Two movies

நாராயணீன்டே மூணாண்மக்கள் (ம) – கண்றாவி திரைப்படம். மிக மிக மெல்ல நகர்கிறது. சரி, போய்த் தொலைகிறது என்றால் இன்செஸ்ட் என்று என்னத்தையோ எடுத்து வைத்திருக்கிறார்கள். மூன்று அண்ணன் தம்பிகள் பேசிக் கொள்ளும் காட்சிகள் நன்றாக இருக்கின்றன என்றாலும், ஒட்டுமொத்தக் கதை இந்த இன்சஸ்டை நோக்கி நகர்வதால் எரிச்சலும் குமட்டலும்தான் ஏற்படுகின்றன. என்னதான் அந்தப் பையன் பாதி முஸ்லிம் என்று வைத்துக் கொண்டாலும் கன்றாவியான அனுபவம். ரெட்ட திரைப்படத்திலாவது ஓர் பதட்டமும் தவறுக்கான தண்டனையும் பிராயச்சித்தமும் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தன. இந்தக் கருமத்தில் அதுவும் இல்லை. நல்ல வேளை, ரெட்ட அளவுக்குத் தீவிரமாகச் செல்லாமல் மேலோட்டமாக நிறுத்திக் கொண்டார்கள். எதையாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்பதற்காக யாராவது உண்ணக் கூடாததை உண்பார்களா என்ன. திரைப்பட விழாவில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கானது.

குடும்பஸ்தன் – சொறித்தரமான காமெடியில் ஆரம்பித்து மெல்ல மெல்ல பிக்கப் ஆகி அந்த காமெடிக்குள்ளேயே நாம் அமிழ்ந்து நம்மை அறியாமலேயே பல இடங்களில் சிரிக்க ஆரம்பித்து விடும் வகையான ஒரு திரைப்படம். சில காமெடிகள் மிகவும் தட்டைதான் என்றாலும் மணிகண்டன் நடிப்பால் நம்மைச் சிரிக்க வைக்கின்றன. இதையும் மீறி மணிகண்டன் சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கில் கால் வைத்து மெல்ல எப்படியோ தப்பி வெளியே வந்து விடுகிறார்.

சோமசுந்தரத்தின் நடிப்பு அலட்டல் மிகுந்ததாக அமைந்துவிட்டது பெரிய துரதிர்ஷ்டம். இவர் வரும் காட்சிகள் அனைத்துமே அறுவை.

பல காட்சிகள் நன்றாக இருக்கும்போதே பல காட்சிகள் மோசமாக இருப்பது படத்தின் பிரச்சினை.

இதில் இன்னொரு விஷயம்.. ஹீரோயின் எஸ் சி பெண்ணை உயர்ஜாதி ஹீரோ வீட்டுக்குத் தெரியாமல் கல்யாணம் செய்து கொள்கிறான். படத்தின் கதைக்கும் இதற்கும் பெரிய சம்பந்தம் இல்லை. ஆனால் பல இடங்களில் நச் நச் என வசனம் வைத்திருக்கிறார்கள். குறிப்பாக அந்த மாமியார், நீ ஆக்கிப்போட்டாலும் நான் சாப்பிட்டேன் என்று சொல்ல, அந்தப் பிரசவ வலியிலும் அந்தப் பெண் சோத்ததான ஆக்கி போட்டேன் என்று சொல்லும் வசனம். அதேபோல் ஆயிரம் வருடங்களாக பொறுத்தாச்சு, இனி பொறுக்க முடியாது என்று சொல்லும் வசனம். 2000 வருடம் என்று சொல்லவில்லை என்பது முக்கியமானது.

குடசநாடு கனகம் பற்றித் தனியே சொல்ல வேண்டும். ஜெய ஜெய ஜெய ஹே படத்தில் கலக்கியவர் இந்தப் படத்தில் பிரமாதப்படுத்திவிட்டார்.

முன்பு கஸ்தூரி மான் படத்தை மலையாளத்தில் பார்த்துவிட்டு குலப்புள்ளி லீலா தமிழில் எப்படி நடித்திருக்கிறார் என்று தமிழில் பார்த்தபோது எனக்குப் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. இரண்டிலும் ஒரே மாதிரியான நடிப்பு. ஆனால் தமிழில் புதிய ஒரு அம்மாவை கண்டு கொண்டதாகப் பலர் பாராட்டினார்கள். அதற்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரிய பட வாய்ப்புகள் அமையவில்லை. மருது போன்ற ஒன்றிரண்டு படங்களில் வந்து போனார். இப்போது அப்படி ஒரு அம்மா கதாபாத்திரத்திற்கு பெரிய வறட்சி நிலவுகிறது. கனகம் அந்த இடத்தை நிச்சயம் நிரப்புவார்.

ஜோக் என்று என்ன சொன்னாலும் சிரிப்போம் என்பவர்கள் நிச்சயமாகப் பார்க்க வேண்டிய படம் இது.

Share

Comments Closed