ஞாநி – அஞ்சலி

ஞாநியின் மரணம் பேரதிர்ச்சி. நேற்று முன் தினம் கிழக்கு அரங்குக்கு மிகுந்த புன்னகையுடன் வந்தார். நான் ஓடிச் சென்று அவரிடம் பேசினேன். பத்ரியைப் பற்றி சில வார்த்தைகள் கிண்டலுடன் பேசினார். நானும் என்னவோ சொல்ல சத்தம் போட்டுச் சிரித்தார். உளவு ஊழல் அரசியல் புத்தகம் வாங்கினார்.

ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் ஞாநி அரங்குக்கு வந்தால் என்னை வந்து பார்ப்பதை ஓர் அன்புக் கடமை என்றே செய்துகொண்டிருந்தார். ஞாநியின் அன்பு ஆச்சரியத்துக்கு உரியது. பத்து வருடங்களுக்கு முன்பே புத்தக அரங்கில் வந்து, ‘இன்னைக்கு அட்டெண்ட்ஸ் போட்டாச்சு, ப்ளாக்ல என்னைப் பத்தி எழுதிடுங்க’ என்று சொல்லிவிட்டுப் போவார்.

அரங்கங்களில் அமர்ந்து அரட்டை என்று ஆரம்பித்தால், பல்வேறு தகவல்களைச் சொல்வார். அவை எங்கேயும் வெளிவந்திராத தகவல்களாக, அவர் பங்குபெற்ற விஷயங்களாக இருக்கும்.

இரண்டு நாள் முன்னர் பார்க்கும்போது உடல் கொஞ்சம் தேறியே இருந்தார். இனி பிரச்சினையில்லை என்றே நினைத்தேன். அவரும் அதையே சொன்னார்.

ஞாநியின் நினைவுகள் என்னவெல்லாமோ மேலெழுகின்றன.

ஞாநி – கண்ணீருடன் விடைகொடுக்கிறேன். அவரது கருத்தியல், ஹிந்துத்துவ ஹிந்து பிராமண எதிர்ப்பு என எல்லாவற்றையும் தாண்டி, ஐ லவ் ஞாநி.

Share

Comments Closed