பதாகை வலைத்தளத்தில் வெளிவந்த கவிதைகள்

பாதை 

 

மிக நீண்ட தூரம் அழைத்துச் சென்று
நரகம் விட்டொழிந்தோம் என்றார்கள்
வழியெங்கும்
கூடவே நதியோட
இருபுறமும் மரங்கள்
எங்கள் பயணம்

எல்லாம் இன்றோடொழிந்தது
இனி கவலையில்லை
அன்றாடச் சுகதுக்கங்களில் உழலவேண்டாம்
எல்லாம் இன்பமயம்
எங்கும் எல்லாரும் சமம்
இனி சொர்க்கம்தான்
போகலாம் என்றார்கள்
நான் ஆவலுடன் இருந்தேன்
இப்படி அல்ல என்றார்கள்
என் அடையாளங்களை துறக்கச் சொன்னார்கள்
என் ஆடைகளைக் களையச் சொன்னார்கள்
சொர்க்கத்தில் எதுவுமே தேவையில்லை

என் நினைவுகளை அழித்துவிட்டு
அடுத்த எட்டு நான் வைக்கலாம்
எல்லாவற்றையும் துறப்பதே
ஒரு நரகம்தானே என்றேன்
கேள்விகள் பதில்கள் எல்லாம்
சொர்க்கத்தில் சொல்லப்பட்டாகிவிட்டது
சொர்க்கத்தில் எல்லாமே புதியது
ஒருவகையில் எதுவுமே புதியதல்லவாம்

குழப்பமாக இருந்தது
அங்கு இனி குழப்பமுமில்லை என்றார்கள்

என் நினைவுகளை அழிக்க முற்பட்டேன்
அழிக்க அழிக்க
அவை என்னை
அமிழ்த்த அமிழ்த்த

சுயம் அழித்து
சொர்க்கத்தில்
என்ன இருந்துவிடமுடியும் எனக்கென்றேன்
நீண்ட பதில் சொன்னார்கள்
எல்லாவற்றுக்கும்
பதில் இருந்தது
நினைவுகளை அழித்து
புதியன அடைதல்
சொர்க்கத்தின் பாதை

அமைதியாக
வந்தவழி திரும்பினேன்
ஏனென்றார்கள்
நரகமே சொர்க்கம் என்றேன்
ஆழ்கடலின் மௌனத்தில்
அவர்கள் ஆழ்ந்திருக்க
நதியின் அமைதியில்
நான் திரும்பினேன்

 

அப்படியே ஆகுக

காற்றில் இலை பரப்பி 
குலை தள்ளி
வேரில் செழித்திருந்த 
வாழை மரமொன்றை
வெட்டித் தள்ளினேன்
இலை கிழித்து 
குலை சிதைத்து
தோல் உரித்து 
வெண்தண்டு கடித்துக் குதறி 
வேர் வெட்டி
வெற்றியுடன் மீண்டபோது
நானறியாது 
அனைத்தையும் பார்த்திருந்த 
புதுக்கன்று 
மெல்ல தலைதூக்கி 
உலகுக்கு வந்தது,
ஆம், அப்படிதான் ஆகும்

 

ஆதிகுரல்

அவர்கள் போர் என்று சொல்லிக்கொண்டார்கள்
ஒட்டுமொத்த உலகமும் வெருண்டிருந்தது
கருப்பு நிறத்துக்காரர்கள் தங்கள் கடவுளை துணைக்கழைத்திருந்தார்கள்
வெண்ணிறத் தோலுடையோர் ஒளிபொருந்திய ஆண்டவனை நம்பியிருந்தார்கள்
நெருப்பு நிலத்துக்காரர்கள் அருவம் கொண்டு மீண்டெழுந்தார்கள்
எஞ்சியவர்கள் என்னவோ பேசிக்கொண்டார்கள்
யாரும் யாரையும் கேட்கவில்லை
எல்லோருக்குமே வெற்றி என்றார்கள்
பின் ஒரு திடீர் நொடியில்
எல்லாருமே தோல்வியை உணர்ந்தார்கள்
பூமியின் நிறம் சிவப்பாக மாறி இருந்தது
தோல்வியில்
புனித நதியில் குதித்தார்கள்
கைகளையும் காலையும் மரத்தில் அறைந்து ஆண்டவனை அடைந்தார்கள்
மண் புதைந்தார்கள்
கடைசி மனிதனின்
கடைசிக் குரலின்போது
மெல்லிய உதட்டிலிருந்து
ஆதிகுரல் ஒன்று மெல்ல எழுந்துவந்து
உலகை நிறைத்தது
அக்குரல்
ஓம் என்ற வடிவத்தை ஒத்ததாய் இருந்தது
ஆண்டவனின் குரலகாக ஒலித்தது
அருவத்தின் குரலாக மீண்டது
அக்குரல்
ஆதிகுரல்
ஒரு குழந்தையின் முதல் அழுகையாக இருந்தது

 

செக்மேட்

அவனை இறைவன் என்றனர்
அவன் சொர்க்கம் ஒன்றை உருவாக்கினான
இவனை மனிதன் என்றனர்
இவன் நரகத்தை அமைத்தான்
அவன் நல்லது செய்தான்
இவன் தீயன பழக்கினான்
தெளிந்தது அவன் செய்ய
குழப்பத்தை இவன் செய்தான்
காதல் செய்தான்
காமம் செய்தான்
சிரிப்பு
அழுகை
மகிழ்ச்சி
சோகம்
சாந்தம்
கோபம்
அன்பு
வெறுப்பு
கரு
கொலை
சலித்துப் போன கடவுள்
மனம் மயங்கிய ஒரு தருணத்தில் சாத்தானாக
நான் என்னைக் கடவுள் என்றேன்.

பாம்பு புகுந்த வீடு

தன் வீட்டிலிருந்து
என் வீட்டுக்கு
ஜன்னல் வழியே
பாம்பு புகுந்துவிட்டதென
கூவிக்கொண்டே வந்தார்
பக்கத்து வீட்டுக்காரர்
அலறல் கேட்டு
வீட்டிலிருந்து வெளியே ஓடினேன்
அவரைப் பார்க்க அச்சமாக இருந்தது
அவர் கால்கள் சூம்பிக் கிடந்தன
என் நினைவில் அவர் அப்படி இருந்திருக்கவில்லை
என்ன அரவமென வீட்டிலிருந்து
மனைவி ஓடி வெளியே வந்தாள்
என்னைக் கண்டு மிரண்டு நின்றபோது
அவளைக் கண்டு நான் பயந்து நின்றேன்
அவள் கழுத்து நீண்டு கிடந்தது
இதுவரை இப்படி அவளைக் கண்டதில்ல
மீண்டும் வீட்டுக்குள் அவள் ஓடி
மகனைத் தூக்கிக் கொண்டு வந்தாள்
மகன் எல்லாரையும் பார்த்து வீறிட்டு அழுதான்
மகனின் கண்ணில்
நேற்றுவரையிருந்த புருவங்களில்லை
பலர் வந்தார்கள்
ஒருவரை ஒருவர் அஞ்சினோம்
வீடெங்கும் சல்லடையிட்டுத் தேடினார்கள்
பாம்பைக் காணாமல்
அவரவர் வீடு சென்றார்கள்
நாங்கள் எங்கள் வீட்டுக்குச் சென்றோம்
ஆளுக்கொரு பாம்புடன்.

பெரியப்பாவின் வருகை

பெரியப்பா வந்திருந்தார்
கையில் குடையுடன்
நீண்ட தாடியுடன்
ஒரு யோகியின் நடையுடன்
ஏற்கெனவே சொல்லி வைக்கப்பட்டிருந்தது போல
வீட்டைத் தேடி
வீடுகளைத் தேடி
பெரியப்பா வந்திருந்தார்
எல்லாக் கேள்விகளுக்கும் அவரிடம் விடையிருந்தது
அன்பில் பூத்த தாமரை மலர் ஒன்றை
எப்போதும் அவர் முகத்தில் சுமந்திருந்தார்
மெல்ல விரியும் உதடுகளின் வழியே
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கான
ஏக்கங்களின் விடையை
தெளித்தவண்ணம் சிரித்திருந்தார்
கைக்குட்டையில் இருந்த ரத்தக் கறையை
திட்டமிட்டு அவர் மறைக்கவில்லை என்றாலும்
யாருமே அவரிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை
கயிறின்றி கன்றின் பின்னே ஓடும்
தாய்ப்பசுவைப் போல
நினைவுகள் கட்டுண்டு அவர் பின்னே செல்ல
அவர் திடீரென்று பதற்றமானார்
குடை கீழே விழுந்த நினைவின்றி ஓடினார்
யாரோ ஒருவன்
வடிவுப்பெரியம்மையைப் பற்றிக்
கேட்டதுதான் காரணம் என்றார்கள்
இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்
வடிவுப் பெரியம்மை எப்போதும் அப்படித்தான்

 

அஞ்சலி

ஒற்றையிலையென அவர் உதிர்ந்தார்
வழித்தடம் அழுத்தமாகப் பதித்த காலங்களில்
அவரை நான் சபித்திருந்தேன்
கருத்துக் கலவரங்களில் அவர் எப்போதும் வாளேந்தி வருவார்
நான் நேர்மை மட்டும் தாங்கித் தோற்றிருக்கிறேன்
நியாயங்களில் அவருக்கு அதிகம் நம்பிக்கை இருந்ததில்லை
தன் நோக்கொன்றே சரியானது என்று உறுதியாக நம்பினார்
ரத்தம் கண்டு நான் மிரண்ட சமயங்களில்
புத்தனின் புன்னகையுடன் அவர் மேலேறிப் போனார்
எங்கோ உயர்ந்த புள்ளியில்
சூரியனுக்கு அருகில்
வெற்றிச் செருக்கில் என்னைத் திரும்பிப் பார்த்தபடி
சட்டென ஒருநாள்
ஒற்றையிலையென அவர் உதிர்ந்தார்
அவருக்கும் எனக்குமான நினைவுகளில் உழன்றபடி
சுண்டிப் போன ரத்த விரல்களில்
அவர் விட்டுச் சென்ற அநீதிகளின் மேல் அமர்ந்து
இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்
மிகக் கவனமான
ஒரு அஞ்சலி

Share

Comments Closed