Politics in Tamil literary awards

விருதுகள் தகுதியானவர்களுக்குத் தரப்படுவதில்லை, அதில் லாபி இருக்கிறது என்று இடதுசாரிகளும் திராவிட ஆதர்வாளர்களும் கூடுதலாக எழுத்தாளர்களுமாக இருப்பவர்கள் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதே விருதுகள் எதிர்-இடதுசாரி எழுத்தாளர்களுக்கும் எதிர்-திராவிட எழுத்தாளர்களுக்கும் வழங்கப்படுவதில்லை என்பதில் உள்ள லாபியைப் பற்றி, அறமின்மையைப் பற்றி, அரசியலைப் பற்றி ஒருபோதும் இவர்கள் கவலை கொள்ள மாட்டார்கள். சந்தோஷமும் படுவார்கள்.

ஜோடி குரூஸ் போன்ற ஒருவருக்கு ஒருவேளை எப்போதாவது விருது  கிடைத்துவிட்டால் அவர் அந்தக் காலத்தில் மோடி ஆதரவாளர் என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டு, அவருக்கு எப்படி விருது தரலாம் என்று பொங்கவும் செய்வார்கள். விருதுக்கு முதலில் ஆதரவு தந்தவர்களோ பயந்து போய் ‘அவர் இப்படி ஒரு அரசியலுக்கு ஆதரவாளராக இருப்பார் என்பது எங்களுக்குத் தெரியாது’ என்று பம்மு பம்மென்று பம்மவுவும் செய்வார்கள்.

‘நீங்க மட்டும் மோடியையும் பாஜகவையும் சப்போர்ட் செய்யலன்னா நல்லா இருக்கும்’ என்று என் காது படவும் என் காதுக்குப் பின்னாலும் பேசியிருக்கிறார்கள். அதில் இருப்பது அக்கறை என்றாலும் இதைச் சொல்பவர்களே இடதுசாரி மற்றும் திராவிட ஆதரவாளர்களுக்குச் சிங்கி அடிப்பதை மறந்து விடுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் நெஞ்சம் முழுக்க, ‘நான் ஒரு நடுநிலையாளர். ஏனென்றால் நான் எழுத்தாளர்’ என்கிற சுய-ஏமாற்று மண்டிக் கிடக்கிறது.

இரட்டை நாக்குகள் இப்படித்தான் உருவாகி இதுவே நியாயம் நேர்மை என்று நிலை செய்யப்படுகின்றன. அதைத் தாண்டி இந்த லாபிச் சண்டை எல்லாம் சொல்ல வருவது, ‘நானும் திராவிட இயக்க ஆதரவாளர்தானே… நானும் இடதுசாரி ஜால்ராதானே… எனக்கு ஏன் தரப்படுவதில்லை?’ என்பதைத்தான். ‘என்னை விட சிறப்பாக எழுதும் எதிர்க் கருத்துக் காரனுக்கு ஏன் தரப்படுவதில்லை?’ என்பதை அல்ல.

நான் விருதுகள் குறித்து இன்று எழுதியவை, அது கிடைக்கவில்லையே என்று எழுதப்பட்ட பதிவுகளைப் படித்து மட்டுமே.

விருதுகள் பெற்றவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு விருதைப் பெற்றுத் தந்திருக்கும் புத்தகங்களைப் படிக்காமல் கருத்துச் சொல்வது தவறு. ஒருநாளும் நான் அதைச் செய்ய மாட்டேன். மேலும் அவர்கள் எழுதிய எந்த ஒரு நூலையும் நான் இதுவரை வாசித்ததில்லை என்னும்போது நான் கருத்துச் சொல்ல அல்ல, நினைக்கக் கூடக் கூடாது!

என் ஆதங்கமெல்லாம் விருதுக்குப் பின்னால் இருக்கும் அல்லது விருது வழங்கிய பிறகு நடக்கும் சடங்குகளைப் பற்றி மட்டுமே.

விருது பெற்ற புத்தகங்கள் நன்றாக இருக்குமானால், அதை ஏற்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அது நன்றாக இல்லை என்றால் அதைப் பொதுவில் சொல்லவும் எனக்குத் தயக்கமில்லை. முன்பே சொல்லியும் இருக்கிறேன். பாராட்டியும் இருக்கிறேன். அதாவது மீ டூ ஸேம் நடுநிலை! :>

இந்த விளக்கம் எதற்கென்றால் என் இடுகைகளில் சிலர் ‘விருது பெற்றவர்கள் மீது எனக்கு வருத்தம்’ என்ற பொருளில் கமெண்ட் போட்டதால்தான்.

Share

Comments Closed