Archive for பொது

நெய்வேலி புத்தகக் கண்காட்சி – 2009

From neyveli book fair 2009

* கோட்டை போன்ற செட்டுடன் வாசகர்களை அழைத்தது நெய்வேலி புத்தகக் கண்காட்சி. கோட்டையில் உச்சியில் இந்தியக் கொடி கம்பீரமாகப் பறக்கிறது. இது இயக்குநர் சங்கரின் செட்டு போன்று இருக்கிறதா, டீ.ராஜேந்தர் போட்ட செட் போன்று இருக்கிறதா என்று ஒரு பெரிய பட்டிமன்றமே (பாராதான் நடுவர்!) நடைபெற்றது எனக் கேள்விப்பட்டேன். ஆனால் எதற்கு இத்தனை செலவு என்றுதான் புரியவில்லை.

From neyveli book fair 2009

* பத்து நாள்கள் நடைபெறும் புத்தகக் கண்காட்சி இன்றோடு நிறைவுபெறுகிறது. தினம் ஒன்றுக்கு சில குறும்படங்களைத் திரையிட்டு, அதற்கு மாணவர்களை விமர்சனம் எழுதச் சொல்லி, அவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசுகள் வழங்கினார்கள்.


* பரிசுகளை ப்ராடிஜி வழங்கியது. (இது பிராண்ட் பில்டிங் டைம்!)

* சிறப்பு விருந்தினராக பத்ரி சேஷாத்ரியும், பரிசுகளை வழங்கவும் சிறப்புரை ஆற்றவும் லீனா மணிமேகலையும் கலந்துகொண்டார்கள்.

* எழுத்தாளர் ஷோபா சக்தி பார்வையாளராக வந்திருந்தார்.

* விழா ‘கனவு கீர்த்தனை’ என்னும் குறும்படத்துடன் தொடங்கியது. மிகச் சிறப்பான குறும்படம் என்று சொல்லம்முடியாவிட்டாலும், எந்நாளும் செல்லுபடியாகக்கூடிய பாரம்பரிய செண்டிமெண்ட்டான இந்தியத் தாத்தா- யூ.எஸ். பேத்தி கலாசார வேறுபாட்டை உணர்வுபூர்வமாகக் காட்டியது.

From neyveli book fair 2009

* அடுத்ததாக லீனா மணிமேகலையின் ’தேவதைகள்’ குறும்படம் திரையிடப்பட்டது. ஒப்பாரி வைக்கும்/மரணத்துக்கு நடனமாடும் ஒரு பெண், கடலில் சிப்பிகள் எடுத்து மாலை கோர்த்து வாழ்க்கையை நடத்தும் பெண், சுடுகாட்டில் பிணத்தை எரிக்கும் பெண் என மூன்று பெண்களின் வாழ்க்கையை யதார்த்தமாக மிக அருகில் இருந்து காண்பித்தது இக்குறும்படம். பின்பு மேடையில் பேசிய அனைவருமே இக்குறும்படம் தந்த அதிர்வைப் பற்றிப் பேசினார்கள். இக்குறும்படத்துக்குப் பின்னே ஏதேனும் அரசியல் இருக்குமோ என்கிற எண்ணத்துடனே பார்த்தேன். எனக்குத் தெரிந்து எவ்வித அரசியலும் இல்லை. பெண்ணியப் பிரதி என்கிற வகையில் இக்குறும்படம் மிக முக்கியமானதே. சிறப்பாகவும் இருந்தது. செயற்கையாக நடந்த சில காட்சிகளைக்கூட மிகவும் யதார்த்தமாக மாற்றியதில் லீனா மணிமேகலையின் சாமர்த்தியம் தெரிந்தது.

From neyveli book fair 2009
From neyveli book fair 2009
From neyveli book fair 2009

* பத்ரி, லீனா மணிமேகலை உள்ளிட்டவர்கள் பேசினார்கள். போட்டியில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

* ஷோபா சக்தியை மேடைக்கு அழைத்துப் பேசச்சொன்னார்கள். அவர் தனக்கு அளிக்கப்பட்ட கௌரவத்துக்கு நன்றி சொன்னார்.

* ‘நான் இரண்டு நிமிடங்கள் பேசலாமா’ என அனுமதி வாங்கிக்கொண்டு, சாமிநாதன் என்கிற உள்ளூர் எழுத்தாளர் பேசினார். நாடகங்கள் நடத்திய அவர் சில குறும்படங்கள் எடுத்ததாகவும், நிலவுக்கு எத்தனை பேர் போனாலும் ஆம்ஸ்டிராங்கின் பெயர் நிலைத்திருப்பது போல எத்தனை குறும்பட விழா நடத்தினாலும் நெய்வேலியில் முதல் குறும்படம் எடுத்த தனது பெயர் நிலைத்திருக்கும் என்றும், இதுவரை நான்கு வருடங்கள் குறும்படப் போட்டியில் வெல்லவில்லை என்றாலும் தொடர்ந்து முயல்வேன் என்றும் பேசிவிட்டுச் சென்றார்! அரங்கம் கொஞ்சம் கலகலப்பாகியது!

* மீண்டும் கண்மணி என்ற குறும்படம் திரையிடப்பட்டது. இரண்டாவது பெண் குழந்தையைக் கலைக்கச் சொல்லும் குடும்பத்தை மீறி ஒரு பெண் தனது பெண் குழந்தையை வளர்க்க முடிவெடுக்கும் ஒரு கதை. எவ்வித காரணமும் இல்லாமல் எப்படி அந்தப் பெண் திடீரென்று பெண் குழந்தையைக் கலைக்காமல் இருக்க முடிவெடுக்கிறாள் என்றெல்லாம் சரியாகச் சொல்லாமல் மிக மேம்போக்காக இருந்தது இக்குறும்படம்.

* இத்துடன் கூட்டம் இனிதே முடிவு பெற்றது.

* மிகவும் முயற்சி எடுத்து ஒரு புத்தகக் கண்காட்சியை ஒட்டிப் பல நிகழ்வுகளையும் சேர்த்துச் செய்ய நினைக்கும் நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.

From neyveli book fair 2009

* திடீரென்று ஷோபா சக்தியை மேடைக்கு அழைத்து அவரை நெளியச் செய்தது போன்ற சிலவற்றைத் தவிர்க்கவேண்டும், அல்லது முதலிலேயே அவரிடம் சொல்லி அவரையும் ஆயத்தப்படுத்தியிருக்கவேண்டும். இதெல்லாம் மிகமிகச் சிறிய குறையே.

* நானும் பத்ரியும் ஒரு மணி நேரம் நெய்வேலி புத்தகக் கண்காட்சியைச் சுற்றிப் பார்த்தோம். பலர் பத்ரியிடம் பேசினார்கள். ஒருவர் ஜெஃப்ரி ஆர்ச்சரின் புத்தகங்கள் எப்படி விற்பனை ஆகின்றன என்று கேட்டார். இன்னொருவர் ‘உங்களை டிவியில் பார்த்தேனே’ என்றார். கிழக்கு புத்தக அரங்கில் சிறிது நேரம் நின்றிருந்தோம். கூட்டம் வரத் தொடங்கியிருந்தது. விதிகள் புத்தகங்கள், பிராபகரன் புத்தகங்கள் தொடர்ந்து விற்பனை ஆகிக்கொண்டே இருந்ததைப் பார்க்க முடிந்தது.

* இரண்டு மணிக்கு சென்னைக்கு வண்டியேறினோம். ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்தேன். மகன் கேரம்போர்டு விளையாடலாமா என்றான். என் மனைவி காஃபி கொடுத்தாள். சர்க்கரை அளவு கூடுதலாக இருந்தது. (இந்தக் குறிப்பு எதற்கென்றால், என்றேனும் எனது இக்குறிப்புகளையெல்லாம் சேர்த்தெடுத்து ‘பாஸ்கரதாஸின் குறிப்புகள்’ போல புத்தகமாக வெளியிட்டால், மிகவும் உதவியாக இருக்கும். அதற்காகத்தான்.)

* நெய்வேலி புத்தகக் கண்காட்சி பற்றி வலைப்பதிவுலகில் ஒன்றுமே இல்லையா என்கிற அவப்பெயரை நீக்குவதற்காகவே இப்பதிவு எழுதப்பட்டிருக்கிறது. வாழ்க வலைப்பதிவர் ஒற்றுமை, ஓங்குக வலைப்பதிவுகளின் புகழ். எனவே இப்பதிவைப் படிப்பவர்கள் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பதை மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ளுமாறு இறைஞ்சுகின்றேன்.

* புத்தகக் கண்காட்சியில் நான் ஒரு புத்தகம் கூட வாங்காமல் வந்தது நல்ல சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது. மீண்டும் அடுத்த புத்தகக் கண்காட்சியில் சந்திப்போம்!

(படங்களைப் பெரியதாகப் பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்.)

Share

சிறுமை கண்டு சீறுவாய் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் (கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம்)

அ.கி. வேங்கட சுப்ரமணியன் (ஐ.ஏ.எஸ். ஓய்வு) தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிப் பேசினார். எவ்வித தடங்கலுமின்றி எளிமையான தமிழிலும், ஆங்கிலத்திலும் கலந்து பேசினார். இந்தியாவில் சட்டங்களுக்குக் குறைவே இல்லை என்றும், ஆனால் பெரும்பாலான சட்டங்கள் பயன்படுத்தப்படாமலும், செயல்படுத்தப்படாமலும் வெறுமனே கிடக்கின்றன என்றும், ஒரு சட்டத்தை உயிரோடு வைத்திருக்கும் பொறுப்பு மக்களுக்கே உள்ளது என்றும் தெரிவித்தார். அ.கி. வேங்கிட சுப்ரமணியனின் பேச்சு வெறும் ’பேச்சு வகை’ சார்ந்ததல்ல. களப்பணியில் இருக்கும், பாஸிட்டிவ் திங்கிங்க் உள்ள, நாட்டை நம்மால் திருத்தவும் நேராக்கவும் முடியும் என்ற நம்பிக்கை கொண்ட மனிதன் ஒருவனின் உள்ளப் பேச்சு.

”சமூக சம்ச்சீரின்மைக்கும், சமூகக் குறைபாடுகளுக்கும் பொறுப்பேற்கவேண்டிய அரசு, தனது செயல்களை வெளிப்படையாகச் செய்யவும், செய்த செயல்களுக்குப் பொறுப்பேற்கவும் இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் கட்டாயப்படுத்துகிறது. கேள்வி கேட்டால் நாளை நம்மை என்ன செய்வார்களோ என்கிற பயம் இருந்தால், நம்மால் ஒன்றுமே செய்யமுடியாமல் போய்விடும். ஆனால் இந்த பயம் அவசியமற்றது. நாம் தொடர்ந்து கேள்விகளைக் கேட்பதன் மூலம், பல்வேறு செயல்களை வெளிக்கொண்டுவர முடியும். கேள்விகள் கேட்பது செய்திகளை அறிந்துகொள்ள மட்டுமே என்ற அளவில் நின்றுவிடாமல், அடுத்த அந்த பதில்களை வைத்துக்கொண்டு என்ன செயலைச் செய்யப் போகிறோம் என்று முடிவெடுத்துக்கொள்வது நல்லது.

“நாம் நம் பகுதியில் உள்ள மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகளுக்குச் சென்றிருக்கிறோமா? நாம் செலுத்தும் வரியில் ஒரு பகுதி இப்பள்ளிகளுக்குச் செல்லுகிறது. அப்படியிருக்கும்போது நம் பகுதியில் உள்ள பள்ளிகள் எப்படிச் செயல்படுகின்றன என்று நாம் ஒருபோதும் சிந்திப்பதில்லை? திருநெல்வேலியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி அறிந்த ஒரு செய்தி இது. கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய் பணம், மக்கள் பணிக்காக ஒதுக்கப்பட்டது, செலவழிக்கப்படவே இல்லை. ஆனால் அந்த ஊரில் அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகள் பல இருக்கின்றன. அதேபோல், திருநெல்வேலியில் வசூலிக்கப்படாத தொகை 12 கோடி ரூபாய். இதுவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட செய்தி. இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து, அந்தப் பணத்தை எப்படி திறம்பட செயல்படுத்துவது என்று சில யோசனைகளைச் சொன்னோம்.

“திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ஒரு நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு 2002லிருந்து சம்பளமே வழங்கப்படவில்லை. இதுவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பெறப்பட்ட செய்திதான். அப்படியானால் எப்படி அவர்கள் தொடர்ந்து வேலை செய்கிறார்கள்? தூத்துக்குடி வேப்பலோடை பகுதியில் தொடர்ந்து லாரிகள் மணல் அள்ளிக்கொண்டிருந்தன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, லாரி அள்ளுவதற்கான முறைமைகள் பெறப்பட்டன. அந்த ஊர் மக்கள் அடுத்தமுறை லாரி வந்தபோது அதை தடுத்து நிறுத்தினார்கள். முறைமையின்படி அந்த லாரி மணல் அள்ள முடியாது என்று போராடினார்கள். இதனால் மணல் அள்ளுவது தடுக்கப்பட்டது. ஆனால், வேறு ஊரின் வழியாகச் சென்று மணல் அள்ளத் தொடங்கினார்கள். இப்போது அந்த ஊரையும் நாம் விழிக்கச் செய்யவேண்டியிருக்கிறது. ஒருவர் பெறும் தகவல் என்பது அவருக்கு மட்டுமானது என்று நின்றுவிடாமல், அதனை எல்லோருக்குமானதாக மாற்றுவதற்கான விழிப்புணர்வு வரவேண்டும்.

“தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது சர்வ ரோக நிவாரணி அல்ல. இது உங்களுக்குத் தகவலை மட்டுமே வழங்கும். பெரிய பெரிய விஷயங்களை எல்லாம் நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறுகிறேன் என்பதைவிட, நம் வாழிடத்தில் இருக்கும் பள்ளிகள், நியாய விலைக்கடைகள், மருத்துவமனைகளில் என்ன நடக்கிறது என்பதற்கான தகவல்களைப் பெறத் தொடங்கினாலே போதும், ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பொது ஆர்வலர்கள், சமூகப் பணியாளர்கள் இன்னும் கையிலெடுத்துக்கொள்ளவில்லை. தனிமனிதர்களைவிட இவர்கள் கையில் இச்சட்டம் செல்வது அதிகப் பயனைத் தரும். இச்சட்டம் அரசியல்வாதிகளால் கொண்டுவரப்படவில்லை. மாறாக, சமூக நல ஆர்வலர்களால் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தை தொடர்ந்து உயிரோடு வைத்திருப்பது நம் கையில் உள்ளது.”

பின்பு கேள்வி நேரம் துவங்கியது. முதல் கேள்வியைக் கேட்டவர், பயமின்மை என்பது யதார்த்ததில் சரியாக வராது என்று கூறினார். ஆனால் அதை அகிவே ஏற்கவில்லை. கேட்கப்படும் கேள்விகள் சிலவற்றிற்கு தகவல் இல்லை என்று அரசு பதில் சொல்லமுடியுமா என்று கேட்டேன். உண்மையில் தகவல் இல்லை என்றால் இல்லை என்று கூறலாம் என்று சொன்னார். அவர் பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷனில் சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார். சேது சமுத்திரத் திட்டத்தால் எத்தனை கிலோமீட்டர் பயணம் குறையும், அதனால் பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷன் அடையும் லாபம் எவ்வளவு போன்ற கேள்விகள் என நினைக்கிறேன். அவற்றிற்குத் தங்களிடம் பதில் இல்லை என்று பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷன் தெரிவித்துவிட்டதாகச் சொன்னார். இன்னும் நிறைய பேர் கேள்விகளைக் கேட்டார்கள்.

அகிவே குடிமக்கள் முரசு என்றொரு மாத இதழை நடத்திவருகிறார். அவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறும் தகவல்களை அவற்றில் வெளியிடவும் செய்கிறார். குடிமக்கள் முரசு-வில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பை (வேறு பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளும் அடங்கிய தொகுப்பு) கிழக்கு பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. அவர் எழுதிய மக்களாகிய நாம், கட்சி ஆட்சி மீட்சி புத்தகங்களை nhm.in/shopல் ஆன்லைனில் வாங்கலாம். நான் குடிமக்கள் முரசுவுக்கு சந்தாதாரராக நினைத்துள்ளேன். அதன் முகவரி: உந்துநர் அறக்கட்டளை, எண் 8, 4-வது தெரு, வெங்கடேஸ்வரா நகர், அடையாறு, சென்னை 600 020, தொலைபேசி: 2446-5601. விருப்பப்பட்டவர்கள் நேரடியாக சந்தா செலுத்திக்கொள்ளலாம்.

இந்தக் கூட்டம் சொன்னது என்ன? மக்கள் செயல்படவேண்டும் என்பதே. அரசியல்வாதிகளின் எல்லா ஊழலுக்கும் நாம் பழகிப்போய்விட்டோம். ஒரு செயலுக்கான முறைமைகளைக் கண்டறிந்து, அதன்படி செயல்பட நாம் நம்மை வழக்கப்படுத்திக்கொள்வதும், நம் அரசை செயல்பட வைக்க இயன்றவரை முயல்வதுமான விழிப்புணர்வே இன்றையத் தேவை. ஒரு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் செய்தியைப் பெற்றுப் போராடுவதைவிட, எப்பகுதியில் பிரச்சினை உள்ளதோ, அப்பகுதி மக்கள் தத்தம் கோரிக்கைகளுக்காகப் போராடுவது நல்ல பலனளிக்கிறது என்று அனுபவத்தில் கண்டதைப் பதிவு செய்கிறார் அகிவே. இதுவே இக்கூட்டம் சொல்லும் செய்தி.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மக்கள் பயன்படுத்துவது என்கிற நோக்கிலேயே இதுவரை இச்சட்டமும் அதன் பயன்பாடுகளும் அணுகப்பட்டிருக்கின்றன. இச்சட்டத்தை வரைவு செய்யுமுன்பு, இதனைச் செயல்படுத்த போதுமான பணியாளர்கள் நம்மிடம் உள்ளார்களா என்பது பற்றிய ஆய்வு செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை. அரசு பணியாளர்கள் பெரும்பாலானவர்கள் லஞ்சம் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதால், அவர்களைக் கஷ்டத்துக்குள்ளாக்கும் எந்த ஒரு செயலும் நம்மை மகிழ்விக்கவே செய்கிறது. இச்சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவந்த பின்பு, அரசு அலுவலர்கள் அடையும் இன்னல்கள் பற்றியும் யோசிக்கவேண்டும். நிச்சயம் இச்சட்டம் பயனுள்ளது என்பது பற்றி சந்தேகம் இல்லை. ஆனால் இச்சட்டத்தின்படி எக்கேள்விகளையும் கேட்கலாம் என்பதும், 30 நாள்களுக்குள் பதில் சொல்லவேண்டும் என்பதும், எத்தனை கேள்விகளை வேண்டுமானாலும் கேட்கலாம் என்பதும், அரசு அலுவலர்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. இச்சட்டத்தின் அடிப்படையில் கேட்கப்பட்ட நிறைய கேள்விகள் கிறுக்குத்தனமானவை என்று ஓர் அரசு ஊழியர் சொன்னார். தகவல் இல்லை என்று பதில் சொன்னால், இதற்கான ஆணையம் அந்த பதிலை ஏற்பதில்லை என்றும், அது தொடர்ந்து மக்கள் பிரதிநிதியாகவே செயல்பட்டு, அரசு ஊழியர்களுக்கு மேலும் மேலும் ஆணைகளை வழங்கிக்கொண்டிருக்கிறது என்றும் அவர் வருத்தப்பட்டார். கேள்விகளுக்கான வரைமுறைகளை உருவாக்கவேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார். திருநெல்வேலியில் எத்தனை வீடுகள் இத்தனை சதுர அடிக்கு மேற்பட்டவை என்று ஒருவர் பொத்தாம் பொதுவாகக் கேள்வி கேட்டால், அதற்கு 30 நாள்களுக்குள் எப்படி பதில் சொல்லமுடியும்? கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களாகக் கணினி மயமாக்கப்பட்டிருக்கலாம். அதற்கு முன்பு உள்ள தகவல்களைத் தேடித்தான் தரமுடியும். அந்த வேலைகளை யார் செய்யப்போகிறார்கள்? இந்தச் சட்டத்தின் தேவை கருதி எத்தனை பேர் புதியதாக வேலைக்குச் சேர்க்கப்பட்டார்கள்? – இவையெல்லாம் அரசு ஊழியர்களின் கேள்விகள். நமக்கு அரசு ஊழியர்களைப் பிடிக்காது என்பதாலேயே அவர்களின் கேள்விகள் நியாயமற்றவை என்று சொல்லிவிடமுடியாது. அரசு ஊழியர் ஒருவரின் துணையோடு சில கேள்விகளை, இச்சட்டத்தின் அடிப்படையில், தகவல் ஆணையரிடம் கேட்டுள்ளேன். 30 நாள்களுக்குள் என்ன பதில் கிடைக்கிறது என்று பார்க்கலாம். இதேபோல் இன்னும் நிறையக் கேள்விகள் கேட்கப்படவேண்டியிருக்கின்றன. அவற்றைப் பொதுவில் வைப்பதே முதல் நோக்கம்.

பின்குறிப்பு: சீமான், விவேக், தா.பாண்டியன், கருணாநிதி உள்ளிட்ட பலரின் இயற்பெயர், தாய்மொழி என்ன, சோனியா கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தாரா, அர்ஜூன் சம்பத் ஏன் பாஜகவில் இருந்து ஏன் விலகினார் என்றெல்லாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்போகிறேன் என்று சொல்லி, என்னை அசரச் செய்த நண்பரின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன!

Share

தாய்மொழியும் தாய்நாட்டின் மொழியும்

சம்ஸ்கிருதம் படிக்கவேண்டும் என்கிற ஆசை எனக்கு எழுந்த நேரத்தில், கடந்த புத்தகக் கண்காட்சியில் விஜயபாரதம் ஸ்டாலில் ‘பத்து நாளில் சம்ஸ்கிருதம் பேசும்’ ஒரு கோர்ஸைப் பற்றிய பிட் நோட்டிஸ் பார்த்தேன். பத்து நாளில் சம்ஸ்கிருதம் எப்படி பேசமுடியும் என்கிற எண்ணம் வந்தாலும், சேர்ந்துவிட்டேன்.

தி.நகர் சாரதா வித்யாலயாவில் நடந்த வகுப்புக்கு முதல்நாள் சென்றபோது என்னுடன் வந்த நண்பனிடம் ‘பத்து பேர் இருந்தா அதிகம்’ என்று சொல்லிக்கொண்டு போனேன். அங்கு இனிய அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டு வகுப்புகள். ஒவ்வொரு வகுப்பிலும் நாற்பது மாணவர்களுக்கும் மேல். நடக்கமுடியாமல் தள்ளாடி நடந்துவந்த வயதான மனிதரிலிருந்து, தமிழே இன்னும் சரியாகப் பேசத் தெரியாத சிறுவர் வரை. ‘படத சம்ஸ்கிருதம்’ என்று பாடலோடு தொடங்கிய வகுப்பில், ஆசிரியர் எடுத்த எடுப்பில் ‘பவத: நாம கிம்?’ என்று தொடங்கினார். ஆசிரியர் என்றால், வயதாகி குடுமி போட்டுக்கொண்டு நாமத்தோடு வெற்றிலை குதப்பிக்கொண்டு வாயில் எச்சிலோடு பேசும் ஓர் உருவத்தை சட்டெனக் கலைத்தார் முரளி. கணினி மென்பொருள் வல்லுநரான முரளியின் வயது 24. குடுமி இல்லை. ஆனால் நீண்ட கூந்தலுடன், தமிழையோ ஆங்கிலத்தையோ உதவிக்கு அழைக்காமல், எடுத்த எடுப்பில் ‘பவத: நாம கிம்?’ என்றார்.

நாம் பேசிக்கொண்டிருக்கும் ஒரு மொழியின் உதவியின்றி, இன்னொரு புதிய மொழியை கற்றுவிடமுடியும் என்று நான் நம்பியிருக்கவில்லை. ஆனால் ஸ்ம்ஸ்க்ருத பாரதியின் அடிப்படையே, சம்ஸ்கிருதத்தை அம்மொழியின் வாயிலாகவே கற்றுத்தருவதே அன்றி, வேறொரு மொழியின் வாயிலாக அதைக் கற்றுத் தருவது அன்று என்பதை அந்த முதல் நாளிலேயே புரிந்துகொண்டேன். நாம் நம் தாய்மொழியை வேறு எந்த ஒரு மொழியின் உதவியின்றித்தான் படித்திருக்கிறோம் என்று யோசித்துப் பார்த்தேன். அப்படி ஒரு உள்ளார்ந்த மொழியாக சம்ஸ்கிருதத்தை நிறுவவே இப்படி ஒரு முயற்சி என்பது புரிந்தது. ஹிந்தி தெரியாமல் இருந்தால் நல்லது என்று ஏற்கெனவே முரளி சொல்லியிருந்தார். அதன் காரணமும் அங்கே விளங்கத் தொடங்கியது. பத்து நாள்களும் அங்கே பயன்படுத்தப்பட்ட ஆங்கில, தமிழ் வார்த்தைகள் பத்தைத் தாண்டியிருந்தால் அதிசயம். பத்தாவது நாளில் எல்லோரும் சம்ஸ்கிருதத்தில் பேச முயற்சித்தார்கள்.

சம்ஸ்கிருதத்தில் பேசுவது என்றால், சம்ஸ்கிருத விற்பன்னராகப் பேசுவது அல்ல. இதன் அடிப்படையையும் மிகத் தெளிவாக திட்டமிட்டிருந்தது சம்ஸ்கிருத பாரதி. ஒரே விகுதியோடு முடியும் வார்த்தைகள் (கஜ:, வ்ருக்ஷ:, புத்ர:, ராம: என்பது போல) என்று எடுத்துக்கொண்டு, அவற்றோடு வேற்றுமை உருபுகள் சேரும்போது அவை எப்படி மாறுகின்றன என்பதை அடிப்படையாகக்கொண்டு (ராமன் + இன் = ராமனின்  ராம: + அஸ்ய = ராமஸ்ய என்பதைப் போல) எளிமையாக நடத்தினார்கள். Present tense, Past tense, Future tense மட்டுமே சொல்லித்தந்தார்கள். இதை வைத்துக்கொண்டு கதை சொன்னார்கள். இதை அடிப்படையாக வைத்து எளிமையான வாக்கியங்கள் சொல்லச் சொன்னார்கள். இதை வைத்துக்கொண்டு எளிமையான பேச்சை நிகழ்த்தினார்கள். இதன் வழியே, சம்ஸ்கிருதம் கற்பது கடினமானதல்ல என்கிற எண்ணத்தை மெல்ல வளர்த்தெடுத்தார்கள்.

சிறுவர்களின் வேகம் பிரமிக்கத்தக்கதாய் இருந்தது. பதினைந்து வயது சிறுவனின் நினைவாற்றலை எட்டிப்பிடிப்பது எனக்கு சற்று சிரமமாகத்தான் இருந்தது. காரணம், நான் எந்த ஒரு சம்ஸ்கிருத வார்த்தையையும் அதோடு தொடர்புடைய பொருளின் வழியாகவே அடைய முயன்றேன். ஆனால் சிறுவர்களோ சம்ஸ்கிருத வார்த்தையை அவ்வார்த்தை மட்டுமானதாகவே கண்டடைந்தார்கள்.

சம்ஸ்கிருதம் படிப்பதைத் தவிர்த்து இவ்வகுப்புகள் பல நல்ல நினைவுளைக் கொண்டுவந்து சேர்த்தன. கிட்டத்தட்ட பதினோரு வருடங்களுக்குப் பிறகு ஒரு மாணவனாக வகுப்பில் அமர்வது என்பதே பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. நியூ ஹொரைசன் மீடியாவின் ப்ராடிஜி பதிப்பகத்தின் சார்பாக, பள்ளிகளில் சூடாகும் பூமி (Global warming) பற்றிய வினாடி வினா எழுத்துத் தேர்வு நடத்தியபோது பல பள்ளிகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. வகுப்புகளில் மாணவர்கள் அமர்ந்திருப்பதையும், எவ்வித தன்முனைப்பும் இன்றி, ஆசிரியரே எல்லாமும் என்கிற எண்ணத்தோடு அவர்களோடு பேசியதையும் பெரும் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் ஒரு பகுதி இந்த சம்ஸ்கிருத வகுப்பில் அடித்துச்செல்லப்பட்டதாக உணர்ந்தேன்.

இவை போக, சக ‘மாணவ நண்பர்கள்’ தந்த அனுபவங்கள். என் பக்கத்து நண்பருக்கு வயது 60தான் இருக்கும். ‘வாக்கிங்க்குக்கு வாக்கிங்கும் ஆச்சு, சம்ஸ்கிருதமும் ஆச்சு பாருங்க’ என்றார். இன்னொருவர், ‘இப்படி தமிழும் சொல்லாம இங்லீஷும் சொல்லாம சொல்லித் தந்தா என்ன புரியறதுன்றீங்க? நான் சொல்லிட்டேன். நேரா சொல்லிட்டேன். கேப்பாங்களான்னு தெரியலை’ என்றார்.

பத்தாம் நாள் நிறைவு நாளில் இரண்டு சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். அவர்கள் பேசியதில் எனக்கு பல கருத்துகள் உடன்பாடில்லாதவை. ஆனால் இதுபோன்ற வகுப்புகளில் இவற்றைத் தவிர்க்கமுடியாது என்று நினைத்துக்கொண்டேன். பல மாணவர்கள் சம்ஸ்கிருதத்தில் நகைச்சுவை கதைகள் சொன்னார்கள். அனுபவக் கதைகள் சொன்னார்கள். சிறிய நாடகங்கள் நடத்தினார்கள். எல்லாமே சிறந்தவை என்று சொல்லமுடியாது. ஆனால் ஒரு எல்கேஜி, யூகேஜி மாணவர்களாக அவர்களைக் கற்பனை செய்துகொண்டால், அவர்களின் நிகழ்ச்சிகள் அற்புதமானவை என்றே சொல்லவேண்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், அஹம் ஏகம் ஹாஸ்ய கதாம் உக்தவான்! (நான் ஒரு நகைச்சுவைக் கதை சொன்னேன்!)

சம்ஸ்கிருதத்தின் பெருமைகளையும், அது எவ்வாறு இந்தியாவோடு தொடர்புகொண்டுள்ளது என்பதையும் ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு நாளும் விளக்கிச் சொன்னார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு குட்டிக் கதை சம்ஸ்கிருதத்தில் சொன்னார்கள். இந்தக் கதைகளின் போது அங்கிருந்த அனைத்து மாணவர்களும் அடைந்த குதூகுலம் இப்போதும் நினைவிலிருக்கிறது. இதன் வழியே கொஞ்சம் யோசித்தால் எப்படி ரஜினி, ஜாக்கிசான் போன்றவர்கள் குழந்தைகளைப் போலவே பெரியவர்களையும் கவர்கிறார்கள் என்பதைக் கண்டடையலாம் என நினைத்துக்கொண்டேன்.

ஒரு பதினைந்து வயது மாணவன் இதுபோன்ற வகுப்பினால், இந்தியப் பற்றையும், புராணக் கதைகளின் பரீட்சியத்தையும் பெறமுடியும். பின்னாளில் இவற்றை அவன் கைவிட நேர்ந்தாலும், இதைத் தெரிந்துகொண்டு புறக்கணிப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும். புராணக் கதைகள் சொல்லப்பட்டபோது, பல கதைகளை என்றோ கேட்ட நினைப்பிலேயே கேட்டுக்கொண்டிருந்தேன். இனி இக்கதைகள் எல்லாம் எப்படி நம் அடுத்த தலைமுறைக்குச் செல்லும் என்கிற சோகம் எழுந்தது. கதை சொல்லும் நேரத்தை நம் தொலைக்காட்சிகள் எந்த அளவு திருடிக்கொண்டுவிட்டன என்பதும் புரிந்தது. நான் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும், என் கணிசமான நேரத்தை என் மகனோடு செலவழிக்கவே விரும்புவேன். அதில் கதை சொல்லலும் அடங்கும். கதை என்றால் நானாக உருவாக்கிய கதைகள். புலியும் ஆடும் மாடும் மயிலும் குரங்கும் டைனசோரும் உலவும் கதைகள். இந்த சம்ஸ்கிருத வகுப்புகள் விளைவாக, இனி என் மகனுக்கு புராணக் கதைகளையும், மரியாதை ராமன், தெனாலி ராமன் கதைகளையும் கண்ணன் கதைகளையும் சொல்லலாம் என்றிருக்கிறேன். இவ்வகுப்பில் சொல்லப்பட்ட இரண்டு கண்ணன் கதைகளை என் மகனுக்குச் சொன்னபோது, அவன் அடைந்த குதூகலம் வார்த்தையில் சொல்லமுடியாதது. முதல்வேலையாக எனி இந்தியனில் சில புத்தகங்களை ஆர்டர் செய்தேன்.

சம்ஸ்கிருதம் சொல்லித்தந்த ஆசிரியர் ஒருவர் இப்படிச் சொன்னார். “உங்கள் தாய் மொழி என்ன? சம்ஸ்கிருதமா? இல்லை. தமிழ். உங்கள் தாய்மொழி? மலையாளம். உங்களது? துளு. ஒரு சம்ஸ்கிருதம் சொல்லித்தரும் ஆசிரியர் எப்படி சம்ஸ்கிருதத்தை தாய்மொழியல்ல என்று சொல்லமுடியும் என்று யோசிக்கிறீர்களா? இப்போது சொல்கிறேன். சம்ஸ்கிருதமும் உங்கள் தாய்மொழிதான். உங்கள் தாய் உங்களுக்குச் சொல்லித் தரும் தாய்மொழி தமிழாகவோ, மலையாளமாகவோ இருக்கட்டும். உங்கள் இன்னொரு தாய் பாரதத் தாய். அவளின் மொழி சம்ஸ்கிருதம்.” எந்த ஒரு மொழியையும் புறக்கணிக்காத இந்த அணுகுமுறையே நிச்சயத் தேவை. என் தாய்மொழி தமிழ். என் தாய்நாட்டின் மொழி சம்ஸ்கிருதம் என்று இருப்பதில்தான் என்ன தவறு இருந்துவிடமுடியும்?

ஸம்ஸ்க்ருத பாரதியின் தொலைபேசி எண்: 044-28272632. மின்னஞ்சல் முகவரி: samskritabharatichn@yahoo.com. இதைத் தொடர்புகொள்வதன் மூலம் அடுத்த சம்ஸ்கிருத வகுப்புகளைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளமுடியும்.

நன்றி: தமிழ் ஹிந்து வலைத்தளம் (தமிழ் ஹிந்துவில் வந்த இந்தக் கட்டுரையை விஜயபாரதம் தனது இதழில் பிரசுரித்திருந்தது.)

Share

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (இறுதி நாள்)

பதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009

சென்னை புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளான நேற்று மிக நல்ல கூட்டம் இருந்தது. நல்ல விற்பனையும் இருந்தது. இரவு 8.30க்கு முடியும் புத்தகக் கண்காட்சியை 9.30 வரை நீட்டித்தார்கள்.

கிழக்கு அரங்கில் பில் போட்டுக்கொண்டிருக்கும்போது ஞாநி வந்தார். புக் வேணுமா சார் என்றதும், ‘தினமும் உங்களைப் பார்த்தா உங்க ப்ளாக்ல என்னைப் பத்தி எழுதுவீங்கன்னு தெரியாம போயிடுச்சு. இன்னைக்கு பார்த்துட்டேன். எழுதிடுங்க’ என்றார். ‘சார், நீங்க வேற சார்’ என்றேன். ‘ரெண்டு நாள் வராம விட்டுட்டேன்’ என்றார் ஞாநி. இரவு புத்தகக் கண்காட்சி முடிந்து கிளம்பும்போது மீண்டும், ’பார்த்துட்டேன், மறந்துடாதீங்க’ என்றார். 🙂

கவிஞர் மதுமிதா வந்திருந்தார். கவிதைகளோடு வரவில்லை என்பது மிகப்பெரிய ஆசுவாசம். வாழ்க அவரது நல்லுள்ளம். இரண்டு நாள்களுக்கு முன்பு கவிஞர் நிர்மலா வந்திருந்தார். அவரும் கவிதைகளோடு வரவில்லை என்பது கவனத்திற்குரியது.

வார்த்தை இதழில் ‘எதைப்பற்றியும் அல்லது இது மாதிரியும் தெரிகிறது’ என்ற தொடரை எழுதும் வ.ஸ்ரீநிவாசன் வந்திருந்தார். பெரியார் புத்தகத்தைப் பார்த்துவிட்டு ‘ராஜாஜி புத்தகம் இருக்கிறதா’ என்று கேட்டார். அவரிடம் ராஜாஜி எழுதிய கடிதங்களின் தகவல்கள் உட்பட பல்வேறு தொகுப்புகள் இருக்கின்றன என்றறிகிறேன்.

நிறைய வாசகர்கள் திடீரென்று சில பெயர்களைச் சொல்லி அப்புத்தகங்கள் இருக்கிறதா எனக் கேட்டார்கள். முக்கியமாகக் கேட்கப்பட்டவை. பிளாட்டோ, அரிஸ்டாட்டில், மார்கோ போலோ, உலகப் போர், இலங்கை பற்றிய புத்தகம், ராஜிவ் காந்தி, அம்பேத்கர் போன்றவை. முன்பொருதடவை இப்படி வசந்தகுமாரிடம் ‘நிறைய பேர் காடு புத்தகம் கேக்கறாங்க, ஏன் ரீபிரிண்ட் போடலை’ என்று கேட்டதற்கு:

‘எத்தனை பேர் கேட்டிருப்பாங்க?’

‘ஒரு இருபது முப்பது பேர் கேட்டிருப்பாங்க.’

‘ஆயிரம் காப்பி அடிச்சிட்டு மீதி 970ஐ என்ன பண்றது?’

தோழர் செல்லரித்துப்போன, பழுப்பேறிய புத்தகங்களை ஒரு கட்டாகக் கட்டி எடுத்துக்கொண்டு வந்தார். மிகவும் பத்திரமாக யாரும் எடுக்கமுடியாத இடத்தில் வைத்துவிட்டு, ‘பாத்துக்கோங்க’ என்று சொல்லிவிட்டுப் போனார். ‘இதை புத்தகக் கண்காட்சி வளாகத்தோட நடுவில வெச்சாலும் ஒருத்தனும் எடுக்கமாட்டான்’ என்றேன்.

இப்படி பல நண்பர்களின் சந்திப்பினூடாக பதிப்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புத்தகக் கண்காட்சி நிறைவுக்கு வந்தது. சென்ற புத்தகக் கண்காட்சியைவிட ஒரு லட்சம் வாசகர்கள் அதிகம் வந்தார்கள் என்ற பேட்டியை காந்தி கண்ணதாசன் கொடுத்துக்கொண்டிருக்க, எனது ஒட்டுமொத்த அப்சர்வேஷன் இங்கே.

* சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி நிச்சயம் மந்தம். கூட்டத்திலும் சரி, விற்பனையிலும் சரி, சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது.

* புத்தகக் கண்காட்சி நடக்கும் இடத்திற்கு சரியான பேருந்து வசதி இல்லை என்பது மிகப்பெரிய குறை. இதை நீக்காதவரை இந்த இடம் இதுபோன்ற பிரச்சினைகளையே தந்துகொண்டிருக்கும்.

* அரங்க உள்கட்ட அமைப்பைப் பொருத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் பபாஸி மிகச் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறது, மேம்படுத்திக்கொண்டே இருக்கிறது. உள்ளே வரும் எந்த ஒரு வாசகரும் இதை உணரமுடியும். நிறைய கூட்டம் வந்தாலும் நடப்பதற்கு ஏற்ற, அகலமான நடைபாதை, சிவப்புக் கம்பளங்கள் விரித்த பாதை, எல்லாமே சரியாகச் செய்யப்பட்டிருக்கின்றன.

* புத்தகக் கண்காட்சி வளாகத்திற்குள்ளே உணவு அரங்கங்கள் வைப்பதை தவிர்க்கவேண்டும்.

* சென்ற ஆண்டுவரை மல்டிமீடியா வரிசை எனத் தனியாகக் கொடுத்திருந்தார்கள். அது இந்தமுறை இல்லை. அடுத்தமுறை மல்டிமீடியா அரங்க வரிசையைத் தனியாக வைக்கவேண்டும்.

* சென்ற ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி பற்றிய விளம்பரங்கள் மிகக்குறைவு. சன், ஜெயா, கலைஞர் எனப் பல்வேறு சானல்கள் இருக்கும் நிலையில், அவர்களுடன் பேசி, குறைந்த விலையில் விளம்பரங்களைப் பெற்று, அவற்றில் ஒளிபரப்பாதவரை, கூட்டம் இப்படி குறைந்துகொண்டுதான் போகும்.

* புத்தகக் கண்காட்சிக்கென்று ஒரு பெரிய ஈர்ப்பு இருக்கிறது. அதைத் தக்கவைத்துக்கொள்ள செய்யவேண்டிய விஷயங்களைத் தொடர்ந்து செய்யவேண்டும். திறப்புவிழாவிற்கு மக்களை ஈர்க்கும் ஒரு தலைவரை அழைப்பதில் தொடங்கி, தொடர்ந்து ஊடகங்களில் புத்தகக் கண்காட்சி பற்றி செய்திகள் வரவைப்பதுவரை பல்வேறு செயல்களைச் செய்யவேண்டும். அப்போதுதான் பத்து நாளும் மக்கள் மனதில் புத்தகக் கண்காட்சி பற்றிய நினைவு வந்துகொண்டே இருக்கும்.

* சென்ற ஆண்டை ஒப்பிடும்போது கழிப்பறைகளின் வசதி கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் அவை சரியாகப் பராமரிக்கப்படவில்லை. இதை பபாஸி கவனத்தில் கொள்ளவேண்டும்.

* எல்லா நாளும் சரியாகக் கிடைத்துக்கொண்டிருந்த குடிநீர், இறுதிநாள் காலைமுதல் கிடைக்கவில்லை. ஒருநாள்தானே என்றெல்லாம் சொல்லமுடியவில்லை. கடுமையான தாகம். குடிநீர் வாங்க, பெரும்பாலான பதிப்பாளர்களால் வெளியில் செல்லவும் முடியாது. இதுபோன்ற குறைகளையும் பபாஸி களையவேண்டும்.

* வாகனங்களை நிறுத்துமிடம் சரியாக, சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. சென்ற ஆண்டு வரை இருந்த குழப்பங்கள் அறவே தவிர்க்கப்பட்டிருந்தன.

* விளம்பரங்களைத் தவிர்த்துப் பார்த்தால், பபாஸியின் செயல்பாடு பாராட்டத்தக்கதாகவே உள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இருக்கும் சில குறைகளும் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

* கடைசியாக ஒன்று. தொடக்க நாளில் மழை பெய்வதைத் தடுக்க பபாஸி முயலவேண்டும்.

நான் குழந்தைகளுக்களுக்கான சில புத்தகங்களை வாங்கினேன். எளிய ஆங்கிலத்தில் மகாபாரதம், ராமாயணம், பஞ்ச தந்திரக் கதைகள் வாங்கினேன். நாவல் டைமில் மலிவு விலையில் வெளிவந்த ‘கோணல் பக்கங்கள் பாகம் 1’ பத்து ரூபாய்க்கு வாங்கினேன். தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் காலியாகிவிட்டன. அதனால் வாங்கமுடியவில்லை. பாரதிய வித்யா பவனில், ‘தமிழ் வழியாக சமிஸ்கிருதம்’ படிக்கும் புத்தகங்களை வாங்கச் சென்றேன். ‘முதல் ரெண்டு பாகம் இல்லை, மூணாம் பாகத்துலேர்ந்து வாங்கிக்கிறேளா’ என்றார்கள்.

பின்குறிப்பு 1: வைகுண்ட ஏகாதசி அன்று தொடங்கியதால் பல பதிப்பாளர்களுக்கு நாமம் விழுந்துவிட்டதாக சிலர் பேசிக்கொண்டார்கள். இந்த சைவ சூழ்ச்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பின்குறிப்பு 2: ஒவ்வொரு நாளும் எதாவது எழுதவேண்டும் என்கிற தொல்லை இன்றோடு ஒழிந்தது என்பதை எண்ணும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! சும்மா இருப்பதே சுகம் என்றவனே உலகின் தலைசிறந்த ஞானி. 🙂

Share

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 10)

பதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009

இன்று நல்ல கூட்டம் இருந்தது. தொடக்கத்தில் மிகவும் மந்தமாக இருந்த கூட்டம், மதியம் இரண்டு மணிக்கு மேல் சூடு பிடித்தது. இன்றும் கூட்டம் இல்லாமல் போய், புத்தகக் கண்காட்சியில் நல்ல கூட்டம் இருந்தது என்கிற வரியை எழுத முடியாமலேயே போய்விடுமோ என்று நினைத்தேன். நல்லவேளை, அப்படி இல்லாமல் சரியான கூட்டம். அதிலும் சுற்றிப் பார்க்கும் ஆவலுள்ள கூட்டம் இல்லாமல், புத்தகம் வாங்கும் மக்களின் கூட்டம் அதிகம் இருந்தது மகிழ்ச்சி அளித்தது.

முதல் இரண்டு வரிசைகளுக்குள் நுழையவே முடியவில்லை. அந்தக் காட்சியைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. வெளியில் மக்கள் நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் காத்திருந்தார்கள். இத்த பத்து நாள்களில் இப்படி நிகழ்வது இதுவே முதல்முறை. இதைவிட பதினோராம் நாள் (புத்தகக் கண்காட்சியின் கடைசி ஞாயிறு) இன்னும் கூட்டம் அதிகம் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

மனுஷ்யபுத்திரனிடம் பத்து நிமிடம் பேசிக்கொண்டிருந்தேன். எல்லோருக்கும் இருக்கும் பொதுவான கருத்தே அவரிடமும் இருந்தது. சென்ற முறையைவிட இந்தமுறை கூட்டம் குறைவு என்பதுதான் அவரும் சொன்னது. அதற்கான காரணங்கள் பற்றி சில கருத்துகளைச் சொன்னார். அவை எல்லாமே நான் ஏற்கெனவே சொன்னவையே. சில பதிப்பாளர்கள் மனம் உடைந்து போகும் அளவு பேசுகிறார்கள் என்றார். அதுவும் உண்மையானதே.

சுரேஷ் கண்ணன் வந்திருந்தார். ‘பகடி எழுதும்போது வேணும்னே எழுதுற மாதிரி இருக்கே’ என்று டீசண்ட்டாக கேட்டார். ‘உங்க பகடி சகிக்கலை, செயற்கையா இருக்கு’ என்று அதற்கு அர்த்தம். ‘தினமும் எதாவது எழுதணும், ஜஸ்ட் பத்து நிமிஷத்துல எழுதுறேன், அப்படித்தான் இருக்கும்’ என்றேன்.

ரஜினி ராம்கி தன் குடும்பத்துடன் வந்திருந்தார். கிருபா தன் மனைவியுடன் வந்திருந்தார்.

நிறைய பேர் என்னிடம் ‘தினமும் தோழர் தோழர்னு எழுதுறீங்களே, யாருங்க அந்த தோழர்’ என்றார்கள். எல்லோரிடமும் மருதன் பற்றிச் சொன்னேன்.

யுவன் சந்திரசேகரனிடம் இரண்டு நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன். அவரது நாவல் அல்லது குறுங்கதைகள் (நீங்களுமா?!) தொகுப்பு வந்திருப்பதாகச் சொன்னார். உயிர்மை அரங்கில் அதைப் பார்க்கத் தவறிவிட்டேன்.

லக்கிலுக்கும் அதிஷாவும் வந்து, கடை போட்டிருக்கும் பதிப்பாளர்களைவிட அதிகமுறை வந்தவர்கள் என்ற சாதனையைப் படைத்தார்கள். அதிஷா சந்தனப் பொட்டு வைத்திருந்தார். லக்கிலுக் பெரியார் படம் போட்ட டீ ஷர்ட் போட்டிருந்தார்.

நான் விஜய பாரதம் ஸ்டாலில் ‘மகாபாரதம்’ சொற்பொழிவு சிடி வாங்கினேன். 30 மணி நேரம் ஓடுமாம்! ஜி ஜி என்றழைத்தார்கள். ஸ்ம்ஸ்க்ருத பாரதி நடத்தும் சமிஸ்கிருத வகுப்புகள் பற்றிய தகவலைத் தந்தார்கள்.

பின்குறிப்பு: ஒருவர் அரக்கபரக்க வந்து என்னிடம் ‘ஆர்.எஸ்.எஸ். ஸ்டால் எங்க இருக்கு’ என்றார். அவ்வளவு பெரிய கூட்டத்தில் அத்தனை பேரையும் விட்டுவிட்டு சரியாக என்னிடம் ஏன் கேட்டார் என்று தெரியவில்லை. ‘ஜி’க்கு விஜயபாரதம் அரங்குக்குக்கு செல்லும் வழியைக் காட்டி வைத்தேன்.

சுகுமாரன் விஷயத்தைப் பற்றி சுகா எழுதியிருக்கும் ஒரு சிறு பதிவு இங்கே.

Share

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 08)

பதிவுவகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009

நேற்றுமுந்தினம் போலவே நேற்றும் கூட்டம் இருந்தது. விடுமுறைக்கான கடும் கூட்டம் இன்னும் வரவில்லை. சென்ற ஞாயிறன்று இருந்த கூட்டத்தைப்போல் இதுவரை கூட்டம் வரவில்லை. இன்னும் மீதமிருக்கும் மூன்று நாள்களில் ஏதேனும் ஒருநாளில் அந்த அதிகபட்ச கூட்டத்தை புத்தகக் கண்காட்சி காணும் என்று நினைக்கிறேன். அது பெரும்பாலும் வரும் ஞாயிறாக இருக்கலாம்.

நேற்று காலையில் மந்தமாகத் தொடங்கிய புத்தகக் கண்காட்சி நான்கு மணிக்குப் பின்பு பரபரப்பாகியது. மக்கள் வரத் தொடங்கியிருந்தார்கள். இந்த முறை சொதப்பியது, புத்தகக் கண்காட்சி அரங்கித்துக்குள்ளேயே வைக்கப்பட்டிருக்கும் உணவு அரங்குகள். அங்கு மக்கள் தேங்கிவிடுகிறார்கள். அவர்கள் மற்ற பதிப்பகத்திற்குள் செல்லுவதில்லை. அல்லது அங்கேயே கண்ணில் படும் அரங்குக்குள் மட்டுமே சென்றுவிட்டு மற்ற அரங்குகளைப் பார்க்காமல் போயிவிடுகிறார்கள். இந்த உணவு அரங்குகளை அடுத்தமுறை கண்காட்சி அரங்குக்குள் வைக்காமல் தனியே வெளியே வைக்கவேண்டும். குறைந்தபட்சம், அங்கு நடக்கமுடியாமல் அவதிப்படும் வாசகர்களுக்காவது நன்மையை உண்டாக்கும். என்னென்ன உணவு விடுதிகள் இருக்கின்றன? வடை, பஜ்ஜி, போண்டா விற்கும் உணவகம், ஐஸ்கிரீம் விற்கும் உணவகம், காஃபி, தேநீர்க் கடை, பழங்கள் விற்கும் உணவு அரங்கு, பழச்சாறு கடை, முந்திரிப்பருப்பு, கடலைப்பருப்பு விற்கும் கடை – இத்தனையையும் மீறி ஒரு வாசகன் ஒரு புத்தகத்தைக் கண்டடையவேண்டும். மனதில் உறுதி வேண்டும்.

புனித வியாழன். தோழர் வ்ந்திருந்தார். உடனே சென்று கைகுலுக்கிப் பேசலாம் என்றால், தீவிரமாக கையெழுத்துப் போட்டுக்கொண்டிருந்தார். அவர் கை வலித்து ஓய்ந்ததும், மெல்ல அருகில் சென்று ‘ஸ்டாலினியப் படுகொலைகள்’ புத்தகம் எங்கே கிடைக்கும் என்றேன். ‘தமிழினில போட்டிருக்காங்க. பின் தொடரும் நிழலின் குரல்ன்ற பேர்ல வந்திருக்கு’ என்றார்.
நிறையப் பேர் பாராவைத் தேடினார்கள். மாயவலியில் அவர் இருப்பதைச் சொன்னேன்.

இன்று தினமலரில் எப்போதும் ஹவுஸ்ஃபுல்லாக இருக்கும் அரங்கு என்று இரண்டு அரங்குகளைப் பற்றி மட்டும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒன்று, உயிர்மை பதிப்பக அரங்கு. மற்றொன்று, மணிமேகலைப் பிரசுரம். மனுஷ்யபுத்திரன் இதற்கெல்லாம் மனமுடைந்துவிடுபவர் அல்ல என்பது என் திண்ணம்.

நேற்று சில பதிப்பகங்களைப் பார்வையிட்டேன். புலம் என்கிற பெயரில் பதிப்பகத்தை ஆரம்பித்திருப்பவர் நண்பர் லோகநாதன். காலச்சுவடில் இருந்தவர். நல்ல உழைப்பாளி. புத்தகம் பதிப்பிக்கும் துறையில் பல நுணுக்கங்கள் அறிந்தவர். அட்டையில் ஒரு சில இடங்கள் மட்டும் மேடாக இருப்பது, சில இடங்கள் மின்னும் நிறத்தில் இருப்பது என்பன போன்ற சில நுணுக்கங்களில் (இவை ஏற்கெனவே வந்தவைதான் என்றாலும்) புத்தகம் வந்தால் அவற்றின் நோக்குத்தரம் எவ்வளவு உயர்வாக இருக்கும் என்பதை உணர்ந்து அதை செயல்படுத்தியவர்.

நேற்று கண்ணில் பட்ட, கவனத்தை ஈர்த்த மேலும் சில புத்தகங்கள்.

அஞ்சுவண்ணம் தெரு, கூனன் தோப்பு – தோப்பில் முகமது மீரான் – அடையாளம்
மஹாகவியின் ஆறு காவியங்கள் – தொகுப்பு: எம்.ஏ. நுஃமான் – அடையாளம்
இலங்கையில் சமாதானம் பேசுதல் – அடையாளம்
புத்தம் அருள் அறம் – ஜி.அப்பாத்துரை – ஆழி

நண்பர் விஜய மகேந்திரன் வ்ந்திருந்தார். தோழமை பதிபக்கத்தின் வெளியீடாக வரவிருக்கும் ஒரு சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தில் எனது ஒரு சிறுகதையும் இடம்பெறுகிறது. அப்புத்தகத்தை வாங்க நாற்பது, ஐம்பது பேர் வரிசையில் நிற்கிறார்கள் என்ற செய்தியைச் சொன்னேன். கடும் அதிர்ச்சியுடன் சிரித்தார். தமிழினி மணி, ’புத்தகச் சந்தைக்கு இத்தனை பெரிய இக்கட்டு வருமென்று நினைக்கவில்லை’ என்றார்!

பின்குறிப்பு: இதை இப்போது புத்தகக் கண்காட்சியில் இருந்து உள்ளிடுகிறேன். ஓர் அறிவிப்பு ஒலித்துக்கொண்டிருக்கிறது. ‘முக்கிய அறிவிப்பு. வாசகர் ஒருவர் தங்கள் புத்தகங்களோடு சேர்த்து பில்புக்கையும் சேர்த்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். தங்கள் புத்தகங்களை வாசகர்கள் சரி பார்த்து, பில் புக் இருந்தால் உடனடியாக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.’ தொடர்ந்து பில் போட்டுக்கொண்டே இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது என்பதுதான் இதன் நீதி என்க.

Share

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 07)

பதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009

பொங்கலன்று கூட்டம் குவியும் என்கிற நம்பிக்கையும் மெல்ல கரைந்தது. கூட்டம் சுமாராகவே இருந்தது. பெரும்பாலான பதிப்பாளர்கள் கடந்தமுறை நடந்த விற்பனையில் பாதியாவது தாண்டுமா என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். ஒரு பதிப்பக நண்பர் புத்தகக் கண்காட்சி வைத்த இடம் சரியில்லை என்று சொன்னார். என்று இங்கு வைக்கத் தொடங்கினார்களோ அப்போதிருந்தே விற்பனை இல்லை என்றும் இந்தமுறை கடுமையான விற்பனைச் சரிவு என்றும் அவர் சொன்னார். இன்னொரு பதிப்பகத் தோழர் பொருளாதார வீழ்ச்சியின் எதிரொலியே இது என்றார். எப்படி இருந்தாலும், கூட்டம் குறைவாக இருந்தது என்பதுதான் விஷயம். மாலை நான்கு மணிக்கு மேல் கொஞ்சம் கூட்டம் வரத் தொடங்கியது.

நேற்று நான் சில தமிழ் பதிப்பக அரங்குகளைச் சுற்றிப் பார்த்தேன். சில புத்தகங்களைப் பார்த்தேன். சில புத்தகங்களைக் குறித்து வைத்துக்கொண்டேன். சில புத்தகங்களை வாங்கினேன். அவற்றின் பட்டியல்.

வாங்கியவை:

பண்டைய வேதத் தத்துவங்களும் வேத மறுப்புப் பௌத்தமும் – நா.வானமாமலை – அலைகள்
காந்தியின் உடலரசியல் – ராமாநுஜம் – கருப்புப் பிரதிகள்
ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா – உயிர்மை
ஊமைச் செந்நாய் – ஜெயமோகன் – உயிர்மை
எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் – சாரு நிவேதிதா – உயிர்மை
உள்ளேயிருந்து சில குரல்கள் – கோபிகிருஷ்ணன் – வம்சி
எனது இந்தியா – ஜிம் கார்பெட் – காலச்சுவடு
பள்ளிகொண்டபுரம் – நீல பத்மநாபன் – காலச்சுவடு
வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம் – திருச்செந்தாழை – காலச்சுவடு

குறித்து வைத்துக்கொண்டவை:

உறவுகள் – எஸ். பொ. – மித்ர வெளியீடு
உலகை உலுக்கிய திரைப்படங்கள். – போதி வெளியீடு
மும்பை 26/11 – வினவு – பதிப்பகம் நினைவில்லை
மூன்றாம் பாலின் முகம் – பிரியா பாபு – சந்தியா
ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் – சந்தியா
உண்மை கலந்த நாட்குறிப்புகள் – அ.முத்துலிங்கம் – உயிர்மை
அங்கிள் சாமுக்கு மண்டோ கடிதங்கள் – பயணி வெளியீடு
சாதத் ஹஸன் மண்டோ படைப்புகள் – புலம் வெளியீடு
சிறுவர் சினிமா பாகம் 2 – விஸ்வாமித்ரா – வம்சி வெளியீடு
தவளைகள் குதிக்கும் வயிறு – வா.மு. கோமு – உயிரெழுத்து

இன்று நேரமிருந்தால் சுற்றிப் பார்த்துவிட்டு மேலும் சில புத்தகங்களை உள்ளிடுகிறேன்.

புத்தகக் கண்காட்சி நிறைவடையும் தருவாயில் திடீரென்று ஒலிபெருக்கியில் ‘ஃபயர் சர்வீஸ் உடனே வரவும்’ என்று நான்கைந்து முறை பதட்டத்துடன் அறிவித்தார்கள். அரங்கத்தில் இருந்த மக்கள் அனைவரும் பதட்டமடைந்து வெளிவாயிலுக்கு ஓட, சிறிய பதட்டம் தொற்றிக்கொண்டது. பின்பு காந்தி கண்ணதாசன் ஒலிபெருக்கியில் ‘சிறு சார்ட் சர்க்யூட் மட்டுமே என்றும் அதனால் பதட்டப்பட ஒன்றுமில்லை’ என்று அறிவித்தபின்பே கூட்டம் அமைதியானது. தேவையான பாதுகாப்புகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்றாலும் சிறிய சார்ட் சர்க்யூட்டுக்கு முதலில் இப்படி மைக்கில் அலறாமல் இருந்தால் இந்த சிறிய பதட்டத்தையும் தவிர்த்திருக்கமுடியும். இதை காந்தி கண்ணதாசனும் ஒலிபெருக்கியில் சொன்னார்.

இன்றைய புத்தகக் கண்காட்சியில் இப்போது இருக்கிறேன். அங்கிருந்தபடியே இப்பதிவை உள்ளிடுகிறேன். கூட்டம் வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் பதிப்பாளர்களை இன்று எப்படி காப்பாற்றுகிறது என்று பார்க்கலாம்.

Share

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 06)

வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009

ஒவ்வொரு நாளும் ஒரே செய்தியை மாற்றி மாற்றி எழுதும் டைரிக் குறிப்பு போல, இந்தப் புத்தகக் கண்காட்சியைப் பற்றிய செய்திகள் வருகின்றன என்பதை நானே உணர முடிகிறது. சென்ற வருடமும் இப்படித்தான் நிகழ்ந்தது. இதைத் தவிர்க்கமுடியாது. அதனால் என் டைரிக்குறிப்பைத் தொடந்து படிக்கவும்.

நேற்று முழுநாள். ஒரு முழுநாளுக்கான கூட்டம் சிறிதும் கிடையாது. அதிலும் முதல் மூன்று மணி நேரங்களில் கூட்டமே இல்லை என்று சொல்லலாம். ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் வந்திருந்தார்கள். ப்ராடிஜி அரங்குக்கு வந்தவர்கள் சுற்றிப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். ஆளுக்கு 100 ரூபாய் வீட்டிலிருந்து வாங்கிக்கொண்டு வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். எல்லோருக்கும் புத்தகக் கண்காட்சியில் விற்கும் பழரசம், உணவு வகைகளை வாங்கி உண்ணவே விருப்பம். குழந்தைகளின் மகிழ்ச்சியைவிட என்ன புத்தகங்கள் முக்கியம் என்பதுதான் என் எண்ணமும். ப்ராடிஜியின் அரங்கிற்கான எதிர் அரங்கு இஸ்கான் அரங்கு. அங்கு பள்ளி மாணவர்கள் சென்றவுடன், அங்கிருந்த காவியுடை மனிதர், எல்லாப் பிள்ளைகளையும் ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ என்று சொல்லச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தார். ப்ராடிஜி அரங்கில் இருந்த பத்ரி ‘இந்த ஹிந்துத்துவா…’ என்று என்னவோ சொல்ல ஆரம்பித்தார். நானும் ஹரே கிருஷ்ணா ஹரே ராமா சொல்ல ஆரம்பித்ததால் அவர் என்ன சொல்ல வந்தார் என்று காதில் விழவில்லை. 🙂 கிழக்கு பதிப்ப்கத்தின் வரிசையில் விஜயபாரதம் அரங்கும், கிழக்கு பதிப்பகத்துக்கு அடுத்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் அரங்கும், எதிரே நித்யானந்த திவ்ய பீடமும் (இன்னொரு பக்கம் பாரதி புத்தகாலயம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். நான் இன்னும் பார்க்கவில்லை) ப்ராடிஜிக்கு எதிரே இஸ்கானும் அமைந்ததெல்லாம் இயற்கையாக அமைந்ததுதான். அதனை எல்லாம் அவன் செயல் என்றும் சொல்லலாம்.

தமிழினி அரங்கில் ‘காவல் கோட்டம்’ புத்தகத்தை வாங்கி எனக்கு என் நண்பர் (ரசிகர்?) ஒருவர் பரிசளித்தார். அந்த நண்பர் வருடா வருடம் இன்னும் அதிகப் பணத்துடன் புத்தகக் கண்காட்சிக்கு வருமாறு அன்போடு வேண்டுகிறேன்.

தேசிகன் வந்திருந்தார். சத்யஜித் ரேயின் இரண்டு புத்தகங்களை வாங்கினார். நியூ ஹொரைசன் எல்லா விஷயங்களையும் யூ.எஸ். ஸ்டைலில் செய்வதால், வாங்கிய புத்தகம் பிடிக்கவில்லை என்றால் திரும்பக் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக்கொள்ளும் யூ.எஸ். ஸ்டைலையும் அறிவிக்க ஆலோசனை வழங்கினார். தமிழவன், கோணங்கி நிலையையெல்லாம் நினைத்துப் பார்த்தேன். திகிலாகத்தான் இருந்தது.

மீண்டும் தோழர். எத்தனை தடவை தோழரைப் பற்றி எழுதுவேன் என நினைக்கக்கூடாது. தோழர் செய்திக்கு மேல் செய்தியைத் தந்துகொண்டிருக்கிறார். புத்தக கண்காட்சியின் வளாகத்திற்கு வெளியே நடைபாதையிலுள்ள ஒரு பழைய புத்தகக் கடையிலிருந்து தலைகாணி சைஸில் இருக்கும் மொழிபெயர்ப்புப் புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்திருந்தார். எல்லாம் சேர்ந்து ஐநூறு ரூபாய்தான் என்றார். அதை பழைய புத்தகக் கடையில் விற்றது அதை வாங்கிய இன்னொரு தோழராக இருக்கவேண்டும் என்பது என் கணிப்பு. இந்தத் தோழர் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம். அன்னார் வாங்கிய புத்தகங்களுள் ஒன்று ‘இந்திய வரலாற்றில் பகவத்கீதை.’

இன்ஃபோ மேப்ஸ் கடையில் நிறைய காமிக்ஸ் புத்தகங்களை பத்ரி வாங்கினார். நானும் அதில் சில புத்தகங்களை வாங்க நினைத்திருக்கிறேன். காமிக்ஸ் புத்தகங்கள் படிக்க நூலகங்களில் அலைந்தது, சிறுவர் மலர் படிக்க அதிகாலையிலேயே தினமலர் நாளிதழ் வாங்கும் நண்பன் வீட்டுக்குச் சென்று காத்திருப்பது போன்ற விஷயங்கள் நினைவுக்கு வந்தன. பின்பு ராணி காமிக்ஸ். ஜேம்ஸ் பாண்ட் முத்தம் கொடுக்கும் பக்கத்தை வேகமாகப் புரட்டுவேன். இல்லையென்றால், வீட்டில் காமிக்ஸிற்கும் ஒட்டுமொத்த தடை விழுந்துவிடும். காமிக்ஸில் தொடங்கி, அம்புலிமாமா, பாலமித்ரா வழியாக, விஜயசேகரனின் வீர சாகஸங்கள் போன்ற புத்தகங்கள் வழியாக ஒருவர் சிறந்த புத்தகங்களை அடைய முடியும். சிறுவர்களுக்கான, மகிழ்ச்சியைத் தவிர வேறு எவ்வித நோக்கமுமற்ற இந்தப் புத்தகங்கள் வாசிப்புப் பழக்கத்திற்கு நல்ல அடித்தளம் கொடுப்பவை.

’உன்னதம்’ மாத இதழாக வெளி வந்திருக்கிறது. கௌதம சித்தார்த்தன் எனக்கு ஓர் இதழைக் கொடுத்தார். படிக்கவேண்டும். இடையில் வராமல் இருந்த உன்னதம் இப்போது மாத இதழாக வெளிவரத் தொடங்கியிருக்கிறது. தொடர்ந்து வரும் என்று நம்புவோம். ‘பள்ளிகொண்டபுரம்’ புத்தகத்தை கிளாசிக் வரிசையில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இதையும் வாங்கவேண்டும். நீண்டநாள் வாங்க நினைத்த புத்தகம் இது. சில புதிய எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பையும் வாங்க நினைத்திருக்கிறேன். திருச்செந்தாழையின் ஒரு சிறுகதைத் தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது.

இன்றாவது என்னைக் கவரும், என் ரசனைக்குட்பட்ட புத்தகங்களின் பட்டியலைத் தரமுடியுமா என்று பார்க்கிறேன்.

Share