கோவிட் 19 தடுப்பூசி

தமிழ்நாட்டில் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். காரணமே இல்லாமல் பயப்படுகிறார்கள். தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட போது நேரடியாக, மறைமுகமாக அதன் மீது நம்பிக்கையின்மையைப் பரப்பிய ஒவ்வொருவருக்கும் இதில் பங்கு உள்ளது. அறிவியலை விட இயற்கையே சுத்தம் என்றொரு தியரி இங்கு உண்டு. அதிலும் சில குழுக்கள் தமிழ்நாட்டில் இதையே முழு மூச்சாகச் சொல்கின்றன. இரண்டு வருடம் முன்பு நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். ஏன் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளக் கூடாது என்று காரணங்களைப் பட்டியலிட்டார். தடுப்பூசி என்கிற மருந்தின் உலகளாவிய லாபி, அதன் பின்பு வந்த அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டதால் உலகம் முழுக்க அத்தடுப்பூசி நிறுவனத்துக்குக் கிடைத்திருக்கும் பணத்தின் மதிப்பு என என்னவெல்லாமோ பேசினார். கேட்கும் யாரும் ஒரு நிமிடம் யோசிப்பார்கள். பின்பு அது அவரது மனத்துக்குள்ளே அவரறியாத ஒரு இடத்தில் இருந்துகொள்ளும். இதைப் போல கொரோனா தடுப்பூசி வரும்போது, அப்போதும் சில குரல்கள் அதைப் போடாதே என்று சொல்லும்போது, விவேக் போன்ற ஒரு நடிகர் அதிர்ச்சியாக மரணமடையும்போது, மனதுக்குள்ளே அமிழ்ந்து கிடக்கும் நினைவிலி எண்ணம் தான் மட்டுமே சரி என்னும் ஆங்காரத்துடன் எழுந்து வரும். தமிழ்நாட்டில் இப்போது இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. தங்கள் அரசியல் தேவைகளுக்காக தடுப்பூசியைப் பழித்தவர்கள் இன்று மக்களைத் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

முதலில் இப்படி இருக்கும், பின்னர் போக போகப் போட்டுக்கொண்டு விடுவார்கள், இது சின்ன பிரச்சினை என்றே நான் நினைத்தேன். ஆனால் இப்போதும் நிறைய பேருக்குத் தயக்கம் உள்ளது. மக்கள் மனதில் இருக்கும் முட்டாள்தனங்களைக் கீழே உள்ளபடி தொகுக்கலாம்.

– தடுப்பூசியால் பலனே கிடையாது. தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா வரத்தானே செய்கிறது.

– தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்குத்தான் கொரானா வந்திருக்கிறது.

– தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மட்டும்தான் ஒருவர் இறந்திருக்கிறார். என் மாமாவின் சித்தியின் ஒன்றுவிட்ட சகோதரியின் சம்பந்திக்கு இப்படி ஆனது.

– தடுப்பூசி போட்டுக்கொண்டால் மாரடைப்பு வரும்.

– தடுப்பூசி என்று உடலுக்குள் செலுத்தப்படுவது கொரோனா கிருமிதான். எனவே கொரோனா வந்தது போலவே உடல் பாதிக்கப்படும்.

– தடுப்பூசி என்பது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு லாபத்துக்காக செய்யப்படும் பிரசாரம்.

– தடுப்பூசி போட்ட பின்பு குடித்தால் மாரடைப்பு வரும், எனவே போட வேண்டாம்.

– யார் வந்து கேட்டாலும் தடுப்பூசி போட்டாகிவிட்டது என்று சொல்லிவிடலாம், யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

இப்படிப் பல காரணங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

தடுப்பூசி போட்ட பின்பு இறந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. தடுப்பூசி போடாமல் இறந்தவர்களின் எண்ணிக்கையே பெரும்பான்மை. எதை நாம் தேர்ந்தெடுக்கப் போகிறோம்? இன்றைய நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பது தற்கொலைக்கு ஒப்பானது. எப்படியும் உயிர் போகப் போகிறது என்று நினைத்து தடுப்பூசியை கைவிடுவதற்குப் பதிலாக, அதே பயத்துடனாவது போட்டுத் தொலையுங்கள். உங்களைத் தடுப்பூசி காப்பாற்றும்.

போலியோ சொட்டு போட்டதும் குழந்தை மரணம், ஒரு தடுப்பூசி போட்டதும் சிறுவன் மரணம் என்ற கதைகள் எல்லாம் நம் நாட்டில்தான் சாத்தியம். என் மகளுக்கு 6 வயதாக இருந்தபோது ஒரு தடுப்பூசி போடப்பட்டது. அப்போதும் இதே பிரசாரம். நான் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவள் பள்ளிக்குச் சென்று தடுப்பூசி போடப் போனேன். சுத்தமாகக் கூட்டமே இல்லை. அரசு இலவசமாகத் தந்த தடுப்பூசி. இந்த பிரசாரத்தால் பள்ளி ஆசிரியர்கள் பயந்து போய், அனைவரிடமும் என் முழு சம்மதத்துடன் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்கிறேன் என்று ஒரு தாளில் எழுதி கையெழுத்துப் போட்டுத் தரச் சொல்லி இருந்தார்கள். எந்த நாளில் தடுப்பூசி போடப்பட்டதோ அந்த நாளில் 70% குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லை. அத்தனை பெரிய பிரசாரம் நடந்தது. நான் என் மகளுக்குப் போட்டுக்கொண்டேன். அன்று மீதி இருந்த 30% குழந்தைகளுக்கும் போடப்பட்டது. ஒரு குழந்தைக்கும் ஒன்றும் ஆகவில்லை. இந்த லட்சணத்தில்தான் நாம் கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது என்று அரசின் மீது பழியைப் போடுகிறோம், கொஞ்சம் கூட அறிவோ வெட்கமோ இல்லாமல்.

ஒருவகையில் எல்லா எதிர்க்கட்சிகளுக்கும் இதில் பங்குண்டு. நேரடியாக, மறைமுகமாக இந்தத் தடுப்பூசியின் மீது நம்பிக்கை இல்லை என்றே அவர்கள் பேசினார்கள். இன்று வந்து யோக்கியன் போல, அப்படியெல்லாம் இல்லை என்று பூசி மெழுகினாலும், இதுவே உண்மை. ஒரு நல்ல விஷயம், இன்று நிலைமையைப் புரிந்துகொண்டு, தடுப்பூசியின் தேவையைப் பேசத் துவங்கி இருக்கிறார்கள்.

அரசு என்னவெல்லாம் செய்யலாம்.

– அனைத்து நடிகர் நடிகைகளிடம் 30 நொடி வீடியோ பைட் வாங்கி அதை அனைத்து சானல்களிலும் ஒளிபரப்பச் செய்யலாம். (முக்கியமாக இந்த நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தவேண்டும். பாதி பிரச்சினை இவர்களால்தான்!)

– மதக்குருமார்கள் அனைவரிடமும் இதேபோல் பைட் வாங்கி ஒளிபரப்ப வேண்டும்.

– அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் இதேபோல் வீடியோ வாங்கி அதை அனைத்து தொலைக்காட்சிகளில் சமூக ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டும்.

– கிரிக்கெட் பிரபலங்கள் உட்பட்ட அனைத்து பிரபலங்களிடமும் வீடியோ பைட் வாங்கி ஒளிபரப்பவேண்டும்.

தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தமிழ்நாடு இத்தனை பின் தங்கி இருப்பது நல்லதல்ல. அபாயமானது.

Share

Comments Closed