அம் அஹ (அம்மா) – (M) – விதந்தோதத்தக்க படம் அல்ல என்றாலும், மனதைக் கனக்கச் செய்துவிட்ட படம். படத்தின் முதல் பாதி த்ரில்லர் போலச் சென்றது. அதற்கான காரணத்தை விவரிக்கும்போது கலங்கடித்துவிட்டது. குறிப்பாக அந்தக் குழந்தையின் கள்ளம் கபடமற்ற முகம்.
அனைத்து நடிகர்களும் மிக இயல்பாக நடிக்கிறார்கள். நம்ம ஊர் தேவதர்ஷினிக்கு வாழ்நாள் கதாபாத்திரம். நன்றாக முயன்றிருக்கிறார் என்றாலும், நாம் பழக்கப்பட்டுவிட்ட தேவதர்ஷினியைத் தாண்டி, இந்தக் கதாபாத்திரத்துக்குள் செல்ல முடியவில்லை. வேறு நடிகையை நடிக்க வைத்திருக்கலாம். பாடல்களைக் குறைத்திருக்கலாம்.
மனம் இருண்டு கிடக்கும் நேரத்தில் ஒரு மகிழ்ச்சிச் செய்தி வந்து, புது மழை கசடை எல்லாம் நீக்கி குளிரச் செய்துவிடுவது போன்ற கடைசி இரண்டு நிமிடம் – மறக்கவே முடியாத மகிழ்ச்சியான தருணம்.
கதைக் களம் நடக்கும் இடம் மலை சார்ந்த பகுதி. இப்படிப்பட்ட ஊரில் எப்படி வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று ஒவ்வொரு நொடியும் அதிசயிக்க வைக்கிறார்கள். தங்கள் படத்தில் தங்கள் நிலத்தை இத்தனை அழுத்தமாகக் காண்பிப்பதில் மலையாளிகளுக்கு நிகர் எவருமில்லை.
திலீஷ் போத்தன் தான் நடிக்கும் எல்லாப் படங்களிலும் சிறப்பாக நடிக்கிறார் என்றாலும், இத்தனை நல்ல இயக்குநர் இப்படி நடிப்பில் கவனம் செலுத்தி வீணாகிப் போகிறாரே என்ற வருத்தம் எழாமல் இல்லை.
அம் ஆ – பொறுமை இருப்பவர்களுக்கான படம்.
Primeல்கிடைக்கிறது.
ப்றாவின்கூடு ஷாப்பு (M) – ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் தரம். கதை எல்லாம் பார்த்து பார்த்து அலுத்துப் போன கதைதான். ஆனால் அதைப் படமாக்கிய விதம் அட்டகாசம்.
பாஸில் ஜோசஃப் படம் என்று நினைத்து கொஞ்சம் அசுவாரஸ்யமாகப் பார்க்கத் தொடங்கினேன். வந்தார் சௌபின் ஷாஹிர். கூடவே செம்பன் வினோத். இவர்கள் இருவரும் இருப்பது தெரிந்திருந்தால் எப்போதோ பார்த்திருப்பேன். மூவரும் கலக்கிவிட்டார்கள். உண்மையில் இது சௌபின் படம். அவரது மேக்கப்பும் நடையும் அட்டகாசம். நடிப்பு அதகளம்.
ச்சாந்தினி – நோ சான்ஸ். செம அழகு, செம நடிப்பு.
எப்படி இத்தனை விதம் விதமான கொலை த்ரில்லர்களை எடுக்கிறார்களோ மலையாளிகள். ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, நடிப்பு, எடிட்டிங் இசை என அனைத்திலும் துல்லியம்.
ஏன் இந்தப் படம் பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட்டடிக்கவில்லை என்பது புரியாத புதிர்தான்.
டோன்ட் மிஸ் வகையறா படம். அதிலும் கொலையாளி யார் என்று நின்று நிதனமாகச் சொல்லும் காட்சி தரத்திலும் தரம்.
சோனி லைவில் கிடைக்கிறது.