Coolie Movie Review

கூலி – இடைவேளை வரைபடம் பட்டாசு. பெண்கள் தங்கும் விடுதியில் வரும் அந்தச் சண்டைக்காட்சியில் நீண்ட காலத்திற்குப் பிறகு பழைய ரஜினியைப் பார்க்க முடிந்தது.

பின்னர் வரும் தேவையற்ற ஒரு பாடல் படத்தின் போக்கைக் கொஞ்சம் இடறினாலும் அதன் பிறகு வரும் காட்சிகள் குறிப்பாக நாகர்ஜுனா ரஜினியின் காட்சிகள் பிரமாதமாக அமைந்திருக்கின்றன. இடைவேளை பிளாட் அருமை. அதோடு பல மடங்கு எதிர்பார்ப்பையும் தந்து விடுகிறது.

அதன் பிறகு படம் கொஞ்சம் தொய்வடைகிறது. ஏன் எதற்கு ஓடுகிறார்கள், ஒருவரை ஒருவர் ஏன் துரத்துகிறார்கள் என்பதெல்லாம் புரியாமலேயே பல நிமிடங்கள் படம் ஓடுகிறது. பிறகு மீண்டும் கொஞ்சம் பரபரப்பாகிறது.

இறுதிக்காட்சியில் அமீர்கான் வருவதெல்லாம் விக்ரம் திரைப்படத்தை மீண்டும் பார்ப்பது போலவே இருந்தது. ரஜினி நாகார்ஜுனா சௌபின் ஷாபிர் மூவரும் கலக்கி விட்டார்கள். லோகேஷ் விக்ரமின் பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை என்பது படம் நெடுகத் தெரிகிறது. பல காட்சிகள் விக்ரமை நினைவூட்டுகின்றன. அதுமட்டுமின்றி ரஜினியின் பிற பிடங்களையும் விஜயின் படங்களையும் பல காட்சிகள் நினைவூட்டுவது படத்திற்கு மைனஸ் பாயிண்ட். சத்யராஜ் கௌரவ வேடம் போல அவ்வப்போது வந்து போகிறார்‌ ஸ்ருதிஹாசன் அழுவதைப் பார்க்கச் சகிக்கவில்லை. அப்படியே சௌகார் ஜானகி ஆக்கிவிட்டார்கள்.

விக்ரம், விக்ரமை விட ஜெயிலர், அதை விட இந்தப் படத்தில் கொலைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. பட முழுக்க ரத்தம் ரத்தம் ரத்தம். குடியும் சிகரெட்டும் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது.

ரஜினி காந்த், கமல் திரைப்படங்களில் பிளாஷ்பேக்கில் ஏஐ உதவியுடன் இளமையாகக் காட்ட வேண்டும் என்பது கிட்டத்தட்ட சட்டம் ஆகிவிட்டது. இந்தப் படத்திலும் உண்டு.

உபேந்திராவை இந்த அளவு ஏமாற்றி இருக்கக் கூடாது. ஐயோ பாவம். அதனால்தான் அவருக்கு இயக்கத்தான் வரும் என்று ரஜினி சூசகமாக சொன்னார் போல.

அனிருத் தலைவலி.

மொத்தத்தில் வேட்டையன் அளவுக்கு மோசம் இல்லை. தக் லைஃப் அளவிற்குக் கொடுமை என்று சொல்ல முடியாது. நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.

தன் கதாபத்திரத்தை உணர்ந்து கொண்டு அதற்கேற்றாற் போல் கூடவும் செய்யாமல் குறையவும் செய்யாமல் நடிக்கும் ஒரு சிறந்த நடிகர் இந்தப் படத்திலும் தன் சிறப்பான நடிப்பை மீண்டும் வெளிப்படுத்துகிறார். அந்த ரஜினிக்காக நிச்சயம் பார்க்க வேண்டும்.

கூலி ஸ்பாய்லர்‌ அஹெட்.

.
.
.

பார் மகளே பார் என்ற ஒரு திரைப்படம். சிவாஜி பெரிய பணக்காரனாகவும் பணக்காரத் திமிர் கொண்டவராகவும் இருப்பார். தன் இளம் வயதில் ஏழையாக இருந்த போது தன்மகளைத் தன் நண்பனின் மகனுக்குக் கல்யாணம் செய்து தர ஒப்புக் கொண்டிருப்பார். ஆனால் பணக்காரனானதும் பணத் திமிரில் அந்த நண்பனை ஏழை என்று இகழ்ந்து பேச, அந்த நண்பன் எல்லார் முன்னிலையிலும் சிவாஜியிடம், உனக்கு இருக்கும் இரண்டு மகளில் ஒன்று உனக்குப் பிறந்ததில்லை என்று சொல்லிவிடுவார். அந்த நண்பராக நடித்தவர் வி கே ராமசாமி. வி கே ராமசாமியின் வாழ்நாள் காட்சி என்றால் இந்தக் காட்சியைத்தான் நான் சொல்லுவேன்.

அதன் பிறகு சிவாஜியின் தவிப்பும் ஈகோவும் அவரைப் பாடாயப்படுத்தும். எது தன்மகள் என்று தெரிந்து கொள்ள சித்திரவதை அனுபவித்து ஒவ்வொரு நாளும் துடிப்பார். கடைசியில் எந்த மகள் அவரது மகள் என்று தெரிய வரும்போது, தெரிய வேண்டாம் இரண்டுமே என் மகளாக இருக்கட்டும் என்று சொல்லிவிடுவார்.

இந்தக் கதையை 20 நாட்களுக்கு முன்புதான் ஜெயக்குமாரிடம் விமானத்தில் வைத்துச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

இன்று கூலி பார்க்கும் போது அந்தப் படத்தின் நினைவு வந்தது.

முதல் காட்சியிலேயே சந்தேகமாக இந்தக் கதையை என்னால் யூகிக்கவும் முடிந்தது.

Share

Comments Closed