Pathimoonaavathu maiyavaadi

தமிழில் கிறித்துவத்தை இப்படி வெளிப்படையாக விமர்சிக்கும் நாவல்கள் குறைவு, இது அவற்றில் உச்சமாக இருக்கும் என நினைக்கிறேன். பங்குத் தந்தைகளும் கன்னியாஸ்திரிகளும் புரட்டு செய்வதாகவோ அல்லது அவர்கள் நிஜமாகவே செய்யும் அனைத்து விதமான புரட்டுகளுமோ இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது. படிக்கவே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

ஒரு சிறுவன் வயதுக்கு வரும் நாவல் என்று இதைக் கொண்டாலும், அதைப் பின்னணியாக மட்டுமே பார்க்கவேண்டி இருக்கிறது. மணிரத்னம் தன் படங்களில் பெரிய பரப்பைப் பின்னணியாக வைத்துக்கொண்டு அதில் காதலை மட்டும் சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால் தர்மன் வயதுக்கு வரும் ஒரு விடலையின் பரப்பைப் பின்னணியாக வைத்துக்கொண்டு அதைவிட பெரிய களத்தை நாவலில் சொல்லி இருக்கிறார். கன்னியாஸ்திரிகளுடன் உறவு, பெண்களுடன் உறவு, ஏமாற்று என பாதர்களை தேவைக்கும் அதிகமாகவே சோதித்துவிட்டார் தருமன். சில இடங்களில் இவை அத்துமீறுகின்றன என்பதையும் குறிப்பிடவேண்டும். குறிப்பாக, எந்த எந்தக் காயை வாங்குவார்கள் என்பதும், ஆணி அடிக்கவேண்டும் என்று கொச்சையாகப் பேசுவதும். இவை ரசக்குறைவு. தவித்திருக்கலாம்.

நாவலின் குறைகள் என்று பார்த்தால் பலவற்றைச் சொல்லலாம். முதல் குறை, அனைத்துப் பெண்களும் கருத்தமுத்துவைப் பார்த்த உடனே படுக்கைக்கு அழைப்பது. இத்தனைக்கு அவன் சிறிய பையன். கொடுமை. இதிலும் மிக மோசமான பாத்திரப் படைப்பு ஜெஸ்ஸி. தன் தாயை அவள் எதற்காக வெறுக்கிறாளோ அதையே அவளும் செய்கிறாள். பின்னராவது அதைப் புரிந்துகொண்டு அவள் தாயை ஏற்றுக்கொண்டிருப்பது போல் சித்தரித்திருக்க இருக்கவேண்டும். அப்படிச் செய்யாததால், ஜெஸ்ஸி கதாபாத்திரம் மிக மோசமான பாத்திரமாகத் தேங்கிவிட்டது. அதிலும் திருமணத்துக்குப் பிறகும் கருத்தமுத்துவுடன் உறவு, குழந்தை பிறந்தபிறகும் முத்தம் என்பதெல்லாம் கொஞ்சம் அதீதம். பிற குறைகள் — பல கதாபத்திரங்கள் அப்படி அப்படியே தேங்கி நிற்பது, நாவல் திடீர் திடீரென அறுந்து எங்கெல்லாமோ போவது, கடைசிச் சில பக்கங்கள் வேகமாகச் செல்வது, மீண்டும் மீண்டும் ஒரே போன்ற பாலியல் பிறழ்வுகளே கதைகளாக வருவது.

நிறுவனமயப்படுத்தப்பட்ட கிறித்துவத்துக்குள் இருக்கும் ஊழலை முன்வைப்பதே நாவலின் நோக்கம் என்றாலும், கன்னியாஸ்திரிகளின் தன்னலமற்ற தொண்டையும் இந்த நாவல் சொல்கிறது. குறிப்பாக, தொழுநோயாளிகளுக்கான மருத்துவம் குறித்த பக்கங்கள்.

மையவாடியைச் சுற்றி வரும் அத்தியாயங்கள் எல்லாமே அருமை. இந்த ஒன்றில் மட்டுமே தொடக்கம், மையம், முடிவு எல்லாமே ஒரே சீராக வெளிப்பட்டிருக்கிறது.

இறுதியில் வரும் கம்யூனிஸ்ட் ஒருவனின் சிந்தனை, இன்றைய ஹிந்துத்துவச் சிந்தனை போலத் தோன்றியது எனக்கு.

இத்தனையிலும் ஒன்றைக் குறிப்பிடவேண்டும். மிக எளிதாக கருத்தமுத்துவை ஹிந்துச் சிந்தனை கொண்டவனாகக் காட்டி இருக்கும் வாய்ப்பு இருந்தும், முற்போக்காகக் காட்டி இருக்கிறார் தர்மன். எனவே அவரது நோக்கம் ஹிந்து எதிர் கிறித்துவம் என்று நிற்பதல்ல, மாறாக, அவரை உறுத்திய கிறித்துவ மடங்களுக்குள் நிலவும் பாரபட்சங்களை முன்வைப்பதே என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

தைரியமான நாவல்தான். இது உருவாக்கும் வித்தியாசமான உலகுக்காக நாவலை நிச்சயம் வாசிக்கலாம்.

புத்தகத்தை வாங்க https://www.swasambooks.com/

Share

Comments Closed