தி காஷ்மீர் ஃபைல்ஸ் – ஆஸாதியின் நிறம்

நான் அப்போது பதினோரம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அன்று வகுப்புக்கு வந்த ஆசிரியர், யாரெல்லாம் சைக்கிளில் போகிறீர்கள் என்று கேட்டார். பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுந்து நின்றோம். யார் எந்தப் பகுதி என்று கேட்டபோது, நாங்கள் டவுன் என்றும், பொதுவாக சிந்துபூந்துறை வழியாகச் செல்வோம் என்று சொல்லவும், எங்களை உட்காரச் சொல்லிவிட்டார். மேலப்பாளையம் வழியாக யாராவது போவீர்களா என்று கேட்டபோது, அப்படி யாரும் இல்லை என்று சொல்லவும், அப்ப பிரச்சினை இல்லை என்றவர், எதுக்கும் இன்றொரு நாள் விபூதி குங்குமத்தை அழிச்சிட்டுப் போங்க, நம்ம ஊர்ல பிரச்சினை இல்லைதான், எதுக்கும் கவனமா இருக்கட்டும் என்று தன்னுடன் வந்த இன்னொரு ஆசிரியருடன் பேசிக்கொண்டு போனார்.

இது நடந்தபோது, ஏன் இவர்கள் இப்படிக் கேட்கிறார்கள் என்று கூட எங்களுக்குப் புரியவில்லை. அப்போது அது ஒரு விஷயமாகக் கூடத் தெரியவில்லை. நாங்கள் எப்போதும் போல் சைக்கிளை ஜாலியாக ஓட்டிக்கொண்டு போனோம். வழியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஊர் எப்போதும் போலத்தான் இருந்தது. பின்னர் புரிந்துகொண்டோம், அயோத்தியில் மசூதி உடைக்கப்பட்டதன் எதிரொலியாகவே ஆசிரியர் எல்லாரையும் எச்சரித்திருக்கிறார் என்று. முதல்நாள் உடைக்கப்பட்ட மசூதி விவரம் மறுநாள் திருநெல்வேலியில் எங்களுக்குத் தெரிந்துவிட்டிருந்தது. காஷ்மீரில் பண்டிட்டுகள் விரட்டப்பட்டார்கள் என்று தெரிந்தபோது எனக்கு வயது 22க்கு மேல். அப்போதும் அதை ஒரு அலட்சியத்துடன் அணுகியதை இப்போது வெட்கத்துடன் நினைத்துப் பார்க்கிறேன். அதன்பிறகு நான்கைந்து வருடங்கள் கழித்தே, அது விரட்டப்பட்டது மட்டுமல்ல, இனஒழிப்பு என்ற அதிர்ச்சியான உண்மை புரிந்தது. இன்று இந்த வலியை மிகத் தீவிரமாக தி காஷ்மீர் ஃபைல்ஸ் இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்த்திருக்கிறது.

மசூதி உடைப்பு ஒட்டி எழுந்த கலவரங்களை நாடெங்கும் கொண்டு சேர்க்க முடிந்திருக்கிறது, ஆனால் காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டது பற்றி யாருக்கும் தெரியவில்லை. இத்திரைப்படம் வந்தபின்னர் ஃபேஸ்புக்கில் பலர் இதைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். இப்படி ஒரு அவலம் நடந்தது பற்றி எப்படித் தெரியாமல் போனது என்று. ஹிந்து இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர்களைத் தவிர, சாதாரண மக்களுக்கு இந்தப் பெரிய கொடுமை தெரியவே இல்லை. இதே கேள்வியை இப்படத்தில் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியும் கேட்டிருக்கிறார்.

விவேக் அக்னிஹோத்ரியின் திரைப்படங்களின் ஆதாரமாக இரண்டைச் சொல்லலாம். ஒன்று, மூளைச் சலைவையால் குழப்பப்பட்ட இளைஞர்கள். இன்னொன்று, இதைச் செய்யும், அராஜகத்துக்குத் துணைபோகும், பொய்ச் செய்திகளைப் பரப்பும், உண்மைச் செய்திகளை மறைக்கும் ஊடகத் துறையினர். அர்பன் நக்ஸல்ஸ் என்னும் பதத்தை இவர் பரப்பியதே இதனால்தான். புத்தா இன் டிராஃபிக் ஜாம், தாஷ்க்ண்ட் ஃபைல்ஸ் மற்றும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் மூன்றிலும் இந்த இரண்டு அடிப்படைகளைக் காணலாம். இந்த அடிப்படைகளை உடைத்து, தான் சொல்ல வந்த உண்மையை ஒரு திரைப்படத்துக்கு ஏற்றவாறும் சொல்லிவிடுவது இயக்குநரின் அபாரத் திறமைதான்.

இதைப் புரிந்துகொள்ளவேண்டுமானால் ஷிக்காரா என்றொரு திரைப்படத்தைப் பற்றியும் பேசவேண்டும். Our moon has blood clots என்றொரு புத்தகம், ராகுல் பண்டிதா எழுதியது. இந்தப் புத்தகத்தையும் இரண்டு வருடங்களுக்கு முன்பு வாசித்திருந்தேன். காஷ்மீரில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதைப் பற்றி விவரிக்கும் ஒரு புத்தகம் இது. ஹிந்துக்களுக்கு ஆதரவான தொனியில் அமைந்த புத்தகம் அல்ல இது என்பதை, ஆசிரியர் வேண்டுமென்றே ஆர் எஸ் எஸ் பற்றி ஒரு பக்கம் எழுதித் திணித்த குறிப்புகளில் இருந்து புரிந்துகொண்டாலும், இப்புத்தகத்தில் உள்ள தரவுகள் முக்கியமானவையே. அதுவும், ஹிந்துத்துவ சித்தாந்தத்தை எதிர்க்கும் ஒருவர் எழுதி இருப்பதால், இந்தத் தரவுகளை நம்புவதில் பெரிய சிக்கல் இருக்கமுடியாது. ஷிக்காரா படத்தைப் பார்க்கும்போதுதான் தெரிந்தது, இந்தப் புத்தகத்தைத் தொட்டுக்கொண்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள் என. ஆனால் யாருக்கும் எதற்கும் கொஞ்சம் கூடக் கோபமே வந்துவிடக் கூடாது என்ற ரீதியில், இத்தனை பெரிய இன ஒழிப்பை முலாம் பூசி ஒப்பேற்றி இருந்தார்கள். ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் குமுறலை, ஒரு குடும்பம் தன் வீட்டை இழந்த ஒரு நாஸ்டால்ஜியாவாக மாற்றி இருந்தார்கள். அந்த இழப்பின் பின்னால் இருந்த அநியாயங்களை மங்கலாக மட்டுமே காட்டி இருந்தார்கள். அந்தப் புத்தகத்தில் இருந்த தரவுகளைக் கூடப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஒரு பெரிய அவலத்தைப் பற்றிப் பேசும் ஒரு திரைப்படம் இத்தனை திராபையாகவா இருக்கும்? இந்த நேரத்தில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் வந்திருப்பது எத்தனை முக்கியமானது என்று யோசித்துப் பாருங்கள்.

எத்தனையோ கொடூரமான திரைப்படங்களைப் பார்க்கிறோம். சைக்கோபாத் படங்களையெல்லாம் பார்த்துவிட்டு, இரண்டு நாள்களில் மறந்துவிடுகிறோம். ஆனால், நாம் எதிர்பாராமல் பார்க்கும் ஒரு நிஜமான விபத்து வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாமல் ஆகிவிடுகிறது. உண்மைக்கும் புனைவுக்குமான இடைவெளி இது. உண்மையில் நடந்த ஒரு வாழ்க்கையைத் திரைப்படம் ஆக்கும்போது அது நமக்குத் தரும் பதற்றத்தின் பின்னணியில் உள்ளது, ‘அது வெறும் புனைவல்ல, ரத்தமும் சதையும் சேர்ந்த உண்மை’ என்பதுதான்.

இப்படம் நம்மைப் பதற வைக்கிறது. முதல் பதினைந்து நிமிடங்கள் மிக முக்கியமானவை. கடைசி ஐந்து நிமிடங்கள் தரும் பதற்றத்தைப் பார்க்க திடமான மனம் வேண்டும். இளைஞர்களை மூளைச் சலவை செய்யும் ராதிமா மேனோனாக நடிக்கும் நடிகையும், அனுபம் கெர்ரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நெற்றியில் ஒரு குங்குமப் பொட்டென ரத்தம் தோய கண்கள் மூடாமல் மரிக்கும் அச்சிறுவனின் களங்கமற்ற முகம் என்றென்றும் மறக்க முடியாதது.

ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு முன்னால் அது தொடர்பான அத்தனை தகவல்களையும் திரட்டி எடுப்பது விவேக் அனிஹோத்ரியின் பாணி. கூடவே அத்திரைப்படம் சொல்ல வரும் கருத்துக்கு எதிரான அனைத்துக் கருத்துக்களையும் அத்திரைப்படத்திலேயே வைத்து, அதற்கும் சேர்த்து பதில் சொல்வார். எந்த அளவுக்கு என்றால், இதுதான் உண்மையோ என்று உருவாக்கப்படும் பொதுப்புத்திக்கு ஆதாரமாக இவர் சொல்லும் வாதங்களையே வைக்கலாம் என்னும் அளவுக்கு. ஆனால் உண்மைப் பின்னணி நமக்குத் தெரியும் என்பதால், இந்தப் பத்திரிகையாளர்கள் எந்த அளவுக்குக் கீழிறங்கிப் புனிதப் பிம்பங்களைக் கட்டமைக்கிறார்கள் என்பது நமக்கு அதற்கு இணையாகப் புரிகிறது.

குழம்பிக் கிடக்கும் கிருஷ்ணன் தீவிரவாதியிடம் பேசும் காட்சி மிக முக்கியமானது. தனது பார்வையாக அந்தத் தீவிரவாதி முன்வைக்கும் பார்வையும், பாகிஸ்தானின் குரலும், இந்திய வெறுப்பாளர்களான ஊடகத்தினரின் பார்வையும் ஒரே போல இருப்பதைப் பார்க்கலாம். இது தற்செயல அல்ல. திட்டமிட்ட ஒன்றிணைப்பு. காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்தி அவர்கள் விருப்பப்பட்டதைத் தந்துவிட்டால் என்ன என்று ஜனநாயகக் காவலர்கள் போல கம்யூனிஸ்ட்டுகள் பேசுவது சும்மா இல்லை. இந்தக் குரலுக்கான ஆதாரம் பாகிஸ்தானின் நியாயத்தில் இருந்து வருகிறது. கம்யூனிஸம் இந்தியாவுக்குத் தேவையா இல்லையா என்று இந்தியா முழுக்க வாக்கெடுப்பு நடத்தி தேவையில்லாத மாநிலங்களில் தடை செய்ய ஒப்புக்கொள்வார்களா இவர்கள்? இந்தியாவின் ஒரு பகுதி காஷ்மீர் என்ற பின்பு ஏன் வாக்கெடுப்பு? தேவையே இல்லை. நேரு வேறு வழியின்றி இதை ஒரு நல்ல முடிவு என்று சொல்லி இருந்தாலும் கூட, இனி தேவையே இல்லை.

ராதிகா மேனோன் பல பத்திரிகையாளர்களின் கலவை. அப்பட்டமான தோலுரிப்பு. தீவிரவாதி யாசின் மாலிக் மற்றும் கராத்தே பிட்டாவின் ஒன்றிணைப்பு. யாசின் மாலிக் பிபிசிக்கு அளித்த நேர்காணல் ஒன்றின் வீடியோவைப் பார்த்தேன். அதில் அவர் கொன்ற விமானப் படைக்காரர்கள் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும்போது வெளிப்படும் இளக்காரமான புன்னகையில் இப்படத்தின் அடிப்படை நியாயம் அமைந்திருக்கிறது. அரவிந்தன் நீலகண்டன் சொல்லி, கராத்தே பிட்டாவின் வீடியோவைப் (https://www.youtube.com/watch?v=c5Kw5bvvMfw) பார்த்தேன். அதில் அவன் சொல்கிறான், மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்தால் அண்ணனையும் கொல்வேன், அம்மாவையும் கொல்வேன் என்று. எவ்விதக் குற்றவுணர்ச்சியும் இல்லை. இதே வசனம் இத்திரைப்படத்திலும் வருகிறது. இந்த வசனம் மட்டுமல்ல, பற்பல வசனங்கள் நிஜத்தில் யாராலோ எப்போதோ சொல்லப்பட்டவைதான்.

நிஜமான ஆஸாதி (சுதந்திரம்) மதம், மொழி, இனம், நிறம், ஜாதி பார்க்காது. மதவாத அடிப்படையிலான ஆஸாதி உண்மையான ஆஸாதிக்குக் களங்கம் கற்பிப்பதைத் தவிர, நாட்டைத் துண்டாடுவதைத் தவிர எதையும் சாதிக்காது. இத்திரைப்படம் அதை அப்பட்டமாக பதிவு செய்திருக்கிறது.

ஒரு திரைப்படம் என்ற அளவிலும் இத்திரைப்படம் தரமாகவே உள்ளது. மெல்ல நகரும் திரைப்படம்தான். யோசித்து யோசித்து வசனங்கள் வரும் திரைப்படம்தான். ஆனாலும் ஏன் இந்தியர்கள் ஒன்றிணைந்து இப்படத்தைப் பார்த்து வரவேற்றார்கள்? இது வெற்றுப் புனைவல்ல, உள்ளத்தை உலுக்கும் உண்மை என்பதால்தான். தரமும் உண்மையும் கூடி வந்தால் எந்த மொழியிலும் இதைச் சாதிக்க முடியும். தமிழிலும் இத்தகைய திரைப்படங்கள் எல்லாச் சார்பிலிருந்தும் வெளிவரவேண்டும். அதற்கு இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ என்கிற ஏக்கம் வராமலில்லை.

370ம் பிரிவு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டதற்கான நியாயத்தையும், ஏன் நாட்டை நேசிப்பவர்கள் இந்தியாவை ஆளவேண்டும் என்பதையும்கூட இப்படம் சந்தேகத்துக்கு இடமின்றி வலியுறுத்தி இருக்கிறது. நிச்சயம் தியேட்டருக்குச் சென்று பாருங்கள் – மன தைரியத்துடன்.

Share

Comments Closed