SIR initial mess ups in Tamilnadu – 1

எஸ் ஐ ஆர் இல் எந்தக் குழப்பமும் இல்லை, எளிதாக இருக்கிறது என்று ஆளாளுக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் லட்சம் குழப்பம் இருக்கிறது. யாருக்கும் எதுவும் தெரியவில்லை. கேட்டால் என்ன என்னவோ காரணம் சொல்கிறார்கள். எலக்‌ஷன் கமிஷன் கொடுத்திருக்கும் நம்பருக்கு எல்லாம் போன் செய்து கேட்டாகிவிட்டது. உங்கள் வீட்டுக்கு வரவில்லையா என்று என்னிடமே மீண்டும் கேட்கிறார்கள். தெருவில் கேட்டால், வந்தார்கள், ஆனால் அவர்களிடம் பெரும்பாலான வாக்காளர் பட்டியல் படிவங்களே இல்லை, தெருவின் முக்கில் ஒரு சேர் போட்டு அமர்ந்திருந்தார்கள் உங்களுக்குத் தெரியாதா என்கிறார்கள். அவர்கள் சேர் போட்டு அமர்ந்திருந்தால் எனக்கு எப்படித் தெரியும்? ஆனால் அவர்களிடமும் பெரும்பாலான படிவங்கள் இல்லை. ஆனால் தெருக்காரர்கள்‌ அனைவரிடமும் ஓட்டர் ஐடி இருக்கிறது. இவர்கள் வரைவுப் பட்டியலை வெளியிட்டு விட்டு பிறகு ஒட்டுமொத்தமாக அனைவரும் மீண்டும் அப்ளை செய்ய வேண்டும் என்றால், இது என்ன லாஜிக்? என்னவோ பெரிய குழப்படி நடந்து கொண்டிருக்கிறது. இதைச் சரியாகத் திருத்தாவிட்டால் தேர்தலின் போது பொதுமக்கள், கட்சிகள் பாகுபாடு இல்லாமல் கதறப் போகிறார்கள். போகிறோம்.

தற்போது இருக்கும் ஓட்டர் ஐடி சரியாக இருந்தால் அவர்கள் பெயரை நீக்கக் கூடாது. இதை ஏன் செய்யாமல் விட்டார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

2002-2005 பட்டியலைப் பார் என்பதெல்லாம் சென்னை போன்ற நகரங்களுக்கு எப்படிப் பொருந்தும்?

எஸ் ஐ ஆர் எளிய விளக்கம் என்று டிவிகளில் வருகிறது. அதில் முக்கியமான கேள்வி ஒன்றுக்கு மட்டும் யாரிடமும் பதில் இல்லை. என்னிடம் ஓட்டர் ஐடி இருக்கிறது, ஆனால் படிவம் கொண்டு வருபவர்களிடம் என்னைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய படிவம் இல்லை. என்ன செய்ய வேண்டும்? மிக சாதாரணமாகச் சொல்கிறார்கள், வரைவுப் பட்டியலைப் பார்த்துவிட்டு மீண்டும் அப்ளை செய்யுங்கள் என்று. அப்படியானால் இத்தனை நாள் என்னிடம் இருந்த ஒட்டர் ஐடியும் நான் போட்ட ஒட்டும் என்ன? இது தவறில்லையா?

அதேபோல் முகவரி மாறி வேறு ஒரு தொகுதிக்குப் போயிருந்தால் அப்போதும் நாம் வரைவுப் பட்டியல் வரும் வரை காத்திருக்க வேண்டுமாம். இப்படி ஒரு நடைமுறையைக் கண்டுபிடித்தவரை என்னவென்று சொல்வது.

ஓட்டர் ஐடி சரியாக இருந்து, நீங்கள் இருக்கும் வீடும், அங்கே நபர்களும் சரியாக இருந்தால், அதை சரியான வாக்காளர் விவரமாக எடுத்துக் கொள்ளாத வரை இந்தத் திருத்தம் பல குழப்பங்களை மட்டுமே கொண்டு வரும்.

***

எஸ் ஐ ஆர் விஷயமாக இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். யாரிடம் என்ன கேட்பது என்று தெரியாமல் தேர்தல் கமிஷன் வலைத்தளத்தில் இருந்து பாஜக பி எல் ஏ அலுவலரின் நம்பரை பெற்றேன். ஒரு பெண் பேசினார். மிகப் பொறுமையாக எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டு யாரிடம் பேச வேண்டும் என்ற தகவலைத் தந்தார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அவர் தந்த நபரை அழைத்தேன். அவரும் பெண். அவரும் மிகப் பொறுப்பாகப் பேசி யாரிடம் நான் பேச வேண்டும் என்று இன்னொரு தகவலைச் சொன்னார். கூடவே எனது வாக்காளர் அட்டையை வாங்கி யாரிடம் பேச வேண்டும் என்ற தகவலை மீண்டும் உறுதிப்படுத்தினார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு மூன்றாம் நபரை அழைத்தேன்‌ அவர் ஓர் ஆண். அவர் மேலும் சில விவரங்களைச் சொல்லிவிட்டு இன்னொரு நபரிடம் பேசச் சொன்னார் அதற்குள். முதலாம் நபர் மீண்டும் அழைத்து, சரியான நபரிடம் பேசச் சொல்லி இன்னொரு எண்ணைக் கொடுத்தார். அவரும் அவரால் இயன்ற எல்லா உதவிகளையும் வழங்கினார். இந்த நான்கு பேருமே பிஜேபிக்காரர்கள். அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் 2002க்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால்தான் படிவத்தை நிரப்பிக் கொண்டு வருவார்கள் போல. இல்லையென்றால் வரைவுப் பட்டியல் வந்த பிறகு நாம் அப்ளை செய்ய வேண்டும் என்பதுதான் இப்போதைக்கு நான் புரிந்து கொண்ட தலைவிதி.

Share

Comments Closed