காசிக்குப் போனால் என்னெல்லாம் நடந்தால் நல்லது என்று கதை ஒன்று சுற்றும். ஆளாளுக்கு ஒவ்வொன்று சொல்வார்கள். அதில் ஒன்று, காசியில் நீயாக எதையும் தொலைக்கக் கூடாது, ஆனால் அதுவாக தொலைந்து போனால் நல்லது.
நானும் கண்டுகொள்ளாத மாதிரி விலை குறைந்த எதையாவது தொலைத்து விட வேண்டும் என்று நினைத்தேன். என் துரதிர்ஷ்டம், ஒன்றுகூட தொலையவில்லை. செந்தூர டப்பா தொலைந்து விட்டது என்று நினைத்தேன். ஏர்போர்ட்டில் பார்த்தால் பைக்குள் பத்திரமாக அது ஒளிந்து கொண்டிருக்கிறது. இப்படியாக எதையுமே இயல்பாகத் தொலைக்காத பாவியாகிவிட்டேன். இந்தப் பாவத்தைத் தொலைக்க மீண்டும் காசிக்குப் போக வேண்டும், அதுவும் ஜெயக்குமார் செலவில். ப்ச்.
நேற்று அலுவலகத்தில் என்னுடைய இயர் பட்ஸ் டப்பியைத் திறந்து பார்த்தால், அதில் ஒன்றுதான் இருக்கிறது. இன்னொன்றைக் காணவில்லை. இத்தனைக்கும் அதை காசியில் ஒரு முறை கூட பயன்படுத்திய நினைவில்லை. கடவுளே வந்து நான் அறியாத போது ஒன்றை எடுத்துக் கொண்டு இந்தப் பாவியைப் புனிதனாக்கி விட்டார் என நினைக்கிறேன். இனி ஒற்றைக் காதுடன் வலம் வர வேண்டியதுதான்.
பின்குறிப்பு: நான் யாரையும் சந்தேகப்படவில்லை
