நவம்பர் மழை அனுபவங்கள்

2015 மழையின் போது நான் கிழக்கில் வேலையில் இருந்தேன். நவம்பர் 23ம் தேதி என நினைக்கிறேன். மதியம் 3 மணிக்கெல்லாம் மழை வெளுத்துக் கட்டப் போவது எனக்குப் புரிந்துவிட்டது. பைக்கை அலுவலகத்திலேயே விட்டுவிட்டு வீட்டுக்கு ஆட்டோவில் போகலாம் என்று ஓலாவில் புக் செய்யப் பார்த்தால் ஒரு ஆட்டோ கூட கிடைக்கவில்லை. நிச்சயம் இன்று தவிக்கப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டேன்.

பி.ஆர்.மகாதேவன் அலுவலகத்துக்கு ஒரு வேனில் வருவார். அவருடன் சேர்ந்து வேனில் ஏறிப் போனேன். டிடிகே சாலையிலும் எல்டாம்ஸ் சாலையிலும் வேன் மிதந்துதான் சென்றது. மாம்பலத்தில் இறங்கிக்கொண்டோம். மழை கொட்டிக் கொண்டிருந்தது. இருவரும் ஒரு டீக்கடை பக்கம் ஒதுங்கி நின்றோம். டீ சாப்பிட்டோம். வடை இருந்தது, ஆனால் சாப்பிடவில்லை. 🙂

நானும் மகாதேவனும் நடந்து எப்படியோ டிரைனுக்குள் ஏறினோம். ஆலந்தூர் வரை டிரைன் மிக மெதுவாக ஊர்ந்து சென்றது. நான் மவுண்ட்டில் இறங்கிக் கொண்டேன். இறங்கி வந்து, மவுண்ட்டிலிருந்து மடிப்பாக்கம் செல்லும் சாலையைப் பார்த்தால், நீர் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. ஏன் டிரைன் மெதுவாக வந்தது என்பது புரிந்தது.

மவுண்ட்டில் இருந்து மடிப்பாக்கம் செல்ல ஒரு ஆட்டோவும் கிடைக்கவில்லை. நீருக்குள் துழாவி துழாவி நடந்தேன். மடிப்பாக்கம் செல்ல 5 கிலோமீட்டர்! இந்த மழையில் எப்படி நடக்கப் போகிறோம் என்ற அச்சம். அரை கிலோமீட்டர் நடக்கவும் ஒரு ஆட்டோ அதிசயமாக வந்தது. மடிப்பாக்கம் என்றதும் வருகிறேன் என்றார். ஆச்சரியமாகி, வேறு யாரும் அந்த ஆட்டோவை மடக்குவதற்குள் ஆட்டோவில் ஏறிக்கொண்டேன்.

ஒரு சின்ன பெண் ஓடி வர, நான் ஆட்டோவில் ஏறிவிடவும், வருத்தமாகி நகன்றார். ஆட்டோக்காரர் என்னிடம், அவங்களையும் ஏத்திக்கவா என்று கேட்டார். அவங்களுக்கு ஓகேன்னா எனக்கு ஓகே என்றேன். அந்தப் பெண் ஆயிரம் நன்றி சொல்லி ஏறிக் கொண்டார். பாதி ரூபாய் நான் கொடுத்துடறேன் என்றார். அதெல்லாம் பரவாயில்லை என்றேன். ஆட்டோக்காரர் முதலில் என்னை இறக்கிவிட்டுவிட்டு, அங்கே இருந்து கீழ்க்கட்டளை செல்ல வேண்டும். செல்லும் வழியெங்கும் மழை நீர். சின்ன சின்ன தெருக்கள் வழியாக நுழைந்து, ஒருவழியாக என்னை வீட்டில் இறக்கிவிட்டார் ஆட்டோக்காரர்.

அப்பாடி, பெரிய நிம்மதி என்று பெருமூச்சு விடும்போது அந்தச் சின்ன பெண் என்னிடம், ‘தேங்க்ஸ் அங்கிள்’ என்றாள்.

பின்னர் டிசம்பர் 2 வந்தது.

Share

Comments Closed