சென்னைப் புத்தகக் காட்சியில் ஐந்தாம் நாளான நேற்று நல்ல கூட்டம் இருந்தது. மாலை ஆறு மணி அளவில் எனி இந்தியன் அரங்கில் ஜெயகாந்தன் ஞானரதத்தில் எழுதியவற்றின் தொகுப்பான “ஞானரதத்தில் ஜெயகாந்தன்” புத்தகம் திரு.சித்ரபாரதியால் வெளியிடப்பட்டது. அதை திரு.பி.ச.குப்புசாமி பெற்றுக்கொண்டார். ஞானரதம் வெளி வந்ததில் சித்ரபாரதியின் பங்கு மிகவும் கணிசமானது. ஞானரதத்திற்கு முன்பே வாசகர் வட்டத்தில் தீவிரமாகப் பணியாற்றியிருந்த சித்ரபாரதி ஞானரதத்தையும் சிறப்பான சிற்றதழாக நடத்த முழு முயற்சி மேற்கொண்டதாக என்னிடம் தெரிவித்தார். திரு.பி.ச.குப்புசாமி ஞானரத்தில் கவிதைகளும் கதைகளும் எழுதியுள்ளர். இவர் பி.கே.சிவகுமார் தந்தை. புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய சித்ரபாரதி ஞானரதத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொன்னார். அதன் பங்களிப்பு எந்த அளவிற்கு இன்றையத் தலைமுறைக்குத் தேவையானது எனவும் விளக்கினார். ஜெயகாந்தன் பேசவேண்டும் என்று சித்ரபாரதி கேட்டுக்கொண்ட போது, ஜெயகாந்தன் ஒரே வரியில் ‘நல்ல புத்தகங்களை படிங்க’ என்றார். நான் நன்றி தெரிவித்துக்கொள்ள கூட்டம் இனிதே முடிவுற்றது. நிறைய வாசகர்கள் ஜெயகாந்தனிடன் கையெழுத்துப் பெற்றுக்கொண்டு மகிழ்ந்தார்கள்.
திரு. ஜெயகாந்தன், திரு. சித்ரபாரதி மற்றும் திரு. பி.ச.குப்புசாமி ஆகியோர்களுக்கும் விழாவிற்கு வந்திருந்த மக்கள் அனைவருக்கு எனி இந்தியன் பதிப்பகத்தின் நன்றிகள்.
அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்.
நன்றி,
பிரசன்னா.