கமல் அரசியல்

கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் – பூ அல்ல விதை – இந்த விளையாட்டெல்லாம் மலையேறி ஆண்டுகள் பலவாகிவிட்டன. கருணாநிதி இதையெல்லாம் மாஸ்டர் செய்து, அவருக்கே போரடித்து, அது மக்களுக்கும் போரடிக்கிறது என்று உணர்ந்து, கட்டுப்படுத்திக்கொண்ட வார்த்தை விளையாட்டை, கமல் தொடங்கி இருக்கிறார். இது போன்ற அறுவைகள் தரும் எரிச்சலெல்லாம் சொல்லி முடியாது.

பேசிப் பேசியே ஆட்சியைப் பிடித்த காலத்தைப் பார்த்ததுபோல, பேசிப் பேசியே டெபாசிட் இழக்கப் போகிறவர்களின் காலத்தில் இருக்கிறோம்.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகும், கருணாநிதியின் அரசியல் ஓய்வுக்குப் பிறகும், சோபை இழந்த தொலைக்காட்சி ஊடகங்கள், ரஜினி மற்றும் கமல் வருகையை ஒட்டி, சிக்கினாய்ங்கடா என்று ஓவர் கூச்சல் போடுகின்றன. தினம் தினம் கமல் மற்றும் ரஜினி சொல்லும் விஷயத்தை ஒட்டி வெட்டி விவாதங்கள். இதில் நான் பார்த்தது என்னவென்றால், கமல் பற்றிய விவாதமெல்லாம் தூர்தர்ஷனில் வரும் அஞ்சலி இசை நிகழ்ச்சிகள் போலவும் ரஜினி பற்றிய விவாதம் தீப்பொறி பறப்பது போலவும் தோன்றுகிறது இது என் தோற்ற மயக்கம்தான் 🙂 இத்தனைக்கும் அத்தனை ஊடகங்களும் கிட்டத்தட்ட கமலுக்கு ஆதரவாகவும் ரஜினிக்கு எதிராகவுமே இருக்கின்றன. ரஜினிக்கு இது பெரிய மாரல் சப்போர்ட். இப்படியே இருந்தால் ரஜினிக்கு ரொம்ப நல்லது. 🙂

கலாம் பெயரைச் சொல்லி இளைஞர்களின் ஆதரவைப் பெற்றுவிடலாம் என்று ரஜினியும் கமலும் நம்பினால் அதைவிட ஏமாளித்தனம் வேறெதுவும் இல்லை. அப்துல் கலாமை எல்லாருக்கும் பிடிக்கும். பொதுவாக. அவரே அரசியலில் நின்றிருந்தால் டெபாசிட் போயிருக்கும். எனவே யாரை எதற்காகப் பிடிக்கிறது என்பதறிந்து அரசியல் செய்யவும். ஆத்மார்த்தமாக அப்துல் கலாமின் புகழ்பாடுவதெல்லாம் வேறு. அது அவரவர் தேர்வு. அரசியலில் அவரை வைத்து ஓட்டு வாங்கலாம் என்று நினைத்தால், அரசியலின் அரிச்சுவடியே இன்னும் பிடிபடவில்லை என்று பொருள். இன்னும் தெளிவாகச் சொன்னால், அரசியல் பேய் இன்னும் உங்களை செவுளோடு சேர்த்து அறையவில்லை என்று அர்த்தம். சீக்கிரம் அடிக்கும்.

Share

Comments Closed