Archive for கவிதை

இப்போது வேண்டாத மழைக்கு – கவிதை

இம்மழை எனக்காகவே பெய்கிறது, நானறிவேன்
நான் இம்மழையைக் கவிதையில் பிடிக்க விரும்புகிறது
எதிர்பாராத ஒரு நேரத்தில்
இம்மழை அதற்காகவே பெய்கிறது
மூடியிருக்கும் கதவிடுக்கின் வழியே
வழிந்து வரும் நீர் ஏக்கத்துடன் பார்க்கிறது
என்னை எழுதேன் என்று
வெளியில் கேட்டுக்கொண்டிருக்கும்
ஹோவென்னும் சத்தத்தை மீறிக்கொண்டிருக்கிறது
அறைக்குள் சுற்றும் ஃபேனின் சத்தம்
நான் மழைக்குச் சொல்லவில்லை
வானெங்கும் என் கண்கள்
கொஞ்சம் வெயிலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதென்று
என்னையும் மழையையும்
பிரித்திருக்கும்
சுவர்களின் கீறல்களின் வழியே
இன்னும் உள் வடிந்துகொண்டிருக்கிறது மழை நீர்

Share

மரணத்தின் நிகழ்வு – கவிதை

யாராலும் தடுக்கமுடியாத
இந்நிகழ்வின் மரணம் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது
இக்கணத்தை
கால ஓட்டத்தில்
மனப்பிரதியில்
அச்செடுத்து வைக்கிறேன்
ஓர் தலைசிறந்த பார்வையாளனாக
வெற்றுக் கடமையுணர்வுடனல்லாமல்
உள்ளார்ந்த ஐக்கியத்துடன்
இந்நிகழ்வு
நிகழ்ந்துகொண்டிருக்கும்
இந்நேரம்
மிக இரம்மியமானது, இனிமையானது
நீங்கள் அறிவீர்களா?
மேல்மூச்சு வாங்கிக்கொண்டிருக்கும்
கிழவியைச் சுற்றிப் பெருங்கூட்டம்
அவள் வைத்த வாதா மரத்திலிருந்து
வாதாங்கொட்டை கீழே விழும் ஒலி
சொத்.

Share

சௌந்தரம்மாளின் நினைவுகள் – கவிதை

சௌந்தரம்மாளைப் பார்க்கவேண்டும்
நேற்றுதான் அவள் பெயரை அறிந்திருந்தேன்
காகிதக் கப்பல்கள் பொதுமிக் கிடந்த நாளொன்றில்
நிறைய ஃபோன்களுக்குப் பின்
சௌந்தரம்மாள் வீட்டைக் கண்டேன்
வீடெங்கும் தோசை மணம்
சௌந்தரம்மாள் ஒரு சிறிய அறையில் படுத்திருந்தாள்
நான் உள்ளே செல்லவில்லை
கையிலிருந்த ஆவணத்தைத் தந்து கையெழுத்து வேண்டுமென்றேன்
மகனின் முகத்தில் அகற்றவியலாத சோகம் அப்பியிருந்தது
திரையில் மெல்ல நகரும் கலைப்படம் ஒன்றின்
கதாநாயகன் போல அதை வாங்கிச் சென்றான்
மறுநாள் சௌந்தரம்மாள் இறந்துவிட்டதாகச் சொன்னார்கள்
பார்வதி தியேட்டரை அடுத்துள்ள சந்தில் நுழைந்து மீளும்போதெல்லாம்
என்னளவில் வயது ஒரு நாளேயான
நான் பார்த்திராத சௌந்தரம்மாள் பிறந்துகொண்டேயிருக்கிறாள்

Share

ஆளுமை – கவிதை

எதிர்பாராமல்
யாரோ எறிந்த பந்தின்
விசை தாங்காமல்
நொறுங்கியது கண்ணாடிச்சுவர்
மீஉறுதியின் உச்சப்புள்ளி
உடைந்து போன சில்லுகள்
கொஞ்சம் மிச்சத்துடன்
என் கேள்வியோ
மீண்டு
உட்குவிந்த வலையாய்
துப்பும்போது
விசை தாங்குமோ
வலையாகுமோ
அவ்வாளுமை

-oOo-

Share

கூத்து – கவிதை

த்ரௌபதி சேலையுரியப்பட்டபோது
அவள் பேசிய நீண்ட வசனங்களில்
அதிக நடிப்புக்கு அவள்-அதிக அழுகைக்கு அவர்கள்;
அர்ச்சுனன் தபசில்
ஒவ்வொரு படிக்கும்
நீண்ட பாடலை
பொறுமையுடன் கேட்ட
பெருமக்கள்-இவர்கள்
பேரன் பேத்திகள்
பார்வையாளர்களிலிருந்து
தங்களை நடிகர்கள் வரிசைக்கு
மாற்றிக்கொண்டவர்கள்

ராஜா மார்த்தாண்டவர்மன்
கையிருந்த பளபள அட்டைக் கத்தியைப்
(“சோதி முத்து” ரொம்பக் கஷ்டப்பட்டுத் தூக்குவானாம்!)
பத்திரமாக வைத்திருப்பதைப் பார்த்துப் போகிறார்கள்
இரசனை மிக்க
நவீன தேசத்துக்காரர்கள்

கூத்து மேடையின் படியெங்கும்
பதிந்திருக்கும்
கால்ரேகைகளிலும்
கிருஷ்ணனின் தலைக்கவசத்திலும்
பீமனின் கதையிலும்
செத்துப்போன சோதிமுத்து வீட்டில் கிடக்கும் சில
கூத்துப் பொருள்களிலும்
இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கிறது
இன்னும் வரப்போகும் ஜென்மங்களில்
அழியப்போகிற கூத்து

த்ரௌபதியிடம் சொல்லிவைக்கவேண்டும்
துச்சாதனனால் அவளுக்குத் தொல்லையில்லை என்றும்
அவளால் கிருஷ்ணனுக்கு வேலையிருக்காது என்றும்.

Share

நிழல் – கவிதை

ஒரு மனிதனின் பல புறவடிவங்களை
கேள்விக்குள்ளாக்கி
நிழல்களின் வடிவங்கள்
பட்டியலிட முடியாததாய்
சிறுத்தும் ஒடுங்கியும் நீண்டும், ஆனாலும்
கருமை மட்டும் பொதுவாய்

வெளிச்சமற்ற பொழுதிலும் கூட
நிழல்கள்
கூடவே இருக்கின்றன
இதை உருவேற்றிக்கொள்ளும்போது
தனிமையிலும்,
கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாய்
நாம் விரும்பாதபோது
புறந்தள்ளக்கூடியதாய்
விரும்பும்போது
ஏற்படுத்திக்கொள்ளக்கூடியதாய்
இலகுவான தோழமை

ஏதோ இருவரின் நிழல்கள்
சங்கமித்துக்கொள்ளும்
எது எவரது என்று இனம் காண இயலாதவாறு
காற்றுச் செல்லும் இடைவெளி
இருவருக்குமிருந்த போதும்

நிழலுருவத்தை வரையும் ஒருவனால்
நிழலை மட்டுமே வரைய முடியாது
வரைய வரைய
அது நிஜமாகிக்கொண்டே இருக்கும்

நினைவுகளினூடே
என்னைக் கடந்து
தன் திசைமாற்றி
என் கைப்பிடிக்குமோ
நான் முன்னகர முன்னகர
பின் நீளும்
என்
நிழல்?

[எனது இந்தக் கவிதை பிப்ரவரி கணையாழியில் வெளியாகியுள்ளது.]

Share

பிறிதொன்றில்லாத கணங்கள்-கவிதை

எப்போதும்

கனவொன்றில் பிம்பங்களை

கைபிடிக்கப்பார்க்கவும்

விழித்திருக்கும்போது

கனவின் தடங்களைத் தேடியும்.

     பிறிதொன்றில் ஆழக்கிடக்கும்போது

     சாரல் மழையாகிவிடுகிறது

     ஒரு குழந்தை சிரித்தடங்க

     ஒரு கவிதை முடிந்துவிடுகிறது.

     ஒரு வண்ணத்துப்பூச்சி

     கண்பார்வையிலிருந்து மறைந்துவிடுகிறது

திறந்திருந்த ஜன்னல் வழி சூரியன்

உள்வந்த சிவப்புக் கதிர்

அறையைச் சிவப்பாக்கி வைத்திருந்தது;

மஞ்சளாக்கிவைத்திருந்தது;

பின்வந்த நிறமற்ற கதிரோ

என்னை எழுப்பிவிட்டது.

     காலிடறும் நேரமும்

     கைதவறும் பீங்கானும்

     அப்பொழுதில்

     சாரலையும்

     ஒரு கவிதையும்

     ஒருசேரக் கொண்டுவருகின்றன

     பிறிதொன்றில்லாத கணங்களில்.

Share

பயணம் – கவிதை

–எப்போதும் வறண்டு கிடக்கும் ஏரியில்

நிறைந்திருந்த நீரில்

காத்திருந்தன

இரண்டு வெள்ளை நிற நீர்ப்பறவைகளும்

ஒரு சாம்பல் நிற நீர்ப்பறவையும்.

–வழியெங்கும்

குட்டைப் புதர்ச்செடியில் பூத்திருந்தன

வண்டுகள் சுற்றாத

மணமற்ற

சிறிய

மஞ்சள் நிறப்பூக்கள்.

–பெருங்காற்றில்

கிழிந்திருக்கும் வாழை இலைகளில்

காய்ந்திருக்கிறது பறவையின் எச்சம்.

–பிளந்திருந்த மரமொன்றில்

உயிர்த்திருக்கிறது காளான்

இப்படியாக

குறித்து வைத்த படிமங்கள் போக

ஒரு பயணக்கவிதை எப்போது பேசப்போகிறது

இடப்புறச் சன்னலினூடாக

கண்ணுக்கு வராமல்

தொலையும் கவிதைகளை.

Share