திரை – கவிதை

காற்றில் ஆடும் ஜன்னல் திரையில்
மலர்ந்திருக்கின்றன போலிப்பூக்கள்
என்னைப் பார்த்தவண்ணம்.

படுக்கைக்கு மேலே
உத்திரத்தில் தொங்குகிறது
நிலவும் பிறையும்
சில நட்சத்திரங்களும்;
திரைக்கு வெளியில் அலையும் கேலக்ஸி
படுக்கையறைக்குள்ளே ஒரு விளக்கணைப்பில்.

இரவுகள் பகலாகவும்
பகல்கள் போலியாகவும்
அங்குமிங்கும் அலைகின்றன
சிறிய திறப்பைத் தேடி

உள்ளங்கைக்குள் வேர்த்தடங்கிக்கிடக்கும் வெளி

கையைத் திறக்க
மெல்ல கசிகிறது
நெகிழும் திரையின் வழியே
என் படுக்கையறை
உலகுக்கு.

Share

Comments Closed