Parasakthi – Tamil Movie

பராசக்தி – இயக்குநர் சுதா கொங்கரா தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்தினை நக்சலைட் போராட்டம் என்று புரிந்து கொண்டிருக்கிறார். தேடி தேடி மாணவர்களை காவல்துறை வேட்டையாடுவதும், போராட்டம் என்ற பெயரில் மாணவர்கள் செய்யும் வன்முறைகளும் படமுழுக்கக் கொட்டிக் கிடைக்கின்றன. மாணவர்களுக்கு நல்ல பெயர் வருவதற்காக, போராட்டக்காரர்கள் புகைவண்டியில் இருப்பவர்களை இறக்கிவிடுவது போலக் காண்பிப்பதும், பின்னர் தன் தம்பியை அடிக்க வருபவனைக் கொளுத்துவதும் என முன்னுக்குப் பின் முரணாகப் பல காட்சிகள். வண்டியில் இருந்து இறக்கிவிட்டுவிட்டுப் பின்னர் இன்னொருத்தனை நடுத் தெருவில் கொளுத்துவானேன்?

உண்மையில் மாணவர்களால் நடத்தப்பட்ட (அப்படிச் சொல்லப்பட்ட) போராட்டம் இங்கே இந்த படத்தின் மூலம் கொச்சைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. மாணவர்கள் தன்னிச்சையாகப் போராட்டம் நடத்தினார்கள் என்பதை நம்ப முடியாது. எப்போதுமே எங்கேயுமே தன்னிச்சையாகப் போராட்டம் இந்தியாவில் நடக்க வாய்ப்புகள் குறைவு. யாரோ ஒருவர் பின்னால் இருந்துதான் நிச்சயம் அதை வழி நடத்தி இருக்க வேண்டும். சுதா கொங்கராவுக்கு திமுக மேல் என்ன கோபமோ தெரியவில்லை, மிகத் தெளிவாக இந்தப் போராட்டத்திற்கும் திமுகவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார். இந்தப் படத்தில் திமுகவினர் ஒரு சிறு துரும்பைக் கிள்ளிப் போட்டதாகக் கூட அவர் காண்பிக்கவில்லை.

ஹிந்தித் திணிப்பால் தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் என்ன என்பதைப் பற்றிய விரிவான பிரச்சினைகளும் இந்தப் படத்தில் ஆவணப்படுத்தப்படவில்லை. ஒரே ஒரு நேர்காணலை மட்டும் காட்டிவிட்டு, திரைப்படத்துக்கு அது போதும் என்று முடிவு கட்டி விட்டார்கள்.

இயக்குநரின் இன்னொரு பிரச்சினை, இந்தியா முழுக்கத் தனக்கு நல்ல பெயர் வேண்டும் என்கிற எண்ணம். அதுதான் திரைப்படத்தின் திரைக்கதையே கந்தரகோளம் ஆக்கி விட்டிருக்கிறது. மீண்டும் மீண்டும் இது ஹிந்திக்கு எதிரான போட்டம்தான், ஹிந்தி பேசுபவர்களுக்கு எதிரானதல்ல என்று சொல்வது படு செயற்கைத்தனம். சினிமாவில், மேடையில் இப்படி வசனம் பேசலாம். ஆனால் ஒரு போராட்டம் இப்படிப் பார்த்து பார்த்து இலையில் உணவு பரிமாறுவதுபோல் நடக்காது. எந்த வன்முறைக்கும் எந்தப் பேதமும் கிடையாது.

காலம் காலமாகத் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த தெலுங்கர்களும் ஆந்திரத் தெலுங்கர்களும் ஒன்றல்ல (இது கன்னடர்களுக்கும் பொருந்தும்) என்கிற புரிதல் மிக முக்கியம். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த பக்கத்து வீட்டுத் தெலுங்கர்கள் தங்கள் வீட்டில் பேசிக்கொள்ளும் மொழி தெலுங்காக இருந்தாலும், அவர்கள் வீட்டுக்குள் செய்து கொள்ளும் சடங்குகள் தெலுங்கர்களுடையதாக இருந்தாலும், அவர்கள் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு இணையாகவே (கூடுதலாகவே தமிழ் உணர்வுடன் என்று கூடச் சொல்லலாம்) வாழ்கிறார்கள். இது சக தமிழர்களுக்கும் தெரியும். இந்தப் படம் அதைச் சரியாகக் காண்பிக்கவில்லை. நல்லவேளை, கடைசியில் அந்தப் பெண் ஒரு வசனம் பேசுவதாகவாவது வைத்தார்கள்.

தன் இந்திய இமேஜைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, தமிழர்களின் போராட்டத்தில் தெலுங்கர்கள், கன்னடர்கள், சௌராஷ்ட்ராவினர், மலையாளிகள், இது போதாது என்று பெங்காலி பேசுபவர்கள் என அனைவரும் உயிரைக் கொடுத்தார்கள் என்று காண்பித்ததெல்லாம் அதீதம். இது படத்தின் நோக்கத்தைச் சிதைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பிற மாநிலங்களில் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு இணையாக (அத்தனை தீவிரமாக இல்லையென்றாலும்) தமிழ்/தமிழர் எதிர்ப்புப் போராட்டங்களும் நடந்திருக்கின்றன. அப்படி இருக்கும்போது அவர்கள் தமிழ்நாட்டுக்கு ரத்தம் சிந்தினார்கள் என்பதெல்லாம் காதில் பூச்சுற்றல். பேருந்தின் மீது ஏறி நின்று இங்கே ஹிந்திதான் வேண்டும் என்பதுதான் எங்கள் போராட்டம் என்று கதாநாயகன் சொல்வதெல்லாம் நகைச்சுவை வசனமின்றி வேறில்லை.

அதைவிட கொடுமை மாணவர்களின் போராட்டத்தை ஒரு காவல்துறை அதிகாரியின் ஈகோ கதையாக மாற்றியது. அதில் அவருக்கு அடையாளச் சிக்கல் வேறு. தான் தமிழனுக்குப் பிறந்தாலும் தன் உடம்பில் ஓடுவது ஹிந்தி ரத்தமே என்பதை நிரூபிக்கத்தான் இத்தனையும் அவர் செய்கிறார் என்பதெல்லாம், ஒட்டுமொத்தப் போராட்டத்தின் நியாயத்தைத் தவிடுபொடியாக்கிவிட்டது.

இது அப்பட்டமான பிரசாரப் படம் என்பதால், இந்தப் போராட்டத்தினால் உயிரிழந்த காவல்துறைக்காரர்களைப் பற்றி எதையுமே காண்பிக்கவில்லை. மொத்தம் பத்து காவல்துறை அதிகாரிகளாவது இறந்திருப்பார்கள் என்று வரலாறு சொல்கிறது. சமீபத்தில் கூட இந்தப் போராட்டத்தில் கொல்லப்பட்ட காவல்துறை வீரர் ஒருவரது மனைவியின் பேட்டியை நாம் பார்த்தது நினைவிருக்கலாம்.

இந்தப் போராட்டம் நடந்தபோது முதல்வராக இருந்த பக்தவத்சலம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் கொடுமை. அதிலும் பொள்ளாச்சியில் அனைவரையும் கொன்று குவிக்கிறேன் என்று காவல்துறை அதிகாரி செல்லும்போது, அதை ஒரு கொடூரமான மகிழ்ச்சியுடன் அவர் ஏற்பது போலக் காட்டியிருப்பதெல்லாம் கேவலம். தமிழில் ஒரு நடிகர் இதை நடித்தால் பிரச்சினை வரும் என்று நினைத்தார்களோ என்னவோ, ஒரு கன்னட நடிகரை (பிரகாஷ் பெலவாடி – நல்ல நடிகர்) நடிக்க வைத்திருக்கிறார்கள். அவரும் ரவி மோகனும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மற்ற எல்லாமே வேஸ்ட்.

இந்திரா காந்தியாக நடிக்கும் அந்தப் பெண்ணின் பார்வை ஏன் அப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. டெல்லி சாலையில் நடக்கும் பைத்தியக்காரத்தனமான போராட்டத்தின் போது அவர் சாலையில் நின்று சிவகார்த்திகேயனை பார்த்த பார்வையைக் கண்டு, அடுத்த நொடியில் அவர் ஐ லவ் யூ சொல்லிடுவார் என்று நினைத்தேன். நல்லவேளை, அப்படி எதுவும் நடக்கவில்லை.

இது தவிர, வரலாற்று ரீதியாக ஆயிரம் ஓட்டைகள். இந்திரா காந்தி கோவையில் நின்று கொண்டிருக்கும்போது எரிந்துகொண்டே புகைவண்டி வருவதெல்லாம் – ஏன் தமிழ் இயக்குநர்கள் இன்னும் இத்தனை பைத்தியங்களாக இருக்கிறார்கள் என்று நினைக்க வைத்த தருணம். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் என்ற தமிழ் வரலாற்றின் முக்கிய நிகழ்வைக் கூட இவர்களால் ஒரு ஹீரோயிஸப் படமாகத்தான் யோசிக்க முடிகிறது என்பது எத்தனை அவலம்! பெரிய மீனின் முள் போன்ற ஒன்றை வைத்துக்கொண்டு கதாநாயகி ரேடியோவில் பேசும் சீரியஸான காட்சிகளை எல்லாம் படமாக எடுக்கக் கூசி இருக்க வேண்டாமா? புறநானூற்றுப் படை என்று கப்சா விடும்போது அசிங்கப்பட்டிருக்க வேண்டாமா!

படத்தின் ஆக்கமும் மிக மோசம். தேவையேற்ற பல காட்சிகள். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை வரும் செயற்கைத் தனம். காதல் காட்சிகள், அண்ணன் தம்பி பாசம் என எல்லாவற்றிலும் ஒரு செயற்கைத்தனம். பார்க்கச் சகிக்கவில்லை.

ஒட்டுமொத்தமாக இந்தப் படம் ஒரே ஒரு நன்மையை மட்டும் செய்திருக்கிறது. ஹிந்திக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தை வைத்து மிக தீவிரமான ஒரு திரைப்படம் வருவதை இந்தப் படம் தடுத்து நிறுத்தி இருக்கிறது. அந்த வகையில் சுதா கொங்கராவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இசையைப் பற்றித் தனியே சொல்ல வேண்டும். மகா மட்டம்.

Share

Comments Closed