Archive for பொது

கல்கி இதழ் மாற்றமும், பிள்ளையார் இடப்பெயர்ச்சியும்

கல்கியின் இதழ் பார்த்தேன். வடிவமைப்பு மாறி இருக்கிறது. சட்டென அது கல்கி என்றே தோன்றவில்லை. கல்கிதான் இது என்று நம்பிக் கையில் எடுக்கக்கூட மனம் வரவில்லை. 1998ல் கல்லூரி முடிந்து வேலைக்குச் சேர்ந்தபோது நான் முதலில் வாங்கியது கல்கி இதழையே. காரணம் சுஜாதா. அப்போது கல்கியில் வரிசையாக சில சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார். தொடர்ந்து வாசித்தேன். இடையில் துபாய் செல்லவேண்டி வந்தது. அங்கே சென்றது கல்கி வாசிப்பதை நிறுத்தினேன். அவ்வப்போது வாசித்ததும் உண்டு. இங்கே வந்தபின்பும் அவ்வப்போது வாசிப்பேன். இப்போது கடந்த ஒரு வருடமாக மீண்டும் வாசிக்கிறேன். கல்கியில் வரும் அனைத்தையும் வாசிக்கிறேன் என்று சொல்லிவிடமுடியாது. எனக்குத் தேவையானவற்றை மட்டுமே வாசிப்பேன். எப்படியாவது பாஜகவைக் குறை சொல்லி தனது இந்துத்துவ எதிர்ப்பு முத்திரையை வலிந்து காண்பித்துக்கொள்ளும் அசட்டுத் தலையங்கங்கள் 1998லேயே எனக்குப் பிடிக்காது. கல்கியெல்லாம் அப்பவே அப்படீன்னாலும் நாங்களும் அப்பவே அப்படித்தான். இப்போதும் அதே அசட்டுத்தனம் தொடர்கிறதுதான் என்றாலும், சில கேள்வி பதில்களில் கொஞ்சம் தைரியத்தைப் பார்க்க முடிந்தது.

 

புதிய வடிவமைப்பில் பெரிய அதிர்ச்சி தலையங்கத்தில் கல்கியின் பிள்ளையார் காணாமல் போனதுதான். பிள்ளையாரை நீக்க ஒரே காரணம் அதன் முற்போக்குவாதமாகவே இருக்கும் என்று மட்டுமே யோசிக்கமுடிகிறது. இந்த ஜல்லியைவிட்டு வேறு காரணங்கள் இருக்குமானால் அதை கல்கி அதன் வாசகர்களுக்குச் சொல்வது நல்லது. சொல்லவேண்டியது கல்கியின் கடமை அது இது என்றெல்லாம் அளக்க விரும்பவில்லை. கல்கி விளக்கம் தராவிட்டால், அதை செக்யூலர் ஜல்லி என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதான் என்று மட்டும் நினைக்கிறேன். இப்படி நினைத்துக்கொண்டே, ஆனால் காஞ்சி பெரியவரின் தெய்வ வாக்கை விட்டிருக்கமாட்டார்களே என்று யோசித்துக்கொண்டே தேடிப் பார்த்தால், அங்கே காஞ்சி பெரியவரின் தெய்வ வாக்கு, தலையங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட பிள்ளையாருடன் உள்ளது! பிள்ளையாருக்கு ஏன் இந்த இடப்பெயர்ச்சி எனத் தெரியவில்லை.

ஆனந்தவிகடனின் இதழ் வடிவம் மாற்றம் பெற்ற போதும் எனக்குப் பிடிக்கவில்லை. ஒருவேளை இப்படி இதழ் வடிவம் மாற்றம் பெறுவதை ரசிக்கும், எடை போடும் ஆற்றல் எனக்கு இல்லாமல் இருக்கலாம். தெரியவில்லை. ஆனால் நிச்சயம் கல்கியின் இதழ்வடிவ மாற்றம் ரசிக்கும்படியாக இல்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லமுடியும். கழுதை போலவும் இல்லாமல் பழக்கப்பட்ட பழைய குதிரை போலவும் இல்லாமல் ரெண்டுக்கெட்டானாக உள்ளது. எழுத்துருக்களையெல்லாம் மாற்றியிருப்பார்கள் போல. ஒன்றுமே ஒட்டவில்லை. படிக்கவும் ஓடவில்லை. நீண்ட ஜடையுடன் தழைய தழைய புடைவை கட்டிக்கொண்டு மல்லிகை மணக்க கட்டிக்கொள்ளும் மனைவி, திடீரென்று குட்டைப் பாவாடையில் கிராப் வெட்டிக்கொண்டு கட்டிக்கொண்டால் என்ன தோன்றும்? சிதம்பரத்தில் அப்பாசாமி மாதிரி ஒரே ஒரு நைட்டுக்குன்னா ஓகே, எல்லா நாளும் அப்படித்தான்னா? கிளர்ச்சி அடைவதா அதிர்ச்சி அடைவதா என்ற அப்பெருங்குழப்பத்தில் இருக்கிறேன். :))

கல்கியில் அம்ஷன் குமார் உலக சினிமா பற்றி தொடர் எழுதுகிறார் போல. இந்த வார கல்கியில் அவரது மூன்றாம் வாரப் படைப்பைப் பார்த்தேன். புத்தகக் கண்காட்சி சமயத்தில் கல்கியை வாசிக்காமல் விட்டதால் ஒரு தொடர்ச்சி இல்லாமல் போய்விட்டது. அவற்றைத் தேடிப் படிக்கவேண்டும். முதல் இரண்டு அத்தியாயங்களில் என்ன படங்களைப் பற்றிப் பேசினார் என்று பார்க்கவேண்டும். இந்த வாரம் அம்ஷன் குமார் அறிமுகப்படுத்தியிருக்கும் படம் – செபரேஷன். ஆஸ்கர் விருது பெற்ற ஒரே திரைப்படம் என்ற தலைப்பில் அக்கட்டுரை வந்திருந்தது. கடல் திரைப்படம் பற்றிய பாராட்டுப்பத்திரம் உள்ளது. வழக்கம்போல் ஓ போடுகிறார் ஞாநி. படித்துப் பாருங்கள். 🙂

Share

பள்ளியைக் காப்பாற்றுவோம்

ஒரு பெரிய சிறையிலிருந்து விடுபட்ட பறவையைப் போல MLWA பள்ளிக்குள் புகுந்தேன் என்றுதான் இப்போது நினைக்கத் தோன்றுகிறது. அதற்கு முன்புவரை நான் படித்துக்கொண்டிருந்த பள்ளியை ஒரு சிறையைப் போலவே உணர்ந்தேன். ஒரு போலிஸுக்கும் திருடனுக்குமான உறவும் அணுகுமுறையையுமே அதுவரை நான் படித்துக்கொண்டிருந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடம் காண்பித்தார்கள். அப்பள்ளியைவிட்டு MLWA பள்ளிக்குச் செல்லும்வரை, பள்ளி என்பது சுதந்திரம் மிகுந்த இடம் என்பதுவும், பள்ளியில் மகிழ்ச்சியாக இருக்கவும் முடியும் என்பதுவும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. 13 வயதில் 8ம் வகுப்பில் MLWA பள்ளியில் சேர்ந்தபின்புதான் என் பள்ளி நாள்களின் வசந்த காலங்கள் ஆரம்பித்தன.


பள்ளி ஆசிரியர்கள் பிரம்பால் அடிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு அறவே இல்லாமல் இருந்தது. முதல் ஒரு மாதத்தை ஒரு சந்தேகத்துடனேதான் கழித்தேன். போக போகத்தான் தெரிந்தது, MLWA பள்ளியில் அதிகம் யாரும் அடிப்பதில்லை என்று. அடிப்பதே இல்லை என்ற நிலை இல்லை. ஆனால் அஞ்சி நடுங்கவேண்டிய திருடனின் பயம் அப்பள்ளியில் இல்லை. MLWA என்றாலே நினைவுக்கு வருவது அப்பள்ளி தந்த சுதந்திரம் மட்டுமே.

எத்தனை எத்தனை ஆசிரியர்கள். 

கிருஷ்ணன் என்றொரு ஆசிரியர் இருந்தார். சமூக அறிவியல் ஆசிரியர். ஒரு சேரில் உட்கார்ந்துகொண்டு, ஹாவ் என்று ஏப்பம் விட்டு, கழுத்தை மேலிருந்து கீழாகத் தடவிக்கொண்டு, இந்திய நில அமைப்பைப் பற்றி வேதம் போலச் சொல்வது இன்னும் நினைவில் இருக்கிறது. புவியியலை மனப்பாடம் செய்யாமல், மனக்கண் மூலம் இந்தியாவை நினைவில் நிறுத்திப் படிக்கமுடியும் என்று தெரிந்ததே கிருஷ்ணன் சார் பாடம் எடுத்த விதத்தில்தான். அவர் வரலாற்றைச் சொல்லிக்கொடுத்த விதம் அலாதி. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அவரிடம் படித்திருந்தால் நான் கடந்த கால இந்திய வரலாற்றில் நிபுணன் ஆகியிருப்பேன்.

ஜான் என்றொரு சார். கணிதம் எடுப்பவர். சிலபஸை முடிப்பது, அதை மீண்டும் ரிவைஸ் செய்வது என அவர் செய்த மாயங்கள் என்றென்றும் நினைவில் நிற்கும். அவரைப் போல இன்னொருவர் மேத்ஸ் எடுக்க முடியாது என்றும், அவரே கணிதத்தின் கடைசிப் புள்ளி என்றும் அன்று நாங்கள் நம்பினோம். 

நார்மன் சார் – அன்பைத் தவிர எதுவுமே அறியாதவர். சிரில் மேரி டீச்சர் – அறிவியலை சொல்லித் தர அவர் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. நாங்கள்தான் எதையுமே புரிந்துகொள்ளக்கூடாது என்று விறைப்பாக இருந்தோம். 

லக்ஷ்மணன் ஐயா – இன்று தமிழில் தெரியும் கொஞ்ச நஞ்ச இலக்கணமும் இந்த லக்ஷ்மணன் ஐயா இட்ட பிச்சைதான். அவர் இல்லை என்றால் தமிழில் ஒன்றுமே தெரியாமல் போயிருந்திருக்கும். 

கணேசன் ஐயா – இவர் வகுப்பறைக்குள் வந்தாலே நாங்கள் ஓ வென்று கூவுவோம். கிட்டத்தட்ட ரஜினியின் ஓப்பனிங் எண்ட்ரியை ஒத்தது இது. இவர் மாணவர்கள் மத்தியில் ஒரு ஹீரோ.

தர்மராஜ் சார் – இவர்தான் ஹெச் எம். இவர் வந்து நின்றாலே, பள்ளி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் அனைவரும் தெறித்து ஓடுவோம். இவரிடம் அவ்வளவு பயம். 

இந்தப் பள்ளிகளின் நினைவுகளைச் சொல்ல ஆரம்பித்தால் ஒட்டுமொத்த நாஸ்டால்ஜியாவுக்குள் சிக்கி வெளியே வர இயலாமல் போய்விடும்.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு என்னை பழைய நண்பர் ஒருவர் அழைத்தார். வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நொடி அது. ஆனால் அம்மகிழ்ச்சி ஒரு நொடி மட்டுமே நீடிக்கும் என நினைக்கவில்லை. MLWA பள்ளியை மூடப் போகிறார்கள் என்றார் அவர். 

கஷ்டப்பட்ட ஏழைகள் அதிகம் படிக்கும் பள்ளி. சில வருடங்களுக்கு முன்பாக வேறொரு மேனேஜ்மெண்ட் கையில் போயிருக்கிறது. புதிய நிர்வாகம் என்று அறிகிறேன். பள்ளியை மூடிவிட்டு, நல்ல விலைக்குச் செல்லும் அந்த இடத்தை விற்று, காம்ப்ளக்ஸ் போன்ற ஒன்றைக் கட்டுவது அதன் நோக்கம் போல. இதை செய்துமுடிக்க நிர்வாகம் முதலில் செய்தது, புதிய மாணவர்களின் சேர்க்கையை நிறுத்தியது. இப்படி நிறுத்தியதுமே இப்பள்ளியை மூடப் போகிறார்களாம் என்ற பேச்சு அப்பகுதி முழுவதும் பரவிவிடும். அவர்கள் நினைத்தபடிதான் நடந்திருக்கிறது.

நான் MLWAல் படித்தபோது, 1200 பேர் படித்ததாக என் நினைவு சொல்கிறது. ஆண்டு 1990. இப்போது 200 பேர் படிப்பார்களா என்பதுகூடத் தெரியவில்லை. கண்முன்னே இப்படி ஒரு பள்ளி சீரழிக்கப்படுவது கடும் மனவருத்தத்தை அளிக்கிறது. பாரம்பரியம் மிக்க ஒரு பள்ளி, வெறும் லாப நோக்கத்திற்காக இடிக்கப்படுவது ஏனென்று தெரியவில்லை. இப்பள்ளியைச் சீரமைக்க என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. வெளிப்படையாக அங்கிருக்கும் ஆசிரியர்கள் பேசமுடியாத ஒரு நிலையும் உள்ளது.

தற்போது இப்பள்ளியை மீட்டெடுக்கும் ஒரு முயற்சிக்கு ஓரளவு ஆதரவு கிட்டியுள்ளது. இவர்கள் இப்பள்ளியைக் காப்பாற்றுவார்கள் என்று அப்பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள், அப்பகுதி மக்கள், அப்பள்ளியில் படித்த என்னைப் போன்ற அலுமினி மாணவர்கள் நம்புகிறார்கள். இது நடக்கவேண்டும்.

ஒரு மேனேஜ்மெண்ட் பள்ளியை இப்படி நினைத்தால் மூடிவிடலாம் என்ற அளவில் மட்டுமே நம் சட்டங்கள் இருக்கின்றன என்பதே வேதனை அளிக்கிறது. பள்ளி என்பது வெறும் பள்ளியல்ல என்ற கிளிஷேக்கள் இவர்கள் முன் எடுபடாது என்றாலும், இந்த கிளிஷேக்களைச் சொல்லாமல் சில சமயம் உணர்வுகளைச் சொல்லிவிடமுடிவதில்லை. பள்ளி என்பது வெறும் பள்ளி மட்டுமல்ல. ஒவ்வொரு ஆண்டும் ஒரு பள்ளி உருவாக்கும் மாணவர்களின் நினைவுகளில் அப்பள்ளி வாழும்தோறும், தொடர்ந்து நல்ல மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஒரு பள்ளி தந்துகொண்டிருக்கும் காலம்தோறும் அது ஒரு சமூகத் தொகுப்பாக மாறுகிறது. இப்படிப்பட்ட பள்ளியை இடிக்க எப்படி புதிய நிர்வாகம் முடிவெடுத்தது என்று தெரியவில்லை. உலகுக்கு அன்பை போதிக்கும் பள்ளியை இடிப்பது, மனிதர்களின் உணர்வுகளைக் கொல்வதற்கும் எனவே மனிதர்களைக் கொல்வதற்கும் ஒப்பானது என்பதை மறந்துவிட்டார்களா எனத் தெரியவில்லை.

மால்கள் கட்டவும், காம்பளக்ஸ் கட்டவும் பணம் மட்டும் இருந்தால் போதும். எந்த இடத்திலும் கட்டிக்கொள்ளலாம். அல்லது தேவையான இடத்தில் கட்டிக்கொண்டுவிடலாம். ஆனால் ஏற்கெனவே பல ஆண்டுகளாக ஓரிடத்தில் இருக்கும் பள்ளியை இடிப்பது என்பது இத்தனை எளிதானதல்ல. அப்பள்ளியில் படிக்கும் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த கஷ்டப்பட்ட ஏழை மாணவர்கள் எங்கே செல்வார்கள், என்ன ஆவர்கள் என்பதெல்லாம் ஒரு பெரிய சமுதாயப் பிரச்சினை. இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், எப்படி பள்ளியை மூட முடிவெடுத்தார்கள் எனத் தெரியவில்லை. பள்ளியும் ஒரு விற்பனைப் பண்டமே என்னும் அர்ப்பணிப்பற்ற ஒரு கணக்கே இதன் காரணமாக இருக்கவேண்டும்.

கடந்த வாரங்களில் புதிய தலைமுறை இதழில், இப்பள்ளியின் மீட்சி குறித்து வெளியான கட்டுரையைப் படித்துவிட்டு, பள்ளியின் மறுகட்டுமானத்துக்கு பலரும் பணம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பணத்தைவிட, அனைவரின் ஆதரவின் மூலம் பள்ளியை இடிக்காமல், மூடாமல் இருக்கச் செய்வதே உடனடி அவசியம். 

இப்பள்ளியை மீட்க அரசு ஆவண செய்யவேண்டும். செய்யும் என்று நம்புகிறேன். 

நண்பர்கள் கவனத்துக்கு – இப்பதிவை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு செல்லுங்கள். ஃபேஸ்புக் மூலமும் டிவிட்டர் மூலமும் பலரைச் சென்றடைந்தால் நல்லது. நீங்கள் செய்யும் உதவிக்கு நன்றி.

தனிப்பட்ட முறையில் மிகவும் வருத்தமாக உணர்கிறேன். இப்பள்ளியின் நினைவுகள் என்றென்றும் மறக்கமுடியாதவை. ஆசிரியர்களின் பங்களிப்பு அபரிதமானது. இப்பள்ளியைக் காக்கவேண்டும்.

இப்பள்ளியின் ஃபேஸ்புக் பக்கம் – https://www.facebook.com/mlwaschoolmadurai

Share

ஓம் சாந்தி ஓம்

சுருக்கமாகப் படிக்க விரும்புகிறவர்கள் மஞ்சளடிக்கப்பட்ட பகுதிகளைப் படித்தால் போதும்.

இப்படி ஒரு தளம் இருக்கிறது என்பதே இப்போதுதான் நினைவுக்கு வந்தது. கொஞ்ச நாள் எழுதாமல் இருக்கலாம் என்று முடிவெடுத்துப் படிக்க ஆரம்பித்ததில், எழுதவே எரிச்சல் தோன்ற ஆரம்பித்துவிட்டது. ஃபேஸ்புக்கும் டிவிட்டரும் தந்த பழக்கத்தில் யாராவது மூன்றாவது வரியை எழுதினாலே ஏன் இத்தனை இழுவையாக நீளமாக எழுதுகிறார்கள் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அதுவே புத்தகமாகப் படிக்கும்போது ஒன்றும் தோன்றுவதில்லை. ஃபேஸ்புக்கும் டிவிட்டரும் செய்துவைத்த இன்னொரு விஷயம் உடனடி அறச்சீற்றம். இப்போது நினைத்துப் பார்த்தால் இந்த அறச்சீற்றங்களுக்கெல்லாம் எதாவது பொருளிருக்கிறதா என்றே தெரியவில்லை. நாமும் அரசியல் சமுதாயம் தொடர்பான ஒரு நிகழ்வுக்கு நம் உடனடி அறச்சீற்றத்தைப் பதிந்து வைத்தோம் என்பதைத் தவிர வேறு என்ன வகையிலும் இது எதையும் சாதிக்கப்போவதில்லை என்னும் கருத்து உறுதிப்படுகிறது. பதினைந்து நிமிடப் புகழ் என்று சுஜாதா சொன்னபோது அன்று சுருக்கென்றிருந்தது. இப்போது சுஜாதா மீது கடுப்பாக இருக்கிறது, 15 நிமிடம் அதிகம் சார்.

தொடர்ந்து சில வருடங்களாக அவ்வப்போது சில குழுக்களில் இருந்திருக்கிறேன். அங்கே எழுதுவதும் படிப்பதும் இன்னொரு அடிக்டானது. நான் இருந்தவை எல்லாமே ஹிந்துத்துவம் தொடர்பான சிறிய அரட்டைக் குழுக்கள். என் வாழ்க்கையில் இது போன்ற ஆக்கபூர்வமான குழுமங்களை நான் படித்ததே இல்லை. எத்தனை எத்தனை கருத்துகள். எல்லாக் குழுமங்களுக்கும் போல இக்குழுமங்களுக்கும் வீழ்ச்சி வந்தது. தொடக்கத்தில் கருத்தை அறிதல் என்பது தொடங்கி பின்பு அது நட்பாகி பின்பு நீ அப்படிப் பேசலாமா என்றும் உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை என்பதிலும் முடிந்தது. என்னதான் குழும நட்பென்றாலும் எல்லாமே முடிவில் முகமிலி நட்பே என்பதை இக்குழுமங்களும் உறுதி செய்தன. ஆனாலும் இக்குழுமங்கள் எனக்குத் தனிப்பட்ட அளவில் செய்த சாதனைகள் அதிகம். அதற்காக மரத்தடி போல ராகாகி போல அங்கிருக்கும் நண்பர்கள் மெல்ல மறைந்து குழுமப் பெயர் மட்டும் முன்வருவதுபோல இக்குழுமப் பெயர்களும் முன்வந்துவிட்டன.

ஏப்ரல் முதல் நெருக்கத் தொடங்கிய வேலைகளுக்கு மத்தியில் நான் உருப்படியாகச் செய்தது புத்தகங்கள் படிப்பதையே. டயல் ஃபார் புக்ஸ் எனக்குப் படிக்க புத்தகங்களை அள்ளித் தந்தது. 🙂 படிக்கும் புத்தகங்களைப் பற்றி எழுதக்கூடாது என்றும் ஒரு முடிவெடுத்தேன். படிக்கும்போதே இதைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்ன எழுதப்போகிறோம் என்னும் டிவிட்டர் ஃபேஸ்புக் ப்ளாக்கிய வியாதியில் இருந்து மீள்வது முக்கியமானதாகப் பட்டதால் இம்முடிவு. நல்ல பலன் தந்தது. புத்தக ரசனை என்பதே முக்கியம் என்ற உள்ளுணர்வு மீண்டு வந்தது. இப்படி எத்தனையோ மாற்றங்கள்.

மீண்டும் சிறுகதைகள் எழுதத் தொடங்கினேன். இன்னும் எழுதுவேன் போல. எதையும் இன்னும் வெளியிடவில்லை. இந்த தளத்தில் வாரம் ஒன்றாவது எதாவது எழுதலாம் என்ற நினைவு. இப்படி ஒரு தளம் வைத்துக்கொண்டு எதுவும் எழுதாமல் இருப்பதும் குற்ற உணர்ச்சியாக உள்ளது. ஒவ்வொன்றிலிருந்தும் வெளிவருதல் முக்கியமாகப் பட்டுவிடுகிறது. ராஜாவின் பாடல்கள் சிடியை தேடித் தேடி வாங்கியதிலிருந்து வெளிவந்ததுதான் தொடக்கம். உலகத் திரைப்படங்களுக்கு அடிக்ட் ஆனபோது அவற்றைப் பார்ப்பதையே 2 வருடங்களுக்கு முன்னால் நிப்பாட்டினேன். பெரிய அளவில் பர்ஸ் தப்பித்தது. பின்பு மலையாளப் படங்கள் வெறி. வெறி என்றாலும் நல்ல மலையாளப் படங்களே. இதில் கொஞ்சம் அடக்கி வாசித்ததால் பர்ஸ் ஓரளவு தப்பித்தது. யூ டியூபின் இலவசப் பணியும் மகத்தானதே. நேர்மை அறச்சீற்ற கனவாண்கள் என்னை மன்னிக்க.

சொல்வனத்தில் என் கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்த கவிஞானசூனியங்களின் புலம்பல்கள் இணையம் முழுக்க பிரசித்தமாக இருப்பதால் இது பற்றி நான் தனியே சொல்லவேண்டியதில்லை. சொல்லவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுமட்டுமே, கவிஞானசூனியங்கள் ஒருவேளை சரியாகவும் இருக்கலாம்.

புலம்பல்கள் தொடரும்.

கடவுளின் உரையாடல்

பனி விழும் இரவல்ல
வேர்வையின் துளிகள்
உடலெங்கும் பூத்திருக்க
அறையெங்கும் வீசிக்கிடக்கும்
நாற்றத்துக்குள்ளிருந்து
கடவுள் என்பவன் பேசிய குரலது
எப்போதோ அறிந்திருந்த மொழியென
ஒரு யோசனை
எப்போதும் புரிந்திராத மொழியென
ஒரு திடுக்கிடல்
சிதறி விழும்
எவர்சில்வர் டம்ப்ளர்கள்
எழுப்பும் ஒலியென ஒரு மயக்கம்
குழந்தையின் வீறிடல் என்ற உறுதி
இரண்டாம் சாமத்தில்
விடாது குரலெழுப்பும் சேவலும் சேர்ந்தபோது
வேலுடன் சேவலுடன் கொடியுடன்
ஆழ்நிலை மயக்க உலகில்
கடவுள் தெளிவாகப் பேசினான்
என் குற்றங்களைப் பட்டியலிட்டான்
நான் புரண்டு புரண்டு படுத்தேன்
காதுக்கருகில் வந்து அவன் சொல்லிக்கொண்டே போன
முடிவற்ற பட்டியலில்
அச்ச வேர்வைகள் பெருக பெருக
அவனுக்குக் களியாட்டம்
சைகையில் அவனை அடக்கமுடியவில்லை
மிரட்டலுக்கும் மசியவில்லை
மெல்ல விசும்பலும்
பிறகு கதறலுமென
காற்றில் வீசப்பட்ட என்னுடலில்
ஊழித் தாண்டவம்
காறித் துப்பினேன்
அதையும் குற்றப் பட்டியலாக்கினான் அவன்
ஒரே ஒரு கேள்வி கேட்க மன்றாடினேன்
காலில் விழுந்து புரண்டழுததும்
மெல்லப் புன்னகைத்தான்
நீயெல்லாம் கடவுளா என்றேன்
விடியத் தொடங்கியது வானம்.

தனிமையின் மொழி

ஓவியம் என்றேன்
காற்றில் எழுதுகிறாயா என்றான்
நிழல்!
நீரின் பரப்பிலா?
தேவதை வருவாள்!
வேசியைச் சொல்கிறாயா?
நற்சொல் சொல் என்றால்
கெட்ட வார்த்தை வருமோ என்றொரு அச்சம்
கேள்வி ஏதுமின்றி
மௌனம் காத்தேன்
எதாவது பேசேன் என்றான்
மீண்டும் எதாவது பேசேன்
மீண்டும் மீண்டும்
காமம் பின்காத்திருக்க
காதலொடு பெண்ணிடம்
ஓர் ஆண் கொள்ளும் அதே கெஞ்சல்
நானேதான் எனச் சொல்லிவிடுவானோ என்று
நீ யார் எனக் கேட்கவே இல்லை.

உலகம் அமிழும் ஓவியம்

புறாக்கூண்டுக்குள் இருந்து
புறாவை விரட்டிவிட்டு
கழுகை அடைத்து வைக்கும்
மனநிலையை எப்படி எதிர்கொள்வது
மண்ணுள்ளிப் பாம்புக்காக
கோடாரியைத் தேடியலையும்
ஒரு சித்திரத்தை
காகிதத்தில் வரைந்து
மெல்ல மெல்ல உயிர் பெருக்க
காகிதம் அமிழ்ந்து
அறை மூழ்கி
ஊர் தாண்டி
உலகம் அடங்காமல்
வெளியில் திமிறியபோது
தன்னை அவ்வோவியம்
தழுவிக்கொள்ள
சிறகை அடித்தபடி
பறக்காமல் நிலைபெற்றுவிட்ட
இன்னொரு ஓவியமாகக்
காத்துக் கிடக்கிறது
விரட்டிவிடப்பட்ட புறா.

ஹரன்பிரசன்னா

Share

காலில் விழுதல்

அரவிந்தன் நீலகண்டனுடன் ஒருமுறை ராமகிருஷ்ணா மடம் சென்றிருந்தேன். கிட்டத்தட்ட அரசர் போல பேசிக்கொண்டிருந்த அவர் உள்ளே சென்றதும் ஸ்வாமியைக் கண்டதும் யாதுமற்றோர் ஆண்டியாகப் பொத்தென காலில் விழுந்துவிட்டார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நானும் காலில் விழுந்தேன். அரவிந்தன் அவர் உடல் முழுக்க மண்ணில் பாவ காலில் விழுந்தார். நான் ஸ்டைலாக வேறு வழியில்லாமல் காலில் விழுவது போல விழுந்தேன். காலில் விழுவது என்றாலே ஒருவித அலர்ஜி. 90களில் ஜெயலலிதாவின் ஆட்சியில் ஏற்பட்ட எரிச்சலால் இருக்கலாம். யார் காலில் யார் விழுவது என்ற விவஸ்தை இல்லாமல் ஜெயலலிதா காலில் எல்லாரும் விழுவது குறித்து பெரிய எரிச்சல் இருந்தது. அதைத் தொடர்ந்து காலில் விழுவதே கேவலம் என்ற மனப்பான்மை வந்துவிட்டது. அரவிந்தன் ஸ்வாமிஜி காலில் விழுந்ததும், எனக்கு அவர் காலில் விழவேண்டும் என்ற ஒரு நெருக்கடி உண்டாகி, அதைத் தவிர்க்க முடியாமல்தான் ஸ்வாமிஜி காலில் விழுந்தேன். ஸ்வாமிஜி காலில்தானே விழுந்தோம் என்று மனதை எவ்வளவு தேற்றிக்கொண்டாலும் இப்படி காலில் விழும்படி ஆகிவிட்டதே என்று மனது உறுத்திக்கொண்டே இருந்தது. அரவிந்தனிடம் என்ன இப்படி திடீர்னு விழுந்திட்டீங்க, எனக்கும் வேற வழியில்லாம விழவேண்டியதாப் போச்சு என்றேன். எனக்கு விழணும் விழுந்தேன், உங்களுக்கு வேண்டாம்னா விழவேண்டாம் என்று சொல்லிவிட்டார். இன்னும் எதாவது கேட்டால், இங்கன பாத்துக்கிடுங்க என்று ஆரம்பித்துவிடுவார் என்பதால் அப்படியே விட்டுவிட்டேன்.

22ம் வயதில் எனக்குப் பூணூல் போட்டார்கள். வயதானவர்கள் காலில் எல்லாம் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும். அம்மா சொல்ல சொல்ல நானும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டிருந்தேன். என் அக்காவின் நண்பர் ஒருவர் வந்திருந்தார். எனக்கும் அவருக்கும் 4 வயதுதான் வித்தியாசம் இருக்கும். ரொம்ப அழகா இருக்காங்கள்ல என்று மரியாதையுடன் அந்த அக்காவை நண்பர்களுடன் சைட் அடித்திருக்கிறேன். எதிர்பாராத ஒரு நொடியில் என் அம்மா அவர் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கச் சொல்லிவிட்டார். இந்த அம்மாவைக் கொலை செய்தால்தான் என்ற என்று தோன்றிவிட்டது. அந்த அக்கா சென்றதும் என் அம்மாவை உண்டு இல்லை என்றாக்கிவிட்டேன். என் திருமணத்துக்கு முன்பாக என் அம்மாவிடம் நானே யார் கால்ல விழணுமோ அவங்க கால்ல விழுவேன், நீ சொல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

இணையக் குழுமம் ஒன்றில் இப்படி காலில் விழுவது பற்றிப் பேச்சு வந்தபோது, காலில் விழுவது தேவையற்ற செயல் என்று சொன்னபோது, அடித்துத் துவைத்துக் காயப் போட்டுவிட்டார்கள். சொந்தக்காரர்கள் காலில் திருமணத்தில் விழுவது வேறு, கண்ட கண்ட மேடைகளில் இப்படி அரசியல்வாதிகள் காலில், குரு என்று சொல்லி மாஸ்டர்கள் காலில் விழுவதையெல்லாம் என்னால் சகிக்கமுடியவில்லை என்று சொன்ன நினைவு. ஆனால் காலில் விழுவதே இந்திய மரபு என்று தீர்ப்படித்துவிட்டார்கள். என்ன இந்திய மரபோ! இந்த இந்திய மரபில் ஏதோ ஒரு வகையில் அடிமைத்தனம் ஒளிந்திருப்பதாகவே தோன்றுகிறது. முதலிரவில் கணவன் காலில் மனைவி விழவேண்டும். மனைவி கணவன் காலில் விழவா முதலிரவில் காத்துக்கொண்டிருப்பார்கள்? ஆனால், அத்தை மாமா சொல்லி அனுப்பினாங்க என்று சொல்லி, நான் எத்தனையோ மறுத்தும், 19 வயதுப் பெண் அப்படித்தான் காலில் விழுந்தாள். இந்தச் சடங்கும் நல்லதுக்குத்தான். அதற்குப்பின் நான் எத்தனையோ தடவை கெஞ்சியும் அவள் சொன்ன பதில், நான் என்ன லூஸா உங்க கால்ல விழுறதுக்கு என்பதுதான். வரலக்ஷ்மி விரதத்தில் மட்டும் வேறு வழியில்லை, மனைவி கணவன் காலில் விழுந்துதான் ஆகவேண்டும். ஆனால் இந்தப் பண்டிகை வருடத்துக்கு ஒருமுறைதான் வந்து தொலைக்கிறது.

தினமும் மனைவி கணவன் காலில் விழுந்தால் குடும்பத்துக்கு நல்லது என்று எனக்குத் தூரத்து உறவான ஒரு அக்காவின் மாமியார் சொல்லிவிட்டார். அவர்கள் வீட்டுக்குப் போயிருக்கும்போது அந்த அக்கா தன் கணவனின் காலில் விழுவதைப் பார்த்து எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. எப்பலேர்ந்து இதெல்லாம் என்றேன். மாமியார் சொல்லியிருக்காங்க, குடும்பத்துக்கு நல்லதாம் என்றார். ஒரு மாதம் கழித்து மீண்டும் அந்த அக்கா வீட்டுக்குச் சென்றிருந்தேன். இரவு நெடுநேரம் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தோம். அப்படியே தூங்கப் போய்விட்டோம். திடீரென்று அந்த அக்கா ஏன்றீ ஏன்றீ என்று தன் கணவனை பதட்டத்துடன் அழைத்தார். அந்த அண்ணன் ரெண்டு ரூம் தள்ளி ஓரிடத்தில் படுத்திருந்தார். தூங்க ஆரம்பித்திருந்தார். தூக்க கலக்கத்துடன் என்ன என்றார். ஒரு நிமிஷம் இங்க வாங்க, கால்ல விழ மறந்துட்டேன், காலை காமிச்சுட்டுப் போங்க என்றார். அவர் புலம்பிக்கொண்டே எழுந்து வந்து காலைக் காண்பித்தார். அக்கா உடலை கொஞ்சம் கூட நகட்டாமல் படுத்தமேனிக்கு தன் கணவனின் காலை லேசாகத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு தேங்க்ஸ்றீ என்றார். நான் தலையில் அடித்துக்கொண்டேன்.

இத்தனை காலில் விழுதலும் வேறு மாதிரியானது.

நேற்று நாதஸ்வரம் நாடகத்தில் வேறு ஒரு மாதிரியாகக் காலில் விழுந்தார்கள். 4 வாரங்களாக செம அறுவையாகப் போய்க்கொண்டிருந்த நாடகத்தில், இனிமே இந்த எழவைப் பார்க்கத்தான் வேண்டுமா என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று புதுக்கதையை நுழைத்து கொன்றெடுத்துக்கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராமல் உணர்ச்சி மயமான கட்டம் நீண்ட நாள்களுக்குப் பிறகு. நான் முதலிலேயே இந்தக் காட்சியை எதிர்பார்த்தேன். ஒட்டுமொத்த குடும்பமும் ஒரு சின்ன பெண்ணின் காலில் விழுகிறது, அவள் வீட்டை விட்டு ஓடிப் போய்விடக்கூடாது என்பதற்காக.

18 வயதில் பாலகுமாரன் நாவல்களை ஒன்றுவிடாமல் படித்துத் தீர்த்துக்கொண்டிருந்தேன். மொட்டைமாடியில் அவள் தலை வழியாக நைட்டியைக் கழற்றினாள் போன்ற வரிகள் எல்லாம் வாழ்நாளுக்கும் துரத்தி அடிக்கும். பதின்ம வயதுகளில் பாலகுமாரனைப் படிக்காமல் விட்டவர்கள் நிச்சயம் எதையோ இழந்தவர்கள்தான். அவரது நாவல் ஒன்றிலும் பழுத்த பிராமணர் ஒருவர் இப்படித்தான் தடால் என்று யார் காலிலோ விழுவார். நாவல் பெயர் நினைவில்லை. அந்த வரியைப் படித்தபோது உடலெங்கும் அதிர்வு பரவியது நினைவுக்கு வந்தது. வேர்கள்.

என் அத்தைக்கு 16 வயதில் திருமணம். என் தாத்தாவுக்கு அப்போது 60 வயது. கல்யாணத்தில் காப்பி வர லேட்டாகிவிட்டது. என் மாமாவின் அக்கா காப்பிக்காக பிரச்சினை செய்து, தன் தம்பியை தாலி கட்டவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். பெரிய களேபரம் ஆகிவிட்டது. என் தாத்தா தன் கனத்த சரீரத்தைத் தூக்கிக்கொண்டு கடும் கோபத்தோடு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் என் மாமாவின் அக்கா காலில் விழுந்துவிட்டார். எப்படியோ கல்யாணம் ஆகவேண்டும் என்பதற்காக. நான் இதனைப் பார்த்த நினைவில்லை. ஆனால் என் அம்மா உணர்ச்சி வேகத்தோடு தன் மாமனார் காலில் விழுந்ததை விவரித்தது, நான் கூடவே நின்று பார்த்த உணர்வை உண்டாக்கிவிட்டது. ’அத்தனை பேரும் பார்த்துக்கிட்டு இருக்காங்க. உங்க தாத்தா, நல்ல கனமான உடம்பு. அங்காரக்ஷதை நெத்தில தீர்க்கமா இருக்கும். கோஜன (கோபிக்கட்டி) முத்திரை எல்லாம் பார்த்தாலே பெரிய மனுஷன்னு கும்பிடத் தோணும். ஹெ எம்மா வேற இருந்திருக்காரா ஊர்ல நல்ல மரியாதை. நல்ல படிப்பு. ஆனா முன்கோபி. கோபம் வந்துட்டா என்ன செய்யறோம்னே இல்லை. உங்க பாட்டிக்கு கோவில்தான் கட்டணும். இப்படி ஒரு மனுஷன் கூட் வாழறதே தவம் மாதிரிதான். ஊர் மொத்தமும் கல்யாணத்துக்கு காத்துக்கிட்டு இருக்கு. இவளானா காப்பி வல்லைன்னு குதிக்கிறா. அப்பல்லாம் ஏது ஃபோன்? பால் லேட்டுன்னா என்ன பண்றது? இவ காப்பி இல்லைன்னா கல்யாணம் இல்லைங்கிறா. எங்களுக்கு என்ன செய்றதுன்னு தெரியலை. உங்கப்பா நான் காப்பி வாங்கிட்டு வரேன்னு ஓடறார். இவ பால் வந்து எனக்கு இங்க காப்பி போட்டாகணும்ன்றா. பார்த்தார் உங்க தாத்தா. சபைல அவ முன்னாடி வந்து நின்னார். தோள்ல இருந்த துண்டை எடுத்து இடுப்புல கட்டிக்கிட்டார். எப்படியோ கல்யாணத்தை பண்ணுங்கன்னு சொல்லி கை கூப்பிக்கிட்டு பொத்துன்னு சபை முன்னாடி அவ கால்ல விழுந்துட்டார். பஞ்சகச்சை கட்டிக்கிட்டு ஒரு பிராமணன் இப்படி கால்ல விழுறதைப் பாத்துட்டு எல்லாரும் பதறிட்டாங்க. எனக்கானா அழுகை ஒரு பக்கம், கோபம் ஒரு பக்கம். அவ அருகதை என்ன இவர் தகுதி என்ன. அவ வயசு என்ன இவர் வயசு என்ன. ஆனா கல்யாணம் ஒழுங்கா நடக்கணுமே. அப்புறம் அவ தன் தம்பியை தாலி கட்ட விட்டா. அந்த பிராமணர் கால்ல விழுந்த சாபம் சும்மா விடுமான்னு ஊரே பேசிக்கிட்டு இருந்தது.’

இது நடந்து 30 வருடங்களுக்குப் பிறகு எங்கள் தூரத்து சொந்தத்தில் இன்னொரு கல்யாணம் நடந்தது. அங்கேயும் எதோ பிரச்சினை. வீட்டு மாப்பிள்ளையை புது மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கவனிக்கவில்லை என்று வீட்டு மாப்பிள்ளை ஆட ஆரம்பித்துவிட்டார். சண்டை பெரிதாகி பெரிதாகி ஒரு கட்டத்தில் மாப்பிள்ளையின் தாய் கதறி அழ ஆரம்பித்துவிட்டார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த புது மாப்பிள்ளை சட்டென முன்னே வந்து, என்னவோ அம்மா தப்பு பண்ணிட்டாங்க, மன்னிச்சுக்கோங்க என்று சொல்லி, கல்யாண வேஷ்டி சட்டையுடன் சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்துவிட்டார். அந்தக் கல்யாணத்துக்கு என் அண்ணாவும் சென்றிந்தார். காலில் விழுந்த கூத்து முடிந்ததும், அந்த மாப்பிள்ளையின் தாய்மாமா என் அண்ணாவைக் காண்பித்துச் சொன்னாராம். இதோ நிக்கிறானே இவன் தாத்தா ஊரே மெச்சின பெரிய மனுஷன். அவரே தன் பொண்ணுக்கு கல்யாணம் ஆகணுமேன்னு கால்ல விழுந்திருக்கார். நாமல்லாம் எம்மாத்திரம் என்றாராம். 30 வருடங்கள் கழித்து என் தாத்தாவின் செயல் ஒரு மண்டபத்தில் பேசப்பட்டதில் என் அண்ணாவுக்கு இனம் புரியாத சந்தோஷம், பெருமை. எனக்கும் அப்படியே.

என் தாத்தா காலில் விழுந்து 35 வருடம் கழித்து, என் மாமாவின் அக்கா மகனுக்கு கல்யாணம் நடக்க இருந்தது. கல்யாணத்துக்கு 1 மாதம் முன்பு என் மாமாவின் அக்காவின் கணவர் இறந்துவிட்டார். துக்க்கத்துக்கு வந்த என் மாமா தன் அக்காவைப் பற்றி எங்களிடம் சொன்னது, ஒரு பெரிய மனுஷனை காலில் விழ வெச்சா இப்படித்தான் ஆகும் என்றார்.

Share

செக்யூலரிசம் ஓர் எளிய அறிமுகம்

http://www.tamilhindu.com/2010/05/secularism-an-simple-introduction/

* ஒரு திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சி வரும். இஸ்லாமியரை வெட்டுவது போலக் காட்டுவார்கள். அடுத்த காட்சியிலேயே ஒரு ஹிந்துவை வெட்டுவது போல் காட்டினால் அதுதான் செக்யூலரிசம்.

* அதே சினிமாவிலோ வேறொரு சினிமாவிலோ, ஹிந்து கடவுள்களைத் தொடர்ந்து நிந்திப்பார்கள். இஸ்லாமிய, கிறிஸ்துவ கடவுளர்களை நிந்திப்பது போல காட்சி வைக்கமாட்டார்கள். இது பாதி செக்யூலரிசம். அதே சினிமாவில், இஸ்லாமிய கிறிஸ்துவ கடவுளர்களைப் பாராட்டி காட்சி வைப்பார்கள். இது முக்கால் செக்யூலரிசம். அதே படத்தில், இஸ்லாமிய கிறிஸ்துவ கடவுளர்களை நிந்திப்பது போலக் காட்சி அமைத்து, அதை ஹீரோ எதிர்த்து வீராவேச வசனம் பேசி, திட்டியவரைத் திருத்துவது போலவும் காட்சி அமைப்பார்கள். இதுதான் முழு செக்யூலரிசம்.

* ஹிந்துக் கடவுளர்களைப் பற்றி அரசியல் மேடைகளில் கடுமையாக முழங்குவார்கள். ஐயப்பன் எப்படி பிறந்தார் என்பார்கள். ஆனால் இஸ்லாமிய, கிறித்துவ கடவுளர்கள் பற்றிக் கேள்வி கேட்கமாட்டார்கள். அதுவே செக்யூலரிசம்.

* அல்லா, நபி, ஏசு பற்றி ஏதேனும் கேள்விகளை ஹிந்துத்துவவாதிகள் எழுப்பினால், ‘இது காலம் காலமாகச் சொல்லப்படும் மோசடி’ என்று பதில் சொல்லவேண்டும். இதெல்லாம் பிற்போக்குக் கூச்சல் என்று சொல்லவேண்டும். மத நம்பிக்கையாளர்களைப் புண்படுத்தாதீர்கள் என்று சொல்லவேண்டும். இதுவும் செக்யூலரிசமே.

* கருப்புச்சட்டைக்கு ஆதரவான நடிகர் என்று சொல்லிக்கொண்டு, படத்தில் நல்ல விஷயங்களைச் செய்பவர்களை கிறித்துவ ஊழியர்களாகக் காட்டவேண்டும். வில்லன்களை ஹிந்துக்களாகக் காட்டவேண்டும். இது செக்யூலரிசத்தின் இன்னொரு விளக்கம்.

*ஹிந்து மதத்தைச் சாடும் திரைப்படம் வந்தால் ஹிந்துத்துவவாதிகள் அதனைத் தடை செய்யப் போராடும்போது, நீங்கள் கலைக்காகவும், அடிப்படை உரிமைக்காகவும் போராடவேண்டும். இது பாதி செக்யூலரிசம். அதுவே மற்ற மதங்களைச் சாடும் படம் வந்தால், கலையையும் அடிப்படை உரிமையையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, மத நம்பிக்கையாளர்களின் மனம் புண்படுகிறதே என்று அவர்களுக்கு ஆதரவாகப் போராட வேண்டும். இது முழு செக்யூலரிசம்.

* பிராமணராகப் பிறந்திருப்பார். பிராமணர்களைத் திட்டும் பிராமணரல்லாதவரை விடக் கடுமையாக, பிராமணர்களைத் திட்டுவார். இது செக்யூலரிசம்.

* பிராமணராகப் பிறந்திருப்பார். உலகெங்கும் இருக்கும் அடித்தட்டு மக்களுக்காகக் குரல் கொடுப்பார். தமிழ்நாட்டில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்காகப் போராடும்போது, நினைவாக பிராமணர்களை ஒதுக்கிவிடுவார். இதுதான் செக்யூலரிசம்.

* தீர்க்கமுடியாத பிரச்சினை வந்தால், இது பிராமணியத்தின் சதி என்றோ ஹிந்து மதத்தின் சதி என்றோ சொல்லிவிட்டால், நீங்கள் செக்யூலர்.

* மிகப் பெரிய இலக்கியவாதியாக இருப்பார். உலகெங்குமுள்ள நல்ல எழுத்துகளை, புராணங்களைத் தேடிப் படிப்பார். ஹிந்து மத சாஸ்திரங்களை மட்டும் நிந்திப்பார். இந்தப் பிழைக்கத் தெரிந்த வழியின் பெயரும் செக்யூலரிசமே.

* ஊர் ஊராகக் கோவிலுக்குப் போவார்கள். வீட்டில் உள்ள நஞ்சு குஞ்செல்லாம் சாமி கும்பிடும். ஆனால் அவர் பெரிய பகுத்தறிவாளராகத் தன்னைக் காண்பித்துக்கொள்வார். பெரியாரிஸ்டுகளைவிட அதிகமாகப் பெரியாரை மேற்கோள் காண்பிப்பார். இது செக்யூலரிசத்தின் முக்கிய பாடங்களுள் ஒன்றே.

* புராதன ஹிந்துப் பாரம்பரியத்தைக் கடைபிடிக்கும் குடும்பத்தில் பிறந்திருப்பார். ஆனால் பேசுவதெல்லாம் ’பகுத்தறிவுத்தனமாக’ இருக்கும். மறக்காமல், தனது திருமணத்தையோ, மகள் கல்யாணத்தையோ, ஜாதி பார்த்து, மதம் பார்த்து, குலம் பார்த்து, கோத்திரம் பார்த்து நடத்திக்கொள்வார். இவரே நம் நாட்டின் சிறந்த செக்யூலர். மற்ற செக்யூலர்களும் இந்த செக்யூலரைப் பார்த்துத் தலையாட்டும்.

* கடவுளே இல்லை என்பார். நோன்புக் கஞ்சி குடிப்பார். ‘நான் பிழைத்தது எல்லாம் வல்ல இயற்கையின் சக்தி’ என்று சொல்லிவிட்டு, இயற்கையை வழிபடுவர்களைக் கிண்டல் செய்வார். இவரும் செக்யூலரே.

* புராணங்களின் புரட்டுக் கட்டுரைகள் என்று நெடிய நெடிய புத்தகங்கள் எழுதுவார். குரானைப் பற்றியோ, பைபிள் பற்றியோ பேசமாட்டார். இவரும் செக்யூலர்தான்.

* ஜாதிக் கட்சித் தலைவராக இருப்பார். மதச்சார்பின்மை பற்றி முழங்குவார். மதமாற்றம் குறித்து ஆதரவு தெரிவிப்பார். மதம் மாறிய மன்னன்கள் மறக்காமல் கல்யாணத்துக்குப் பெண் தேடும்போது ஜாதியோடு தேடுவார்கள். கட்சித் தலைவர் மொய் வாங்கிவிட்டு திருமணத்துக்குச் சென்றுவிட்டு அரசியல் பேசிவிட்டு மொய் வைத்துவிட்டு வருவார். இதுவும் செக்யூலரிசத்தின் பாடங்களுள் ஒன்று.

* தமிழுணர்வையும் தமிழனைப் பற்றியும் மேடையாக மேடையாக முழங்கவேண்டும். ஊரில் உள்ள வடமொழிப் பெயர்களையெல்லாம் மாற்றித் தரவேண்டும். உங்கள் பெயரை மாற்றக்கூடாது. இது தமிழுணர்வுதானே என நினைப்பீர்கள். தமிழுணர்விலிருந்து பக்தி வழியாக ஹிந்து மதத்துக்கு வந்து அதனை சாடிவிட்டால், நீங்கள் செக்யூலர்தான்.

* சங்ககாலத் தமிழனுக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு பக்கம் சொல்லவேண்டும். ஆனால் அவன் சிந்தித்த ஹிந்து மத பக்தியை இகழவேண்டும். இதை முக்கியமான வேலையாகச் செய்யக்கூடாது. எப்போதெல்லாம் பொழுது போகவில்லையோ அப்போதெல்லாம் செய்யவேண்டும். இது செக்யூலரிஸத்தின் பிற்சேர்க்கைகளில் ஒன்று.

* ஊரிலுள்ள எல்லாக் கோவிலுக்கும் செல்லவேண்டும். ஏனென்றால் ஒரு செக்யூலரின் மனைவி நிச்சயம் கடவுள் பக்தி உள்ளவராகத்தான் இருப்பார். ஆனாலும் அசரக்கூடாது. கோவிலுக்குச் செல்வதே அங்கிருக்கும் சிலைகளைப் பார்க்கத்தான் என்ற பாவத்துடன் செல்லவேண்டும். என்னே தமிழனின் கைவண்ணம் என்று பேட்டியும் கொடுக்க உங்களுக்கு வக்கிருக்குமானால், உங்களுக்கு செக்யூலர் மாலைதான். (காலையில் சாப்பிடும்போது இட்லிக்கு உங்களுக்குப் பிடித்த வெங்காய சட்னிக்கு பதிலாக தனக்குப் பிடித்த தேங்காய் சட்னி செய்துவிட்ட மனைவியை கண்டமேனிக்குத் திட்டியதை சுத்தமாக மறந்துவிட்டு, எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் என் மனைவியின் கடவுள் நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுத்து, அடுத்தவர் சுந்தந்திரத்தை மனதில் வைத்து கோவிலுக்குச் சென்றேன் என்றும் சொல்லிக்கொள்ளலாம். இதுவும் செக்யூலர் இமேஜையேதான் தரும்.)

விதி 1: இத்தனை விதிகளில் பாதியைக் கடைப்பிடித்தால், நீங்கள் முற்போக்காளர். நான் மிகவும் போராடி இந்த இடத்துக்குத்தான் வந்துகொண்டிருக்கிறேன்.

விதி 2: முழுவதையும் கடைப்பிடித்தால்… கங்கிராட்ஸ். தமிழகத்தின் முதல்வராகவே உங்களுக்கு வாய்ப்பிருக்கிறது.

Share

பபாஸி தேர்தல் – இது எங்க ஏரியா!








================




================



Share

சேவை அமைப்புகளும் ஒரு ஞாயிற்றுக் கிழமையும்

இந்தியா சுடர் என்னும் சேவை அமைப்பு இந்தியாவெங்கும் உள்ள கிராமங்களில் நிறைய சேவைகளை முன்னின்று செய்துவருகிறது. பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்து தருதல், மாணவர்களுக்கு தனிப்பட்ட மனப்பயிற்சி வகுப்புகள் அமைத்தல், பள்ளிகளில் நூலகங்கள் உருவாக்குதல், ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் அமைத்தல் எனப் பல்வேறு செயல்பாடுகளைச் செயல்படுத்தி வருகிறது.

இந்தியா சுடர் ஏற்கெனவே கிழக்கு, ப்ராடிஜி உள்ளிட்ட பதிப்பகங்களில் இருந்து புத்தகங்களை வாங்கி, பள்ளி நூலகங்களுக்கு வழங்கியிருக்கிறது. இன்று, சென்னையில் உள்ள அனாதை (இந்த வார்த்தையைத் தவிர்க்கவே விரும்புகிறேன். வேறு எந்த வார்த்தை சரியான வார்த்தை எனத் தெரிந்தால், அதனைப் பயன்படுத்துவேன்) அமைப்புகள் பலவற்றைச் சேர்ந்த குழந்தைகளுக்கென பிரத்யேகமாக சில போட்டிகளை நடத்தினார்கள். இந்தியா சுடருன் இணைந்து, ட்ரீம்ஸ் இண்டியா, ஹெல்பிங் மைண்ட்ஸ் உள்ளிட்ட சேவை அமைப்புகளும் இதில் கலந்துகொண்டன. திருக்குறள் போட்டி, ஓவியப் போட்டி, மொழிபெயர்ப்புப் போட்டி, வினாடி வினா போட்டி எனப் பலப் போட்டிகள் நடந்தன.

கிழக்கு பதிப்பகத்தின் சார்பில் ‘இந்தியாவின் அடுத்த ஐந்து ஆண்டுகள் – என் கனவு’ என்னும் போட்டி நடத்தப்பட்டது.

இந்திய வரலாறு புத்தகத்தைப் படித்த திரு. டி.ஆர். சந்தான கிருஷ்ணன், இந்தப் புத்தகம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களையும் சென்றடைய வேண்டும் என்று விரும்பினார். அதற்குத் தன்னால் ஆன முயற்சியைச் செய்வதாகச் சொல்லி, இன்னும் சில ஆர்வர்லர்களுடன் சேர்ந்து, இந்தப் புத்தகத்தை இலவசமாக மாணவர்களுக்குக் கொடுக்க முன்வந்தார். இதனை ஒரு போட்டியின் வழியாகச் செயல்படுத்தினால், மாணவர்களை அது ஊக்குவிப்பதோடு, புத்தகத்தின் மதிப்பும் – அது ஒரு பரிசு என்ற அளவில் – கூடும் என்று கருதி, ‘இந்தியாவின் அடுத்த ஐந்து ஆண்டுகள் – என் கனவு’ என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டிகள் நடத்த விரும்பினார். அதனை கிழக்கு பதிப்பகம் செயல்படுத்துகிறது. இது குறித்த மேலதிக விவரங்களுக்கு: bookstokids.blogspot.com

இந்த இரண்டையும் ஒன்றாகச் செயல்படுத்த முடிவெடுத்து, இந்தியா சுடருடன் இணைந்து, மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி இன்று நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ‘இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு’ நூலின் முதல் பாகம் பரிசளிக்கப்பட்டது. இதன் இரண்டாம் பாகம் வெளிவந்தபின்பு, அப்புத்தகமும் இந்த மாணவர்களுக்கு தரப்படும்.

வெற்றி பெற்றவர்களின் புகைப்படங்கள், அவர்கள் எழுதிய கட்டுரைகள் bookstokids.blogspot.com வலைத்தளத்தில் பதிப்பிக்கப்படும்.

இந்தத் தலைப்பை முதலிலேயே கொடுக்காமல், அந்த நேரத்தில் மாணவர்களுக்கு அறிவித்தோம். சில மாணவர்கள் மிகச் சிறப்பாக எழுதினார்கள் என்றே சொல்லவேண்டும். எல்லா மாணவர்களுக்குள்ளும் ஒற்றுமை என்னும் உணர்வு வேரூன்றியிருப்பதைப் பார்க்கமுடிந்தது. எல்லாரும் சொல்லி வைத்தாற்போல் வறுமையைப் பற்றிப் பேசினார்கள். சில மாணவர்கள் கணினித் துறையில் இந்தியா உலகை ஆளவேண்டும் என்று எழுதினார்கள். லஞ்சம் ஒழியவேண்டும் என்று மாணவர்களுக்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால் அது எப்படி என்றுதான் தெரியவில்லை. இந்தியா ஒரு வல்லரசு ஆவதில் மாணவர்களுக்குப் பெரும் ஆர்வம் இருப்பதைப் பார்க்கமுடிந்தது.

சில மாணவர்கள் வித்தியாசமாகவும் எழுதியிருந்தார்கள்.

ஒரு மாணவர் அப்துல்கலாம் பிரதமராகவேண்டும் என்று எழுதியிருந்தார்.

ஒரு மாணவர் இனி அமெரிக்கா இந்தியாவை ஆளமுடியாது என்றும், ஆளக்கூடாது என்றும் எழுதியிருந்தார்.

ஒரு மாணவர் சுற்றுப்புறச் சூழல் தூய்மை பற்றி எழுதியிருந்தார். அதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பது அவர் எண்ணம்.

இரண்டு மாணவர்கள் விடுமுறை விண்ணப்பம் எழுதியிருந்தார்கள்.

வித்தியாசமான நாளாக இன்று கழிந்தது.

இந்தியா சுடரைப் பற்றி ஆசிரியர் சண்முக வடிவு சொல்லும் கருத்துகளைக் கேளுங்கள்.

கட்டுரைப் போட்டியில் பங்குபெற்ற மாணவர்களில் ஒரு பிரிவு மாணவர்களைக் காண்பிக்கும் வீடியோ:

இது போல, கிழக்கு பதிப்பகத்தின் மூலம் போட்டிகள் நடத்தி, மாணவர்களுக்குப் புத்தகங்களை பரிசளிக்க விரும்புகிறவர்கள் haranprasanna at nhm.in என்னும் முகவரிக்கு மடல் அனுப்பலாம். பள்ளி மாணவர்களுக்கு படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்க வேறு ஏதேனும் கருத்துகள் இருந்தாலும் சொல்லவும்.

இது போக, இன்று ஒரு ஆசிரியர் – கரூர் என நினைக்கிறேன் – பேசினார். அவரை வீடியோ எடுத்தேன். ஏதோ ஒரு கணத்தில் அது அழிந்துவிட்டது. 🙁 அதனை எப்படியும் நாளை மீட்டெடுத்துவிடுவேன். அதனைத் தனிப்பதிவாகப் போடுகிறேன். இன்றைய ஹைலைட்டே அந்த அரசு தலைமை ஆசிரியரின் பேசுத்தான். அது அழிந்தது பெரிய வருத்தமாகிவிட்டது. 🙁

Share

கொஞ்சம் மெண்ட்டல் ப்ளாக்

நீண்ட நாள்களாக எதுவுமே எழுதவில்லை. கொஞ்சம் மெண்டல் ப்ளாக். 🙂

நேற்று வந்த ஒரு லிங்க்கை க்ளிக் செய்யக்கூடாது என்று நினைத்துக்கொண்டே ஞாபகமாக க்ளிக் செய்தேன். உடனே ‘தமிழ்க் கவிதைகள் சப்ஸ்கிரைப் செய்யப்பட்டுவிட்டது’ என்றார்கள். கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. எப்போதெல்லாம் ஃபீட் பர்னரில் கவிதைகள் வருமோ அப்போதெல்லாம் எனக்குக் கவிதைகள் வருமாம். சரி, என்ன பெரிய என்று இருந்துவிட்டேன்.

இன்றே ஒரு கவிதை வந்தது.

இன்று சம்பள நாள் என்பது கவிதைத்தலைப்பு. மங்களகரமாகத் தலைப்பு வைத்திருக்கிறார்கள் என்று மேற்கொண்டு படித்தேன்.

பால்காரனுக்கு இவ்வளவு…
பள்ளிக் கட்டணம் இவ்வளவு…
மளிகை சாமானுக்கு இவ்வளவு…
வீட்டு வாடகைக்கு இவ்வளவு…
தீபாவளி செலவுக்கு இவ்வளவு…
என வரிசையாய்
கணக்கு போட்டபடி
அலுவலகம் வந்து சேர்ந்தேன்…

மாலைக்குள் அத்தனை வேலையையும்
முடித்து விட்டு சம்பளத்திற்காகக்
காத்திருந்தேன்..!
அழைத்துச் சொன்னார் முதலாளி
இம்மாதம் சம்பளமில்லை
அடுத்த மாதம் பார்க்கலாமென்று.

என்னுடைய அத்தனை
கணக்குகளும்
இந்தியனின் எண்கணிதக்
கண்டுபிடிப்பில் வந்து நின்றன..!

ஏமாற்றத்தோடு
வீடு திரும்பினேன்…
சிரித்தபடி வரவேற்ற
என் இல்லாள்
விபரமறிந்ததும்
வாடி நின்றாள்..!

எனைப் பார்த்து ஓடி வந்த
என் நான்கு வயது மகன்
வெற்றுக் காகிதத்தைக் காட்டி
சிரித்தபடி கேட்டான்
‘அப்பா..! இதோ என் சம்பளம்…
உன் சம்பளம் எங்கே..?’

அவனுடைய சம்பளத்தைப் பார்த்தேன்
அந்த வெற்றுக் காகிதம்
எனைப் பார்த்து சிரித்தது..!

உடனே அன்சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன்.

இந்த மாதிரி கவிதைகளையெல்லாம் படித்து, எழுதித்தான் வளர்ந்தோம் என்பது உண்மைதான். நான் இதுபோன்று கவிதைகள் எழுதியபோது, அதனை வாசித்தவர்கள் எப்படி தவித்திருப்பார்கள் என்பது தெளிவாகப் புரிகிறது. பாவம் அவர்கள். அவர்களின் வயிற்றெரிச்சல் என்னைத் தொடர்ந்து வந்து மிரட்டுகிறது போலும். இப்படி கவிதை எழுதுபவர்கள் கொஞ்சம் மெனக்கெட்டால் நல்ல கவிதைகள் எழுதிவிடமுடியும் என்பதும் உண்மைதான். இந்தக் கவிதையை எழுதியவர் சீக்கிரமே மிக நல்ல கவிதைகள் எழுதத் தொடங்கிவிடுவார் என்று நம்புவோம்.

(பின்குறிப்பு: மெண்டல் ப்ளாக்கைத் தடுக்கு இனி இது போன்ற டைரிக் குறிப்புகள் அடிக்கடி வரும்!)

Share