Anirudh and Resonance

நான் பத்தாம் வகுப்பு (அல்லது பன்னிரண்டு) படிக்கும்போது முதன்முதலில் அந்த வார்த்தையைக் கேள்விப்படுகிறேன். ஒத்ததிர்வு. அதாவது resonance என்னும் வார்த்தைக்கான தமிழ் வார்த்தை.

அதற்கு ஓர் உதாரணம் கொடுக்கப்பட்டிருந்தது. மேம்பாலங்களில் நடக்கும் போது ராணுவ வீரர்கள் மார்ச் பாஸ்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அவர்களின் நடை அதிர்வெண்ணும் மேம்பாலத்தின் இயல் அதிர்வெண்ணும் ஒன்றாக ஒரு புள்ளியில் இயைந்து, ஒத்ததிர்வு ஏற்பட்டு, பாலம் இடிந்து விட சாத்தியக்கூறு இருக்கிறது. இதுதான் நான் படித்தது.

மொபைல் ஃபோனை வைப்ரேஷன் மோடில் நெஞ்சருகே வைக்கும் போதெல்லாம் எனக்கு ஓர் எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கும். நெஞ்சமும் மொபைலும் ஒத்ததிர்வில் ஈடுபட்டால் என்னாகும் என்று. உடனே மொபைலைத் தள்ளு வைத்து விடுவேன்.

இதை எதற்கு இப்போது சொல்கிறேன் என்றால்…

அனிருத் இசை அமைக்கும் திரைப்படங்களைப் பார்க்கும் போதெல்லாம், என்றாவது ஒருநாள் நிச்சயம் ஒரு பத்து பேருக்காவது திரையரங்கில் ஒத்ததிர்வு ஏற்படத்தான் போகிறது. அனிருத் இப்போதே முன் ஜாமீன் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

Share

Comments Closed