதைச் செய்யக்கூடாது’ என்று நான் கேட்டதற்கு, கல்கி அதை அனுமதிப்பதில்லை என்றார். நாவல், கட்டுரை, அறிவியல் கட்டுரை என்று 3 தளங்கில் எழுதும்போது, ஒன்றிலிருந்து இன்னொன்று எப்படி மாறமுடிகிறது என்று பாரா இரா. முருகனைக் கேட்டார். தன்னுடைய நான்காவது தளமாக திரைக்கதை எழுதுவதைக் குறிப்பிட்டுவிட்டு, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறுவதில் சிக்கல் இல்லை என்றும், ஒன்று எழுதி போரடிக்கத் தொடங்கும்போது அடுத்த வகையை எழுதத் தொடங்குவதாக இரா. முருகன் பதில் சொன்னார். தன்னால் அது இயலவில்லை என்று பாரா குறிப்பிட்டார்.

விண்வெளி ஆராய்ச்சியைப் பற்றி பழங்காலத் தமிழர்கள் எப்படி அறிந்திருந்தார்கள் என்று நான் கேட்டேன். விண்வெளி ஆராய்ச்சியே உலகின் முதல் அறிவியல் சிந்தனை என்று குறிப்பிட்ட ராமதுரை, பழங்கால மக்களுக்கு மின்சாரம் இல்லாததால் இரவில் அவர்கள் வானத்தையே நோக்கிக்கொண்டிருந்தார்கள் என்றும் அதன் மூலம் தங்கள் அனுபங்களைக் குறித்து வைத்தார்கள் என்றும், அனுபவத்தின் மூலம் என்பதால் அதில் தவறுகள் குறைவு என்றும் ராமதுரை குறிப்பிட்டார். என்று மழை வரும் என்று சொல்கிறார்களோ அன்று மழை வருவதில்லையே, ஏன் இந்தக் குழப்பம் என்ற லக்கிலுக்கின் கேள்விக்கு, தானும் அதுகுறித்து ஆச்சரியப்படுவதாகக் குறிப்பிட்ட ராமதுரை, சாட்டிலைட் தரும் தகவல்களுக்கும், அது அறிவிக்கப்படும் நேரத்திற்கும் உள்ள இடையே உள்ள கால அளவு அதிகம் இருப்பது ஒரு காரணம் என்றார். ஜே.எஸ். ராகவன் ஒரு நகைச்சுவை சொன்னார். மற்ற எல்லா நாடுகளிலும் இப்படித்தானே இருக்கிறது என்று சொன்ன எ.எ. பாலாவின் கேள்விக்கு, இந்தியாவில் மட்டுமே அப்படி இருப்பதாக ராமதுரை சொன்னார். தமிழில் அறிவியல் புனைகதைகள் பற்றிய கேள்விக்கு, அது தமிழில் தோற்றுவிட்டது என்று ராமதுரை குறிப்பிட, இரா. முருகன் அது தற்போது கொஞ்சம் வேரூன்றி வருகிறது என்று குறிப்பிட்டு, மரத்தடி யாஹூ குழுமம் நடத்திய அறிவியல் புனைகதை போட்டியில் வந்த அறிவியல் புனைகதைகளை சிலாகித்து, அதில் முக்கியமாக சேவியரின் ஏலி ஏலி கதையைப் பற்றிக் குறிப்பிட்டார்.

மர்மயோகி வருமா வராதா என்று நாயகன் பாணியில் மிரட்டலான கேள்வியைக் கேட்டு இரா. முருகனை பாரா மிரட்டினார். ‘மருதநாயம்தானே’ என்று தொடங்கிய இரா. முருகன் பின்பு மர்ம யோகி என்று மாற்றிக்கொண்டார். மருத நாயகம்தான் மர்மயோகியா என்கிற சந்தேகம் இனி யாருக்கும் இருக்காது என்று நம்பலாம்.

இரா. முருகனிடம் இன்னும் சில கேள்விகள் கேட்க நினைத்திருந்தேன். நேரமாகிவிட்டதால் கேட்கமுடியாமல் போய்விட்டது. நாவலுக்கும் தொடர்கதைக்குமுள்ள வித்தியாசங்கள் (மூன்றுவிரல், விஸ்வரூபம், அரசூர் வம்சம் இவை மூன்றுமே தொடர் வடிவில் வந்தவை), ஆரம்பகாலத்தில் உள்ள எழுத்துக்கும் தற்போதுள்ள எழுத்துக்குமான வித்தியாசங்கள் பற்றிக் கேட்க நினைத்திருந்தேன். வார்த்தை இதழில் வந்த கட்டுரைகள், நெ.40 ரெட்டைத் தெருவில் உள்ள கட்டுரைகள் உட்பட, இரா. முருகனின் எழுத்தில் இருந்த ஒரு சீரியஸ் தன்மை மெல்ல குறைகிறது என்பது என் அனுமானம். முக்கியமாக, ஒரு கட்டுரையின் ஒட்டுமொத்த வெளிப்பாடு என்பதை அவர் விரைவில் இழக்கிறார் என்பது என் கணிப்பு. வாராவாரம் எழுதுவதால் நேரும் பிரச்சினையாக இருக்கலாம். அவரது நகைச்சுவை என்பது கிரேஸி, ஜே.எஸ்.ராகவன் போன்றவர்களின் வெகுஜ ரசனைக்குரியதாகவும் இல்லை, சீரிய தளத்தில் எழுதப்படும் ஆழமானதாகவும் இல்லை, இரண்டுக்கும் இடையில் தத்தளிக்கிறது என்பது என் கருத்து. இதை முதலில் அவர் தாண்டவேண்டும் அல்லது கைவிடவேண்டும் என்பது என் வேண்டுகோள். குட்டப்பன் கார்னர் ஷோப் கட்டுரைகளில் ஒன்றில்கூட இரா. முருகனின் முத்திரை இல்லை என்பது ஒரு வருத்தமான விஷயம். குட்டப்பன் கார்னர் ஷோப் என்பது பெயராகிவிட்டால், ராஜம் கிருஷ்ணன் குறித்த கட்டுரையில் குட்டப்பனைக் காணவில்லை என்றால், அந்தப் பெயரின் பொருள்தான் என்ன? இது ஒரு மிகச்சிறிய கேள்வி மட்டுமே. ஜே.எஸ்.ராகவனும் கிரேஸி மோகனும் தேடும் வெளியில் இரா. முருகன் இல்லை. அவரது இடம் இன்னும் மேலானது என்பதை யார் அறிந்திருக்கிறார்களோ இல்லையோ, இரா.முருகன் நிச்சயம் அறிவார். அந்த இடத்திலேயே அவர் இருந்துகொள்ளவேண்டும் என்பதுதான் இரா.முருகனின் தேவை. இதற்கான இடத்தை இதழ்கள் தர மறுத்தால், அவர் அதை தன் வலைத்தளத்திலாவது நிறுவவேண்டும்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, ராமதுரை அறிவியல் தாத்தாவைப் பற்றி எழுதவேண்டும். பத்ரியும் ஜே.எஸ். ராகவனும் பேசிக்கொண்டிருக்க, தன் கைப்பையைத் திறந்து, வெற்றிலையை எடுத்து, அதை பின்னும் முன்னும் நன்கு துடைத்து, சுண்ணாம்பு தடவி, நான்காக எட்டாக மடித்து வாய்க்குள் வைத்து, மெல்லத் தொடங்கினார். வெற்றிலைத் தாத்தாவின் அறிவியல் உணவு ரசனையின் உச்சம்.

Share

மொட்டைமாடியில் அமெரிக்க அரசியல் – கதிகலங்கிப்போன கோயிந்த்சாமி (நாள் 3)


ஒபாமா ப்ராக் புத்தகத்தை சந்திரமௌலி வெளியிட அரவிந்தன் பெற்றுக்கொண்டார். ஆயில்ரேகை புத்தகத்தை நாராயணன் வெளியிட தமிழ் சுஜாதா பெற்றுக்கொண்டார்.

ஆர். முத்துக்குமார் எழுதிய ஒபாமா பராக் புத்தகத்தைப் பற்றி சந்திரமௌலி பேசினார். ஒபாமாவின் வெற்றிக்கான உழைப்பு, அமெரிக்காவின் தேர்தல் முறை என்பதைப் பற்றி ஆர்.முத்துக்குமார் விவரமாக எழுதியிருப்பதாகப் பாராட்டினார். ஒபாமாவின் வெற்றி, அவர் கருப்பர் என்பதற்காகக் கிடைத்த வெற்றியல்ல என்றார். அவர் தன்னை கருப்பர் என முன்வைத்து தேர்தலைச் சந்திக்கவில்லை என்று குறிப்பிட்டார். ஒபாமாவைப் பற்றிய பல்வேறு புத்தகங்களின் எஸென்ஸ் இந்தப் புத்தகம் எனக் குறிப்பிடும் வகையில், ஒபாமா பற்றி இல்லாத தகவல்களே இப்புத்தகத்தில் இல்லை என்று பாராட்டினார். புத்தகத்தின் குறைகளையும் குறிப்பிட்டார். புத்தகத்தில் உள்ள சில எழுத்துப் பிழைகளையும், ஃபார்மட்டிங் பிழைகளையும் குறிப்பிட்டார். இன்னும் நல்ல எடிட்டிங் இருந்திருக்கவேண்டும் என்றும் சொன்னார். கிழக்கு வெளியிட்டிருக்கும் மற்ற புத்தகங்களின் தரத்தில் இருந்து, எடிட்டிங்கை மையமகா வைத்து, இது கொஞ்சம் குறைந்திருக்கிறது என்றார். ஆனால் இத்தகைய சிறிய குறைகள், புத்தகத்தின் ஓட்டத்தை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்றும் இக்குறைகள் களையப்படவேண்டியவை மட்டுமெ என்றும் குறிப்பிட்டார். பதிலளித்த பத்ரி, சந்திரமௌலி குறிப்பிட்ட பல பிழைகள் ஏற்கெனவே களையப்பட்டுவிட்டன என்று தெரிவித்தார். உண்மையில் சந்திரமௌலி போன்றவர்கள் முன்வைக்கும் இக்குறைகள் நிச்சயம் பதிப்புக்குழுவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

உருப்படாதது நாராயணனும் பா.ராகவனும், ஒரு சிறிய மாற்றம் என்கிற பீடிகையுடன் ஆரம்பித்தார்கள். முதலில் பன்னிரண்டு நிமிடங்கள் (அது என்ன பன்னிரண்டு நிமிடக் கணக்கு எனத் தெரியவில்லை) நாராயணன் பேசுவார், பின்பு நாராயணனும் ராகவனும் கலந்துரையாடுவார்கள். பின்பு எல்லாரும் கேள்விகள் கேட்டு கலந்துரையாடல். இதுதான் விஷயம். நாராயணன் பேசியது, பின்பு அவர் பதில் சொன்னது எல்லாம் சேர்த்தால் 90 நிமிடங்கள் வருமென்றால், அதில் அவர் பேசிய நிமிடங்கள் 50 இருக்கலாம். மீதி 40 நிமிடங்கள் பேச ஆயத்தமாவது, மூச்சு இழுத்து விட்டுக்கொள்வது, ஆள்காட்டி விரலால் மூக்கின் கீழே நெருடிக்கொள்வது, தொண்டையைக் கனைத்துக்கொள்வது என்பது போன்ற கமல்தோஷத்தில் செலவழிந்தன. ஆனால் பேசிய நிமிடங்களில் மிகச் சிறப்பாகப் பேசினார். எண்ணெய் அரசியலோடு, உலக அரசியல் உள்ளிட்ட விஷயங்களில் அவரது ஆர்வம், அறிவு என்னை வியக்க வைத்தது. பொது அறிவு என்பது எவ்வளவு முக்கியமான விஷயம் என்பதை அவர் பேச்சில் உணரமுடிந்தது. பல்வேறு கேள்விகளுக்கு மிகச் சரியான அணுகுமுறையில் பதில் சொன்னார். ஆயில் ரேகை புத்தகத்தைப் பற்றியதாக அவருடைய பேச்சு அமையாமல், ஒரு ஒட்டுமொத்த, அமெரிக்கா சார்ந்த/சம்பந்தப்பட்ட அரசியலை முன் வைத்ததாக அமைந்தது. புத்தகத்தில் குறை சொல்லவேண்டியது சம்பிரதாயம் என்றவர் புத்தகத்தில் உள்ள ஒருசில குறைகளைச் சொன்னார். புத்தகத்தில் உள்ள ஓர் அச்சுத்தவறைச் சொன்னவர், புத்தகத்தின் போதாமையாகச் சொன்னது, எண்ணெய் அரசியலின் மீதான இந்தியாவின் பங்கு என்பதைப் பற்றி.

பின்பு எல்லோரும் பங்குபெறும் கலந்துரையாடல் ஆரம்பித்தது. பத்ரியின் முதல் கேள்வியே, நாராயணன் சொன்ன, எண்ணெய் அரசியலின் மீதான இந்தியாவின் பங்கு, இந்தியா எப்படி அதை எதிர்கொள்ளமுடியும் என்பதைப் பற்றியது. பத்ரி கேட்ட இரண்டு நிமிடக் கேள்விக்கு, பாரா 20 நிமிடங்கள் பதில் அளித்தார். (பாராவிற்குப் பேசத் தெரியாது என்று ஏற்கெனவே நாம் அளித்த செய்தி நினைவில் இருக்கலாம்.) ஆரம்பிக்கும்போது, ஆயில் ரேகை புத்தகத்தைப் பற்றி, ரிப்பன் பக்கோடாவைக் கொறித்துக்கொண்டே ஆரம்பிப்பதில் தவறே இல்லை என்று சொல்லி, தனக்கும் தமுஎச-விற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதி செய்தார். பின்லேடனைவிட அமெரிக்காவே மிகப் பெரிய தீவிரவாதி என்றார். பெட்ரோலுக்கு மாற்றுப் பொருள் பற்றிய விவாதத்தில், சில விஷயங்கள் இன்று பரிசோதனை முயற்சியில் இருந்தாலும், இன்னும் ஒரு 50 வருடங்களுக்காகவது பெட்ரோலின் தேவை இருந்தே தீரும் என்றார். ஏகப்பட்ட கேள்விகள் இந்த எண்ணெய் அரசியலைப் பற்றி எழுந்த வண்ணம் இருந்தன. எல்லாவற்றிற்கும் பாரா, நாராயணன், பத்ரி ஆகியோர் பதில் சொல்லிக்கொண்டிருந்தனர். அணு சக்தி என்பது பெட்ரோலுக்கு முழுமாற்றாகமுடியுமா என்ற கேள்விக்கு, அதற்கு தற்போது சாத்தியமில்லை என்றார் நாராயணன்.

சத்யா (எம்.டி, நியூ ஹொரைசன் மீடியா), நம்நாட்டில் ஏகப்பட்ட சூரிய சக்தி இருக்க, அதற்கு இதுவரை எத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது, இப்போதாவது இதில் கவனம் செலுத்துவோமா, அது சரியாக வருமா என்றார். அதில் இதுவரை போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்றும், தற்போது அதில் இந்திய அரசின் கவனம் குவிந்திருக்கிறது என்றும் நாராயணன் சொன்னார். ஆனால், அணு ஆயுதத்தில் நம் கவனம் இருக்குமளவிற்கு சூரிய சக்தியில் நம் கவனம் இதுவரை இருக்கவில்லை என்றும், தற்போது இருக்கும் கவனமும் ஒப்பீட்டளவில் மிகக் குறைவானதுதான் என்றும் சத்யா சொன்னார்.

எண்ணெய் அரசியலின் மீதான கேள்விகள் மிக நீண்டு கொண்டிருக்க, கேள்வி கேட்காமலேயே பதில் சொல்லிவிடும் அபாய முடிவிற்கு முத்துக்குமார் சென்ற நேரத்தில், அவரிடம் நான் கேள்வியைத் துவக்கி வைத்தேன். ஏற்கெனவே இரண்டு ஒபாமா புத்தகங்கள் வந்துவிட்ட நிலையில், தற்போது ஆர்.முத்துக்குமார் எழுதியிருக்கும் புத்தகத்தின் தேவை என்ன, அது மற்ற புத்தகங்களில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்பது என் கேள்வி. அதை தான் எழுதிய ஒரு காரணத்திற்காகவே அனைவரும் வாங்கவேண்டும் என்று சொல்லி, பேச்சுக்கலையில் திராவிடப் பாரம்பரத்தியின் அழுத்தமான முத்திரையைப் பதித்தார். தொடர்ந்து, மற்ற புத்தகங்கள் ஒபாமாவைப் பற்றி மட்டும் சொல்லிநிற்க, தனது புத்தகம் ஒபாமாவோடு அமெரிக்காவின் அரசியலையும், தேர்தல் முறையையும் முன் வைக்கிறது என்றார். தொடர்ந்து பதிலளித்த பாரா, ஒரு வாழ்க்கை வரலாறு என்பது அவர் பிறந்தார், வென்றார், இறந்தார் என்று சொல்வதல்ல; மாறாக, எந்த முறையில், எந்த இடத்தில் ஒருவரின் வெற்றியும், முக்கியத்துவமும் இருக்கிறது, அதன் பின்னணி என்ன என்பனவற்றை விளக்குவதிலேயே இருக்கிறது, அதை இப்புத்தகம் தெளிவாகச் செய்திருக்கிறது என்று அப்புத்தகத்தின் எடிட்டர் என்கிற முறையில் பதில் சொன்னார். தொடர்ந்து ஒபாமா பற்றிய விவாதங்கள் களைகட்டின. ஒபாமா வென்றதுக்குக் காரணம், கருப்பர்கள் வெறித்தனமாக வருக்கு வாக்களித்ததே என்றார் லக்கிலுக். அது மட்டுமே காரணமல்ல என்று விளக்கினார் பத்ரி. ஸ்ரீகாந்த் இது தொடர்பான தனது கருத்துகளையும் சொன்னார். ஸ்ரீகாந்த் ஒபாமாவை அண்ணன் ஒபாமா என்றார். வைகோ சந்தித்தது ஒபாமாவையா, ஸ்ரீகாந்தையா என்கிற சந்தேகம் எனக்கு எழுந்துவிட்டது. அமெரிக்கா எந்த நாட்டில் தனக்கு லாபம் வருகிறதோ அங்கு மட்டுமே உதவி என்ற போர்வையில் உள்ளே செல்லும் என்று கிட்டத்தட்ட அனைவரும் சொன்ன நிலையில், அதற்கும் சில எதிர்ப்புக் கேள்விகள் எழுந்தன. அமெரிக்கா அழித்த நாடுகளும் உண்டு, அமெரிக்காவால் வாழ்ந்த நாடுகளும் உண்டு என்றார் ஸ்ரீகாந்து. உதாரணமாக ஜப்பான் என்றார். லாபத்திற்காக மட்டுமே அமெரிக்கா ஒரு நாட்டிற்காகச் செல்லும் என்றால், வியட்நாமை எந்த வகையில் சேர்ப்பது என்றார் சத்யா. ஒரு சில விலக்குகள் நீங்கலாக, அமெரிக்காவின் குணம் அதுவே என்றார் பாரா. அமெரிக்கா ஜப்பானுக்கு உதவியது தனது குற்ற உணர்விற்காக என்றார் பத்ரி. ஒபாமா மீது நிறைய எதிர்பார்ப்பு எல்லாருக்குமே உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது. அவர் அதிகம் நல்லது செய்யாவிட்டாலும், அமெரிக்காவின் இன்றைய நிலையை மேம்படுத்தினாலே அதுவே மிகப்பெரிய வெற்றி என்று ஒபாமாவின் தம்பி நம்பிக்கையாகச் சொன்னதோடு கூட்டம் முடிவடைந்தது.

ஒபாமாவின் வெற்றிக்கு அவர் பையில் வைத்திருந்த ஆஞ்சநேயர் படமே காரணம் என்ற செய்தி உண்மைதானா என்று கேட்டேன். இந்தக் கேள்விக்கு ஏன் அனைவரும் அப்படி சிரித்தார்கள் என்று இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

பின்குறிப்பு: நேசமுடன் வெங்கடேஷ் பின்நவீனத்துவப் பாணி கேள்வி (அது கேள்வியாக இல்லாமல் பதிலாகவும் இருக்கலாம்!) ஒன்றை எழுப்பினார். அதைப் பற்றி தனியாக ரூம் போட்டு யோசிக்க உத்தேசித்திருக்கிறேன்.

Share

மால்கம் எக்ஸும் நிறைய எக்ஸ்களும் (நாள் 2)

சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் புத்தகத்தை சோம வள்ளியப்பன் வெளியிட ’உருப்படாதது’ நாராயணன் பெற்றுக்கொண்டார். மால்கம் எக்ஸ் புத்தகத்தை பா.ராமசந்திரன் வெளியிட நேசமுடன் வெங்கடேஷ் பெற்றுக்கொண்டார்.

சோம வள்ளியப்பன் யுவ கிருஷ்ணாவின் (லக்கிலுக்) ’சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்’ புத்தக்த்தைப் பற்றிப் பேசினார். விளம்பரங்களைத் தயாரிப்பதில் விளம்பர ஏஜென்ஸிகளின் பங்கு, ஒரு விளைபொருள் (ப்ராடக்ட்) வெற்றியில் விளம்பரங்களின் பங்கு, அதன் தோல்வியில் விளம்பரங்களின் பங்கு, நெகடிவ் விளம்பரங்களின் வெற்றி, விளம்பரங்களில் நேரும் போட்டி (உதாரணமாக கோக் Vs பெப்சி, ஹார்லிக்ஸ் Vs காம்ப்ளான்) எனப் பல விஷயங்களைத் தொட்டுப் பேசினார். நல்ல விளம்பரம் என்றதும் நினைவுக்கு வரும் ஒரு விளம்பரமாக, பத்தாண்டுகளுக்கு முன்பு வந்த சிறிய மொபைல் போனுக்கான விளம்பரத்தைக் குறிப்பிட்டார். ஒரு பெண் மொபைல் பேசிக்கொண்டிருக்க, தன்னுடன் பேசுவதாக நினைக்கும் ஒருவர் எழுந்து வரவும், அவரிடம் ‘ஒன் காஃபி ப்ளீஸ்’ (என்று நினைக்கிறேன்) எனச் சொல்லும் விளம்பரம் அது. (அந்த விளம்பரத்தில் எனக்குப் பிடித்தது, அந்த மனிதர் முகம் அடையும் பாவங்கள். சிறந்த நடிப்பு அது.) லக்கிலுக்கின் இப்புத்தகம் சிறப்பாக எழுதப்பட்டிருப்பதாகவும், பல்வேறு விஷயங்களை லக்கிலுக் எழுதியிருப்பதாகவும் பாராட்டினார். ஒரு சிறிய குறையாக, எப்படி சிறந்த விளம்பரங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன, எப்படி விருது வழங்குகிறார்கள் என்பதைப் பற்றியும் ஓர் அத்தியாயம் எழுதியிருக்கலாம் என்றார். சிறந்த நடையில் புத்தகம் எழுதியிருப்பதாக லக்கியைப் பாராட்டினார். (சோம வள்ளியப்பன் தொலைக்காட்சிகளில் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். நேற்றைய கூட்டத்தில் அவர் இன்னும் சிறப்பாகப் பேசுவார் என எதிர்பார்த்தேன். அவர் பேச்சில் ஒரு கோவை இல்லை என்பதே மிகப்பெரிய குறை.)

பா. ராமசந்திரன் (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்) மருதனின் மால்கம் எக்ஸ் புத்தகத்தைப் பற்றிப் பேசினார். தமுஎச-வின் மாநாடு தற்போதுதான் முடிவடைந்திருந்ததால் தான் மிகவும் பிஸியாக இருந்ததாகவும், ஆனாலும் மால்கம் எக்ஸ் புத்தகம் என்பதால் தான் பேச ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார். அவர் பேச வருவதற்கு முன்பாக எல்லாரும் சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். பேச ஆரம்பித்த பா.ராமசந்திரன் (பாரா என்று வந்தாலே இப்படி எதாவது சொல்லி பேச ஆரம்பிப்பார்கள் போல!) தான் பேச வரும்போது யாரும் சிப்ஸ் கொறித்துக்கொண்டிருக்கக்கூடாதே என்று நினைத்ததாகச் சொன்னார். காரணமாக, ‘மால்கம் எக்ஸை சிப்ஸ் கொறித்துக்கொண்டு பேசமுடியாது’ என்று சொல்லி, தான் தமுஎச-வின் தீவிர உறுப்பினர் என்பதை நிரூபித்தார். இன்னும் சிறிது நேரத்தில் காப்பி வருமே என நினைத்துக்கொண்டேன். [’ஹிந்துமத வெறியன் கோட்ஸே காந்தியைக் கொன்ற போது அவர் ஹே ராம் என்று சொல்லி இறந்ததுபோல’ என்றெல்லாம் பேசினார். கோட்ஸே ஹிந்துமத வெறியன். அதில் விவாதமில்லை. ஆனால் காந்தி இறந்தபோது ஹே ராம் என்று சொன்னாரா இல்லையா என்பது பற்றி பல விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இது இப்போது தேவையா என நினைக்கலாம். தமுஎச என்று வந்துவிட்டாலே என்ன வேண்டுமானாலும் எழுத வந்துவிடுகிறது. :-)] பா.ராமசந்திரன் மால்கம் எக்ஸின் வாழ்க்கையை, அவர் கறுப்பினத்தவராகப் பிறந்து அடைந்த அவமானங்களை, வலியை விவரித்தார். இனவெறியை எங்கும் பரப்பும் அமெரிக்காவை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்ட மால்கம் எக்ஸை வானளாவப் புகழ்ந்தார். ‘அஸ்லாமு அலைக்கும்’ என்று நூலில் இருந்ததைப் பார்த்தபோதே, மால்கம் எக்ஸ் இஸ்லாமியராக மாறுவார் என எதிர்பார்த்ததாகச் சொன்னார். முதல் அத்தியாயத்திலேயே சுட்டு வீழ்த்தப்படும் மால்கம் எக்ஸ் புத்தக்த்தை சிறப்பாக எழுதியிருப்பதாக மருதனைப் பாராட்டினார். புத்தகத்தில் எவ்விதக் குறையையும் பா.ராமசந்திரன் வைக்கவில்லை. மால்கம் எக்ஸை ஒரு புனித பிம்பமாகவே நிறுவிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

பின்னர் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள். பத்ரி மருதனிடம் நிறையக் கேள்விகள் கேட்குமாறு ஊக்குவித்தார். மால்கம் எக்ஸைப் பற்றி கூட்டத்துக்கு வந்திருந்த ஏகப்பட்ட மிஸ்டர் எக்ஸ்கள் கேள்வி கேட்டார்கள். விளம்பரப் பிரியர் யுவகிருஷ்ணாவை கேள்வி கேட்காதவர்களே இல்லை எனலாம். தொடர்ந்து விளம்பரங்கள் பற்றியும், விளம்பர ஏஜென்ஸிகள் பற்றியும் கேள்விகள். எல்லாவற்றிற்கும் லக்கிலுக் பொறுமையாகப் பதில் சொன்னார். அனைவரும் பொறுமையாகக் கேட்டார்கள். விளம்பரங்களில் ‘செலிபிரிட்டியை ஏன் விளம்பரங்களில் போடவேண்டும்’ என்கிற கேள்வியும், ‘கருப்பு நிறத் தோல்’ பற்றிய கேள்வியும் சில விவாதங்களை எழுப்பின. (கருப்பு வேண்டாம் என்று சொல்கிறோமே, ஆனால் டை (மயிர்ச்சாயம்) அடிக்கும்போது மட்டும் கருப்பை வேண்டுகிறோமே, அது எப்படி என்று ஒரு நண்பர் கேட்டபோது, அவரது பேரல்லல் திங்கிங்கை நினைத்து கூட்டமே அசந்துவிட்டது! அந்த நண்பர் எங்கள் நிறுவனத்தின் விற்பனை மேலாளர் என்பது ஜெனெரல் நாலெட்ஜுக்காக மட்டும் இங்கே.) மருதனை மறந்துவிட்டார்கள். ஒரு எக்ஸ் ஏன் அரசியல்வாதிகளை வேட்டி விளம்பரங்களில்கூட பயன்படுத்துவதில்லை என்றார். அரசியல்வாதிகளுக்கு விளம்பரம் தரமாட்டார்கள் என்றார் லக்கி. ஆனால் உண்மையான காரணத்தை நான் கண்டுபிடித்தேன். அரசியல்வாதிகளை நம்பி வேட்டி விளம்பரங்களை எடுத்தால், அவர்கள் வேட்டியை உருவிக்கொண்டு சண்டைக்கு நிற்கும்போது விற்பனை பாதிக்கப்பட்டுவிடும் என்று விளம்பர நிறுவனங்கள் அஞ்சலாம் என்றேன். நல்ல அரசியல்வாதி யார் என்று ஒரு நிமிடம் யோசித்த லக்கி, தமிழருவி மணியன் எனச் சொன்னார். எங்கே கருணாநிதி பெயரைச் சொல்லிவிடுவாரோ என்று அந்த ஒரு நிமிடத்தில் நான் அடைந்த கலவரத்தைச் சொல்லி மாளாது. இந்த யுவனுக்குள் இருந்து பதில் சொன்ன கிருஷ்ணனுக்கு நன்றி. 🙂

பத்ரி மீண்டும் ஞாபகப்படுத்தி மருதனிடம் கேள்வி கேளுங்கள் என்றார்.. இன்னொரு ’நண்பர் எக்ஸ்’, இன்னும் முப்பது ஆண்டுகள் கழித்து மருதன் எந்தத் தலைவரைப் பற்றி எழுதப்போகிறார் என்று கேட்டார். அவர் கேட்ட தொனி, இன்றைக்கு நல்ல தலைவர்களே இல்லையே என்கிற ஆதங்கத்தில். ஆனால் பத்ரி அப்படி எல்லாம் நிகழாது என்றும் தனக்கு நம்பிக்கை உள்ளது என்றும் தலைவர்கள் உருவாவர்கள் என்றும் சொன்னார். (பத்ரி லெஃப்ட் விங்க் என்கிறார்கள்! ஆம், நிச்சயம் புரட்சி வரும்.) நான், மருதனே தலைவராகிவிட்டால் அவர் ஏன் புத்தகம் எழுதவேண்டும் என்றேன். அப்போதும் பத்ரி விடவில்லை, சுயசரிதை எழுதுவார் என்றார். (புரட்சி வந்தேவிட்டது!) கூட்டம் முடிவதற்கு முன்பாக மைக்கைப் பிடித்த பா.ராமசந்திரன், இன்னும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு எழுத நிறையப் பேர் இருப்பார்கள் என்றும், அதற்கான நம்பிக்கை உள்ளது என்றும், அந்த விதையை கிழக்கு மொட்டைமாடிக்கூட்டத்தில் விதைக்காவிட்டால் தனக்கு அன்றிரவு தூக்கம் வராது என்றும் சொன்னார். (இவர் தமுஎச என்கிறார்கள்.)

இப்படி கூட்டம் களையாக நடந்துகொண்டிருக்க ஒரு பெரிய விஷயம் நடந்தது. பலர் கவனிக்கவில்லை. ஏதோ ஒரு நண்பர் மட்டும் அதை படம் பிடித்தார். லக்கியின் இரண்டு கொலைவெறி ரசிகர்கள் ‘சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்’ புத்தகத்தில் அவரிடம் கையெழுத்து வாங்கினார்கள். நான் கேட்க நினைத்த ஒரே கேள்வி இதுதான். ‘லக்கி, நீங்கள் இப்படி கையெழுத்து போடும்போது எப்படி உணர்ந்தீர்கள்?’ என்பதே. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியைக் கேட்க முடியாமல் போயிற்று. அந்த இரண்டு கொலைவெறி ரசிகர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

’இன்னும் கேள்விகள் கேட்டால் நான் நிஜமாகவே பேசவேண்டியிருக்கும்’ என மருதன் அறிவிக்க இருந்த கணத்தில் கூட்டம் நிறைவடைந்தது.

இன்றைய கூட்டம்:

பாராவின் ஆயில் ரேகை புத்தகத்தை வெளியிட்டு பேசுகிறார் நாராயணன். நிறையக் கேள்விகள் வரும் என்பதால் வீட்டில் கடுமையான பயிற்சியில் பாரா ஈடுபட்டிருக்கிறார். யாருக்கேனும் கேள்விகள் தேவைப்பட்டால் என்னைத் தனிமடலில் தொடர்புகொள்ளவும். ஆயில்ரேகை புத்தகத்தை எப்படி இஸ்லாத்துடன் இணைப்பது, அங்கிருந்து எப்படி பாராவை மதச்சண்டைக்குள் கொண்டுபோவது எனப் பல விஷயங்களைத் தயாரித்து வைத்திருக்கிறேன்.

இன்னொரு புத்தகம் ஒபாமா பராக் பற்றியது. இப்புத்தம் பற்றிய ஒரு பார்வையை லக்கிலுக் அவரது பதிவில் வைத்திருக்கிறார். அதைப் படித்துவிட்டு (புத்தகத்தையே படித்துவிட்டதாக நினைத்துக்கொண்டு) யார் வேண்டுமானாலும் முத்துக்குமாரிடம் கேள்விகள் கேட்கலாம்.

முக்கியமான விஷயம், கேள்விகள் கேட்பதன் பெயர் கலந்துரையாடல் என்பதாகும்.

Share

கொஞ்சம் கேண்டீட் நிறைய சூஃபி வழி (கிழக்கு மொடைமாடிக் கூட்டம் – நாள் 1)

வோல்ட்டேரின் கேண்டீட் நாவலை மாலன் வெளியிட இரா.முருகன் பெற்றுக்கொண்டார். சூஃபி வழி நூலை மாலன் வெளியிட ஜே.எஸ்.ராகவன் பெற்றுக்கொண்டார்.

மாலன் கேண்டீட் நாவலைப் பற்றிப் பேசினார். வோல்ட்டேரின் அறிமுகத்தோடு தொடங்கிய மாலன், கேண்டீட் நாவல் எழுதப்பட்டதன் நோக்கத்தை விவரித்தார். பின்பு பத்ரியின் மொழிபெயர்ப்பைப் பற்றிப் பாராட்டிய மாலன், மொழிபெயர்ப்பின் எல்லையையும் மொழியின் போதாமையையும் பற்றிக் குறிப்பிட்டு, நாவலிலுள்ள சில பிழைகளைச் சுட்டிக்காட்டினார். நாவலின் ஓரிடத்தில் இப்படி வரும். ‘—–ஐக் கொட்டினாள்’ என்று. நான் கேண்டீட் நாவலைப் படித்தபோதே இதைப் பற்றி பத்ரியிடம் கேட்டேன். நாவலின் மூலப் பிரதியிலும் இப்படித்தான் இருக்கிறது என்று பத்ரி சொன்னார். மாலன் வேறொரு மூலத்தில், அவள் தண்ணீரைக் கொட்டினாள் என்றுதான் இருக்கிறது என்றார். ஆனால் பத்ரி மொழிபெயர்க்க எடுத்துக்கொண்டது வேறொரு ஆங்கில மூலத்தை. அதேபோல் கொலைகள் பற்றிய விவரணைகளை தவிர்த்துவிட்டு, பொதுவாக, ’படுகொலை செய்யப்பட்டார்’ என்று பத்ரி எழுதியிருக்கிறார், இது மொழிபெயர்ப்பாளரின் சுதந்திரம் என்றார் மாலன். இன்னொரு இடத்தில் ‘நயா பைசா’ என்று வருவதைச் சுட்டிக்காட்டிய மாலன், அக்காலத்தில் நயா பைசா என்று கிடையாது என்றார். (பின்பு சூஃபி வழி நூலை வெளியிட்டு பா.ராகவன் பேசினார். பத்ரியும் நாகூர் ரூமியும் கேள்விகளுக்குப் பதில் சொன்னார்கள்.) பின்பு பதிலளித்தபோது பத்ரி சில கருத்துகளைச் சொன்னார். சில இடங்களில் கொஞ்சம் முரட்டுத்தனமாகவே தான் மொழிபெயர்த்துவிட்டதாகச் சொன்னார். பல்வேறு பிரிவுகளைக் கொண்ட பாதிரிகளைத் தனித்தனியாக குறிப்பிடாமல் ஒரே வார்த்தையாக பாதிரி எனக் குறிப்பிட்டது, பல்வேறி படிகளைக் கொண்ட ஜமீந்தார் முறைகளைத் தனிதனியாகச் சொல்லாமல் ஒரே வார்த்தையாக ஜமீந்தார் எனப் பயன்படுத்தியது என்பது போன்ற விஷயங்களை விளக்கினார். நாகூர் ரூமி ‘நயா பைசா’ என்பது சரியான முறையில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாகக் கருத்து தெரிவித்தார். இரா.முருகன் தன் கருத்தைத் தெரிவித்தபோது, டிரான்ஸ்லேஷனுக்கும் டிரான்ஸ்கிரிப்ஷனுக்கும் டிரான்ஸ்கிரியேஷனுக்கும் (மொழிபெயர்ப்புக்கும் தழுவலுக்கும் எனக் கொள்ளலாம்) வித்தியாசங்கள் உண்டென்றும், மொழித் தழுவல் என்பது வெகு காலமாக நம்மிடையே உள்ளதுதான் என்றும் கருத்துச் சொன்னார். ஆனால் பத்ரி செய்தது மொழிபெயர்ப்புதான். அதனால் நயா பைசா என்பதை மாலன் சுட்டிக்காட்டியது சரியான குறையே என்பது என் எண்ணம். அதை அடுத்த பதிப்பில் சரி செய்யலாம். இந்த நாவலை மொழிபெயர்க்க ஏன் தேர்தெடுத்தீர்கள் என்று பத்ரியிடம் கேட்டபோது, தன்னாலும் மொழிபெயர்க்க முடியும் என்று தனக்கே நிரூபித்துக்கொள்ளவும், அதன் மூலம் நல்ல மொழிபெயர்ப்புகளை ஊக்கப்படுத்தவும் முடியும் என்பதாலும் என்றார். முதல் மொழிபெயர்ப்பு வாங்கிக்கொடுத்திருக்கும் நல்ல பெயரின் எக்ஸைட்மெண்ட் அடுத்தடுத்த மொழிபெயர்ப்புகளை நிச்சயம் கொண்டுவரும் என்று நினைக்கிறேன்.

சூஃபி வழி புத்தகத்தை வெளியிட்டு பாரா பேசினார். பேசத் தெரியாது என்றும் மைக் பிடித்து அதிகம் பழக்கமில்லை என்றும் நல்ல நகைச்சுவையோடு ஆரம்பித்த பாரா கிட்டத்தட்ட 35 நிமிடங்களுக்குப் பேசினார். தான் சிறு வயதில் கண்ட சாமியார்களிடத்திலும் சூஃபித்தன்மையைப் பார்ப்பதாக தற்போது உணர்வதாகச் சொன்னார் பாரா. சிறந்த புத்தகம் ஒன்றைப் படித்த திருப்தியைப் பற்றிக் குறிப்பிட்ட பாரா, ஒரே இரவில் எப்படி இப்புத்தகம் அவரை உள்ளிழுத்துக்கொண்டது என்பதையும் குறிப்பிட்டார். ஆண்டாள், ராமகிருஷ்ணர் என யாரையும் பாரா விட்டுவைக்கவில்லை. எல்லாரிடத்திலும் சூஃபித் தன்மை உள்ளது என்றார். ராமானுஜரிடத்திலும் சூஃபித் தன்மையைக் கண்டார் பாரா. சென் பௌத்தம், இஸ்லாம், ஹிந்துமதம் என எந்த மதத்திற்கும் சூஃபித்தன்மைக்கும் தொடர்பே இல்லை என்றார். அதனாலேயே சூஃபி வழி என்கிற பெயரைத் தான் தேர்ந்தெடுத்ததாகவும், மதத்துக்கும் சூஃபிக்கும் தொடர்பில்லை என்று நம்பும் எந்தவொரு மனிதனையும் இப்புத்தகம் பாதிக்கும் என்றும் விளக்கினார் பாரா. சூஃபிகளின் சில வரிகளைப் பார்க்கும்போது, ரிக் வேதத்தோடு தன்னால் அதைத் தொடர்புபடுத்திப் பார்க்கமுடிந்தது என்பதையும் விளக்கினார் பாரா. புத்தகம் மிகக் கடுமையாகவே அவரைப் பாதித்திருக்கிறது என்கிற உண்மையை உணரமுடிந்தது. அதற்குப் பின்பு சில கேள்விகளுக்கு நாகூர் ரூமி பதிலளித்தார். அரங்கம் எல்லாவித இறுக்கங்களையும் இழந்து, கலந்துரையாடலுக்கான ஒரு மன நிலையைப் பெற்றது நாகூர் ரூமி கேள்விகளுக்கு பதிலளித்தபோதே.

இஸ்லாமுக்கும் சூஃபியிசத்துக்கும் தொடர்பில்லை என்றார் நாகூர் ரூமி. இஸ்லாமியர்கள் இக்காலத்தில் சூஃபியிஸத்தை ஏற்கிறார்களா (கேட்டவர் நேசமுடன் ஆர். வெங்கடேஷ்) என்று கேட்டபோது, எக்காலத்திலும் இஸ்லாம் சூஃபியிஸத்தை ஏற்றுக்கொண்டதில்லை என்றார் ரூமி. அவனே உண்மை எனச் சொல்லவேண்டிய ஒரு சூஃபி, நானே உண்மை எனச் சொன்னதாகவும் (இதற்கான அராபியச் சொற்கள் மறந்துவிட்டன. ஒரு மோன நிலையில் சூஃபி இப்படி மாற்றிச் சொல்கிறார்), அவர் அதையே மீண்டும் மீண்டும் சொன்னதால் அவர் கண்டம் துண்டமாக வெட்டி கடலில் எறியப்பட்டார் என்றும் சொன்னார் நாகூர் ரூமி. இஸ்லாத்தின் கட்டுக்களிலிருந்து வெளிவர விரும்பும் ஒருவர் இஸ்லாமியராகத் தொடர நினைக்கும்போது உருவாகும் வெளியை சூஃபியிஸம் எனலாமா எனக் கேட்டேன். நாகூர் ரூமி சொன்ன பதில் சரியாக நினைவில்லை. சூஃபியிஸம் என்பதை எம்மதத்தோடும் தொடர்புபடுத்தவேண்டியதில்லை என்றார். ஹிந்து மதத்திலும் சூஃபித்தன்மையைக் காணலாம் என்றார். கபீர்தாஸ் ஒரு சூஃபி என்றார். ராமகிருஷ்ண பரமஹம்சரிசம் சூஃபித் தன்மையைக் காணலாம் என்றார். சூஃபிகள் சிலை வழிபாட்டை ஏற்கிறார்களா என்று கேட்டேன். கண்டிப்பாக ஏற்கவில்லை என்று சொல்லிவிட்டு, அடுத்த நிமிடம் சில சூஃபிகள் ஏற்கிறார்கள் என்றார். அவரிடத்திலும் ஒரு சூஃபித்தன்மை குடிபுகுந்துவிட்டதை நான் அந்நிமிடத்தில் கண்டேன். 🙂 வெங்கடேஷ் மற்றொரு கேள்வி கேட்டபோது மாலன் ‘பாரதியார் நானே கடவுள் என்றெழுதிய சமயத்தில் அவருக்குள் ஒரு சூஃபித்தன்மை இருந்ததை உணர்வதாக’ச் சொன்னார். ஹிந்துமத்தில் சூஃபியிஸத்தின் தேவை என்ன என்று நான் கேட்டேன். மீண்டும் வழக்கம்போல மதத்துக்கும் சூஃபியிஸத்துக்கும் தொடர்பு தேவையில்லை என்கிற கருத்தே முன்வைக்கப்பட்டது. மீண்டும் சூஃபியிஸம் பற்றிய கேள்விகளுக்கு, சூஃபியிஸத்தை சரியாக விளக்கமுடியாது, அது அனுபவம் என்றார் ரூமி. அப்படியானால் அது பின்நவீனத்துவமாக மட்டுமே இருக்கமுடியும் என்றேன் நான்.

சூஃபிஸத்திற்கும் மதத்திற்கும் தொடர்பே இல்லை என்கிற கருத்தையே நான் முற்றிலுமாக மறுதலிக்கிறேன். நிச்சயம் சூஃபியிஸத்திற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு உண்டு. இஸ்லாத் சட்டங்களின் அடிப்படையான மதம். சட்டப்படி சரி, தவறு என்கிற இரண்டு பார்வைகளே உண்டு.

பொதுவாகவே எந்த ஒரு மதச் சட்டத்தின் முன்னாலும் அதன் மக்கள் ஓர் அறிவார்ந்த முட்டாள்களாகவே செயல்படமுடியும். அறிவார்ந்த முட்டாள்கள் தங்கள் முட்டாள்தன்மையை கைவிட்டால், அவர்கள் சட்டத்தை மீறவேண்டியிருக்கும். அங்கே தார்மீகம் முன்னுக்கு வரும். அறிவார்ந்த முட்டாள்கள் அப்படியே தொடர்ந்தால் அவர்கள் சட்டத்திற்குள்ளே வாழமுடியும். இது எல்லா மதங்களுக்கும் பொருத்தமானதே.

இஸ்லாத்தில் ஒருவன் இஸ்லாமியனாக இருக்கமுடியும் அல்லது இஸ்லாமியனாக இருக்கமுடியாது என்கிற இரண்டு எல்லைகள் மட்டுமே சாத்தியம். கருப்பு வெள்ளைகளுக்கு நடுவே உள்ள பல்வேறு நிறங்களில் வாழ்வது சாத்தியமல்ல. இங்கேதான் சூஃபியிஸத்தின் தேவை இருக்கிறது. கட்டுக்களின் மீது கேள்வியும் எதார்த்தத்தின் மீது நம்பிக்கையும் கொண்ட ஒருவர் ஒரு சூஃபியாகவே இருக்கமுடியும். இதனால் இது இஸ்லாத்தோடு நெருங்கிய தொடர்புடையதாகிறது. ஹிந்து மதத்தில் இந்த பிரச்சினைகள் இல்லை. கடவுளை எதிர்த்துக்கொண்டே ஒரு ஹிந்து ஹிந்துவாகத் தொடர்ந்துவிடமுடியும். ஹிந்துவாக இருப்பதற்கான எந்தவொரு வழிமுறையும் கோரப்படவில்லை. ஹிந்துக்களின் புனித நூலாகச் சொல்லப்படும் பகவத்கீதையை மறுதலித்துவிட்டவனும் ஹிந்துவாகத் தொடரமுடியும். இதனால் ஒரு ஹிந்து கட்டுக்களிலிருந்து வெளிவரவேண்டிய தேவை இல்லை. உள்ளிருந்தே அவன் கேள்விகளை எழுப்பமுடியும் என்பதால் அங்கே சூஃபியிஸம் தேவையில்லை. தீர்ப்பு நாளில் நீங்கள் கடவுளை அடைவீர்கள் என்று இஸ்லாமும், மனிதனாக இருக்கும்போதே கடவுளை அடையும் என்று சூஃபியிஸமும் சொல்கின்றன. இதை இஸ்லாமியர்கள் ஏற்க வாய்ப்பில்லை. ஆனால் ஹிந்துக்கள் இதை எளிதாக ஏற்பார்கள். நாடெங்கும் நிலவும் குலதெய்வ (சிறுதெய்வ) வழிபாட்டின் அடிப்படை இதுவே. அதன் தொடர்ச்சியே தர்கா. இஸ்லாம் வெளிநாடுகளில் பரவும்போது, அங்கிருக்கும் கலாசாரத்தோடும், மதங்களோடும் நெருங்கிவரும்போது அங்கே நிச்சயம் சூஃபியிஸத்தின் தேவை இருக்கும். அதன்வழியேதான் சிலை வழிபாட்டை சில சூஃபிகள் ஏற்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். ஒரு இந்திய இஸ்லாம் வீட்டுக் கல்யாணத்தில் இடம்பெறும் பூவும் பழமும் கூட சூஃபிஸத்தின் ஒரு கூறுதான் என்று ஓங்கிச் சொல்லிவிடமுடியும். ஏனென்றால் யாரும் சூஃபியிஸத்தை அறுதியிட்டு விளக்கமுடியாதே! 🙂

ராமானுஜரிடத்திலும் ஆண்டாளிடத்திலும் பரமஹம்சரிடத்திலும் பாரதியாரிடத்திலும் ஒருவர் சூஃபித் தன்மையைக் காண்பது ரசனையின் அடிப்படையில், அன்றி உண்மையின் அடிப்படையில் அல்ல. விமர்சனத்தின் ஒரு புள்ளி அது. ரசனையின் மேம்பட்ட புள்ளி அது. அது உண்மையாக இருக்கவேண்டியதில்லை. அது உண்மையென்றால், தி.ராசகோபாலன் போன்ற தமிழ்ப் பேராசிரியர்கள், சங்ககாலங்களில் காதலன் காதலியோடு பேசும்போது நேரம் விரைவாகச் சென்றது; காதலன் காதலியைப் பிரிந்து இருந்தபோது நேரம் மெதுவாகச் சென்றது என்பது சார்பியல் என்பதன் வெளிப்பாடே; அதனால் அவர்களுக்கு அறிவியல் தெரிந்திருந்தது என்கிற கொடுமையையெல்லாம் ஏற்கவேண்டியிருக்கும். கடல் நீர் ஆவியாகி, மேகமாகி, மழை பெய்வதை பாசுரத்தில் காணலாம் என்பதை சுஜாதா சிலாகித்தார். அது அப்படியே ரசனையோடு நின்றது. அறிவியல் புனைகதைகளின் கூறுகளைப் பட்டியலிட்ட சுஜாதா, அதன் சில கூறுகளை நாம் ராமாயணத்திலேயே, விக்கிரமாத்தித்தன் கதையிலேயே காணலாம் என்றார். அதுவும் ரசனையின் அடிப்படையில் நிகழ்ந்ததே. மாறாக, அதுவே சயின்ஸ் பிக்க்ஷனின் முதல் பிரதி என்று நாம் பிரஸ்தாபிக்கமுடியாது. இதுவே சூஃபித்தன்மைக்கும். சூஃபித்தன்மையை நாம் யாரிலெல்லாம் பார்க்கமுடிகிறது என்று யோசிப்பது ஒரு ரசனையின் அடிப்படை. அதை கபீர் தாஸுக்குப் பொருத்துவது, இரண்டு எதிரெதிர் மதங்களுக்குள்ளான ஆன்மிகத்தன்மையின் ஒற்றுமைப்புள்ளியைக் கண்டடைவது. பாராவிற்கு நிகழ்வதும் இதுவே. அதற்காக பரமஹம்சரும், கபீரும் சூஃபி என்பதெல்லாம் ஏற்கமுடியாதது. சூஃபியிஸத்தையும் இஸ்லாத்தையும் பிரித்துப் பார்க்கவேண்டியதில்லை. மென் இஸ்லாமியர்களின் துவக்கப்புள்ளியாக சூஃபியிஸத்தை வைத்துக்கொள்ளலாம். இந்தக் காரணத்துக்காகவே தீவிர இஸ்லாமியர்கள் இதை ஏற்கவில்லை என்பதை நாம் வரலாற்றில் காணமுடிகிறது. அதனால், சூஃபி வழி – இஸ்லாமியர்களின் இதயம் என்று ரூமி வைக்க இருந்த தலைப்பு மிகவும் நேர்மையானதாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.

எனது கருத்தையெல்லாம் நான் சூஃபி வழி புத்தகத்தைப் படிக்காமல் எழுதியிருக்கிறேன். புத்தகத்தைப் படித்தபின்பு, ‘இஸ்லாத்திற்கும் சூஃபியிஸத்திற்கும் தொடர்பே இல்லை’ என்று நானே சொல்லக்கூடும். அப்போது – நாகூர் ரூமி பேசும்போது இடையில், ‘உங்களுக்குத் தெரியாத நாகூர் ரூமி ஒருத்தன் இருக்கான். அவன் எழுதின புத்தகம் இது’ என்றார். அந்நியன் படம் பார்த்தமாதிரி இருந்தது. கொஞ்சம் திகிலாக உணர்ந்தேன் – நீங்களும் இதேபோல் திகிலடையக்கூடும். அந்த நிமிடத்தில், ’பெரியாரும் ஒரு சூஃபியே’ எனச் சொல்லலாம் என்றிருக்கிறேன்.

(பி.கு.: நேற்று காராசேவு கொடுத்தார்கள். எந்த சூஃபி தயாரித்தார் எனத் தெரியவில்லை. மிக நன்றாக இருந்தது.)

Share

ஞாநி – கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் – பொழுதுபோக்கின் உச்சகட்டம்


எவ்வித சம்பிரதாயமும் இல்லாமல் தொடங்கிய கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தை, ஞாநி கலந்துரையாடலாக்கினார். மும்பை தீவிரவாதத் தாக்குதலைப் பற்றி அவர் ஏற்கெனவே எழுதி, அதை அனைவரும் படித்திருப்பார்கள் என்று கருதியதால், கூட்டடத்தை ஒரு கலந்துரையாடலாக்கலாம் எனச் சொன்னார். கலந்துரையாடல் தொடங்கியது. பல்வேறு கருத்துகளைச் சொன்ன ஞாநியின் சில கருத்துகள் பற்றி மட்டும் இங்கே. (மொத்த ஒலித்துண்டு பத்ரியின் பதிவில் வெளிவரும்.) மீண்டும் ஒருமுறை ஒலித்துண்டைக் கேட்டுவிட்டு எழுத நினைத்தேன். ஆனால் இப்போது நினைவில் இருந்து எழுதுகிறேன். வேறுபாடுகள் இருந்தால், அது என் தவறாக இருக்கலாம். சிறிய வேறுபாடுகள் இருக்கலாமே அன்றி, பெரும் கருத்து மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

ஞாநியின் முக்கியமான குற்றச்சாட்டுகள்.

01. ’இன்று இந்தியாவில் நிலவும் இஸ்லாம் இந்துப் பிரச்சினைக்கு பாப்ரி மசூதி இடிப்பே காரணம். அதற்கு முன்பு எங்கும் இந்தியாவில், ஜம்மு காஷ்மீரைத் தவிர, மதக் கலவரங்கள் நிகழ்ந்ததே இல்லை.’

இது ஒரு ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட் இல்லையா என்று கேட்டேன். மீண்டும் அவர் சொன்னதை சரி என்று உறுதி செய்தார். அதற்கான தரவுகளைப் பார்த்துவிட்டே இதைச் சொல்வதாகச் சொன்னார். இது எவ்வளவு தூரம் உண்மை என்பதற்கான தரவுகள் தற்போது என்னிடம் இல்லை. அதைப் பார்த்தால்தான் தெரியும். அரவிந்தன் நீலகண்டன், நேசகுமார், ஜடாயு, திருமலை உள்ளிட்ட தீவிர ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் இதற்கான தரவுகளைத் தரவேண்டும். இல்லையென்றால் ஞாநி சொன்னதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் எல்லா பிரச்சினைகளுக்கும் பாப்ரி மசூதி இடிப்பு மட்டுமே காரணம் என்பது ஒரு எஸ்கேப்பிஸம் என்றுதான் நான் நினைக்கிறேன். இதை வைத்து இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தை ஞாநி ஆதரிக்கவில்லை என்பதும் உண்மை. அதுவே பிரச்சினையின் வேர் என்கிறார். 47 ஆண்டுகளாக இந்தியாவின் எப்பகுதியிலும் இல்லாத மதத்தீவிரவாதம், அதற்குப் பின் தலைதூக்கியது பாப்ரி மசூதி இடிப்பினால் மட்டுமே என்பது ஞாநியின் கருத்து. அதற்கு முன்பு இந்தியாவில் அல், உல் எனத் தொடங்கும் எந்த இயக்கமும் இல்லை என்றார். கூடவே, அப்படி ஒருவேளை பாபர் மசூதி இடிப்புக்கு முன்னர் கலவரங்கள் நடந்திருக்குமானால், அது தேர்தல் ஆதாயத்திற்காக ஆர்.எஸ்.எஸ். தூண்டிவிட்ட கலவரமாக இருந்திருக்கும் என்றார்.

02. ’பாகிஸ்தானில் இருந்து இந்தியா தீவிராவாதிகளைக் கோருவதற்கு நூற்றுக்கு நூற்றம்பைது சதவீதம் உரிமை இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாக இந்தியாவில் இருக்கும் தீவிரவாதிகளான அத்வானி, தொக்காடியா, மோடி ஆகியோரை இந்தியா விடுவிக்கவேண்டும்.’

இஸ்லாமிய அடிப்படைத் தீவிரவாதிகள் ஜனநாயகத்தில் நம்பிக்கை உடையவர்கள் அல்ல. அவர்களையும் இந்திய அரசியல்வாதிகளையும் ஒப்பிடுவது, கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும், அதில் உண்மை இல்லை. வீரப்பன் காட்டில் செய்த அக்கிரமங்களைவிட ஜெயலலிதா செய்தது அதிகம் என்ற திண்ணைப் பேச்சுக்கும் ஞாநியின் பேச்சுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை. மோடியோ, அத்வானியோ, தொக்காடியாவோ ஓடி ஒளிந்துகொள்ளவில்லை. சட்டம் அவர்களை எந்நேரத்திலும் எதிர்கொள்ளமுடியும். இந்திய அரசு அவர்களைப் பாதுகாக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், இவர்கள் சரியான விதத்தில் மாட்டினால், இந்திய காங்கிரஸ் அரசு இவர்களை விட்டுவைக்கப்போவதும் இல்லை. இப்படி இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கமுடியக்கூடிய அனைத்துவகை சாத்தியங்கள் உள்ள நிலையில், இவர்களை இஸ்லாமிய அடிப்படை பயங்கராவதிகளுடன் ஞாநி ஒப்பிடுவது குழந்தைத்தனமானது. அத்வானி, தொக்காடியா விஷயங்களில் ஞாநி முன்வைப்பது பாப்ரி மசூதி இடிப்பை. கூட்டத்தில் ஒருவர் இந்த விஷயத்தில் நரசிம்மராவின் பங்கைப் பற்றிக் கேட்டபோது, அவர் செத்துப்போயிட்டாரே நான் என்ன பண்ணட்டும் என்றார் ஞாநி. ஞாநி சொதப்பிய பதில்களுள் இதுவும் ஒன்று. மனு தர்மம் குறித்த பேச்சை பேசும் ஞாநிக்கு நரசிம்மராவுக்கு முன்பே மனு இற்ந்துவிட்டார் என்பது நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் ஏன் இன்று மனுதர்மம் பற்றி பேசுகிறோம். அவர் சொல்வதுபோலவே பிரச்சினையின் வேரைப் பற்றிப் பேச விரும்பினால், இறந்தவரையும் பற்றிப் பேசவேண்டும்.

03. ’மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஊடகங்களின் பங்கு வர்க்க பேதத்தை அடிப்படையாகக் கொண்டது. தாஜ் ஹோட்டலில் இறந்தவர்கள் பணக்காரர்கள் (வெளிநாட்டுக்காரர்கள்) என்பதால்தான் ஊடகங்கள் இதை இப்படி காண்பித்தன. ஆனால் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த தாக்குதல்கள் குறித்து ஊடகங்கள் வாய் திறக்காதது அருவருப்பானது.’

ஞாநி சொல்வதில் எனக்கு நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆனால், ஊடகங்களுக்கு மேல்தட்டு, கீழ்த்தட்டு குறித்த வித்தியாசமான பார்வைகள் அடிப்படையிலேயே உண்டு என்பதை நான் ஏற்கிறேன். ஊடகங்களின் பார்வையில் அடித்தட்டு மக்கள் என்பவர்கள் என்றாவது ஒருநாள் கவரேஜுக்குப் பயன்படும் நிகழ்ச்சிகளாக மட்டுமே தெரிகிறார்கள். ஆனால் தாஜ் ஹோட்டல் விஷயத்தில் அப்படி மட்டுமே என்று சொல்லிவிடமுடியாது. ரயில்வே ஸ்டேஷன் விஷயம் என்பது அங்கே உடனே முடிந்துவிட்ட சம்பவம். ஆனால் தாஜ் ஹோட்டலில் இரண்டு நாள்கள் முழுக்க முழுக்க தீவிரவாதிகளின் பிடியில் மக்கள். இதனால் இயல்பாகவே அங்கு ஊடகங்கள் ஓடியது எதிர்பார்க்கக்கூடியதே. இதுவே மறுதலையாக, தாஜ் ஹோட்டலில் மக்கள் கொல்லப்பட்டு, ரயில்வே ஸ்டேஷனில் பிணைக்கைதிகள் பிடிக்கப்பட்டிருந்தால், ஊடகங்கள் அங்கு குவிந்திருக்கும். (அதியமான் இதைச் சொன்னார்.) ஏனென்றால் ஊடகங்களின் பெரிய எதிர்பார்ப்பு ஒரு பரபரப்பு. ஆனால் இதை ஞாநி அடியோடு மறுக்கிறார். அவருக்குள் இருக்கும் கம்யூனிஸ்ட் வெளிக்குதிக்கும் தருணம் இதுவாக இருக்கலாம்.

04. கஷ்டப்படும் பிராமணர்கள் பற்றி, ஏழை பிராமணர்கள் பற்றி ஒரு வரியாவது எழுதியிருக்கிறீர்களா என்று கேட்டேன். பதிலுக்கு என்னிடம் எந்த பிராமணர்கள் பற்றி என்றார். 1978ல் பிராமண சங்கம் தொடங்கப்பட்ட போது, அதை ஆதரித்து எழுதியதாகச் சொன்னார். ஆனால் அப்போதும் அது எந்த பிராமணர்களுக்கு உதவப்போகிறது என்று கேள்வி எழுப்பியதாகவும் சொன்னார். ஏழை பிராமணர்களுக்கா அல்லது செல்வாக்குள்ள பிராமணர்களுக்கா என்பது அவர் கேள்வி. நான் ’இது எல்லா ஜாதியிலும் உள்ள பிரச்சினை’ என்றேன்.

பொதுவாகவே இன்று பொருளாதார ரீதியாக வர்க்கப் போராட்டத்தைப் பற்றிப் பேசும் யாரும், பொருளாதார ரீதியாகப் பிந்தங்கிப் போயிருக்கும் பிராமணர்களைப் பற்றிப் பேசுவதில்லை. (நான் இங்கு பிராமணர்கள் என்று எழுதுவது ஒரு குறியீட்டுக்காக மட்டுமே. அது, முற்படுத்தப்பட்ட எல்லா ஜாதிகளுக்கும், அதிலிருக்கும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பொருந்தும்.) தீட்டு ஒட்டிண்டும் பாருங்கோ. எத்தீண்டாமையும் தவறு. ஆனால் முற்போக்கை ஒட்டிவிடும் பிராமணத் தீண்டாமை பெரும் துன்பம் தரக்கூடியது. உங்கள் முகமூடிகள் உடைந்து விழுந்துவிட்டால் என்னாவது. பிச்சை எடுக்கும் நிலையிலிருக்கும் பிராமணர்களைப் பற்றி எழுதிவிட்டால் அத்தீட்டு ஒட்டிவிடும். அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாத, முற்படுத்தப்பட்ட சாதியிலிருக்கும் ஏழைகளைப் பற்றி எழுதிவிட்டால், இருக்கவே இருக்கிறது பிராமணியத் தீட்டு. 31 வருடங்களில் ஒரு தடவை ஞாநி எழுதியதை நினைவு வைத்துச் சொன்னாரா அல்லது அதுதான் முதல் தடவையாக எழுதியதா என்று தெரியவில்லை. ஞாநி போன்றவர்களுக்கு பிராமணர்கள் என்றதும் நினைவுக்கு வருவது சோ, என்.ராம், குருமூர்த்தி, இல.கணேசன் வகையறாக்கள்தான். அடித்தட்டு மக்கள் நினைவுக்கு வருவதில்லை.

05. மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பிடிபட்டிருக்கும் தீவிரவாதிக்க்கு ராம்ஜெத்மலானி வாதாட முன் வந்ததற்கு ஞாநி பூச்செண்டு கொடுத்திருக்கிறார். மாலேகான் குண்டுவெடிப்பில் இதே போன்றதொரு பூச்செண்டு கொடுக்கப்படுமா என்றேன். நிச்சயம் என்றார். அதுமட்டுமன்றி, தான் தீவிரவாதிகளாக முன்வைக்கும் தொக்காடியா, மோடி உள்ளிட்டவர்கள் நாளை நீதிமன்றத்தில் நிற்கும்போது அவர்களுக்காகவும் சட்ட வக்காலத்து தரவேண்டும் என்றும் சொல்லுவேன் என்றார்.

06. குமுதத்தைக் கடுமையாக விமர்சித்துவிட்டு, மீண்டும் அதில் சேருவது சரியா, இதையே ஓர் அரசியல்வாதி செய்திருந்தால் நீங்கள் சும்மா விட்டிருப்பீர்களா, இப்போது உங்களை நீங்கள் எப்படி விமர்சிப்பீர்கள் என்றேன்.

நீண்ட விளக்கம் ஒன்றைக் கொடுத்தார். ஓரளவு நியாயமான கோபமும், ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களும் இருந்தன. ஆனால் இன்னும் விடையிறுக்கப்படாத கேள்வி ஒன்றிருக்கிறது. குமுதம் படைப்பாளிகளின் உரிமத்தின் மீது கைவைக்கிறது. ஞாநி எதிரிக்கிறார். விமர்சிக்கிறார். ஆவியில் எழுதுகிறார். ஆவியில் பிரச்சினை வருகிறது. விலகுகிறார். குமுதம் எழுத அழைக்கிறது. இவர் நிபந்தனைகள் சொல்கிறார். குமுதம் ஏற்கிறது. இது முன்/பின்கதைச் சுருக்கம். நிபந்தனைகளில்தான் பிரச்சினை. தன் படைப்புகளின் மீதான் உரிமத்தை குமுதம் கட்டுப்படுத்தாது என்ற நிபந்தனை அது. உண்மையில் எல்லா படைப்பாளிக்காகவுமான கேள்வியாக அதை ஏன் ஞாநி எழுப்பவில்லை. பா.செயப்பிரகாசம் ஞாநியின் படைப்பாளிகளின் உரிமம் தொடர்பாக ஆதரவைத் தந்துவிட்டு, அடுத்த சில மாதங்களில் குமுதத்தில் எழுதிவிட்டார். கொஞ்சம் பார்த்தால், ஞாநி எழுதுவதற்கு நான்கு வருடங்களும், செயப்பிரகாசம் எழுதுவதற்கு நான்கு மாதங்களும் மட்டுமே தேவைப்பட்டிருக்கின்றன. பிரேக்கிங் பாயிண்ட். தன் நிபந்தனை தன்னளவில் மட்டும் ஏற்கப்பட்டால் போதுமென்றால், ஞாநி குமுதத்தை எதிர்த்து இத்தனை தீவிரமாகச் செயல்பட்டது தேவையற்றதாகிறது.

07. வடபழனியில் இருந்து வந்திருந்த கோபு என்பவர் கடுமையான கேள்விகளைக் கேட்டார். கடும் கோபம் அவர் முகத்தில் இருந்தது. மோடியைத் தீவிரவாதி என்று சொல்லும் ஞாநி, கம்யூனிஸ்ட் கொலைகாரர்களைப் பற்றி என்ன சொல்கிறார் என்றார். கம்யூனிஸ்ட் பிராடு என்றார். பதிலுக்கு ஞாநியும் ‘நீங்க இங்கேருந்து என்ன பிடுங்குறீங்க’ என்று என்னவோ கேட்டார். கோபு தான் ஹிந்துத்வா இல்லை என்றும், தான் சுதந்திரா கட்சியின் ஆதரவளானகவே இருக்கமுடியும் என்றும் குறிப்பிட்டுக்கொண்டார். அவர் ஞாநியை கம்யூனிஸ்ட் என்றதற்கு, ஞாநி தான் எவ்வாறெல்லாம் கம்யூனிஸ்ட்டுகளை விமர்சித்திருக்கிறேன் என்று சொன்னார். அதன் பின்பும் கோபுவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்த வண்ணமே இருந்தது. முக்கியமாக, மண்டல் கமிஷன் பற்றி ஞாநி பேசியபோது, கோபு ‘மண்டல் கமிஷனுக்கும் மனுதர்மத்திற்கும் என்ன வித்தியாசங்கள்’ என்றார். மீண்டும் பிரச்சினையின் வேருக்குப் போய்விட்ட ஞாநி, மனு செய்த பிரச்சினையின் தீர்வு மண்டல் கமிஷன் என்றார். இன்றைய தீர்வு, நாளைய வர்ணமாக எப்படி மாறாமல் இருக்கும் என்ற கோபுவின் கேள்விக்கு, ஞாநி இன்றையத் தீர்வைப் பற்றித்தான் சொன்னார்.

08. நாடெல்லாம் இஸ்லாமிய அடிப்படைவாதத் தாக்குதல்கள் நடக்க, சென்னை மட்டும் அமைதியாக இருப்பதன் காரணம் தமிழ்நாட்டில் பெரியார் இருந்ததுதான் என்று ஒருவர் திடீரென புல்லரிக்க வைக்க, ஞாநி ஒரு டிப்ளமேடிக்கான பதிலைச் சொன்னார். இன்று பேசும்போது, சென்னையில் குண்டு வெடிக்காததற்கு பெரியாரே காரணம் என்று சொன்னால், அதைக் கேட்பவர்கள் சந்தோஷப்படக்கூடும்; ஆனால் நாளையே குண்டு வெடித்தால் பெரியார் தவறு என்றாகிவிடுமா என்றார். பெரியாருக்கும் இந்த தீவிரவாதச் செயல்களுக்கும் தொடர்பில்லை என்றார். சென்னை அமைதியாக இருப்பதற்குக் காரணம், எல்லா பயங்கரவாத ஆதரவும் சென்னையிலிருந்து செல்வதால் இருக்கலாம் என்றேன். நான் நகைச்சுவையாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு பலர் சிரித்தார்கள். இதிலிருக்கக்கூடிய அரசியல் அவர்களுக்குப் புரிந்தால் நல்லது.

இரண்டு மூன்று இடங்களில் சொதப்பினாலும், மொத்தத்தில் ஞாநி எல்லாக் கேள்விகளையும் நிதானமாகவும் அவரது கருத்தியலுக்கு வலுச்சேர்க்குமாறும் எதிர்கொண்டார். மும்பை குண்டுவெடிப்பில் இறந்த காவல்காரர்கள், முக்கியமாக துக்காராம் பற்றி மிக உயர்வாகப் பேசியவர், இவர்களை நினைவில் வைத்து மும்பையெங்கும் போஸ்டர்கள் ஒட்டி அஞ்சலி செலுத்தியவர்கள், சிவசேனை உள்ளிட்ட கட்சிகளே என்று அரசியல்வாதிகளுக்கு பூச்செண்டு கொடுத்தார். ஞாநியிடம் கேட்பதெல்லாம் ஒன்றுதான். உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது மதத்தோடு தொடர்புடையதல்ல என்றும், அது பொதுவான பயங்கராவதம் என்றும், இந்து முற்படுத்தப்பட்ட சாதிகளில் இருக்கும் அடிமட்ட ஏழைகளைப் பற்றி எழுதுவது முற்போக்குக்குத் தீட்டு என்றும் கருதாமல், இதிலிருக்கும் உண்மையை அவர் பார்க்கமுன்வரவேண்டும் என்பதே. பிரச்சினையின் வேர்கள் நமக்குத் தெரிந்துவிட்டதாலேயே நாம் அவ்விஷயத்தை அப்படியே விட்டுவிடமுடியாது. ஒரிஸாவில் கிறித்துவர்கள் மீதான கலவரங்கள் என்பது இந்து சாமியாரின் கொலைக்கு எதிரானது என்று வேரைக் கண்டுவிட்டு, அதை அப்படியே விட்டுவிடச் சொன்னால் விட்டுவிடுவீர்களா என்ன?

முக்கியமான பிகு: கருணாநிதியைக் கடுமையாக ஏசி ஞாநி ஒன்றுமே பேசாதாததால், லக்குலுக் மனம் வெறுத்துப்போனதாகக் கேள்விப்பட்டேன். உண்மையா எனத் தெரியவில்லை.

தொடர்புடைய சுட்டிகள்:

http://www.writerpara.net/archives/319

http://prathipalipaan.blogspot.com/2008/12/blog-post_16.html

http://www.writermugil.com/?p=202

Share

அடியாள் புத்தக விமர்சனத்திற்கு ஜோதி நரசிம்மனின் பதில்

அடியாள் புத்தக விமர்சனத்திற்கு, ஜோதி நரசிம்மன் உயிரோசை.காமில் தன் பதிலைச் சொல்லியுள்ளார். என் விமர்சனம் அவரைப் புண்படுத்தியிருப்பது புரிகிறது. அவர் கடைசியில் சைன் – ஆஃப் செய்யும்போது பெயரோடு ‘அடியாள்’ என்று போட்டிருக்கவேண்டாம். அடியாள் என்பது புத்தகத்தின் பெயராக இருந்தாலும், என்னவோ உறுத்துகிறது.

http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=596

உயிரோசையில் அடியாள் நூல் விமர்சனம் படித்தேன். நன்றி. என் படைப்பை விமர்சனம் செய்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் என் எழுத்துப்பணி சிறப்படைய உயிரோசை வாழ்த்துவதாகவே உணர்கிறேன். அந்த விமர்சனத்தில் தாங்கள் ஏற்படுத்தியிருக்கும் ஐயத்திற்கு நான் பதில் சொல்−யே ஆக வேண்டும். அது உங்களை சமாதானப்படுத்திக்கொள்ள அல்ல. என்னை செப்பனிட்டுக் கொள்ள.

ஜோதி தான் கண்ட விஷயங்களைச் சொல்கிறார் அதில் எந்தவித வலியும் தெரியவில்லை. தெரிவதில்லை. என்று சொல்லியிருக்கிறீர்கள். எனக்குள் அந்த சம்பவத்தை, வலியை உள்வாங்கிக் கொண்டுதான் அவற்றை வெளிப்படுத்தியுள்ளேன். படிக்கும்போது வலியை உணரவேண்டும் என்று எழுதியிருந்தால் அது சம்பந்தப்பட்டவர்களை ஆறுதல் அடைய செய்யாது. மாறாக கோபம் ஏற்படச் செய்யும். அவர்களை சமூகம் எப்படி குற்றவாளியாக மீண்டும் மீண்டும் பார்க்கிறதோ, அப்படியே நானும் பார்க்க நேரிடும். மாறாக அது எனது பார்வைக்கும் அனுபவத்திற்கும் எதிராக இருக்கும் என்பதால் நீங்கள் சொல்லியிருக்கும் அந்த வலியை எழுத்துகளுக்குள் வைக்கவில்லை. மேலும் ஒரு விசாரணைக் கைதியாக குறைந்த நாட்களிலே என்னை வாசிப்புக்கும், எழுதுவதற்கும் தூண்டியது சிறை அனுபவம். அந்த சிறை எத்தனையோ கைதிகளை மீண்டும் மீண்டும் குற்றவாளியாக உருவாக்கியிருந்தாலும் என்னைப்போன்ற சில சமூக ஆர்வலர்களை உருவாக்கியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. 15 நாட்களில் ஒரு சிறையை முழுமையாக தெரிந்துகொள்ள முடியாது என்பது போல் எழுதியுள்ளீர்கள். அது நான் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்த புத்தகத்தை என்னுடைய எட்டு ஆண்டுகள் அடியாள் அனுபவத்தில் நான் பட்ட அவமானங்களை, துயரங்களை, சொல்லமுடியாத, சகிக்கமுடியாதவைகளின் ஊடாக உணர்ந்து யாரையும் பாதிக்காமல் தொகுத்துள்ளேன். நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல நான் ராஜீவ் கொலையில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டு அரசியல் கைதியாக சிறை செல்லவில்லை. விடுதலைப் பு−களின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற அமைதி பேரணியில் பங்கேற்று தடையை மீறி பேரணிச் செல்ல முயன்று கைது செய்யப்பட்டேன். நான் இருவேறு நிலைகளிலும் 36 நாட்கள் மத்திய சிறையில் இருந்துள்ளேன். ஹரன்பிரசன்னா போன்றவர்கள் ஓரிரு நாளாவது மத்திய சிறைக்கு சென்றால் என்னைவிட மிகுந்த அனுபவம் பெறமுடியும். அடியாளை விட பெரிய தொகுப்பு எழுத முடியும். மூதோர் மொழிபோல சிறை மனிதனை சிந்திக்கவைக்கும் அறைதான்.

ஜோதி நரசிம்மன் (அடியாள்)

Share

எல்லாம் அம்மா செயல்

என்றைக்கு கருணாநிதி வந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாரோ அன்றே தொடங்கிவிட்டது அக்கோயிலின் மீதான ஓர் ஆர்வமின்மை. அதிலும் அக்கோயில் 250 கோடி பட்ஜெட்டில் கட்டப்பட்ட கோவில் என்றபோது அதன் மீதான ஆர்வமின்மை வெறுப்பை நோக்கி நகரத் தொடங்கியது. இதனாலேயே இக்கோவிலுக்குப் போகலாம் என்கிற பேச்சு வந்தபோதெல்லாம், சில எதிர்மறையான காரியங்களைச் சொல்லி தவிர்த்தே வந்தேன். நேற்று அக்கோவிலுக்குச் செல்லவேண்டிய சந்தர்ப்பம் வந்தது. சரி போவோம் என்று போனேன்.

வேலூருக்கு அருகில் இருக்கிறது கோவில். ஸ்ரீபுரம் தொடக்கத்தில் இருந்து எங்கே பார்த்தாலும் நாராயணியும் அம்மாவும் காட்சி தருகிறார்கள். உண்மையில் நான் ஸ்ரீ அம்மா என்று சொல்லியிருக்கவேண்டும். மரியாதையின்மையின் உச்சம் நான் அம்மா என்று மட்டும் சொல்வது. மேல் மருவத்தூரில் அம்மன் முன்பு அம்மா (இது வேறு அம்மா) நின்று அருள் சொல்வதுபோல, நாராயணியின் முன்பு நின்று அம்மா அருள் பாலிக்கிறார். அம்மா என்று அழைக்கப்படுபவர் கிட்டத்தட்ட 32 வயதான ஒரு ஆண். ’அவர் பிறக்கும்போது அவர் முகத்தில் நாமம் இருந்தது. பின்னர் அவர் கடவுளின் குழந்தையாக இல்லாமல் வேறு யாராக இருக்கமுடியும்? அவரைப் பார்த்த சிலர் கண்மூடிக் கண் திறந்தபோது அவர் சிங்கத்தின் மீதிருக்கும் நாராயணியாகக் கண்டார்கள். அவர் நாராயணியின் அம்சம்.’

திருப்பதியை மனதில் வைத்துக்கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள். கொஞ்சம் அதிகமாக உருவாக்கிவிட்டார்கள்! திருப்பதியில் வரும் சின்ன சின்ன எரிச்சல்களெல்லாம் பெரிய அளவில் வருகிறது இங்கே. உள்ளே நுழைந்ததும் கேமரா, செல்ஃபோன் என எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டுவிட்டார்கள். வரிசையில் நின்று, வரிசை மெல்ல மெல்ல நகன்று செல்ல, ஒரு அறையை அடைந்தோம். அங்கே அடைத்துவைத்தார்கள். கொளுத்தும் வெயிலில் நான்கே நான்கு ஃபேன்கள். அங்குள்ள ஒரு டிவியில் அம்மா செய்த யாகங்கள், வேத மந்திர முழக்கங்கள் என எல்லாவற்றையும் வரிசையாகக் காட்டிக்கொண்டிருந்தார்கள். அம்மா ஒரு காவி சால்வையைப் போர்த்திக்கொண்டு, கைகளைக் குறுக்காக கட்டிக்கொண்டு மிடுக்காக நடந்துகொண்டே இருக்கிறார்.

அந்த அறையிலிருந்து திறந்து விட்டார்கள். நடக்க ஆரம்பித்தோம். (உண்மையில் நான் இரண்டு மணிநேரம் கழித்துதான் அடுத்த வரி எழுதவேண்டும். அத்தனை நேரம், அத்தனை தூரம் நடந்தோம்.) நடைபாதை சூரிய சக்கரம், சந்திர சக்கரத்தை உத்தேசித்துக் கட்டப்பட்டதாம். நடந்தோம். நடுவில் தங்கத்தில் கோயில் ஜொலிக்க, நாங்கள் அதை அடைய நடந்தோம். நேரடியாக சடுதியில் அடைந்திருக்கவேண்டிய கோவிலை, சுற்றிச் சுற்றி ஸ்டார் வடிவத்தில் இருக்கும் நடைபாதை வழி நடந்தோம். வழியெங்கும் கற்சிலைகள் அழகழாகப் பூத்திருக்க, திரும்பிய பக்கமெல்லாம் பசும்பூல் போட்டு அதை ஆள் பராமரித்துக்கொண்டிருக்க நடந்தோம். ஒவ்வொரு ஒரு கிமீ தொலைவிற்குள்ளும் நன்கு பராமரிக்கப்பட்ட கழிப்பறைகள். கழிப்பறை சுட்டி அட்டைகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி என எல்லா மொழிகளையும் கொண்டிருந்தன. மலையாளம் காணவில்லை. ஒருவேளை மலையாளிகள் அறிவாளிகளோ என நினைத்துக்கொண்டே நடந்தோம். இன்னும் நடந்தோம். மேலும் நடந்தோம். திடீர் திடீரென நிறுத்தினார்கள். நின்றோம். போகச் சொன்னார்கள், நடந்தோம். வெயில் சுட்டெரித்தது. என் அம்மாவிற்கு மூச்சு முட்டியது. ஆஸ்துமா கேஸ். ஆனாலும் ஆர்வம் குறையவில்லை. தங்கக்கோவிலை அவள் தரிசிக்கும் தருணம் அவளுக்கு முக்கியமானது. எங்களுடன் பல நூறு மக்கள், பல்லாயிரக் கணக்கான மக்கள் நடந்தார்கள். எல்லாருக்கும் ஒருவித ஆர்வம், ஆச்சரியம். மிகக் குறைந்தவர்களுக்கு மட்டுமே பக்தி. இது சுற்றுலாத்தலமா இல்லை கோவிலா என்று தோன்றிவிட்டது. ஒருவழியாக நடந்துமுடிந்து தங்கத்தாலான கோவிலைக் காண உள்ளே நுழைந்தோம்.



தங்கத் தூணையும், தங்கச் சிற்பங்களையும் நீங்கள் எட்டி நின்று பார்க்கலாம். மூல ஸ்தானத்தில் உள்ள தங்க அம்மனை நெருங்க முடியாதபடி நீர் சேர்ந்து நிற்கும் அகழி இருந்தது. நீர் ஆடி ஆடி நீரில் இருந்து வெளிப்படும் சூரிய ஒளி தங்கக்கோவிலின் சுவர்களில் ஒளிக்க, கோவிலின் சுவரே ஆடுவதுபோன்ற அழகும். வெகு அழகுதான். அங்கேயும் சுற்றி சுற்றிப் போகச் சொன்னார்கள். போனோம். திடீரென நிறுத்தி, திடீரென அனுப்பி ஒருவழியாக சந்நிதியை அடைந்தோம்… என்றால், கிட்டத்த மூலஸ்தானத்திலிருந்து 75 அடி தள்ளி நின்று பார்த்துவிட்டுப் போகச் சொல்லிவிட்டார்கள். என் அம்மாவிற்கு வந்த ஏமாற்றம்தான் என்னால் தாங்கமுடியாமல் இருந்தது. மற்றபடிக்கு நான் ஓர் ஆர்வமில்லாமல்தான் நடந்துகொண்டிருந்தேன்.


கடவுளை தரிசித்துவிட்டு வெளியில் வரும்போது ஒரு செயற்கை நீரோட்டம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதில் பெண்கள் தங்கள் வளையலை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை. இப்போதே கூட்டம் குவியத் தொடங்கியிருக்கிற நிலையில், இன்னும் சில வருடங்களில் கூட்டம் குவியப்போகிற நிலையில், வளையல்களை அள்ள தனி காண்டிராக்ட் விட்டாலும் விடுவார்கள்.

ஏகப்பட்ட வளைவுகள். ஏகப்பட்ட நுழைவாயில்கள். ஜொலிக்கிறது கோவில். ஆனால் பக்தர்கள் வெயிலில் அவஸ்தைப் படாமலிருக்க எவ்வித ஏற்பாடுமில்லை. நவதிருப்பதி செல்வோம். அங்கேயும் இப்படித்தான். எவ்வித ஏற்பாடும் இருக்காது. ஆனால் அது குறையாக உறுத்தியதே இல்லை. காரனம் அவையெல்லாம் ஏழைக் கோவில்கள். நாம் பாரம்பரியத்தையும் மரபையும் தொடர்ந்து காப்பாற்றிக்கொண்டு, தன் பெருமையை பறைசாற்றிக்கொண்டு நிற்பவை. அவை கோவில்கள் என்பதைவிட மனசாந்தி தரும் இடங்கள். ஆனால் இது கார்ப்பொரேட் நிறுவனம். கோவில் ஸ்டலில் கட்டப்பட்டிருக்கிறது. அங்கே 250 கோடி செலவளிக்க தகுதி இருக்கிறது. அப்போது மக்களின் கஷ்டத்தையும் நினைவில் வைத்திருக்கலாம். சுட்டெரிக்கும் வெயிலில் கால்கள் பொசுங்க ஓடினோம். பிரசாதமாக சாம்பார் சாதம் தந்தார்கள். அதை வாங்கிக்கொண்டு ஓடினோம். வெளியில் வரும்போது கடும் எரிச்சல் மட்டுமே மிச்சமிருந்தது. கோவில் மனதிற்குத் தந்திருக்கவேண்டிய அமைதி இல்லை. ஒரு கடவுளை தரிசித்த நிலையில் கிடைக்கவேண்டிய ஆனந்தம், புல்லரிப்பு இல்லை. கோவிலில் குங்குமம் கூடவா கொடுக்கமாட்டார்கள்? 250 ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கினால், 50 அடி தொலைவில் அம்மனை தரிசித்துவிட்டு குங்குமம் பெற்றுக்கொள்ளலாம், 500 ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கினால் அம்மனை மிக அருகில் கண்டு குங்குமம் பெற்றுக்கொள்ளலாம்.

எப்படி திருப்பதி இக்கோவிலிருந்து வேறுபடுகிறது? உண்மையில் திருப்பதியோடு இக்கோவிலை ஒப்பிடுவதே நான் பெருமாளுக்கு செய்யும் துரோகம். இருந்தாலும், இக்கோவில் திருப்பதி போன்று வரவேண்டும் என்கிற நினைப்பில் கட்டப்பட்டிருப்பதால் இது தேவையாகிறது.

திருப்பதி கோவில் ஏற்படுத்தப்பட்டதல்ல. மக்கள் அக்கோவிலுக்கு எளிதாகச் சென்றுவர பல்வேறு வழிகளைச் செய்துவைத்திருக்கிறார்கள். இக்கோவில் ஏற்படுத்தப்பட்டது. கூட்டம் வருவதே எண்ணம் என்ற நினைப்பில் செய்திருக்கிறார்கள்.

திருப்பதியில் பெருமாள் மட்டுமே முக்கியம். இங்கே நாராயணியோடு அம்மாவும் முக்கியம். சில சமயங்களில் நாராயணியைவிட அம்மா முக்கியம்.

திருபப்தியிலும் ஸ்பெஷல் தரிசனங்கள் உண்டு. ஆனால் எல்லாரும் ஒரே இடத்தில் இருந்து மட்டுமே கடவுளைக் கும்பிடமுடியும். பணம் என்பது அங்கு நேரத்தைக் குறைக்கமட்டுமே. அன்றி, வழிபாடு செய்யும் இடம் எல்லோருக்கும் பொதுவானதே. இங்கே அப்படி இல்லை. பணம் கூட கூட நீங்கள் நின்று வழிபடப்போகும் இடம் மாறும்.

திருப்பதியில் நீங்கள் எங்கேயும் பக்தியை மட்டுமே தரிசிக்கமுடியும். இங்கே பக்தியைக் கொஞ்சமாகவும், பகட்டையும் ஆடம்பரத்தையும் மட்டுமே தரிசிக்கமுடியும். திரும்பிய பக்கமெல்லாம் அம்மாவின் அருள்வாக்குகள் பல வண்ண fluxகளில் உங்களைத் துரத்துகின்றன. என்னுடன் வந்த பெரும்பாலான மக்கள் ஆச்சரியத்தைப் பற்றி மட்டுமே பேசினார்கள்.

திருப்பதியில் கோவில் என்பது நம் மனதோடு சம்பந்தப்பட்டது. இங்கே கோவில் என்பது ஆடம்பரத்தோடு சம்பந்தப்பட்டது.

திருப்பதியில் நீங்கள் மூலஸ்தானத்தை அடைய நடக்கும்போது, உங்கள் மேல் வெயிலே படாது. ஒரு அறையில் அடைக்கப்படும் நீங்கள், அங்கிருந்து நடக்கத் தொடங்கினால், பின்பு நிற்கவேண்டியது இருக்கவே இருக்காது. இங்கே அப்படி அல்ல. செல்லும் வழியெல்லாம் வெயிலே உங்களை வழி நடத்துகிறது. திடீர் திடீரென நிறுத்துகிறார்கள். நின்று நின்று கால்வலித்து, பின்பு நடந்து கால் வலித்து, எப்போதுடா வெளியில் வருவோம் என்கிற எண்ணம் வந்துவிட்டது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், உள்ளே இருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியில் செல்லலாம் என்கிற நுழைவாயில்களை வைப்பது குறித்துப் போராடலாம். இப்போது நீங்கள் உள்ளே வந்துவிட்டால், சாமி பார்க்காமல் எச்சமயத்திலும் வெளியில் வரவே முடியாது.

இன்னும் சில காலங்களில் அம்மாவின் புகழ் எங்கும் பரவக்கூடும். அவர் பல்வேறு மருத்துவமனைக்கூடங்கள் எல்லாம் கட்டி அக்கிராமத்தையே தன் வசப்படுத்தக்கூடும். ஆனாலும் 250 கோடியில் ஒரு கோவில் இப்போது தேவையா என்கிற கேள்வியை புறக்கணிக்கமுடியாமல்தான் போகும். அம்மாவின் அருள்வாக்குகளில் ஒன்று, இக்கேள்விக்கும் பதில் சொல்கிறது. ‘250 கோடி செலவில் ஒரு கோவிலுக்கு பதிலாக ஏன் மருத்துவமனை கட்டக்கூடாது என்று கேட்கிறார்கள். இப்படி ஒரு கோவில் மூலம் ஆயிரம் ஆயிரம் மருத்துவமனைகள் சாத்தியமாகும்’ என்கிறது அது. எப்படியோ, 250 கோடியில் கோவில் என்பது அம்மாவையே உறுத்தியிருக்கிறது.

250 கோடி எங்கிருந்து வந்தது? யார் பணம்? எனக்குத் தெரியாது. யாருக்குத் தெரியும் என்பதும் தெரியாது. அரசியல் அம்மா ஆட்சிக்கு வந்தால் என்னாகும் என்பதும் தெரியவில்லை. ஆனால் கூட்டம் என்னவோ வந்துகொண்டேதான் இருக்கிறது. அது பக்திக்கான கூட்டமா, தங்கத்தைப் பார்க்கும் கூட்டமா என்று பார்த்தால், இப்போதைக்கு தங்கத்தைப் பார்க்கும் கூட்டம்தான் அதிகம் என்று தோன்றுகிறது. நாளை மாறலாம். இதைக் கொஞ்சம் உருப்படியாக்கி, ஒரு நல்ல கோவிலாக மாற்றலாம். அது அம்மாவின் கையில் இருக்கிறது. தன் புகழை அதிகம் அம்மா நாடிவிட்டால், கோவில் பிந்தங்கிவிடும். அம்மாவை மட்டும் கண்டால் கோவில் கிடையாது என்பதை அம்மா புரிந்துகொள்ளவேண்டும். 250 கோடி முதலீட்டில் எக்காலகட்டத்திற்குமான நிரந்தர வருமானம் என்பது எண்ணமாக இருந்தால், நாராயணிதான் பார்த்துக்கொள்ளவேண்டும். ஆடம்பரமெல்லாம் இருந்தாலும் கடவுள் என்பது எதாலும் தீண்டப்படமுடியாத ஒரு உருதான். அதனுடன் விளையாடுவது பற்றி அம்மாதான் முடிவெடுக்கவேண்டும்.

கோவிலுக்குள் இருந்து வெளியே வருபவர்கள் மனதில் இருக்கவேண்டியது பக்தியும் ஆன்மிகமும். இது இல்லாவிட்டால் கோவில் என்கிற கான்செப்ட்டே அடிபட்டுப்போகும். இப்போதிருக்கும் நிலையில், மதமாற்றக்காரர்கள் அக்கோவிலின் வாசலில் ஒரு கடைபோட்டால், செம விற்பனை ஆகும் என்றுதான் தோன்றுகிறது. எல்லாவற்றையும் நாராயணிதான் பார்த்துக்கொள்ளவேண்டும்.

Share