நேற்று புத்தகக் கண்காட்சி வேலையெல்லாம் முடிந்து இரவு 10:30க்குக் கிளம்பும்போது கண்காட்சி வாசலில் காத்திருந்த ஒருவர் பைக்கில் ஏறிக்கொண்டு, பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு எலக்ட்ரிக் டிரைன் ஸ்டேஷனில் இறக்கி விடச் சொன்னார். கிண்டி வரை பேசிக்கொண்டே வந்தார். அவரே பேச ஆரம்பித்தார். யாரிடமாவது இதையெல்லாம் சொல்ல மாட்டோமா என்கிற ஏக்கம் அவர் குரலில் தெரிந்தது. அவர் பெயரும் ஊரும் வேண்டாம். கான்ஸ்டபிளாக இருக்கிறார். வயது 36. வரும் 23ஆம் தேதி மோடி வருவதை ஒட்டிய பாதுகாப்புக்காக சென்னைக்கு வந்திருக்கிறார். நல்ல படிப்பு படித்துவிட்டு, சிவில் தொழிலில் நல்ல வேலையிலும் இருந்துவிட்டு, நுழைவுத் தேர்வுக்குப் படித்து, பாஸாகி கான்ஸ்டபிளாக மாறியிருக்கிறார். எட்டு வருடம் வேலை செய்து அவர் இப்போது பெறும் சம்பளம் 34,000 என்று சொன்னார். எனக்கு அதிர்ச்சி தாங்கவில்லை. இத்தனை குறைவாகவா பணம் வருகிறது என்று கேட்டேன். இத்தனைக்கும் இரண்டு கழகங்களும் போலீசைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்களே என்று கேட்டபோது அவர் சொன்னார், போலீஸ் என்பது ஆளுங்கட்சியின் அடிமை மற்றும் அடியாள், அடிமைக்கும் அடியாளுக்கும் யாரும் அதிகப் பணம் தர மாட்டார்கள் என்றார். எனக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. இன்ஜினியரிங் தொழிலிலேயே இருந்திருந்தால் இந்நேரம் எவ்வளவோ சம்பளம் வாங்கி எப்படி எல்லாமோ மரியாதையாக இருந்திருப்பேன், இங்கே எந்த மரியாதையும் இல்லை, குறிப்பாக புத்தகம் படிக்கிறவனக்கு எந்த மரியாதையும் கிடையாது என்றார். கிண்டியில் இறங்கிக் கொண்டு நன்றி சொல்லிவிட்டுப் போனார்.
ஒரே ஒரு நொடி மட்டுமே அவர் முகத்தைப் பார்த்தேன். பாவமாக இருந்தது.


