Archive for கவிதை

சாலை – கவிதை

தவிர்க்கவியலாத
கரும்பாம்பின் வசீகரத்தோடு
விரிகின்றன
சாலையோரங்கள்

செல்லும் வழியெங்கும்
முலை தரையழுந்த
ஒருக்களித்துப் படுத்திருக்கிறாள்
நீலி

பகுதி நிழல் படர்ந்து
ஒதுங்கியிருக்கும்
காரின்
கணத்தோற்றம்
ஓவியம்

நிழல் கருமை
இருள் கருமை
கருமையுள்
மூழ்கி
வெளி திளைக்கிறது
அதிகாலை
மனமெங்கும் விரவிக்கிடக்கும்
அழுத்தங்களை
துடைத்தெடுக்கிறது
பால் நீல வானம்
வானம் கடல்
அலையும் அமைதியுமாக
அலைந்தும் பரந்தும்
கிடக்கிறது கடல்
அமைதி
பேரமைதி

வாய் பிளந்து நிற்கும்
சாலையோர நீலியின்
வாய்க்குள் புகுந்து
வெளி வருகிறது
என் சுஸுகி

-oOo-oOo-

Share

திறந்திருக்கும் ஜன்னலோடு சில மணித்துளிகள் – கவிதை

நீண்ட நெடுவனமாய்
மாறிவிட்ட நிலத்தில்
நான் நடந்துகொண்டிருந்தபோது
பூ கொண்டுவந்து கொடுத்தாள்
ஒரு சிறுமி
நேற்று காலையில்
சாலையைக் கடக்கும்போது
அடிபட்ட நாய்க்குட்டி
துடிதுடித்துக்கொண்டிருந்தது;
அதன் இரத்தத் துளிகளை
அப்பூவில் கண்டேன்
பழம் வேண்டுமா என்றாள் ஒரு பாட்டி.
இன்று காலையில்
வீட்டின் முன்பு
வெகு நேரம்
பிச்சைக்காகக் காத்துக்கொண்டிருந்தவளின்
சாயலில் இருந்தாள் அவள்.
தேன் கொண்டுவந்தவனின்
முகத்தைப் பார்க்க நான் மறுத்தேன்
அவன் என்னைக் கேலி செய்யத் தொடங்கினான்
நடந்துகொண்டிருந்த என் கால்கள்
ஓடத் துவங்கின.
நீண்ட நெடும் வனம்
முடியவே இல்லை.
பெரும் மூச்சிரைப்புக்கு நடுவே
தேன் கொண்டு வந்தவன்
கத்தத் துவங்கும்போது
அறைந்து சாத்தினேன்
என் ஜன்னல்களை.

Share

இரவின் படம் – கவிதை

அன்று தீடீரென்று மழை பெய்துவிட்டிருந்தது.
தலைமாட்டில் அமர்ந்துகொண்டு விஜிதா விடாமல்
தக்காண பீடபூமி பற்றி படித்துக்கொண்டிருந்தாள்
மழை போலவே திடீரென விரிந்த என் எண்ணச் சிக்குகளின்
-அது கனவாகவே இருக்கவேண்டும்.
ஒவ்வொரு பிம்பத்திலும் ஒவ்வொரு தாமரைப்பூ இருந்தது
தலைமாட்டில் திடீரென
(a+b)3-ன் சத்தம்
பாதி திறந்த கண்களின் வழியே உள் நுழைகிறது
படபடத்துக்கொண்டிருக்கும் இடாகினிப் பேய்களும்.
எப்படியோ உறங்கியிருக்கிறேன்/விழித்திருக்கிறேன்.
நானிருந்த சூழலுக்கு மிக அந்நியமாய் அறை விளக்கு
மீண்டும் கண்மூட
என் புலன்களின் வழியே மலர்கிறது
முதல் தாமரைப்பூ

Share

வாசலில் நிற்கும் பெண் – கவிதை

சில வருடங்களாய் வாசலில் நிற்கிறாள் அப்பெண்
அதிகாலை வேளைகளில் அவளை உணர்வதுண்டு
அவளின் கண்கள் சதா அலைந்துகொண்டிருக்கின்றன
எதிரிலிருக்கும் புதருக்குள்
அந்த அதிகாலையில் ஓடுகின்றன இரு நாய்கள்
அன்றுதான்
அதிசயமாய்
ஒரு மஞ்சள் நிறப் பட்டாம்பூச்சி
எருக்கம்பூவில் அமரக்கண்டேன்
விடிந்துகொண்டிருக்கும் வேளையில்
வராண்டாவில்
ஒரு நீளமான முடி சுற்றிக்கொண்டிருந்தது
அப்பெண்ணின் கண்களிலிருந்து என்னால் விடுபடவே முடியவில்லை
ஸ்டிக்கர் பொட்டுத் தடங்களற்ற குளியலைறை உள்ள என் வீட்டு வாசலில்
குவிந்துகொண்டிருக்கிறது என் கவனமெல்லாம்.

Share

காற்தடம் – கவிதை

நிலவொளியில்
இரவின் நிலமெங்கும்
விரிந்து கிடக்கும்
காற்தடங்கள்
இம்மழையில் அழிகின்றன

ஒரு காற்தடத்தையும்
மழையின் துளிகளையும்
உற்று நோக்கிக்கொண்டிருக்கிறேன்

முதல் துளி விழ வெகு நேரமாகியது
புண்ணியம் செய்தவனின் காற்தடம்
வெகு விரைவில் அழிவதில்லை என்கிற
என் தத்துவப் பின்னணி விரியுமுன்
இரண்டாவது மூன்றாவது துளிகள் விழுந்துவிட்டன
அவற்றின் வரிசையை இனங்காணுமுன்
அடுத்தடுத்து விழுந்த துளிகள்
புதிய ரேகையை அமைத்தன
அது ஒரு கவிதையின் கணமென தெளிந்தேன்

பக்கத்தில் தேங்கிக் கிடந்த நீரிலிருந்து
ஒரு தவளை
அக் காற்தடத்தில் குதித்தோடியது
இப்போது அது தவளையின் காற்தடமாக மாறியிருந்தது
மழை வலுத்தது
அக்காற்தடம் முற்றிலும் சேதப்பட்டுப் போனது
அல்லது நிலமெங்கும் வியாபித்துவிட்டது
யாரோவொருவனின் காற்தடத்தைப் பற்றிய
என் எண்ணங்கள்
அதை முற்றிலும் அழிக்க விடுவதில்லை என உணர்ந்தேன்

வேறொரு காற்தடம் தேடத் துவங்கியபோது
தவளையின் காற்தடமாக மாறிவிட்டிருந்த அக்காற்தடம்
இம் மண்ணிலிருந்து நீங்கிவிட்டிருக்கவேண்டும்

நிலவொளியில்
இரவின் நிலமெங்கும்
விரிந்து கிடக்கும்
காற்தடங்கள்
இம்மழையில் அழிகின்றன
நான் அடுத்தடுத்த
காற்தடங்களைப் பற்றி
எண்ணத் துவங்கும்போதும்

Share

விரிசல் – கவிதை

சட்டென புலப்பட்டது
சுவரில் விரிசல்
நேற்றுவரை இல்லாமலிருந்ததோ
என்கிற கேள்விக்கு விடையில்லை
கொஞ்சம் உற்றுப் பார்க்கும்போது
அழகாகப் பட்டது
சுவரில் மின்னல் போல
மெல்ல தடவிப் பார்க்கும்போது
கிளரும் விரல்கள்
உள்ளே ஒரு விதை வைத்தால்
பெருமரம் முளைக்குமோ?
வீட்டுக்குள்ளே ஓர் ஆலமரம்!
விரிசலில் ஊதினேன்
மண் வாரி கண்ணுக்குள் விழ
லேசாய் உறுத்தியது
இன்னொரு சமயம்
பலமாய்க் கதவடைத்து மூடியபோது
சிற்சில எறும்புகள் உதிரின
என் உடலை
விரிசலுக்குள் புகுத்தி
வெளி வந்தபோது
மேலெங்கும் கவிதை வரிகள் ஒட்டியிருந்தன
எறும்புகள் கவிதைகளைத் தின்கின்றனவா?
பின்னொரு சமயம் யோசிக்கவேண்டும்
விரிசலை மறைக்கும் விதமாய்
ஒரு கண்ணாடியை மாட்ட
முகத்தில் அறைந்தது என் முகம்
இப்போது
என் முகத்தின் பின்னே
மறைந்திருக்கிறது விரிசல்
இன்னொரு சமயம் நீங்கள் வரும்போது
அக்கண்ணாடியை அவசியம் காணவும்.

Share

மூன்றாம் கட்டத்திலிருந்து துவங்கும் ஆட்டம் – கவிதை

வெகு நேர மோதலுக்குப் பின்
எனக்குத் தீக்குச்சியும்
உனக்குக் கல்லுமென முடிவானது,
யதேச்சையாய் என்றாலும் வெகு கச்சிதமாய்.

சோழிகள் உருட்டப்பட்ட தருணங்களிலெல்லாம்
உன் கண்களில் தொடங்கி அடங்கியது ஜ்வாலை
எனது ஜ்வாலையை விழுங்கி விட்டிருந்தன
என்னிரு கண்கள்

வெகு முன்பு நானும் நீயும் ஆடிய
தொடக்க கால ஆட்டங்களிலிருந்த
பரஸ்பர புரிந்துணர்வும் வாஞ்சையும்
இப்போதும் இருப்பதாகச் சொல்லிக்கொள்வோம்
சொல்லி வைத்த மாதிரி

ஒரு தாயம் விழும் தருணம்
எரிமலை

உனது கைக்குள் அடங்காமல் தெறித்துவிழும்
சோழியைப் பற்றி எடுக்கிறேன்
உன் கையின் தகிப்பு சோழிக்குள்

கடைசியாய் எனக்கு ஒரு தாயம் விழுகிறது.
தீக்குச்சி பற்றி எரிய
மூன்றாம் கட்டத்திலிருந்து ஆட்டத்தைத் துவக்குகிறேன்
முதலிரண்டு கட்டங்களைப் பற்றிய உணர்வே உனக்கில்லை.
நாம் சோழியை மட்டும் உருட்டிக்கொண்டிருக்கிறோம்.

Share

அவன் எறிந்த கல் – கவிதை

தெளிந்த நீரோட்டத்தின் கீழே
வெகு கீழே
அலைந்து கொண்டிருந்தது கலங்கல்
ஒரே ஒரு கல் போதும்
எத்தனை சொல்லியும் கேளாமல்
அக்கல்லுடன் வந்தான் அவன்
மரங்களிலிருந்து பேரிரைச்சலுடன் பறந்தன பறவைகள்
அத்தனை பெரிய இடி
பச்சை மரம் ஹோவென பற்றி எரிந்தது
அன்றிரவு அம்மா செய்த கார்த்திகை அடை
கல்லை விட்டு எழவே இல்லை
பிய்ந்தே போனது
முடிவில் அவன் கலங்கிய நீரோட்டத்தில் குதித்தான்
என் புறங்கையில் கண்ணீர்த்துளி

-oOo-

Share